அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு இந்திய குடியுரிமை அவசியமில்லை – அமைச்சர் விநாயகமூர்த்தி

140909karuna.jpgதமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை என தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு அகதிமுகாம்களில் சுமார் 200,000 இலங்கைத் தமிழ்அகதிகள் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தற்போது நிலைமைகள் சுமூகமான சுழ்நிலை காணப்படுவதாகவும்,  இதனால் இந்திய மத்திய அரசு இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டிய அவசியமில்லை என எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள மக்களை இலங்கைக்கு மீள அழைத்துக்கொள்ள இதுவே சிறந்த தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தங்கி இருக்கக்கூடிய இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எடுத்துக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2009-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு

மருத்துவத் துறையில் சாதனை புரிந்துள்ள மூன்று அமெரிக்க விஞ்ஞாணிகள் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்பர்ன், கரோல் கிரெய்டர்,  ஜேக் சோஸ்டாக் ஆகியோர் 2009-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தெரிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எலிசபெத் பிளாக்பர்ன்

அவுஸ்திரேலியாவில் 1948-ல் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1975-ல் டாக்டர் பட்டம் பெற்றவர்.

கரோல் கிரெய்டர்

அமெரிக்கரான கரோல் கிரெய்டர் 1961-ல் பிறந்தார். 1987-ல் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

ஜேக் சோஸ்டாக்

லண்டனில் 1952-ல் பிறந்தார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள இவர் நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1977-ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1979 முதல் ஹார்வர்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

வயோதிகம் தொடர்பான முக்கியக் கண்டுபிடிப்புக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இவர்களது கண்டுபிடிப்பு புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும். வயோதிகத்துக்கு காரணமான செல் மற்றும் செல் பிரிதலின் போது குரோமோசோம்கள் எவ்வாறு பிரதி எடுக்கின்றன என்பதை இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் 10-ம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் ஒஸ்லோவில் நடைபெறும் விழாவில் இவர்களுக்கு நோபல் பரிசு  வழங்கப்படவுள்ளது. நோபல் பரிசில் தங்கப் பதக்கம்,  பட்டயம் மற்றும் ரொக்கப் பரிசு  ஆகியவை அடங்கும். பரிசு தொகை மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். டைனமைட்டை கண்டுபிடித்த அல்பிரட் நோபலின் நினைவாக 1901-ம் ஆண்டில் இருந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

பருவப்பெயர்ச்சி மழையின் பாதிப்பை நிவாரண கிராமங்களில் தவிர்க்க திட்டம் – மஹிந்த சமரசிங்க

mahinda-samarasinha.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாவண்ணம் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்கள் 80 சதவீதம் பூர்த்தியடைந்திருப்பதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவில் அனைத்து வலயங்களிலும் பாதுகாப்பான முறையில் வடிகாலமைக்கும் வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் இத்திட்டத்தின் பணிகள் முழுமையாக பூரணப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின்போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோரில், மீளக்குடியமர்த்தப்பட்டோர் மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டோர் தவிர்ந்த தற்போது தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 679 பேரினதும் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இச் செயற்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்மாதம் இறுதி முதல் எதிர்வரும் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வவுனியாவில் பருவப் பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவது வழமை.

இம்மழைக்கு முகம் கொடுக்க கூடிய வகையில் வேலைத் திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டங்கள் ஐ.நா. அமைப்புக்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றன.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் மீள்குடியேற்றம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் இதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

மழைகாலத்தின்போது நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவ்வாறானதொரு சூழ்நிலையை தவிர்க்கும் முகமாகவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

மழையினால் ஏற்படக் கூடிய அசாதாரண சூழ்நிலைகளை தவிர்க்கும் முகமாக அநேகமான வேலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா வலையம் 01 இல் 95 சதவீதமான வேலைத் திட்டம் பூர்த்தியாகியிருப்பதாகவும் வலையம் 02 இல் 100 சதவீதமும் வலையம் 03 இல் 80 சதவீதமும் வலையம் 04 இல் 80 சதவீதமும் வலையம் 05 இல் 90 சதவீதமும் வலையம் 06 ‘எ’ யில் 40 சதவீதமும் வலையம் 06 ‘பி’ யில் 50 சதவீதமும், வலையம் 08 இல் சுமார் 70 சதவீதமான வேலையும் பூர்த்தியடைந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். வலையம் ‘0’ மற்றும் வலையில் 07 இல் வேலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எமது படைவீரர்கள் குறித்து தெரிவித்த கூற்றை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது – உண்மையை கூறியமைக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

அமெரிக்க ராஜாங்க செயலாளர் திணைக்களம் எமது படை வீரர்களுக்கு எதிராக தெரிவித்த கூற்றுக்களில் உண்மையில்லையென்பதை அத்திணைக்களமே ஏற்றுக்கொண்டுள்ளது. தவறை சரி செய்து உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளமைக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள குறிப்பில் தமது தவறை நிவர்த்தி செய்துள்ளதுடன் எமது படை வீரர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமைக்கான பின்னணி அல்லது நிலைமைகள் தொடர்பாகத் தம்மிடம் எவ்வித தகவல்களும் இல்லையென்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அக்குற்றச்சாட்டை வாபஸ் பெறுவதாகவும் மேற்படி திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தம்மால் இடம்பெற்றுள்ள தவறை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

காலி பகுதிக்கு 450 மில்லியன் ரூபா செலவில் நவீன விளையாட்டரங்கு!

061009gall_ground.pngகாலி தடல்ல பகுதியில் சகல வசதிகளையும் கொண்ட நவீன விளையாட்டரங்குக் கட்டிடத் தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக இந்தப் பகுதிக்கு ஒரு குறைபாடாக நிலவி வந்த இந்தக் கட்டடத் தொகுதி 16 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மானிக்கப்பட்டு வருகிறது.

நகர அபிவிருத்தி அதிகார சபை இத்திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் பிரதான விளையாட்டரங்கு 400 மீட்டர் ஓட்டப் பாதையைக் கொண்டதாகும். மேலும்  இந்தக் கட்டிடத் தொகுதி உள்ளக விளையாட்டரங்கு, டெனிஸ், வலைபந்து, கூடைப்பந்து, கைப்பந்து போன்ற போட்டிகளுக்கான விளையாட்டுத் திடல்கள், வாகன தரிப்பிடம், தங்குமிட வசதி, நிருவாகப் பணிமனை  போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் நிர்மானப்பணிகளை மூன்று வருட காலத்திற்குள் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளுக்குள் கமரா, தொலைபேசி எடுத்துச் செல்லத் தடை

srilanka-voting.jpgவாக்குச் சாவடிகளுக்குள் வீடியோ கமரா, புகைப்பட கமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பனவற்றை எடுத்துச் செல்வதும் பாவிப்பதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் வாக்குச் சாவடிகளுக்குள் வீடியோ கமரா மற்றும் புகைப்படக் கமரா என்பனவற்றைப் பயன்படுத்தி படம் எடுப்பதற்கும் எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

இது தொடர்பான சட்ட ஏற்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதேநேரம் ஆயுதங்களுடன் எவரும் வாக்கு சாவடிகளுக்குள் பிரவேசிக்க இடமளிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தென் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலையொட்டியே தேர்தல் ஆணையாளர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கின்றார். இதேநேரம் வாக்காளர்கள், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள், அபேட்சகர்கள், கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் பெப்ரல் மற்றும் சி. எம். ஈ. வி. அமைப்புக்களின் தேர்தல் கண்காணிப்பாளர்கள், பொலிஸார், தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருப்போர் போன்றோரைத் தவிர வேறு எவரும் வாக்குச் சாவடிகளுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் போதிய திறன் பெற்றுவிட்டது – ஐ.நா. தகவல்

iranflagss.jpgஅணு குண்டு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈரான் போதியத் திறன் பெற்றுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுகுண்டு கண்காணிப்புப் பிரிவு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் அணுகுண்டு தயாரிப்பதில் பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ கியூ கான் உதவி செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அணுகுண்டு தொழில்நுட்பத்தை ஈரான் அதன் நட்பு நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டு, தற்போது தனது தேவைக்கு ஏற்ப அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக சர்வதேச அணுசக்தி முகமை தகவல்களை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி ஏ கியூ கான் மூலம் அணுகுண்டு வடிவமைப்பு தொழில்நுட்பங்களை ஈரான் பெற்றுக் கொண்டுள்ளது. மேலும் யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கான இயந்திரங்களையும் அவர் ஈரானுக்கு விற்பனை செய்துள்ளதாகப் பல்வேறு உளவுத்துறை நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
மேற்கண்ட தகவல்களை ஈரான் சென்றுவந்த ரஷிய அணு ஆயுத விஞ்ஞானியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையே அணுகுண்டு தயாரிப்புத் தொடர்பாக ஈரான் போதுமான திறனைப் பெற்றுவிட்டதாகவும், தாற்காலிகமாக ராணுவ தேவைக்கு மட்டும் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும்,  அணுகுண்டு தயாரிப்புப் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை எனவும் அங்கிருந்து கிடைத்த உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் 2003-ம் ஆண்டிலேயே அணு ஆயுதங்கள் தயாரிக்கும் திறமையைப் பெற்றுவிட்டதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, அமெரிக்க உளவு அமைப்புகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாயின.

ஆனால் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா,  பிரிட்டன்,,பிரான்ஸ்,  ஜெர்மனி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டிவருகின்றன. 

தேசியப் பாடசாலை ஆசிரியர்களின் சம்பள நிலுவையை வழங்க நிதி

தேசியப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவையை வழங்கவென 170 மில்லியன் ரூபாவை கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ளது.

இந்நிதி மாகாண கல்வி திணைக்களங்களுக்கு கடந்த செப்டம்பர் மாத நடுப்பகுதியில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் மாகாண பாடசாலைகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கும் சம்பள நிலுவையை வழங்குவதற்கு தேவையான பணம் வெகுவிரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான நிதியை வழங்குமாறு நிதி ஆணைக் குழுவிடம் கல்வி அமைச்சு கேட்டுள்ளது. அந்நிதி கிடைக்கப் பெற்றதும் மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவையை மாகாண சபைகள் ஊடாக வழங்கவும் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவிருக்கின்றது.

காற்று, மழையினால் நாட்டின் சில பகுதிகளில் கடும் சேதம் – நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அரசு பணிப்பு

021009monsoon-rains.jpgநாட்டின் சில பகுதிகளில் கடும் காற்று மற்றும் மழை காரணமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 500 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் நேற்று தெரிவித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான வசதிகளை உடனுக்குடன் வழங்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்டீன் நேற்று தெரிவித்தார்.

சேதமடைந்த வீடுகள் தொடர்பாக மதிப்பீடு செய்து துரிதமாக கையளிக்குமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அமைச்சின் செயலாளர் பணிப்புரை வழங்கியுள்ளார். கடும்காற்று காரணமாக புத்தளம் நகரமே கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுமார் 442 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு 1070 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

இதேவேளை வெள்ளம் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர கம்பஹா, இரத்திபுரி, களுத்துறை, காலி, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலும் காற்று மழை காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட புத்தளம் பகுதிகளை நேற்று (4) நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சின் செயலாளர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை மரம் வீழ்ந்ததால் கொல்லப்பட்ட காலியைச் சேர்ந்த ஐயவரினதும் இறுதிக் கிரியைகளுக்காக 15 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் நகரில் கடைகள் உட்பட 442 வீடுகள் சேதமடைந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. புத்தளம் கிழக்கில் 218 வீடுகளும், மரைக்கார் வீதியில் 53 வீடுகளும் பழைய ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் 41 வீடுகளும் பெரிய குடியிருப்பு வீதியில் 133 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக புத்தளம் பிரதேச செயலாளர் கூறினார்.

கண்டியில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பலத்த காற்றின் காரணமாக மரக்கிளைகள், மரங்கள் விழுந்துள்ளதால் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதோடு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

கடும் காற்று காரணமாக கண்டி பகுதியில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள், மாட்டுப் பட்டிகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

சீரற்ற மழை காரணமாக மரக்கறி பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் மழையுடன் கூடிய காற்றின் காரணமாக தெல் தோட்டை பிரதேசத்தில் 24 வீடுகளும் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் மூன்று லயன்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெல்தோட்டை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதனால் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தெல்தோட்டை கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மாத்தளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய கடும் காற்று காரணமாக பாரிய மரங்கள் பல சரிந்து வீழ்ந்துள்ளன.

பல மரங்கள் மின்சார கம்பங்களில் வீழ்ந்துள்ளதால் மாத்தளை மாவட்டத்தில் பல இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு துரிதமாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடும் காற்று காரணமாக கலவான தமிழ் வித்தியாலய கட்டடத்தின் மீது மரம் ஒன்று சாய்ந்து வீழ்ந்ததில் பாடசாலை கட்டடம் சேதமடைந்துள்ளது.

379 குடும்பங்களை வவுனியாவில் மீளக்குடியமர்த்த துரித நடவடிக்கை – அமைச்சர் ரிஷாட்

badi000000.jpgவவுனியா மாவட்டம் சாளம்பைக் குளத்தில் 379 குடும்பங்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்குமாறு மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சாளம்பைக் குளத்திலிருந்து கடந்த 90 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த 400 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள இக்கிரிகொல்லாவை என்ற இடத்தில் தற்காலிகமாக தங்கி வாழ்கின்றனர்.

இவர்களுள் முதற்கட்டமாக 21 குடும்பங்கள் அண்மையில் சாளம்பைக் குளத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். இக்கிரிகொல்லாவையில் தங்கியிருக்கும் ஏனைய 379 குடும்பங்களையும் அடுத்த மாதத்திற்கு முன்னதாக அவர்களது சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்துவதே அமைச்சரின் விருப்பமாகும். அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் முகமாக அமைச்சர் தலைமையில் விசேட கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசம்பந்தர், பிரதேச செயலாளர், பொலிஸ் அதிகாரிகள் உட்பட மீள்குடியேற்றத்துடன் சம்பந்தப்பட்ட பல அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

இதேவேளை இக்கிரிகொல்லாவையில் தற்போது இடம்பெயர்ந்து வசித்து வரும் மக்கள் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று முதல் தடவையாக தமது சொந்த இடமான சாளம்பைக்குளத்துக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தின்போது சாளம்பைக்குளத்திலிருக்கும் 10 குடிதண்ணீர் கிணறுகளையும் சுத்திகரிக்குமாறும் மின்சார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் ரிசாட் மேலதிக அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.