அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பிரதமருக்கு இன்று கண்டியில் பெரும் வரவேற்பு

dm-jayaratna.jpgபிரதமர் டி. எம். ஜயரட்னவுக்கு கண்டி மாவட்டத்தின் பிரதான நகர்களில் இன்று 26 ஆம் திகதி பாரிய வரவேற்புகள் அளிக்கப்படவிருக்கின்றன. கடுகண்ணாவ, பிலிமத்தலாவ, பேராதனை, கண்டி மாநகர், கெலிஓயா, கம்பளை உட்பட பல நகர்களில் பிரதமரான ஜயரட்னவுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இன்று காலை 8.00 மணியளவில் இவ்வரவேற்பு வைபவங்கள் கடுகண்ணாவவில் ஆரம்பமாகவிருக்கின்றன. இதேநேரம் காலை 9.30 மணியளவில் தலதா மாளிகையில் மத வழிபாடுகளில் ஈடுபடும் பிரதமர் மல்வத்த அஸ்கிரிய பீடாதிபதிகளை நேரில் சந்தித்து ஆசிகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளார். அத்தோடு இந்து, இஸ்லாம், கிரிஸ்தவ மத வழிபாட்டுத் தலங்களுக்கும் நேரில் சென்று வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளார்.

இதேவேளை தலதா மாளிகையின் வளாகத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் சர்வதேச பெளத்த நூதனசாலையின் மத்திய நிலையத்திற்கு பிற்பகல் 1.00 மணிக்கு பிரதமர் ஜயரட்ன வைபவ ரீதியாக அடிக்கல் நடவுமிருக்கின்றார்.

ஆறுமுகன் அமைச்சுப் பதவி ஏற்பதில் இன்னும் முடிவில்லை

arumugam.jpgஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் எம். பி, அமைச்சுப் பதவி ஏற்பது தொடர்பில் இன்னமும் முடிவுகள் எட்டப்படவில்லையெனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த அமைச்சரவையில் வகித்த அமைச்சுப் பொறுப்புகள் இந்தமுறை எவருக்கும் மீள வழங்கப்படாததால், இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அமைச்சைப் பெறுவது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆறுமுகன் தொண்டமான் எம். பிக்குக் கால் நடை அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்ட போதிலும் அதனை அவர் ஏற்கவில்லையெனத் தெரிய வருகிறது. இந் நிலையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். இன்று அல்லது நாளை தொண்டமான் அமைச்சர் பதவி ஏற்பார் எனத் தெரிய வருகிறது.

மூன்று தசாப்த காலத்திற்குப் பின்னர் நாட்டில் ஸ்திரமான பாராளுமன்றம்

parliament.jpgமூன்று தசாப்த காலத்திற்குப் பின்னர் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய ஸ்திரமான ஒரு பாராளுமன்றம் அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர்கள் தெரிவித்தனர். 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்திரமான அரசாங்கத்தை நடத்தக் கூடிய அரசியல் சூழல் இருக்கவில்லை என்று கூறிய அவர்கள், இப்போது நாட்டின் எதிர்காலத்திற்கென சிறந்ததோர் பாராளுமன்றம் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தனர்.

யுத்தத்திற்குப் பின்னரான இந்த மாற்றத்திற்கு மத்தியில், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றைக் காண விரும்புவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளமை நல்லதோர் அணுகுமுறையாகுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சம்பந்தன் ஆற்றிய உரை அவர்களின் அரசியல் செல்வழியில் புதிய அணுகுமுறையைப் புலப்படுத்துவதாக அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். சந்திப் புக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஐ.ம.சு. முன்னணியின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் அழகப்பெரும குறிப்பிட்டார்.

பூட்டானில் நடைபெறவுள்ள 16ஆவது ‘சார்க்’ உச்சிநாட்டில் கலந்துகொண்டுவிட்டு ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்தச் சந்திப்பு நடைபெறும் என அமைச்சர் கூறினார். சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச்சந்திப்புக்குப் பின்னர் இலங்கையில் சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி நடத்தும் சந்திப்பு முக்கியத்துவமிக்கதாக இருக்குமென சுட்டிக்காட்டப்படுகிறது.

இதேவேளை, நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் யாழ் மாவட்ட தமிழர் ஒருவர் பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராகத் தெரிவாகியிருப்பது ஒரு முக்கிய அரசியல் திருப்புமுனையாகுமென்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

“1931ஆம் ஆண்டின் முதலாவது சட்ட சபையில் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த வைத்தியலிங்கம் துரைசாமி சபாநாயகராக இருந்தார். அதன் பின்னர் 1965 முதல் 1970 ஆண்டு வரை உடுப்பிட்டி தொகுதியைச் சேர்ந்த மு. சிவசிதம்பரம் பிரதி சபாநாயகராகவிருந்தார். அதற்குப் பின் தற்போது 40 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திரகுமார் முருகேசு குழுக்களின் பிரதித் தலைவர் பதிவிக்குத் தெரிவாகியுள்ளார். இது ஒரு நாள் அரசியல் மாற்றம்” என்றும் அமைச்சர் விபரித்தார்.

நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தனிப் பெரும்பான்மையுடன் ஓர் அரசியல் கட்சிக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளமை சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்குமென்றும் முன்னணியின் தலைவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர்கள் டலஸ் அழகப்பெரும, மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, டபிள்யூ. டி. ஜே. செனவிரட்ன ஆகியோரே இந்தக் கருத்துகளைத் தெரிவித்தனர்.

தேயிலை தோட்டத்தில் மின்னல் தாக்கி பெண் தொழிலாளி காயம்

lightning-01.jpgதேயிலை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த இரு பெண் தொழிலாளிகள் மீது மின்னல் தாக்கியதால் மிக ஆபத்தான நிலையில் பன்வில மக்கானிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று நண்பகல் 12.30 அளவில் இடம் பெற்றது. 39 வயதுடைய தனரோஜா 32 வயதுடைய நிலந்தி என்ற இரு பெண் தொழிலாளிகளுமே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்கானவர்களாவர்.

சார்க் உச்சி மாநாட்டில் எதிர்வரும் 26ம் திகதி ஜனாதிபதி உரை

saarc-logo.jpgபூட்டானின் தலைநகர் திம்புவில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 26 ஆம் திகதி உரையாற்றுவார்.

24 ஆம் திகதி சார்க் உச்சி மாநாடு ஆரம்பமாகிறது. மூன்று நாள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி முக்கிய உரையாற்றுவாரென தெரிய வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கை உயர் மட்டக் குழுவில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ¤ம் கலந்து கொள்கிறார்.

13வது திருத்தச்சட்டத்தை ஆரம்பமாகக் கொண்ட இனப்பிரச்சினைக்குத் தீர்வு – தமிழரசுக் கட்சி உட்பட சகல கட்சிகளுடனும் பேச டக்ளஸ் முடிவு

epdp.jpgஅரசிய லமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வு பெற்றுக்கொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட சகல கட்சிகளுடனு பேசவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நேற்று இஸிபத்தான மாவத்தையிலுள்ள சமூக சேவைகள் அமைச்சில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு நடைமுறைச் சாத்தியமான இறுதித்தீர்வை நோக்கிச் செல்லும் ஆரம்பமாகவே இது அமையும்.

தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார்கள். எனினும் உத்தியோகபூர்வமாக சகல கட்சிகளுடனும் பேசி பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அவரவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள், கொள்கைகள் இருக்கலாம். எனினும் ஆரம்பம் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழர் மத்தியில் ஒருமித்த ஒற்றுமை இல்லை. தென்னிலங்கை தட்டிக்கழித்து விடக்கூடாது. அதற்கு ஏற்றாற்போல் நாம் செயற்பட வேண்டும்.

கடந்த காலங்களில் எமக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தவறவிட்டு விட்டோம். இனியும் அவ்வாறு நடைபெறாமல் சந்தர்ப்பங்களை பயன்படுத்த முயற்சிப்போம். நாம் இழந்தவைகள் இனியும் போதும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்

கண்டி மாவட்டத்திற்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை

keheliya-rambukwella.jpgகண்டி மாவட்டத்திற்கு அமைச்சுப் பொறுப்புக்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை. குறிப்பாக தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்ற காரணத்தினால் அமைச்சுப் பொறுப்புக்களை தற்போதைக்கு வழங்குவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
 
நாவலப்பிட்டி தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே, அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய எவருக்கும் அமைச்சு அல்லது பிரதி அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை. ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர் அமைச்சுப் பொறுப்புக்கள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

கண்டி மாவட்டத்தில், கெஹலிய ரம்புக்வெல்ல, எஸ்.பி திஸாநாயக்க, மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் சரத் அமுனுகம உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கத்தின் “மினி பட்ஜட்” ஜுலையில்

parliament.jpgபுதிய அரசாங்கத்தின் இந்த வருடத்திற்கான “மினி பட்ஜட்” எதிர்வரும் ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக மூன்று மாத காலத்திற்குரிய ஒரு கணக்கறிக்கையை ஜனாதிபதி சமர்ப்பிப்பாரென்றும் தெரிவித்த அமைச்சர் சில்வா, ஜுலை மாதத்தில் மினி பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்தே 2011 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படு மென்று கூறினார்.

தேர்தலுக்குப் பின்னர் நேற்று நடைபெற்ற முதலாவது செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் கணக்கு அறிக்கையின் பின்னர், அரசாங்கம் இதுவரை செய்த செலவுகள், வரவுகள் ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படுமென்று குறிப்பிட்டார்.

புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அடித்தளம் இடப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் நிமல், எதிர்க்கட்சி குரோத அரசியலையிட்டு நாகரிக அரசியலுக்குப் பிரவேசித்தமைக்கு நன்றியும் தெரிவித்தார்.

அமைச்சரவையில் புதுமுகங்கள்

wimal-weerawansa.gifபுதிய அமைச்சரவையில் புதிய முகங்களாக பசில் ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

நேற்றுப் பதவியேற்ற அமைச்சரவையில் முன்னைய அரசாங்கத்தில் வகித்த பொறுப்புகள் மாற்றப்பட்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் பிரதி அமைச்சர்களாகப் பின்வரும் புது முகங்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நிருபமா ராஜபக்ஷ, லலித் திஸாநாயக்க, சரண குணவர்தன, விஜிதமுனி சொய்ஸா, வீரகுமார திஸாநாயக்க.

அடுத்த சில மாதங்களுக்குள் அரசியலமைப்பில் மாற்றம்

parliament.jpgநாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு அடுத்த சில மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை உள்ளடக்கியும் விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்றி அரச சேவையை செயல்திறன் மிக்கதாக்கும் வகையில் சட்டங்களைத் திருத்தியமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சுயாதீன ஆணைக்குழுக்களை செயற்படுத்தவும் ஆணையாளர்கள் விளைதிறனுடன் பணியாற்றுவதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்வதுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையிலும் மாற்றம் செய்யப்படுமென அவர் கூறினார். கிராமத்து மக்களுக்குப் பணியாற்றுவதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதியினை ஒதுக்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கூறிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இப்போது முழுப் பிரதேசத்திற்குமாகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் என்றும் அந்த நிலையைத் தோற்றுவித்த விருப்பு வாக்கு முறைமை இல்லாமற் செய்யப்படுமென்றும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் நிறைவுற்றதற்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முதலாவது செய்தியாளர் மாநாட்டை நேற்று (23) கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடத்தியது. இதில் முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, பொருளாளர் டலஸ் அழகப்பெரும உப தலைவர்கள் நிமல் சிறிபால டி சில்வா டபிள்யூ. டி. ஜே. செனவிரட்ன ஆகியோர் கலந்துகொண்டு புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை விளக்கினர்.

“நாட்டின் அபிவிருத்திக்கு ஏற்ற வகையில் யாப்பு மறுசீரமைக்கப்படும். எந்த நிறுவனங்களினதும் தடையின்றி அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப் படுமென்றும், 10 ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அடுத்து வரும் மாதங்களில் நடவடிக்கை எடுக் கப்படுமென்றும் அவர்கள் கூறினர்.