உள்ளூராட்சி தேர்தல் முறையை திருத்தும் சட்ட மூலத்தை ஒத்திவைக்க அமைச்சரவை தீர்மானம்

sri-lankan-government.jpgஉள்ளூராட்சி தேர்தல் முறையை திருத்துவதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை ஒத்திவைக்க அமைச்சரவை தீர்மானித்திருக்கின்றது. கடந்த 6 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த உத்தேசிக்கப்பட்ட திருத்தங்களின் மூலம் சிறு கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்களை கருத்திற் கொண்டே அமைச்சரவை இந்த தீர்மானத்திற்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொகுதிவாரி முறை மற்றும் விகிதாசார முறை இரண்டும் கலந்த தேர்தல் முறைமையொன்றின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது உள்ளிட்ட பல யோசனைகள் இந்த சட்டமூலத்தின் மூலம் முன்வைக்கப்பட்டிருந்தன.

சட்டமூலம் இதற்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட போது அது அரசியலமைப்புக்கு முரணானதென ஆட்சேபித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ததுடன் அந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதென்றால் அதற்கு மாகாண சபைகளின் அனுமதி பெறப்பட வேண்டுமென தீர்ப்பளித்தது.

இதற்கமைய அரசாங்கம் இந்த சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதுடன் பின்னர் அதை மாகாண சபைகளின் அனுமதிக்காகவும் அனுப்பி வைத்திருந்தது. சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளில் இந்த சட்டமூலத்திற்கு அனுமதி கிடைத்த போதும் கிழக்கு மாகாண சபையில் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் அனுமதி வழங்குவதும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சிறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் சிலர் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிந்தெடுக்க குறைந்த பட்சம் வாக்கு சதவீதத்தை 12 ஆக உயர்த்தியிருப்பதன் மூலம் சிறு கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இந்த அமைச்சர்கள் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான இந்த சட்டமூலமானது காலத்தின் அவசியமென ஆளுந்தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனும் அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கின்றனர். இருந்தபோதிலும் சட்டமூலத்தை ஒத்திவைத்து அதை மீண்டும் ஆலோசனைக்கு உட்படுத்த அமைச்சரவை இறுதியாக முடிவு செய்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *