அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

நளினியை பிரியங்கா சந்தித்த பிறகே இலங்கையில் போர் தீவிரமடைந்தது – ஜெயலலிதா

j-j-j.jpgவேலூர் சிறைக்கு வந்து நளினியை பிரியங்கா காந்தி சந்தித்து விட்டுச் சென்ற பின்னர்தான் இலங்கையில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்துள்ளது. எனவே சிறையில் பிரியங்காவுக்கும், நளினிக்கும் இடையே நடந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நேற்று மாலை பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில்,

ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்கு சென்று ராஜீவ் கொலையாளி நளினியை சந்தித்தன் மர்மம் என்ன?. இந்த சந்திப்பிற்கு யார் அனுமதி கொடுத்தது?. இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள்?. பிரியங்கா-நளினி சந்திப்பிற்கு பிறகு தான் இலங்கை தமிழர்கள் மீதான அந்த நாட்டின் ராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கிறது. எனவே, பிரியங்கா-நளினி சந்திப்பின் போது நடந்தவற்றை பகிரங்கப்படுத்த வேண்டும். இதை முதல்வர் கருணாநிதிதான் செய்ய வேண்டும்.

ஈழத் தமிழர் பிரச்சினையை முதல்வர் கருணாநிதி சரியாக கையாளவில்லை. தேர்தலை மனதில் கொண்டுதான் அவர் செயல்படுகிறார். திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்றால் மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

வெசாக் பௌர்ணமி தினமன்று தொப்பிகலையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

thoppigala.jpgமட்டக்களப்பு தொப்பிகலை பிரதேசத்தில் புத்தர் சிலையொன்று வெசாக் பௌர்ணமி தினமன்று புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப்பிரதேசம் தற்போது இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இப்பிரதேசத்தில் அமைந்துள்ள 23- 2 ஆவது இராணுவ கட்டளைத் தலைமையக வளாகத்திற்குள்ளேயே இந்த புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் கடமையாற்றும் இராணவ சிப்பாய்கள் மத வழிபாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் இந்த புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யபடப்டுள்ளதாக இது தொடர்பாக தெரிவிக்கப்படுகின்றது

இயற்கை அனர்த்தத்தைக் கூட ஐ.தே.க.வின் சதித்திட்டம் என்று கூறுமளவு முட்டாள்தனம்

parliament-of-sri-lanka.jpgஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் 216000 ரூபாவுக்கு கடனாளியாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. ரவிகருணாநாயக்க, இயற்கை அனர்த்தம் ஏற்பட்டால் கூட அது ஐ.தே.க.வின் சதித்திட்டம் எனக் கூறுமளவுக்கு அரசு முட்டாள்தனமாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார். அத்துடன் சர்வதேச நாணயநிதியத்துக்கு அரசு அனுப்பியுள்ள கடிதத்தை பகிரங்கப்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவு கண்டுள்ளது.பாரிய வறுமை கடன் சுமை நிரம்பிய நாடாக இலங்கை மாறிவிட்டது. ஆனால், அரசு பிழையான தகவல்களை வழங்கி அனைவரையும் ஏமாற்றிவருகின்றது.

இலங்கையை உலகிற்கு விற்று விட்டதாக சர்வதேசத்தின் பிளக்கை கழற்றுவோம் எனக் கூறியவர்கள் எல்லாம் இன்று அவற்றின் காலைத்தொட்டு கும்பிடுகின்றனர். கல்வி அறிவற்றவர்கள் எல்லாம் பேசிப் பேசியே நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.கடந்த நாலரை வருடங்களில் மட்டும் 4,520 பில்லியன் ரூபா கடன் பெறப்பட்டுள்ளது. வருடம் தோறும் 650 பில்லியன் ரூபா கடன் அதிகமாகப்பெறப்பட்டுள்ளது.

அரசின் முட்டாள்தனமான போக்கினால் இலங்கைப்பிரஜைகள் ஒவ்வொருவரும் 216000 ரூபாவுக்கு கடனாளியாக்கப்பட்டுள்ளனர்.மத்திய வங்கி பணத்தை அச்சடித்து அச்சடித்து களைத்துப் போய்விட்டது. முழு உலகமும் இலங்கை முன் மண்டியிட்டு மகிந்த சிந்தனைக்கேற்றவாறு ஆடும் என்பதுதான் இந்த அரசின் நினைப்பு. இலங்கைக்குள் உலகம் இல்லை. உலகிற்குள் தான் இலங்கையுள்ளது. சர்வதேசத்துடன் சிநேகபூர்வ உறவை வளர்க்கவேண்டும். சண்டித்தனம் காட்டக்கூடாது.

நாட்டின் நிர்வாகம் என்பது யுத்தத்தில் மட்டும் தங்கியிருக்கக்கூடாது. பொருளாதாரம் ஊடாக சுதந்திரம் ஜனநாயகம் உரிமையென பல பொறுப்புகள் நாட்டின் நிர்வாகத்தில் முக்கியமானவை. மக்கள் நலன் தொடர்பில் நாம் அரசுக்கு எதைக்கூறினாலும் ஐ.தே.க. சதி செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர். இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டால் கூட அது ஐ.தே.க.வின் சதியெனக் கூறுமளவுக்கு அரசு முட்டாள் தனமாக செயற்படுகின்றது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் மக்கள் பிரச்சினை தொடர்பாக எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சரவை அந்தஸ்துள்ள எந்தவொரு அமைச்சரும் சபையில் இருப்பதில்லை.அடிவருடிகளே இருந்து கூச்சலிடுகின்றனர்.

இலங்கையின் சுற்றுலாத்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறையில் 29 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.அந்நிய செலாவணி குறைந்துள்ளது. ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தல் முறையை திருத்தும் சட்ட மூலத்தை ஒத்திவைக்க அமைச்சரவை தீர்மானம்

sri-lankan-government.jpgஉள்ளூராட்சி தேர்தல் முறையை திருத்துவதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை ஒத்திவைக்க அமைச்சரவை தீர்மானித்திருக்கின்றது. கடந்த 6 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த உத்தேசிக்கப்பட்ட திருத்தங்களின் மூலம் சிறு கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்களை கருத்திற் கொண்டே அமைச்சரவை இந்த தீர்மானத்திற்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொகுதிவாரி முறை மற்றும் விகிதாசார முறை இரண்டும் கலந்த தேர்தல் முறைமையொன்றின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது உள்ளிட்ட பல யோசனைகள் இந்த சட்டமூலத்தின் மூலம் முன்வைக்கப்பட்டிருந்தன.

சட்டமூலம் இதற்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட போது அது அரசியலமைப்புக்கு முரணானதென ஆட்சேபித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ததுடன் அந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதென்றால் அதற்கு மாகாண சபைகளின் அனுமதி பெறப்பட வேண்டுமென தீர்ப்பளித்தது.

இதற்கமைய அரசாங்கம் இந்த சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதுடன் பின்னர் அதை மாகாண சபைகளின் அனுமதிக்காகவும் அனுப்பி வைத்திருந்தது. சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளில் இந்த சட்டமூலத்திற்கு அனுமதி கிடைத்த போதும் கிழக்கு மாகாண சபையில் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் அனுமதி வழங்குவதும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சிறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் சிலர் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிந்தெடுக்க குறைந்த பட்சம் வாக்கு சதவீதத்தை 12 ஆக உயர்த்தியிருப்பதன் மூலம் சிறு கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இந்த அமைச்சர்கள் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான இந்த சட்டமூலமானது காலத்தின் அவசியமென ஆளுந்தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனும் அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கின்றனர். இருந்தபோதிலும் சட்டமூலத்தை ஒத்திவைத்து அதை மீண்டும் ஆலோசனைக்கு உட்படுத்த அமைச்சரவை இறுதியாக முடிவு செய்துள்ளது.

மதத்தின் அர்த்தத்தை திரிப்பதை போப் கண்டித்துள்ளார்

pope_afp.jpgமத்திய கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் போப் பெனடிக்ட், மதத்தை அர்த்தம் திரித்து கற்பிப்பதை கண்டித்துள்ளார். ஜோர்டான் தலைநகர் அம்மானில் மசூதி ஒன்றில் முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இவ்வாறு அர்த்தத்தை திரிப்பதனால் சமுதாயத்தில் பாகுபாடுகள் மற்றும் வன்முறை ஏற்படுவதாக கூறினார்.

இதற்கிடையே, கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்லாம் வன்முறையானது என கிறிஸ்துவ பேரரசர் ஒருவர் கூறியதாக போப் பெனடிக்ட் கூறினார், அதற்கு பின்னர் அவர் வருத்தம் தெரிவித்தார். அவ்வாறு போப் பெனடிக்ட் வருத்தம் தெரிவித்தமைக்கு ஜோர்டன் மன்னரின் மூத்த ஆலோசகர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் முஸ்லிம்கள் வருத்தம் அடைந்ததாகவும், எனினும் அந்த பேரரசரின் கருத்தை போப் பெனடிக்ட் கொண்டிருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் ஏற்பதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவிலிருந்து ஐ.சி.ஆர்.சியின் உதவியுடன் 518 பேர் புல்மோட்டை அழைத்துவரப்பட்டனர்

icrc.jpg
முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மூலம் நேற்றிரவு மேலும் 518 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நோயாளர்கள் ,காயமுற்றவர்கள் ,கர்ப்பிணிகள் மற்றும் இவர்களது உதவியாளர்களும் உறவினர்களும் என 518 பேர் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி கடந்த மார்ச் முதல் இது வரை இப்படி 10 ஆயிரத்து 174 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

லண்டன் ‘சனல் – 4’ தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூவர் நேற்று திருமலையில் கைது.

channel-4news.jpg வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுடைய முகாம்களின் நிலைமை தொடர்பான சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்த பிரித்தானியாவைச் சேர்ந்த ‘சனல் – 4’ தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் திருகோணமலையில் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் இவர்கள் மீதான விசாரணைகள் தொடர்வதாக காவல்துறைப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர நேற்று சனிக்கிழமை இரவு தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்காக திருகோணமலை சென்றிருந்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். ‘சனல் – 4’ தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிருபரான நிக் பட்ரன் வோல்ஸ், அதன் தயாரிப்பாளர் பெசி டூ, படப்பிடிப்பாளர் மற் ஜஸ்பர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் தொடரும் போர் தொடர்பான பல செய்திகளை ‘சனல் – 4’ தொலைக்காட்சி தொடர்ந்தும் ஒளிபரப்பி வந்திருக்கின்றது. இருந்தபோதிலும் கடந்த வாரம் ஒளிபரப்பான வவுனியா முகாம்கள் தொடர்பான தகவல்கள்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளையில் நிக் பட்ரன் வோல்சின் விசா அனுமதி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் பி.பி. அபயக்கோன் அறிவித்திருக்கின்றார்.

இன்று சென்னையில் கருணாநிதியுடன் இணைந்து சோனியா பிரசாரம்

06-sonia.jpgகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை சென்னை வரவுள்ளார். முதல்வர் கருணாநிதியும், அவரும் இணைந்து பிரசாரப் தீவுத் திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகின்றது. சோனியா வருகைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாலும், போராட்டங்களை அறிவித்துள்ளதாலும், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள உறவினர்களை தொடர்பு கொள்ளாமல் புலம்பெயர்ந்தவர்கள் தவிப்பு

teliphone.jpgஇலங்கையில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் தொலைபேசி வசதிகளை அரசு பல மாதமாக துண்டித்து விட்டது. போர் உக்கிரமடைந்ததுவிட்டதன் காரணமாக புலிகளின் அனுசரணையுடன் நடத்தப்படும் செய்மதி தொலைபேசி வழியாக வன்னியில் இருப்பவர்கள் தமது உறவினர்களை தொடர்பு கொள்வதும் குறைந்து விட்டது. மற்றொரு புறம் வவுனியா முகாம்களில் இருப்பவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது தெரியாத நிலையும் உள்ளது.

இதனால் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் இலங்கையில் உள்ள தமது உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிய முடியாமல் தவித்து வருகின்றனர்.

வவுனியா முகாம்களில் உள்ளவர்களின் வசதிக்காக தபால் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நிவாரணக் கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்புகள் ஏற்கனவே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்த அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன், முகாம்கள் இருக்கும் பகுதியில் வங்கிக் கிளைகள் திறக்கும் பணியும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். வவுனியா முகாம்களுக்கு ஏராளமானோர் வந்துள்ள நிலையில் வந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்

மருத்துவமனையிலிருந்து கருணாநிதி வீடு திரும்பினார்.

karunanithi.jpgஉடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் கருணாநிதி உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து நேற்று இரவு வீடு திரும்பினார். கடந்த 3ம் தேதி முதல்வருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. கூடமே முதுகு வலியும், தொண்டை வலியும் ஏற்படவே அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு முதல்வர் கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இரவு ஒன்பதரை மணியளவில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.