வவுனியா முகாம்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு போதியளவுக்கு மலசலகூட வசதிகளை வழங்காததற்கான பொறுப்பை ஐ.நா.வே ஏற்கவேண்டும் என்று மீள்குடியேற்ற விவகார அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறியுள்ளார்.
முகாம்களிலுள்ளோரின் அரைவாசிப் பகுதியினருக்கே மலசலகூட வசதிகள் உள்ளதாகவும் குளிக்கும் வசதிகள் மிகக் குறைந்த மட்டத்திலேயே இருப்பதாகவும் ஐ.நா.தெரிவித்திருந்தது.ஆனால், ஐ.நா.வுக்கு அரசாங்கத்தின் காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக வசதிகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நிதியுதவி ஐ.நா.வுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பி.பி.சி.யின் சிங்கள சேவையான “சந்தேசிய’விற்கு கூறியுள்ளார். தாமதம் அவர்கள் தரப்பிலேயே(ஐ.நா.) உள்ளது. அதற்கு அரசாங்கம் பொறுப்பு அல்ல என்று ரிசாட் கூறியுள்ளார்.
இதேவேளை, முகாம்களில் உள்ள முதியவர்கள் இறப்பது அசாதாரணமானதல்ல என்று அரசாங்கம் கூறியுள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் முதியவர்களும் சிறுவர்களுமே என்று சமூகசேவைகள் பிரதியமைச்சர் லயனல் பிரேம சிறி பி.பி.சி.க்கு கூறியுள்ளார். “அதனால் முகாம்களில் உள்ள முதியவர்கள் இறப்பது இயற்கையானதே’ என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
முதியவர்களை மீளக்குடியமர்த்தும் பொறுப்பை இராணுவத்திடமிருந்து பொலிஸார் பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.அதேசமயம், முகாம்களின் நிலைமை சிறப்பாக இல்லையென்பதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
சொந்த வீடுகள்,தோட்டங்கள் போன்று நிலைமை இல்லை. ஆயினும் நாம் அவர்களுக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
வயது முதிர்ந்தவர்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் விடயத்தில் அரசாங்கம் மிகக் கவனத்துடன் இருப்பதாகவும் ஏனெனில் உறவினர்களால் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முகாம்களிலுள்ள கணிசமான அளவு மக்களுக்குப் பிராந்தியத்தில் உறவினர்கள் இருப்பதாகவும் அவர்களை வெளியேற அனுமதித்தால் அவர்கள் உறவினர்களுடன் தங்கியிருக்க முடியும் என்று கடந்த வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி 10-60 வயதுக்கு இடைப்பட்டவர்களை முகாம்களுக்கு வெளியே செல்ல அனுமதிப்பதை அரசு தடைசெய்துள்ளது.60 வயதுக்கு மேற்பட்டோர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் முதலில் அறிவித்திருந்தது.