::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து போட்டியிடும் : விஜய டி.ராஜேந்தர்

images-t-rajendran.jpgமக்களவைத் தேர்தலில் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்று லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்தார். கூட்டணி அமைக்க காலங்கடந்து பாஜக முயற்சித்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார். இது குறித்து சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது :

அதிமுக கூட்டணிக்காக மற்றவர்களை காத்திருக்க வைத்துவிட்டு காலங்கடந்து கூட்டணி அமைக்க பாஜக பேச்சு நடத்தி வருகிறது. சரத்குமார் பாஜக கூட்டணிக்கு வருமாறு என்னை அழைத்தார். கூட்டணி குறித்து சரத்குமார், கார்த்திக், டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. சரத்குமார், கார்த்திக் ஆகியோர் பாஜகவுடன் சேர்ந்து பயணம் செய்ய இருக்கிறார்கள். மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகத்துடன் இணைந்துள்ளது. நான் என் பாதையில் தேர்தலை சந்திக்க உள்ளேன்.

கள்ளக்குறிச்சி, திருச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இன்னும் இரண்டு நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம் என்றார் டி. ராஜேந்தர்.

நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 இல் மே மாதம் 21 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலைபற்றி ஜெயின் ஆணைக்குழு விசாரணை நடத்தியது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தனியாக விசாரணை நடத்தப்பட்டு நளினி, முருகன், சாந்தன், ரொபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவி, அறிவு ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

ஜெயின் ஆணைக்குழு விசாரணை 1998 இல் தான் முடிந்தது. அதற்கு முன்பே 7 பேருக்கும் பூந்தமல்லி நீதிமன்றம் தண்டனை விதித்துவிட்டது. ஜெயின் ஆணைக்குழு அறிக்கையில் புகார் கூறப்பட்ட சந்திராசுவாமி, சுப்பிரமணியசாமி ஆகியோரை விட்டுவிட்டார்கள். எனவே தண்டனை பெற்ற நளினி, முருகன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

bharathiraja1.jpgஇலங்கை போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால், 21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். உண்ணாவிரதம் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யவில்லை.என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

இந்த உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள், திரையுலகில் இருக்கும் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள்.

உண்ணாவிரத்தின் நோக்கம் மற்றும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் தமிழ் திரையுலகின் அடுத்தக் கட்ட நடவடிக்கை உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் 21ஆம் தேதி அறிவிப்போம் என்றார்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் -வைகோ

india-election.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மட்டுமே மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்று ம.தி.மு.க.பொதுச் செயலரும் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான வைகோ தெரிவித்தார். ராஜபாளையம் அடுத்த சிவலிங்காபுரத்தில் தனது தேர்தலில் பிரசாரத்தை புதன்கிழமை துவக்கி வைகோ பேசியதாவது;

இலங்கை அரசு அறிவித்த இருநாள் போர்நிறுத்தம் வெறும் கண்துடைப்பாகும், இந்த இரு நாட்களில் இலங்கை இராணுவம் காங்கிரஸ் கட்சியின் பேராதரவுடன் ஆயுதங்களைப் பலப்படுத்தியுள்ளது.இலங்கைப் பிரச்சினை குறித்து ஐ.நா. சபைக்கும் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கவும் பாராளுமன்றத்தில் அவர்களுக்காக குரல் கொடுக்கவும் உங்களுக்கு சேவை செய்யவும் என்னை வெற்றிபெறச்செய்யுங்கள்.

நதிநீர் இணைப்புத்திட்டத்தை முதன்முதலில் பாராளுமன்றத்தில் எடுத்துக்கூறி அந்த மசோதா நிறைவேறச் செய்ததில் எனக்கு முக்கியபங்கு உண்டு. தமிழகத்தில் மின்வெட்டு,உரத்தட்டுப்பாடு போன்றவற்றால் விவசாயிகள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். நாட்டிலேயே தென்தமிழகத்தில் தான் விவசாய நிலங்கள் அதிகம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நல்லது நடக்கும்.இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

‘எழவு வீட்டில் ஓட்டு கேட்கும் சோனியா’ – பாரதிராஜா

bharathiraja1.jpg இலங்கையில் போரை நிறுத்தி விட்டுத்தான் தமிழகத்திற்கு சோனியா காந்தி வர வேண்டும். அதை விட்டு விட்டு எழவு வீட்டில் வந்து அவர் ஓட்டு கேட்கக் கூடாது என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக கூறியுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பெண்கள், சென்னையில், மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர் சத்யராஜ், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட திரையுலகினர் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பாரதிராஜா உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாரதிராஜாவும், சத்யராஜும் உணர்ச்சிகரமாக பேசினார்.

ஜனாதிபதி மஹிந்தவுடன் பேசாத கூட்டமைப்பினர் இந்திய தலைமைகளுடன் பேசுவதில் அர்த்தமில்லை – அரசாங்கம் அறிவிப்பு

axman-yappa.jpg“தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருக்கின்றார். ஆனால், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேசுவதில் எத்தகைய அர்த்தமும் இல்லை” என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைதி திரும்ப பாடுபடுவோம். அது முடியாவிட்டால் தனி ஈழமாநிலம் அமைய பாடுபடுவோம் -அதிமுக தேர்தல் அறிக்கை

jayalalitha.jpgஇலங்கையில் இனப்படுகொலையை நிறுத்தி, அமைதி திரும்ப பாடுபடுவோம். அது முடியாவிட்டால் தனி ஈழ மாநிலம் அமைய பாடுபடுவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத் திடலில் நடந்த அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார்.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்…

– பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கு சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும்.

-இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்படவும், அப்பாவி தமிழ் மக்களின் இனப் படுகொலையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால் தனிஈழ மாநிலம் அமைக்க வலியுறுத்துவோம்.

– அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ் பகுதிகளை புதுப்பிக்கவும், மேம்படுத்தவும், இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

– தமிழ் உட்பட எட்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ள நாட்டின் அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவிக்கவும், அத்துடன் நேரு அளித்துள்ள உறுதிப்படி, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை மாற்று மொழியாக ஆங்கிலம் நீடிக்கவும் வழி வகை செய்யத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டுவரும்படி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள அரசிடம் அ.தி.மு.க. வலியுறுத்தும்.

– கற்பழித்தல் குற்றம் புரிபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

– இன்றைய திட்டத்தின்படி சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்காக பாறாங்கற்களால் அமைக்கப்பட்ட ராமர் பாலம் இடிக்கப்படும் நிலை உருவாகும். இந்தத் திட்டத்தை அதிமுக ரத்து செய்யும்.

இதற்குப் பதில், தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் இருந்து சென்னை அல்லது பெங்களூருக்கு சரக்குகளை கொண்டு செல்ல மாற்று வழிகளை அதிமுக கொண்டு வரும். மேலும், தூத்துக்குடி துறைமுகம் சரக்கு மாற்று துறைமுகமாக மேம்படுத்தப்படும்.

இவ்வாறும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

india-elc-2009.jpgஇந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 5 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் மொத்தம் 124 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 5 வது கட்டமாக மே 13 ந்தேதி ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடை பெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை. 24ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள். 25ஆம் தேதி மனுக்கள் ஆய்வு செய்யப்படுகிறது. மனுக்களை வாபஸ் பெற 27ஆம் தேதி கடைசி நாள். அன்று மாலை 3 மணி வரை மனுக்களை திரும்ப பெறலாம். அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

5வது கட்ட தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு: தமிழ்நாடு 39, உத்தரபிரதேசம் 14 ,மேற்குவங்காளம் 11, பஞ்சாப் 9, உத்தரகாண்ட் 5, இமாச்சலபிரதேசம் 4, காஷ்மீர் 2, புதுச்சேரி 1, சண்டிகார் 1, மொத்தம் 86

ஏர்டன்குடாவில் பதினொரு கடற் கொள்ளையர்கள் கைது; பிரான்ஸ் வீரர்களின் துணிச்சலான செயலை உலக நாடுகள் பாராட்டு

somaliya-robbery.jpgசோமாலியாவின் கடல் எல்லையிலுள்ள ஏர்டன் குடாவில் வைத்து சென்ற புதன்கிழமை பதினொரு கடற்கொள்ளையர்களைக் கைது செய்த பிரான்ஸ் கடற் படையினர் கொள்ளையர்களின் கப்பலையும் தடுத்து வைத்துள்ளனர். சென்ற புதன்கிழமை அமெரிக்க கப்பல் மீது கடற் கொள்ளையர்கள் ரொக்கட் தாக்குதலை நடாத்தினர்.

இந்தத் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை. இதனால் கொள்ளையர்கள் மேலும் தாக்குதல் நடத்தலாம் எனக் கருதி கடல் எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஏர்டன் குடாவில் இடம் பெறும் கடற் கொள்ளைகளை முறியடிக்க உலக நாடுகளின் கூட்டான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது. வருடாந்தம் சுமார் 16 ஆயிரம் கப்பல்கள் சுயஸ் கால்வாயூடாக ஏர்டன் குடாவை நோக்கி பயணம் செய்கின்றன.

எரிபொருட்கள் தானியங்கள் இராணுவ உபகரணங்கள் என ஏராளமான பொருட்களை இக்கப்பல்கள் வியாபார உதவி நோக்கங்களுக்காக கொண்டு வருகின்றன. இந்தக் கப்பல்களை சோமாலியாவின் கடல் எல்லைகளிலுள்ள கொள்ளையர்கள் வழிமறித்து கொள்ளையிடுவது பெரும் தலையிடியை உருவாக்கியது. இதனால் பல நாடுகள் இணைந்து இக்கடல் எல்லைகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

பிரான்ஸ், ஜேர்மன், ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஐரோப்பிய யூனியன் கொடியுடன் ரோந்தில் ஈடுபட்டுள்ளன. சென்ற புதன்கிழமை அமெரிக்க கப்பல் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதால் பிரான்ஸ் கடற் படைக் கப்பல் புதன்கிழமை மாலை ஏர்டன் குடாவில் தரித்து நின்றது.

கொள்ளையர்களின் பத்து மீட்டர் நீளமான படகு ஆயுதங்களுடன் வந்த பொழுது பிரான்ஸ் கப்பலிலிருந்து கிளம்பிய ஹெலிகொப்டர் கொள்ளையர்களின் படகைச் சுற்றி வளைக்க பிரான்ஸின் கடற்படை கப்பல் கொள்ளையர்களின் படகை நெருங்கி கப்பலையும், கொள்ளையர்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கென்யாவின் ஐநூறு மைல் கடல் எல்லையில் வைத்து கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இவர்கள் பிரான்ஸ் கடற்படைக் கப்பலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சோமாலியாவின் கடல் எல்லைகளில் அதிகரித்துச் செல்லும் கடற் கொள்ளைகளை முற்றாக ஒழிக்கவென அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளின்டன் நான்கு முக்கிய திட்டங்களை முன்வைத்துள்ள வேளையில் கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர் .

கொள்ளையர்களின் சொத்துக்களை முடக்குதல் அவர்கள் செயற்படும் நாடுகளில் கொள்ளையர்களுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற முக்கிய திட்டங்கள் ஹிலாரி கிளின்டன் வெளியிட்ட யோசனைகளிலுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, துருக்கி, இந்தியா ஆகிய நாடுகளின் இராணுவங்கள் ஏற்கனவே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள போதும் பிரான்ஸ் கடற்படையே முதற் தடவையாக கடற் கொள்ளையர்களைக் கைது செய்துள்ளது.

மக்கள் சக்தி முழுவதும் அன்பு சகோதரி பக்கம்தான்: ராமதாஸ்

jayalalitha.jpgஅதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக பொதுக்குழுவின் முடிவிற்கேற்ப என்னுடைய அருமைச் சகோதரி அவர்களை, அவருடைய இல்லத்திலே சந்தித்து, எங்களின் பொதுக்குழுவினுடைய முடிவிற்கு ஏற்ப இந்த கூட்டணில் இடம் பெற வேண்டும் என்று நாங்கள் பேசினோம்.

வெளியிலே வந்து ஊடக நண்பர்களை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்கள் (ஜெயலலிதா) பேட்டியளித்தார்கள். என்னிடம் அந்த மைக்கை கொடுத்து, நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் என்று சொன்னார்கள். நான் அப்போது சொன்னேன். 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும் என்று சொன்னேன். இன்றைக்கும் சொல்லுகிறேன் மே 16ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது, 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறுகிறது.

அதற்கு காரணம் மக்கள் சக்தி முழுவதும் அன்பு சகோதரி பக்கம்தான் என்பதால்தான் நான் சொல்லுகின்றேன். அந்த வகையிலே தமிழகம் முழுவதும் சென்று வருகின்ற இந்த கூட்டணி தலைவர்கள், மக்களுடைய நாடி துடிப்பை பார்த்து சொல்லுகின்றோம். இன்று எங்கு பார்த்தாலும், எங்கு சென்றாலும், மக்கள் சக்தி அன்பு சகோதரி பக்கமே என்பதை உணர முடிகிறது. திமுகவுக்கு எதிரான அலை இப்போது வீச தொடங்கியுள்ளது என்றார்.