முல்லைத்தீவில் 20 மாணவிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் யூன் 24இல் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவரோடு முன்னிலையானார்.
முல்லைத்தீவின் முக்கிய பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியர் சில மாணவர்களின் துணையோடு மிகக் கீழ்த்தரமான பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை அண்மையில் அம்பலமாகி இருந்தது. 1,500 முதல் 2,000 வரையான மாணவ மாணவிகள் கற்கின்ற இப்பாடசாலையில் காபொத சாதரண தர, உயர்தர வகுப்புகளுக்கு கணித பாடம் கற்பிக்கின்ற ஆசிரியரே இந்த பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். தனது முப்பதுக்களை இன்னமும் தொட்டிராத திருமணமாகாத இந்த ஆசிரியர் தச்துதன் என அறியப்படுகின்றார். இவரது படமும் வெளியிடப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்ட இவர் கணித பாட ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி தேசம்நெற்கு தகவலளித்த அப்பாடசாலையின் கபொத உயர்தர முதலாம் ஆண்டு மாணவர், இவருடைய பாலியல் சேட்டைகள் அனைத்தும் அவருடைய பேர்சனல் க்கிளாஸ் (personal class) நடைபெறும் வீட்டிலேயே நடைபெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட 20 மாணவிகள் இவரிடம் தனியார் கல்விக்கு சென்றவர்களாகவே உள்ளனர். குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளே பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றுமொரு பெண்கள் பாடசாலையில் இருந்து இவரிடம் பேர்சனல் க்கிளாஸ் க்கு வந்த ஒரு சில மாணவிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாணவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தச்சுதன் முல்லைத்தீவில் தனியாக ஒரு வீட்டை எடுத்து பேர்சனல் க்கிளாஸ் எடுத்து வந்ததாகவும் அங்கு அவர் கபொத சாதாரண தரம் முடித்து உயர்தரம் முதலாம் ஆண்டு கற்கச் சென்ற மாணர்கள் சிலருக்கு மது பானங்களை வாங்கிக் கொடுத்து நட்பாகி தன்னுடைய கபடநாடகத்திற்கு அவர்களைப் பயன்படுத்தி உள்ளார். இம்மாணவர்களும் பருவ வயதின் கோளாறுகளுக்கு உட்பட்டு மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை அரைநிர்வாணமாக நிர்வாணமாக தங்கள் மொபைல் போன்களில் படங்களை எடுத்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு இந்த மோபைல் போன்களையும் தச்சுதனே வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் அம்மாணவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.
மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தியதுடன் நிற்காமல் பேர்சனல் க்கிளாஸ் நடக்கும் வீட்டின் குளியல்அறையில் மாணவிகளுக்கு தெரியாமல் கமரா பொருத்தப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டும் உள்ளதாக அம்மாணவர் மேலும் தெரிவித்தார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் அத்தனை பேரும் தரம் 11 தரம் 12 யைச் சேர்ந்தவர்களே. அதாவது கபொத சாதாரண தர மாணவிகளும் உயர்தரத்திற்குச் சென்ற முதலாம் ஆண்டு மாணவிகளும் எனத் தெரியவருகின்றது.
ஆசிரியர் தச்சுதனுடன் சம்பந்தப்பட்ட சில மாணவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே சில மாணவர்கள் அவர்களுடைய மோபைல்களைப் பறித்து சோதணையிட்டுள்ளனர். அதன் போது மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள், விடியோக்கள், மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொள்ளும் விடியோக்கள் என்பன இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் மீது ஏனைய மாணவர்கள் இளைஞர்கள் சிலர் தாக்கவே அம்மாணவர்கள் தச்சுதனை நோக்கி விரலைக் காட்டியுள்ளனர். இந்த இளைஞர்கள் ஆறு பேர் பொலிஸாரிகனால் கைது செய்யப்பட்டனர்.
தச்சுதனைப் தேடிப் பிடித்து அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்கள் இளைஞர்கள் தெருவுக்கு இழுத்து வந்து அவரைத் தாக்கி உள்ளனர். இந்நிலையில் தலைமறைவான ஆசிரியர் தச்சுதன் யூன் 24 இல் சட்டத்தரணியூடாக நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் எஸ் தனஞ்செயன் முன்னிலையாகி இருந்தார்.
பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவ பரிசோதணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது அவர்களில் ஒரு மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆசிரயர் தச்சுதனை மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதாலும் அவர் குற்றத்துடன் சம்பந்தப்பட்ட தடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டி இருப்பதாலும் தச்சுதனுக்கு பிணை வழங்கக் கூடாது என காவல்துறையினர் கேட்டிருந்தனர். முலைத்தீவு மாவட்ட நீதிபதி ரி சரவணராஜா ஆசிரியர் தச்சுதனை யூன் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
தச்சுதன் குறித்த பாடசாலையில் வைத்து மாணவிகளுடன் எவ்வித சேட்டையிலும் ஈடுபட்டதாக எந்தக் குற்றச்சாட்டுகளும் இதுவரையில்லை. ஆனால் இவர் இச்சம்பவத்திற்கு முன்னதாக வேறொரு பாடசாலையின் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டு பிரச்சினைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.
பெண்கள் குறிப்பாக இளம் மாணவிகள் பாதிக்கப்படுகின்ற போது அவர்கள் சமூகத்தின் பழிக்கு ஆளாகவேண்டி வரும் என்பதால் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை அவர்கள் மௌனமாகவே கடந்து போகின்றனர். அதனால் இப்பாலியல் கொடுமையை இழைக்கின்றவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவதேயில்லை. முல்லைத்தீவில் நடந்த சம்பவம் முதலாவது சம்பவம் அல்ல. அதே போல் அது கடைசிச் சம்பவமாக இருக்கப் போவதுமில்லை.
2009இற்கு முன்னதாக இவ்வாறான சம்பவங்கள் எதுவும் தமிழ் பகுதிகளில் நடைபெறவில்லை என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிப்பது மிகவும் வேடிக்கையானது. பொங்கு தமிழ் நடத்திய பேராசிரியர் கணேசலிங்கம் தன்னுடைய வீட்டில் வேலை செய்து வந்த மலையகச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கு இலங்கையில் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அச்சிறுமி பின்னர் தமிழீழ விடுதலைப் புலகளால் காணாமலாக்கப்பட்டார்.
20.09.2005இ யாழ்ப்பாணத்தில் நீதியரசர் திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன்னிலையில் ‘பொங்கு தமிழ்’ கனேசலிங்கம் என்று யாழ்ப்பாணத்தில் பிரபலமாகத் அறியப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தங்கராசா கனேசலிங்கம்இ ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவர் முள்ளையவளையைச் சேர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற பதின்மூன்று வயது வேலைக்காரப் பெண்னைப் பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காகவே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். சிறு வயதிலிருந்து கனேசலிங்கம் வீட்டில் வேலைக்காரியாய் இருந்த யோகேஸ்வரியை கணேசலிங்கம் நாற்பது தடவைகள் பாலியற் கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த றமேடியஸ் என்பவர் யோகேஸ்வரிக்காக வழக்காடினார். தங்கராசா கணேசலிங்கம் சார்பில் இன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியும் அன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ம் வாதிட இருந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இவர்கள் வழக்கில் இருந்து வாபஸ்பெற்றனர். அதன் பின் தங்கராசா கணேசலிங்கத்தின் சட்டத்தரணியாக ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ந ஸ்ரீகாந்தா வழக்கை எடுத்திருந்தார். இவ்வழக்குடன் தொடர்பற்ற வேறு காரணங்களுக்காக மனித உரிமைவாதியான றேமடியாஸ் இலங்கை இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கற்ற மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதும் அவ்வாசிரியருக்காக தமிழ் தேசியசவாத சட்டத்தரணிகள் வாதிட்டதும் தெரிந்ததே.
மாணவிகளுக்கு வீட்டுக்கு வெளியே பாதுகாப்பானதாகக் கருதப்படும் பாடசாலைகளில் கல்வி நிலையங்களில் எமது மாணவிகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களுமே மாணவிகளை துகிலுரியும் நிறுவனங்களாகி உள்ளன.
செவ்வாய்கிழமை ஜனவரி 11ம் திகதி நெல்லியடியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் நான்கு கயவர்களினால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு அவரிடம் இருந்த பணம் நகைகள் என்பனவும் சூறையாடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் தவறுதலான தொலைபேசி அழைப்பில் வந்த உறவு மிகக்கொடூரமான நிலைக்கு அப்பெண்ணைத் தள்ளியுள்ளது. துணிகரமான அப்பெண் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பொலிஸில் முறைப்பாடு செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றார்.
தொலைபேசி அழைப்பில் வந்தவருடன் பேசியது காதலாக, தொலைபேசி அழைப்பில் வந்தவன் அப்பெண்ணுக்கு ஆசை வாரத்தைகளைக் காட்டி அவளைத் திருமணம் செய்வதாகக் கூறி சம்பவ தினம் செவ்வாய்க் கிழமை காலை வீட்டில் இருந்த நகைகளையும் பணத்தையும் கொண்டுவரச் சொல்லி கேட்டுள்ளான். அந்த இளம் பெண்ணும் தன்னுடைய காதலனை யோக்கியன் என நினைத்து அவன் சொன்னவாறே செய்துள்ளார்.
அவ்விளம்பெண் தன்னுடைய காதலுக்காக தன் பெற்றோரைவிட்டு புதுவாழ்வைத் தேடிச் செல்ல அவனோ அவ்அபலைப் பெண்ணை தனதும் தன்னுடைய நண்பர்களதும் காமமப்பசிக்கு பயன்படுத்தி விட்டு மீண்டும் அவளின் ஊரடியில் கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளான்.
அவ்விளம் அபலைப் பெண் தனக்கு ஏற்பட்ட இந்த நிலையை யாரிடமும் சொல்லமாட்டாள் அதனால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்ற துணிச்சலிலேயே இந்த அக்கிரமத்தை இக்கயவர்கள் செய்துள்ளனர். பெண்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு அவர்களே காரணம் என்று காரணம் கற்பிக்கின்ற போக்கை தமிழ் சமூகம் இன்னமும் வைத்துக்கொண்டுள்ளதால் இந்தக் கயவர்களும் அதனை வைத்து தாங்கள் தப்பிக்கலாம் என்று நம்பியுள்ளனர்.
ஆனால் அத்துணிகரமான பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொலிஸாரிடம் முறையிட்டு இவ்வாறான கயவர்களுக்கு பாடம் கற்பிக்க முயன்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் நெல்லியடி பொலிஸில் முறையிட்ட போதும் சம்பவம் பருத்தித்துறை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால் சம்பவம் பருத்தித்துறை பொலிஸ்பிரிவுக்கு கையளிக்கப்பட்டது. விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் துன்னாலை பகுதியைச் சேர்ந்த நால்வரில் சந்தேகம் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளனர்.
பெண்களைப் பாலியல் பிண்டங்களாக மட்டும் பார்க்கின்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. யாழில் இவ்வாறான கூட்டு பாலியல் வல்லுறவுச் சம்பவம் நடைபெறுவது இது முதற் தடவையல்ல. எண்பதுக்களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ரீட்டா என்ற பெண்ணை அவ்வமைப்பில் இருந்து தீப்பொறி என்ற பெயரில் வெளியேறிய சிலர் தங்களை வேவு பார்த்ததற்காக கூட்டுப் பாலியல் வல்லுறவை மேற்கொண்டுவிட்டு அப்பெண்ணை புளொட் முகாம் அருகிலேயே வீசியெறிந்துவிட்டுச் சென்றனர். இச்சம்பவம் யாழ் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றது. பிற்காலத்தில் சம்பந்தப்பட்ட பிரான்ஸ் வந்து வாழ்ந்த போதும் மனநிலை பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவர் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு நிகழ்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தற்போது கனடாவில் வாழ்க்கின்றனர்.
மற்றைய சம்பவம் தங்களுக்கு எதிராக சாட்சி சொன்னவர்களைப் பழிவாங்க அவர்களுடைய பள்ளி செல்லும் மகளை மிகக் கொடூரமாக கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அவ்விளம்பெண்ணை படுகொலை செய்த சம்பவம் புங்குடு தீவில் இடம்பெற்றது. இதில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற இரு பெண் பிள்ளைகளின் தாயான விஜயகலா மகேஸ்வரன் முயற்சித்து இருந்தது தெரிந்ததே.
மேற்குறிப்பிட்ட இரு கூட்டுப் பாலியல் வல்லுறவுகளுமே பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நெல்லியடியில் இடம்பெற்ற சம்பவம் ஒரு இளம்பெண்ணை நம்ப வைத்து மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கைத் தூரோகச் செயல்.
தமிழ் சமூகம் இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளையும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கையில் யாழ் பல்கலைக்கழகச் சமூகம், எவ்வித சமூக அக்கறையுமற்ற இதையெல்லாம் மீறிய ரவுடிக் கும்பலாக செயற்படுகின்றது. யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சமூகத்தின் எந்த விடயம் பற்றியும் உருப்படியான ஆய்வுகள் எதையும் இதுவரை செய்து வெளியிடவில்லை. குறைந்தபட்சம் ஏன் தங்கள் மாணவர்கள் காட்டு மிராண்டிகளாக செயற்படுகின்றனர் என்பதை அறிந்து அதனை மாற்றினாலே சமூகத்திற்கு மிகப்பெரும் உதவியாக அமையும். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ராக்கிங் என்ற பெயரில் மேற்குள்ளும் காட்டுமிராண்டித் தனங்கள் பெண்கள் மீது மேற்கொள்ளும் பாலியல் துஸ்பிரயோகங்கள் நாகரீக சமூகம் அருவருக்கத்தக்க நிலைக்கு சென்றுள்ளது. இதையெல்லாம் இவர்கள் தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் ஒழிந்துகொண்டே செய்கின்றனர்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆசிரியர்கள் முதற்கொண்டு பரவலான பொதுத்துறைகளில் பணியாற்றுபவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களே. பல்கலைக்கழகம் பொறுப்பற்ற காட்டுமிராண்டிகளை பட்டதாரி ஆக்கியதன் விளைவுகளில் ஒன்று தான் தமிழ் சமூகம் தொடர்ந்தும் கீழ் நிலைக்குச் செல்வதன் அடிப்படைக் காரணம்.
யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ் சற்குணராஜா இந்நிலைமை தொடராமல் இருக்க சில நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார் என்ற போதும் அவருடைய நடவடிக்கைகளில் மிகுந்த போதாமை காணப்படுகின்றது. முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை காலத்தில் ஆரம்பித்த வீழ்ச்சி இன்னும் தொடர்ந்துகொண்டேயுள்ளது.
யாழ் பல்கலைக்கழகம் எங்கு போகின்றதோ அதனை நோக்கியே தமிழ் சமூகமும் செல்லும். காட்ட வேண்டிய பல்கலைக்கழகமே ரவுடிக்கும்பலாக இருந்தால் ரவுடி வாள் வெட்டுக்குழுவாகவும் கூட்டுப்பாலியல் வன்புனர்ச்சியாளர்களாகவும் தான் ஆவார்கள். யாழ் பல்கலைக்கழகம் எப்போது திருந்தும்? யாழில் சமூக மாற்றம் எப்போது வரும்? யாழ் பல்கலைக்கழகத்தை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு துணைவேந்தர் சற்குணராஜாவே வந்துவிட்டாரோ?
பாகம் 22: தீப்பொறி வெளியேற்றம் – தோழியின் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு – குற்றம்சாட்டப்பட்டவர்கள் கனடாவில்
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 22 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 22:
தேசம்: நாங்கள் இப்போது 84, 85 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தோழர் சந்ததியர் வெளியேறினது சம்பந்தமாக கதைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த முரண்பாடுகளை நாங்கள் பார்க்கும் போது இவர்கள் வெளியேறும்போது வைத்த காரணங்கள் முதலே அது சம்பந்தமாக மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெளியேறுகின்ற தன்மைகள், உட்கட்சிப் போராட்டம் நடக்காதது சம்பந்தமாக எல்லாம் கதைத்திருக்கிறோம். சந்ததியார் வெளியேறுவதற்கு முதல் நடந்த மத்திய குழு கூட்டத்தில் சில மத்திய குழு உறுப்பினர்கள் தாங்கள் வெளியேறுவதாக அறிவிக்கிறார்கள். அவர்கள் வெளியேறிய பிறகுதான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.
அசோக்: ஓம்.
தேசம்: நீங்கள் பின் தளத்திலிருந்து ஐஞ்சுபேர் தளத்துக்கு போறீங்கள்..?
அசோக்: நாலு பேர்.
தேசம்: ஓ நாலுபேர். சென்றல் கமிட்டீ 4 பேர்; ஜென்னியுமாக ஐந்து பேர் போறீங்க.
அசோக்: ஓம். நாட்டுக்கு தளம் செல்லும்போது ஜென்னியும் எங்களோடு வருகின்றார்.
தேசம்: ஜென்னிக்கும் – உங்களுக்குமான அதாவது மத்திய குழு உறுப்பினர்களுக்குமான தொடர்பு உறவு எப்படி இருந்தது? பொதுவாக சொல்லப்பட்ட விஷயம் ஜென்னி கம்யூனிகேஷன்ல இருந்தவர். பொதுவா கம்யூனிகேஷன் ல இருப்பவர்கள் உமா மகேஸ்வரனோட நெருக்கமானவர்களாக அல்லது நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுறது. அப்போ நீங்க போகும்போது அந்த உறவு நிலை எப்படி இருந்தது?
அசோக்: ஜென்னிக்கும் எனக்குமான உறவு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நல்லதாகவே இருந்தது. அவங்களோட பேமிலி பேக்ரவுண்ட் அவங்க அம்மா எல்லாரையும் தெரியும் எனக்கு. ஆனால் அரசியல் சார்ந்து எனக்கும் ஜென்னிக்கும் முரண்பாடுகள் உண்டு. விமர்சனங்களும் இருக்கிறது. மற்றது எனக்கும் ஜென்னிக்கும் இருந்த இந்த உறவு, மற்ற மூன்று தோழர்களுக்கு இருக்கவில்லை. தோழர்கள் குமரன், முரளி, ஈஸ்வரன் ஜென்னி தொடர்பில் அரசியல் விமர்சனங்களையும், கோபத்தையும் கொண்டிருந்தனர்.
தேசம்: அந்தக் கோபம் கூடுதலா அவர் உமா மகேஸ்வரன் தலைமைக்கு கீழ்…
அசோக்: ஓம். அவர் உமா மகேஸ்வரன்ற விசுவாசியாக இருக்கிறார். அவர் சொல்ற எல்லாத்தையும் நியாயப்படுத்துகிறார் என்று சொல்லி ஆரம்ப காலத்தில் இருந்தே அந்த பிரச்சனை இருந்து கொண்டிருந்தது.
தேசம்: அந்தக் கடல் போக்குவரத்து எவ்வளவு நேரம்?
அசோக்: கடல்போக்குவரத்து நோர்மலா நாற்பத்தி ஐந்து நிமிஷத்துக்கு உள்ள நாங்க போயிடுவோம். ஏனென்றால் ஸ்பீட் போட் தானே. ஆக கூடினால் கடல் கொந்தளிப்பு மழை பெய்தா ஒரு 2 மணித்தியாலம் எடுக்கும்.
அன்றைக்கு சரியான மழையும் கடல் கொந்தளிப்பும். மிகவும் கஷ்டப்பட்டுதான் நாட்டிக்கு போன நாங்கள். அது கடும் கஷ்டமான பயணம்.
தேசம்: அந்தப் பயணத்தில் ஒரு பெண். துணிஞ்சு வாரது என்றது – என்ன சொல்றது கொஸ்டைல் சிட்டிவேசன் தான் அது. ஜென்னிக்கும் இது ஒரு கொஸ்டைல் தான். தனக்கு உடன்பாடு இல்லாதவர்கள் ஓட பயணிக்கிறது. அன்டைக்கு நடந்த உரையாடல் எதையும் மீட்க கூடியதா இருக்கா உங்களால…?
அசோக்: ஞாபகம் இல்ல, ஆனா நாங்கள் எந்த அரசியல் உரையாடலும் செய்திருக்க மாட்டம் என்றுதான் நினைக்கிறேன். ஜென்னி தொடர்பான ஒரு பயம் ஒண்டு இருந்தது. அப்ப நாங்கள் போய் மாதகல்லில் தான் இறங்கினது. ஜென்னி உடனே போயிட்டாங்க. அவங்க எங்களோட தங்கல. அடுத்த நாள் காலையில நாங்க வெளிக்கிட்டு கொக்குவில் போகின்றோம்.
தேசம்: ஜென்னி அப்ப மகளிர் அமைப்புக்கு, பொறுப்பா இருந்தா வா..? என்ன..?
அசோக்: அப்ப மகளிர் அமைப்புக்கு அவங்க பொறுப்பில்ல. அப்ப வந்து மகளிர் அமைப்புக்கு பொறுப்பாய் இருந்தது செல்வி, நந்தா போன்றவங்கதான். சரியா ஞாபகம் இல்ல. ஜென்னி அப்ப தான் தளத்திற்கு வாராங்களோ தெரியல்ல. இது பற்றி எனக்கு ஞாபகம் இல்லை. அதுக்குப் பிறகுதான் ஜென்னி பொறுப்பெடுக்கிறார் என நினைக்கிறேன்.
அசோக்: நிம்மதி எண்டு சொல்ல முடியாது. ஒரே குழப்பமான மனநிலைதான் எங்களுக்கு இருந்தது. காலையில் கொக்குவிலுக்குப் போறோம். அங்க போன பின்புதான் கேள்விப்படுகிறோம், நேசன், ஜீவன், பாண்டி ஆக்கள் எல்லாம் வெளியேறிட்டாங்கள் என்று சொல்லி.
தேசம்: அங்க அவர்கள் வெளியேறுற அதே காலகட்டத்தில் இங்க,
அசோக்: நான் நினைக்கிறேன் அவங்களுக்கு பின் தளத்தில் காந்தன், கேசவன், கண்ணாடிச் சந்திரன் வெளியேறினது தெரிய வந்தவுடன் இவங்கள் வெளியேறி இருக்கலாம்.
தேசம்: ஓம் நீங்க ஒன்றரை மாதத்திற்கு பிறகு தானே தளத்திற்கு வந்தீங்கள்.
அசோக்: ஓம். ஓம். நாங்க இங்க வந்து பார்த்தால் நிறையக் குழப்பம். சிக்கல்கள். எங்களை சந்திக்கின்ற தோழர்கள் எல்லாருமே எங்களை சந்தேகமாக தான் பார்க்கிறார்கள். இங்க வதந்தி பரப்பபட்டு விட்டது , என்ன என்றால், நாங்க புளொட் அமைப்போட முரண்பட்டு தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் ஆட்களோடு சேர்ந்து புளொட்டை உடைச்சிட்டு வெளியேறி வாறம் என்று. இவங்கள் இங்க வந்து பிரச்சினை கொடுக்க போறாங்க, புளொட்டை உடைக்கப்போறாங்க என்று சொல்லி ஒரே பிரச்சினை. எங்கள் மீது சந்தேகம். வந்து ரெண்டு மூணு நாளால பெண்கள் அமைப்பினர் சொல்கின்றனர் எங்களை சந்திக்க வேண்டும் என்று. அப்ப நான், ஈஸ்வரன், குமரன், முரளி எங்க நாலு பேரையும் பெண்கள் அமைப்பு சந்திக்குது. எங்க மேல குற்றச்சாட்டு. நாங்கள் புளொட்ட உடைச்சுட்டு வந்துட்டம் என்று.
அதுவரைக்கும் நாங்கள் எதுவும் கதைக்காம இருந்தனாங்கள். அப்ப தான் மௌனம் கலைக்குறம். அங்க நடந்த பிரச்சனைகளை சொல்லுறம். இதுதான் பிரச்சினை, இதுதான் நடந்தது, அங்க ஒரு ஜனநாயக சூழல் இல்லை. தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் வெளியேற்றம், மத்திய குழுவில் நடந்த பிரச்சனை எல்லாவற்றையும் சொல்கிறோம்.
பிறகு நாங்கள் முடிவெடுக்குறோம். இவங்களுட்ட மட்டும் கதைக்க கூடாது. எல்லா அணிகளையும் கூப்பிட்டு கதைக்கலாம் என்று. அதன் பின் மாணவர் அமைப்பு, தொழிற்சங்கம், மக்கள் அமைப்பு எல்லாரோடையும் நாங்கள் உரையாடல் செய்கிறோம், இதுதான் பிரச்சினை என்று சொல்லி விளங்கப்படுத்துகிறோம்.
பிறகு யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் இல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும், பிரச்சனைகளை விளங்கப்படுத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்கிறோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு எல்லாத்துக்கும் நான் போறேன். ஈஸ்வரன் கிழக்கு மாகாணம் போறார். முரளி வந்து வவுனியா போறாங்க. இப்படி எல்லா இடமும் போய் எங்கட நிலைப்பாட்டை சொல்கிறோம்.
தேசம்: இந்தக் காலகட்டத்தில் பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கேலையா உங்களுக்கு தளத்துல?
அசோக்: அந்த நேரத்தில் தளத்தில் இராணுவப் பொறுப்பாளராக சின்ன மென்டிஷ் தான் இருந்தவர். சின்ன மென்டிஸ் உமாமகேஸ்வரனின் விசுவாசிதான். ஆனால் அவரிடம் பின்தளத்தில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அதிருப்தி இருந்தது. கொஞ்சம் நேர்மையான ஆள். வித்தியாசமான ஆள். அவரோட உரையாடலாம். பிரச்சனைகளை புரிந்து கொள்ளக்கூடியவர். குமரன் பின்தளத்தில் நடந்த பிரச்சனைகள் பற்றி விளங்கப்படுத்தி விட்டார்.
தேசம்: சின்ன மென்டிஸ் தான் தள பொறுப்பு…?
அசோக்: ஓம். தள இராணுவ பொறுப்பு.
தேசம்: அவர மீறி எந்த படுகொலைகளும் …?
அசோக்: நடக்காது. நடக்க வாய்ப்பில்லை. பின் தளத்தில் இருந்து வந்து செய்யலாமே தவிர இங்க செய்ய வாய்ப்பில்லை. நாங்கள் தோழர்களை சந்தித்து பிரச்சனைகளை கதைக்கும் போதெல்லாம் மென்டிஸ் எதுவும் கதைக்கல மௌனமா இருந்துட்டார். பிறகு நாங்கள் எல்லா இடங்களுக்கும் போய் கதைத்த பின் ஒரு முடிவுக்கு வருகின்றோம். நாங்கள் நினைக்கிறோம் , ஜனநாயக பூர்வமான முறையில் ஒரு தள மாநாட்டை நடத்தி அந்த மாநாட்டுக்கூடாக சில தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்று.
தேசம்: தளமாநாடு – மத்திய குழுக் கூட்டம் முடிந்து வரும்போது உங்களுட்ட இந்த நோக்கம் இருந்ததா?
அசோக்: இல்ல அப்படியான ஒரு நோக்கம் இருக்கல. ஆனால் பின்தளப் பிரச்சனைகளை பற்றி தோழர்களோடு கதைத்து ஏதாவது முடிவுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
தேசம்: தளத்துக்கு வந்த பிறகு…
அசோக்: ஓம். தளத்துக்கு வந்த பிறகு குழப்ப நிலையைப் பார்த்த பிறகு இப்பிரச்சனைகளுக்கு, குழப்ப நிலைகளுக்கு தீர்வு காண வேண்டிய கட்டாய நிலை எங்களுக்கு ஏற்படுகிறது. தனிப்பட்ட வகையில் நம்பிக்கையான தோழர்களோடு உட்கட்சிப்போராட்டம் பற்றி கதைக்கின்றோம். தள மாநாடு நடத்தி ஜனநாயக பூர்வமான முறையில் முடிவுகள் எடுக்கவேண்டும், உட்கட்சிப் போராட்டத்தை ஆரோக்கியமான முறையில் கொண்டு நடத்தவேண்டும் என நினைக்கிறோம். இதற்கெல்லாம் வழிகாட்டியாக மிக்க துணையாக இருந்தவர் தோழர் கௌரிகாந்தன். கோட்பாட்டு ரீதியாக உட்கட்சிப் போராட்டத்தையும், தள மாநாட்டையும் நடாத்திமுடிக்க துணை நின்றவர் அவர்தான். அவர் இல்லாவிட்டால் சாத்தியப்பட்டு இருக்காது.
தேசம்: அவர் அந்த பின்னாட்கள்ல தீப்பொறியோட போய் இருந்ததோ…?
அசோக்: இல்ல. அவர் போகல்ல. கடைசி வரைக்கும் எங்களோடு இருந்தவர்.
தேசம்: அவருக்கும் தீப்பொறி வெளியேறினாக்களுக்கும் பெரிய தொடர்பில்லை…
அசோக்: எந்த தொடர்பும் இல்லை. அவர் கடைசி வரைக்கும் எங்களுடன் தான் இருந்தார். உட்கட்சி போராட்டத்துல மிகத் தீவிரமாக புளொட்ட திரும்பவும் சரியான திசைவழி கொண்டு வரலாம், ஒரு முற்போக்கு அணியா திரும்ப சீரமைக்கலாம் என்றதுதுல உறுதியாக இருந்தவர். இந்த உட்கட்சிப் போராட்டம் பலமா நடக்கிறதுல பெரும்பங்கு அவருக்குறியது தான். அந்த நேரத்தில் தோழர் கௌரி காந்தனின் இயக்கப் பெயர் தோழர் சுப்பையா என்பது.
தேசம்: அதுக்கு முதல் இந்த புதியதொரு உலகம் புத்தகம் எந்த காலகட்டத்தில வந்தது?
அசோக்: பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறிய பின் அவர்களால் எழுதப்பட்டு… அந்த காலகட்டத்தில வெளிவந்தது. அது வந்து 86 நடுப்பகுதி என நினைக்கிறேன்.
தேசம்: வெளியேறினா பிறகு தான் அவை எழுதத் தொடங்கினம்.
அசோக்: பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான், கேசவன் வெளியேறி பின் சில மாதங்களில் தோழர் கேசவன் கோவிந்தன் என்ற பெயரில் இந்த புதியதொரு உலகம் நாவலை எழுதுகிறார். உண்மையில் இது ஒரு கூட்டு முயற்சி. தோழர் ரகுமான் ஜான் பங்கும் அதில் நிறைய உண்டு. அவங்க வெளியேறின பிறகு 86 முற்பகுதியில் தீப்பொறி என்ற பத்திரிகையை வெளியிட்டாங்கள். பெப்ரவரி மார்ச்சில தீப்பொறி வந்திட்டுது என நினைக்கிறேன்.
தேசம்: அதுல என்ன குற்றச்சாட்டுகள் வருது. ஏதாவது?
அசோக்: அது வந்து பின்தளப் பிரச்சனைகள், கொலைகள் தொடர்பாக கடும் விமர்சனங்களோட அரசியல் சார்ந்துதான் அது வந்தது.
தேசம்: அதுல ஆதாரங்கள் வழங்கப்பட்டதா? யார் கொல்லப்பட்டது? என்ன நடந்தது…? எப்ப கொல்லப்பட்டது.
அசோக்: பெருசா ஆதாரங்கள் ஒன்றுமில்லை. புளொட்டினது அராஜகங்கள். முகுந்தனுடைய தனிநபர் பயங்கரவாத போக்குகள் பற்றி இருந்தது.
தேசம்: தாங்கள் பற்றிய சுய விமர்சனம்…?
அசோக்: ஒன்றுமே இல்லை. சுய விமர்சனம் ஒன்றுமில்லை.
தேசம்: பார்க்குறமாதிரி ஏட்டிக்கு போட்டியான,
அசோக்: ஏட்டிக்கு போட்டியானது என்று சொல்ல முடியாது. புளாட்டில் நடந்த பிரச்சனைகளை முன்வைத்தாங்க. ஆனால் எல்லாவற்றிக்கும் முகுந்தனே பொறுப்பு என்றே குற்றம் சுமத்தினார்கள். தங்களைப் பற்றிய விமர்சனம், சுயவிமர்சனம் எதையுமே முன் வைக்கவில்லை. வெளியேறுவதற்கான சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கு தானே. கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான பூரணமான பட்டியல்கள் யாரிடமும் இல்ல தானே.
தேசம்: இல்ல பூரணமான பட்டியல் தேவையில்ல. அட்லிஸ்ட் யார் யார் கொல்லப்பட்டார்கள்…? என்னத்துக்காக கொல்லப்பட்டார்கள்…? ஏனென்றால் இன்றைக்கு வரைக்கும் அது பெருசா வெளியில் வராத விஷயம் அதான்.
அசோக்: ஆனால் சில தோழர்கள் மத்தியில் குறிப்பிட்ட விவரங்கள் இருக்கு. ஆனா அவை ஆவணப்படுத்தப்படவில்லை. உண்மையில் என்ன பிரச்சனை என்றால் இதுவரை யாரும் வெளிப்படையாக யார் யார் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற விபரங்களை வெளியிடவில்லை. ஒருசில பெயர்களை சொல்லுகின்றனர்.
தேசம்: அப்ப தோழர் ரீட்டா பிரச்சனை எப்போது நடந்தது… ?
அசோக்: நேசன், ஜீவன், பாண்டி வெளியேறிய பின் இந்த சம்பவம் நடக்கிறது. அதிருப்தி ஆகி இவங்க வெளியேறிட்டாங்க. வேறு சில தோழர்களும் வெளியேறிட்டாங்க. தீப்பொறி பத்திரிகை வந்தபிறகுதான் தங்களை தீப்பொறி குழுவினர் என ஐடின்டி பண்ணுறாங்க. வெளியேறியவர்கள் தொடர்பா தளத்தில் எந்த ஒரு சிக்கலும் இருக்கவில்லை. எங்களுக்கும் வெளியேறியவர்கள் தொடர்பில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்க வில்லை. புளொட் மிக மோசமான அமைப்பாக இருந்ததால தானே அவர்கள் வெளியேறினார்கள். அதால எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. வெளியேறுவதற்கான ஜனநாயகமும், சுதந்திரமும் அவங்களுக்கு இருக்குத்தானே. அதை எப்படி மறுக்கமுடியும் ?
ஆனால் வெளியேறிய நேசன், ஜீவன், கண்ணாடிச் சந்திரன் தொடர்பாக எங்களுக்கு விமர்சனம் இருந்தது. பின் தளத்தில் நடந்த அதிகார துஸ்பிரயோசங்கள், கொலைகள், தன்னிச்சையான போக்குகளை போன்று , தளத்தில் இவர்களும் செயற்பட்டவங்கதானே. இவை தொடர்பாக முன்னர் கதைத்திருக்கிறேன். சில தோழர்கள் எங்களிடம் ஒதுங்கி இருக்கப் போவதாக சொல்லி இருக்காங்க. அவங்களுக்கு சுதந்திரம் இருக்குத்தானே. ஆனால் நாங்க உட்கட்சிப் போராட்டம் பற்றி தள மகாநாடு நடத்துவது பற்றி நம்பிக்கை ஊட்டிய பின் தங்களின் எண்ணங்களை மாற்றிக் கொண்டாங்க.
இந்த காலகட்டத்தில்தான் திடீரென்று ஒரு நாள் பிரச்சனை வருகின்றது, ரீட்டா என்ற தோழரைக் காணவில்லை என்று சொல்லி. பிறகு உதவி ராணுவ பொறுப்பாளர் காண்டீபன் வந்து எங்களிட்ட சொல்றார் ரீட்டா என்ற தோழர் மீது பாலியல் பலாத்காரம் நடந்திருக்கிறது என்று சொல்லி. எங்களால முதல் இத நம்ப முடியல, அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும் என்று. பிறகு பெண்கள் அமைப்பு தோழர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இச்சம்பவம் உண்மை என. நாங்க நினைக்கிறோம் வேறு யாராவது இப்படி செய்திருக்கலாம் என்று சொல்லி.
தேசம்: வேற அமைப்புக்கள்…?
அசோக்: வேற அமைப்புகள் அல்லது வேற நபர்கள் யாராவது செய்திருக்கலாம் என்ற எண்ணம்தான் எங்களுட்ட இருந்தது.
தேசம்: நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல அந்த கொக்குவில் பகுதி அந்தக் காலம் புளொட் கோட்டையாக இருந்த பகுதி.
அசோக்: ஓம். கோட்டையாக இருந்த இடம். எந்தப் பகுதியில் நடந்தது என்று ஞாபகமில்லை எனக்கு.
தேசம்: அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று சொல்லி தீப்பொறி தரப்பில இருந்து சொல்லப்பட்டிருக்கு இல்லையா…?
அசோக்: ஆரம்பத்தில் மறுத்தாங்க. பிறகு உண்மை என நிருபிக்கப்பட்டதும் வேறு யாரோ தங்களை மாட்ட இப்படி செய்ததாக சொன்னார்கள். காலப்போக்கில தங்கள் மீது பழி சுமத்த வேறு யாராவது செய்து இருக்கலாம் எண்டு ஒரு கதையைக் கொண்டு வந்தாங்கள். இப்போது இவங்க ஃபேஸ்புக்லகில் எழுதுறாங்க அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. கட்டுக் கதை என்று.
தோழர் ரீட்டாவை கண்ணை கட்டித்தான் கடத்தி இருக்கிறார்கள். பிறகு பாலியல் பலாத்காரம் நடந்திருக்கு. பெரிய டோச்சர் எல்லாம் நடந்திருக்கிறது. கதைத்த குரல்களை வைத்து ஒருவர் பாண்டி என்பதை அந்த தோழி அடையாளம் கண்டு விட்டா. அடையாளப்படுத்தின பிறகுதான் ஆகப்பெரிய பிரச்சினை தொடங்கினது. பெண்கள் அமைப்பில பெரிய கொந்தளிப்பு. பாண்டி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள்.
அதன் பின்தான் பாண்டியை இராணுவப்பிரிவு தேடத் தொடங்கியது. இந்த நேரத்தில் பாண்டியோடு, நேசன், ஜீவன் ஆட்களும் தலைமறைவாக ஒன்றாக இருந்தாங்க. இதனால் இவங்களையும் புளாட் இராணுவப் பிரிவு தேடத் தொடங்கினாங்க.
பாண்டி, ஜீவனோடயும் நேசனோடையும் தான் எங்கேயோ ஒளிந்து இருக்கிறதா தகவல் வருது. ஒரு தடவை போய் ரவுண்டப் பண்ணி இருக்காங்க, அதுல தப்பிவிட்டாங்கள். தொடர்ந்து பாண்டிய தேடும்போது, இவங்க மூணு பேரும் ஒன்றாக த்தான் இருக்காங்க. பிறகு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தது. அதுல அவங்கள் பிடிபடல.
அதுக்கிடையில, அங்க திருநெல்வேலி கிராமத்தில விபுல் என்றொரு தோழர் இருந்தவர். அந்த தோழர் இவங்களோடு மிக நெருக்கமானவர். புளொட் இராணுவம் அவரை அரெஸ்ட் பண்றார்கள். அரெஸ்ட் பண்ணி அவரை அடித்து துன்புறுத்தினார்கள்… இவர்கள் ஒழிந்திருக்கும் இடத்தை காட்டும் படி. பிறகு அந்த கிராம மக்கள் அந்த தோழருக்கு ஆதரவாக போராட்டம் செய்ததால அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்தத் தோழர் இப்ப கனடாவில இருக்கிறார். அவர் நல்ல தோழர். அவர் இதுல சம்பந்தப்பட வில்லை.
தேசம்: அவர் இதுல சம்பந்தப்படல. இவங்களை தெரியும் என்டதால…
அசோக்: ஓம். ஓம். அந்தத் தோழர் புளொட்டுக்காக நிறைய தன்னுடைய வாழ்க்கையை இழந்தவர். நிறைய வேலை செய்தவர். திருநெல்வேலி பகுதியில் நிறைய தோழர்களை தங்க வைக்கிறதுக்கும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து தந்த மிக அருமையான தோழர். இவங்களோட தொடர்பு இருந்ததால் இவங்கள தெரியும் என்று கைது செய்தாங்க. ஊராக்கள் சப்போட் அவருக்கு. ஆர்ப்பாட்டம் ஊர்வலம் எல்லாம் நடத்த, உடனே அவர விட்டுட்டாங்கள்.
தேசம்: இந்த மூன்று பேரும் தப்பி இப்ப இவை …
அசோக்: ஓம் கனடாவுல மூன்று பேரும் பாண்டியோட நெருக்கமாக தான் இருக்குறாங்க. பாண்டி மீது எந்த விமர்சனமும் இவர்களுக்கு இல்லை. கொஞ்சம் கூட இவங்களுக்கு மன உறுத்தல் இல்லை.
தேசம் : தோழர் ரீட்டாவின் பிற்கால வாழ்க்கையில்…
அசோக்: அவங்க இங்கதான் பிரான்சிலதான் வாழ்ந்தாங்க. மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு, மனச்சிதைவுக்குள்ளாக்கப்பட்டாங்க. அவர், குடும்பத்தினராலும் – உறவினர்களாலும் கைவிடப்பட்ட நிலையில் ஜெகோவின் சாட்சியம் என்ற கிறிஸ்தவ நிறுவனம், அவரைப் பராமரித்து வைத்தியசாலையில் அனுமதிச்சாங்க. மனநல சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்தாங்க. இறுதியில் அவர்களும் கைவிட்டுட்டாங்க…
அதன் பின்னான காலங்களில் அவருக்குத் தெரிந்த பெண்கள் உதவினாங்க. காப்பாற்ற முடியல்ல. இளம் வயதிலேயே இறந்துட்டா…
தேசம்: ஏற்பட்ட அந்த அகோரமான சம்பவங்களால அவாவோட குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டு…
அசோக்: ஓம். குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகமிக துன்பப்பட்டு தான் அவங்க இறந்தாங்க. உண்மையில் நான் உட்பட எல்லாப் பேர்களும் குற்றவாளிகள், தண்டனை அனுபவிக்க வேண்டியவர்கள். இதைப்பற்றி கதைப்பதென்பது வேதனையானது.
தேசம்: அது மிக துரதிர்ஷ்டம் என. 85ம் ஆண்டு தான் முதல் பெண் போராளி ஷோபாட மரணமும் நிகழுது. இப்பிடி ஒரு பெண் போராளிகளாலேயே துன்புறுத்தப்படுறா.
அசோக்: பெரிய வேதனை. அந்த அவலத்தை, துன்பத்தை, கொடுரத்தை உணர்கின்ற சூழல் இன்று இல்ல.
தேசம்: இதற்கு பிற்பட்ட காலத்தில இதுல சம்பந்தப்பட்ட ஒருவர் தான் அதுல ஈடுபடல என்டு கடிதத்தில கையெழுத்து வாங்கினதாக;
அசோக்: ஓம். அந்தப் பாண்டி என்றவர் இதில சம்பந்தம் இல்லை என்று ரீட்டா தங்களுக்கு கடிதம் எழுதித் தந்ததாக. ஃபேஸ்புக்ல ஜீவன் நந்தா கந்தசாமி, நேசன் தான் எழுதியிருந்தவங்க. இச்சம்பவம் தொடர்பாக ஜீவனும், நேசனும் மிக மோசமான பொய்களையும், புனைவுகளையும் எழுதினாங்க. இவர்களின் இந்த செயலை என்னோடு அரசியல் முரண்பாடு கொண்ட பலர் ஆதரித்தாங்க. ஜீவன், நேசன், பாண்டி ஆட்களை விட இவர்கள் மிக ஆயோக்கியர்கள். இவரகளின் பெயர்களை சொல்லமுடியும். வேண்டாம்.
தேசம் : அதே மிக மோசமானது.
அசோக்: ஓ. மோசமானது தான். ஒருபெண் இப்படி கொடுப்பாங்களா. இப்படி எழுதுவது எவ்வளவு மோசமான சிந்தனையும் ஆணாதிக்கதனமும் பாருங்க. அப்படி குடுப்பாங்களா ஒரு கடிதம்…
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 19 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 19
தேசம்: தோழர் நாங்கள் இவ்வளவு நேரம் கதைத்துக் கொண்டு இருக்கிறோம் இது ஒரு முற்றுமுழுதான ஆண்களுடைய அமைப்பு மாதிரி. ஆனால் நிறைய பெண்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். கூடுதலாக பாசறைகளில் நிறைய பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல நீங்கள் முதல் ஒரு தடவை குறிப்பிட்டது போல மத்திய குழுவிலும் சரோஜினி இருந்திருக்கிறார்.
அசோக்: சரோஜினிதேவி இருந்தவர்.
தேசம்: அப்போ இந்த பெண்களுடைய பாத்திரம் எப்படி இருந்தது. உண்மையிலேயே மத்திய குழுவில் 20 பெயரில் ஒரே ஒருவர்தான் இருந்திருக்கிறார். ஆனால் அந்த சூழலும் அப்படித்தான் இருந்திருக்கு. பெண்கள் அரசியலுக்கு வருவது மிக குறைவாக இருந்த காலகட்டம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் பெண்களின் பங்களிப்பு எப்படி இருந்தது?
அசோக்: நான் அதை பற்றி பெரிதாக கதைக்கவே இல்லை . எல்லாம் ஆண் ஆதிக்க சிந்தனைதான் நமக்கு. உண்மையில் பெண்கள் அமைப்பு பற்றி கதைக்காமைக்கு காரணம், இதுபற்றி தனியாக கதைக்கலாம் என்றிருந்தேன். அத்தோடு பெயர்கள் குறிப்பிட்டு உரையாடுவதில் எனக்கு தயக்கம் இருந்தது.
புளொட்டின் பெண்கள் அமைப்பு யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாவட்டங்ளிலும் மிகவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது.
யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பொறுப்பாக செல்வி, யசோ, நந்தா இருந்தவங்க. அப்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். அவங்களுக்கும் அரசியல் பாசறைகள், வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. பெண்ணியம் தொடர்பாகவும் தேசிய விடுதலைப்போராட்டம் வர்க்க விடுதலை இதன் இணைவு, முரண்பாடு, போதாமை தொடர்பான விமர்சனங்ளோடு கூடிய அரசியல் அறிவை பெண்கள் அமைப்பின் தோழர்கள் பலர் பெற்றிருந்தனர். அந்தளவிற்கு அரசியல் சிந்தனை இருந்தது. ஏனென்றால் மாணவர் அமைப்புகளில் இருப்பவர்கள் பெண்கள் அமைப்புகளில் இருப்பார்கள். கூடுதலாக பெண்கள் அமைப்புகளில் கல்வி ஊட்டல்கள் நடந்தது.
அந்த நேரத்தில் தோழி என்றொரு பெண்ணிய அரசியல் சஞ்சிகை வெளியிடப்பட்டது. செல்வி அதற்கு பொறுப்பாக இருந்தார். அரசியல்பார்வை கொண்ட கலை, இலக்கிய சஞ்சிகையாக அது இருந்தது. அதைப் பார்த்தீர்கள் என்றால் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றிய ஆக்கங்கள் அதில் வெளிவந்துள்ளது.
மத்திய குழுவில் ஒரு பெண் இருந்தது தொடர்பாக கேட்டீர்கள் தானே. மத்திய குழுவில் பெண் பிரநிதித்துவம் மிக மிக குறைவு. தோழர் சரோஜினிதேவி மாத்திரம் தான் இடம் பெற்றிருந்தார். உண்மையிலேயே அதை கூட்டியிருக்கலாம். நிறைய பெண்கள் இருந்தவர்கள். திறமை வாய்ந்த அரசியல் வளர்ச்சி கொண்ட பெண் தோழர்கள் தளத்தில் இருந்தார்கள். உண்மையிலேயே 20 பேர் கொண்ட மத்திய குழுவில் குறைந்தபட்சம் நான்கு பேராவது பெண்கள் இருந்திருக்க வேண்டும். அதற்கான தகுதியும், ஆற்றலும் வாய்ந்தவர்கள் தளத்திலிருந்தார்கள். ஆனால், அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதைப் பற்றி யாரும் கதைக்கவும் இல்லை. நான் உட்பட எல்லார்கிட்டயும் அந்தத் தவறு இருக்கு. கட்டுப்பாட்டு குழுவில் இருந்தவர்கள் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் மத்திய குழுவில் இருந்தவர்கள் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். அது நடக்கல்ல.
தேசம்: அது மட்டும் இல்லை. இருந்த அந்தப் பெண் தோழருக்கும் பெரிய பாத்திரம் கொடுக்கப்படவில்லை. சம்பிரதாயத்துக்கு அவர்களை வைத்திருந்த போல. சரோஜினிதேவி பற்றி ஒரு குறிப்பான அறிமுகத்தை வைக்கிறது நல்லம் என்று நினைக்கிறேன்.
அசோக்: அவர் ஆரம்பகால உறுப்பினர். காந்தியத்துக்கூடாக வந்தவர். தோழர் சண்முகலிங்கம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். மலையகத்தில் வேலை செய்த ஒரு இடதுசாரி தோழர். காந்திய குடியேற்றங்களில் முன்னணியில் இருந்த தோழர் அவர். அவர் சரோஜினிதேவியினுடைய தம்பி. தோழர் சண்முகலிங்கம் கனடாவில் இறந்திட்டார். சரோஜினிதேவி இப்ப கனடாவில் தான் இருக்கிறார்கள்.
தேசம்: அதைவிட நான் நினைக்கிறேன் பார்த்தனுடைய ஜென்னியும் முக்கியமான ஆளாக இருந்தவா.
அசோக்: குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஜென்னி இந்தியாவில் கம்யூனிகேஷன் பயிற்சி முடித்து தளத்துக்கு வாராங்க. ஒரு கட்டத்தில் தளத்துக்கான பெண்கள் அமைப்பை அவர்தான் பொறுப்பெடுக்கிறார்.
தேசம்: இதில உண்மையா பெண்களின் பங்களிப்பை பொறுத்தவரைக்கும் ஆக பெண்கள் அமைப்புக்கு மட்டும்தான் பெண்கள் பொறுப்பாக போடப்படுதா? விடுதலைப் புலிகளிலும் இதே பிரச்சனை தானே இருந்தது. விடுதலைப்புலிகள் பெண்களும் சரிசமமாக யுத்தகளத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட பதவிகள் பொறுப்புகள் என்று வரும்போது பெண்கள் அமைப்புக்கு மட்டும்தான் அவர்கள் பொறுப்பாக இருந்திருக்கிறார்கள். அரசியல் பிரிவுகளில் அவர்களுடைய பாத்திரம் பெருசா…
அசோக்: ஒரு காலகட்டத்தில் புளொட்டில் முரண்பாடுகள் வந்த பிற்பாடு மாநாட்டுக்கு முன்னர் என்று நினைக்கிறேன் நேசன் ஆட்கள் வெளியில போனபிறகு நேசனின் இடத்துக்கு பெண் தோழர் தான் நியமிக்கபட்டவர். வனிதா என்று நினைக்கிறேன்.
தேசம்: யாழ் மாவட்ட பொறுப்பாளராக
அசோக்: ஓம். யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளராக இருந்த வங்க.
தேசம்: இதில 85 ஆம் ஆண்டு கால கட்டங்களில் என்று நினைக்கிறேன் மணியம் தோட்டத்தில் மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் அது புளொட் என்று சொல்லியும் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியத்தில் புஷ்பராஜா கூட பதிவு செய்திருக்கிறார். அது சம்பந்தமாக நீங்கள் என்ன அறிந்திருக்கிறீர்கள்.
அசோக்: மணியம் தோட்டத்திலிருந்து பெண்களுடைய சடலம் எடுக்கப்பட்டதாக கதை ஒன்று வந்தது. ஆனால் அதற்கும் புளொட்டுக்கும் சம்பந்தமில்லை.
தேசம்: அப்படி உடலங்கள் உண்மையில் எடுக்கப்பட்டதா?
அசோக்: எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் புளொட் என்று சொல்லி வதந்தி உருவாக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அதற்கும் புளொட்டுக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறேன். அதற்கான சாத்தியம் இல்லை.
தேசம்: மாவட்ட பொறுப்பாளர்களாக இருந்த நேரம் அரசியல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுடைய பாத்திரம் எவ்வாறு மதிக்கப்பட்டது? அது அங்கீகரிக்கப்பட்டதா? அதற்கான அங்கீகாரம் இருந்ததா?
அசோக்: எல்லா மாவட்டங்களிலும் விடுதலைக்கான உத்வேகம் இருந்தது தானே. அந்த அடிப்படையில் பெண்களின் பாத்திரம் மதிக்கப்பட்டது. பெண்கள் தொடர்பாக ஒரு வித்தியாசமான, இரண்டாம் பட்சமான பார்வை இருக்கவில்லை. சமநிலையான போக்கு, கண்ணோட்டம் இருந்தது என்று நான் நினைக்கிறேன்.
தேசம்: எல்லா இயக்கங்களுக்குள்ளையும் நடந்த பல்வேறு முரண்பாடுகள் சகோதர படுகொலையாக இருக்கட்டும் எல்லாம் முரண்பாடுகளிலும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படாவிட்டாலும் கூடுதலாக அவர்களுடைய வாழ்க்கையும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டிருக்கு.
அசோக்: பிற்காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கு. இயக்கங்கள் உடைவடைந்து பெண்கள் வெளியேறின பிற்பாடு இந்த சமூகம் பார்த்த பார்வை ஒரு சிக்கலான பார்வை. அது ஆய்வு செய்யப்பட வேண்டியது. அவர்களுக்கு குடும்ப பாதுகாப்போ சமுகப் பாதுகாப்போ எதுவுமே கிடைக்கவில்லை. உடல் ரீதிலும் உள ரீதிலும் இப் பெண்கள் மிக மிக பாதிக்கப்பட்டடார்கள். நாங்கள் இந்த சமூகம் கௌரவமான வாழ்வுக்காக போராடும் இந்த பெண்களுக்கு எந்த நீதியையும் வழங்கவில்லை. இது மிகவும் கவலைக்குரியது.
தேசம்: 2010ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு விடுதலை புலிகள் இருந்த பெண்கள் கூட மிக மோசமாக நடத்தப்பட்ட சம்பவங்கள் இருக்கு. அந்த வகையில் புளொட் போன்ற அமைப்பில் நிறைய பெண்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அமைப்புகள் வெற்றிகரமாக செயற்படாமல் தோல்வியுற்ற போது இந்தப் பெண்கள் எப்படி வீடுகளுக்குப் போய் … அதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
அசோக்: நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு. போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பல பெண்களுக்கு எல்லா இயக்கங்களிலும் இது நடந்துள்ளது .வீடுகளுக்கு போனபோது வீட்டுக்கார ஆட்கள் விரும்பினாலும் கூட சுற்றியிருந்த சமூகம் அந்தப் பெண்கள் மீது ஒரு வித அபிப்பிராயம் கொண்டு இருந்ததால அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது. புளொட்டை பொறுத்தவரை இவ்வாறான நிகழ்வுகள் மிகக்துறைவு. நாங்கள் பெண்கள் அமைப்பினை உருவாக்கம் செய்தபோது தளத்தில்மிக கவனமாக இருந்தோம். முதலில் அவர்கள் முழுமையாக எங்களைப் போன்று விட்டை விட்டு வெளியேறி இயக்கதிற்கு வரும் மனநிலையை மாற்றினோம். வெளியேற்றத்தை எப்போதும் நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. அப்படி வெறியேறி வந்த ஒருசிலரை அவர்களை தொடர்ச்சியான அவர்களின் கல்வியை தொடர எல்லா முயற்சிகளையும் நாங்க செய்தம். இவர்கள் மாணவர் அமைப்பிலும் இருந்தபடியால் இது எங்களுக்கு சாத்தியமானது.
இதில் தோழர் குமரனின் ஒத்துழைப்புமிக மிக பெரியது. கடைசி காலங்களில் சில தோழிகளை எங்களுடைய தோழர்களே பரஸ்பரம் புரிந்துணர்வின் அடிப்படையில் திருமணம் செய்த சம்பவங்கள் எல்லாம் இருக்கு. ஒரு ஆணாதிக்க நிலவுடமை சமுக கொடுர மனநிலையை இன்னும் விடாப்பிடியாக தக்க வைத்திருக்கும் சமூகம் எங்களுடையது. இது பற்றி நிறைய கதைக்கலாம். ஆனால் அது என் மன உளச்சலை இன்னும் கூட்டுவதாக போய் விடும். இது ஒரு அரசியல் சமூக ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயம். ஏன் இந்தப் பெண்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்று. ஏனென்றால் எங்களுக்கு சமூகத்துக்கான மனோபாவம் ஒன்று இருக்குதானே. அந்த கோணத்தில் ஆராயவேண்டும் நிச்சயமாக.
தேசம்: திருமணம் செய்து போயிருந்தாலும் பிற்காலத்தில் கூட, அண்மையில் ஒரு பெண் தற்கொலை செய்திருந்த சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கு. இந்தப் போராட்ட சூழலா அல்லது சூழல் ஏற்படுத்திய தாக்கமா அதைப்பற்றி நீங்கள் ஏதாவது அறிந்திருக்கிறீர்களா?
அசோக்: நான் முதலில் சொன்னதுதான். புளொட் ஒரு இடதுசாரி இயக்கம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் புளொட்டில் இருந்த தோழர்கள் எல்லாம் முற்போக்காக இருப்பார்கள் என்று நாங்கள் கருதினால் அது தவறு. இருந்த தோழர் ஒரு பெண்ணையோ தோழியையோ திருமணம் செய்த போது அந்தக் குடும்பங்களில் முற்போக்காக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்க ஏலாது. ஏனென்றால் நான் சொன்னேன் தானே முற்போக்காக வாழ்வது என்பது ஒரு கோட்பாடு சார்ந்த வாழ்க்கை முறைமை. அது எமது அகநிலையோடும் புற வாழ்வோடும் இணைந்தது. நாங்கள் அரசியல் சமூக தளங்களில் முற்போக்கு என்ற முகமூடியை தரிப்பது என்பது மிகச் சுலபம்… ஆனால் தனிப்பட்ட குடும்பவாழ்வில் முற்போக்கு முகமுடியை நீண்ட காலத்திற்கு அணிந்து ஏமாற்ற முடியாது. எப்படியும் எங்க உண்மை முகம் தெரிந்துவிடும். நாங்க மிக விரைவில அம்பலபட்டு போவம்.
இங்க எங்களுக்கு நடந்த சூழல் துரதிஷ்டவசமானது. நாங்கள்தான் முற்போக்கு முகமூடிகளை தரித்துக் கொண்டமேயொழிய உண்மையான இடதுசாரிகளாகவோ மாக்சிச ஐடியோலொயி கொண்டவர்களாகவோ அதை எங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பவர்களாகவோ நாங்க இருக்கல்ல. அனேகமான குடும்பங்களில் வெறும் ஆணாதிக்கவாதிகளாகத்தான் இருந்திருக்கிறோம். குடும்பத்தில் சமநிலையைப் பேணாமை. பெண்களுக்கான உரிமையை கொடுக்காமை. சினேகிதியாக தோழியாக பார்க்கிற தன்மை மிகக் குறைவாகத்தான் இருந்தது.
தேசம்: மற்றது அண்மையில் நீங்கள் எழுதி இருந்தீர்கள் அது ஏற்கனவே ஜென்னி அவர்களும் எழுதி இருந்தார்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த பெண் உறுப்பினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பற்றி. அது சம்பந்தமாக சுருக்கமாக சொல்ல முடியுமா. அந்த சம்பவம் பற்றி. பெயரைக் குறிப்பிடாமல் சொல்லலாம்.
அசோக்: தீப்பொறி பற்றிய உரையாடலுக்குப் பிறகு கதைக்கலாம் என்று நினைக்கிறேன்.
என் எதிரிக்குக் கூட இப்படி ஆகிடக் கூடாது என்று கட்டியவள் கண்கலங்கினாள். அன்று நவம்பர் 19 வெள்ளிக்கிழமை நானும் தான் கூடச் சென்றிருந்தேன். அவனுடைய வயிறு பெருத்துக் கொண்டு வந்தது. கண்கள் மஞ்சளாகிக் கிடந்தது. உணவு ரியூப் வழியாக வழங்கப்பட்டு கிழிவுகளும் ரியூப் வழியாக எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவன் முக்கால் மயக்கத்தில் எவ்வித தூண்டலும் இன்றி இருந்தான். சுவாசிக்க கஸ்டப்பட்டு உள் வலியால் மட்டும் உடலை அசைக்க முற்பட்டான். மற்றும்படி எவ்வித உணர்ச்சிகளும் இல்லை. கட்டியவள் அழைத்துப் பார்த்தான் எவ்வித உணர்ச்சி வெளிப்படுத்தலும் இல்லை. நான் அழைத்துப் பார்த்தேன். அதற்கும் எவ்வித வெளிப்படுத்தலும் இல்லை. என் கையால் முகத்தை தடவினேன் பலனில்லை. ஒரிரு தடவை கண்ணை மட்டும் திறந்து பார்த்தான். அதில் எவ்வித உணர்ச்சியும் இல்லை. வெறுமையை அவன் கண்ணில் பார்க்க முடிந்தது.
அப்போது தமிழ் டொக்டர் வந்து கட்டியவளுக்கு நிலைமையை விழங்கப்படுத்த தனக்கு தெரிந்த தமிழில் நன்றாகவே விளங்கப்படுத்தினார். தான் இவர் முதல் வந்திருந்த போதும் சிகிச்சை அளித்ததாகவும் குடியை விட்டாலே தங்கள் சிகிச்சை பலனளிக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்தார். அவருடைய கதையின்படி தாங்கள் எல்லாவகையிலும் அவரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றோம் ஆனால் நிலைமை மோசமானாலும் மோசமாகலாம் என்ற எச்சரிக்கையை வழங்கி அவளை அசுவாசப்படுத்தும் அதேசமயம் நேரக்கூடிய ஆபத்திற்கும் தயார்படுத்தினார்.
“நீங்களும் குடித்தால் வரும் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கிறீர்கள். இதனால் அரசுக்கு எவ்வளவு செலவு. ஏன் இவருக் பலாத்காரமாக குடியை வெறுப்பதற்கான சிகிச்சையை அளிக்கக் கூடாது” என்று வினவினேன். என்னைப் பார்த்து ஒரு நளினமான புன்னகையை விட்டபடி, ‘குடிப்பதா இல்லையா என்பது அவரவர் தனிப்பட்ட முடிவு. அவர்களாக திருந்த வேண்டும். இது ஒருவருடைய மனித உரிமை சம்பந்தப்பட்டது’ என்றார் அந்த டொக்டர். ‘இது வாழ்வதற்கான உரிமையல்ல. சாவதற்குமான உரிமை’ என்று சொல்லி அந்த உரையாடலை நிறுத்திக்கொண்டோம்.
2019இல் போதையில் வீழ்ந்து மரணத்தின் விளிம்புக்குச் சென்று மீண்டவனால் குடியில் இருந்து மீள முடியவில்லை. அதன் பின் மருத்துவமனை அவனது மாமியார் வீடானது. கிட்டத்தட்ட 20 தடவை வரை சென்று திரும்பி இருப்பான். இம்முறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இது முற்றுப்புள்ளியாக அமையும் என்ற உணர்வு என்னுள் வந்துவிட்டது. அவனுடைய உடல் மாற்றங்களில் அது தெரிந்தது. அவன் எவ்விதத்திலும் தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கவில்லை அல்லது அவனால் முடியவில்லை. அவன் கடந்த சில ஆண்டுகளாகவே வாழ்வதற்கான நோக்கத்தை தேவையை இழந்துவிட்டான். இவன் மட்டுமல்ல இவனைப் போல் பலர் எம்மத்தியில் வாழ்கின்றனர். நாம் இவர்களை அடையாளம் காணத் தவறிவிடுகின்றோம். அல்லது ஏன் மற்றையவர்களின் பிரச்சினையில் தலையிடுவான் என்று இருந்துவிடுகின்றோம். இதுவும் ஒரு சமூகப் பிரச்சினை என்பதை உணர மறந்துவிடுகின்றோம்.
ஒரு வகையில் இன்று சமூக மாற்றம் பற்றி பேசுவோரும் வைற் கொலர் சமூகசேவையாளர்களாகி விட்டனர். நோகாமல் பகுதிநேரமாக புரட்சி சமூக மாற்றம் பற்றி போஸ்ட் போட்டு சமூக மாற்றத்தை கொண்டுவரலாம் என்று நினைக்கிறோம். அரசியல் ரீதியாக தீவிரமாக ‘முற்போக்காக’ செயற்பட்ட இவனின் நிலையே இப்படி என்றால் சாதாரணர்களின் நிலை எப்படியிருக்கும். இவர்களைச் சார்ந்தவர்களின் குடும்பங்களின் நிலை என்ன. அவர்கள் தினம் தினம் ஆண்டாண்டுகளாக அனுபவித்த கொடுமைகள் யுத்தக் கொடுமையிலும் மோசமானது. சொந்த வீட்டிலேயே நிம்மதியிழந்து வாழ்வதென்பது எவ்வளவு பெரும் கொடுமை.
இவன் மருத்துவமனைக்கு சென்று இன்று நவம்பர் 22 பத்து நாட்களாகிவிட்டது. அதற்கிடையே லண்டனின் புறநகர்ப்பகுதியான சறேயில் குடி உபாதையால் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இவர் குடித்துவிட்டு மனைவியைக் கொடுமைப்படுத்துவது நாளாந்த செயற்பாடக இருந்துள்ளது. மனைவியின் உழைப்பில் வாழ்ந்து அவளின் பணத்திலேயே வாங்கிக் குடித்து எதிர்பாராத விபத்து ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன் அவள் உயிரிழந்தாள்.
தாயகத்தில் கிளிநொச்சி பாடசாலையில் தலைமையாசிரியராக இருந்து மாற்றம் பெற்றுச் சென்ற ஒரு தலைமையாசிரியரும் குடி காரணமாக ஏற்பட்ட உடலியல் பாதிப்பால் சென்ற வாரம் மரணமானார். இவர் பாடசாலையிலேயே வைத்து குடிக்கின்ற பழக்கத்தைக் கொண்டிருந்துள்ளார்.
அண்மைய மாதங்களில் அவன் எவ்வாறு சிந்திக்கின்றான், தன்னுடைய வாழ்வைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை அறிய அவனோடு பல்கோணங்களிலும் பேச்சுக்கொடுத்து பார்ப்பேன். சில வாரங்களுக்கு முன், “நீ எவ்வளவு நாள் உயிரோடு இருப்பாய் என நினைக்கிறாய்” என்று ஈவிரக்கமே இல்லாமல் கேட்டேன். அவன் எவ்வித சலனமும் இல்லாமல், “படுத்தால் நாளைக்கு எழும்புவேனோ தெரியாது” என்றான். “அப்ப உனக்கு சாகப்போறனே என்று பயம் இருக்கவில்லையா?” என்றேன். “என்னத்தை பயப்படுகிறது” என்றான். அதற்கு மேல் கேட்பதற்கு எனக்கு எதுவும் இருக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன் பேசிய போது, “நான் இதற்கு வெளியே வருவேன்” என்றவன் அது செய்வேன் இது செய்வேன் என்றெல்லாம் சொல்வான். ஆனால் சில மணி நேரத்திலேயே குடித்துவிட்டு நான் சாகப்போகிறேன் என்று என்று ஒலமிட்டு அழுவான். முன்னர் மனைவி பிள்ளைகளோடு இருக்கும் போதும் அவ்வாறு தான். இப்போது அவர்கள் இல்லாதபோதும் பிள்ளைகளுக்கு போன் பண்ணி நான் இன்னும் பத்து நிமிடங்களில் சாகப் போகிறேன் என்பான். இன்று அவன் அந்த நிலைக்கு மிகக் கிட்ட வந்துவிட்டான். கடந்த சனிக்கிழமை பிள்ளைகளையும் கூட்டிச் சென்றோம். அவர்கள் ஒவ்வொருவராக ‘அப்பா’, ‘அப்பா’ என்று அழைத்தனர். ஆனால் எவ்வித உணர்வு வெளிப்பாடும் இல்லை. கைகளால் வயர்களைப் பிடுங்குவதால் கையை ஒரு சிறு தலையனை மாதிரியான பாக்குக்குள் வைத்துக் கட்டி இருந்தனர். வயிறு இன்னமும் வீங்கி இருந்தது.
மறுநாள் ஞாயிறு நவம்பர் 21 தாரமும் தாயும் சென்று பார்த்து வந்தனர். பெற்றவர்கள் உயிரோடு இருக்கின்ற போது பிள்ளைகள் உயிரிழப்பது மிகக் கொடுமையானது. ‘பெற்ற வயிறு பற்றி எரியும்’ என்பது இதைத்தான். நாளுக்கு நாள் அவன் நிலை மோசமாகிக்கொண்டு வருகின்றது. அதுவொன்றும் ஆச்சரியமானதும் அல்ல.
அண்மைய காலங்களில் அவன் என்னோடுதான் கூடுதலாக கதைத்திருந்தான் என நினைக்கிறேன். சில மாதங்களுக்கு முன்வரை சமைத்து சாப்பாடு எல்லாம் தருவான் என்னுடைய பிள்ளைகளுக்கும் சேர்த்து சமைப்பான். சமையலில் சாப்பாட்டில் அவ்வளவு நுணுக்கம். ‘என்னுடைய பிளைகள் வேறு உன்னுடைய பிள்ளைகள் வேறா’ என்பான். ‘நான் இல்லாவிட்டால் என்னுடைய பிள்ளைகளை பார்ப்பாய் தானே’ என்பான்.
இன்று நவம்பர் 22 இரத்தமாக வாந்தி எடுத்திருந்தான். இதயத்துடிப்பிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஈரல் செயற்பாட்டை இழந்துவிட்டது. சிறுநீரகமும் செயற்பாட்டை இழந்தது. அதனால் இன்று அவன் ஐசியு க்கு மாற்றப்பட்டான்.
பதின்ம வயதில் விளையாட்டாக பழகிய பழக்கம் பிள்ளைகளின் பதின்மப் பருவத்தைப் பார்க்காமல் தன் வாழ்வையும் வாழாமல் ஐம்பதுக்களின் முற்பகுதியிலேயே மரணத்தை வரவழைத்து வைத்துள்ளது.
“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வெளிநாடு வந்தோம்” தமிழ் பெருங்குடி’மக்கள் – பாகம் 01
இக்கட்டுரைத் தொடரை எழுதுவது தொடர்பாக சில மாதங்களாகவே எனக்குள் போராடி, ஒரு முடிவுக்கு வந்து இதனை எழுத ஆரம்பிக்கின்றேன். அனுவம் அறிவு. சிலருடைய வாழ்க்கை அனுபவங்களைத் தெரிந்துகொள்வதனூடாக, அதனைப் புரிந்துகொள்வதனூடாக, சிலருடைய வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றேன்.
._._._._._.
மேற்கத்தைய ஜாஸ் இசையில் ஆர்வம் உள்ள பலரும் அமி வைன்ஹவுசை (படம்) அறிந்திருக்க முடியும். 1983 இல் இங்கிலாந்தில் பிறந்து 12 வயதிலேயே இசைத்துறையில் நுழைந்து 19 வயதில் தன் பெயரை மேற்கத்தைய இசையுலகை அறிய வைத்தவள். ‘தன்னுடைய இசையைக் கேட்டு ஒரு ஐந்து நிமிடங்கள் மக்கள் தங்கள் சோகத்தை மறக்க வேண்டும்’ என்று விரும்பியவள். ஆனால் 19வது வயதிலேயே மது, போதை, கூத்தும் கும்மாளமும் ஆனது அவள் வாழ்க்கை. புகழின் உச்சியில் இருந்த போதே அவள் வீழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தால். 20,000 ரசிகர்களுக்கு முன்னாள் எந்த நாட்டில் நிற்கின்றோம் என்பதையும் மறந்து பாடலின் சொற்களையும் மறந்து நிறைபோதையில் நின்றாள். யூலை 22, 2011 அவளுடைய மருத்துவருக்கு போன் செய்து “நான் சாக விரும்பவில்லை” என்றவள் அடுத்த 24 மணிநேரத்தில் யூலை 23, 2011இல் அதீத போதை விசமாக மரணித்தாள். தனியாகப்படுத்து இருந்த அவளுடைய கட்டிலில் காலியான வொட்காப் போத்தலும் கிடந்தது.
._._._._._.
அப்போது லண்டனில் பொறிபறக்கின்ற அரசியல் செய்தவர்களில் இவனும் ஒருவன். இந்துவின் மைந்தன். புலம்பெயர் அரசியில் கூட்டங்கள், நாடக விழாக்கள், திரைப்பட விழாக்கள் என்று அறியப்பட்ட ஒருவன். ஒரு காலத்தில் இவனுக்கென்று ஒரு பெரும் குடும்ப வட்டம், ஊர் வட்டம், நட்பு வட்டம், பாடசாலை வட்டம், அரசியல் வட்டம், நாடக வட்டம் எல்லாம் இருந்தது.
எனக்கும் அவனில் கணிசமான மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவனை 1997 முதல் எனக்குத் தெரியும். நானும் அவனோடு அரசியலில் பயணித்துள்ளேன். நல்ல நண்பன். அவனது வீட்டிற்கு வெளியே யாருக்கும் எந்த தீங்கும் செய்ததாக நான் அறியவில்லை. என் பிளைகளுக்கும் சமைத்து சாப்பாடு தந்துவிடுகின்ற நல்ல மனிதன்.
இந்த கொரோனா பரவலுக்கு முன்னதாக 2019 பிற்பகுதியில் ஏதோ வீழ்ந்து மரணத்தின் வாயில்வரை சென்று மூன்று மாதங்களிற்கு மேலாக சிகிச்சை பெற்று மனைவியின் துணையால் மீண்டு வந்தான். அப்போது அவனை மருத்துவமனை சென்று பார்த்த போது அவனிருந்த கோலத்தைப் பார்த்து நான் மயக்கமாகிவிட்டேன்.
2020இல் ஒரு நாள் போன் அடித்து அழுதான். அப்போது தான் அவன் குடிப்பான் என்பதே எனக்குத் தெரியும். அவன் குடிக்கு அடிமையானவன் என்பது 2021இல் தான் தெரியும். அதற்குப் பிறகு நான் அறிந்தவை எதுவும் ஆரோக்கியமானவையல்ல. அவன் முன்னர் வீழ்ந்தது கூட விபத்து அல்ல. போதையால் வீழ்ந்து எழும்பியது என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.
கடந்த வாரமும் பார்த்தேன். எழுந்து நடக்கவே திரணியில்லாமல் நின்றான். அவன் அறையில் இருந்து வரும் மணம் சற்று கனதியாக இருந்தது. அவன் பெரிதாக உணவருந்தியதாக தெரியவில்லை. ஆனால் வயிறு சற்று வீங்கி இருந்தது. கட்டிலருகில் ஒரு போத்தல். ஜக் டானியல் அரைப் போத்தல் குடித்து முடித்த நிலையில் கிடந்தது. அவனுடைய கோலத்தைப் பார்த்து எனக்கு பேசுவதற்கோ திட்டுவதற்கோ மனம்வரவில்லை. அன்று காலையும் வெளியே போய் ஒரு போத்தல் ஜக் டானியல் 25 முதல் 30 பவுண் வரை வரும், வாங்கி வந்துள்ளான்.
“எமேர்ஜன்சிக்கு அடித்தியா?” என்று கேட்டால் நீண்ட இடைவெளிக்குப் பின் “அவங்கள் வர மாட்டாங்கள்” என்று புறுபுறுத்தான்.
“நான் அம்புலன்ஸ்க்கு அடிக்கிறன். நீ முதலில் உடுப்பை போடு” என்று உடம்பில் ஒட்டுத் துணியுமின்றி நின்றவனிடம் சொல்லிவிட்டு எமேர்ஜனசிக்கு போன் பண்ணினேன்.
வழமையான கேள்விகள். “சுவாசிக்கின்றாரா? வெப்பநிலை இருக்கின்றதா? இரத்தப்பெருக்கா?” என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்கள். ஆனால் அவனால் உடுப்பைக் கூட போட முடியவில்லை. உடுப்பைப் போட உதவி செய்து கட்டிலில் கிடத்தினேன்.
சிறிது நேரத்தில் முதலில் காரில் ஒரு பராமெடிக் வந்து உடலைச் செக் பண்ணினான். நல்ல காலத்திற்கு கோவிட் என்ற படியால் முகக்கவசம் கையுறை எல்லாம் அணிந்திருந்ததால் அந்த அறையின் மணம் அவருக்கு தெரிந்திராது.
வந்த பராமெடிக் மேலும் சில விசயங்களைக் கேட்டார்: “இரத்தம் சிவப்பாக போகிறதா கருப்பாக இருக்கா? மலம் என்ன நிறத்தில் உள்ளது? குறிப்பாக கருப்பாக தார் நிறத்தில் உள்ளதா?” “வாந்தியோடு சிவப்பாக வருகின்றது. மலம் தார் கருப்பில் இருந்தது” என்று சொன்னேன்.
இதை நானும் ஓரளவு கேட்டறிந்து இருந்தேன். உடம்பினுள் குருதிப் பெருக்கு இருந்தால் அது கருப்பாகி மலத்தோடு வெளியேறும் என்று. ஏற்கனவே ஈரலில் பிரச்சினை. உடம்பின் வடிகட்டல் செயல்முறைகள் எல்லாம் பாதிக்கப்பட்டு பலவீனப்பட்டு இருப்பதால் வயிறும் வீங்கியிருக்க வேண்டும். பரா மெடிக்கிற்கு மேலதிகமாக எதுவும் சொல்ல வேண்டியிருக்கவில்லை. மேலும் நீரிழிவு நோயாளியுமான அவன் வாந்தி எடுப்பதும் சிக்கலானது என பராமெடிக் கூறி உடனடியாக இவரை மருத்துவமனைக்கு இட்டுச்செல்ல அம்புலன்ஸிற்கு அழைப்பு விட சில நிமிடங்களிலேயே அம்புலன்ஸ்ம் வந்து சேர்ந்தது. ஒரு ஆணும் இரு பெண்களுமாக மூவர் வந்திறங்கினர்.
எனக்கோ ஒரு வகையில் மக்கள் வரிப்பணத்தை துஸ்பிரயோகம் செய்கின்றோம் என்ற குற்ற உணர்வு. வந்தவர்களிடம் சொன்னேன்: “என்னை மனித்துக்கொள்ளுங்கள். இவர் ஒரு பெரும் குடிமகன். இவரைச் சுற்றி இருந்த எல்லோருமே இவருடைய இந்தப் பழக்கத்தினால், இவரால் பாதிக்கப்பட்டு கைவிட்டுச் சென்றுவிட்டனர். இனி இவரை திருத்தலாம் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கும் உங்களை அழைப்பதைத் தவிர வேறு வழிதெரியவில்லை. கடந்த மாதமும் குடியை மறப்பதற்கான சிகிச்சையை குழப்பிவிட்டு வந்துவிட்டார்”, என்று புலம்பித் தள்ளினேன்.
அந்த பராமெடிக் மிக நிதானமாகவே, “அதைப்பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். நீங்கள் எப்போது தேவையானாலும் எங்களை அழையுங்கள். அதற்குத் தான் நாங்கள் இருக்கின்றோம்”, என்று சொல்லிய படியே “எத்தனை நாட்கள் மாதங்கள் வருடங்கள் குடிக்கின்றார்” என்று கேட்டார். “மூன்று தசாப்தங்களாகக் குடிக்கின்றார்” என்றேன். “அப்படியானால் நீங்கள் எங்களை அழைப்பது இது கடைசித் தடவையாக இருக்கப் போவதில்லை. இன்றைக்கு சில வேளை எங்களால் இவரைக் காப்பாற்றி அனுப்ப முடியும். அவர் திருப்பியும் குடிப்பார். நீங்களும் திருப்பி எங்களுக்கு போன் பண்ணுவீர்கள். அவராக திருந்தினாலேயொழிய வேறேதும் வழியில்லை”. என்றார் அப்பரா மெடிக். “அரசு ஏன் பலாத்காரமாக இவர்களுக்கு குடியை மறக்கும் சிகிச்சையைச் செய்யக் கூடாது?” என்று என் ஆதங்கத்தை கேட்டேன். புன்சிரிப்பினூடாக அவர்கள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டு, மிக அன்போடும் கனிவோடும் அவனை அழைத்துச் சென்றனர். அவன் சிலோமோசனிலும் மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி வீட்டுக்கு முன் நின்ற அம்புலன்ஸை அடைய பத்து நிமிடங்கள் எடுத்தது.
அவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்று நவம்பர் 18, 2021 ஒரு வாரமாகிவிட்டது. இன்று அவனுடைய வாழ்க்கை ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள் என்று கேள்விக்குறியாகி நிற்கின்றது. இன்று அவனைச் சுற்றி எந்த வட்டமும் கிடையாது. கடமைக்காக கட்டியவள் மட்டும் சென்று பார்த்து வருகின்றாள். இதில் யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை.
உளவியல் எடுகோளின்படி ஒன்பது பேரில் எட்டுப் பேர் வாழ்வா சாவா என்று மரணத்தின் விளிம்பில் நிற்கின்ற போதும் நிதானித்து, தீர்க்கமாக முடிவெடுப்பதில்லை. அசட்டுத்தனமான நம்பிக்கையின் அடிப்படையில் தங்களுடைய நிலையை உணர்ந்துகொள்ள முடியாமல் தான் முடிவுகளை எடுக்கின்றனர். நாம் இயலுமானவர்களாக இருக்கின்ற போது எதிர்காலம் பற்றிய எவ்வித சிந்தனையும் இல்லாமல், எஞ்சி இருக்கின்ற காலமும் இவ்வாறே இருந்துவிடலாம் என இவர்கள் நினைக்கின்றார்களா என்று தெரியவில்லை. இதன் விளைவுகள் மிகப் பாரதூரமாக அமைந்துவிடுகின்றது.
கற்றறியும் வன்அறிவிலும் (hard skill) எமது இயல்புசார்ந்த மென்அறிவு (soft skill) மிக முக்கியமானது. தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய (ability to change) என்ற மென் அறிவு ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது. ஆனால் கணிசமான மனிதர்கள் மத்தியில் இது காணப்படுவதில்லை. அவர்கள் மிகத் திறமையானவர்களாக மிகச் சிறந்த அறிவாளிகளாக இருந்த போதும் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய இந்த மென்அறிவைக் கொண்டிராதவர்கள் ஒரு கட்டத்தில் தடம்புரள்வது தவிர்க்க முடியாதது.
மாற்றம் ஒன்றைத்தவிர எதுவுமே நிரந்தரமில்லை. அந்த அடிப்படையில் மாற்றங்களை உள்வாங்கி எம்மை மாற்றிக்கொள்ளத் தவறினால் தடம்புரள்வது தவிர்க்க முடியாதது. மனித நடத்தை கொள்கையாளர்களின் படி அறிவு என்பதே நாங்கள் எங்கள் இயல்புகளை மாற்றிக்கொள்வது தான். நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களானால் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டுள்ள புறச்சூழலில் வாழ்வதற்கான தகமையை நாங்கள் இழந்துவிடுகின்றோம்.
அவனும் அரசியல் பேசினான், சமூக விடுதலை பேசினான், பெண் விடுதலை பேசினான், முற்போக்கு பேசினான். எங்கும் எப்போதும் தன்னையும் ஒரு புள்ளியாக்கிக் கொண்டிருந்தான். ஆனால் அது எல்லாமே அவன் தன்னை மறைக்க போர்த்திக்கொண்ட போர்வைகளோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அவன் பேசிய அரசியலுக்கும் அவன் வீட்டினுள் நடந்து கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவ்வாறு தான் எம்மத்தியில் பலர் உலாவருகின்றனர்.
“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வந்தோம்” என்று ஒருத்தி தன் சினேகிதியோடு குமுறி அழுதாள். ஐந்து மாதக் கர்பிணிப் பெண்ணாக தனது இரண்டாவது குழந்தையை சுமந்து கொண்டு; போதைக்கு அடிமையான கணவன் உடலில் ஒட்டுத்துணியில்லாமல் கட்டிலில் மலம்சலம் கழித்துக் கிடக்க, குழந்தையையும் சுமந்தபடி அதனைத் துப்பரவு செய்வது தான் அவளின் நாளாந்த கடமைகளில் ஒன்று. வயிற்றில் சுமந்த குழந்தையை அவள் பெற்றொடுத்த போது அவன் உயிருடன் இல்லை.
இவைகள் எதுவுமே கற்பனைகள் அல்ல. எங்களோடு பயணித்துக்கொண்டிருக்கும் சக மாந்தர்களின் இதயத்தை கனக்க வைக்கும் வாழ்க்கைப் பதிவுகள். உண்மைகளைப் புறக்கணித்து வாழ முடியாது. எமது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை நாங்கள் முதலில் ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளையும் தேட வேண்டும்.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 09 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 09
தேசம்: 83 ஜூலை முதலான சம்பவங்கள் பற்றித்தான் கதைத்துக் கொண்டு இருக்கின்றோம். அதுலயும், உங்களுடைய குடும்ப விஷயங்கள் பற்றிக் கூடுதலாக கதைத்தோம். அதில் ஒரு விஷயம், உங்களுடைய சகோதரர் பற்றியது. பொதுவாக எங்களுடைய தமிழ்ச் சூழலில் தற்கொலைகள் சம்பந்தமான விடயங்கள் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. இதே மாதிரி ஒரு அனுபவம் உங்களுடைய குடும்பத்திலும் ஏற்பட்டிருக்கு. கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் இருந்தாலும், அதைப்பற்றி ஒருக்கா கதைக்க முடியுமா? ஏனென்றால், தமிழ்ச்சூழலில் இது பொதுவான விஷயமா காணப்படுது. ஏன் அது அப்படி? உங்களுடைய சகோதரனுடைய அனுபவத்தை நீங்கள் முதல் சொல்லுங்கள்
அசோக்: எனக்கு அவர் மூன்றாவது சகோதரர். பெயர் தியாகராஜா. அவர்தான் பெரியாரிஸ்ட்டாக இருந்தவர். ஒரு முற்போக்கான சிந்தனை உள்ள ஒருத்தர்.
தேசம்: சொல்லப்போனால் நீங்கள் அரசியலுக்குள் வாறத்துக்கு அவர் ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.
அசோக்: அவர் அந்த நேரத்திலேயே இந்த கையெழுத்துப் பிரதிகள், பத்திரிகைகள் எல்லாம் வெளியிட்டுக்கொண்டிருந்தவர், அவரும் நண்பர்களும் சேர்ந்து.
தேசம்: அது ஒரு முக்கியமான காலகட்டம் என்று நினைக்கிறேன். கூடுதலாக அந்த நேரம் கையெழுத்து பிரதிகள் இருந்திருக்கு. உங்க குடும்பத்தில நிறைய பேர் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்…
அசோக்: ஓம் மூத்த அண்ணா கூட ‘உதயதாரகை’ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். தியாகராஜா அண்ணா வெளியிட்ட அந்த கையெழுத்து சஞ்சிகை பெரியார் திராவிட இயக்க கோட்பாட்டோடதான் வந்தது. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு அந்த சம்பவம். அட்வான்ஸ் லெவல் எழுதிக் கொண்டிருந்தவர் . அட்வான்ஸ் லெவலில் பெயில் என்று சொல்லித்தான் தற்கொலை செய்தார் என்று கதைத்து கொண்டாங்க. அட்வான்ஸ் லெவல் பெயில் என்று ஆளுக்கு ஒரு தாக்கம் இருந்திருக்கு போல. ஆனால், வெளியில் காட்டிக்கொள்ளவே இல்லை.
அன்றைக்கு பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோவில் திருவிழா. அதற்கு போறதுக்கான முயற்சியில அம்மாக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த டைம்ல இவர், எங்கட வீட்டு வளவு 4 ஏக்கர் பெரிய காணி. வீடு ஒரு பக்கம் இருக்கும் . இவர் தனிய தங்களுக்கான காரியாலயம் ஒன்றை உருவாக்கி அங்கேதான் படிப்பது , நித்திரை கொள்வது எல்லாம். சாப்பிட மட்டும் தான் வருவார். அதுக்குள்ளதான் பிரண்ட்ஸ் வாரது கதைக்கிறது. கையெழுத்து சஞ்சிகை வெளியிடுவதெல்லாம் அங்கேதான். அப்ப இவரை கூப்பிட்டு சாப்பாடு கொடுப்பதற்காக வீட்டிலிருந்த ஒரு ஆளை அனுப்பி இருக்காங்க… அங்க போனா ஆள் வந்து சம்பவத்தை சொல்லி இருக்கிறார்.
எங்கட வீட்ட துப்பாக்கி இருந்தது. விவசாயம் சம்பந்தப்பட்ட ஆட்கள் என்றபடியால், எங்களுக்கு லைசன்ஸ் துப்பாக்கி இருந்தது. அதைக் கொண்டுபோய் அவர் என்ன செய்தவர் என்று கேட்டால், அதை படுக்கிற ஃபெட்டின் மேல், வீட்டு முகட்டு கூறையில் கயிற்றில் கட்டி தொங்க விட்டு, நெஞ்சில் துப்பாக்கியின் குழாயை வைத்து, காலால டிக்கரை அமத்தியிருக்கிறார். ஸ்பாட்டிலேயே ஆள் போயிருப்பார் என்று நினைக்கிறேன். பிறகு பார்த்தால், உடனடியாக திடீர் முடிவுகளினால் நடந்த தற்கொலை அல்ல இது என தெரியவந்திருக்கின்றது. ஏனென்றால், கடிதங்கள் எல்லாம் எழுதி வைத்திருக்கிறார். போலீஸ் அதிகாரிக்கு ஒரு கடிதம், அடுத்தது மரண விசாரணை அதிகாரிக்கு ஒரு கடிதம், அடுத்து, வள்ளி அக்காவுக்கு கலியாணம் ஆகி மகன் பிறந்தால் அவருக்கு அவர் வாசிக்க ஒரு கடிதம். அது தமிழில். மற்ற இரண்டும் ஆங்கிலத்தில்.
தேசம்: அப்ப அந்த நேரமே அவருக்கு ஆங்கில தேர்ச்சி இருந்திருக்கிறது?
அசோக்: ஓம் பெரிய கெட்டிக்காற ஆள் என்று வீட்டில் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறன்.
தேசம்: அந்த நேரம் ஆங்கிலத்தில் தான் படிச்சவரோ…
அசோக்: ஆங்கிலத்தில அந்த நேரம் படிக்கக் கூடிய சாத்தியம் எனக்கு தெரியல.
வீட்டில யாரும் எதிர்பார்க்கல்ல . ஏனென்றால் அவ்வாறான மனநிலையை எங்கேயும் அவர் காட்டிக்கொள்ளவில்லை. சோகமாகவோ, விரக்தியாகவோ இருந்தில்லை. தற்கொலைக்கான காரணம் எதுவுமே தெரியல. அது அப்பா, அம்மா, வீட்டுக்காரர் எல்லாருக்கும் பெரிய தாக்கமா இருந்தது.
தேசம்: அந்த இழப்பு தான் உங்களுக்கு குடும்பத்தில் முதலாவது இழப்பு?
அசோக்: ஓம் முதலாவது இழப்பு. அடுத்தது நிறைய ப்ரண்ட்ஸ் அவருக்கு. எக்கச்சக்கமான ஃப்ரெண்ட்ஷிப் இருந்தது. எல்லாருக்கும் பெரிய அதிர்ச்சி. ஏனென்றால், யாருமே எதிர்பார்க்கவில்லை இப்படியொரு தற்கொலையை.
நீண்ட காலம் இது, எங்க வீட்டில தாக்கத்தை கொடுத்திருக்கிறது.
தேசம்: இன்றைக்கும் தற்கொலைகள் நடந்துகொண்டிருக்குது. பாரம்பரியத்தோடு ஜெனட்டிக்கோட தொடர்புபட்ட விடயமா என்று தெரியவில்லை. ஒரு காலகட்டத்தில் ஜப்பான் தற்கொலைகள் நடப்பதில் கூடிய நாடு. அதுமாதிரி தமிழர்கள் மத்தியிலும் தற்கொலைகள் அதிகமாக இருக்கிறது. என்ன பின்னணி என்பதே தெரியவில்லை. இது ஒரு மன வருத்தத்துக்குரிய விஷயம் தான். இதே போக்குகள் தான் ஒரு காலகட்டத்தில் பரீட்சையில் சித்தி அடையாதவர்கள் அல்லது பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள், இயக்கங்களில் போய் சேருகின்ற முறையும். அதை நீங்கள் அறியக்கூடியதாக இருந்ததா?
அசோக்: தற்கொலைகளுக்கு பல்வேறு மன அழுத்தம், உளவியல் உயிரியல், சார்ந்த மற்ற சமூக புறநிலைக் காரணிகளும் காரணங்களாக இருக்கலாம். குடும்பத்தில் தொடர்ச்சியாக தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் நடந்தா நீங்க சொல்வதுபோல் ஜெனட்டிக் தொடர்பான காரணங்களும் இருக்கக்கூடும். ஆனால், அனேகமான தற்கொலைகள் உடனடி உணர்ச்சிகளால், கோபங்களால்தான், திடீர் முடிவுகளினால்தான் ஏற்படுகின்றன. திட்டமிட்ட, நீண்டகாலம் திட்டமிட்ட தற்கொலைகள் மிகக் குறைவு.
திட்டமிட்ட தற்கொலையை தடுப்பது சுலபம் தற்கொலை செய்வதற்கான எண்ணங்கள் அறிகுறிகள் தெரியவரும்போது அவங்களோட மனம் விட்டு கதைக்கனும். எனக்கு இந்த அனுபவம் இருக்கு. என் நண்பர் ஒருவரை காப்பாற்றி இருக்கிறன்.
விவசாயக் கிராமங்களில் தற்கொலை அதிகம் இடம்பெறுவதற்கான காரணம் என்னவென்று கேட்டால் பிரச்சனை என்று வந்தால் வீட்டில், தோட்டத்தில் பயிர்களுக்கு பயன்படுத்தும் நச்சு மருந்து இருக்கும். குடும்பத்தோட சண்டைபோட்டு என்ன செய்வாங்க என்றால், நச்சு மருந்தையோ, அரலிக்காயையோ சாப்பிட்டுவிடுவாங்க.
உடனடியாக பக்கத்திலேயே தற்கொலை செய்வதற்கான பொருட்கள் இல்லையென்றால் தற்கொலை முயற்சிக்க மாட்டார்கள்.
தேசம்: நீங்கள் சொல்வது சரி. ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபனம் ஒன்று விவசாய மருந்துகளை வீடுகளில் வைப்பதற்கு, விவசாயிகளின் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டது என்று நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில்…
அசோக்: ஓம், அடுத்து பரீட்சையில் சித்தி அடையாதவர்கள் அல்லது பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள் இயக்கங்களில் போய் சேர்ந்தார்கள் என்ற விமர்சனம். விடுதலை போராட்டத்துக்கு எதிராக போராட்டத்தை கொச்சை படுத்துவதற்கு சிலர் வைக்கிற குற்றச்சாட்டு இது.
ஓரளவு இருந்திருக்கலாம், வீட்டில் உள்ளவர்களின் பயத்தின் காரணமாக போயிருக்கலாம். இந்த விமர்சனத்தை முன்வைக்கிற ஆட்களைப் பார்ததோமென்றால் இவர்கள் பக்கா சுயநலவாதிகளாக, அந்த நேரத்தில இருந்தவங்கதான். தங்களை நியாயப்படுத்த, இப்படியான காரணங்களை கண்டுபிடிப்பாங்க.
அசோக்: பயம் ஒன்று இருக்கும்தானே. அப்பா மற்றும் வீட்டார் தொடர்பாக. எதிர்காலம் தொடர்பாக. . போராட்ட காலத்தில் பரீட்சை எடுத்து என்ன செய்யப்போறம் என்ற எண்ணம் பலருக்கு இருந்திருக்கு. இந்தப் பரீட்சை தங்களின் வாழ்க்கைக்கு பிரயோசனம் அற்றது என்ற வெறுப்பு நிலையும் இருந்திருக்கு. அடுத்தது சிலருக்கு கல்வித்திட்டங்கள் மீதான வெறுப்பும் இருந்திருக்கு. மிகத் திறமையான என்னுடைய நண்பர்கள், பரீட்சையில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மிகத் திறமையானவர்கள்… இவ்வாறனவர்களை நீங்கள் அவதானித்தால், இவங்க அரசியல் சமூக அக்கறை கொண்டவங்களாக, மாற்றுச் சிந்தனை கொண்டவர்களாக இருப்பாங்க. பாடசாலை அமைப்பு வடிவம், அதன்ற செயற்பாடு, அதிகாரம் தொடர்பான விமர்சனங்கள் அவங்களுக்கு இருக்கும். எனக்கு இது கடுமையாக இருந்தது.
ஒருதடவை அம்மாவின்ற கவலை காரணமாக படிக்க எண்ணி, சம்மாந்துறை ரெக்கினிக் கொலிச்சில் ராஷ்மேன் கோசில் சேந்திருந்தன். முதல் வாரத்தியே லெச்சரோடு எனக்கு பிரச்சனை வந்து விட்டது . சில காரணங்களை பொதுமைப்படுத்த ஏலாது.
தேசம்: நிச்சயமாக. உங்களுடைய சகோதரரை எடுத்துக் கொண்டால்கூட, பரீட்சை என்பது திறமையை பரிசோதிப்பதற்கு சாதனமே இல்லை. சிலவேளை பரீட்சையில் தோல்வி அடைந்த எத்தனையோ பேர் கெட்டிக்காரர்களாக வந்திருக்கிறார்கள், திறமையாளர்களாக வந்திருக்கிறார்கள். சராசரி நபர்கள் தான் இந்த சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
அசோக்: கல்வி சார்ந்த அறிவு எப்பவுமே சமூக மாற்றத்திற்கு விடுதலைக்கோ உதவுவதில்லை தானே.
தேசம்: ஆனால் தற்கொலைகளை இல்லாமல் பண்ணுவதற்கு திட்டங்கள் அன்றைக்கும் இருக்கேல, இன்றைக்கும் இருக்கேல.
அசோக்: தமிழ் சமூகத்தை எடுத்துக்கொண்டால், உளவியல் சார்ந்த பிரச்சனைக்கு டாக்டரை அணுகுவது கௌரவ குறைச்சலாக தானே பார்க்கப்படுகிறது. எங்கட ஊர் மந்திரங்களுக்கும், சடங்குகளுக்கும் பேர்போன இடம். ரகசியமாக மந்திரவாதியை அணுகுவார்கள். ஒரு பெண்ணுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால், அதற்கான உளவியல் காரணங்கள் ஆராயப்படுவதில்லை. பேய் பிடித்து விட்டது என்றுதான் சொல்வார்கள் ஆண்களுக்கு பிரச்சனை என்று வந்தால், மந்திரவாதியிட்ட கூட போகமாட்டாங்க.
ஆண்களுடைய உளவியல், பிரச்சினைக்கு, மனச்சிக்கல்களுக்கு ஒன்றும் செய்ய இயலாது. வைத்தியமுறை தெரிந்த மந்திரவாதியால ஓரளவு தீர்ப்பதற்குரிய சாத்தியம், பெண்களுக்கு இருக்கு. ஆண்களுக்கு மனச்சிக்கல் ஏற்பட்டால், அதற்கான தீர்வுக்கான சாத்தியமில்லை. கிராமங்களில் பார்த்தால், ஆண்களுக்கு பேய் பிடிக்காது. பெண்களின் உளவியல் சிக்கல்களை, அவர்கள் பேய் பிடித்தல் என்ற வெளிப்பாட்டால காட்டமுடியும். ஆண்களுக்கு அது ஒரு கௌரவ பிரச்சனை. மன உளைச்சலோடு அவங்க தற்கொலைக்கு தான் போக வேண்டும். அந்த நேரம் டாக்டர்ஸ் இருந்திருப்பார்கள். உளவியல் சார்ந்த படிப்பு இருந்தது தானே. யாரும் நாடினது இல்லை. இப்ப கூட இல்லை. ஐரோப்பிய நாடுகளில் கூட தமிழர்கள் மத்தியில் அதற்கான சாத்தியம் இல்லை.
தேசம்: நான் நினைக்கிறேன் சில மாதங்களுக்கு முன்னர் கூட பாரிசில் இரண்டு பெண்கள்…
அசோக்: இரண்டு பெண்கள். அதுவும் மிகவும் திறமையாக படித்த இங்கேயே பிறந்து வளர்ந்த பெண்கள்.
தேசம்: தமிழ் சூழல் நிச்சயமாக இது சம்பந்தமாக ஆராய்ந்து, இதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அசோக்: தமிழ்ச்சமூகம் மாத்திரமல்ல, நிலவுடைமை சமூகம் சார்ந்த இடங்களில் அந்தப் பண்புகள் அப்படித்தான் இருக்கும். இங்க ஐரோப்பா சூழலில தற்கொலைகளை, உளவியல் பிரச்சனைகளை மன அழுத்தங்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள் நிறைய இருக்கு. தற்கொலை நடப்பது குறைவு. நம்ம தமிழ்ச் சமூகம் நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களை கொண்ட மூடுண்ட சமூகம் தானே. மனம்திறந்து பேசுவதற்கான சாத்தியங்கள் இல்லை. முதலாளித்துவ சமூகத்தில் தந்தை, தாய் குழந்தைகளுக்கு இடையிலான உறவு, ஒரளவு சுதந்திரமாக இருக்கும். ஒரு ஜனநாயகபடுத்தப்பட்ட உறவு இருக்கும். ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. தாயோட கதைக்கலாம் தந்தையோடு கதைக்கலாம். அந்த உறவு உறவு குறைந்தபட்சமாவது ஜனநாயகத் தன்மையோட இருக்கும். எங்கட்ட அப்படி இல்லை. ஒரு பிரச்சனை வந்தால் தந்தையோடையும் கதைக்கேளாது, தாயோடையும் கதைக்கேளாது. மனதுக்குள்ளேயே குறுகிக் குறுகி கடைசியாக தற்கொலைக்கு தான் போவாங்க அல்லது பைத்தியமாவாங்க.
தேசம்: ஒன்று தற்கொலை அடுத்தது இப்ப நடக்கிற சம்பவங்களை பார்த்தீர்களென்றால் தாய்மார் பிள்ளைகளை கொலை செய்வது. அது உண்மையா கொலை என்று நாங்கள் பார்க்க இயலாது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இது நடக்கிறது. மனநிலை சம்பந்தமான பிரச்சனைகள் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அந்த நேரம் நீங்கள் வாழ்ந்த சூழலிலும் பெரிய பிரச்சனையா இருந்தது. ஆனால் அந்த நேரம் இந்த விடயம், பெரிசா அணுகப்படவில்லை என்று நினைக்கிறேன்.
அசோக்: அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை கொலை செய்வதற்கு பின்னால் ஆயிரம் சோகக்கதைகளும், மன அழுத்தங்களும் இருக்கும். அந்த நேரத்தில இப்படி சம்பவங்கள் மிகமிக்குறைவு. எங்க போராட்டம், யுத்த சூழல் தந்த நெருக்கடிகள் பொருளாதாரச் சிக்கல்கள் வறுமை ஆதரவற்ற நிலை இன்றைக்கு தாய்மார்களை கடுமையாக பாதிக்கிறது. உண்மையில தமிழ்ச் சமூகம் நினைத்தால் இப்படியான பிரச்சனைகளுக்கு தீர்வகாணமுடியும். அதற்கு தயாரில்லை. புலிகளின்ற முன்னாள் போராளிகளின்ற குடும்பங்கள் எவ்வளவு வறுமைக்குள், மன உழைச்சல்களோடு வாழ்கிறாங்க. பணப்புலிகள் இதைப்பற்றி சிந்திக்கல்ல. நாங்கதான் இதைப்பற்றி யோசிக்கிறம். மனம் வைத்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். அதற்கு யாரும் தயாரில்லை.
தேசம்: செல்வியினுடைய சினேகிதி சிவரமணியினுடைய இறப்பும் தற்கொலை அல்லவா? பலாத்காரப்படுத்தப்பட்ட தற்கொலை…
அசோக்: சிவரமணியினுடைய தற்கொலையும் ஒரு உணர்ச்சிவசப்பட்ட உடனடி தற்கொலை என்று சொல்ல ஏலாது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்திருக்கு. அன்றைய அரசியல், சமூகச் சூழல். குறிப்பா விடுதலைப்புலிகளின் அரசியல். அவர்கள் கொடுத்த நெருக்கடி கண்காணிப்பு நிர்ப்பந்தம்
தேசம்: அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு…
அசோக்: எனக்கு சிவரமணியை நேரடியாக தெரியாது. செல்வி முலம் அறிந்திருந்தேன். இந்தியாவுக்கு வந்தபோதுதான் நேரடியாக சந்திக்க முடிந்தது. இந்தியாவுக்கு செல்வியோட ஒரு பயிற்சி திட்டத்துக்கு யுனிவர்சிட்டியால அனுப்பப்பட்டவங்க. அப்போதுதான் சிவரமணியை சந்திச்சது. அதுக்குப்பிறகு ஒரு வருடத்திற்கு பிறகுதான் அவர் தற்கொலை செய்தவர் என்று நினைக்கிறேன்
தேசம்: பர்மாவில ஆங் சாங் சூகி க்கு கிடைத்த விருது கிடைத்தது என்று நினைக்கிறேன். அது செல்விக்கா சிவரமணிக்கா …
அசோக்: செல்விக்கு Internatioal PEN Award கிடைத்ததது தெரியும். இது தெரியல்ல. சிவரமணி மிகத் திறமையானவர். அரசியல், சமூக அக்கறைகளை கொண்டவர். பூரணி பெண்கள் இல்லம், பெண்கள் ஆய்வு வட்டம், அன்னையர் முண்னணி என்று பலவற்றிலும் பங்கு கொண்டவர். ஆளுமையான ஆள். பிலிப்பைன்ஸில் எல்லாம் பெண்ணுரிமை தொடர்பான மாநாடுகளில கலந்து கொண்டவர். நிறைய வாசிப்பு. ஆங்கிலத்தில் மிக தேர்ச்சி கொண்டவர். சிவரமணியின் தற்கொலை எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி
தேசம்: என்ன சம்பவங்கள் அவரை தற்கொலைக்கு இட்டுச் சென்றது
அசோக்: அந்த சூழல் இதுக்குத்தானே அரசியல் சூழல்.
ஒரு சுதந்திரமான மனிதனுக்கு அவங்களின்ற சிந்தனைகளுக்கு, செயற்பாடுகளுக்கு நெருக்கடிகளை நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் அது சிறைதான். புலிகளாலும் கடும் பிரச்சனை. வீட்டிலயும் சிக்கல்கள் நடந்திருக்கலாம். எனக்கு எந்தளவு உண்மை என்று தெரியாது. அவவுக்கு ஒரு காதல் இருந்தது. எங்களுடைய பிரண்ட் தான் தில்லைநாதன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படித்து ஆசிரியராக இருந்தவர். அவருக்கும் சிவரமணிக்கும் காதல் உறவு ஒன்று இருந்ததாகவும், வீட்டில் கொஞ்சம் நெருக்கடி கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனா பெரிய கொடுமையானது புலிகளின்ற நெருக்கடிகள்தான்.
தேசம்: விடுதலைப்புலிகளால அவருக்கு நேரடியாக தொந்தரவு இருந்ததா…
அசோக்: நேரடியாக தொந்தரவு இல்லை. உளவியல் சார்ந்த தொந்தரவு செல்விக்கும், சிவரமணிக்கும், நிறையபேருக்கு இருந்திருக்கு. மறைமுக வெருட்டல்கள், கண்காணிப்புக்கள் என்று. உடல் சார்ந்த நெருக்கடி அல்ல. ஒரு உளவியல் சார்ந்த நெருக்கடிகள், பல்வேறு வகைகளிலும் கொடுக்கப்பட்டிருக்கு. கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டாலே, அது பெரிய நெருக்கடிதானே
தேசம்: சிவரமணி தற்கொலை செய்யும் போது போது தன்னுடைய கவிதைகளையும் சேர்த்து எரித்திட்டா…
அசோக்: ஓம் முழுக் கவிதைகளையும் எரித்திட்டா. மிஞ்சின கவிதைகள் தானே சிவரமணி கவிதைத் தொகுப்பாக வந்தது. நிறைய கவிதைகள் எழுதி எல்லாத்தையும் எரித்துட்டாங்க. உணர்ச்சிவசப்பட்ட தற்கொலை இல்லைத் தானே. சிவரமணியின் தற்கொலை என்பது புலிகளின்ற ஒடுக்குமுறைகளுக்கு , சமூக கொடூரங்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கைதானே. இது உண்மையிலே தற்கொலை அல்ல. புலிகள் செய்த கொலைதான். அகநெருக்கடிகளையும், புற நெருக்கடிகளையும் கொடுத்து தற்கொலைக்கு தூண்டி தங்கட எண்ணத்தை நிறைவேற்றும் புலிகளின் ஒரு பாசிச உளவியல் செயற்பாடுதான் இது. சிவரமணியின்ற தற்கொலை, பாசிச மன நிலை கொண்ட புலிகள் பற்றி, எங்கட தமிழ் சமூகத்திற்கு சொன்ன ஒரு செய்தி என்றே நான் பார்க்கிறன்.
தேசம்: அதே மாதிரியான சம்பவம்தான் நான் நினைக்கிறேன், சாதி முரண்பாடு, பிரதேச முரண்பாடு காரணமாக கிளிநொச்சியில் இருவர் ஆணும் பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம். நான் நினைக்கிறேன் நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றது
அசோக்: தாங்கள் நம்பிய குடும்பமும், உறவுகளும், சமூ கமும் கைவிடும்போது இந்த கொடுமைகளுக்கு எதிரான எதிர்வினையை அவர்கள் அப்படித்தான் காட்ட முடியும்…
தேசம்: அப்படி பார்க்கின்றபோது இந்த விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பிற்பகுதியில், இந்த 40 வருட காலத்தில் சமூகத்தில் பெரியதொரு சிந்தனை மாற்றங்கள் நிகழ்ந்ததாக தெரியவில்லை. ஏனென்றால், அன்றைக்கு நடந்த அதே சம்பவங்கள் இன்றைக்கும் மீள நடக்கிற மாதிரி தான் உணர முடியுது.
அசோக்: தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் முற்போக்கு சக்திகளால், இடதுசாரிகளால் தலைமை ஏற்று வழிநடத்தப்பட்டிருந்தால் மாற்றங்கள் நடந்திருக்கும். அப்படியில்லையே. விடுதலை இயக்கங்களின் தலைமைகளை நீங்கள் எடுத்துப்பார்த்தால், எங்களுடைய அரசியல் கோட்பாடுகள், சிந்தனைகளின் கொள்ளளவு தெரியும் உங்களுக்கு. நீங்கள் ஒரு சர்வதேச விடுதலைப் போராட்ட வரலாற்றில இயக்க தலைமைகளை எடுத்துப்பார்த்தால் அவர்கள் குறைந்தபட்சமாவது கோட்பாட்டு ரீதியான கொள்கைகளின் வழியாக பேச்சுக்கள் எழுத்துக்கள் எல்லாம் வரும்.
எங்கட சமூகத்தில் விடுதலைப் போராட்ட தலைவர்கள் ஒருவராவது ஒரு அறிக்கை கூட சொந்தமாக எழுதற ஆட்களாக இருந்ததில்லை. உமா மகேஸ்வரன் கொஞ்சம் பரவாயில்ல. பிரபாகரன் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மற்றப்படி இரண்டாம் நிலை தலைவர்கள்தான் கோட்பாட்டு ரீதியாக சித்தாந்த ரீதியாக வளர்ந்தார்களேயொழிய, தலைமைகள் அதி தீவிரமான தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள்தான் அவர்களை தலைவர்களாக்கியது. சித்தாந்த ரீதியாக வளர்ந்தவங்க இல்லை இவங்க.
பிரபாகரனோ, உமா மகேஸ்வரனோ, ஸ்ரீ சபாரத்தினமோ வந்து கோட்பாட்டு ரீதியாக சித்தாந்த ரீதியாக தலைவர்கள் ஆக்கப்பட்டவர்கள், அநீதிக்கு எதிராக போராடியவர்கள் அல்ல. அவர்களை பார்த்தீர்களென்றால் தனிநபர் பயங்கரவாதத்துக்கு ஊடாகத்தான், ஹீரோசியத்துக்கு ஊடாகத்தான் தலைமைக்கு வாராங்கள். ஈரோஸ் பாலகுமார், பத்மநாபா கூட சித்தாந்த வளர்ச்சி கொண்ட தலைவர்கள் இல்லை. என்றாலும், பத்மநாபா ஓரளவு முற்போக்கு எண்ணங்கள் கொண்ட ஜனநாயகவாதியாக இருந்தார். மற்ற இயக்கங்களின் தலைமை, எத்தனை கொலை செய்தால் தலைவராகலாம், துப்பாக்கி மிக அழகாக சுடுறான் அதுதான் இப்பவும் இருக்குது. இப்ப தமிழ் சினிமாவில் கதாநாயகர்களின் பிம்பங்கள் எப்படி சித்தரிக்கப்படுது எங்களுக்கு . அதே மாதிரித்தான் எங்க தலைவர்மாருடைய விம்பங்களும் எங்களிட்ட கட்டமைக்கப்பட்டன.
தேசம்: என்றைக்கு யாழ்ப்பாணத்தில் இந்த வன்முறைக் கும்பல்கள் கூட இயக்கப் பாணியில்தான் அவர்களும் செயற்பட பார்க்கின்றன.
அசோக்: எங்கட விடுதலை இயக்கங்களுக்கும் மாபியா குழுக்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. விடுதலை அமைப்புக்கான கட்டமைப்பு என்பது, அரசியல் சித்தாந்த நெறிமுறைகளையும் செயற்பாடுகளையும் கொண்டது. ஜனநாயகப் பண்பும், சித்தாந்த ரீதியான கட்டமைப்பும் இல்லை என்றால், அதற்கு பேர் விடுதலை இயக்கம் அல்ல. அது மாபியா குருப்புத்தான். எங்கட இயக்கங்களுக்கும், மாபியா குழுக்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கல்ல.
தேசம்: இன்றைக்கு இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஆவா குழு, லண்டனில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைக் கும்பல்களோ பெரும்பாலும் அவர்கள் இந்த விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்களாகத்தான் தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள்.
அசோக்: அவங்கள் சில கோட்பாடுகளை வைத்திருப்பார்களாக இருந்தால், அவங்களும் விடுதலை இயக்கம் தான். ஆவா குரூப் தாங்களும் ஏதாவது கோரிக்கையை முன்வைத்து போராடுகிறோம் என்று கேட்டால் அவங்களும் அரசியல் இயக்கமாக போய்விடுவார்கள்.
நீங்கள் தமிழீழ விடுதலை இயக்கங்களின் தோற்றங்களைப் பார்த்தீர்களென்றால் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் கோட்பாட்டு சிந்தனையிலிருந்து அமைப்புகள் உருவாக்கப்படவில்லைத்தானே. ஆரம்பத்தில் விடுதலை இயக்கத்தில் யார் உள்வாங்கப்பட்டது? சண்டியர்களும், ரவுடிகளும் தானே. புலிகளின்ற ஆரம்ப தொடகக்கத்திலிருந்து இயக்க வரலாறுகளை பார்த்தால் இது தெரியும். புளொட்டில் உமா மகேஸ்வரனை சுற்றி இருந்த நபர்களை பார்த்தால் இது விளங்கும். டெலோவில இது மிகமிக மோசம்.
தேசம்: ஒவ்வொரு இயக்கத்திலும் அந்த ஊரில் உள்ள சண்டியர் இருந்திருப்பர்…
அசோக்: எதிரிகளை தாக்குவதற்கு சண்டியர்கள் தேவைப்பட்டார்கள். ஆரம்பத்தில் எல்லா இயக்கங்களின் ஆரம்பகால நபர்களாக இருந்தது சமூக விரோதிகள் ஆகவும் சண்டியர்களாகவும் தான் இருந்தார்கள். அதுல தப்பின ஒரு இயக்கம் ஈபிஆர்எல்எஃப் தானென்று நான் நினைக்கிறேன். ஈரோஸிலையும் அந்தத் தன்மை இருந்திருக்கு. ஏனென்றால் மற்ற எல்லா இயக்கங்களும் விடுதலைப் புலிகளில் இருந்து தானே உருவாகின்றது.
“கல்யாணம் கட்டின ஒரு பெண் பக்கத்து வீட்டு ஆணையும் அல்லது இன்னும் ஒரு ஆணையோ காதலிப்பது சாதாரணமாக நடக்குது. ஆனால் அது மறைக்கப்படலாம் அல்ல தெரியாமல் இருக்கும். இது வீட்டுக்கு வீடு வாசல்படி.” பாரதி சிவராஜா
இலங்கையின் இடதுசாரி அமைப்பான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி மற்றும் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்களால் பிரித்தானியாவில் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி என்ற இரு கட்சிகளையும் ஆண் – பெண் உறவு, காதல், திருமணம் என்ற விடயம் சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருந்தது தெரிந்ததே. இதன் காரணமாக புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி உறுப்பினர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இவ்வாறான நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த சிலர் தங்களை கட்சியில் இருந்து விலகி நிற்கின்றனர். லண்டனில் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் ஒருவர் நீண்டகாலம் காதலித்த பெண்ணுடன் உறவு முறிவு ஏற்பட்டு பின்னர் வேறொருவரை காதலித்து மணம் முடித்தது தொடர்பில் கையெழுத்துப்போராட்டம் ஒன்றும் முடுக்கிவிடப்பட்டு தங்களை முற்போக்காளர்கள் என கூறிக்கொள்ளும் 20 பேர் கையெழுத்திட்டு இருந்தனர். ஆயினும் தமிழ் சொலிடாரிட்டி கையெழுத்திட்டவர்கள் சமூக விரோத அரசியலை முன்னெடுத்தவர்கள் என்றும் கட்சியயை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வக்கற்றவர்கள் என்றும் சாடியிருந்தது.
கையெழுத்துப் போராட்டத்தில் கையெழுத்திட்ட பாராதி சிவராஜா, கையெழுத்திடுவதற்கு முன் ஆண் – பெண் உறவு, காதல், திருமணம் பற்றி மேற்கொண்ட உரையாடல் இது. “கல்யாணம் கட்டின ஒரு பெண் பக்கத்து வீட்டு ஆணையும் அல்லது இன்னும் ஒரு ஆணையோ காதலிப்பது சாதாரணமாக நடக்குது. ஆனால் அது மறைக்கப்படலாம் அல்ல தெரியாமல் இருக்கும். இது வீட்டுக்கு வீடு வாசல்படி.” கையெழுத்திட்ட ஏனைய 19 மார்க்சிய பெண்ணியலாளர்கள் இவ்வுரையாடலை எந்தப் பார்வையில் பார்ப்பார்கள் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.
‘காதலை திருமணமாகச் சுருக்கும் சமூகப் புரிதல் பற்றிய மார்க்சிய பெண்ணியப் பார்வை’ என்ற இந்த உரையாடல் காதலர் தினத்தை முன்னிட்டு 2018 பெப்ரவரி 10ம் திகதி அவுஸ்திரேலியாவில் இருந்து வலைத்தளமூடாக ஒலி பரப்பாகும் இன்பத் தமிழ் வானொலியின் கருத்துக்களம்’ நிகழ்ச்சிக்காக பதிவு செய்யப்பட்டது. பாரதி சிவராஜா வட்ஸ்அப் ஊடாக பலருக்கும் அனுப்பிய இப்பதிவு தேசம்நெற்றையும் அடைந்தது. இப்பதிவின் முக்கிய பகுதி சுருக்கித் தரப்பட்டுள்ளது.
இதன் எழுத்துவடிவம்:
பாரதி: காதல் என்பது ஒரு பீல் தான். காதல் ஒருக்கா தான் வரும் என்டதில எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. காதல் கட்டாயமா வரும். வரலாம். காதல் என்கிறது ஒரு தேடல் தான். அது மனிதர்களிடம் உணர்வு இருப்பது வரைக்கும் அது வந்துகொண்டு இருக்கும். 18 வயசில தான் வரும் 16 வயசில தான் வரும் 60 வயசில வராது என்கிறதெல்லாம் பச்சைப் பொய்யான விஷயம். எந்த வயசிலயும் காதல் வரலாம். எத்தனை தடவையும் வரலாம்.
வானொலிக் கலைஞர்: காதல் என்பதை திருமணம் என்ற வரையறைக்கு அப்பால் தான் தமிழர்கள் வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் இருக்கக்கூடிய காதல் என்பது எமது சமூகத்தால் எச்சரிக்கை உணர்வுடனேயே அங்கீகரிக்கப்படுகிறது என்பது என்னுடைய குற்றச்சாட்டு. அதை ஒருத்தரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. அதை திருமணம் என்கின்ற ஒரு மார்ஜினுக்குள் வைத்த பிறகு தான் உங்களுடைய காதல் அங்கீகரிக்கப்படுமே தவிர…
பாரதி: காதலைத் திருமணம் என்டுறத்தோடு கொண்டு போனாலே அது காதல் இல்லை என்பது தான் என்னுடைய வாதம். எல்லாரும் சொல்லுவாங்க காதல் கல்யாணத்துல முடிக்கிறது தான் வெற்றி என்டு. ஆனால் கலியாணத்தில் முடிந்தால் அது தோல்வி. நீங்க அங்க ஒரு புளொக் போட்டிடுவீங்க. நீ என்னும் ஒருத்தரை காதலிக்க ஏலாது என்டு.
வா.கலைஞர்: காதலை நீங்கள் திருமணத்துக்கு கொண்டு வந்து வைத்தால் காதல் முடிந்தது அது தோல்வி என்று நீங்கள் சொன்னீர்கள். ஏன்? நமது பண்பாடு என்ன சொல்லுகிறது, காதல் வந்து திருமணத்தில் முடிந்து, ஒன்றாக இணைந்து, ஒரு ஜென்மம் பூராகவும் வாழ்ந்து போவதுதான் காதல். அப்படி இல்லாட்டி அது நெறி தவறிய வாழ்க்கை என்றுதானே தமிழ் பண்பாடு சொல்கிறது?
பாரதி: தமிழ் பண்பாடு என்று சொல்லாதீர்கள். தமிழ் கலாச்சாரம். கலாச்சாரம் மாறும் பண்பாட்டில் எங்கயுமே அப்படி சொல்லவில்லை. ஒருத்தரோட வாழ்ந்து, ஒருத்தரோட சாகுறது தான் பண்பாடு என்று தமிழ் பண்பாட்டில் இல்லை. காதல் போய் கலியாணத்தில தான் முடியும் என்டா, நீங்க கலியாணம் முடிச்சிட்டு இன்னும் ஒருத்தரையும் லவ் பண்ணக்கூடிய ஒரு செட்டப் இருக்குமென்றால் அது பிரச்னை இல்லை. ஆனால் கலியாணம் என்டுறது அப்பிடியே முடிச்சுவிடுறீங்க. காதல் என்டுறது ஒரு பீலிங் தான், நீங்க அது முடியும் முடியாது என்டதெல்லாம் இல்லை. அது எவ்வளவு தூரம் உங்களோட ரவல் பண்ணுது என்டத தான் நீங்க பார்க்கனும்.
நீங்க ஒராளோட இருக்கிறீங்க. ஒராள் உங்களோட பாசமா இருக்கிறார். அதை லவ் என்டு பீல் பண்ணுறீங்க. ஒராளோட பழகுறீங்க அவங்க மேல ஈர்ப்பு வருது. அது தான் லவ்.. அது லவ் இல்லை. இது தான் லவ் என்டு யார் தீர்மானிக்கிறது?
எங்கட ஆட்களை எல்லாம் பாருங்க. நீங்க என்ன கள்ள வேலை செய்து காசு சம்பாதிச்சாலும் மனிசி ஒன்டும் சொல்ல மாட்டா. சந்தோஷமா இருப்பா. ஆனா மனுஷன் வேற ஒரு பிள்ளைய பார்த்தவுடன கள்ளக் காதல் என்டுவா. அப்ப இவ்வளவு காலம் உழைச்சது கள்ள காசு தானே? அது என்ன அந்த ரெண்டு மனநிலை எங்க இருந்து வந்தது?
இதில என்னும் முக்கியமான விசயத்தை நான் சொல்ல வேணும் என்னென்றால் மதங்களை நீங்க பார்த்தீங்க என்றால் ஆண்கள் பல காதல் செய்யலாம். பல திருமணம் செய்யலாம். ஆனா பெண்கள் ஒரு காதல் தான் செய்யனும். ஒரியினலா இருக்க வேணும். அப்படி போனாலும் உடன்கட்டை ஏறிடனும்; அல்லாட்டி வெள்ளைப் புடவையை கட்டிட்டு இருக்க வேணும்; பொட்டை அழிச்சிட்டு இருக்கனும்; கலர் அஸ்திரம் கட்டக்கூடாது ஏதோ எல்லாம் சொல்லிட்டு இருப்பாங்க. ஆனா முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்கும் கிருஷ்ணணுக்கு ஆயிரமாயிரம் அது எவ்வளவு என்டு தெரியா. நபி என்றவர் எத்தனையோ கல்யாணம் முடித்து இருப்பர். மதங்களுக்கு ஆண்கள் நாலு கல்யாணம் முடிக்கலாம்.
வா.கலைஞர்: அப்போ ஆணுடைய காதல் வேறு பெண்னுடைய காதல் வேறு அப்படியா
பாரதி: மனிதர்கள் என்பது இயற்கையான ஒரு படைப்பு. அதில் ஆண்பால் பெண்பால் இரண்டும் தான் இருக்கு. அதில் எப்படி இன்னொருத்தனுக்கு சட்டம். இன்னொருத்திக்கு ஒரு சட்டம்.
வா.கலைஞர்: இங்குதானே நீங்கள் சொல்கிற கலாச்சாரமும் பண்பாடும் என்பது உதைக்கிறது. ஏனென்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்பது விதிக்கப்பட்ட விதி? இங்க விதிக்கப்பட்ட நெறிமுறை?
பாரதி: அது நாங்கள் உருவாக்கிக் கொண்டது.
வா.கலைஞர்: உருவாக்கினது என்னவோ அதைத்தானே. அப்படி இருப்பவனை தானே நல்லவன்; நல்ல குடும்பம் என்று சொல்கிறார்கள்; பல்கலைக்கழகம் என்று சொல்கிறார்கள். நீங்க சொன்ன மாதிரி ஒரு உணர்வை இங்கே எப்படி பார்ப்பார்கள் என்றால், கொச்சைப்படுத்தி தான் பார்ப்பார்களேயொழிய, அது அவருடைய ஃபீலிங் என்று யாரும் பார்ப்பது கிடையாது.
பாரதி: சமூகத்தில் மாற்றி செய்யப்படுகிற டைம்ல சமூகத்தில் அது பிரச்சினையான விஷயமாகத்தான் இருக்கு. சமூகத்திலிருந்து நாங்கள் ஒன்றை மாறி செய்யும்போது பிரச்சினையாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையாகவே நீங்கள் பார்க்கும்போது அது தான் சரியாக இருக்கும். அதற்கு நாங்கள் சொல்கிறோம், அறிவு ரீதியாக நாங்கள் பார்க்காத எந்த ஒரு விஷயமும் பிழையாகத் தான் இருக்கும்.
வா.கலைஞர்: அப்படியானால் உங்களிடம் கேட்டால் தமிழ் பெண்களிடம் காதல் பற்றிய பார்வை என்பது வித்தியாசமாக மாறிவிட்டதா? அதாவது தமிழ் பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்ட காதலுக்கு அவர்கள் தங்களைத் தயார்படுத்திவிட்டார்கள் என்பதே உங்களுடைய வாதம் அப்படியா?
பாரதி: நான் வாதமே செய்யத் தேவையில்லை. இங்கே வேண்டாம். எங்கட நாட்டுக்கே போய் பாருங்கோ. எத்தனையோ வீடுகளில் கல்யாணம் கட்டின ஒரு பெண் பக்கத்து வீட்டு ஆணையும் அல்லது இன்னும் ஒரு ஆணையோ காதலிப்பது சாதாரணமாக நடக்குது. ஆனால் அது மறைக்கப்படலாம் அல்ல தெரியாமல் இருக்கும். இது வீட்டுக்கு வீடு வாசல்படி. அப்ப இது இயற்கையான விஷயம் இது.
ரொம்ப கலாச்சாரமான தலிபான் இருக்கிற இடங்களிலேயே பெண்கள் வெளியில் வர இயலாது. பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு அங்கே இப்படியான விஷயங்கள் நடக்கிறது. இதுதான் உண்மை எந்த மதம், எந்த கலாச்சாரம் ஒன்றும் செய்ய இயலாது. அவங்களுக்கு வெளிப்படையாக செய்வதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லையானால் அவர்கள் மறைமுகமாக செய்வார்கள். இதுதான் இயற்கையான விஷயம்.
இலங்கைத் தமிழ் இடதுசாரி கட்சிகள் ஈடாட்டம்ிய வகையில் இடதுசாரிப் பாரம்பரியத்தோடு செயற்படுகின்ற ஒரே கட்சியான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி மற்றும் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்களால் பிரித்தானியாவில் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி என்ற இரு கட்சிகளும் கொரோன காலத்து குழுவாத சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளன. தனிநபர் குழுவாத முரண்பாட்டால் கட்சியின் உறுப்பினர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டார். அதற்கு முன்னரும் பின்னரும் இக்குழுவாத போக்கு காரணமாக கட்சியில் இருந்து சிலர் வெளியேறியும் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பும் இக்குழுவாத போக்கிற்குள் இழுத்துவிடப்பட்டு உள்ளது.
இவ்விரு கட்சிகளுமே சராசரி மக்களைப் பொறுத்தவரை முகவரியற்ற கட்சிகளாக இருந்த போதும் நுண் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட அமைப்புகள். அமைப்பு வடிவத்தில் இயங்குகின்ற போராட்டங்களை முன்னெடுக்கின்ற அமைப்புகள். புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி இலங்கை தமிழர்கள் மத்தியில் பல போராட்டங்களை நடத்திய வரலாற்றைக் கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன் கிந்துசிட்டி மயானப் போராட்டம் முக்கியமானது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் ஒரு பலமான குரலாக இருந்து வருகின்றது. அதேபோல் பிரித்தானியாவில் தமிழ் சொலிடாரிட்டி அகதிகள் உரிமை, தொழிலாளர் உரிமை போன்றவற்றிற்காக பிரித்தானியாவில் உள்ள ஏனைய இடதுசாரி மற்றும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராடி வருகின்றது. இவ்வமைப்புகள் மீது பல விமர்சனங்கள் இருந்த போதும் அமைப்பு வடிவில் இயங்குகின்ற இடதுசாரி நிலைகொண்ட அமைப்புகள் இவையிரண்டுமே.
உங்களுக்கு தெரிந்த வலதுசாரிகளை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் அந்தப் பட்டியல் மிக மிக நீண்டு செல்லும். ஆனால் உங்களுக்கு தெரிந்த இடதுசாரிகளை அடையாளம் காட்டுங்கள் என்று கேட்டுப் பாருங்கள். ஓரிரு பெயர்களை முன் வைத்ததுமே ‘அவரை இடதுசாரி என்று யார் சொன்னது? என்ற கேள்வி வெவ்வேறு திசைகளில் இருந்து வரும். ‘தோழர்’ என்று பெயருக்கு முன் போட்டால் இடதுசாரியா? ‘மார்க்ஸ், லெனின், கார்ள் மார்க்ஸ்’ படத்தை முகநூல் வட்ஸ் அப் ப்ரோபைலில் போட்டால் இடதுசாரியா? மார்க்ஸ் படம் போட்ட தேநீர் கப்பில் ரீ குடித்தால் இடதுசாரியா? இப்படி ஆளுக்கு ஒரு அடையாளத்தோடு நான் கொம்னிஸ்ட், நான் சோசலிஸ்ட், நான் லெப்டிஸ்ட் என்ற தோரணையோடு பலர் உலாவருகின்றனர்.
இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே வாழ்கின்ற இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியிலும் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்டவர்கள் மிகச் சிறுபான்மையினராகவே உள்ளனர். வலது சாரிக் கருத்தியலுடன் ஒப்பிடுகையில் இடதுசாரிகள் முற்போக்கானவர்களாகவும் சக மனிதர்களை மதத்தவரை இனத்தவரை ஒடுக்கப்பட்ட சாதியினரை பெண்களை மதிப்பவர்களாக இருந்த போதிலும் பல்வேறு காரணங்களாலும் இக்கருத்தியல் பிரிவினரின் கருத்தியல் பிரதான அரசியல் சமூக நீரோட்டத்தில் இல்லை. அதற்கு தங்களை இடதுசாரிகளாக காட்டிக்கொள்ளும் பலரின் தனிமனித நேர்மையின்மையும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
இந்தப் பின்னணியிலேயே தனிப்பட்ட ஆண் – பெண் உறவை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய அரசியலையும் அவர்கள் சார்ந்த அரசியல் அமைப்புகளையும் மலினப்படுத்தும் போக்கு இக்கொரோனா காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு முதற் களப்பலியானவர் புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் நன்கு அறியப்பட்ட உறுப்பினர் மு மயூரன். இவ்வாண்டு மார்ச் 21 கட்சியின் அரசியற் குழு வருமாறு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மு மயூரன் பெண்களுடன் முறைகேடாக நடந்துகொண்டுள்ளார்; என்ற குற்றச்சாட்டுக்கள் கட்சிக்கு முன்வைக்கப்பட்டதாகவும் மு மயூரன் முன்வைத்த விளக்கங்கள் நம்பகத்தன்மையற்றவையாகவும் முன்னுக்குப் பின் முரணாணதாக இருப்பதாகவும்; கட்சி குற்றம்சாட்டி அவரை கட்சியின் வெகுசன அமைப்புகளிலும் வகித்த பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக இடை நிறுத்தி வைப்பதென அறிக்கை வெளியிட்டது.
ஆனால் இக்குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட பெண், மு மயூரனுக்கும் தனக்கும் இருந்த உறவை வஞ்சக எண்ணத்தோடு அரசியல் பழிவாங்கல்களுக்கு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி இருந்தார். அவர் மு மயூரன் மீது சுமத்தப்பட்ட பழியை களைவதற்காக தனது முகநூலில் குற்றம்சாட்டியவர்களை கடுமையாக விமர்சித்தும் வருகின்றார்.
கட்சிக்கு அல்லது கட்சியில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருக்கு நிதிப்பங்களிப்பினைச் செய்த மோகனதர்ஷினி என்பவர் மேற்கொண்ட தனிநபர் தாக்குதலே இதுவென கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன. மோகனதர்ஷினியிடம் இருந்த பெறப்பட்ட பணம் மீளளிக்கப்பட்ட போதும் அவர் கட்சியில் அதீத செல்வாக்கை செலுத்துவதாகவும் அவ்வட்டாரங்கள் தேசம்நெற் க்கு தெரிவிக்கின்றன. இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த ஒரே இடதுசாரி அமைப்பான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி யின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதன் தலைவராக சி கா செந்தில்வேல் உள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் பொதுவெளியில் கருத்துக்கள் எதையும் வெளியிடவில்லை. ஆனால் பலரும் அவருக்கு இந்நிலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இதே போன்றதொரு குற்றச்சாட்டு பிரித்தனியாவில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி கண்டுவரும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் மீதும் சுமத்தப்பட்டு உள்ளது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தரும் தமிழ் அரசியல், கலை, இலக்கிய எழுத்துக்கள் மூலமும் அறியப்பட்டவரான சேனன் உருவாக்கி இருந்தார். இன்று இவ்வமைப்பு கணிசமான உறுப்பினர்களைக் கொண்டிருப்பதுடன் புலம்பெயர் நாடுகளில் அமைப்பு வடிவில் உள்ள ஒரே தமிழ் இடதுசாரி அரசியல் ஸ்தாபனம் இதுவென்றால் அது மிகையல்ல.
தங்களை முற்போக்காளர்கள் பெண்ணிய போராளிகள் என முத்திரைகுத்திக் கொண்ட 20 பேர் கையெழுத்திட்ட முகநூல் போராட்டம் ஒன்று ஓகஸ்ட் பிற்பகுதியில் பெரும் பரபரப்புடன் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர் மோகனதர்ஷினி, தீப்பொறி அமைப்பினரான ராகுல் சந்திரா (ரகுமான் ஜான்) ஆகியோர் கையெழுத்திட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். குற்றம்சாட்டப்பட்டவருடனும் குற்றம்சாட்டப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி அமைப்புடனும் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர்களும் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்திருந்தவர்களுமே இப்போராட்டத்தில் குதித்துள்ளனர். முற்றிலும் தனிப்பட்ட வஞ்சம் தீர்க்கின்ற செயலாகவே இது பார்க்கப்படுகின்றது.
தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிக உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கும் சூழலில் தங்கள் சொந்த நலன்களை முன்நிறுத்தி அப்பாவிப் பெண்களின் பெயர்களை தெருவுக்கு இழுத்துவிடுகின்ற முயற்சியாக மட்டுமே இதனைப் பார்க்க முடிகின்றது. ஏற்கனவே தமிழ் பெண்கள் பொது வெளிக்கு வரமுடியாத அளவுக்கு அவர்கள் அச்சமான சூழலில் உள்ள போது காதல் மற்றும் உறவுப் பிரச்சினைகளை பொதுவெளியில் கொண்டுவந்து விவாதித்து பெண்களை கேவலப்படுத்துவதும் இடம்பெற்று வருகின்றது. தங்களுடைய கருத்துக்கு மாறான பதிவுகளுக்கு ‘லைக்’ போட்டவர்களை அணுகி அவர்களை அச்சுறுத்திய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் ‘தம்பி எனக்கு வயசாச்சு இவையோட எனக்கு மல்லுக்கட்ட முடியாது. அது தான் ‘லைக்’கை எடுத்துப்போட்டன்’ என தேசம்நெற் க்கு தெரிவித்தார். ‘தம்பி நாளைக்கு உங்களைப் பற்றியும் ஏதும் எழுதிப் போடுவினம், கவனம்’ என்று என்னை எச்சரிக்கையும் செய்தார். முகநூல் ரவுடிகள் ஜாக்கிரதை.
புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி போல் குழுவாதத்திற்குள் சிக்காத தமிழ் சொரிடாரிட்டி அமைப்பு மேற்படி குற்றச்சாட்டை முற்றிலும் பாறுபட்ட கோணத்தில் அணுகியுள்ளது. தமிழ் சொலிடாரிட்டியின் முக்கியஸ்தர் ராஜரஞ்சன் புஸ்பராகவன் இவ்விடயம் தொடர்பில் வெளியிட்ட பதிவில்: “அரசியல் ரீதியாக அமைப்பை எதிர்கொள்ள வக்கற்றவர்கள் இத்தகைய சிறுமைத்தனமான செயல்களில் – அவதூறுகளில் ஈடுபடுகிறார்கள். இதில் சம்மந்தப்பட்டவர்கள் பலரது அரசியற் போதாமை பல முன்பே விமர்சிக்கப் பட்டிருக்கிறது. இதில் பலர் சமூக விரோத அரசியலை நீண்ட காலம் செய்து வருபவர்கள் என்பது தெரிந்த விசயமே” எனத் தெரிவித்துள்ளார். மேலும் “அவதூறுகளுக்கு நாம் அடிபணியப் போவதில்லை“ என்றும் அறிவித்துள்ளனர்.
இவ்வாறான தனிமனித உறவு சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் இது ஆரம்பமும் அல்ல முடிவும் அல்ல என்பது தெளிவாகின்றது. தமிழ் இடதுசாரி அரசியல் ஒரு தெளிவுக்கு வருவதற்கு முன் இன்னும் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என்பது திண்ணம். இவற்றை கடந்துசெல்லும் வல்லமை ஏற்கனவே நலிந்துள்ள இடதுசாரி ஆர்வலர்களிடம் இருக்கின்றதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
பாரிஸில் ஓகஸ்ட் 11 இல் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு உறவுக்கார ஆண் தான் இக்கொலையைப் புரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அமைச்சர் ரிச்சட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய பெண் குழந்தை ஷாலினி ஜூட் குமார் யூலை 3இல் தீக்குழித்து தற்கொலைக்கு முயற்சித்து யூலை 15இல் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்தார். கனடாவில் சுனில் சுமித்திரா வீட்டில் கணவனின் தொல்லை தாங்க முடியாமல் ஏப்ரல் பிற்பகுதியில் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பில் மே 1, சுமித்திராவின் சினேகிதி தனோ பரதன் விரிவான பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். மார்ச் 03 வட்டக்கட்சியில் தாய் ஒருத்தி மூன்று குழந்தைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றினுள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். தனது கணவர் குடித்துவிட்டு செய்கின்ற கொடுமைகள் தாங்க முடியாமையினாலேயே அவர் இந்த விபரீத முடிவுக்கு வந்தார். இச்சம்பவத்தில் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். இவை கடந்த சில மாதங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள். அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளிய சம்பவங்கள்.
ஆறு ஆண்டுகளுக்கு முன் 2015 ஓகஸ்ட் 09 இல் சஜிந்திகாவைக் காதலித்து அவரைத் திருமணம் செய்வதாகவும் கூறி ஏமாற்றி அவரைத் தாயுமாக்கி சஜிந்திகாவையும் ஆறு மாதக் குழந்தையையும் அடித்துக்கொலை செய்து எரித்த சம்பவம் இவ்வாண்டு ஓகஸ்ட் 07 இல் அம்பலமாகியது. குற்றவாளியான மனோராஜ் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டார்.
இவை நாளாந்தம் உலகெங்கும் வாழும் தமிழ் பெண்களுக்கு நிகழும் அநீதிகளில் ஒரு சில மட்டுமே. ஆனால் இந்த அநீதிகளுக்கு எதிராக தமிழ் புலம்பெயர் சூழலில் வாழும் பெண்ணிய முற்போக்கு போராளிகள் குரல்கொடுத்தது என் காதுகளுக்கு எட்டவில்லை. மேற்படி செய்திகள் தேசம்நெற் மற்றும் எனது முகநூலிகளில் பதிவாகி உள்ளது.
லண்டனில் கடந்த 30 ஆண்டுகளாக வாழும் நான் குடும்பவன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சவுத்தோல் சிஸ்ரர்ஸ்’, ‘புரோக்கின் அரோ’ போன்ற அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பான இருப்பிடங்கள் கிடைப்பதற்கு வழிசெய்துள்ளேன். தொடர்ச்சியாக குடும்ப வன்முறை பற்றிய செய்திகளுக்கு எனது ஊடகங்களில் முன்னுரிமை அளித்து பிரசுரித்துள்ளேன்.
பெண்ணியம் பேசும் முற்போக்கு கோஸ்டியொன்று பெண்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்காக தற்போது முகநூலில் நியாயத்திற்காகப் போராடுவதாக ஒரு அறிக்கைவிட்டுள்ளது. பல்வேறுவ கையிலும் தினம் தினம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்களுக்காக குரல் கொடுப்பவர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்களே. அதே சமயம் பெண்ணிய போர்வை போர்த்திக்கொண்டு பிலிம் காட்டுபவர்களும் தற்போது முகநூலில் பெருகி உள்ளனர். இவர்கள் பெண்கள் மீது நடத்தப்படுகின்ற மோசமான மேற்குறிப்பிட்ட வன்முறைகளை ஓரம்கட்டிவிட்டு, தங்களுடைய சொந்த நலன்களை அடைவதற்கு பெண்ணிய போர்வைக்குள் ஒழிந்துகொள்கின்றனர். இவர்களின் போர்வைகளை களைந்து அவர்களை அடையாளப்படுத்துவது உண்மையான பெண் ஒடுக்குமறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு செயற்பாடுகளுக்கு அவசியமானது. இதன் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்களுக்காகக் குரல்கொடுக்கும் பெண்களும் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைக்கவும் போராடவும் முடியும்.
ஆனால் இந்த முற்போக்கு பெண்ணிய போராளிகள் தற்போது கையில் எடுத்திருக்கும் விடயம் மிக அபத்தமானது. தங்களுடைய சொந்த அரசியல் நோக்கங்களுக்காக இவர்களுடன் சம்பந்தப்படாத இரு பெண்களைக் கூட அவர்கள் பந்தாட முற்பட்டுள்ளமை அவர்களது முகத்திரையை அவர்களையே அம்பலப்படுத்த வைத்துள்ளது. நான் இந்தப் பதிவை மிகவும் கனத்த உணர்வோடு எழுதுகின்றேன். ‘முற்போக்கு முகமூடிகளுடன் பெண்கள் மீது செய்யப்படும் சுரண்டல்களுக்கு எதிராக அணி திரள்வோம்’ என்ற இந்த அறிக்கையுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட முக்கியமானவர்களை நான் நன்கு அறிவேன். என்னைப் பொறுத்தவரை உண்மைக்கு மட்டுமே முதலிடம். ஏனையவை எல்லாம் இரண்டாம் பட்சம். அது நட்பாக, உறவாக, தோழமையாக இருந்தாலும் இதுவே என் நிலைப்பாடு. கடந்த காலங்களிலும் இதையே செய்துள்ளேன்.
Sri Lanka Democracy Foorum SLDF – இலங்கை ஜனநாயக முன்னணி என்ற பெயரில் செயற்பட்ட சின்னத்துரை ராஜேஸ்குமார் – ராகவன் ரிபிசி வானொலி உடைப்பில் சம்பந்தப்பட்ட விடயத்தை அம்பலப்படுத்தியதன் மூலம் அவருக்கும் எனக்கும் இருந்த நட்பு முடிவுக்கு வந்தது. ‘ராகவன் அண்ணை’ என்றே நான் அவரை எப்போதும் அழைத்திருக்கிறேன். ஒரு ஊடகவியலாளனாக மௌனம் காப்பது மிக ஆபத்தானது. சட்ட வல்லுனரான அவர் சட்ட நடவடிக்கையில் இறங்குவார் என்றே எதிர்பார்த்திருந்தேன். மாறாக அவர் கையெழுத்து வேட்டையில் இறங்கி தேசம்நெற்க்கு மூடு விழாச் செய்ய முற்பட்டதெல்லாம் வரலாறு. நட்புக்காக, குடும்ப உறவுக்காக, சட்ட உதவிகளுக்கு நம்பி இருந்ததால் என்று பல்வேறு காரணங்களுக்காக ‘முற்போக்கு வாதிகள்’ என்று சொல்லிக்கொண்டவர்கள் சிலர் கையெழுத்திட்டனர். இன்னும் சிலர் உள்ளடக்கம் என்னவென்று தெரியாமலேயே பெயரைக் கொடுத்தனர். இப்படி இந்தக் கையெழுத்து வேட்டையில் பெயரைக் கொடுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருந்தது.
இப்போது வந்துள்ள சுரண்டல்களுக்கு எதிராக அணிதிரண்ட கோஸ்டியலுக்கும் இப்படிக் காரணங்கள் இருக்கும். சிலர் தம்பதி சமேதர்களாகவும் பேரைக் கொடுத்து இருக்கிறார்கள். கட்டியாச்சு உதோட இத்தினை வருசமாய் குப்பை கொட்டுறம். இனி என்ன ஒரு கையெழுத்தையும் போடுவம் என்று பேரைக் கொடுத்தவையும் இருப்பினம். அதனால் உமா ஷனிக்கா வின் முகநூல் போராட்டத்தின் பின்னணி பற்றி ஒரு பதிவு அவசியமாகின்றது.
அதற்கு முன் இப்பதிவு உண்மையில் ‘முற்போக்கு முகமூடிகளுடன் பெண்கள் மீது செய்யப்படும் சுரண்டல்களுக்கு எதிரான…’ பதிவு அல்ல என்பதை நீங்கள் மேலுள்ள குறிப்பின் மூலமாக அறிந்திருப்பீர்கள். சிலவேளை அவர்கள் தங்கள் செயற்பாடுகளை தாங்களே சுயவிமர்சனம் செய்யும் வகையில் தலைப்பிட்டு இருந்தால் அத்தலைப்பு மிகச் சரியானது.
இந்த அறிக்கை தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் யூலை 17இல் திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையே அல்ல. இந்த அறிக்கையின் பின்னுள்ள உண்மை நோக்கத்திற்கும் அவ்வுறுப்பினரின்ரின் முன்னாள் காதலிக்கும் இந்நாள் மனைவிக்கும் சம்பந்தம் கிடையாது. அவ்வுறுப்பினரும் அவருடன் சம்பந்தப்பட்ட உறவும் ஒரு weakest link என்பதால் அவர்களுடைய strategyக்கு அது வாய்ப்பாக அமைந்தது அவ்வளவுதான். தன்னையும் தாங்கள் சார்ந்தவர்களது பெயர்களையும் அடிபடவிடாமல் பாதுகாத்துக்கொண்டு எவ்வித சம்பந்தமும் இல்லாத தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினரையும் அவர் தொடர்புபட்ட உறவுகளையும் வைத்து இப்பந்தாடல் இடம்பெற்றிருக்கின்றது.
தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் நீண்டகாலமாக ஒரு பெண்ணை காதலித்தார். இது உலகறிந்த உண்மை. அந்த உறவைத் தொடர முடியவில்லை. அதனால் அவ்வுறவு முறிந்தது. அதுவும் உலகறிந்த உண்மை. அதற்குப் பின் தனக்கு பிடித்த ஒருவரைச் சந்தித்தார். இரு மனம் இணைந்தது. யூலை 17இல் மணவாழ்க்கையில் அவர்கள் இணைந்தனர். இதுவும் உலகறிந்த உண்மை. அதற்கு மேல் 20 பெண்ணிய போராளிகள் கையெழுத்திட்ட அறிகையில் உள்ள சோடிப்புகள் விவாகரத்து வழக்குகளில் இரு தரப்பு சட்டத்தரணிகளும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை உசுப்பிவிட்டு பணம் கறக்கின்ற வேலை. இந்த விவாகரத்துச் சட்டத்தரணிகள் (பெரும்பாலானவர்கள்) போன்ற கேடிகளை வேறெந்த தொழில்துறையிலும் காண முடியாது. அதே போல் தான் இந்த அறிக்கையின் பிதாமகர்கள்.
இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு இருந்தனர். இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் தங்களைச் சுற்றி நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி அறிந்திருந்தனர். இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் பெண்களுக்கு எதிராக வன்முறை செய்தவர்களுடன் நெருங்கிய அரசியல் உறவையும் கொண்டிருந்தனர்.
இலங்கையில் இருந்து கையெழுத்திட்ட மோகனதர்ஷனியின் கட்சியுடன் சம்பந்தப்பட்ட ஒருவரின் மகன் திருமணம் செய்த தனது மனைவியை மிகக் கொடூரமான முறையில், தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்தவர். அப்பெண்ணின் சொத்துக்களை எல்லாம் சுரண்டிக் கொண்டவர். தற்போது பாதிக்கப்பட்ட பெண் விவாகரத்து பெற்றுச் செல்ல அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்கின்றான். இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.
இவ்வாண்டு ஏப்ரல் சுமித்திரா சுனில் கணவனின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டார். தீப்பொறி குழவினருக்கு – ரகுமான் ஜான் உட்பட இந்த விடயம் தெரியாதா? சுனில், தீப்பொறிக்கு குழுவின் உறுப்பினர்களுக்கு மிக வேண்டப்பட்டவர். இன்றும் தொடர்பில் உள்ளனர். இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.
தீப்பொறிக் குழவினர் சம்பந்தப்பட்ட, கூட்டுப் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு பற்றி சம்பந்தப்பட்டவர்கள் ஏன் மௌனமாக உள்ளனர். அவ்வாறானதொரு சம்பவமே இடம்பெறவில்லை என்று வாதிட்டார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தான் சம்பந்தப்படவில்லை என்று ஒருவர் எழுதி வாங்கியுள்ளார். ‘Men Can Stop Rape’ என்று முகநூல் முகப்பில் பதிவிடும் உமா செனிக்கா இந்த விடயத்திற்கும் ஒரு கையெழுத்துப் போராட்டம் நடத்தவில்லை. இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.
இதற்கு மட்டுமா மௌனமாக இருந்தனர். 13 வயது மலையகச் சிறுமியை பல தடவை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய பொங்கு தமிழ் கணேசலிங்கம் இன்றும் வவுனியா வளாகத்தில் விரிவுரையாளராக உள்ளார். இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர். மேலதிக தகவல்கள் தேவைப்படின் இராஜேஸ் பாலா வை கேளுங்கள். சிலவேளை அவர் உங்கள் ‘முற்போக்கு’ வரைவிலக்கணத்தினுள் வரமாட்டார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வரும் விரிவுரையாளர்கள் இளங்குமரன், விசாகரூபன் பற்றி இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர். இது தொடர்பாக மேலதிக விபரங்கள் எனது ‘யாழ் பல்கலைக்காகழகம் ஒரு பார்வை’ என்ற நூலில் உள்ளது. இது பற்றி மேலதிக விபரங்கள் தேவையானால் அல்லது தமிழ் சமூகத்தில் உள்ள ‘womanizers’ பற்றி மேலதிக விபரங்கள் தேவையானள் அவுஸ்திரேலியா மற்றும் சர்வதேச புலனாய்வுப் புயல் அருண் அம்பலவாணரிடம் கேளுங்கள் முழுவிபரமும் finger tipsஇல் வைத்திருப்பார். மேலும் நீங்கள் moral policing செய்வதாக இருந்தால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு பற்றி அருண் அம்பலவாணரிடம் கேளுங்கள். இதில் கையெழுத்திட்டவர்களுடைய விபரங்களும் கூட அவரிடம் இருக்க வாய்ப்புள்ளது.
மட்டக்களப்பு ஜெயில் உடைக்கும் போது கூட தம்பி பிரபாகரனின் ஆட்கள் வந்தால் தான் வெளியில வருவன் என்று அடம்பிடித்த நிர்மலா ராஜசிங்கம், சொலிடாரிட்டி உறுப்பினரை ஒரு பிடி பிடித்திருக்கின்றா. சொலிடாரிட்டி உறுப்பினர் அயோக்கியனாம். நிர்மலா ராஜசிங்கத்தின் அரசியல் அயோக்கியத்தனங்களை ‘பூரணி பெண்கள் அமைப்பு பற்றிய அவணப்படுத்தலில் இருந்து …’ இன்னொரு சந்தர்ப்பத்தில் பட்டியலிடுவோம்.
இதைவிடவும் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்த கருணா, பிள்ளையான் குழுவினர் பல்வேறு பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு இருந்தமை சர்வதேச உரிமை நிறுவனங்களால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.
இப்படியெல்லாம் இருக்கும் போது எவ்வித பாலியல் சுரண்டலும் அற்ற தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினரின் உறவு முறிவு மற்றும் புதிய உறவு விடயத்தில் இந்த முற்போக்கு பெண்ணிய வாதிகள் இவ்வளவு முக்க என்ன காரணம்? “பத்து பிள்ளைகள் பெற்றவளுக்கு ஒற்றைப் பிள்ளை பெற்றவள் முக்கிக்காட்டிய கதை போல்” என்பர். இப்பழமொழி ஆணாதிக்கப் பழமொழியா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இவர்கள் தாங்களும் பெண்ணிய வாதிகள் என்று காட்ட முக்குவது நகைச்சுவையாகவே உள்ளது.
இந்த அறிக்கையின் பின்னணி:
என் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் போராட்டங்களின் பின்னரே இந்தப் பின்னியைப் பதிவு செய்கின்றேன். இதில் மீண்டும் உண்மைக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்ற முடிவுடனேயே இப்பதிவு. இப்பதிவைத் தொடர்ந்து என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சேறடிப்புகள் இடம்பெறும் என்பதை மிகத் தெளிவாக அறிவேன். இது எதுவும் எனக்கு புதிதும் அல்ல. என் எழுத்துக்களால் அம்பலப்படுத்தப்பட்ட ஈழபதீஸ்வரர் ஆலய தர்மகர்த்தா ஆர் ஜெயதேவன், எஸ்எல்டிஎவ் சட்ட வல்லுனர் ராகவன், இந்திய உளவுநிறுவன முகவர் வெற்றிச்செல்வன், ரில்கோ புரப்பட்டி சேர்விஸ் உரிமையாளர் திலகராஜா, தீபம் தொலைக்காட்சி உரிமையாளர் பத்மநாதன் என இந்தப் பட்டியல் மிக நீளமானது. எனக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கும் குறைவில்லை. த ஜெயபாலன் ஒரு பொய்யன், முட்டாள், பொம்பிளைப் பொறுக்கி, துரோகி, கைக்கூலி, அரசாங்கத்தின் ஏஜென்ட், காட்டிக் கொடுத்தவன், ஏமாற்றுக் காரன், ஆணாதிக்கவாதி, பூஸ்சுவா என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் பொலியப்படும். ஆனால் சேற்றுக்குள் இறங்காமல் நாற்றுநட முடியுமா? ஒரு ஊடகவியலாளனாக களைகளைப் பிடுங்கி நாற்று நட வேண்டியது என்னுடைய பொறுப்பு.
பாவம் அந்த தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர். அவருடைய முன்னாள் காதலி. இவர்களைவிடவும் பாவம் தற்போது அவரை மணந்து கொண்டவர். லேட்டஸ்ட் முற்போக்கு மொழியில் சொல்வதானால் ‘இணையர்’. நாங்கள் செயலில் தெளிவில்லாவிட்டாலும் மொழியில் தெளிவாய் இருப்பம் இல்ல.
பாடசாலைகளில் bullyingஇல் பாதிக்கப்படுவது strong ஆனவர்கள் அல்ல. Weak ஆனவர்கள் தானே. இந்த தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் இந்த ‘முற்போக்கு’ உலகிற்கு புதியவர். ஒரு புலி ஆதரவாளராக இருந்தவர். அவருடைய முறிந்த உறவு இலங்கையில். புதிய உறவும் weakest link. இவர்களை முற்போக்கு பெண்ணிய போராளிகள் தங்கள் strategical taget ஆக்கியுள்ளனர். இதற்கு அவ்வுறுப்பினரின் இணையின் பெயரைக் குறிப்பிட்டு ‘இப்ப இவரை யார் வைத்திருக்கிறார்கள்?’ என்று fake ID இல் வந்து comment அடிக்கிறார் ஒருவர். இதையெல்லாம் தெரிந்துகொண்டு தான் இந்த முற்போக்குப் புயல்கள் இரு அப்பாவிப் பெண்களின் தலையை பந்தாடுகின்றனர்.
மீண்டும் விடயத்திற்கு வருவோம். இதில் கையெழுத்திட்டுள்ள ராகுல் சந்திரா வேறு யாருமல்ல. ரகுமான் ஜான். இந்த அறிக்கைக்கும் பெண்கள் மீதான சுரண்டலுக்கும் மிக நெருக்கமான சம்பந்தம் உள்ளது. சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாவிப் பெண்களின் தலைகள் உருட்டப்படுகிறது. இதனை வெறும் தனிநபர் பிரச்சினையாகவும் பார்த்துவிட முடியாது. ஏனெனில் சம்மந்தப்பட்டவர்கள் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் இயங்கு சக்தியாகவும் இருப்பதால் அறிக்கையின் குற்றச்சாட்டு தமிழ் சொலிடாரிட்டிக்கு எதிராகவும் வைக்கப்பட்டு இருப்பதால் இதனை விரிந்த தளத்தில் நோக்க வேண்டியுள்ளது.
அண்மைக்காலம் வரை ரகுமான் ஜானில் எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. அவர் என்னுடைய நண்பனாகவும் ஏதோ நான் இன்று எழுதுகின்ற இந்த கொஞ்ச அரசியல் விளக்கம் கூட அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டது தான். எனக்கு அரசியல் பூஜ்ஜியம் என்று நீங்கள் முணுமுணுப்பதில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு. ஆனால் உண்மையை மறைப்பதில் எனக்கு துளியும் உடன்பாடு கிடையாது. ரகுமான் ஜான் திரைமறைவில் இருந்து இதனைச் செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இன்னொருவர் மீது குற்றச்சாட்டை பொது வெளியில் வைக்கின்ற போது அக்குற்றச்சாட்டு உண்மையானால் அதனை உங்களுடைய சொந்த அடையாளங்களுடன் வைக்க வேண்டும். இல்லையேல் ‘கம்’ என்று இருக்க வேண்டும்.
இப்பொழுது நீங்கள் பந்தாடுகின்ற இப்பெண்கள், இன்றோ இன்னுமொரு நாளோ மனநிலை பாதிக்கப்பட்டு அவர்களுக்கு ஏதும் நடந்தால் நீங்கள் பொறுப்புடையவர்கள். தீப்பொறி உறுப்பினரொருவரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதாகச் சொல்லப்பட்ட பெண், பல ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிநாடு வந்து திருமணமாகி குழந்தைகளும் பிறந்த பின்னரே மனப்பிறள்வு ஏற்பட்டு மரணமானார். மனநலப் பாதிப்பு என்பது கொரோனா போல் தொற்று ஏற்பட்டு பத்து நாட்களிலோ இரு வாரங்களிலே வந்து ஆட்டிப்படைப்பதில்லை. அது வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களின் விளைவாக எப்போதும் வரலாம். எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உடைந்துபோகும் மனநிலையில் இருக்கும் இரு vulnerable பெண்கள் அவர்களை அறியாமலேயே ஆட்டத்திற்குள் திட்டமிட்டு இழுத்துவிடப்பட்டு உள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டால் அந்தப் பழியயையும் பாவம் அவ்வுறுப்பினரின் தலையில் கட்டலாம் என்பது உங்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.
ஊமா செனிகாவின் முகநூலில் நிரோஜன் ஞானசீலன் சுட்டிக்காட்டியது போல் இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றம்சாட்டியவர்களுக்கும் இடையே நீண்ட கால பகையும் உறவு இருந்து வந்தது என்பது உண்மையே. குற்றச்சாட்டப்பட்டவர் பல்வேறு அமைப்புகளில் சம்பந்தப்பட்டவராக இருந்தாலும் தமிழ் சொலிடாரிட்டியே தாக்குதல் இலக்காக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் குற்றத்தை முன்வைத்தவர்களுக்கு அவ்வமைப்பு சார்ந்தவர்களுடன் இருந்த தனிப்பட்ட பகைமையே. இதற்கும் பெண்ணியத்திற்கும் முடிச்சுப் போட்டது முளங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போட்டதைப் போன்றது.
தமிழ் சொலிடாரிட்டி அரசியல் பற்றி நான் அதிகம் அக்கறைகொள்வதில்லை. ஏதோ நாலு நல்லது செய்கிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. எனக்கு அரசியலே இல்லை என்பது அவர்களுடைய கணிப்பு. நான் தத்துவஞானி கோக்கிரட்டீஸ் போல ‘ எனக்கு ஒன்றும் தெரியாது என்பது எனக்கு நன்கு தெரியும்’.
இதற்குள் கொரோனா வந்து லொக்டவுன் எல்லோரையும் வீட்டிற்குள் முடக்கிவிட்டது உங்களுக்கே தெரியும். மன உளைச்சல் கூடி பலரும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டனர். அதற்குள் அவ்வுறுப்பினர் பொது அழைப்பு ஒன்றை விடுத்துவிட்டு தனது திருமணத்தை செய்துவிட்டார். இவர் ஐயரைக் கூப்பிடாவிட்டாலும் இது கனன்றுகொண்டு இருந்த ஓமத்தில் ஐயர் நெய்யூற்றியது போல் ஆக்கிவிட்டது. நாள் நட்சத்திரம் பாராமல் ஐயர் இல்லாமல் செய்த திருமணம் எல்லோ அது தான் ஏழரை ஆட்டுது. பாவம் அவர்.
முற்போக்கு ஜீவன்களே உங்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் யாராவது எதையாவது நீட்டினால் வாசித்து தீர விசாரித்து உங்கள் பெயரைக் கொடுங்கள். தேவையில்லாமல் உங்கள் பெயரைக்கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் இணையர்கள் பெயரைக் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக நீங்களும் உடன்கட்டை ஏறாதீர்கள்.
எவ்வறிக்கை யார் யாரிடம் இருந்து வரினும்
அவ்வறிக்கையின் மெய்ப்பொருள் கண்டு கையெழுத்திடுக.