::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

பாக். விஞ்ஞானி: வீட்டுக் காவலில் இருந்து விடுவிப்பு

world-news.jpgபாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர்கான் நாட்டின் அணுசக்தி தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு ரகசியமாக விற்றதால் 2004-ல் கைது செய்யப்பட்டார்.

தனது குற்றத்தைக் கான், ஒப்புக்கொண்டதால் அப்போதைய அதிபர் முஷாரப், கானுக்கு மன்னிப்பு வழங்கினார். எனினும், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டிருந்தார்.  அவர் நேற்று வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவர் இனிமேல் நாட்டின் எந்த பகுதிக்கும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாகச் செல்லலாம் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக, கானின் வழக்கறிஞர் இக்பால் தெரிவித்தார். ஆனால், பாகிஸ்தான் அரசோ, கான் நினைத்தபடி சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாது. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அவரது பாதுகாப்பு நலன் கருதிதான் இந்த நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது.

இ.கம்யூ செயலாளர் தா.பாண்டியன் கார் எரிப்பு

pandian.jpgஇலங்கைத் தமிழர் பிரச்சினை போராட்டக் களத்தில் முன்னணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் காரை சிலர் நேற்று இரவு தீவைத்து எரித்துள்ளனர்.

சென்னை அண்ணா நகரில் தா.பாண்டியனின் வீடு உள்ளது. நேற்று இரவு வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தா.பாண்டியனின் காரை, சிலர் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் அவரது கார் பெருமளவில் சேதமடைந்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் போராட்டக் களத்தில் முன்னணியில் இருந்து வரும் தலைவர்களில் ஒருவர் தா.பாண்டியன். ஆரம்பத்திலிருந்தே இலங்கை விவகாரத்தில் மத்திய அரசையும், காங்கிரஸையும் கடுமையாக சாடி வருகிறார்.

மேலும், இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச கோர்ட்டில் இனப்படுகொலை வழக்கு தொடரப்படும் எனவும் நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் பாண்டியன் என்பது நினைவிருக்கலாம்.சம்பவம் நடந்த போது பாண்டியன் வீட்டில் இல்லை.

காதலர் தினத்தை கொண்டாடும் காதலருக்கு கட்டாய திருமணம்

muthalik.jpgபெப்ரவரி 14ஆம் திகதி உலக காதலர் தினமாகும். இந்தியாவில் இந்த காதலர் தினத்தை கொண்டாடும் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்போம் என்று ராம்சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

மங்களூர் ஓட்டலில் மது குடித்து, நடனமாடிய இளம்பெண்கள், இளைஞர்கள் மீது ராம்சேனா அமைப்பினர் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முதாலிக் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த பிரச்னையால் ராம்சேனா பிரபலமாகி விட்டது.

இந்த நிலையில், பெங்களூரில் முதாலிக் நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் விபரம் வருமாறு:

காதலர் தின கொண்டாட்டம் மேல்நாட்டு கலாசாரம். அதை இந்தியாவில் திணிக்க முயற்சிக்கிறார்கள். அது நமது பாரம்பரியத்தை அழிக்கும் வகையில் உள்ளது. எனவே, காதலர் தின கொண்டாட்டத்துக்கு அரசு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக முதல்வர், ஆளுநரிடம் மனு அளிக்கப்படும். இந்தியாவில் மட்டுமே குடும்ப அமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. அன்பையும், காதலையும் பகிர்ந்து கொள்வதற்கு அது நல்ல அடித்தளத்தை கொடுத்துள்ளது. அதனால், பொது இடத்தில் காதலை பரிமாறிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.

எனவே, காதலர் தினமான வரும் 14ம் தேதி ராம்சேனா அமைப்பினர் ரகசிய கேமராவுடன் நகரம் முழுவதும் வலம் வருவார்கள். அப்போது காதல் தினத்தை கொண்டாடும் காதல் ஜோடிகள் கிடைத்தால், அவர்களை அருகில் உள்ள பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைப்போம். இவ்வாறு முதாலிக் கூறினார்.

ஈரான் தனது முதல் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவியது

_grab_.jpgஈரானால் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது.  இச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூட் அகமதி நிஜாட் தொலைக்காட்சியில் அறிவித்தார்.  தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஈரான் ஏற்கெனவே செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது செயற்கைக்கோளை செலுத்தும் திறனைப் பெற்றுவிட்டதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சித்து வருகிறது. எனவே ஈரானில் உள்ள அணு உலைகளை சர்வதேச முகாமை மூலம் சோதனையிட அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணு சக்தியை அமைதிப் பணிகளுக்கே பயன்படுத்துகிறோம் என்று ஈரான் கூறி வருகிறது.  இந்த நிலையில் ஈரான் செயற்கைக் கோளை செலுத்தும் ரொக்கெட் திறன் பெற்றிருப்பது அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏவுகணைகளில் அணு குண்டுகளைப் பொருத்தி நீண்ட தொலைவுக்குத் தாக்க முடியும் என்பதால் ஈரான் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் செயற்கைக்கோள் குறித்து மேற்குலக நாடுகள் கடும் விசனம்
 
ஈரான் தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது தொடர்பாக மேற்குலக நாடுகள் அதிக கவலை வெளிப்படுத்தியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்துவதாகக் கூறி ஈரான் தனது முதலாவது செயற்கைக் கோளை விண்ணில் ஏவியுள்ளது.

ஆனால், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையின் அபிவிருத்திக்காகவே இச் செயற்கைக் கோளைப் பயன்படுத்தப்போவதாக அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஆறு மேற்குலக நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் கருதுவதால் ஐ.நா.வின் தடைகளை எதிர்கொள்ளும் நிலையில் ஈரான் உள்ளது. இந்நிலையில் மேற்குலக நாடுகளின் குற்றச் சாட்டை மறுத்துவரும் ஈரான் தமது சக்தித் தேவை கருதியே அணுநிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதாக கூறிவருகின்றது. ஈரான் தன்னுடைய யுரேனியம் செறிவூட்டலை இடைநிறுத்தினால் அதன் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பேச்சுகளில் ஈடுபட முடியுமென ஜேர்மன், பிரான்ஸ், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்துகின்றன.

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபன்டுடனான பேச்சுக்களைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன்;  ஜேர்மனியின் பிராங்பட் நகரில் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானுடன் பேச்சுகளில் ஈடுபடுவதற்கான அணுகுமுறைகள் தொடர்பான பேச்சுகளிலும் ஈடுபடுவர். சர்வதேச சமூகத்தில் ஈரானும் ஒரு அங்கத்துவ நாடாகுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளமை தெளிவாகவுள்ளது. ஈரானுடன் கைகுலுக்குவதற்கு நாம் தயாராக இருந்தாலும் எமது கொள்கைகளை கைவிடப்போவதில்லையெனத் தெரிவித்தார். இதேவேளை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அபிவிருத்தியில் ஈரான் ஈடுபடுவதற்கு சாத்தியமாக இருந்தாலும் அது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி றொபேட் வூட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈரானின் செயற்கைக்கோள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எரிக் செவாலியர் தெரிவித்தார்.

இலங்கை பிரச்சனை-நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் – விஜயகாந்த் : புறக்கணிக்க மாட்டோம் – தா.பாண்டியன்

vijayakanth.jpgஇலங்கையில் நடைபெறும் தமிழின படுகொலையை மத்திய அரசு தடுக்க தவறினால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினை எதிர்பாராத வகையில் ஒரு பெரிய நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளது. சிங்கள அரசின் முப்படைகளும், தமிழர் பகுதிகளை தாக்கியதன் விளைவாக இன்று முல்லைத்தீவின் ஒரு சிறிய பகுதியில் சுமார் 2   1/2 லட்சம் தமிழர்கள் போரில் சிக்கியுள்ளனர். எந்த நேரத்திலும் அவர்களுக்கு எதுவும் நேரலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சிங்கள அரசோ பாதுகாப்பு மண்டல பகுதிகள் என்று ஒரு சில பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், போர் முனையில் சிக்கியுள்ள தமிழர்கள் அந்த பகுதிகளில் வந்து பாதுகாப்பாக தங்கிக்கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.

சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டல பகுதிக்கு தமிழர்கள் சென்றால், வயதானவர்கள், குழந்தைகள் தவிர, மீண்டும் தீவிரவாதிகள் உருவாக கூடாது என்று சொல்லி சிங்கள போர் படையினர் தமிழ் வாலிபர்களை கொன்று விடுகின்றனர். பெண்களையும் மானபங்கப்படுத்தி அழித்து விடுகின்றனர். சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டலங்கள் என்பது தமிழர்களின் மரணப்படுகுழிகள் தான் என்பதை சிங்கள அரசு வேண்டுமென்றே மறைத்து வருகிறது. சிங்கள அரசின் இத்தகைய போக்கின் காரணமாக அங்குள்ள தமிழர்கள் சிங்களர்கள் கையில் சிக்கி சாவதை விட அவர்களை எதிர்த்து போராடி செத்து மடிவதே மேல் என்ற நிலைக்கு ஆளாகி விட்டனர். இந்த சூழ்நிலையில் சிங்கள அரசு போரை மேலும் நீடித்தால் பல லட்சக்கணக்கான தமிழர்கள் பேரழிவையே சந்திக்க வேண்டியிருக்கும். இதை அனுமதிப்பது நாகரீக உலகிற்கு எவ்விதத்திலும் சரியல்ல.

போன உயிர்களை மீண்டும் தருவது யாராலும் முடியாது. ஆகவே உயிர்கள் போவதை தடுக்க மனிதாபிமானமுள்ள உலகம் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இத்தகைய மனிதகுலப் பேரழிவு ஏற்படும் அபாயக்கட்டத்தில், உலகில் பல்வேறு நாடுகளில் ஐ.நா.மன்றம் தலையிட்டுள்ளது. அது போல ஐ.நா.மன்றம் இந்த பிரச்சினையிலும் தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும், அதை கண்காணிக்கவும், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழினப் பேரழிவை தடுக்க ஐ.நா.மன்றத்தில் எழுப்ப இந்திய அரசால் தான் முடியும். அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது என்று சொல்வது சரியல்ல. மனிதாபிமான அடிப்படையிலும், அண்டை நாட்டில் ஏற்படும் பிரச்சினையால் தங்கள் நாட்டின் அமைதிக்கு பங்கம் எற்படுமென்றாலும் நிச்சயமாக ஒரு அரசு தலையிட கடமைப்பட்டுள்ளது. இந்திய அரசு தமிழினப்படுகொலை தடுக்க தவறுமானால், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தேசிய அரசில் பங்கு பெறுவதில் அர்த்தமில்லை. ஆகவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சியினரும் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சாதாரணமாக தங்கள் ஊரில் உள்ள குறைகளை செய்து கொடுக்காததற்கே அந்த ஊர் மக்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் என்றால், அரசு ஓடோ டி சென்று அந்த மக்களின் குறைகளை தீர்க்க உறுதி கொடுத்து அவர்களை தேர்தலில் ஈடுபட வைக்கிறது. அப்படியிருக்க இலங்கையில் தமிழினமே படுகொலைக்கு ஆளாகும் சூழ்நிலையில், தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்தால் அப்பொழுதாவது இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காதா என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு.

தேர்தல் புறக்கணிப்பு முடிவு எடுக்கப்படுமானால், தே.மு.தி.க.வை பொறுத்தவரை முதலாவதாக இடம் பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சிங்களராணுவத்தின் அநீதியை தடுத்து நிறுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் ஒருமித்த கருத்தோடு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க ஒன்றுப்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

புறக்கணிக்க மாட்டோம்:

இதுபற்றி கருத்து கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன்,

இலங்கைப் பிரச்சனைக்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சனையை முன் வைக்க மாட்டோம் என்றும் கூறினார்.
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் விரைவில் சேர உள்ளன. தேர்தலை சந்திப்பது குறித்து கூட்டணி கட்சிகள் அனைத்தும் விரைவில் கூடி ஆலோசனை நடத்துவோம். அதிமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி பந்த் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை

cennai.jpgதமிழகத்தில் நேற்று நடந்த பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று தலைமை செயலாளர் ஸ்ரீபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று பந்த் அறிவிக்கப்பட்டது. 85 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடின. அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வதில் எந்த பாதிப்பும் இல்லை. விமான போக்குவரத்திலும் பாதிப்பில்லை. பள்ளிகள் திறந்திருந்தன. சென்னையில்  பெரும்பாலான இடங்களில் கடைகள் திறந்திருந்தது. புறநகரில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வேலூர், கோவை, ஓசூர், சிவகங்கை, மானாமதுரை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பழனி ஆகிய இடங்களில் பஸ்கள் கல் வீசி தாக்கப்பட்டன.

தர்மபுரியில் எல்ஐசி அலுவலகம், டாஸ்மாக் அலுவலகம் தாக்கப்பட்டது, வேலூரில் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் அலுவலகம் மீது கல்வீசப்பட்டது. அதைத் தவிர அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

தமிழக பந்த் குறித்து  தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறியதாவது:

பந்த் காரணமாக தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. சில இடங்களில் கல் வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. பஸ், ரயில், விமான போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. கடலூரில் ஆட்டோ ரிக்ஷா போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கடைகள் பெருமளவில் திறந்திருந்தன.கோவை, விழுப்புரம், நாகை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடைகள் ஓரளவு அடைக்கப்பட்டிருந்தன. மற்ற மாவட்டங்களில் 80 சதவீத கடைகள் திறந்திருந்தன. தொழிற்சாலைகள் வழங்கம்போல இயங்கின. அரசு ஊழியர்கள் 99 சதவீதம் பேர் வருகை தந்திருந்தனர். இவ்வாறு ஸ்ரீபதி கூறினார்.

டிஜிபி ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டம் ஒழுங்கு பராமரிக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவல்துறையினர் செய்திருந்தனர்.

திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ உலகநாதன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், மாநிலத்தில் சில இடங்களில் கடைகள், பள்ளிகளை மூட வற்புறுத்தியவர்கள் மற்றும் பேருந்துகள் மீது கற்கள் வீசி சேதப்படுத்தியவர்கள் 99 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மும்பைத் தாக்குதல் சம்பவம்: -120 பேர் மீது வழக்குத் தொடர பாகிஸ்தான் முடிவு

mumbai.jpgமும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி 120 பேர் மீது வழக்குத் தொடர பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த 120 பேரில் இந்தியா சுட்டிக்காட்டியுள்ள முக்கிய தீவிரவாதிகள் யாரும் இல்லை என்று தெரிகிறது.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆல் உருவாக்கப்பட்டு வளர்த்துவிடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பது இதுவே முதல் முறை. மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானில் இருந்து செல்போன், ஈ-மெயில் மூலம் தொடர்புகொண்டு பேசியவர்கள் மீது சைபர் குற்றப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு உள்ளது என்று இந்தியா குற்றம் சாட்டியது. அதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் வசம் ஒப்படைத்தது. பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவும் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது. ஆதாரங்கள் எதையும் இந்தியா கொடுக்கவில்லை.

வெறும் தகவல்களைத் தான் கொடுத்தது என்று முதலில் பிடிவாதம் செய்த பாகிஸ்தான், வேறு வழியுமில்லாமல் மும்பை தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க ஒப்புக்கொண்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் தற்போது 120 பேர் வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜமாத்-யுத்-தவா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணை அமைப்பு

இலங்கை தமிழர் பிரச்சனைக்காக உலகநாடுகளுடன் தொடர்புகொள்ள இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணை அமைப்பு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், அந்த நாட்டில் சிங்களவர்களுக்கு இணையான சம உரிமையும், அதிகாரப்பகிர்வும் பெற்றிடும் இனமாகத் தமிழ் இன மக்களும் சுமூக சூழலில் வாழ்ந்திட வகை காணும் ஒப்பந்தங்களும் நிறைவேறிட; தமிழ்நாட்டில் திமுக செயற்குழுவில் தீர்மான வடிவில் சுட்டிக்காட்டியுள்ள குறிக்கோள் நிறைவேறிட; இப்போது அமைக்கப் பட்டுள்ள இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவைக்கு துணை அமைப்பாக உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவுக்கு தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் அமைப்பாளராக இருப்பார். தமிழர் தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் ஆ.இராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் செயலாளர்களாக இருந்து இலங்கை தமிழர் பிரச்சனைக்காக பல்வேறு நாடுகளில் உள்ள ஆர்வலர்களோடு தொடர்புகொண்டு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நீதியரசர்கள் மோகன், பி.ஆர். கோகுல கிருஷ்ணன், பாஸ்கரன், சிவசுப்ரமணியம், ஏ.கே.இராஜன், ஜனார்த்தனம், சாமிதுரை ஆகியோர்கள் இக்குழுவில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்த அமைப்பு எண்.24, காந்தி மண்டபம் ரோடு, கோட்டூர்புரம், அடையார், சென்னை 600 085, தென்னிந்தியா என்ற முகவரியில் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று பெரும்பாலான பகுதிகளில் பந்த்

tamilnadu-040209.jpgஇலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று நடந்து வரும் பந்த்துக்கு பெரும்பாலான பகுதிகளில் ஆதரவு கிடைத்துள்ளன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் பந்த் கிட்டத்தட்ட முழு அளவில் உள்ளது. பஸ்கள், ரயில்கள் மட்டும் ஓடுகின்றன. இந்த பந்த் சட்டவிரோதம் இல்லை, தடை செய்ய முடியாது என நேற்று மாலை உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது.

இன்று காலை பந்த் தொடங்கியது முதல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏஐடியூசியின் கீழ் வரும் ஆட்டோக்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் பெருமளவில் ஓடவில்லை. இருப்பினும், பஸ், ரயில் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. பலத்த பாதுகாப்பு அவற்றுக்குத் தரப்பட்டுள்ளது. பந்த் போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை- புளியரை இடையிலான ஒரு அரசுப் பேருந்து கல்வீசித் தாக்கி சேதப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

திருப்பூரில் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். 5000க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூட்பட்டுள்ளன.வேலூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரனின் அலுவலகம் கல் வீசித் தாக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸார் சாலை மறியல் செய்தனர். வேலூரில் பெல் தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையி்ல் உயர்நீதிமன்றம் முன்பு திறந்திருந்த சைக்கிள் கடையை சிலர் கல்வீசித் தாக்கி மூட வைத்தனர். திருத்துறைப்பூண்டியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ உலகநாதன் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ் மறியல், ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பூந்தோட்டம், நன்னிலம், கொரடாச்சேரி, மாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் நடத்தினர். இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். நன்னிலம் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. பத்மாவதி தலைமையில் 100 பேர் பஸ்மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

இதேபோல் மன்னார்குடி கீழ்பாலம் அருகே இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் இலங்கை அரசை கண்டித்து கோஷமிட்டு பஸ் மறியல் செய்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பந்த் போராட்டத்திற்கு கணிசமான அளவில் ஆதரவு காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தின் அனைத்து மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்கக் கூடிய இடங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திறந்து இருக்கும் கடைகளை மூடச் சொல்கிறவர்கள், அலுவலகங்களுக்குச் செல்கிறவர்கள் தடை செய்கிறவர்களை உடனடியாக கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்..

இதற்கிடையே பந்த் நடத்துவது சட்டவிரோதமானது என்று கட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கடிதம் எழுதியுள்ளார். அதில், பிப்ரவரி 4-ம் தேதியன்று இலங்கை தமிழர் பாதுகாப்புக்காக தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் நடத்த தங்கள் கட்சியின் பெயரால் அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். எந்த நோக்கத்திற்காக முழு அடைப்பு அறிவிக்கப்பட்டாலும், அதை நடத்தக்கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அது தொடர்பாக இப்போதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதே சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள். இந்த விவரங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.

இப்போது நீங்கள் நடத்துவதாக அழைப்பு விடுத்திருக்கும் முழு அடைப்பு என்பதன் நோக்கம் நல்ல நோக்கத்தை முன்னிட்டு என்று இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டு முழு அடைப்பு நடத்துவதையே சட்ட மீறல் என்ற பொருளில் தடுத்து நிறுத்தியிருப்பதாலும், அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் முடியாதிருக்கும் நிலையில், நீங்கள் அறிவித்துள்ள 4-ந் தேதி முழு அடைப்பு சட்ட விரோதமானது என்று எச்சரிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதி முகாமில் கருப்புக் கொடி..

பாவூர் சத்திரம் இலங்கை அகதிகள் முகாமில் இன்று பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருப்பு பேனர் கட்டியுள்ளனர்.

ஹிலாரி மீண்டும் பதவியேற்பு

hillary.jpgஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 2வது முறையாக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதவியேற்பு விழாவின் போது, பதவி பிரமாண வாசகத்தை உச்சரிக்கும் போது குளறுபடி ஏற்பட்டதால் 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஹிலாரி கிளிண்டனும், 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். துணை அதிபர் ஜோ பைடன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஹிலாரியின் கணவரான முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், மகள் செல்சியா உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.