கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கும் பணிகள் நேற்றுடன் நிறைவு

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கும் பணிகள் நேற்று (2) நிறைவடை ந்ததாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கும் பணிகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின. கட்சி சார்பாக வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் கட்சி செயலாளர் களுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கான இலக்கங்கள் குழுத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார்.

இதேவேளை இம்முறை தேர்தலில் போட்டியிடும் 7620 வேட்பாளர்களின் பெயர், விருப்பு இலக்கங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (2) நள்ளிரவு வெளியாக ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் (1) 18 மாவட்டங்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டதோடு நேற்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருணாகல், கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டன. இது தவிர மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினூடாகவும் விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டன.

தமக்கு விருப்பமான அல்லது முதலாவது இலக்கத்தை பெறுவதற்காக பல வேட்பாளர்கள் தமது பெயர்களை மாற்றியிருந்ததாகவும் இதனால் விருப்பு இலக்கம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் சுமணசிறி தெரிவித்தார்.

இதேவேளை இம்முறை தேர்தலில் 301 சுயேச்சைக் குழுக்களும் 336 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன. சில மாவட்டங்களில் அதிகமான சுயேச்சைக் குழுக்களும் கட்சிகளும் போட்டியிடுவதால் வாக்குச் சீட்டு மிக நீளமாக இருக்கும் எனவும் அதனால் கூடுதலான வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்கூவர் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நிறைவு

flag.jpgவன் கூவரில் 17 நாட்களாக நடைபெற்றுவந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டித்தொடரின் இறுதி விழா நிகழ்வுகளில் பெரும் உற்சாக ஆரவாரத்தைக் காணமுடிந்தது. கனடா 14 தங்கங்கள், 7 வெள்ளிகள் மற்றும் ஐந்து வெண்கலங்கள் என தங்கப்பதக்கப்பட்டியலில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் அமெரி்க்கா மொத்தமாக 37 பதக்கங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜேர்மனி முப்பது பதக்கங்களையும் நோர்வே 23 பதக்கங்களையும் மொத்தமாக பெற்றுள்ள நிலையில் எமி வில்லியம்ஸ் பெற்ற ஒரு தங்கத்துடன் குளிர்கால ஒலிம்பிக்கில் பிரிட்டன் ஒரே ஒரு பதக்கத்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. டியூரினிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஷெல்லி ருட்மனின் வெள்ளிப்பதக்கமொன்றுடன் மட்டும் நாடு திரும்பிய பிரிட்டன் அணியால் இம்முறை தங்கப்பதக்கத்துடன் சிறிதளவு முன்னேற்றத்தை மட்டுமே காட்ட முடிந்திருந்தது.

ஒஸ்ட்ரியா 16 பதக்கங்கள், ரஷ்யா 15 பதக்கங்கள், கொரியா 14, சீனா, சுவீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தலா 11 பதக்கங்கள் என பட்டியலில் அடுத்த அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

ஏனைய நாடுகள் பத்துக்கும் குறைவான பதக்கங்களைப் பெற்றுள்ளன.

2 வெள்ளிகள் பெற்ற லத்வியாவுக்கு அடுத்தபடியாக ஒரு தங்கத்துடன் பிரிட்டனும் எஸ்டோனியா மற்றும் கசக்ஸ்தான் ஆகிய நாடுகள் தலா ஒவ்வொரு வெள்ளிகளுடனும் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன.

நேற்று நிறைவடைந்த போட்டி இறுதி நாள் நிகழ்வில் கருத்துதெரிவித்த ஒலிம்பிக் தலைவர் ஜெக் ரொஜே “ முழுநகரத்தினதும் அசாத்தியமான ஒட்டுமொத்தமான ஒத்துழைப்பு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு மெருகூட்டியது” என்றார்.

82 நாடுகளைச் சேர்ந்த 2500 போட்டியாளர்கள் இந்தப் போட்டித் தொடரில் கலந்துகொண்டனர்.

BBC

குரூஸ் தீவில் சுனாமி தாக்கியதில் ஐவர் பலி 13 பேரை காணவில்லை

chilee_earthquake.jpgதென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று முன்தினம் 8.8 ரிச்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. தலைநகர் சான்டியாகோ மற்றும் கன்செப்ஷன் உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாயின. இதில் ஏராளமானோர் பலியாகினர்.

நில நடுக்கம் ரிச்டர்  அளவுக்கு 8.8 புள்ளிகளாக இருந்தன. இதன் மையம் கடலுக்கு அருகே இருந்தது. எனவே பசிபிக் கடல் பகுதிகளில் சுனாமி தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. சிலி நாட்டிலும் அதன் அருகே உள்ள குட்டி தீவுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே சிலியில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராபின்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கியது. 7 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து வந்து இந்தத் தீவை தாக்கின. இதில் சிக்கி 5 பேர் பலியானார்கள். 13 பேரை காணவில்லை.

சிலி நாட்டில் உள்ள துறைமுக நகரமான டால் குனாவிலும் சுனாமி தாக்கியது. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பல்கள், மற்றும் படகுகள் ராட்சத அலையில் சிக்கி சேதமடைந்தன. ராபின்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கிவிட்டு, அதைவும் தாண்டி வேகமாகச் சென்றது.

எனவே அமெரிக்காவின் ஹவாய் தீவூ, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யாவின் கிழக்கு பகுதி உட்பட பசிபிக் கடல் பகுதியில் உள்ள 53 நாடுகளில் சுனாமி தாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அனைத்து நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடலோர பகுதி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

பூகம்பம் ஏற்பட்டு 15 மணி நேரம் கழித்து, ஹவாய் தீவில் சுனாமி தாக்கியது. 10 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து கரையைத் தாண்டி வந்தன. ஆனால் முன்னெச்சரிக்கையாக மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால் சேதம் எதுவூம் ஏற்படவில்லை. பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான போலினிசா தீவிலும் சுனாமி தாக்கியது.

நேற்று காஷ்மீரிலும் நில நடுக்கம்

kashmir.jpgகாஷ் மீரிலும் நேற்று 5.7 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் காணப்பட்டது. ஹெய்ட்டி மற்றும் சிலி நாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஏராளமானவர்கள் பலியானார்கள்.

இதற்கிடையே, காஷ்மீரிலும் நேற்று 5.7 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலை பகுதியை மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நில நடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 20 இலட்சம் மக்கள் பாதிப்பு – பலியானோர் தொகை 300 ஆக உயர்வு; மீட்பு பணி துரிதம்

chile.jpgசிலியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தில் இரண்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்ப ட்டதாகவும், இதுவரை முன்னூறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாப்பான இடம்நோக்கி நகருமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளதுடன், அரசாங்க ஊடகங்கள் உடனுக்குடன் தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தன.

கட்டடங்கள், வீடுகள், மரங்கள் வாகனங்கள் என்பன இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகளில் சிக்கல்கள் தோன்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் சென்று பார்வையிட்ட அந்நாட்டின் ஜனாதிபதி சுனாமி எச்சரிக்கையுள்ள பகுதிகளை அபாய வலயங்களாகப் பிரகடனம் செய்தார். வெளியேற்றப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.

சிலியை அண்மித்துள்ள அனைத்து நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், கரையோரங்களிலிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஜப்பான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் மிக எச்சரிக்கையுடன் நடந்துகொண்டு மக்களை விழிப்பூட்டியது. இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்கத் தேவையான உதவிகளை சிலிக்கு வழங்கப் பல நாடுகள் முன்வந்தன. காயமடைந்த பெண்கள், சிறுவர்கள், முதியோர்களை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல அரச வாகனங்களும் தனியார் பஸ் வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன.

இறுதியாகக் கிடைத்த தகவலின் படி ஆறு ஒன்று உடைப்பெடுத்து வெள்ள நீர் கிராமத்துக்குள் புகுந்ததால் 60 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

புலத்துத்தமிழா!! நோர்வே நக்கீரா

புலத்துத்தமிழா!!

ஊரை எண்ணி உருகினோம்
          உண்மை அறிய உயரினோம்
தாரை வார்த்து வந்த பூமி – என்றும்
         தாமரை இலைத் தண்ணீர்தானே

வேரை தேட முயல்வதனால்
         விழுதுகளில் வாழ முடிவதில்லை
ஊரை எண்ணி உளல்வதனால்
          உண்மையின் தரிசனம் தெரியதில்லை

பொக்குவாய் திறந்து என்பிள்ளை சிரிக்க
           பக்கென்று சுனாமி தெரியுதயையோ
திக்குவாய் திறந்து தீந்தமிழ் பிறக்க
          தொக்குவாய் ஒப்பாரி கேட்குதையோ

உடலிங்கு இருக்க உயிரங்கு வாழும்
          உரமிங்கு இருக்க பயிர்ரெங்கு போகும்.
கடலிங்கு இருக்க மீனெங்கு வாழும்
          கடனிங்கு இருக்க ஊரிலுடன்கட்டை ஏறும்.

சேவல் செத்த தேசத்தில்
          சேதி சொல்ல யாருமில்லை
ஏவல் செய்து வாழ்வதற்கு – காலையில்
         எகிறி அலறும் அலாரமிங்கே

பூங்காலை பிறக்கும் பூபாளம் பாடி – இங்கோ
          பனிவானம் கொட்டும் பகலள்ளி ஓடி
தேன்காலை என்று ரொட்டியைத் தின்றும்
         தேடிய பணமும் எமைத்தேடாது போகும்

வேரை அறுத்து வந்த உனக்கு
          வேற்று மண்ணில் பவுசுப்பெருக்கு
ஊரை ஊன்றிய மக்கள் தமக்கு
           உத்தமனாய் விடாதே கணக்கு

தலைவிதி தன்னை தானே தீர்க்கும்
           தலையாய கடமை தமிழர்க்குண்டு
கொலைவெறி கொண்டு ஈழம் என்று – மீண்டும்
            கொல்லநினைக்க முள்ளிவாய்காலிலுண்டு

பண்டா நினைத்ததை பிரபாகரன் முடித்தான்
            திண்டாடும் தமிழன் அரசியலைத் தொலைத்தான்
கொண்டாடும் கொடுவினம் கொடியுயர்த்தி கோலோச்ச
            மன்றாடி மகிழுதோ பின்னணியில் த.தே.முன்னணியும்

மண்ணை வேண்டிப் போராடி
           மண்ணாய் போன மன்னர்களே!
கண்ணாய் மனிதம் காட்டி
           காதலி தமிழை மனதில் ஊட்டி

தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்
          தவறிபோனால் இனத்தோடழிவான்
அமிழ் தினிய தமிழைக் காக்க
         எழுந்து வாடா இனத்தை மீட்க

பத்துப் பெத்தால் பரிசளிப்போம்
         பத்தாது போனால் பரிசகியோம்
முத்தாய் எம்மினம் முகிழ்வுறவே
         வித்தாய் விழைவோமா புலத்தினிலே

நோர்வே நக்கீரா

27.02 2010

பொதுத்தேர்தல் 2010 – 24 கட்சிகள், 312 சுயேச்சைகள் போட்டி: 196 ஆசனங்களுக்கு 7625 பேர் களத்தில்

election_cast_ballots.jpgபாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 8 இல் இடம்பெறவுள்ள நிலையில் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கை அரசியல் திட்டத்துக்கு அமைய 22 மாவட்டங்களில் இருந்து மக்களை பிரதிநிதிதுவம் படுத்தும் வகையில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும் 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூடாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் பணிகள் நேற்று நண்பகலுடன் நிறை வடைந்தன. ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பிற்பகல் 1.30 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முறையாகப் பூர்த்திசெய்யப்படாததால், கட்சிகள் தாக்கல் செய்த 46 வேட்பு மனுக்களும் 35 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்தத் தடவையே கூடுதலான கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வன்னி மாவட்டத்திற்குத் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. அந்தக் கட்சியில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வேட்பாளரின் பெயர் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் பட்டியலிலும் இடம்பெற்றிருந்ததால் அந்த இரண்டு கட்சிகளின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

பொதுத் தேர்தலொன்றில் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்குவது இதுவே முதற் தடவையாகும்.  அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கியுள்ளன. 07 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள இந்த மாவட்டத்தில் 49 சுயேச்சைக் குழுக்களில்.

கொழும்பு மாவட்டத்தில் 21 அரசியல் கட்சிகளும் 18 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 858 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றின் சார்பில் 324 பேர் களம் இறங்கியுள்ளனர். வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 16 கட்சிகளும் 14 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 270 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 17 கட்சிகளும் 14 சுயேச்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. 217 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
 
மட்டக்களப்பில் 17 கட்சிகளும் 28 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 360 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 18 கட்சிகளும் 48 சுயேச்சைக் குழுக்களும் களம் இறங்கியுள்ள நிலையில், 660 வேட்பாளர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். புத்தளத்தில் 15 கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றின் சார்பில் 338 பேர் களம் இறங்கியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும் 14 சுயேச்சைக் குழுக்களும் 300 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. கண்டியில் 14 கட்சிகள் 17 சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இவற்றின் சார்பில் 465 வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
பதுளையில் 12 கட்சிகளும் 05 சுயேச்சைக்குழுக்களும் 187 பேரை நிறுத்தியுள்ளன.
 
மாத்தளை மாவட்டத்தில் 16 கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் 319 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் 388 வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன.கம்பஹா மாவட்டத்தில் 14 கட்சிகளும் 15 சுயேச்சைக் குழுக்களும் 699 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 14 கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் 468 பேரை களமிறக்கியுள்ளன.

அரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன! முன்னாள் எம்.பி. தங்கேஸ்வரி

thangeswari.jpgஅரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன என்றும் நொந்துபோயுள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவூம் அரசாங்கத்தை ஆதரிக்கத் தீர்மானித்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டு. மாவட்ட வேட்பாளருமான க. தங்கேஸ்வரி தெரிவித்தார். தேசியம், அரசியல் என்று கூறிக்கொண்டு இனியும் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்த அவர் மக்களுக்கு இப்போது உடனடித் தேவையாக இருக்கும் விடயங்களை நிறைவேற்றுக்கொடுக்க வேண்டியதே அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னமும் அந்தத் தவறையே மேற்கொள்கிறது. அவர்களின் செயற்பாட்டை தேர்தல் மேடைகளில் அம்பலப்படுத்துவேன். 30 வருட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ள படுவான்கரை உள்ளிட்ட பிரதேசங்களின் மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் தங்கேஸ்வரி மேலும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல்

 sandanaya.pngஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் இடம்பெறுகின்றவ்களின் பெயர்ப் பட்டியலை கூட்டமைப்பின் செயலாளர்  நாயகம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தோதல்கள் ஆணையாளர் நாயகத்திடம் இன்று (26) கையளித்தார்.
பட்டியலில் இடம்பெறுகின்றவர்கள்.

ரத்னசிறி விக்கிரமநாயக்க
டி. எம். ஜயரட்ன
டலஸ் அழகப்பெரும
பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்
டியூ குணசேகர
பேராசிரியர் விஸ்வா வர்ணபால
பேராசிரியர் திஸ்ஸ விதாரன
அச்சல ஜாகொட
எம். எச். முஹம்மட்
கீதாஞ்சன குணவர்தன
விநாயகமூர்த்தி முரளிதரன்
வி. ஜே. மு. லொக்கு பண்டார
சங்கைக்குரிய எல்லாவள மேதானந்த தேரர் சங்கைக்குரிய ஒமல்பே சோபித தேரர்
முத்துசிவலிங்கம்
சண்முகம் ஜெகதீஸ்வரன்
மொகமட் முசம்மில்
அனுருத்த ரத்வத்த
ஏ. ஆர். பீ. சூரியபெரும
ஜானக பிரியந்த பண்டார
பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க
லெஸ்லி தேவேந்திர
சந்திரசேகரன் சண்முகநாதன்
ஏ.எச். எம். அஸ்வர்
டொக்டர் ஹரிச்சந்திர விஜேதுங்க
யூ. எல். சாஹுல் ஹமீத்
கமலா ரணதுங்க
சரத் கோங்காகே
மாலினி பொன்சேகா

விடைபெறுவீர் அமுதுப் புலவரே….. : என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்.)

tn.jpgஅமுதுப் புலவர் என எம்மவரால் அன்புடன் அழைக்கப்படும் இளவாலை அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் 23.2.2010 அன்று காலை 11.00 மணியளவில் தன் உலகவாழ்வைவிட்டு நீங்கிய செய்தி என் இதயத்தைக் கனக்கச் செய்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவுவைப் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அமுதுப் புலவர். தம்பிமுத்து – சேதுப்பிள்ளை தம்பதியினரின் மகனாக 1918ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி பிறந்த இவர், தன் ஆரம்பக் கல்வியை புனித சார்ள்ஸ் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த்துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றிருந்த இளவாலை அமுது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டத்தையும், இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் பண்டிதர் பட்டத்தையும் பெற்றவர்.

ஓய்வுபெற்ற முதலாம் தர ஆசிரியரான இவர், இளவாலை அமுது என்று ஈழத்துத் தமிழ்; இலக்கிய உலகில் பரவலாக அறிமுகமானவர். 1984ம் ஆண்டு முதல் தாயகத்திலிருந்து குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வந்து லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் வாழ்ந்து வந்தார்.

சுமார் ஏழு தசாப்தங்களாக இலக்கியத்துறையில் வேரோடி விழுதெறிந்து ஆலமரமாக வீற்றிருக்கும் அமுதுப்புலவரின் முதலாவது ஆக்கம் 1938ம் ஆண்டு சத்தியவேத பாதகாவலனில் மாதா அஞ்சலி என்ற தலைப்பில் பிரசுரமாகியிருந்தது. இதே காலப்பகுதியில் ஆசிரியர் கலாசாலையின் தூதன் என்ற சஞ்சிகையின் ஆண்டுமலருக்கு மலராசிரியராகப் பணியாற்றியும் இளவயதிலேயே தன் திறமையை அமுதுப்புலவர் வெளிப்படுத்தியிருந்தார். இளம் பத்திரிகையாளராக 1940ம் ஆண்டில் இளைஞர் அமுதசாகரன், போதினி என்ற பத்திரிகையையும் நடத்தியிருந்தார். அன்றுமுதல் இன்றுவரை இலங்கையின் அனைத்துத் தேசிய பிராந்திய தமிழ்ப் பத்திரிகைகளிலும், பெரும்பாலான சஞ்சிகைகளிலும், உலகெங்கும் வெளியாகியுள்ள பல்வேறு சிறப்பு மலர்களிலும் அமுதுப் புலவரின் படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.

நூலுருவில் வெளிவந்த இவரின் வெளியீடுகளான நெஞ்சே நினை, இவ்வழிச் சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள், அன்பின் கங்கை அன்னை தெரேசா, மடுமாதா காவியம் அல்லது மருதமடு மாதா காவிய மல்லிகை, அன்னம்மாள் ஆலய வரலாறு, அமுதுவின் கவிதைகள், இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள், ஆகிய நூல்கள் ஈழத்துத் தமிழ் மக்களின் இல்லம் தோறும் வலம் வந்து மனதைத் தொடும் வசனங்களாலும் மரபுக்கவிதைகளாலும் அவர்களிடையே இலக்கிய மணம் பரப்பி வருகின்றன.

அன்னை திரேசாவின் வாழ்க்கை வரலாற்று நூலும் மடுமாதா காவியம் என்ற ஈழத்து மருதமடுத்  திருத்தலம் பற்றிய காவிய நூலும் கடந்த காலங்களில் பரவலாக விதந்து பேசப்பெற்றவை. அமுதுவின் கவிதைகள் நூல் அமுதுப்புலவரின் கவிதாபுலமையை கச்சிதமாகப் பதிவுசெய்துவைத்திருக்கும் ஒரு இலக்கியப் பெட்டகமாகும். இன்று வளரும் இளம் கவிஞர்களின் கைகளில் தவழ்ந்துவரும் இந்த நூலும் அண்மைக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அமுதுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைக் கெளரவிக்கும் வகையில் பல்வேறு அறிவுசார் நிறுவனங்களும் அவரைக் கௌரவித்திருக்கின்றன. இவரின் சமய இலக்கியத் தொண்டினை கௌரவித்து 2004ம் ஆண்டில் ரோமாபுரியில் பரிசுத்த பாப்பரசரினால் செவாலியர் விருது வழங்கப்பட்டது. பின்னர் 2005இல் இலங்கை அரசு கலாபூஷணம் விருதையும் அமுதுப் புலவருக்கு வழங்கியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொளரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும் அதே ஆண்டில் வழங்கியிருந்தது. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது.

தனது தொன்னூற்றிரண்டு வயதினைக் கடந்து இதுவரை திடகாத்திரமான முதிய இளைஞனாக நம்மிடையே வலம்வந்த அமுதுப் புலவர் இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தியை மனது என்னவோ நம்பவே மறுக்கின்றது.

அமுதுப் புலவரின் முன்னைய படைப்புகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாக 1600 பக்கங்களில் வெளியாகிய “இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்”  என்ற நூலின் வெளியீடும், அமுதுப் புலவருக்கு மூதறிஞர் பட்டமளித்துப் பாராட்டும் விழாவும் இம்மாதம் ஏழாம் திகதிதான் (07.02.2010) வெகு சிறப்பாக நடந்தேறியிருந்தது.

முத்தமிழ் அறிஞர் தாசீசியஸ் அவர்களின் தலைமையில் இலக்கிய விழாக்களின் வழமைக்கு மாறாக மண்டபம் நிறைந்த அரங்கில் (Greenford Hall) லண்டனில் வாழும் இலக்கியப் பிரமுகர்கள் வாழ்த்துக்கூற, அமுதுப் புலவர் 92 வயதிலும் தளராத உறுதியுடன் அங்கு மேடையில் புன்முறுவலுடன வீற்றிருந்ததை இனி வாழ்வில் மறக்கமுடியாது.

அந்த மேடையிலே, இலங்கையிலிருந்து வந்திருந்த வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீ கஜன் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடமும், பத்து நிமிடமும் கறாராக பேச வழங்கிக்கொண்டிருந்த தலைவர் – அமுதுப் புலவருடைய பேச்சை மட்டும் நிறுத்தவேயில்லை. சலிப்பையே தராத – நகைச்சுவையும், நெகிழ்வும், கிண்டலும் கலந்த அந்த உரை இன்னமும் எனது காதுகளில் ரீங்காரமிடுகின்றன. 45 நிமிடங்களுக்கும் அதிகமாகப் பேசியிருப்பார். குறுக்கீடில்லாத அந்த உரையே அவரது இறுதி உரை என்பதை அவரே அன்று மேடையில் கூறியவேளை சிரித்தவர்களும் சிரிப்பை மறந்தனர். அன்றைய மேடையில் நான் உரையாற்ற வாய்ப்புக் கிட்டவில்லை. அதனை அவர் நன்றாக உணர்ந்துமிருந்தார். தனது உரையிலேயே அதனைக் குறிப்பிட்டதுடன், பின்னர் மேடையில் அவரது நூலைப் பெற்றுக்கொள்ளச் சென்ற வேளையில் ஒரு தந்தையின் பரிவுடனும், பாசத்துடனும் என்னைக் கட்டியணைத்து உச்சிமோந்து- நூலை வழங்கியமை என்னை மெய்சிலிர்க்கவைத்ததுடன் கண்களில் நீரையும் வரவழைத்தது.

அன்றைய நிகழ்வினை ஒழுங்குசெய்த அமுதுப் புலவரின் குடும்பத்தினரும் விழாக் குழுவினரும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஒரு பாரிய திருப்திகரமான சேவையைச் செய்திருக்கிறார்கள். தன் வாழ்நாளில் வளமுடனும், நிறைவுடனும் ஒரு கவிஞராக வாழ்ந்து முதுமையை எட்டிய ஒரு முழமையான மனிதரை அவர் வாழ்ந்த தமிழ் அறிவோர் சமூகம் வாழ்த்தி மன நிறைவுடன் வழியனுப்பி வைத்துள்ளது. இத்தகைய திருப்திகரமானதும் மன நிறைவானதுமான வழியனுப்புதல்கள் எங்கள் அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

மறைந்தும் மறையாத அமுதுப்புலவர் அடைக்கலமுத்து அமுதசாகரன் – கலாபூசணம் புன்னியாமீன்

அமுதுப் புலவர் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த இளவாலை அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் 23.2.2010 இலண்டனில் தன் உலக வாழ்வைவிட்டு நீங்கிய செய்தி எம் இதயங்களைக் கனக்கச் செய்தது. அன்னாரின் மறைவையிட்டு இந்தக் கட்டுரை இடம்பெறுகின்றது.

வடமாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவுக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் ‘இளவாலை அமுது’ எனும் பெயரில் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலும்,  புலம்பெயர்ந்த இலக்கியப் பரப்பிலும் நன்கு அறிமுகமான மூத்த எழுத்தாளரும்,  கவிஞருமாவார். அமுது, மறைமணி எனும் பெயர்களிலும் எழுதி வந்த ‘அமுதுப் புலவர்’ 1984ம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம்பெயர்ந்து தனது குடும்பத்துடன் லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் வாழ்ந்து வந்தார்;

தம்பிமுத்து,  சேதுப்பிள்ளை தம்பதியினரின் புதல்வாரன இவர் யாழ்ப்பாணம் சென். சார்ள்ஸ் வித்தியாலயம்,  யாழ். சேன் பற்றிக்ஸ் கல்லூரி, கொலம்பகம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை,  பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த் துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ‘வித்துவான்’ பட்டமும் இலங்கை கல்வித்தணைக்களத்தில் ‘பண்டிதர்’ பட்டமும் பெற்ற இவர்,  ஓய்வுபெற்ற முதலாம்தர ஆசிரியருமாவார்.

சுமார் 7 தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்துறையில் முனைப்புடன் செயற்பட்டு வரும் அமுதுப் புலவரின் கன்னியாக்கம் 1938ம் ஆண்டு இலங்கையில் முதலாவது தமிழ்ப் பத்திரிகையெனக் கருதப்படும் ‘சத்தியவேத பாதுகாவலன்’ எனும் பத்திரிகையில் ‘மாதா அஞ்சலி’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இதே காலப்பகுதியில் ஆசிரியர் கலாசாலையின் ‘தூதன்’ என்ற சஞ்சிகையின் 100வது ஆண்டு மலருக்கு ஆசிரியராக நின்று பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் வீரகேசரி,  தினகரன்,  சத்தியநேசன், காவலன், ஈழநாடு, உதயன், ஈழகேசரி,  புதினம், அஞ்சல்,  தொடுவானம்,  ஈழமுரசு போன்ற பல்வேறு சஞ்சிகைகளிலும்,  பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. பல வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.

இத்தகைய இவரது ஆக்கங்களில் சில இதுவரை 11 நூல்களாக வெளிவந்துள்ளன. 1940ம் ஆண்டில் வெளிவந்த ‘மாதா அஞ்சலி’ எனும் நூல் இவரின் முதலாவது நூலாகும். இதைத் தொடர்ந்து வெளிவந்த இவரின் நூல்கள் பின்வருமாறு:

நெஞ்சே நினை (வரலாறு)
இவ்வழி சென்ற இனிய மனிதன் (சிறுகதைத் தொகுதி)
காக்கும் கரங்கள்
அமுதுவின் கவிதைகள்
அன்பின் கங்கை அன்னை திரேசா
மருத மடு மாதா காவிய மல்லிகை
அமுதுவின் கவிதைகள் (திருத்திய இரண்டாம் பதிப்பு)
அன்னம்பாள் ஆலய வரலாறு
இந்த வேலிக்குக் கதியல் போட்டவர்கள்.
“இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்” 

அமுதுப் புலவரின் முன்னைய படைப்புகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாக 1600 பக்கங்களில் வெளியாகிய “இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்”  என்ற நூலின் வெளியீடும், அமுதுப் புலவருக்கு மூதறிஞர் பட்டமளித்துப் பாராட்டும் விழாவும் இம்மாதம் ஏழாம் திகதிதான் (07.02.2010) வெகு சிறப்பாக லண்டனில் அவரது 92வது வயதில் நடந்தேறியமையும் குறிப்பிடத்தக்கது.

இவரின் ‘அமுதுவின் கவிதைகள்’ என்ற நூலின் முதற்பகுதி சில்லாலை வைத்தியர் இன்னாசித்தம்பி அவர்களின் நினைவாக நிறுவப்பெற்ற ‘தம்பி’ தமிழ் அரங்கத்தினால் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் இவர் தெரிவித்திருந்த சில கருத்துக்கள் அனைவரினதும் மனங்களை நெருடக்கூடியவை. அதனை அவரின் வரிகளிலேயே தருவது பொருத்தமானதாக அமையும்.

“….வீட்டிலும்,  நாட்டிலும் இரத்தத்துளிகள். தமிழன் என்ற  வேருக்கே கோடாரி வைக்கப்பட்டது. இடம்பெயர்ந்து இங்கிலாந்துக்கு வரவேண்டியதாயிற்று. ஒரு ஒற்றைத் தாளைத் தானும் உடன் கொண்டு வந்தால்,  இடையே உள்ள இருபது தடைமுகாம்களிலும்,  ஆபத்தை விலைக்கு வேண்டுவதாய் முடியும். இந்த நிலையில் நான்  நீண்ட காலமாகத் தேடித் திரட்டிய நூல்களையும்,  எனது கவிதைக் கோவைகளையும்,  என் இல்லத்தில் பக்குவமாய் வைத்து விட்டுப் பிறநாடு வந்து சேர்ந்தேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு என் இல்லத்துக்குச் சென்ற போது அங்கே சுடுகாட்டின் மௌனம் தோன்றியது. கடுகு மணியொன்றைக் கண்டெடுத்தாலும்,  காகிதத் துண்டு ஒன்றைக் காணமுடியவில்லை. திருடர்கள் திருவிழா நடத்தியிருக்க வேண்டும.; வாழ்ந்த சுவடுகள் கூடத் திருடப்பட்டு விட்டன…..”

இது அமுதுப் புலவரின் முகவுரை வரிகள். இந்த வரிகள் அமுதுப்புலவரின் சொந்த வரிகள் அல்ல. தாயகத்தை விட்டுப் புகலிடம் வந்த பலரின் ஆத்மாவின் குரல்கள் இளவாலை அமுதுவின் தொலைந்து போன கவிதைகள் கூட இன்று நூலுருவில் வெளியாக அவருக்கு ஒரு நண்பர் இருந்திருக்கிறார். சட்டத்தரணி இரா. ஜெயசிங்கம் அவர்கள் அமுதுவின் கவிதைகளை பத்திரிகைகளில் இருந்து தனது ஆர்வத்தின் காரணமாகத் தொகுத்து வைத்திருக்கின்றார். அந்தக் கவிதைகளும் சேர்ந்தே முதலாவது பதிப்பாக ‘அமுதுவின் கவிதைகள்’ வெளிவந்தன.

இளவாலை அமுதுவின் சில நூல்கள் பற்றி பிரபல எழுத்தாளரும், நூலாசிரியருமான என். செல்வராஜா அவர்கள் தனது நூல் தேட்டம் பாகம் 1இல் 508, 874வது பதிவுகளாகவும், பாகம் 3 இல் 2098, 2867வது பதிவுகளாகவும் பாகம் 4இல் 3648 வது பதிவாகவும் பதிவாக்கியிருந்தார். அக்குறிப்புகளைப் பின்வருமாறு அவதானிக்கலாம்.

அன்பின் கங்கை, அன்னை திரேசா: இளவாலை அமுது (இயற்பெயர்- அமுதசாகரன் அடைக்கலமுத்து) லண்டன்: தமிழரங்கம், மே 1997. (லண்டன்: வாசன் அச்சகம்)
(16),230 பக்கம், புகைப்படங்கள். விலை: ஸ்டேர்லிங் பவுண் 5.00. அளவு: 20X14.5 சமீ.

அன்னை திரேசா என்ற பெயர் பலருக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் அந்தப் பெயருக்குள் இருக்கும் அன்னையின் பணிகளைத் தெரிந்தவர்கள் ஒரு சிலரே. அவர் வாழ்க்கை இனிய தமிழில் நூலுருவாகியுள்ளது. கத்தோலிக்கத் துறவியாக அழைப்புப்பெற்று ஆசிரியராக இந்து முஸ்லீம் மக்களிடையே கடமையாற்றிய வேளை வாழ்வின் விளிம்பில் நின்று தவிப்போருடன் தொடர்பு கொண்ட அன்னை திரேசாவின் கதையை இளவாலை அமுது நூலாகப் படைத்துள்ளார். இக்கதை ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறாக மட்டு மின்றி ஒரு தொண்டர் நிறுவனத்தின் வரலாறாகவும் அமைகின்றது.

நெஞ்சே நினை: சுவாமி ஞானப்பிரகாசர் வாழ்க்கை வரலாறு. ச.அடைக்கலமுத்து, (புனைபெயர்: இளவாலை அமுது). யாழ்ப்பாணம்: யாழ். மறைமாவட்ட இலக்கியக் கழகம், ஆயர் இல்லம், 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
(16), 210 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 21X14 சமீ.

மானிப்பாயில் பிறந்து, அச்சுவேலியில் வளர்ந்து நல்லூரிலிருந்து முழு உலகிற்கும் தொண்டாற்றி 1947 தைத்திங்கள் 22ம் நாள் மறைந்த பன்மொழிப்புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் வாழ்வும் பணியும் இங்கு இலக்கியச் சுவை சொட்டக் கூறப்பட்டுள்ளது.

இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள்:  இளவாலை அமுது. லண்டன் SW17 7EZ: புதினம் 10ஆவது ஆண்டு நிறைவு வெளியீடு, 38, Moffat Road , 1வது பதிப்பு, மே 2006. (யாழ்ப்பாணம்; புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360 பிரதான வீதி).
213 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண் 5., அளவு: 21X14.5 சமீ.

புலவர்மணி கலாநிதி இளவாலை அமுது அவர்கள் லண்டன் புதினம் இருவாரப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்த வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. தமிழ் வளர்த்த சான்றோர்கள் மாத்திரமன்றி, சமகால ஊடகத்துறையினர், எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் என்று 44 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை முதல் மறைந்த மனிதகுல மாணிக்கம் இரண்டாம் யோவான் பவுல் (பாப்பாண்டவர்) வரை விரிந்துள்ள இத்தொடரில், சமகால புகலிடக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

மருத மடுமாதா காவிய மல்லிகை. அமுதசாகரன் அடைக்கல முத்து (புனைபெயர்: அமுது). லண்டன்: தமிழ் அரங்கம்,  87, Hazelmere Walk, Northolt, Middlesex, UB5 6UR. 1வது பதிப்பு, 1998 (கொழும்பு 13: லங்கா பப்ளிசிங் ஹவுஸ்)
(32),162 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21ஒ13.5 சமீ.

இலங்கையில் மருதமடுத்திருப்பதியில் வீற்றிருக்கும் மடுமாதா பேரில் பாடப்பெற்றதும், மரபுக்கவிதைகளில் எழுதப்பெற்றதுமான காவிய நூல். அட்டையில் மடுமாதா காவியம் என்ற தலைப்புடன் வெளிவந்துள்ளது.

அமுதுவின் கவிதைகள். இளவாலை அமுது. இலண்டன்:  Tamil Literary Society 2வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1991. (சென்னை 17: Manimekalai Prasuram, T. Nagar).
240 பக்கம், விலை: இந்திய ரூபா 100, அளவு: 21.5X14.5 சமீ.

வைத்தியர் இன்னாசித்தம்பி அவர்களின் நினைவாக நிறுவப்பெற்ற பண்டத்தரிப்பு தம்பி தமிழ் அரங்கத்தின் முதலாவது பதிப்பாக 1991இல் வெளியான அமுதுவின் கவிதைகளின் திருத்திய மறு பதிப்பு இதுவாகும். அமுதுப்புலவர், இளவாலை அமுது என்று நம்மிடையே அறிமுகமாகியுள்ள அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்களின் இத்தொகுதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசியபானம் என்ற தலைப்பில் 17 கவிதைகளையும், சிந்தனைச் சந்தனம் என்ற பிரிவில் 35 கவிதைகளையும், முல்லையில் கிள்ளிய மொட்டுக்கள் என்ற தலைப்பில் 20 கவிதைகளையும், நெஞ்சில் தோன்றிய நினைவுச் சுடர்கள் என்ற தலைப்பில் தமிழ்ப் பெரியார்கள் பற்றிய 27 கவிதைகளையும், கதிரொளியில் சில துளிகள் என்ற தலைப்பில் 11 கவிதைகளையும் உள்ளடக்கியுள்ளன.

தமிழ்மொழிக்கு இவர் ஆற்றியுள்ள பங்களிப்பு, தமிழர் பண்பாட்டுக்கு இவரின் பணி, சமயத்துக்காக இவரின் சேவைகள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு 2004ம் ஆண்டில் உரோமா புரியில் பரிசுத்த பாப்பாண்டவர் அவர்களினால் “செவாலியர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதைத் தம் வாழ்வில் கிடைத்த மாபெரும் கௌரவமாக கருதி வரும் இளவாலை அமுது அவர்களுக்கு, ஸ்ரீ  லங்கா அரசு 2005ம் ஆண்டில் ‘கலாபூஷணம்” விருது வழங்கியும், யாழ் பல்கலைக்கழகம் ‘கலாநிதி’ பட்டம் வழங்கியும் கௌரவித்துள்ளன. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது. அத்துடன் தாயகத்திலும் புகலிடத்திலும், பல்வேறு அமைப்புக்கள் கவிமாமணி, தமிழ் கங்கை,  மதுரகவி,  சொல்லின் செல்வர்,  புலவர் மணி,  செந்தமிழ்ச் செல்வர் போன்ற பட்டங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

எத்தகைய பட்டங்களைப் பெற்றாலும், எதுவித கர்வமுமின்றி இனிதாகப் பழகும் சுபாவம் கொண்ட இம்முதுபெரும் ‘தமிழ் வித்தகர்” ஆரம்ப காலங்களில் தான் இலக்கியத் துறையில் ஈடுபடுவதற்கும்,  அதே போல பல்வேறுபட்ட மனச்சோர்வுகளுடன் புலம்பெயர்ந்த பின்பு தனது எழுத்துத் துறை ஆர்வத்தைத் தூண்டி, எழுத மீண்டும் ஊக்கமளித்தவர்கள் என்ற அடிப்படையிலும், பண்டிதமணி கணபதிப்பிள்ளை,  புலவர் இளமுருகனார், ஆயர் தியோகிப்பிள்ளை,  கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் ஈ. கே. இராஜகோபால் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வந்தார்.

மரபுக் கவிதையே வழிவழி தொடர வேண்டும் என்ற அவாக் கொண்டிருந்த இவரின் அன்பு மனைவி ஆசிரியை திரேசா ஆவார். எழுத்துத்துறையிலும், கவிதைத்துறையிலும் பல்வேறு பட்ட சாதனைப் புரிந்துள்ள, இளவாலை அமுது அவர்கள் சுமார் அறுபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பத்திரிகையாளராக ‘இளைஞர் போதினி’ எனும் பத்திரிகையை (1940ம் ஆண்டில்) நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அமுதுப் புலவர் – இளவாலை அமுது இன்று காலமானார்!

அமுதுப் புலவர் இளவாலை அமுது ஆகிய பெயர்களால் அறியப்பட்ட அடைக்கலமுத்து இன்று (பெப்ரவரி 23) காலமானார். பல்வேறு சிறப்புப் பட்டங்களைப் பெற்ற இவரின் ஆக்கங்களின் தொகுப்பு சில வாரங்களுக்கு முன்னதாக லண்டனில் வெளியிடப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களான கலாநிதி சந்திரகாந்தன் கலாநிதி வசந்தன் ஆகியோரின் தந்தையார் ஆவர். கலாநிதி வசந்தன் லண்டனிலும் கலாநிதி சந்திரகாந்தன் கனடாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.