இயற்கை அனர்த்தத்தைக் கூட ஐ.தே.க.வின் சதித்திட்டம் என்று கூறுமளவு முட்டாள்தனம்

parliament-of-sri-lanka.jpgஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் 216000 ரூபாவுக்கு கடனாளியாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. ரவிகருணாநாயக்க, இயற்கை அனர்த்தம் ஏற்பட்டால் கூட அது ஐ.தே.க.வின் சதித்திட்டம் எனக் கூறுமளவுக்கு அரசு முட்டாள்தனமாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார். அத்துடன் சர்வதேச நாணயநிதியத்துக்கு அரசு அனுப்பியுள்ள கடிதத்தை பகிரங்கப்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவு கண்டுள்ளது.பாரிய வறுமை கடன் சுமை நிரம்பிய நாடாக இலங்கை மாறிவிட்டது. ஆனால், அரசு பிழையான தகவல்களை வழங்கி அனைவரையும் ஏமாற்றிவருகின்றது.

இலங்கையை உலகிற்கு விற்று விட்டதாக சர்வதேசத்தின் பிளக்கை கழற்றுவோம் எனக் கூறியவர்கள் எல்லாம் இன்று அவற்றின் காலைத்தொட்டு கும்பிடுகின்றனர். கல்வி அறிவற்றவர்கள் எல்லாம் பேசிப் பேசியே நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.கடந்த நாலரை வருடங்களில் மட்டும் 4,520 பில்லியன் ரூபா கடன் பெறப்பட்டுள்ளது. வருடம் தோறும் 650 பில்லியன் ரூபா கடன் அதிகமாகப்பெறப்பட்டுள்ளது.

அரசின் முட்டாள்தனமான போக்கினால் இலங்கைப்பிரஜைகள் ஒவ்வொருவரும் 216000 ரூபாவுக்கு கடனாளியாக்கப்பட்டுள்ளனர்.மத்திய வங்கி பணத்தை அச்சடித்து அச்சடித்து களைத்துப் போய்விட்டது. முழு உலகமும் இலங்கை முன் மண்டியிட்டு மகிந்த சிந்தனைக்கேற்றவாறு ஆடும் என்பதுதான் இந்த அரசின் நினைப்பு. இலங்கைக்குள் உலகம் இல்லை. உலகிற்குள் தான் இலங்கையுள்ளது. சர்வதேசத்துடன் சிநேகபூர்வ உறவை வளர்க்கவேண்டும். சண்டித்தனம் காட்டக்கூடாது.

நாட்டின் நிர்வாகம் என்பது யுத்தத்தில் மட்டும் தங்கியிருக்கக்கூடாது. பொருளாதாரம் ஊடாக சுதந்திரம் ஜனநாயகம் உரிமையென பல பொறுப்புகள் நாட்டின் நிர்வாகத்தில் முக்கியமானவை. மக்கள் நலன் தொடர்பில் நாம் அரசுக்கு எதைக்கூறினாலும் ஐ.தே.க. சதி செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர். இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டால் கூட அது ஐ.தே.க.வின் சதியெனக் கூறுமளவுக்கு அரசு முட்டாள் தனமாக செயற்படுகின்றது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் மக்கள் பிரச்சினை தொடர்பாக எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சரவை அந்தஸ்துள்ள எந்தவொரு அமைச்சரும் சபையில் இருப்பதில்லை.அடிவருடிகளே இருந்து கூச்சலிடுகின்றனர்.

இலங்கையின் சுற்றுலாத்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறையில் 29 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.அந்நிய செலாவணி குறைந்துள்ளது. ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *