அரசியல் வாதிகள் மீது சேறு பூசிவந்த அரசாங்கம் இன்று மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் மீதும் சேறுபூசும் கலாசாரத்தைத் தோற்றுவித்திருப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க புத்தசாசனத்துக்கு களங்கமேற்படுத்த யாராவது முனைந்தால் அதனை முறியடிக்க எந்தச் சவாலையும் எதிர் கொள்ளத்தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
நீதிக்காக குரல் கொடுக்க முன்வந்த அதி உயர் மகாசங்க உயர் பீடங்களை அச்சுறுத்தி வாய்களுக்கு பூட்டுப் போடும் கைங்கரியத்தை ஆளும் தரப்பு மேற்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டு மக்களை பிளவு படுத்தி அரசியல் நடத்தியவர்கள் இன்று படையினரையும், மகா சங்கத்தினரையும் பிரிவு படுத்தி நாட்டை அராஜகத்தின்பால் கொண்டு செல்லத் தொடங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் சாடினார்.
எதிரணிகளின் பொது முன்னணியின் ஏற்பாட்டில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு செய்யப்பட்டமை அநீதியானதெனவும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதியை வலியுறுத்தும் மக்கள் மனு கையெழுத்திடும் வைபவத்தில் உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிரணிகளின் பொது முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், அரசியல்வாதிகளும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகளும், பொது மக்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட இவ்வைபவம் ஜே.ஆர்.ஜயவர்தன கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது; ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான பல போராட்டங்களை நாம் சமகாலத்தில் முன்னெடுத்துவருகின்றோம். இந்த போராட்டங்களில் நாடு முழுவதுமுள்ள மக்கள் ஒன்று பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு எதுவுமின்றி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார். எமது நாடு இன்னொரு மியன்மாராக மாறியுள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறு நடப்பது உலகிலேயே இதுதான் முதற்தடவையாகும். நாட்டில் சர்வாதிகார ஆட்சி தலை தூக்கியிருப்பதற்கு இது ஒன்றே போதுமான சாட்சியாகும்.
ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்ததோடு அது முற்றுப்பெறவில்லை. அவரது மருமகனையும் கை விலங்கு மாட்டத்தேடிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி மருமகனின் தாயாரையும் இரகசியப் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி நீதிமன்றில் ஆஜர் செய்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அடுத்து அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை பொன்சேகாவின் மரணித்த குடும்பத்தினரின் புதைகுழிகளை தோண்டி அந்த உடல்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம்.இந்த மக்கள் மனு நாடுமுழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு மக்களின் கையொப்பங்கள் திரட்டப்படும். மனுவின் பிரதிகள் தேவைப்படுவோர், ஐ.தே.க., ஜே.வி.பி. தலைமையகங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.
அதிகார வெறிபிடித்த கூட்டம் முதலில் பெரும்பான்மை சிறுபான்மை என்று பிளவுபடுத்தினர். இப்போது சிங்கள மக்களையே இரண்டாகப் பிளவுபடுத்தியுள்ளது. அத்துடன் படைத்தரப்பிலும் பிளவேற்படுத்தப்பட்டது. இறுதியாக இப்போது பௌத்த மகாசங்கத்தையும் பிளவுபடுத்திவிட்டது.
மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் உட்பட நான்கு பீடங்கள் மீதும் களங்கமேற்படுத்தியுள்ளனர். அரசியல்வாதிகள் மீது சேறு பூசியவர்கள் பௌத்த மகாசங்கத்தினர் மீதும் அதனைச் செய்ய முற்பட்டுள்ளனர். பிரபாகரனால் செய்ய முடியாததை செய்யமுற்படாததை அரசு செய்து காட்டிவிட்டது. பௌத்த சாசனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை சிங்கள பௌத்த மக்கள் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. மகாசங்கம் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இதற்கெதிராக சிங்கள மக்கள் ஒன்றுபட முன்வர வேண்டும் எனவும் ரணில் அழைப்பு விடுத்தார்.