::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

அமெரிக்க அதிபர் ஒபாமா திடீர் பாக்தாத் விஜயம்

obama_ap.jpg

முன்னறிவிக்கப்படாத விஜயம் ஒன்றை மேற்கொண்டு அதிபர் ஒபாமா பாக்தாதுக்கு சென்றுள்ளார். துருக்கிக்கான நீண்ட விஜயத்தின் முடிவில், சிறிது நேரத்துக்கு முன்னர் இராக்கிய தலைநகருக்கு அவர் சென்று இறங்கியுள்ளார்.

அவர் அமெரிக்க படையினரையும், இராணுவ தளபதிகளையும் சந்திப்பார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.இராக்கிய அதிபர் ஜலால் தலபானியையும், பிரதமர் நூரி அல்மலிக்கியையும் அவர் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்த போதிலும், அவர்கள் இருக்கும் இடத்துக்கு ஹெலிக்கொப்டரில் செல்வதற்கு மோசமான கால நிலை இடம் கொடுக்காத காரணத்தினால், அநேகமாக அவர்களுடன் அவர் தொலைபேசியிலேயே உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

லாலு பேச்சு: கைது செய்ய உத்தரவு

laluprasat.jpgநான் மத்திய உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருண் காந்தியை ரோடு என்ஜினை ஏற்றி கொன்றிருப்பேன் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார். இதையடுத்து அவரைக் கைது செய்ய பிகார் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

லாலு பிரசாத் யாதவின் இந்தப் பேச்சு தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லாலுவின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. லாலுவின் பேச்சு விஷமமானது. இதுவும் துவேஷப் பேச்சாகும் என்று பாஜக மூத்த தலைவர் சுதீந்திர குல்கர்னி தெரிவித்திருந்தார்.

இருப்பினும், நான் சொல்ல வந்தது வேறு. மதவாத அரசியலைத்தான் புல்டோசர் போட்டு நசுக்க வேண்டும் என கூறியிருந்தேன். ஆனால் மீடியாவில் வந்ததைப் போல நான் பேசவில்லை. அரசியல் ரீதியாக வருண் கதையை முடித்திருப்பேன் என்றுதான் நான் கூறினேன் என்று ஜகா வாங்கியிருந்தார் லாலு.

இந்த நிலையில் இன்று லாலு பிரசாத் யாதவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந் நிலையில் லாலுவைக் கைது செய்ய கிஷண்கஞ்ச் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

இத்தாலி : நிலநடுக்க பலி 180 ஆக உயர்வு

italyearthquake.jpgஇத்தாலியின் மையப்பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.

அப்ருஸோவின் தலைநகரான லக்யுலாவின் பெரும்பாலான பகுதிகள் இந்த நிலநடுக்கத்தில் கடுமையாக சேதமடைந்துள்ளன. அந்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்தன. அதில் தூங்கிக் கொண்டிருந்த மக்களும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,500 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

வருண்காந்தியை ரோடு ரோலருக்கு அடியில் போட்டு நசுக்கவேண்டும்: லாலு

laluprasat.jpgநான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்து இருந்தால் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய வருண் காந்தியை ரோடு ரோலருக்கு அடியில் போட்டு நசுக்கி இருப்பேன் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் ஆவேசமாக பேசினார். பீகாரில் உள்ள கிஷன்கன்ஞ்சில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்.ஜே.டி.) தலைவர் லாலு பிரசாத் பேசுகையில்,

கடந்த தேர்தலின்போது ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜ. மதவாதத்தை தூண்டி விட்டது. சோனியா வெளிநாட்டில் பிறந்தவர் என்ற பிரச்னையை கையில் எடுத்தனர். பா.ஜ.வின் இந்த சூழ்ச்சியை ஆர்.ஜே.டி. கட்சியும் நானும் தோற்கடித்து ஏமாற்றம் அடைய வைத்தோம். பாபர் மசூதியை இடித்ததில் நேரடியாக தொடர்பு உடைய அத்வானியின் மடியில் நிதிஷ்குமார் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரது கனவு ஒரு போதும் நிறைவேறாது என்றார்.

ப.சிதம்பரம் மீது ஷூ வீசிய நிருபர்

pc-shoe.jpgமத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூவை வீசினார்.

1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையானபோது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம் . அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார். அவருக்கு பதிலளித்த சிதம்பரம், இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார். ஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்த ஷூ சிதம்பரம் மீது படவில்லை. இருப்பினும் நிதானமாக அமர்ந்திருந்த சிதம்பரம், யாரும் பதற்றப்பட வேண்டாம், பிரஸ்மீட்டை தொடர்வோம். ஒரு தனி நபரின் உணர்ச்சிவசப்பட்ட செயலால் பிரஸ்மீட் தடைபட வேண்டாம் என்றார் வழக்கமான தனது நிதானத்துடன்.மேலும் ஜர்னைல் சிங் நமக்கெல்லாம் மிக நன்றாக தெரிந்த நிருபர் தான். அவரை நான் மன்னித்துவிட்டேன். இதை இத்தோடு விடலாம் என்றார்.

ஜர்னைல் சிங்கை சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.பாக்தாதில் முன்னாள் அமெரிக்க அதிபர் மீது நிருபர் ஷூ வீசியது பரபரப்பானது. இப்போது அதே பாணியில் ப.சிதம்பரம் மீது ஷூ வீசப்பட்டுள்ளது.

இத்தாலி பூகம்பத்தில் 150க்கும் அதிகமானோர் பலி

italyearthquake.jpgஇத்தாலியின் மத்திய பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் இதுவரை 150க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாகவும் குறைந்தது 1500 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் ரோமுக்கு வடகிழக்கே உள்ள பழங்கால நகரான ல அக்விலா நகருக்கு அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அருகில் இருந்த பல மலைக் கிராமங்கள் சேதங்களுக்கு உள்ளாயின.

ல அக்விலா நகரில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பல கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தில் அழிந்து போயின. அதன் இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நில நடுக்கத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்காணவர்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் இத்தாலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம்களை தமது நண்பர்களாக கருதி அணுக வேண்டும் – ஒபாமா

globe-news.jpgதுருக்கியின் நிலைப்பாடானது முஸ்லிம் நாடுகளுக்கு முக்கிய சமிக்ஞையொன்றை வெளிப்படுத்துவதாகவும் ஐரோப்பாவில் அந்நாடு உறுதியாக நிலைபெற்றிருப்பதற்கு களம் அமைத்துத் தருவதாகவும் உள்ளதென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் துருக்கிக்குமிடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாக அந்நாட்டுக்கு இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ள பராக் ஒபாமா, துருக்கியின் ஸ்தாபகர் அதாதுருக்கின் ஞாபகார்த்த ஸ்தலத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடொன்றுக்கு ஜனாதிபதி பதவியேற்ற பின் ஒபாமா விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான துருக்கியின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.  துருக்கிக்கு விஜயம் செய்வதற்கு முன்பு ஞாயிற்றுகிழமை பராகுவேயில் உரையாற்றிய ஒபாமா, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம்களை நண்பர்களாகவும் அயலவர்களாகவும் அணுக வேண்டும் என வலியுறுத்தினார்.

“அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம்களை தமது நண்பர்களாகவும் அயலவர்களாகவும் அநீதி, சகிப்புத்தன்மையின்மை, வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் பங்காளர்களாகவும் கருதி அணுகுவதுடன் பரஸ்பர அக்கறை மற்றும் பரஸ்பர கௌரவம் என்பவற்றின் அடிப்படையில் முஸ்லிம் நாடுகளுடன் உறவுகளைக் கட்டியெழுப்ப ஊக்குவிக்கவும் வேண்டும் என ஒபாமா கூறினார். 

வட கொரியாவைக் கண்டிக்க ஐ. நா. எடுக்கும் முயற்சியில் ரஷ்யா, சீனா நழுவல் போக்கு – முடிவேதுமின்றி சபை கலைந்தது

globe-news.jpgவட கொரியா நீண்ட தூர ஏவுகணையைப் பரீட்சித்தமை ஐ.நா வின் தீர்மானத்தை மீறும் செயல் எனக் கண்டித்துள்ள அமெரிக்கா, ஜப்பான், தென்கொரிய ஆகிய நாடுகள் ஐ.நாவில் அங்கம் பெறும் 15 நாடுகளும் இதைக் கண்டிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசரமாகக் கூடிய ஐ.நா. வட கொரியாவின் ரொக்கட் ஏவுகணை விடயமாக சில தீர்மானங்களைக் கொண்டுவர ஆலோசனை நடாத்தியது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரியபோதும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இது சம்பந்தமாக மெதுவான போக்கை கடைப்பிடிக்கு மாறுகோரின. ஆறு நாடுகள் கொண்ட விசேட குழு வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடாத்துகையில் இவ்வாறான ஆத்திரமூட்டும் செயல்களில் பியாங் யொங் நடந்துகொண்டமை கண்டிக்கப்பட வேண்டியது என்றும் ஐ.நா. அவசர கூட்டத்தில் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்தன.

ஐ.நா.வுக் கான அமெரிக்கத் தூதுவர் சுசானரைஸ் அமெரிக்காவின் ஆழ்ந்த கண்டனத்தை வட கொரியாவுக்குத் தெரிவித்தார். ஜப்பானுடன் இணைந்து வட கொரியாவைக் கண்டிக்க வேண்டிய பொருத்தமான வழிகளை விரைவில் நடைமுறைப் படுத்தவுள்ளதாகவும் சுகானா ரைஸ் சொன்னார்.

ஏவப்பட்ட ரொக்கட் வெற்றிகரமாக விண்வெளியில் சங்கமித்து செய்மதியுடன் செயற்படுவதாக வடகொரியா கூறினாலும், ரொக்கட் விண்வெளியைச் சென்றடைய வில்லை இடையில் தவறி விட்டதாக அமெரிக்காவும் தென் கொரியாவும் கூறின.

பிரான்ஸ் இந்த விடயத்தில் 15 நாடுகளும் ஒன்று பட வேண்டுமெனக் கோரியதுடன் ரஷ்யா, சீனா என்பன விரைந்து செயற்படல் அவசியம். வடகொரியாவை காப்பாற்ற ஐ.நா. வில் அங்கம் வகிக்கும் நாடுகள் செயற்படக்கூடாது எனத் தெரிவித்தது. வட கொரியாவின் செயல் ஐ.நா. வின் தீர்மானங்களை மீறும் செயல் எனத் தாங்கள் நம்பவில்லையென சீனா, ரஷ்யா என்பன கூறின. வட கொரியாவுக்கெதிராக பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்படும்போது சீனா, ரஷ்யா என்பன எதிர்த்து வாக்களிக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. முடிவுகள் எதுவுமின்றி சபை கலைந்தது.

இத்தாலியில் பூமியதிர்ச்சி 70 பேர் உயிரிழப்பு! இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை

italyearthquake.jpgஇத்தா லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் 70 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்று அதிகாலை இடம்பெற்ற பூமியதிர்ச்சியால் இத்தாலி வாழ் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லையென இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது

பூமியதிர்ச்சியின் வேகம் 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இத்தாலியின் மத்திய பகுதியில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் பெரும் எண்ணிக்கையிலான  வீடுகளுக்கும் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 அளவில் இந்தத் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவணம்  செலுத்திவருகிறது.

பாகிஸ்தான் தற்கொலை தாக்குதலில் பலர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஷியா மசூதி ஒன்றின் அருகில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தப்பட்சம் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 40 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

சக்வால் நகரத்தில் இடம்பெற்ற மத வைபவத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மசூதியின் முன்பாக ஒரு சிறுவனே இந்த தாக்குதலை நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர்வாசிகள் வீட்டை விட்டு வெளியே வந்து அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் எதிராக கோஷமிட்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கின்றார்