::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

ஆசியாவில் ஐம்பது மில்லியன் பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்றும் அபாயம்

ஆசிய கண்டத்து நாடுகளில், கணவன்மார் அல்லது காதலர்கள் பாதுகாப்பற்ற பாலியல் நடத்தையில் ஈடுபடுவதால் ஐம்பது மில்லியன் ஆசியப் பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றும் பேரபாயம் இருப்பதாக எய்ட்ஸ் பரவல் பற்றிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
இந்தோனீசிய நாட்டின் பாலி நகரில் நடந்த எச் ஐ வி- எய்ட்ஸ் மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின்படி ஆசிய கண்டத்து நாடுகளில்,  எச் ஐ வி கிருமிகளினால் பீடிக்கப்பட்ட 17 லட்சம் பெண்களில் 90 சதவீதமானவர்கள் அந்த நோயை தமது நீண்ட கால துணைவர்களிடமிருந்து தான் பெற்றார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பெண்களின் பலவீனத்துக்கு காரணமான சமுதாய நடத்தை, கொள்கை ஆகியன மாற வேண்டும் என்று ஐ நா மன்றத்தின் பெண்கள் எய்ட்ஸ் பிரிவின் பிராந்திய இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினை பற்றி இனிமேலும் அலட்சியம் காட்ட முடியாது என்றும் ஐ நா வின் எய்ட்ஸ் திட்ட அதிகாரி டாக்டர் பிரசாத் ராவ் கருத்து வெளியிட்டுள்ளார்.

நானே வெளிவிவகார அமைச்சர் கிளின்டன் அல்ல; ஹிலாரி சீற்றம்

hillary-clinton.jpgஆபிரிக்கா வுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அவரது கணவரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான பில் கிளின்டன் தொடர்பான கேள்வியொன்றுக்கு கோபமாகப் பதிலளித்துள்ளார். கொங்கோ தலைநகர் கின்ஷாசாவில் பொதுவான கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டிருந்த ஹிலாரியிடம் பல்கலைக்கழக மாணவரொருவர் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட பல பில்லியன் டொலர்கள் மதிப்பு வாய்ந்த வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் கிளின்டன் என்ன கருதுகிறார் எனக் கேள்வியெழுப்பினார். இக் கேள்வியை எதிர்பார்க்காத ஹிலாரி அந்த மாணவனை நோக்கி;

எனது கணவர் என்ன நினைக்கிறார் என்பதை நான் உமக்குக் கூற வேண்டுமென விரும்புகிறீர். நான் தான் வெளிவிவகார அமைச்சரே தவிர கிளின்டன் அல்ல எனக் கடும் கோபமாகப் பதிலளித்துள்ளார்.

இந்தப் பதிலால் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சில நிமிட நேர அமைதி நிலவியது. தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஹிலாரி நீங்கள் எனது கருத்தைக் கேட்டால் அதனை நான் கூறுவேன். எனது கணவரின் தூதுவராக நான் செயற்படப் போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிய ஹிலாரி வேறு விவகாரங்களை நோக்கிப் பேச்சைத் திசை திருப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர் இக் கேள்வியை எழுப்பிய மாணவன் ஹிலாரியை அணுகித் தனது கேள்வி தவறாக மொழிமாற்றம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் சீனாவின் உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி பராக் ஒபாமா என்ன நினைக்கிறார் என்பதற்குப் பதிலாக கிளின்டன் என்ன நினைக்கிறார் எனத் தவறாகக் கேட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் கவலையடைய வேண்டாமென அம் மாணவனிடம் ஹிலாரி கூறியதாக அவரது நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.

2001 இல் பதவி விலகியதைத் தொடர்ந்து சர்வதேச மனிதாபிமான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் கிளின்டன் கடந்த வாரம் வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு அமெரிக்க ஊடகவியலாளர்களின் விடுதலை தொடர்பான விவகாரத்திலும் முக்கிய பங்காற்றியிருந்தாரென்பதும் குறிப்பிடத்தக்கது

முஷாரபுக்கு எதிராக வழக்குப் பதிவு – பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

musharap.jpgபாகிஸ் தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரபுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் அதிபராக முஷாரப் பதவி வகித்தபோது, 2007-ம் ஆண்டு அவசரகால நிலையை அமுல் செய்தார். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகளை அவர் சிறையில் அடைத்தார். இவ்விதம் இரண்டு வாரகாலம் நீதிபதிகளை சிறையில் அடைத்தது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானதாகும். எனவே அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு பாகிஸ்தான்  நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

முஷாரப் தற்போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்லம் குமான் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அக்மல் ரஸா இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்

இராக்கில் இரு கார் குண்டுத் தாக்குதலில் 40 பேர் பலி

000000.jpgஇராக்கின் தலைநகர் பாக்தாதிலும் வடபுற நகரான மொசூலிலும் நடந்த இரு வெவ்வேறு கார் குண்டுத் தாக்குதல்களில், நாற்பது பேர் கொல்லப்பட்டதோடு, இருநூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஒன்றன் பின் ஒன்றாக சில நிமிட இடைவேளையில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மொசூலுக்கு அருகே நடந்த தாக்குதல், ஷியா இன சிறுபான்மை மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் பல வீடுகளை அழித்துள்ளது. பாக்தாதிலும், ஷியா பிரிவினர் வாழும் பகுதியே இவ்வாறு குறி வைத்து தாக்கப்பட்டுள்ளது.

இராக்கிய அமைச்சர் ஒருவர் இது குறித்து கருத்து வெளியிடும் போது, இது அல் கயீதாவின் கைவரிசை என்று குறிப்பிட்டுள்ளார். வன்முறைகள் அதிகரித்திருந்தும் கூட, அமெரிக்கப் படைகள் நகர் புறங்களிலிருந்து வெளியேறிய பின்னரும் தமது பாதுகாப்பை தம்மால் கவனிக்க முடியும் என்று இராக்கிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கிழக்காசியாவில் பாரிய சூறாவளி 10 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு – 13 பேர் பலி

கிழக்காசியாவில் திங்களன்று வீசிய பாரிய சூறாவளியால் தாய்வான், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் கரையோரங் களிலிருந்து 10 இலட்சம் பேர் வெளியேறியுள்ளனர்.

ஜப்பானில் வீசிய கடும் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக 13 பேர் பலியாகினர். இன்னும் பெருந்தொகையானோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை உடனடியாக மீட்கும் பொருட்டு ஆயிரம் படை வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இரண்டாயிரம் பேர் வெள்ளத்தி லிருந்து மிட்கப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை ஜப்பான், சீனா, தாய்வான் ஆகிய நாடுகளில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டது.

வேகமாக வீசிய காற்றில் மரங்கள், வீட்டுக் கூரைகள், மின்கம்பிகள் என்பன நிலத்தில் விழுந்தன. பின்னர் பெய்த கடும் மழையால் கட்டடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தன. வீதியால் சென்ற வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

தலை நகர் டொக்கியோவின் சில பகுதிகளும் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. சரிவு ஏற்பட்டதில் சுமார் 450 வீடுகள் சேதமடைந்தன. 180 கி. மீற்றர் வேகத்தில் காற்று வீசியது. இடிபாடுகளுக்குள் சில பேர் சிக்கியுள்ளதால் தேடும் பணிகள் துரிதமாக்கப்பட்டுள்ளன.

காணாமல் போனோரைத் தேடவென விசேட படகுச் சேவைகளும் நடத்தப்படுகின்றன. கிழக்காசியாவில் வீசிய இந்தப் பாரிய சூறாவளி வெள்ளம் என்பன தாய்வான், சீனா ஆகிய நாடுகளையும் தாக்கியது.

இடம்பெயர்ந்தோருக்கான உணவுகள், குடிபானங்கள், இருப்பிடங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை தொண்டர் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. வெள்ள நீர் வடியும் வரை இயல்பு நிலை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு அரசாங்கம் அறிவித்ததையடுத்து தாய்வான், ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் பத்து இலட்சம் பேர் வெளியேறியதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

பெங்களூர் திருவள்ளுவர் சிலை-கருணாநிதி திறந்து வைத்தார்

09-thiruvalluvar.jpgபெங்களூர் திருவள்ளுவர் சிலை-கருணாநிதி திறந்து வைத்தார். விழா மேடையில் இருந்தபடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிலையை கருணாநிதி திறந்து வைத்தார். விழாவுக்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா தலைமை தாங்கினார்.

முதல்வர் கருணாநிதியுடன் அவரது மனைவி தயாளு அம்மாளும் விழாவில் பங்கேற்றார். அவருக்கு விநாயகர் சிலையை முதல்வர் எதியூரப்பா பரிசளித்தார். சில கன்னட அமைப்புகள் விடுத்த பந்த் அழைப்புக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. இதனால் பெங்களூரில் இயல்பு நிலை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 45 உதவி போலீஸ் கமிஷனர்கள், 200 இன்ஸ்பெக்டர்கள், 500 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையி்ல் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு இருக்கும் பூங்காவை சுற்றியும், விழா நடைபெறும் விளையாட்டு மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த விழாவையொட்டி எம்.ஜி.ரோடு, அல்சூர், சிவாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் தமிழர்கள், திமுகவினர் குவிந்தனர். இவர்களது வாகனங்களை நிறுத்த ஆங்காங்கே இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ரோட்டைத் தாண்டிச் செல்ல முடியாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே சிலை திறப்பை எதிர்த்து நகரின் சில இடங்களில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் மல்லேஸ்வரம், மூடுல்பாளையா உள்ளிட்ட சில பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர். மத்திகரே பகுதியில் சிலர் கைகளை பிளேடால் அறுத்து ரத்தத்தை எடுத்து சிலை திறப்புக்கு எதிராக பேப்பரில் எழுதி போராட்டம் நடத்தினர்.

முன்னதாக நிகழ்ச்சி நடக்கும் இடத்தையும் ஏற்பாடுகளையும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா நேற்றிரவு நேரில் வந்து பார்வையிட்டார். சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்த கன்னட ரக்ஷண வேதிகே தலைவர் நாராயண கெளடா, கன்னட சளுவளி தலைவர் வாட்டாள் நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகனை தமிழிலும் பாட வைப்பேன்- ரகுமான்

09-rahman.jpgஎன் மகன் ஆலிம் நிச்சயம் தமிழ்ப் படத்திலும் பாடுவான், என்று இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் கூறினார்.  சரிகம ஆடியோ நிறுவனம், ‘ஊலலலா’ எனும் இசை ஆல்பத்தை தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆல்பத்தின் முதல் பிரதியை வெளியிட, இயக்குநர் கவுதம் மேனன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, இந்த ஆல்பத்தில் பாடியவர்களுக்கும், இசையமைத்தவர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஒற்றுமையாக இருங்கள். சந்தோஷமாக இருங்கள், என்றார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: உங்கள் மகன் ஒரு ‘ஹாலிவுட்’ படத்தில் பாடியிருக்கிறான். அவனை தமிழ் படத்திலும் பாட வைக்கும் எண்ணம் இருக்கிறதா?

என் மகன் ஆலிம் ரஹ்மானுக்கு ஆறரை வயது ஆகிறது. இப்போதுதான் இசை கற்று வருகிறான். ஹாலிவுட் படத்தில், ஒரு பாட்டு பாடியிருப்பது உண்மைதான். அடுத்து தமிழ் படத்திலும் அவனை பாட வைக்கும் எண்ணம் இருக்கிறது. நிச்சயமாக தமிழ் படத்தில் பாடுவான், என்றார் ரஹ்மான்.

நிகழ்ச்சியில் சரிகம நிறுவனத்தின் பிஆர் விஜயலட்சுமி, கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை நிகில் முருகன் செய்திருந்தார்

சென்னையில் தமிழர் பிரகடன பேரணி

0-pazha-nedumaran.jpgஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க உலகத் தமிழர் பிரகடனப் பேரணி சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழர் பிரகடனத்தை அறிவிக்கும் பேரணி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் வருகிற 20-ந்தேதி நடத்தப்படுகிறது. எனது தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இலங்கை அரசின், வடக்கின் வசந்தம் திட்டத்தை செயல்படுத்த வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் தலைமையிலான குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதித்திருந்தது. நாங்கள் சுவாமிநாதனைச் சந்தித்து இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்களை எடுத்துக் கூறியபின்னர் அவர் இலங்கை செல்வதை தவிர்த்து விட்டார்.

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஒழுங்காக வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பவேண்டும் என்றார் நெடுமாறன்.

மும்பை குண்டுவெடிப்பு விசாரணை: மூவருக்கு மரண தண்டனை

மும்பையில் கடந்த 2003ம் ஆண்டு நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு மும்பையில் இரு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 54 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ஹனீஃப் சையது, அவரது மனைவி ஃபாமீதா, அஸ்ரத் அன்சாரி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 4ம் திகதி தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தண்டனை அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று தண்டனைகளை வாசித்த நீதிபதிகள், குற்ற வாளிகள் மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்படுவதாக அறிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் லஷ்கர் இ. தொய்பா அமைப்புடன் தொடர்பு இருந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது

டெல்லி வந்தார் தஸ்லீமா- ரகசிய இடத்தில் தங்க வைப்பு

06-taslima.jpgஐரோப் பாவில் ஒரு நாட்டில் ரகசியமாக தங்கியிருந்த வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்திறங்கினார். அவரை மத்திய உளவுப் பிரிவான ஐ.பி அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர். ‘லஜ்ஜா’ என்ற புத்தகத்தை எழுதி சர்ச்சையில் சிக்கியவர் தஸ்லீமா. அவருக்கு அங்கு இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் விடுத்ததையடுத்து 1994ம் ஆண்டு அவர் வங்காளதேசத்திலிருந்து வெளியேறினார்.

இந்தியா, பிரான்ஸ், ஸ்வீடன் உள்பட பல நாடுகளில் பாதுகாப்பாகத் தங்கியிருந்த அவர் கடைசியாக அவர் கொல்கத்தாவில் குடியேறினார். இந் நிலையில் 2007ம் ஆண்டு அங்கும் அவருக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதையடுத்து மேற்கு வங்க அரசு அவரை ராஜஸ்தானுக்கு அனுப்பியது. ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மத்திய அரசி்ன் உதவியோடு டெல்லியில் குடியேறினார். அரசு அவரை டெல்லியில் ரகசிய இடத்தில் தங்க வைத்தது.

இந் நிலையில் இந்தியாவிலும் அவருக்கு எதிர்ப்பு வலுக்கவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி சுவீடன் நாட்டுக்குச் சென்றார். அங்கிருந்து ஐரோப்பாவில் வேறு ஏதோ ஒரு நாட்டில் ரகசியமாக குடியேறி அந் நாட்டு பாதுகாப்போடு தங்கியிருந்தார். இந் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தனது விசாவை புதுப்பித்துக் கொள்ள இந்தியா வந்தார். அப்போது ஆகஸ்ட் 17ம் தேதி வரை அவரது விசாவை நீட்டித்த மத்திய அரசு உடனே அவரை திருப்பி ஐரோப்பாவுக்கே அனுப்பிவிட்டது.

அவரது இந்திய விசா காலம் வரும் 17ம் தேதியோடு முடிவடைகிறது. இந் நிலையில் தஸ்லீமா இன்று காலை டெல்லி இந்திரா காந்தி சர்வேதச விமான நிலையம் வந்தார். அவர் எந்த நாட்டிலிருந்து வந்தார் என்று தெரியவில்லை. அவரது வருகையை அறிந்து காத்திருந்த ஐ.பி. பிரிவினர் அவரை உடனடியாக எங்கேயோ ஒரு ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விட்டனர்.

தஸ்லீமா தனக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை கேட்டு வருகிறார். ஆனால், மத்திய அரசு இந்த விஷயத்தில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.