::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

சோமாலிய கடற்கொள்ளையர்களின் பணய கைதிகளை விடுவித்துள்ளதாக நேட்டோ கூறுகிறது

piratasdentro.jpgசோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடித்து பணயமாக வைக்கப்பட்டிருந்த 20 பேரை ஏடன் வளைகுடாவில் பணியில் ஈடுபட்டிருந்த தமது கடற்படையினர் விடுவித்துள்ளதாக நேட்டோ கூறுகிறது.

அங்கு பணியில் ஈடுபட்ட நேட்டோவின் டச்சு கடற்படையினர் கடற்கொள்ளையர்களை நிர்ப்பந்தித்து, அவர்கள் பிடித்து வைத்திருந்த, பெரும்பாலும் ஏமன் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்று நம்பப்படுகின்ற பணயக்கைதிகளை விடுவிக்கச் செய்ததாக நேட்டோ பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த கடற்கொள்ளையர்களின் ஆயுதங்கள் களையப்பட்ட போதிலும், டச்சுச் சட்டப்படி அவர்களை கைது செய்வது சட்ட விரோதம் என்பதால், அவர்களை தடுத்து வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இரண்டு பெல்ஜியம் நாட்டவர் மற்றும் ஒரு டச்சுக்காரர் உள்ளடங்கலாக 10 மாலுமிகளுடன் சேர்த்து பெல்ஜியம் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்துள்ளதாக பெல்ஜியம் கூறியுள்ளது

பாபர் மசூதி இடிப்பில் காங்கிரசுக்கும் பங்கு உண்டு: லாலு

laluprasat.jpgபீகார் மாநிலத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ், அயோத்தியில் பழம் பெருமை வாய்ந்த பாபர் மசூதியை 1992ம் ஆண்டு பா.ஜ.க. இடித்தது. அத்வானி பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
 
பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உண்டு. அந்த பழியில் இருந்து காங்கிரஸ் தப்ப முடியாது. காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் பாபர் மசூதி இடிப்பை தடுத்திருக்க முடியும். பாபர் மசூதி இடிக்கப்படுவதை தடுக்க காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது சம்பந்தமாக நான் விவாதிக்க தயார். காங்கிரஸ் கட்சியினர் இது தொடர்பாக முட்டாள்தனமாக எதுவும் உளறிக்கொண்டிருக்ககூடாது.
 
காங்கிரஸ் கட்சியினர் இது தொடர்பாக ஏதாவது பேசினால் மேலும் பல ரகசியங்களை நான் வெளியிட வேண்டியது வரும். பாபர் மசூதி பற்றி காங்கிரசின் இரட்டை வேடத்தை நான் அம்பலப்படுத்த நேரிடும் என்றார். பாபர் மசூதி இடிப்புக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. லல்லுவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

‘இனி தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா’-சத்யராஜ்

sathyaraj.jpgஉலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் ஈழ உறவுகளுக்காக ஒன்றுபட்டு குரல் கொடுக்கிறார்கள். ஆனால் தாயகத் தமிழர்களான நாம் அதை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் ஒரு பெரும் போராட்டத்தில் நாம் இறங்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் கூறினார்.

கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக அறிமுகமாகும் ஞாபகங்கள் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஏவி.எம். ஏசி ப்ளோரில் நடந்தது. விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசியதாவது:

ஐயா…நான் இறையாண்மைக்கு எதிரா எதுவும் பேசலீங்க… உண்மையைப் பேசுறேன்… சரித்திரத்தை, இந்திய- இலங்கை அரசாங்கங்கள் ஏற்றுக் கொண்ட சரித்திரத்தைத்தான் சொல்கிறேன். இந்த ஞாபகங்கள் விழாவில் நெஞ்சைவிட்டு அகலாத ஞாபகமாக ஈழ மண்ணில் நம் சொந்தங்கள் அழிந்துகொண்டிருப்பது சுற்றிச் சுழல்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா அமைப்புகளும், எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஈழ தமிழர்களுக்காக மீண்டும் குரல் கொடுக்க வேண்டும்.

லண்டனில் இரண்டு லட்சம் தமிழர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். பிரான்சு, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகம் முழுக்க தமிழர் கொடியுடன் தமது உறவுகளின் உயிர்காக்க கண்ணீரும் கம்பலையுமாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.நாம் அவற்றைப் பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டு பொழுதைக் கழிப்பதை விட்டுவிட்டு, மீண்டும் நமது உணர்வுகளை வலிமையாக இந்த அரசுக்குப் புரியும் விதமாகக் காட்ட வேண்டும்.

உலகம் முழுக்க 8 கோடி தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இலங்கையில் உள்ள 3 லட்சம் தமிழர்களை நாம் காப்பாற்றவில்லை என்றால், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இனி தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்றுதான் சொல்ல வேண்டியது வரும் என்றார் சத்யராஜ்.

காங்கிரஸ் எம்.பி. அன்வர் உசேன் மீது பாதணி வீச்சு

anwar-hussan.jpg அஸ்ஸாம் மாநிலம் தும்ரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. அன்வர் உசேன் மீது வாக்காளர்கள் காலணிகளை வீசியும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. துப்ரி தொகுதியின் தற்போதைய எம்.பி. அன்வர் உசேன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் ஜெயித்த பின்னர் தொகுதிப் பக்கம் செல்லமையினால் கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றவில்லை.

துப்ரி தொகுதியில் போட்டியிடும் அன்வர் உசேன். அத்தொகுதிக்குட்பட்ட கான்பாரி என்ற இடத்தில் காங்கிரஸ் சார்பில், தேர்தல் பிரசார நடைபெற்ற போது இதில் அன்வர் ஹூசேன் கலந்து கொண்டார். அப்போது அன்வர் மீது ஆத்திரத்தில் இருந்த வாக்காளர்கள், திடீரென பாதணிகளை, கழற்றி அவர் மீது எறிந்தனர். மேலும் கற்களையும் வீசினர்.பொலிஸார் அன்வர் உசேனை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது 

தமிழர் தேசிய இயக்க தொண்டர் தீக்குளித்து சாவு

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என்று கோரியும் சென்னையில் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தீக்குளித்து இறந்தார். சிவானந்தன் (46) என்ற அந்தத் தொண்டர் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் தீவிரமான ஆதரவாளராவார். சிவானந்தனுக்கு திருமணம் ஆகவில்லை. சென்னை வடபழனியில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை செய்து வந்ததார்.

ஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்-ஜெயலலிதா

jayalalitha.jpgமத்தியில் அதிமுக உதவியுடன் அமையும் ஆட்சியில், இலங்கைத் தமிழர்களின் மறு புனரமைப்புக்கு ரூ. 10 ஆயிரம் கோடியில் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார்.

இன்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு அவர் சென்றார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் நெல்லைக்குப் புறப்பட்டார் பின்னர் நெல்லை டவுன், வாகையடி முனை என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசி தனது பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது, இலங்கையில், உள்ள தமிழர்களுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் மறு புனரமைப்புக்கு ஏற்பாடு செய்வோம். தமிழர்களுக்கு முழு சுயாட்சியோ அல்லது சுய நிர்வாகமோ அல்லது தனி ஈழமோ எதுவாக இருந்தாலும் அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், மத்திய அரசின் மூலமாக தமிழர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வைப்பேன். இந்திய அரசால், இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீட்போம் என்றார்.

பாதுகாப்பு பகுதியில் ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது – பிரணாப் முகர்ஜி

mugarsjee_piranap.jpg இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார் இது விடயமாக அவர் விடுத்துள்ள  அறிக்கையில்,

இலங்கை தமிழர்களின் நிலைமை குறித்து இந்தியா மிகுந்த கவலை அடைந்துள்ளது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போரில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இதை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்.

பாதுகாப்பு பகுதியில் ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது. பாதுகாப்புப் பகுதியில் உள்ள தமிழர்களின் நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கிக்கொண்டுள்ள தமிழர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசு 2 நாட்கள் போர்நிறுத்தம் அறிவித்ததை இந்தியா வரவேற்கிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கிக் கொண்டுள்ள மக்கள் பாதுகாப்புடன் வெளியேறும் வகையில், போர் நிறுத்தத்தை அரசு நீடிக்க வேண்டும். மக்கள் வெளியேற விடுதலைப் புலிகளும் அனுமதிக்க வேண்டும்.

இலங்கை பிரச்சனையில் இந்தியா மத்தியஸ்தில் ஈடுபடாது. இந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். தங்கள் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இனப் பிரச்சனைக்கு இலங்கை அரசு தீர்வு காண வேண்டும்.

இந்தியா அனுப்பி வைத்துள்ள 62 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் புல்மூட்டை என்ற இடத்தில் உள்ள முகாமில் 1,500க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை இந்தியா ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ மேலும் 40 ஆயிரம் மூட்டை உதவிப் பொருட்களை விரைவில் இந்தியா அனுப்பி வைக்க இருக்கிறது.

இலங்கை தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை அரசும் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் இந்தியாவின் கோரிக்கை ஏற்று நடப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருந்தார் பிரணாப்.

இலங்கையுடன் உறவை துண்டிக்க கருணாநிதி கோரிக்கை

karunanithi.jpgஇலங்கை அரசு போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தால், அந்த நாட்டுடனான தூதரக உறவை இந்தியா துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ள அவசர தந்தி;

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள வேண்டுகோளை நன்றியுடன் வரவேற்கிறோம். இந்தப் போர் நிறுத்த வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளாமல், நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் இலங்கையுடன் அனைத்து தூதரக உறவுகளையும் இந்தியா துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.

இலங்கையில் படுகொலைகளை நிறுத்தக் கோரி தீக்குளிப்பு.

இலங்கையில் தொடரும் படுகொலைகளை நிறுத்தக்கோரி சென்னையில் நேற்றிரவு 8.15 மணியளவில் ஒருவர் தீக்குளித்தார். கரூரைச் சேர்ந்த ஆ. சிவாநந்தம் (வயது46) என்பவர் வடபழனியில் உள்ள தமிழக தேர்தல் அலுவகத்துக்கு முன்பாக   மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.படுகாயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரச மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் முத்துக்குமார் முதல் இதுவரை 12 பேர் ஈழத்தமிழர்களுக்காக தீக் குளித்துள்ளனர்.

இலங்கை பிரச்சினையை உலக அளவிற்கு கொண்டு சென்றவர் ஜெயலலிதா- ஏ.பி.பரதன்

jayalalitha.jpgசென்னையில் நடந்த அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் பேசுகையில்,

கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தவறான பொருளாதார கொள்கையை கடைபிடித்து வருகிறது. அதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு தமிழகத்தில் இருந்து ஜெயலலிதா ஆதரவு தந்தார். அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்து எங்களுடன் சேர்ந்து பேராடினார்.

இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. அந்த கூட்டணியில் உள்ள தி.மு.க.வும் அமைதியாக இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரத போராட்டம் நடத்தி, இலங்கை பிரச்சினையை உலக அளவிற்கு கொண்டு சென்றார். இந்த தேர்தல் தமிழகத்திற்கான தேர்தல் மட்டும் அல்ல. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் நாட்டு மக்களை காப்பாற்றும்படி இல்லை. எனவே, அந்த அரசு அகற்றப்பட வேண்டும் என்றார்.