பெப்ரவரி 14ஆம் திகதி உலக காதலர் தினமாகும். இந்தியாவில் இந்த காதலர் தினத்தை கொண்டாடும் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்போம் என்று ராம்சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
மங்களூர் ஓட்டலில் மது குடித்து, நடனமாடிய இளம்பெண்கள், இளைஞர்கள் மீது ராம்சேனா அமைப்பினர் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முதாலிக் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த பிரச்னையால் ராம்சேனா பிரபலமாகி விட்டது.
இந்த நிலையில், பெங்களூரில் முதாலிக் நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் விபரம் வருமாறு:
காதலர் தின கொண்டாட்டம் மேல்நாட்டு கலாசாரம். அதை இந்தியாவில் திணிக்க முயற்சிக்கிறார்கள். அது நமது பாரம்பரியத்தை அழிக்கும் வகையில் உள்ளது. எனவே, காதலர் தின கொண்டாட்டத்துக்கு அரசு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக முதல்வர், ஆளுநரிடம் மனு அளிக்கப்படும். இந்தியாவில் மட்டுமே குடும்ப அமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. அன்பையும், காதலையும் பகிர்ந்து கொள்வதற்கு அது நல்ல அடித்தளத்தை கொடுத்துள்ளது. அதனால், பொது இடத்தில் காதலை பரிமாறிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
எனவே, காதலர் தினமான வரும் 14ம் தேதி ராம்சேனா அமைப்பினர் ரகசிய கேமராவுடன் நகரம் முழுவதும் வலம் வருவார்கள். அப்போது காதல் தினத்தை கொண்டாடும் காதல் ஜோடிகள் கிடைத்தால், அவர்களை அருகில் உள்ள பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைப்போம். இவ்வாறு முதாலிக் கூறினார்.