கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

”போரின்போது பொதுமக்கள் சந்தித்த பெரும் அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்பும் காரணமாக இருந்தன” ஆணைக்குழுவின் முன் சாட்சியம்!

Wanni_War_Mullivaykkal”போரின்போது பொதுமக்கள் சந்தித்த பெரும் அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்பும் காரணமாக இருந்தன. இறுதிக்கட்டப் போரில் படையினர் தடைசெய்யப்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தினர் நாளொன்றுக்கு 400 பேர் வரையில் பலியாகினர்”’ நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம்!

போரின் இறுதிக் கட்டங்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கிளிநொச்சியில் தற்போது நடைபெற்றுவரும் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணக்குழுவின் முன்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துக்களையும் சாட்சியங்களையும்  தெரிவித்து வருகின்றனர். இவ்வகையில் படையினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் மற்றும் இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியமை குறித்தும் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூனகரி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற விசாரணைகளின் போது  கமநல உத்தியோகத்தரான ந. சுந்தரமூர்த்தி என்பவர் தனது சாட்சியத்தில் இவ்விடயங்கள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் படைத்தரப்பு புதுமாத்தளன் பகுதியில் கொத்துக்குண்டுகளையும், பொஸ்பரஸ் இரசாயனக் குண்டுகளையும் பயன்படுத்தியதெனவும் இதனால் பொதுமக்ளுக்கு பெரும் உயிரிழப்புகள் எற்பட்டதெனவும், நாளொன்றுக்கு 400 பேர் வரையில் பலியாகியதுடன் 1000பேர் வரை காயமுற்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகளுக்கெதிராக இக்குண்டுகளை படையினர் பயன்படுத்தியிருந்தாலும் அவை அப்பாவி பொதுமக்கள் மீதே வீழ்ந்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போர் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதியிலிருந்து பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் மக்களை தடுப்பதற்காக புலிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து மக்களை அச்சுறுத்தியுறுத்தியதாகவும், இவ்வாறு செல்ல முயலும் பொதுமக்களை பச்சைமட்டையால் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

போரின்போது பொதுமக்கள் சந்தித்த பெரும் அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்பும் காரணமாக இருந்தன எனவும் அவர் தெரிவித்தார்.

._._._._._.

மீள்பிரசுரம்: கிளிநொச்சி மக்கள் சாட்சியமளித்தனர் – பிபிசி தமிழோசை (செப்ரம்பர் 19 2010)

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம்-கண்டாவளை பிரதேச செயலகத்தில் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இரண்டாவது நாளாக விசாரணைகளை நடத்தியது.
ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் காணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் கோரினர்.

இங்கு சாட்சியமளித்த 58 வயதான கந்தசாமி பொன்னம்மா என்ற தாய், இறுதிப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினராகிய தனது மருமகனும் தனது மகளும் அவர்களது இரண்டு குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக பிபிசியிடம் கூறினார்.

அத்துடன் மல்லாவி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிய தனது மகன் ஒருவர், 2006 ஆம் ஆண்டில் வவுனியாவுக்குச் சென்றிருந்த போது காணாமல் போனதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கண்டாவளையைச் சேர்ந்த காசிப்பிள்ளை பாலேஸ்வரன் என்பவர் ஆணைக்குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பார்வை இழந்துள்ள இவர், போரினால் பாதிக்கப்பட்டு, உடல் வலுவிழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, திங்கட்கிழமை முல்லைத்தீவு நகருக்குச் சென்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் புலிகள் விபத்தில் குண்டுவெடிப்பில் இறந்த செய்தியை பொலிஸார் மறுத்துள்ளனர். : மட்டக்களப்பு வெடிகுண்டு விபத்து

batti222.jpgகரடியனாறு வெடிவிபத்தில் முன்னாள் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை பொலிஸ் தரப்பு மறுத்துள்ளது.

கரடியனாறு குண்டுவெடிப்பில் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளும் உயிரிழந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமான இணையத்தளம் என்று அறியப்பட்ட தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளியான செய்தியை பொலிஸ் மறுத்துள்ளது.

மட்டக்களப்பு கரடியனாறு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முன்னாள் புலிப்போராளிகள் பலியாகியிருக்க சாத்தியமில்லை எனவும், இது குறித்து தமக்கு எவ்வித தகவலோ அறிக்கையோ கிடைக்கவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலிப்போராளிகள் சீன நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர் என்றும், குறித்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அவர்களும் பலியாகினர் என்றும் தமிழ்நெற் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் தொகை 60 என சம்பவம் நடைபெற்றவுடன் முதலில் வெளியான செய்திகள் தெரிவித்திருந்தன. பின்னர் கொல்லப்பட்டவர்களின் தொகை 26 என பொலிஸார் தெரிவித்திருந்தனர். பொலிஸ்மாஅதிபர் மகிந்த பாலசூரிய வெளியட்டிருந்த அறிக்கையில் கொல்லப்பட்டவர்கள் 19 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாறுபட்ட தகவல்கள் குறித்து சந்தேகங்கள் தோன்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 பொலிஸ் குழுக்கள், புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் நிரப்பிய கொள்கலன் வெடிப்புக்கு திடீர் விபத்தே காரணம்; நாசவேலை காரணமல்ல என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரும், குற்ற புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் நடாத்திய புலன் விசாரணைகளில் இந்த விடயம் உறுதிப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் வெடி மருந்து நிரப்பிய இரு கொள்கலன்கள் நேற்று முன்தினம் வெடித்துச் சிதறிய சம்பவத்தைக் கேள்வியுற்றதும் நேரில் சென்று திரும்பிய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

இச் சம்பவத்தில் 12 பொலிஸாரும், 07 பொது மக்களும், 02 சீன பிரஜைகளுமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இச் சம்பவத்தில் 19 பொலிஸாரும் 21 பொது மக்களும் காயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸாரில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர். இவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் நேற்று கூறின.

இதேவேளை மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களில் எவரும் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்படவில்லை. இச் சம்பவத்தில் காயமடைந்து எமது ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களின் உடல் நிலை தேறிவருவதாக ஆஸ்பத்திரி பணிப்பாளர் டொக்டர் கந்தசாமி முருகானந்தம் கூறினார். சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு தொகுதியினர் இன்று அல்லது நாளை வீடு திரும்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

துக்கம் அனுஸ்டிப்பு

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் பலியானவர்களுக்காக இன்று மட்டக்களப்பில் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டுகிறது. மட்டக்களப்பு நகரின் பிரதான மணிக்கூட்டுக் கோபுரம், அரசடி ஆஞ்சநேயர் மணிக்கூட்டுக்கோபுரம், மற்றும் பிரதான வீதிகள் , ஏனைய பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கரடியானாறு வெடிவிபத்து குறித்து சீனத்தூதரகம் விசாரணை நடத்துகிறது.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இக்குண்டு வெடிப்பு நடைபெற்ற கரடியனாறு பகுதிக்கு சீனத்தூதரகம் குழுவொன்றை அனுப்பிவைத்துள்ளது.

கிழக்கில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான கொள்கலனிலிருந்த வெடிப்பொருட்களே நேற்று வெடித்து பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திருந்தது. இதில் இரு சீனப்பிரஜைகளும் உயிரிழந்தனர்.  இவ்வெடிவிபத்து எவ்வாறு எற்பட்டது என்பது தொடர்பாக முழுமையான விசாரணைகளை சீனத்தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை உடனடியாக நடத்துமாறு தற்போது அமெரிக்கால் தங்கியுள்ள ஜனாதிபதி மகந்த ராஜபக்ச அங்கிருந்து பாதுகாப்புத்தரப்பிற்கு  உத்தரவிட்டுள்ளார்.

 மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய குண்டு விபத்தில் 25 பேர்வரை மரணம்

மட்டக்களப்பில கரடியனாறு பகுதியில் கட்டிட வேலைக்கு பயன்படுத்த வழங்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் 25 பேர் கொல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது. இச்சம்பவத்தில் 60 ற்கு மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளிவந்த போதும் பாதுகாப்புத் தரப்புகளிலிருந்து கிடைத்த செய்திகளின் படி 25 பேரின் மரணமே உறுதிப்படுத்தப்பட்டன. 52 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பலியானவர்களில் இருவர் சீன பிரஜைகளாவர். காயமடைந்தவர்களில் 24 பேர் பொலிஸார் எனவும் 28 பேர் சிவிலியன்கள் எனவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

 கட்டிட வேலைகளுக்கு வெடிபொருட்களை வழங்க நிறுத்தப்பட்ட வாகனம் அப்பகுதியில் இருந்த பொலிஸ் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பொலிஸ் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கும் வெடிப்புக்கு உள்ளாகியதால் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.

பாரிய சத்தத்துடன் இடம்பெற்ற இந்த வெடிவிபத்து வேலைநேரத்தில் இடம்பெற்ற விபத்து என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மே 18இன் பின் ஏற்பட்ட மிகப்பெரும் குண்டு வெடிப்பு இதுவாகும். இலங்கையில் அண்மைக் காலத்தில் நிகழ்ந்த பாரிய விபத்து மரணமாகவும் உள்ளது. வெடிபொருட்களைப் பயன்படுத்தம் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினாலேயே இப்பாரிய அழிவு இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

batti222.jpgஇவ்விபத்தில் அருகில் இருந்த பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளது. கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பணியாளர்களும் எனத் தெரியவருகின்றது. கொல்லப்பட்டவர்களில் சீனப் பணியாளர்கள் இருவரும் அடங்குவதாகத் தெரியவருகிறது.

இதுபற்றி தேசம்நெற் இணையத்திற்கு தகவல் அளித்த வி மகேந்திரன் கூட்டம் ஒன்றை நடாத்திக் கொண்டிருக்கும் போது இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவித்தார். இலங்கை நேரம் காலை 10:40 க்கு நிகழ்ந்த இப் பாரிய குண்டுவெடிப்பு 20 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும் தெரிவித்தார்.

கொழும்பு  – மட்டக்களப்பு பாதையை திருத்தி அமைக்கும் சீன நிறுவனம் புல்லுமலையில் உள்ள குன்றுகளைத் தகர்ப்பதற்கு பெருமளவு டைனமைட் வெடிபொருட்களை அப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் இவ்வெடிபொருட்கள் கரடியனாறு பொலிஸ் ஆயுதக்கிடங்கிலும் சேகரிக்கப்ட்டு இருந்து. இந்த டைனமைட்டை கையாளும் போதே இந்த வெடிவிபத்து நிகழ்ந்து பொலிஸ் ஆயுதக் கிடங்கிலும் விபத்தை ஏற்படுத்தி உள்ளது என வி மகேந்திரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இந்பாரிய விபத்தால் பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மருத்துவமனையும் அப்பகுதியால் சென்று கொண்டிருந்த பேருந்தும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தாங்கள் அறிவதாகவும் வி மகேந்திரன் தெரிவித்தார். மேலும் பொலிஸ் நிலையத்திற்கு தங்கள் முறைப்பாடுகள் மற்றும் காரணங்களுக்காகச் சென்ற சிலரும் கொல்லப்பட்டு இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

இப்பகுதி முற்றாக பொதுமக்களுக்கு தடுக்கப்பட்டு இருப்பதாகவும் வி மகேந்திரன் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சு தகவல்

batti17.jpgகரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் 10 பொலிஸார், 2 சீன நாட்டவர்கள் மற்றும் 7 பொதுமக்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 52 பேர் காயமுற்றவர்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை 44 பேர் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 4 பொலிஸ் உத்தியோகத்தரகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 40 பேரில் 21 பொதுமக்களும் 19 பொலிஸார்கள் உள்ளடங்குவதாகவும் மட்டு.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் முருகானந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் 6 பொதுமக்கள், 2 பொலிஸார், 2 சீனநாட்டவர்கள் உட்பட 10 பேரின் சடலங்கள் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘அருள்’ சகோதரர்களுக்கு ஒரு சிறப்புமுகாம் அகதியின் கடிதம்.

SpecialCamp_Detainee இக்கடிதம் தேசம்நெற் இணையத்தின் கருத்தக்களம் பகுதியில் பதிவிடப்பட்டு உள்ளது. அகதி என்ற பெயரில் இக்கடிதத்தைப் பதிவிட்டுள்ள கருத்தாளர் தான் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வாழ்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இக்கருத்தாளர் பற்றிய எவ்வித விபரமும் தேசம்நெற் ஆசிரியர் குழுவினருக்குத் தெரியாது. ஆனாலும் அவர் வெளிக்கொண்டுவர விரும்பும் சிறப்புமுகாம் – சிறைமுகாம் அவலம் கருதி இக்கடிதத்தை தேசம்நெற் பிரசுரிக்கிறது.

தமிழகத்தின் சிறப்புமுகாம்கள் பற்றி அம்முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த எஸ் பாலச்சந்திரன் தேசம் சஞ்சிகையின் 16வது இதழில் – 2004 ஜனவரியில் ‘சிறப்புமுகாம் மிகப்பெரும் மனித உரிமைமீறல்’ என்ற தலைப்பில்ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதி இருந்தார்.

SpecialCamp_TN_S__Balachandran_Documentமேலும் துறையூர் சிறப்புமுகாமில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சிவா 1994 ஒக்ரோபர் 10ல் வழங்கிய சாட்சியம் தேசம் சஞ்சிகையின் இதழ் 18ல் 2004 மேயில் ‘நாம் புதைக்கப்படுபவர்கள் அல்ல விதைக்கப்படுபவர்கள் : கூண்டிலிருந்து ஒரு குரல்’ என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது.

இவற்றினை இன்னும் சில தினங்களில் மீள்பிரசுரம் செய்கிறோம்.

தேசம்நெற்.
._._._._._.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு அப்பாவி அகதியின் இக் கடிதத்தை யாராவது இந்த “அருள” சகோதரர்களுக்கு அனுப்பி வைப்பார்களா?

சிறப்பு முகாம்
செங்கல்பட்டு
19.09.2010

மதிப்புக்குரிய அருள் சகோதரர்களே!

சதா நேரமும் ஈழத் தமிழனுக்காக மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் உங்கள் மகிமை பற்றி தெரியாமல் “தமிழரங்கம்” ரயாகரனும் “தேசம்நெற்” ஜெயபாலனும் நீங்கள் யாரோ தமிழனைக் கடத்தி காசு சம்பாதிப்பதாக எழுதியதை அறிந்து கண்ணீர் வடித்தேன். உங்கள் மொழியில் சொல்வதானால் அவர்கள் “மனநோயாளிகள்”;. உங்கள் நண்பர் நாவலன் மொழியில் சொல்வதானால் அவர்கள் “மகிந்தவின் கைக்கூலிகள்”. எனவே அவர்கள் தவறுகளை மன்னித்து தொடர்ந்தும் எங்களுக்காக குரல் கொடுங்கள். எங்களுக்கு விமோசனம் கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் அல்லவா! பாவம் ஈழத்தமிழன். அவன் இளிச்சவாயனாக இருக்கும்வரை உங்கள் போராட்டம்(!) தொடரட்டும்.

நீங்கள் ஆயிரக்கணக்கில் சம்பளம் பெறுவதையும் லட்சக்கணக்கில் வியாபாரம் செய்வதையும் பொறுக்கமுடியாத ரயாகரனும் ஜெயபாலனும் நீங்கள் செய்த கடத்தலைக் கொச்சைப் படுத்துகின்றனர். நீங்கள் குறிப்பிட்டது போன்று உண்மையில் அவர்கள் மனநோயாளிகள்தான். ஏனெனில் நீங்கள் செய்த கடத்தல் பணி எந்தளவு பெரிய “புரட்சிப்பணி” என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமா? ஒரு புறத்தில் அரச கைக்கூலியான குகநாதனுடன் வியாபாரம். மறுபுறத்தில் புலிகளின் தலைவர் பாலசிங்கத்துடன் பேட்டி. அதற்கும் மேலாக முள்ளிவாயக்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ்மக்களை கொன்று குவித்த இந்திய அரசை எதிர்த்து பக்கம் பக்கமாக கட்டுரை. அதே மறுபுறத்தில் இந்த கொலைகளுக்கு உதவி புரிந்த கருனாநிதி அரசின் உதவியுடன் குகநாதனை கடத்தி பணம் பறிப்பு. உங்களின் இந்த பலே கில்லாடித்தனங்களை புரிந்துகொண்டு நாவலன் போல் மாக்சியத்தின் பேரால் இதை நியாயப்படுத்தாமல் இதனை தமிழ்மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்திய ரயாகரனும் ஜெயபாலனும் உண்மையிலே உங்கள் மொழியில் மனநோயாளிகள்தான்.

தமிழ்மக்கள் தொடர்ந்து போராடினால்தான் உங்கள் கல்லா நன்றாக நிரம்பும் என்ற சின்ன “லாஜிக்” கூட புரிந்து கொள்ள முடியாமல் “தமிழ்மக்கள் தொடர்ந்தும் தமிழீழத்திற்காக போராட வேண்டும்” என்று நீங்கள் (பணம் பெற்றுக் கொண்டு) எழுதிய கட்டுரையை சிலர் சீரியஸாக எடுத்துக்கொண்டு “இதை சொல்ல உங்களுக்கு என்ன தகுதி?” என்று கேட்கின்றனர். பாவம் சின்னப் பயல்கள். உங்கள் மகத்தான பங்களிப்புகள் தெரியாமல் புலம்புகின்றனர். அவர்களையும் மன்னித்துவிடுங்கள்.

முள்ளிவாயக்காலில் பிரபாகரனுக்கு பக்கத்தில் இருந்து முழங்கிய பீரங்கியில் இருந்தது நீங்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்காது.(இன்னும் பத்துவருடம் கழித்து நீங்கள் எழுதப்போகும் கதையில் உள்ள இந்த விடயம் எனக்கு எப்படி தெரிந்தது என்று அச்சரியப்பட வேண்டாம். எல்லாம் “இனியொரு”வில் வெளியான உங்களின் சில கட்டுரைகளைப் படித்த கோளாறுதான் இது.)

அதைவிட ஈழத்தமிழனுக்காக தன்னுயிரை எரித்த முத்துக்குமரனுக்கு மண்ணெண்ணையும் தீப்பெட்டியும் வாங்கிக் கொடுத்த உங்கள் மகத்தான பங்களிப்பு இவர்களுக்கு தெரிய வாயப்பில்லை. (அது சரி தமிழனுக்காக உயிரைவிட நீங்கள் என்ன முத்துக்குமார் போன்று முட்டாள் அல்லவே. நீங்கள் தமிழனை வைத்துப் பிழைக்கும் புத்திசாலிக் கூட்டம் அல்லவா.)

நீங்களும் தானும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதிவிட்டதாக உங்கள் நண்பர் நாவலன் கூறுகிறார். அது உண்மையாயின் அதில் எத்தனை கட்டுரை தமிழ்நாட்டில் உள்ள அகதிமுகாம் கொடுமைகள் குறித்து எழுதப்பட்டன என்பதை கொஞ்சம் தெரிவியுங்கள். ஏனெனில் நீங்கள் மகிந்த கொடுமைகள் குறித்து மட்டும்தான் எழுதுவீர்கள். இந்திய அரசுக்கும் அதன் உளவுப்படைகளுக்கும் பிடிக்காத விடயங்களை எழுதமாட்டீர்கள் என இங்கு சிலர் கூறுகின்றனர். அது உண்மையா சகோதரர்களே?

யுத்தம் முடிந்து இரண்டு வருடம் ஆகிறது. ஆனால் புலி எனக் குறறம்சாட்டி கைது செய்து எந்தவித விசாரணையும் இன்றி பல வருடங்களாக இந்த சிறப்பு முகாமில் பூட்டிவைத்து சித்திரவதை செய்கிறது இந்திய மத்திய மாநில அரசுகள். வன்னியில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை மகிந்த அரசு விடுதலை செய்ய வேண்டும் என எழுதியும் போராடியும் வரும் நீங்கள் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் பெயரில் அப்பாவி தமிழ் அகதிகளை அடைத்துவைத்து சித்திரவதை செய்யும் கருனாநிதி அரசுக்கு எதிராக ஏன் எழுதவும் போராடவும் தயங்குகிறீர்கள்?

நீங்கள் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் ஒரு கட்டுரை கூட இந்த சிறப்புமுகாம் அகதிகள் பற்றி இல்லையே. அது ஏன்?

குகநாதனுக்கு எதிராக உயர்நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்த நீங்கள் அதே உயர்நீதிமன்றில் இந்த சிறப்புமுகாம் கொடுமைகளுக்காக ஒரு மனு தாக்கல் செய்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை?

குகநாதனுக்கு எதிராக பல வழக்கறிஞர்கள் பொலிஸ்கமிசனர் அலுவலகம் வந்து போராடியதாக அறிகிறேன். அது உண்மையாயின் இந்த வழக்கறிஞர் கூட்டத்தை பயன்படுத்தி இந்த சிறப்புமுகாம் அகதிகளுக்காக ஒரு முறை பொலிஸ்கமிசனர் அலுவலகம் செல்வீர்களா?

இவ்வாறு எல்லாம் கேள்வி கேட்டு உங்களை தர்மசங்கடப் படுத்துவது என் நோக்கம் அல்ல. மாறாக நீங்கள் உண்மையிலே ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்க விரும்பினால் முதலில் உங்கள் நாட்டில் உங்க மத்திய மாநில அரசுகள் அகதிகளுக்கு செய்யும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுங்கள். சிறப்பு முகாம் என்னும் பெயரில் நடத்தும் சித்திரவதை முகாமை மூட வழி செய்யுங்கள். அதன்பின் மகிந்த அரசின் கொடுமைகளை தாராளமாக கண்டியுங்கள். அப்பதான் உங்களைத் தமிழ்மக்கள் நம்புவார்கள். இல்லையேல் தமிழ்மக்களின் துயரத்தில் காசு சம்பாதிக்கும் ஈனப்பிறவிகள் என்று வரலாறு உங்களைக் கூறும்.

இப்படிக்கு

உங்களின் மகத்தான போராட்டத்தால் ஈழம் கிடைக்குதோ இல்லையோ குறைந்தது சிறப்புமுகாமாவது மூடப்பட வழிபிறக்கும் என அப்பாவியாக நம்பிக்கொண்டிருக்கும் ஒரு அகதி.
சிறப்பு முகாம் – செங்கல்பட்டு.

பேராசிரியர் ஜிப்ரி நேற்று காலமானார்

jiffry.jpgபல் கலைக்கழக மானிய ஆணைக்குழு உப தலைவரும் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக உடற்கூற்றுத் துறை சிரேஷ்ட பேராசிரியருமான எம். ரீ. எம். ஜிப்ரி (62) நேற்று கொழும்பில் காலமானார். சிலகாலம் நோய் வாய்ப்பட்டிருந்த இவர் நேற்று காலை மரணமானார்.

அன்னாரின் ஜனாஸா இலக்கம் 23 பிரிவேனை வீதி, இரத்மலானையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்தது. ஜனாஸா நல்லடக்கம் தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நேற்று மாலை இடம்பெற்றது. முஸ்லிம் கல்வி மாநாட்டு அமைப்பின் உறுப்பினராகவும் பணிபுரிந்த இவர் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

இடம்பெயர்ந்து வாழும் யாழ். முஸ்லிம்களின் விபரங்கள் நூல் வடிவில் வெளியிடப்படவுள்ளது.

Chavakachcheri_Jumma_Mosqueயாழில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 1990 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்ந்து வாழும் யாழ். முஸ்லிம்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவ்விபரங்களை நூல் வடிவில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவம் யாழ். மானிப்பாய் பெரிய முகைதின் ஜூம்மா பள்ளிவாசல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாதமளவில் இந்த நூல் வெளியீடு நடைபெறவள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உலாமாக்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள். கலை இலக்கியவாதிகள் சகலரும் தமது விபரங்களை அனுப்பி வைக்கலாம் என குறித்த பள்ளிவாசல் வட்டாரம் தெரிவித்துள்ளது.

”எமது கழகத்தில் நிதிநெருக்கடி உள்ளது. ஆனால் எமது முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் இதனைப் பெரிது படுத்துகின்றனர்!!!” வசந்தன் கிருஸ்ணன் (பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம்)

BTSL_Logoலண்டனில் தமிழ் விளையாட்டுக் கழகங்கள் லாபத்துடன் இயங்கி வருகின்றன. அப்படி இருக்கையில் மிகவும் வெறிறிகரமாகச் செயற்பட்ட பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் (British Tamils Spoerts League – BTSL) தற்போது நிதி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதாக அக்கழகத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டுக் கழகங்கள் தெரிவிக்கின்றன. பந்துகள் வாங்குவதும் நடுவருக்கு கட்டணம் செலுத்துவதுமே பிரச்சினையானதாக மாறியுள்ளது எனவும் தெரியவருகின்றது.

பிரித்தானிய விளையாட்டுக் கழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அதன் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணனை பிரித்தானியாவின் மிச்சம் பகுதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம். அவர்களுடைய விளையாட்டுக்குழுவின் சந்திப்பின் பின்னதாக எமது சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலம்சென்ற போராளி கேணல் கிட்டுவின் பெரிய படத்துடன் இருந்த அந்தச் சந்திப்பு அறையிலேயே இச்சந்திப்பு நடைபெற்றது. தேசம்நெற் சார்பில் நானும் நண்பர் த சோதிலிங்கமும் தமிழர் விளையாட்டுக் கழகம் சார்பில் அதன் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணன் வணங்கா மண் கப்பலில் பயணம் செய்த ஊடகவியலாளர் உதயணன் மற்றும் இரு உறுப்பினர்களும் இருந்தனர். பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் என்ற வகையில் வசந்தன் கிருஸ்ணனின் கருத்துக்கள் மட்டுமே இங்கு பதிவு செய்யப்படுகிறது.

எமது கேள்விகள் பெரும்பாலும் பிரித்தானிய விளையாட்டுக் கழகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அதன் அதன் நிதி நிர்வாகம், பிரித்ததானிய விளையாட்டுக் கழகத்தின் எதிர்காலம் பற்றியதாகவே இருந்தது.

இவற்றுக்குப் பதிலளித்த வசந்தன் கிருஸ்ணன் விளையாட்டுக் கழகம் சிறிய அளவில் நிதிநெருக்கடியை சந்தித்து உள்ளதாகவும் ஆனால் அது தங்கள் முன்னேற்றத்தை விரும்பாதவர்களால் பெரிதுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

‘பந்துகள் வாங்குவதற்கு பணம் வழங்கப்படுவதில்லை என்பதெல்லாம் உண்மையல்ல’ எனக் குறிப்பிட்ட அவர் ‘கிரிக்கட் விளையாட்டுக்கள் லண்டனின் பல்வேறு பாகங்களிலும் இடம்பெறுவதால் வாங்கிய பந்துகளை குறித்த நேரத்தில் விநியோகிக்க முடிவதில்லை’ எனத் தெரிவித்தார். இதற்கான மாற்று வழியாக விளையாட்டுக் கழகங்களே பந்துகளை வாங்கவும் நடுவருக்கான பணத்தைச் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். ‘அதற்கான செலவை தாங்கள் அவர்களுடைய கட்டணத்தில் இருந்து குறைத்துக் கொள்வோம்’ எனவும் வசந்தன் சுட்டிக்காட்டினார்.

‘விளையாட்டுக் கழகம் கிரிக்கட் போட்டிகளை ஆரம்பித்த காலங்களில் மிகக் குறைந்த கட்டணத்தையே வசூலித்தது’ என்றும் அதனால் ஆரம்ப வருடங்களில் ஏற்பட்ட நட்டமே இப்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார்.

தமிழர் விளையாட்டுக் கழகம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக 10 வருடங்களுக்கு மேலாக யாழ் இந்தக்கல்லூரிப் பழைய மாணவர் எஸ் ஸ்கந்தமூர்த்தி என்பவர் கிரிகட் போட்டிகளை ஆண்டு தோறும் நடாத்தி வந்தார். இவருடைய லீக்கில் இருந்த விளையாட்டுக் கழகங்களைக் கவருவதற்காகவே பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் மிகக் குறைந்த கட்டணத்தை அறவிட்டது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனால் அதுவே இப்போதைய நெருக்கடிக்கு காரணமாகவும் அமைந்துள்ளது என வசந்தன் கிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.

‘ஸ்கந்தமூர்த்தி உருவாக்கிய விளையாட்டுக் கழகத்தில் இருந்து ஆரம்பத்திலேயே வெளியேறி தங்களுடன் இணைந்தவர்கள்  அதிருப்தியடைந்து வெளியேறியவர்கள். அவர்கள் தாயகப் பற்றுடையவர்கள்’ எனக் கூறும் வசந்தன் கிருஸ்ணன் ‘இறுதியில் வெளியேறி தங்களுடன் இணைந்தவர்கள் வேறு வழியின்றியே தங்களுடன் இணைந்தனர்’ எனக் கூறினார். ‘பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்துடன் பெரும்பாலான கழகங்கள் இணைந்த நிலையில் ஸ்கந்தமூர்த்தியினால் விளையாட்டுப் போட்டிகளை நடாத்த முடியாது போனமையினால் ஏனைய கழகங்கள் விரும்பமின்றி விளையாட்டுப் போட்டியில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே வந்து இணைந்தனர்’ என்றும் வசந்தன் கிருஸ்ணன் விபரித்தார். இவ்வாறான விளையாட்டுக் கழகங்களே தற்போது சிறிய விவகாரங்களையும் பெரிதுபடுத்துவதாக அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய விளையாட்டுக் கழகம் தனது கணக்கு விபரங்களை ஏன் இதுவரை வெளியிடவில்லை எனக் கேட்கப்பட்ட போது, ‘கழகங்கள் விரும்பும்பட்சத்தில் அதனைப் பார்வையிட முடியும்’ எனத் தெரிவித்தார் வசந்தன் கிருஸ்ணன். ‘அண்மையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது அதில் கணக்கு விபரங்களை வெளியிட்டோம். ஆனால் பல கழகங்கள் அதில் சமூகமளிக்கவில்லை’ எனவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். உங்கள் விளையாட்டுக் கழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் உறுப்புரிமைக் கட்டணம் செலுத்தியே உறுப்பினராக உள்ளனர். ஆகவே நீங்கள் கணக்கு விபரத்தை அவர்களுக்கு மின் அஞ்சலூடாக அனுப்ப முடியும் அல்லது உங்கள் இணையத்திலேயே பிரசுரிக்க முடியுமே எனக் கேட்ட போதும் ‘நாங்கள் கணக்கு வழக்கை காட்டத தயாராக உள்ளோம். விரும்பியவர்கள் எங்களை அணுகலாம்’ எனப் பதில் தரப்பட்டது.

தங்களுக்கு உள்ள நிதிநெருக்கடிகளை தாங்கள் ஓரளவு சமாளித்து வருவதுடன் கழகங்களிடம் பெற்ற கடன்களையும் மீளச் செலுத்தி வருவதாக வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். இன்னும் சில ஆயிரம் பவுண்களே கடன்கள் இருப்பதாகத் தெரிவித்த வசந்தன் கிருஸ்ணன் இன்றுள்ள அரசியல் சூழலால் பல்வேறு தரப்பினரும் இந்த விளையாட்டுக் கழகத்தில் ஒரு கண் வைத்துள்ளதாகவும் இதனால், தான் உள்முரண்பாடுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளானதாகவும் கூறினார்.

எவ்வாறான நெருக்கடிகள் சிக்கல்கள் தோண்றிய போதும் பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் தனது பயணத்தை உறுதியுடன் தொடரும் என்றும் அவர் அழுத்தமாகத் தெரிவித்தார். தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் மேவி வரும் என்ற நம்பிக்கையுடன் அவர் எமக்கு விடைதந்தார்.

._._._._._.

லண்டன் குரலில் வெளியான செய்தி:

100,000 பவுண் நிதிப்புரள்வு – 45,000 பவுண் லாபம் ஈட்டக் கூடிய அமைப்பு! 5 வருடங்களாக கணக்கு வழக்கு இல்லை! பிரித்தானிய தமிழர் விளையாட்டு கழகம் !

பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்தின் எதிர் காலம் கேள்விக் குறியாகி உள்ளது. ஆண்டுக்கு 50 000 பவுண்களை வரை லாபமீட்டக் கூடிய பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் கணக்கு வழக்குகளில் நட்டம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

துடுப்பாட்ட விளையாட்டுக்கான பந்துகள் வழங்கப்படவில்லை, நடுவர்களுக்கு திகதியிடப்படாமல் வழங்கப்பட்ட காசோலைகள் திரும்புகின்றன, சில போட்டிகளுக்கு மைதானமே ஏற்பாடு செய்யப்படவில்லை. சில இடங்களில் பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்திற்கு மைதானங்களை வழங்க உரிமை நிறுவனங்கள் மறுக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் தாயகத்தில் இருந்து வந்த வசந்தன் கிருஸ்ணன் என்பவர் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இவர் மட்டுமே பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்தின் அறியப்பட்ட பொறுப்புடைய ஒருவராக உள்ளார். இவரைத்தவிர அந்த அமைப்பில் வேறு எவரையும் 1200 விளையாட்டு வீரர்களும் 60 விளையாட்டு கழகங்களும் அறிந்திருக்கவில்லை.

ஆனால் இந்த வசந்தன் என்ற பொறுப்பாளரின் பின்னால் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நிதி சேகரிப்பு விடயங்களுடனும் தொடர்புடைய தனம் என்பவர் இயங்குவதாக லண்டன்குரலுக்குத் தெரியவருகிறது.

100 000 பவுண் நிதி வருமானத்தையும்  45 000 செலவு தவிர்ந்த லாபத்தையும் பெறக்கூடிய பிரித்தானிய தமிழ் விளையாட்டக் கழகம் நட்டத்தில் உள்ளதாகக் கூறி விளையாட்டுக் கழகங்களின் பல்லாயிரக் கணக்கான பணத்தை காணாமலாக்கி உள்ளது.

1200க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களிடம் இருந்து ஆண்டுக்கு 100 000 பவுண்கள் வரை நிதியைப் பெற்றுக் கொள்கின்ற பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் (British Tamil Sports League) தற்போது நிதிப் பிரச்சினையில் சிக்கி உள்ளது. தங்களுடைய பொறுப்பு ”to develop such a sports organization and leagues set-up where sports and sportsmanship is truly developed and sustained at the same time”, என்று தங்கள் இணையத்தில் தெரிவித்துள்ள அமைப்பின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

அண்மைக் காலமாக பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் தன்னுடைய உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழியில் இருந்தும் கடமையில் இருந்தும் தவறியுள்ளது. விளையாட்டு வீரர்களிடம் இருந்தும் விளையாட்டுக் கழகங்களிடம் இருந்தும் குறித்த காலத்தில் நிதியை வசூலித்த பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத்தவறியுள்ளது.

வாரம் தோறும் விளையாட்டுக் குழுக்களிடையே நடைபெறும் போட்டிகளை ஒழுங்கமைப்பதில் பல தவறுகள் விடப்பட்டு உள்ளது. கிரிக்கட் விளையாட்டில் தேவையான பந்துகள் வழங்கப்படவில்லை. நடுவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டணம் வழங்கப்படாததால் நடுவர்கள் கடமைக்கு வரத் தவறியுள்ளனர். சில போட்டிகளுக்கு மைதானமே பதிவு செய்யப்படாத சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டு வீரர்கள் வெறுப்படைந்து போயுள்ளனர்.

பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்தில் 40 துடுப்பாட்ட கழகங்களும் 20 உதைபந்தாட்டக் கழகங்களுமாக 60 விளையாட்டுக் கழகங்கள் 1200 விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
அவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கு பின்வரும் கட்டணங்களைச் செலுத்துகின்றனர்.
விளையாட்டு வீரரின் உறுப்புரிமைக் கட்டணம் 10.00 பவுண்
விளையாட்டுக் கழகத்தின் நுழைவுக் கட்டணம் 605.00 பவுண்
Twenty – 20 துடுப்பாட்ட போட்டிகளுக்கான நுழைவுக்கட்டனம் 170.00 பவுண்
18 துடுப்பாட்ட போட்டிகளுக்கான அம்பயருக்கான கட்டணம் 360.00 பவுண் (ஒரு போட்டிக்கு ஒரு கழகம் 20 பவுண் செலுத்த வேண்டும் 18 போட்டிகளுக்கு)
18 துடுப்பாட்ட போட்டிகளுக்கான 18 பந்துகளுக்கான கட்டணம் 180.00 பவுண் (ஒரு பந்து 10.00 பவுண்)

இவ்வாறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு இவற்றுடன் மைதானங்களுக்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு விளையாட்டுக் கழகமும் 1500 பவுண்கள் வரை கட்டணமாகச் செலுத்தி இருந்தனர்.

கட்டணங்களை ஆர்வமுடன் வசூலித்தவர்கள் அதற்கான சேவையை வழங்கவில்லை. இது பற்றி அறிய பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணனுடன் தொடர்புகொள் முயற்சித்த போதும் அது வெற்றியளிக்கவில்லை. (லண்டன் குரல் பதிப்பிற்குச் சென்ற பின் வசந்தன் கிருஸ்ணனுடன் தொடர்புகொள்ள முடிந்தது. அதன் பின்னர் அவர்களுடைய அலுவலகம் சென்று வசந்தன் கிருஸ்ணனைச் சந்தித்தோம். அதன் விபரம் மேலுள்ளது.)

பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பற்ற செயல் விளையாட்டு வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வசந்தன் விளையாட்டுக் கழகங்களுக்கு யூலை 10, 2010ல் ஒரு மின்அஞ்சலை அனுப்பி இருந்தார். இம்மின் அஞ்சல் லண்டன் குரலின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அந்த மின்அஞ்சலில் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ”As you all aware, we have come across with some logistical problems in our 5th year Cricket league in 2010”, என வசந்தன் குறிப்பிட்டு உள்ளார். அதற்கு தீர்வாக விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்களில் இருந்து
1.    Organisation committee
2.    Team selecting committee
3.    Decision making committee
ஆகிய மூன்று குழுக்களை உருவாக்குவதாகக் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இவ்வாறான குழுக்கள் இதுவரை அமைக்கப்பட்டது பற்றி தங்களுக்குத் தெரியாது என லண்டன் குரல் தொடர்புகொண்ட விளையாட்டு கழகங்கள் தெரிவித்தன.

அம்பயர் (நடுவர்)களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கிக் கணக்கில் பணம் இன்றித் திரும்பின. அதனால் நடுவர்கள் வராமல் இருப்பது ஒரு பிரச்சினையாக இருந்தது. பந்துகளும் வழங்கப்படுவதில்லை. அதனால் எதிர்காலத்தில் நடுவருக்கான கொடுப்பனவையும் பந்துகளை வாங்கும் பொறுப்பையும் கழகங்களுக்கே விட்டுவிடுவதாக வசந்தன் தன் மின் அஞ்சலில் குறிப்பிட்டு உள்ளார். கடந்த கால போட்டிகளில் நடுவருக்கான பணத்தைக் கட்டியும் நடுவர் வராது இருந்திருந்தால் அத்தொகையை அடுத்த ஆண்டு கண்டனத்தில் கழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கு முன்னர் இவ்வாண்டு நடுப்பகுதியில்  விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நிதி நெருக்கடி இருப்பதாகவும் அதற்காக விளையாட்டுக் கழகங்கள் 500 முதல் 1500 பவுண் வரை முற்பணமாகச் செலுத்தினால் யூன் 20 2010 ரூனமன்ற் முடிவில் அப்பணம் கையளிக்கப்படுவதுடன் அடுத்த ஆண்டு அவர்கள் கட்ட வேண்டிய லீக் கட்டணத்தில் அவர்கள் செலுத்திய தொகை கழிக்கப்படும் எனவும் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் சார்பில் வசந்தன் கேட்டு இருந்தார்.  இதற்கு சில விளையாட்டுக் கழகங்கள் செவிசாய்த்து பணத்தைச் செலுத்தியும் இருந்தன.

இது தொடர்பாக மகாஜநாக் கல்லூரியின் விளையாட்டுக் கழகத்துடன் தொடர்பு கொண்ட போது தாங்கள் கழகமாக பணம் செலுத்தவில்லை என்றும் தங்களுடைய இரு விளையாட்டு வீரர்கள் ஆளுக்கு 750 பவுண் வழங்கி 1500 பவுண்களை பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்திற்கு செலுத்தியதாக புவனேந்திரன் தெரிவித்தார். வேறு சில கழகங்களும் இவ்வாறு முற்பணத்தைச் செலுத்தி இருந்தனர். ஆனால் யூன் 20 ரூனமன்ற் நிறைவு பெற்று இரு மாதங்கள் ஓடிய நிலையிலும் இப்பணம் திருப்பி வழங்கப்படவில்லை. அதுவே வசந்தன் மின் அஞ்சல் அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. இருந்தும் வசந்தன் இதனை நடுவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற ஒரு 20 பவுண் பிரச்சினையாக உண்மையை மறைத்துள்ளார்.

வசந்தனுடைய மின் அஞ்சலுக்கு கடுமையான பதில்களை சில விளையாட்டு கழகங்கள் அனுப்பி வைத்தள்ளன. அவற்றில் சில லண்டன்குரலின் கவனத்திற்கும் அனுப்பப்பட்டு இருந்தது. யூலை 12 2010ல் கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் சார்பாக கார்த்திக் இவ்வாறு எழுதி இருந்தார். ”Hi Vasanthan, We are also in the same position, Just give us the money back and we have no intention of playing in your league for next year”.
 
இது பற்றி RLSSC விளையாட்டுக் கழகம் சார்பில் ரஞ்சன் எழுதிய மின் அஞ்சலில் ”Hi Vasanthan, Our club not accepting all this rubbish after five years. What happened to our money we already paid to you?” எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கமைக்க லண்டனை தென்கிழக்கு, தென்மேற்கு வடகிழக்கு வடமேற்கு எனப் பிரித்து நால்வரை நியமித்துள்ளனர். அவர்கள் விபரம்
Southeast – Para (Lewshiam CC)
Southwest – Ragulan (Bloomfield CC)
Northeast – Sugumar (Five Star CC)
Northwest – Gobi (Tamil Union CC)

இவர்களில் லூசியம் விளையாட்டுக் கழகம் பரா, ஃபைவ் ஸ்ரார் விளையாட்டு கழகம் சுகுமார் ஆகியோருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இவர்கள் பிரித்தானிய தமிழர் விளையாட்டு கழகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை உறுதிப்படுத்தினர். தங்கள் பகுதிகளில் உள்ள கழகங்கள் அதிருப்தி அடைந்துள்ளதையும் தெரியப்படுத்தினர்.

கடந்த ஐந்த ஆண்டுகளில் எப்போதாவது கணக்கு விபரங்கள் விளையாட்டு கழகங்களுக்கு காட்டப்பட்டதா எனக் கேட்ட போது பராவும் சுகுமாரும் இல்லையென்றே பதிலளித்தனர்.
பரா தனது பதிலில் ‘முதல் மூன்று வருடமும் பிரச்சினைகள் எதுவும் எழவில்லை. இப்போது தான் பிரச்சினைகள் எழுந்தள்ளது’ என்றார். அவர் மேலும் கூறுகையில் ‘எனக்கும் இந்த பண நிர்வாக விடயங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஒரு உதவியாக போட்டிகளை ஒழுங்குபடுத்தக் கேட்டார்கள் செய்கிறேன்’ என்றார். ‘இந்த வருடமே பணக் கஸ்டம் என்றால் ஏற்கனவே சில கிளப்புகளிடம் பணம் பெற்றுள்ளதால் அடுத்த வருஸம் எப்படி இருக்குமோ தெரியாது?’ என்றும் பரா சந்தேகத்தை வெளியிட்டார்.

சுகுமார் பதிலளிக்கையில் ‘அப்போது பணம் ஊருக்கு அனுப்பப்படுவதாகச் சொன்னார்கள். நாங்களும் யாரும் கணக்கு கேட்க விரும்புவதில்லை. இப்போது அங்கு பணம் அனுப்ப இவர்களுக்கு வழியில்லை. என்ன நடக்கிறது என்று கேட்கிறார்கள். பாஸ்ட் இஸ் பாஸ். இனி சரியாகச் செய்ய வேணும் என்று கேட்கிறார்கள். சில கிளப்புகள் கடுமையாக இருக்கிறார்கள். தாங்கள் அடுத்த வருடம் விளையாட வர மாட்டார்கள் என்கிறார்கள்’ என்றார். ‘இந்த வருசம் கிளப்புகள் பணம் செலுத்திவிட்டினம். அடுத்த வருஸம் அவர்கள் குறைந்த தொகையே கட்ட வேண்டி இருக்கும். அடுத்த வருஸம் எப்படிச் சமாளிப்பார்கள் என்று தெரியாது’ என சுகுமாரும் பரா போன்றே சந்தேகம் எழுப்பினார்.

விளையாட்டுப் போட்டிக்கான செலவுகள் அனைத்தும் 60 விளையாட்டுக் கழகங்களிடம் இருந்தும் பெறும் வேறுவேறு கட்டணங்களில் இருந்து பெறப்படுகிறது. மேலும் விளையாட்டுவிழா நுழைவுக் கட்டணம் செவனியர் மூலம் திரட்டப்படும் விளம்பரப் பணம், ஸ்பொன்சேர்ஸ் என்று பன்முகப்பட்ட வருவாய்கள் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு உண்டு. இவற்றைவிடவும் விளையாட்டுக் கழகத்தின் நுழைவுக்கும் விளையாட்டு வீரர்களின் உறுப்புரிமைக்கும் பெறப்படும் கட்டணம் 750 பவுண் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு உரியது. அதாவது ஆண்டுக்கு 45000 பவுண் செலவு தவிர்ந்த பணம்.  இந்நிலையில் பிரித்தானிய விளையாட்டுக் கழகம் நிதிப் பிரச்சினைக்கு உள்ளானதற்கான காரணங்கள் மர்மமானதாகவே உள்ளது. அதற்கான காரணங்கள் தெரியாத நிலையிலேயே உறுப்புரிமை செலுத்திய விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

லண்டனில் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு முன்னரேயே இதில் தேர்ச்சி பெற்ற அமைப்புகள் இருந்தன. கிழக்கு லண்டனில் ஸ்கந்தமூர்த்தி கிரிக்கட் கழகங்களை இணைத்து விளையாட்டுப் போட்டிகளை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடாத்தி வந்தார்.

தாயக மக்களுக்கு உதவுகின்றோம் தமிழ் கழகங்களில் வேறு இனத்தவர்கள் அனுமதிக்கப்பட முடியாது என்ற விடயங்களை முன் வைத்து பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுக் கழகங்களை தன் பக்கம் வளைத்தப் போட்டது. அதன் பின்னர் தங்கள் விதிமுறைகளை தேவைக்கு ஏற்ப வளைத்தனர். தமிழ் கழகங்களில் வேறு இனத்தவர்கள் இருக்கலாம் ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் என மட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் தாய் அல்லது தந்தை தமிழராக இருக்க வேண்டும் என்ற செருகல்கள் அனைத்தும் புகுத்தப்பட்டது. இருந்தும் தாயக மக்களுக்கு சில உதவிகள் கிடைக்கும் என பல விடயங்களும் பொறுத்துக் கொள்ளப்பட்டது. இப்போது நிலைமை முற்றாக மாறி உள்ளது.

தமிழ் பாடசாலைகள் விளையாட்டுக் கழகம் (Tamil Schools Sports Association – TSSA) கடந்த 19 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இது பற்றி அவ்வமைப்பின் தலைவர் ந கெங்காதரன் லண்டன்குரலுக்குத் தெரிவிக்கையில், ‘TSSA என்றுமே விளையாட்டு விழாக்களை போட்டிகளை நடாத்தி நட்டப்பட்டதில்லை’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு அறிக்கை கழகங்களின் பார்வைக்கு இருக்கும். பெறப்பட்ட லாபத்தில் மூன்றில் இரு பங்கு போட்டிகளில் கலந்துகொண்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களுக்கு பிரித்து வழங்கப்படும். அதனை அவர்கள் தங்கள் பாடசாலை வளர்ச்சிக்குப் பயன்படுத்தவார்கள். மூன்றில் ஒரு பங்கு TSSA இன் வளர்ச்சிக்கு அதன் வைப்பிலிடப்படும்’ எனத் தெரிவித்தார்.

பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் போட்டிகளை நடாத்திய அதே காலப்பகுதியில் தனிப் பாடசாலையாக தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி தங்கள் 150 ஆண்டு விழாவைக் குறிக்கும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விளையாட்டுப் போட்டிகளிலும் தாங்கள் சில ஆயிரம் பவுண்களை யாவது லாபமீட்டியதாக அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். தங்கள் வரவு செலவுக் கணக்கு வரும்போது உண்மையான தொகை தெரியவரும் எனத் தெரிவித்த அவர், பாடசாலையின் 150வது விழா என்பதால் தாங்கள் செலவுகளை சற்று அதிகமாகவே மேற்கொண்டதாவும் கூறினார்.

லண்டன்குரலுக்கு கிடைக்கின்ற தகவல்களும் ஏனைய விளையாட்டுக் கழகங்களின் அனுபவங்களும் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தில் பாரதூரமான நிதி நிர்வாகச் சீர்கேடுகள் இடம்பெற்றிருப்பதையே காட்டி நிற்கின்றது.

ததேகூ கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகரசபை தொடர்ந்தும் ஸ்தம்பிதம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்முரண்பாடுகளே காரணமா? : விஸ்வா & த ஜெயபாலன்

Linganathan_giving_speechவவுனியா நகரசபையின் மாதாந்த கூட்டத்தை அதன் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் நேற்று (14 செப்ரம்பர் 2010) செவ்வாய் கிழமை இடை நிறுத்தியதைக் கண்டித்து நகரசபை உறுப்பினர்கள் பத்துப்பேரும் இணைந்து நகரசபைத் தலைவருக்கு எதிராக போராட்டத்திலீடுபட்டனர். வவுனியா நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் இன் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். நகரசபை மைதானத்தில் கடும் வெயிலில் இரண்டு மணிநேரம் இப்போராட்டம் நடைபெற்றது.

வவுனியா நகரசபை தொடர்பான முன்னைய பதிவுகள்:

”ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்

”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு – எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை

இது பற்றி தேசம்நெற் இணையத்திற்கு கருத்துத் தெரிவித்த நகரசபை உறுப்பினர் ஜி ரீ லிங்கநாதன் குறைந்தபட்ச ஜனநாயக நடைமுறையைக் கூடப் பின்பற்ற நகரசபைத் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் விசேட நகரசபைக் கூட்டத்தை கூட்டும்படி தாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர் தன்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டதும் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு வெளியேறியதாகத் தெரிவித்தார்.

மேலும் நகரசபை உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டிவிட்டு அதற்கு முன்னதாகவே ஆயுதம் தாங்கிய பொலிசாரையும் அங்கு வரவழைத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாகச் செயற்படும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நகரசபைத் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் ஜனநாயக விரோதப் போக்கை கடைப்பிடிப்பதுமல்லாமல் ஆயுதம் தாங்கிய பொலிஸாரை வரவழைத்து நகரசபை உறுப்பினர்களை அச்சுறுத்தவும் முற்பட்டு உள்ளார். அதுவே நகரசபை உறுப்பினர்கள் சீற்றமடைவதற்குக் காரணமானது. இவ்வாறான ஜனநாயக விரோதப் போக்குகளைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் 10 பேரும் போராட்டத்தில் குதித்தனர்.

செப்ரம்பர் 14 கூட்டத்தில் நகரசபைத் தலைவர் மீது நகரசபை உறுப்பினர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிப்பதாகவும் நகரசபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதாகவும் இருந்தது. தன்மீதான குற்றச்சாட்டுகளை முற்றாகப் புறக்கணித்த நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் 72 நிமிடங்களாக தன்னைப் பற்றிய சுயபுராணத்தில் ஈடுபட்டதாகவும் இது கூட்டத்தைக் கூட்டுவதற்கு கோரிக்கை வைத்த நகரசபை உறுப்பினர்களை ஏமாற்றுவதாக அமைந்ததாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில் இடையே குறுக்கிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரசபை உறுப்பினர் செ சுரேந்திரன் நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதனுக்கு எதிராக நம்பிக்கையிலாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார்.  இந்நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர் இ சிவகுமாரன் வழிமொழிந்தார். இதனைப் பொறுக்காத நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு வெளியேறினார்.

நகரசபை உறுப்பினர்கள் நகரசபை மைதானத்தில் தங்க போராட்டத்தை ஆரம்பித்ததும் ஊடகங்களில் செய்தி பரவியது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்திஆனந்தன் வினோநோகராதலிங்கம் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களைச் சந்தித்து சமரசம் செய்ய முற்பட்டனர். அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக தங்களது கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால் 10 நகரசபை உறுப்பினர்களுக்குப் 10 000 மக்களைக் கொண்டு வந்து போராடுவோம் என நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் சந்தித்து இதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதாக சிவசக்தி ஆனந்தனும் வினோதரலிங்கமும் நகரசபை உறுப்பினர்களுக்கு உறுதி அளித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஒரு மாதத்திற்குள் அதனைச் செய்யத் தவறினால் தாங்களும் நகரசபை உறுப்பினர்களுடன் சேர்ந்து போராடுவோம் என சிவசக்திஆனந்தன் தெரிவித்ததாக ஜி ரி லிங்கநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

நகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தில் உள்ளது. அதன் தலைவர் எஸ் என் ஜி நாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர். மேலும் தமிழரசுக் கட்சியின் மாவை சேனாதிராஜாவுக்கு நெருக்கமானவர். எஸ் என் ஜி நாதனை மாற்றாக இன்னுமொருவரை நியமிக்க தமிழரசுக் கட்சியின் பெயர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள் எவரும் இல்லை. அப்பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ரெலோவிற்கோ ஈபிஆர்எல்எப் சுரோஸ் அணிக்கோ விட்டுக்கொடுக்கவும் தயாராக இல்லை.

வவுனியா நகரசபை கடந்த 10 மாதங்களாக செயற்படாமல் இருப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள உள்முரண்பாடுகள் காரணமா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளது. அண்மைய போராட்டமும் அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரசபை உறுப்பினர்களே தமது கட்சியைச் சேர்ந்த நகரசபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை உறுப்பினர்கள் விபரம்:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) : எஸ். என். ஜி. நாதன் (நகரசபைத் தலைவர்), மு. முகுந்தரதன் (உப தலைவர்),  இ. சிவகுமாரன் செ. சுரேந்திரன், ஐ. கனகசபை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (எஸ்எல்எம்சி) : அப்துல் லத்தீப் முனவ்பர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) : ஜி.ரி.லிங்கநாதன், சு.குமாரசாமி, க.பார்த்தீபன்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (யுபிஎப்ஏ) : எம் எஸ் அப்துல்பாரி, ஜெ.ஏ.டி லலித்ஜெயசேகர

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன வின் நேர்காணலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பற்றி மிகக் காட்டமான விமர்சனத்தை வைத்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் அதிலிருந்து வெளியேறினால் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு விடுவார்கள் என்றும் அவர்களுக்கு என்று அரசியல் அந்தஸ்தோ கெளரவமோ இல்லையென்றும் பியசேன குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் காரணம் ஒன்றே பல்வேறு முரண்பாடுகள் இருந்த போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை குலையாமல் வைத்துள்ளது. ஆனால் இந்த முரண்பாடுகளால் வவுனியா நகரசபை போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒரு இடைஞ்சலாகவே ஆகியுள்ளது.

போப்பாண்டவரின் பிரித்தானிய வருகையும் – விவாதங்களும். : ரதிவர்மன்

Pope_Benedict_XVI_1945_WorldWar2Pope_Benedict_XVI_1977_ProfessorPope_Benedict_XVI_2009நாளைக்கு (16.09.10) கத்தோலிக்கர்களின் புனிதத்தலமான வத்திக்கன் நகரின் 265வது மதத்தலைவரான கத்தோலிக்க புனித தந்தை போப்பாண்டவர் 16வது பெனடிக்ட் அவர்கள் பிரித்தானியாவுக்கான தனது முதலாவது வருகையை மேற்கொள்கிறார். 1982ம் ஆண்டில் அன்று போப்பாண்டவராகவிருந்த புனித தந்தை, மதிப்புக்குரிய 2வது போல் அவர்கள் இங்கிலாந்துக்கு வருகைதந்தார். அப்போது ஒரு கோடிக்கும் மேலான மக்கள் அவரை மிகவும் உற்சாகமாக வரவேற்றார்கள். உலகின் மனிதத் தொகையில் 17 விழுக்காடு மக்கள் கத்தோலிக்க மதத்தைந் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆறு பில்லியன் உலக மக்கள் தொகையில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்டவர்கள்.

இங்கிலாந்தில் 61 கோடி மக்களில், பல தரப்பட்ட  கிறிஸ்தவ (கத்தோலிக்க அங்கிலிக்கன் போன்ற) தேவாலயங்களுக்கும் 4 விழுக்காடு மக்கள் மட்டும்தான் பிரார்த்தனைக்குச் செல்வதாக் கணிப்பீடுகள் சொல்கின்றன. கத்தோலிக்க மத குருமார்கள் 21ம் நூற்றாண்டின் யதார்த்தமான வாழ்க்கை முறையைப்புரிந்து கொண்டு பொது மக்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்காததால் போப்பாண்டவரின் பிரித்தானிய வருகையை ஒட்டிப் பல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
1982ம் ஆண்டு புனித தந்தைக்குக் கொடுத்த வரவேற்புக்கு எதிர்மாறக, இப்போது, பல தரப்பட்ட குழுக்கள் போப்பாண்டவரின் வருகையை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றன.

2005ம் ஆண்டு போப்பாண்டவராகப் பதவி பெற்ற புனித தந்தை பெனடிக்ட் போப்பாண்டவராக முதலே, தனது பழமையான கத்தோலிக்கக் கருத்துக்களால், பொது மக்கள், அரசியல்வாதிகள், பெண்ணியவாதிகள், மதத் தலைவர்கள் என்ற மட்டங்களில் பல விவாதங்களை உருவாக்கி விட்டவர்.

Pope_Benedict_XVI_1945_WorldWar21927ம் ஆண்டு பவேரியா என்ற இடத்தில் பிறந்த போப்பாண்டவரின் இயற் பெயர் யோசேவ் அலோயிஸ் ரட்சிங்கர் என்பதாகும். இவர் தனது 14வது வயதில் ஹிட்லரின் இளைஞர் படையில் (1941ல்)  சேர்ந்தார். ஹிட்லரின் திட்டத்தின்படி ஆயிரக்கணக்கான ஊனமற்ற மக்கள் கொல்லப்பட்டார்கள் இவர்களின் குடும்பத்தில் உள்ள மூளை வளர்ச்சி குறைந்த ஒருவரும் ஹிட்லரால் கொல்லப்பட்டார். இவரின் தந்தையார் நாஷிகளின் எதிரியென்று குறிப்பிடப்படுகிறது. போப்பாண்டவர் ஹிட்லரின் இளைஞர் படையில் சேர்ந்தாலும் கட்சிக் கூட்டங்களுக்குப் போவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் 16வது வயதில் ஹிட்லரின் போர்ப் படையிற் சேர்ந்தார் போர் முடிந்ததும், அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளுக்குத் தப்பியோடினாலும் அமெரிக்கராற் பிடிக்கப்பட்டுச் சிறைவைக்கப் பட்டார்.

மிகவும் பழைமைவாதக் கருத்துகளுடன் வாழும் போப்பாண்டவர் பூனைகளில் மிகவும் விருப்பம் கொண்டவர். வத்திக்கான் மாளிகையில் மிருகங்கள் வைத்திருக்ககூடாது என்ற சட்டம் இருப்பதால் தனது இரு பூனைகளையும்,  தனது தனிப்பட்ட வீட்டில் வைத்திருக்கிறாராம். இவரது தாய் மரியா ஒரு காலத்தில் செய்து கொடுத்த  பஞ்சடைத்த விளையாட்டுப் பொருளான பூனையை இன்னும் தன்னோடு வைத்திருக்கிறாராம்.  இசையில் மிகவும் மிகவும் பிரியமுள்ள புனித தந்தை பியானோ வாசிப்பாராம் அத்துடன் பேத்தோவன், மோஷார்ட் போன்றோரின் இசையை விரும்பிக்கேட்பாராம். புத்தகங்களில் மிகவும் ஆர்வமுள்ள போப்பாண்டவர் நிறைய வாசிப்பது மட்டுமன்றி நிறையப் புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். புத்தகங்கள் உலகம் பரந்த கத்தோலிக்கரால் கோடிக்கணக்காக வாங்கப்படுகிறது, முற்போக்குச் சமுதாயவாதிகளால் பல விமர்சனங்களுக்கும் உள்ளாகிறது.

Pope_Benedict_XVI_1977_Professorஇரண்டாவது உலக யுத்தத்தின்பின் சமயப் படிப்பில் இறங்கிய ரட்சிங்கர் அவர்கள் தனது கலாநிதி பட்டத்திற்கான மேற்படிப்புக்களை முடித்தபின் சமயப் பேராசிரியராகப் பல பல்கலைக்கழகங்களிற் பணியாற்றினார். இவரது பழைமைசார்ந்த சமயக் கருத்துக்களைப் போகுமிடம் எல்லாம் போதித்தார். முற்போக்கு கொள்கைளை எதிர்த்தார். உதாரணமாக 1968ம் ஆண்டுகளில் பாரிஸில் மாணவர் நடத்திய சமுதாயப் போராட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.

எயிட்ஸ் நோய் பரவியபோது அதைத் தடுக்கப் பாலுறவின்போது ஆணுறையைப் பாவிக்க வேண்டும் என்று அகில உலக சுகாதார சபை அறிக்கை விட்டபோது அதை எதிர்த்தார். எயிட்சைத் தடுக்க ஒரேயோரு வழி பொதுமக்கள் பாலியல் உறவுகளை வைத்திருக்காமற் தடுப்பது என்பது இவரது வாதம். அத்துடன் உலகில் இன்று பெருகிவரும் சனத்தொகைகையைக் கட்டுப்படுத்தவும் வறுமையைத் தடுக்கவும் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் தேவை என்பதையும் புனிதத் தந்தை எதிர்த்துப் பலரை விரோதித்துக் கொள்கிறார். அவரின் கருத்துப்படி ‘படைத்த கடவுள் உணவு கொடுப்பான், இயற்கை விதிகளை மீறக் கூடாது’ என்பதாகும். வளர்ந்து கொண்டுபோகும் மனிதப் பெருந்தொகைக்குத் தேவையான வாழ்க்கை முறைக்கு உலகத்தினில் போதிய உணவோ, நிலமோ கிடைக்காது என்ற வாதத்தை இவர் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.

இவரின் இப்படியான கருத்துக்களுக்கு உலகப் பொருளாதார நிபுணர்கள் ஆதரவு கொடுக்கவில்லை. அத்துடன், ‘குழந்தை பெற்றுக்கொள்வது என்பது பெண்களின் தீர்மானத்தில் தங்கியிருக்கிறது, எங்கள் சொந்த விடயங்களில் தலையிடப் போப்பாண்டவருக்கு எந்த உரிமையும் கிடையாது’ என்று பெண்ணியவாதிகள் புனித தந்தைக்கு எதிரான பதாகைகளுடன் புறப்படுகிறார்கள்.

அத்துடன், போப்பாண்டவர் ஓரினச் சேர்க்கை உறவுக்கு எதிரானவர். இந்த மாதிரியான ‘இயற்கைக்கு உதவாத’ உறவுகள் வளராமல் கத்தோலிக்க மதம் போராட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இங்கிலாந்து, அமெரிக்கா, பெரும்பாலான மேற்கு நாடுகளில் ஓரினபாலுறவு சட்டமயமாக்கப் பட்டிருக்கிறது. ஆண்கள் ஆண்களையும், பெண்கள் பெண்களையும் திருமணம் செய்து கொள்ளலாம், அன்பு என்பதற்கு சமயம் வரைவிலக்கணம் கொடுத்து கட்டுப்படுத்த முடியாது என்று ஓரினச்சேர்க்கையாளர்கள் போராடுகிறார்கள். போப்பாண்டவரின் இங்கிலாந்து வருகையின்போது ஓரினச்சேர்க்கையாளரின் போப்பாண்டவர் எதிர்ப்பு பதாதைகள் உயர்த்தப்படும் என்று ஓரினச்சேர்க்கையாளர்களின் அமைப்பாளர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாகக் கத்தோலிக்க பாதிரிமார்கள், தங்களின் தேவாலயங்களுக்கு பிரார்த்தனைக்கு வந்த அறியாப் பருவத்திலுள்ள சிறுவயது ஆண் பெண் குழந்தைகளுக்குச் செய்த பாலியற் கொடுமைகளை புனித தந்தை பெனடிக்ட் அவர்கள்  சரியாக விசாரிக்கவில்லை, குறிப்பிட்ட பாதிரிகைளைப் பதவிகளிலிருந்து உடனடியாக நிறுத்தவில்லை, இந்தக் கொடிய பாலியல் வன்முறைச் செய்திகளைப் பொலிசாருக்கு அறிவிக்கவில்லை என்ற பல தரப்பட்ட  கோபங்களில் பலர் போப்பாண்டவர் வரவை எதிர்ப்பதாக பிபிசி ‘பனராமா’ டொக்குயுமென்றரி 13.09.10 இரவு எடுத்துக்காட்டியது.

அத்துடன், பெண்களைக் கத்தோலிக்க ஆலயங்களில் பாதிரியார்கள் போன்ற மேற்பதவிகளில் வைக்கவும் புனித தந்தை எதிர்க்கிறார் என்பதும் அவருக்கு எதிராக வைக்கப்படும் பல குற்றச்சாட்டுகளில் ஒரு குற்றச்சாட்டாகும்.

இவைக்கும் மேலாகச் சமய ரீதியிலும் போப்பாண்டவர் மற்ற சமய மக்களின் மனதைத் துன்பப் படுத்தியிருக்கிறர் என்றும் சொல்லப்படுகிறது.

ஹிட்லரால் ஆறு கோடி மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இடதுசாரிகள், ஜிப்ஸிகள், ஊனமுற்றோர், ஹிட்லருக்கு எதிராக எழுதிய பத்திரிகையாளர்கள என்று பல தரப்பட்டோர் கொல்லப்பட்டார்கள். முக்கியமாகக் கொல்லப்பட்டவர்கள் – இன அழிப்பு செய்யப்பட்டவர்கள் யூத மக்களாகும். ஆனால், ஹிட்லரின் படையிலிருந்த போப்பாண்டவர் இதுவரையும் ஹிட்லரால் யூத மக்களுக்குச் செய்யப்பட்ட கொடுமையை எதிர்த்து எதுவும் சொல்லவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை என்று யூதமக்கள் பொருமுகிறார்கள்.

யூத மக்களால் மட்டுமல்ல முஸ்லிம் மக்களுக்கும், துருக்கிய முஸ்லிம் மன்னர்கள் பற்றிப் போப்பாண்டவர் சொன்ன கருத்துக்கள் கோபத்தை உண்டாக்கியிருக்கின்றன. 12.09.2006ம் ஆண்டு, அவர் பேசும் போது கிறிஸ்தவ மன்னரான மானுவல் 2வது பாலுலாக்கஸ்ஸைத் துருக்கிய மனனர் 1391ல் கொன்ஸ்ரான்ரினோப்பிளில் வெற்றி கொண்ட பின்  கிறிஸ்தவ மக்களைத் மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி மதம் மாறச்செய்தார் ஏன்று குறிப்பிட்டதும் முஸ்லிம் அதிகாரம் வன்முறையானது என்றதொனியில் பேசியதும் பல முஸ்லிம் மக்களைக் கோபப்படுத்தியிருக்கிறது.

போப்பாண்டவர் அவர்கள் பொதுவுடமை நாடான சைனாவின் பரம எதிரியான தலாய்லாமாமைச் சந்தித்ததால் 2007ல் சீனாவின் கண்டிப்புக்கும் ஆளாகினார்.

கொலப்பஸ் தென்னமெரிக்க நாடுகளுக்கு வந்தபின்தான் மனிதப் பண்பாட்டை மேன்படுத்தும் கிறிஸ்ரியானிட்டியால் மக்கள் நன்மையடைந்தார்கள் என்று சொன்னதால், தங்களது ஆதிகால வணக்க முறைகளைப் போப்பாண்டவர் அவமதித்ததாக வெனிசுவேலாவின் அதிபர் சவாவோசின் கண்டனத்துக்கம் ஆளானார் புனித தந்தை.

உலகின் பல நாடுகளிலுமுள்ள பல கிறிஸ்தவ ஆலயங்களிற் பணி புரிந்த போதகர்களால்  பாலியற் கொடுமை செய்யப்பட்ட குழந்தைகள்; இருக்கிறார்கள். குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்கிறார்கள். ஆண்களும் பெண்களும் பல ஊடகத்துறைகள் மூலம், கத்தோலிக்கப் பாதிரிமார் தங்களுக்குச் செய்த பாலியல் கொடுமைகளை விபரிக்கிறார்கள். ஜேர்மனியில் ரடசிங்கர் ஆர்ச் பிஷப்பாக இருந்தபோது (1977) பீட்டர் குலமன் என்ற பாதிரி செய்த கொடுமையைப் போப்பாண்டவர் சரியாக விசாரிக்கவில்லை என்றும், அமெரிக்காவின் ஓக்லாண்ட் கத்தோலிக்கப் பாதிரிகளின் நடத்தையை, அக்கால கட்டத்தில் (1998) வத்திக்கானில் கார்டினலாகவிருந்த ரடசிங்கரிடம் அறிவித்தும் அவர் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிசி பனராமா செய்தியிற் சொன்னார்கள்.

Pope_Benedict_XVI_2009புனித தந்தை அவுஸ்திரேலியா சென்றிருந்து போதும், அமெரிக்கா சென்றிருந்த போதும் கிறிஸ்தவ பாதிரிகளாற் பாலியற் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உரையாடினார். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது, பெல்ஜிய நாட்டில் உள்ள கிறிஸ்தவ பாதிரிகளால் பாலியற் கொடுமைகளுக்காளாளவர்களின் வாக்கு மூலங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

மக்கள் தங்களுக்க நன்மை செய்யும் மதத்தைத் தழுவுவது என்றும் நடந்து கொண்டிருக்கிறது அத்துடன் அரசியல் காரணங்களால் பலர் பலவந்தமாக மதம் மாற்றப்பட்டார்கள் என்று சரித்திரங்கள் சொல்கின்றன. இந்தியாவில் இந்து மத அடிப்படையின் சாதிக் கொடுமையால் துன்புறுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் மதம் மாறுகிறார்கள். வெளிநாட்டிலும் இலங்கையிலும், இலங்கைத் தமிழர்களில் சிலர் இன்று தங்களின் பழைய வாழ்க்கை பிடிக்காமல் புதிய சமயங்களைத் தேடுகிறார்கள். கிறிஸ்தவர்களாகி வெளிநாட்டுக் கலாச்சாரத்துடன் ஒன்றிப்போவதால் இவர்கள் மேற்கத்திய நாகரிகத்தைத் தழுவிக்கொண்டு தாங்கள் புலம் பெயர் நாடுகளின் அங்கிகாரத்தையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ள கத்தோலிக்கர்களாக மாறுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆசிய நாடுகள் ஆபிரிக்க நாடுகளிலிருந்த கத்தோலிக்க மதத்திற்கு மாறுபவர்களின் எண்ணிக்கை கூடுகிறது. மிகவும் பண வசதியுள்ள சமயம் கத்தோலிக்க மதமாகும். உலகில் மிகவும் செல்வாக்கான மனிதர்களில் ஒருத்தராகப் போப்பாண்டவர் கருதப்படுகிறார். வளரும் நாடுகளில் பாதிரிமாரின் செல்வாக்கு அளப்பரியது. அவர்களால் தேவாலயங்களில் பாலியற்கொடுமைகள் நடந்தாலும் யாரும் வாய் திறக்க மாட்டார்கள்.

பல நாடுகளில் கிறிஸ்தவ சமயக் குருமார்கள் பணத்தில் மட்டுமல்லாமல் அரசியல் சமூக செல்வாக்கிலும் முன்னிலையில் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை மக்கள் மட்டுமல்லாது அரசியற் தலைவர்களும் கேட்டுப்பணிகிறார்கள். அவர்களின் சமயப்பணிகள் பிரச்சினை நடக்கும் நாடுகளில் அதிவேகமாகப் பரவுகிறது. இலங்கையில் தொடர்ந்த போரின் கடைசிக் கால கட்டத்தில் ‘தேசியத் தலைவர்’ பிரபாகரனும், கத்தோலிக்க பாதிரிகளின் தூண்டுதலால் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறினார் என்ற வதந்திகள் பரவின.  மேற்கத்திய கிறிஸ்தவ தலைவர்களைச் (ஜோர்ஜ் புஷ், ரோனி பிளேயர்?) சந்தோசப்படுத்தவும் போப்பாண்டவர், கார்டினல்ஸ், போன்ற கிறிஸ்தவத் தலைமையின் உதவியை நாடவும், அத்துடன் இன்று வேகமாகக் கிறிஸ்தவ சமயம் பரவும் ஆபிரிக்க நாடுகளின் மூலம் ‘ஈழத்தமிழகத்திற்கு’ ஆதரவு பெறவும் அவர் சமயம் மாறியிருக்கலாம் என்ற அபிப்பிராயமும் அடிபட்டது. இன்று இலங்கையிலும் வெளிநாட்டிலும் பெரும்பாலான தமிழர்கள் சமயம் மாறுவதற்கு, ‘தேசியத் தலைவர்’ சமயம் மாறியது ஒரு காரணமா அல்லது வெளிநாடு வந்த தமிழர்கள் கத்தோலிக்கர்களாக மாறி வசதியாக வாழ்வதால் அவர்களைத் திருப்திப்படுத்தத் ‘தேசியத் தலைவர்’ சமயம் மாறினாரா? என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்படலாம். ஆனாலும்,  லண்டனில் நடக்கும் போப்பாண்டவர் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் புதிதாகச் சமயம் தழுவிய தமிழர்கள் தொகை பெரிதாகவிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடமாகாண தமிழ் இலக்கிய விழா திட்டமிட்டபடி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

வடமாகாண தமிழ் இலக்கிய விழா ஏற்கனவே திட்டமிட்டபடி ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து மூன்று தினங்களுக்கு கிளிநொச்சியில்  நடைபெறும் என யாழ்.மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இவ்விலக்கிய விழாவுக்கான நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்திலிருந்து திருமறைக்கலாமன்றமும், யாழ்.மத்தியகல்லூரியும் சில நிகழ்ச்சிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.  இவ்விழாவில் ஆளுநர் விருதுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகை தரும் பேராளர்களுக்கு தங்குமிட வசதிகள் உட்பட ஏனைய வசதிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் மேலதிக விபரங்களை வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கமான 0213266990 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியூகம் இதழ் 2 ஒரு பார்வை: பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்… தேவை ஒரு புதிய கோட்பாடு : மீராபாரதி

Viyoogam_02_Coverநட்புடன் நண்பர்களுக்கு…
முதலில் வியூகம் இதழ் 2இல் உள்ள “பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்” என்ற கட்டுரை தொடர்பாக எனது கருத்தைக் கூற அழைத்தமைக்கு வியூகம் நண்பர்களுக்கு நன்றிகள். இன்றைய சூழலில் நம்பிக்கையுடன் இவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தை நண்பர்கள் முன்னெடுப்பதில் உள்ள மன பொருளாதார கஸ்டங்களைப் புரிந்துகொள்கின்றேன். இவ்வாறன தடைகளையெல்லாம் தாண்டி இராண்டாது இதழை வெளியீட்டமை மகிழ்வான விடயமே. வியூகம் இதழ் 2 முக்கியமான நான்கு கட்டுரைகளை தாங்கி வெளிவந்துள்ளது. அவையாவன “சிங்கள தேசியவாதத்தின் தோற்றம் குறித்து” “சுழலியலும் நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சியும்”; “விட்டு வேலைக்கு ஊதியம் தொடர்பான முன்மொழிவுகள்” “பாராளுமன்றமும் புரட்சிகர சக்திகளும்” மற்றும் ஆசிரியர் தலையங்கம் என்பனவாகும். இதில் முதலாவதும் மூன்றாவதும் சிறந்த மொழிபெயர்ப்புகள்.

நான் கருத்துக் கூறவேண்டிய கட்டுரை “பாராளுமன்றமும் புரட்சிகர சக்திகளும்” ஏன்பதாகும்.
இது மிகவும் முக்கியமானதும் ஆழமான கருத்துக்களைக் கொண்டதும் இந்த இதழின் அரைவாசிப் பக்கங்களை ஆதிக்கம் செய்துள்ள கட்டுரை. இக் கட்டுரை தொடர்பான கருத்தை அல்லது விரிவான விமர்சனத்தை முன்வைப்பதற்கு ஆகக் குறைந்தது இரு தடவைகளாவது வாசிக்க வேண்டியதுடன் விரிவான பரந்த ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயங்களைக் கொண்டதுமாகும். அப்பொழுதுதான் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நோக்கி இக் கட்டுரையை நகர்த்துவதற்கு இக் கட்டுரை தொடர்பாக முன்வைக்கும் கருத்துக்கள் பயன்படும். ஆனால் ஒரு கிழமை அவகாசத்திற்குள் அவ்வாறன ஒன்றை செய்யமுடியாது என்பதை நீங்கள் எல்லோரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். ஆகவே நான் இங்கு முன்வைக்கும் கருத்துக்கள் இக் கட்டுரைபற்றிய ஒரு சுருக்கமான அறிமுகமாகவும் மற்றும் எனது தேடல்களுக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் உட்பட்டதாகவும் ஆகவே மட்டுப்படுத்தப்பட்டதாகவுமே இருக்கும் என்பதை புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். இந்தடிப்படையில் சில கேள்விகளையும் இறுதியில் முன்வைக்கின்றேன்;.

இக் கட்டுரையை பின்வருமாறு முக்கியமான பகுதிகளாகப் பிரிக்கலாம் எனக் கருதுகின்றேன்.
முதலாவது “வர்க்கம், அரசு, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தின் தோற்றமும் இவை உருவாக்கிய
மேலாதிக்க சித்தாந்தமும் – ஒரு மார்க்சிய பார்;வை”
இரண்டாவது “ரஸியப் புரட்சி, மற்றும் சோவியத்யூனியன் கால ஆனுபவங்கள் – லெனினின் பார்வையில்”
மூன்றாவது “கட்சியும் பாராளுமன்றப் பாதையும்; புரட்சியாளர்களும் – ஒரு கோட்பாட்டுப் பிரச்சனை”
நான்காவது “புரட்சியாளர்களனதும் மார்க்ஸியவாதிகளதும் இடதுசாரிகளதும் பாராளுமன்ற பாதை – நேர் மறை,
எதிர் மறை அனுபவங்கள் – ஒரு வரலாற்றுப் பார்வை”
ஐந்தாவதும் இறுதிப் பகுதியும் “நமது நிலைப்பாடும் செயற்படுவதற்கான வழிமுறைகளும்”

என்று பல்வேறு உப தலைப்புகளைக் கொண்டதாக பிரிக்கலாம். ஆனால் நான் மேற்குறிப்பிட்டவாறு உப தலைப்புகளை வரிசைக் கிரகமாக கட்டுரையில் முன்வைக்கப்படவில்லை. இவ்வாறன ஒரு தொடர்ச்சியில்லாது ஒன்றிக்கும் பின் ஒன்று என மாறி மாறி இருப்பதானது வாசிப்பவர்களின் தொடர்ச்சியான ஒரு புரிதலுக்கு தடையாக இருப்பதாக அல்லது இருக்கலாம் என ஒரு வாசகராக உணர்கின்றேன். உப தலைப்புகளுடன் தொடர்ச்சியான தன்மை ஒன்று இருந்திருப்பின் வாசிப்பவர்களுக்கு விடயங்களைப் புரிந்துகொள்வதற்கு இலகுவானதாக இருந்திருக்கும் என நம்புகின்றேன். இவ்வாறு கூறுவதானது எந்தவகையிலும் கட்டுரையின் முக்கியத்துவத்தையும் அது கூறும் விடயங்களையும் குறைத்து மதிப்பிடுவதாகாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். ஏனனில் மேற்குறிப்பிட்டவாறான உப தலைப்புகளின் அடிப்படையில் விடயங்களை விரிவாகவும் ஆழமாகவும் கட்டுரை ஆராய்கின்றது. அதாவது கோட்பாடு, மூலோபாயம் தந்திரரோபாயம் மற்றும் செயற்பாடு என்றடிப்படையில் நோக்கமாகக் கொண்டு கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலில் “வர்க்கம், அரசு, அரசாங்கம், மற்றும் பாராளுமன்றத்தின் தோற்றமும் இவை உருவாக்கிய மேலாதிக்க சித்தாந்தமும் – ஒரு மார்க்சிய பார்வை” ஏன்ற உப தலைப்பிற்;குள் கட்டுரைiயில் மார்க்ஸின் 1843ம் ஆண்டிலிருந்து 1872ம் ஆண்டு வரை எழுதிய நூல்களில் உள்ள கருத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதைத் தவிர ஏங்கல்ஸ் லெனின் ஆகியோரது நூல்களும் இதில் கூறப்பட்ட கருத்துக்களை வலியுறுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனடிப்படையில் பின்வருவனவற்றை முக்கிய நிலைப்பாடுகளாக மார்க்ஸியப் பார்வையில் சுட்டிக்காட்டுகின்றது. என நான் விளங்கிக்கொள்கின்றேன்.

வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடே அரசு தோன்றுவதற்கு காரணம் ஆகும். ஆகவே அரசு என்பது வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டால் வரலாற்றில் இடையில் தோன்றியது. ஆகவே வரலாற்றில் அது நிரந்தரமாக நிலைபெற்றும் இருக்காது என்றும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இல்லாதுபோகும் பொழுது அரசு என்பது தேவையற்ற ஒன்றாகி வலுவிழந்து இல்லாது போகின்றது. ஆதிக்க வர்க்கங்களுக்கு இடையிலான போட்டியில் இறுதியாக முதலாளித்துவ வர்க்கம் தனது முழுமையான கட்டுப்பாட்டை அரசின் மீது செலுத்தும்வகையில் ஆதிக்க வர்க்கங்களுடனான உதாரணமாக நிலப்பிரபுத்துவ வர்க்கத்துனடான சமரசங்களுடாக வெற்றிபெறுகின்றது. இந்த சமரசத்தின்; விளைவாகவே அனைத்து ஆதிக்க வர்க்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் உருவாக்கப்படுகின்றது. இதில் பொதுவாக அரசு என்பது அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கத்தின கருவியாக செயற்படுகின்றது. இந்த அரசைக் கட்டிக்காப்பதற்காக அரசின் இயந்திரமாக அரசாங்கமும் மற்றும் சமூக நிறுவனங்களான கல்வி சமயங்கள் காவற்துரை இராணுவம் என்பனவறின் துணையுடன் செயற்படுகின்றது. ஆகவே அரசு என்பது நடுநிலையானதல்ல எனவும் சுரண்டப்படும் வர்க்கத்தை அடக்குவதற்கான கருவியாக செயற்ப்படுகின்றது. ஏனனில் முதலாளித்துவ அரசானது முதலாளிகள் அதிகாரத்திலும் இருப்பதற்கும் தொழிலாளர்கள் அடக்கப்படுவதற்கும் பயன்படுத்தப்படுவதுடன் அவ்வாறே தன்னைக் கட்டமைத்துமுள்ளது.

மறுபுறம் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய சிந்தனையாளர்களான கிராம்சி அல்தூசார் போன்றவர்களின் கருத்துக்கள் இக் கட்டுரையில் பயன்படுகின்றன. கிராம்சியின் முக்கியமான கேள்வி ஒன்று இங்கு எடுத்தாளாப்படுகின்றது. அதாவது அரசானது தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுகின்ற முதலாளித்துவ வர்க்கத்தின் கருவி எனின் எவ்வாறு இந்த ஆளும் வர்க்கமானது தான் அடக்குபவர்களிடம் இருந்தே தனது ஆட்சிக்கான சம்மதத்தைப் பெருகின்றது. இதற்குக் காரணமாக சிந்தாந்த மேலான்மை என்ற கருத்தின்; முக்கியத்துவத்தை கிராம்சி வலியுறுத்துகின்றார். அதாவது அரசு என்பதை ஆதிக்கம் மற்றும் மேலான்மை என்பவற்றின் இணைவாகவே இவர் பார்க்கின்றார். அல்துசாரோ இதை சிந்தாந்த அரச இயந்திரம் என்று ஒரு கட்டமைப்பாகவே அழைக்கின்றார். அதாவது தமது ஆதிக்கத்தை தொடர்வதற்காக வன்முறையை மட்டும் நம்பிருக்காது சிந்தாந்தம் ஊடான ஆதிக்க வழிமுறைகளான கல்விமுறை, மத நிறுவனங்கள், குடும்பம், மற்றும் அரசியல் கட்சிகள் என்பவற்றிக்கூடாக ஆற்றுகின்றனர். முதலாளித்துவ கட்சிகள் தமது சித்தாந்த மேலான்மையை நிறுவுவதற்கு இவ்வாறு பண்முகத்தன்மையுடன் செயற்படுகின்றனர். மேலும் சில சிந்தனையாளர்கள் அரச கட்டமைப்பு மற்றும் தனிநபர் சார்ந்ததும் இவற்றுக்கும் இடையிலான இயங்கியல் உறவின் அடிப்படையிலும் பார்த்தனர். மனிதர்கள் சித்தாந்தத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் அல்ல. மாறகா சித்தாந்தத்தினுடாகவே தொடர்புகொள்கின்றனர் என்பதும் இது ஆதிக்க சித்தாந்தமாக இருப்புது உண்மையானவையே என்ற கருத்து முக்கியத்துவமானதும் ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்றுமாகின்றது. இத்துடன் இன்னுமொன்றையும் வலியுறுத்த விரும்புகின்றேன். ஆதாவது மனிதர்களது பிரக்ஞையற்ற ஒரு நிலையே தம்மையே அடக்கி ஒடுக்குகின்ற இச் சிந்தாத்தங்கைளை ஏற்றுக்கொள்வதுடன் இச் சிந்தாந்தங்களினுடாகவே சிந்திக்கவும் தொடர்பும் கொள்கின்றனர் என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். இதனால்தான் மனித பிரக்ஞையின் நிலை தொடர்பாக எனது கட்டுரைகளில் நான் தொடர்ந்தும் முக்கியத்துவமளித்து வலியுறுத்துகின்றேன்.

அரச அதிகார வர்க்கமும் முதலாளித்து வர்க்கமும் தேச நல்ன்கள் எனக் குறிப்பிடுவது தமது மூலதனத்தின் நலன்களே. இவ்வாறு நம்பும் படியே சகல சமூக நிறுவனங்களினுடாகவும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக செயற்படுகின்றனர். மேலும் இவர்களால் உருவாக்கப்ட்ட தனிச்சொத்துரிமை சட்டமானது பல்வேறு எதிர்விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தியபோதும் அவை குற்றங்களாக கருதப்படுவதில்லை. இவ்வாறு முதாலாளித்துவ வர்க்கம் தனது செயற்பாடுகளை தங்ககு தடையின்றி தொடர்வதற்கான சகல வசதிகளையும் அதிகாரவர்க்கம் செய்து கொடுக்கின்றது என உதாராணங்கள் மூலம் நிறுபிக்கின்றனர். இதேபோல் முதாலாளித்துவ வர்க்கமும் அதிகாரவர்க்கத்தின் தேவைகளை அதாவது தனக்காக மேற்கொள்ளும் அரசியல் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக நிறைவேற்றுகின்றன. குறிப்பாக பணத்தின் தேவை முக்கியமானது. இந்தப் பணத்தை முதலாளிகள் தமது மூதலிலிருந்தல்ல மாறகா தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலமாகவே சேகரித்த மேலதிக பணத்திலிருந்தே அதிகாரவர்க்கத்திற்கு கொடுக்கின்றனர்.

ஆகவே சுரண்டப்படும் வர்க்கங்கள் இந்த அரசைக் கைப்பற்றாது தமது இலக்குகளை உதாரணமாக வர்க்கமற்ற சமுதாயத்தை அடையமுடியாது என்கின்றனர். மேலும் இவ்வாறு கைப்பற்றப்படும் அரசை தமது நோக்கங்களுக்காக அப்படியே பயன்படுத்த முடியாது என்பதால் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டும் எனவும் வாதிடுகின்றனர். இதன் நீட்சியாக வர்க்க முரண்பாடுகள் இல்லாது போகும் போது அரசும் அதன் தேவைகளும் இல்லாது போகும். ஆகவே, முதலாளித்துவ அரசுக்குப் பதிலாக புரட்சியின் பின் பட்டாளிவர்க்க சர்வாதிகாரம் கொண்டது தான் புரட்சிகர அரசு என முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறான புரட்சிகர அரசை வன்முறையுடன் கூடிய புரட்சி இல்லாது முதலாளித்து அரசை இல்லாது ஒழிக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.

அதேவேளை அரசு தொடர்பாக இப்படியான ஒரு கோட்பாட்டை அல்லது கருத்தை இலகுவாக முன்வைக்கலாமா என்கின்ற் கேள்வியையும் எழுப்புகின்றனர். காரணம் அரசுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான உறவு இருக்கின்றதா அல்லது இரண்டும் சார்பளவில் சுயாதினமாவையா? அரசு ஆளும் வர்க்கத்தின் அடிமையாகவா அல்லது அதன் நலன்களைக் காப்பனவாக மட்டுமா செயற்படுகின்றது?. அவ்வாறு எனின் எப்படி தொழிலாளர்களது நலன்கள் மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பான சட்டங்களையும இயற்றுகின்றது?. என சில கேள்விகளையும் முன்வைக்கின்றர்.

பாராளுமன்றம் என்பது மன்னராட்சி மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கம் மற்றும் வளர்ந்து வந்த முதலாளித்து வர்க்கத்திற்கும் இடையிலான மோதல்களின் விளைவாக இவர்களைக் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் உருவான ஒரு பொதுவான அமைப்பு. இதிலிருந்து எவ்வாறு கட்சிகள் குறிப்பாக சட்ட வல்லுனர்களை பிரதிநிதிகளாக கொண்ட கட்சிகள் உருவாகின்றன என குறிப்பிடுகின்றனர். இவ்வாறன பிரதிநிதிகளாக ஆளும் வர்க்க ஆண்களாகவே ஆரம்பத்தில் இருந்தனர். பின்பு படிப்படியாக போராட்டங்களின் மூலம் தொழலாளர் பிரதிநிதிகளுக்கும் பெண்களுக்கும் மற்றும் பல்வேறு நிறத்தவர்களுக்கும் அந்தந்த நாட்டின் தன்மைக்கு ஏற்ப அங்கத்துவம் கிடைத்தன. ஆகவே முதலாளித்துவ மற்றும் ஆதிக்க சக்திகள் தமது ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதற்காக இவ்வாறன குழுக்களுக்கிடையில் சமரசபோக்குகளை அரசு, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம் என்பவற்றில் உருவாகின என்கின்றனர். இந்தடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் அதற்கான தேர்தல்கள் என்பது வரையறுக்கப்பட்ட பாத்திரத்தையே வகிக்கின்றது என்கின்ற போதும் இவற்றில் பங்குபற்றுவதற்கும் இவற்றினுடாக செயற்படுவதற்குகான அரசியல் உரிமைகள் சமூக விடுதலைக்கான பயணத்தில் முக்கியத்துவமானவை என்கின்றனர்.

ஆகவே பாரளுமன்றத்தில் புரட்சியாளர்கள் பங்குபற்றுவதற்கான முக்கியமான காரணங்களை ஆதராங்களாக சிலவற்றை முன்வைக்கின்றனர். இதற்காக லெனினின் கருத்துக்களையும் சோவியத்யூனியனின் கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகளையும் அப்படியே ஆதாரமாக முன்வைக்கின்றனர். இதனை “சோவியத்யூனியன் கால ஆனுபவங்கள் குறிப்பாக லெனினின் பார்வையில்” என்ற உப தலைப்புக்குள் அடக்கியிருக்கலாம். இவ்வாறான ஒரு நீண்ட இணைப்பை கட்டுரையின் ஒரு பகுதியாக சேர்த்தமைக்காக இவர்கள் தமது கவலையை தெரிவித்தபோதும் அதன் முக்கியத்துவம் கருதி வெளியீடுவதாக கூறுகின்றார்கள். இதில் கூறப்படுகின்ற விடயங்கள் முக்கியத்துவமானவை ஆனால் நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி இவ்வாறான பகுதிகளை கட்டுரையின் தொடர்ச்சியாக இல்லாது உப தலைப்புகளுடன் வெளிப்படுத்தும் பொழுது வாசிப்பவர்கள் புரிந்துகொள்வதற்கு இலகுவானதாக இருந்திருக்கும்.

அடுத்த பகுதி “கட்சியும் பாராளுமன்றப் பாதையும் புரட்சியாளர்களும் ஒரு கோட்பாட்டுப் பிரச்சனை.” இதில் முதன்மையான கருத்தாக முன்வைக்கப்படுவது, பராளுமன்றத்தை “செயல்பூர்வமான புறக்கணிப்புடன்” பொது மனிதர்களின் அரசியல் உரிமை பற்றிய பிரக்ஞையை, வாதப்பிரதி வாதங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களினுடாக வளர்ப்பதற்கான ஒரு களமாக பார்க்கின்றனர். தேர்தல் காலங்களில் பொது மனிதர்கள் அரசியல் கருத்துக்களை அறிவது தொடர்பான விழிப்படன் இருப்பதாலும் அவர்களே தேடுவதாலும் அவர்களிடம் செல்வதற்கான நல்லவொரு சந்தர்ப்பமாக கருதுகின்றனர். மேலும் ஆதிக்க முதலாளித்துவ சக்திகளின் சித்தாந்த மேலாண்மையை விமர்சிப்பதற்கான பொது தளமாக இது இருக்கின்றது. புரட்சிகர சக்திகளை பொது மனிதர்கள் புர்pந்துகொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த களங்கள் பயன்படுகின்றன. ஏனனில் அராஜகவாதிகள் நினைப்பதுபோல் போல் எடுத்த எடுப்பில் அரசை கைப்பற்றவோ கவிழ்க்கவோ முடியாது. திட்டமிட்ட செயற்பாடுகள் மூலமாக படிமுறையாகத்தான் செய்யலாம்;. இந்தடிப்படையில் பாராளுமன்றம் என்பது கடந்து செல்லவதற்கான ஒன்றே தவிர அதன் மூலம் முழுமையான நோக்கத்தை அடையமுடியாது. ஆகவே பாராளுமன்றத்திற்கு வெளியேயான செயற்பாடுகளையும் சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டும். ஆகவே புரட்சியாளர்கள் பல்வேறு வழிமுறைகளை அதாவது சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் பன்முகத்தன்மைகளையும் சமூகமாற்றத்திற்கான செயற்பாட்டிற்காக பயன்படுத்தவேண்டும் என்கின்றனர்.

சோவியத் புரட்சியின் பின்பு கடந்த 60 ஆண்டுகளில் பரட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பாராளுமன்ற செயற்பாடுகளின் அனுபவங்களையும் அதை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதையும் அடுத்த பகுதிக்குள் அடக்கலாம். அதாவது, “புரட்சியாளர்களின் பாராளுமன்ற பாதை நேர் எதிர் மறை அனுபவங்கள் ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற உப தலைப்புக்குள் இதை அடக்கலாம். இதன் மூலம் பாராளுமன்றப் பாதையின் நேர் எதிர் மறைப் பாத்திரங்களை விவாதிக்கின்றனர். உதாரணமாக சிலி நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியபோதும் அதைத் தொடர்ந்தும் காப்பாற்ற முடியாமல் போனமையும் இந்தியாவில் தொழிலர்களுக்கு எதிராக மார்க்ஸிய கட்சிகளின் மாநில அரசாங்கங்கள் செயற்பட்டதையும் இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலமைப்பையே இந்த மார்க்ஸியவாதிகள் வடிவமைத்ததையும் பாராளுமன்றத்தின் எதிர்மறை காரணங்களாக குறிப்பிடுகின்றனர். மறுபுறம் நிகரக்குவா வெனிசுலா பொலிவியா நேபாள்ம் போன்ற நாடுகளில் பாராளுமன்றத்தைக் கைப்பற்றிது மட்டுமல்லாது முதலாளி வர்க்கம் மற்றும் அமெரிக்க அரசுகளின் மறைமுக நேரடி அழுத்தங்களுக்கு எதராகப் போராடி புரட்சிகரமான முடிவுகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர் என பாராளுமன்றப் பாதையின் நேர்மறை உதாரணங்களையும் விளக்குகின்றனர்.

மேலும் குளோபல் சௌவுத் எனக் கூறப்படுகின்ற மூன்றாம் உலக நாடுகளில் கட்சி, பாராளுமன்றம், மற்றும் தனிநபர் சார்ந்த பிரச்சனைகளையும் அலசுகின்றனர். ஏனனில் இவை ஐரோப்பிய நாடுகளிலிருந்து வித்தியாசமான தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கின்றன எனக் கூறுகின்றனர். அதாவது எவ்வாறு ஒரு தனிமனிதர் முழு ஆதிக்கத்தையும் தன்னுள் கொண்டிருக்கின்றார் என்பதையும் அவரே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கின்றார் என்பதையும் விளக்குகின்றனர்.

இறுதிப் பகுதியை “நமது (வியூகம்) நிலைப்பாடும் செயற்படுவதற்கான வழிமுறைகளும்” எனக் கூறலாம். மார்க்சிய வுராலாற்றில் பாராளுமன்றம் தொடர்பாக மூன்று பார்வைகள் உள்ளதாக கூறுகின்றனர். ஒன்று பாராளுமன்றப் பாதையே ஒரு வழி என அதில் முழுமையாக நம்பியும் தங்கியும் தேங்கியும் சரணாகதியடைந்திருப்பவர்களது நிலைப்பாடு. இரண்டாவது முற்றகாப் புறக்கணிப்பவர்களான அராஜகவாதிகளது நிலைப்பாடு. மூன்றாவது பாராளுமன்றப் பாதையின் வரையறைகளைப் புரிந்துகொண்டு சமூக மாற்றத்திற்காக அதை எவ்வாறு ஆரோக்கியமாக தமது இலக்கு நோக்கி பயன்படுத்துவது என்ற நிலைப்பாடு. வியூகம் குழுவினர் மூன்றாவது பாதையையே தமது பாதையாக கொண்டுள்ளதுடன் அதற்கான வரையறைகள் பொறுப்புகள் என்ன என்பது தொடர்பாகவும் கவனங் கொண்டுள்ளனர். புரட்சிகர சக்திகளின் சித்தாந்த மேலான்மையை நிறுவுவதற்கான பாதைகளில் இதுவும் ஒரு முக்கியமான செயற்பாட்டிற்கான வழி என்கின்றனர்.

எனது முதலாவது கேள்வி லெனினின் அறிக்கையின் அல்லது கோட்பாட்டு வெளிவந்த பின் பாட்டாளிவர்க்க சர்வதிகாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட அனுபவத்தை குறிப்பாக சோவியத்யூனியன் மற்றும் சீனாவிடம் இருந்தும் நாம் பெற்றிருக்கின்றோம். இந்த சர்வதிகாரமானது பல அல்லது சில அடிப்படை பிரச்சனைகளை தீர்த்திருந்தாலும் மனிதர்களை தங்க குண்டிற்குள் அடைத்தது போலானது எனவும் குறிப்பிடலாம். இதன் அர்த்தம் முதலாளித்து அரசிற்குள் அனைத்தும் நன்று என்பதல்ல. ஆனால் முதலாளித்துவ அரசின் கீழ் அனுபவிக்கப்படுகின்ற அடிப்படை ஐனநாயகம் மனித உரிமைகளைக் சோவியத் மற்றும் சீன அரசின் கீழ் வாழ்கின்ற மனிதர்கள் அனுபவித்தார்களா என்பது கேள்விக்குரியே. ஏனனில் இவ்வாறன ஐனநாயக உரிமைகள் எல்லாம் இந்த நாடுகளில் அர்த்தமிலந்து காணப்படுகின்றன. ஒரு கட்சி ஆட்சிமுறை பன்முகத்தன்மையையும் ஐனநாயக உரிமைகளையும் ஒருபுறம் அழித்துள்ளது என்றால் மிகையல்ல. மறுபுறம் புரட்சிகர கட்சியே ஆதிக்க வர்க்கமாக மாறியுள்ளமை கண்ணால் காண்கின்ற உண்மை. முதலாளித்துவ அரசு கைப்பற்றப்பட வேண்டும் இல்லாது செய்யப்படவேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால் பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் என்ற சொல்லாடல் அல்லது அந்த செயற்பாட்டுமுறைமை இப்பொழுதும் சரியானது என ஏற்றுக்கொள்கின்றோமா? ஆம் எனின் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் தொடர்பான பதில் என்ன? ஏற்றுக்கொள்ளவில்லை எனின் மாற்று செயற்பாட்டு முறைமை என்ன? என்பதற்கான பதில்கள் முன்வைக்கப்படவேண்டும். இதன் தொடர்ச்சியாக வன்முறை செயற்பாட்டின் மூலம் அரசை கைப்பற்றுவது தொடர்பான விரிவான விளக்கமும் முன்வைக்கப்படவேண்டும். ஏனனில் வன்முறை பாதை என்பது ஆணாதிக்கப் பார்வையிலமைந்த ஒரு செயற்பாட்டு வடிவம் என்பதே எனது புரிதல்.

இரண்டாவது தனிமனிதர்களும் புரட்சிகர கட்சியும் சமூகமும் பொது மனிதர்களும் மற்றும் இவற்றுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான பிரச்சனை. புரட்சி நடைபெற்ற நாடுகளில் குறிப்பாக மேற்குறிப்பிட்ட இரு நாடுகளிலும் தனிமனிதர்கள் குறிப்பாக கட்சித் தலைவர்கள் மிகப் பெரும் அதிகாரம் உள்ள ஆதிக்க சக்திகளாக எவ்வாறு வளர்ச்சி பெற்றனர். இவ்வாறான வளர்ச்சியை தடுப்பதற்கு புரட்சிகர கட்சிக்குள் பொறிமுறை வடிவங்கள் இல்லையா? இந்த நாடுகளில் புரட்சியின் பின் சமூக கட்டமைப்பிலும் பொது மனிதர்களது வாழ்விலும் ஆதிக்க சிந்தனைகளிலும் மாற்றங்கள் இடம் பெற்றனவா? இடம் பெற்றன எனின் எவ்வாறான மாற்றங்கள்.?. இல்லை எனின் ஏன் மாற்றம் ஏற்படவில்லை? புரட்சி நடைபெற்று இவ்வளவு காலத்தின் பின் இன்று இந்த மனிதர்களினதும் சமூகத்தினதும் அதன் ஆதிக்க சித்தாந்தத்தினதும் நிலை என்ன? இவைபற்றிய ஆய்வுகள் முக்கியத்துவமானவை இல்லையா?

வெற்றி பெற்ற புரட்சிகள் எல்லாம் சரியான கோட்பாடு இருந்ததனால் மட்டும் வெற்றி பெற்றன எனக் கூறலாமா? அதற்கான சூழலும் ஆதிக்க சக்திகளது பலவீனமான நிலையும் புரட்சிகளின் வெற்றிக்கு காரணமாக இருக்கவில்லையா?

மூன்றாவது மார்க்ஸ்pன் புகழ் பெற்ற வசனம் இதுவரை தத்துவவாதிகள் சமூகத்தை வியாக்கினமே செய்து வந்தனர். ஆனால் நாம் சமூகத்தை எப்படி மாற்றப் போகின்றோம் என்ற நடைமுறை செயற்பாட்டுற்கான தத்துவத்தை முன்வைக்கின்றோம் என்றார். இதுவே இவர் கடந்தகாலத்திலிருந்து தன்னை முறித்துக் கொண்டு உருவாக்கிய புதிய கோட்பாடு எனலாம். இதேபோல் லெனின் மார்க்ஸின் முன்மொழிவான முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் வர்க்க முரண்பாடுகளின் உச்சத்தில் தான் புரட்சி சாத்தியம் என்பதற்கு மாறாக நிலவுடமை சமூகக் கட்டமைப்பின் இறுதிக் கட்டங்களில் அல்லது முதாலாளித்து சமூக அமைப்பிற்கான ஆரம்ப கட்டங்களில் இருந்த ரஸ்சிய சமூகத்தில் அன்றைய சுழ்நிலைகளால் புரட்சி சாத்தியம் என கண்டு முன்னெடுத்தார். இதுவே இவர் மார்க்ஸியத்தின் உதவியுடன் உருவாக்கி புதிய கோட்பாடு எனலாம். இதேபோல் மாவோவும் இறுக்கமாக நிலவிய சீன நிலவுடைமை சமுதாயத்தில் அதுவும் முதலாளித்துவ வாசனை அற்ற கிராமப் புறங்களிலிருந்தே சீனப் புரட்சியை ஆரம்பித்தார். இப்படி வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் தம் தம் சமூக சுழ்நிலைகளுக்கு ஏற்பவே புதிய கோட்பாடுகளை உருவாக்கி புரட்சியை வழிநடாத்தினர். வியூகம் குழுவினர் இவ்வாறு தமது நிலைப்பாடாக முன்வைக்கும் தமிழ் சமூகம் அதற்கான மாற்றம் தொடர்பான புதிய கோட்பாடு என்ன?

பாராளுமன்றம் தொடர்பாக மார்க்ஸ் மற்றும் லெனினின் வாதங்களை முன்வைத்தனர். பல்வேறு நாடுகளில் வரலாற்று ஆதராங்களை நேர் எதிர் அனுபவங்களை முன்வைத்தனர். இதன் மூலம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் எந்த முரண்பாடு இல்லை. ஆனால் கடந்த காலங்களில் புரட்சியாளர்கள் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தியதிலிருந்து பெற்ற நேர்மறை எதிர்மறை அனுபவங்களில் இருந்து நாம் கற்றது என்ன? கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பயன்படுத்திய புரட்சியாளர்களிலிருந்து வியூகம் குழுவினர் எந்தவகையில் வேறுபடுகின்றனர்.? இவற்றிலிருந்து எவ்வாறான புதிய கோட்பாட்டை முன்வைக்கின்றார்கள்? அல்லது பாராளுமன்றத்திற்கு செல்வதை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட சாதகமான வாதங்களா இவை?

இலங்கை இடதுசாரிகள் குறிப்பாக சிங்கள தேசத்தின் இடதுசாரிகளில் என்எஸ்எஸ்பி அதனது தலைவர் விக்ரமபாகுவின் தலைமையில் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் ஜனநாய விரோத மற்றும் இனவாத செய்றபாடுகளுக்கு எதிராக செயற்பட்டபோதும் மற்றும் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக்கொண்டு அதற்காக செயற்பாடுகளை மதிக்கலாம் ஆதரிக்கலாம். ஆனால்; சமூக மாற்றம் புரட்சி என்ற தளத்தில் அவர்களது செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டனவாக அல்லது பூச்சிய நிலையிலையே இருக்கின்றன. இவர்கள் பாராளுமன்ற தேர்தல் காலங்களில் மட்டும் துடிப்பாக செயற்படுகின்றவர்களா மட்டுமே இருக்கின்றனர். இதற்கு காரணம் இவர்களிடம் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட பழைமைவாத மார்க்ஸிய கருத்துக்களா? அல்லது புதிய கோட்பாடுகள் தொடர்பான அக்கறையினமா? ஒரு முறை விக்கிரமபாகுவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது தங்களது வீட்டின் விலாசமாக இன்றும் தங்களது சாதிய அடையாளம் உள்ளது என்றும், இது நீங்கள் இன்னும் சாதிய அடையாளத்தை பயன்படுத்துகின்றீர்கள் என்பதற்கு சாட்சியாகவும் இருக்கின்றது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அவ்வாறு சாதிய அடையாளத்தை முனநிறுத்தவில்லை எனின் அதை ஏன் மாற்றக் கூடாது எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அந்த அடையாளத்தைத்தான அனைவரும் குறிப்பாக தபால் தருகின்றவர் அறிந்து வைத்திருக்கின்றர். ஆகவே கடிதங்கள் வந்து சேர்வதற்கு வசதியான தெரிந்த அடையாளமாக அது உள்ளது என ஒரு பொருப்பற்ற உப்புச்சப்பற்ற பதிலை கூறியிருந்தார்.. மேலும் சமூக மாற்றம் ஒன்று நடைபெற்றபின் அதன் தேவை இருக்காது என்றும் அப்பொழுது அந்த அடையாளம் பயன்படுத்தப்படமாட்டாது என்றார். என்னைப் பொருத்தவரை இது ஒரு முக்கியமானதும் விமர்சனத்திற்கும் உரிய ஒரு விடயமாகும். இங்குதான் நாம் நம் மீதான ஆதிக்க சக்திகளது சித்தாந்தங்களை பிரங்ஞைபூர்வமாக நாம் கட்டுடைப்பு செய்யவேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. அதாவது நாம் சமூக மாற்றத்திற்காக செயற்படும் அதவேளை சமாந்தரமாக நம்மை நாம் மாற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும். புரட்சி ஏற்படும்வரை காத்திருப்பதோ அல்லது புரட்சியின் பின் மாறிவிடுவோம் என்பதோ பொறுப்பற்ற தப்பிக்கும் காரணமே. இவ்வாறு நாம் செய்வது நடைமுறை வாழ்வில் கஸ்டமானதாக இருந்தபோதும், நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமான சகல கணங்களிலும் தளங்களிலும் புரட்சிகரமானவர்களாக நாம், நம் உள் தன்மையிலும், சிந்தனையிலும், வெளி பழக்கவழக்கங்களிலும், உறவுகளிலும்; மாறாதவரை, நாம் எதிர்பார்க்கின்ற சமூக மாற்றத்தை முழுமையாக சாத்தியமாக்க முடியாது என்பது நாம் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விடயமாகும்.

மறுபுறம் வியூகம் நண்பர்கள் உயிர்பு காலத்திலிருந்து புதிய கோட்பாடுகளை உருவாக்குவதில் அக்கறை உள்ளவர்களாகவும் அதை நோக்கிய முழுமையாக பங்களிப்புடன் செயற்படுகின்றவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் பொதுவான சமூக தளத்தில் அவர்களது செயற்பாடு என்பது பூச்சியம் என்றே கூறவேண்டும். இவ்வாறான செயற்பர்ட்டின் வெளிப்பாடுதான் 1998ம் ஆண்டு கட்சியாக தம்மை பிரகடனப்படுத்தி பொது மனிதர்கள் மத்தியில்செயற்பட ஆரம்பித்தபோது அவர்கள் எதிர்கொண்ட அமைப்புத்துறை மற்றும் தனிமனித செய்பாடுகள் தொடர்பான் பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியாது இரண்டு வருடங்களுக்குள் கட்சியை களைக்கவேண்டி ஏற்பட்டது. எனது புரிதலில் இதற்கு காரணம் கோட்பாட்டுருவாக்கத்தில் அக்கறையாக செயற்படும் அதேவேளை சமூக மட்டத்திலான செயற்பாடின்மை காரணம் எனலாம். அதாவது தாம் உருவாக்கிய கோட்பாட்டை சரியானதா பிழையானதா என யதார்த்த சமூக அரசியல் நீரோட்டத்துடன் சமாந்தரமாக உரசிப்பார்க்காததே காரணம் என்பேன். இவை இரண்டும் சமாந்தரமாக நடைபோடவேண்டும் என்றே கருதுகின்றேன்.

சமூக மாற்றத்திற்கா செய்ற்படுகின்றவர்களின் வழிகாட்டியாக இருக்கின்ற மார்க்ஸ் லெனின் மாவோ போன்ற பிரதான கோட்பாட்டாளர்கள் சிந்தனையாளர்களாக இருந்தால் என்ன, அதன் பின் வந்த பிற புரட்சியாளர்களாக இருந்தால் என்ன, அனைவரும் அந்த சுழலுக்கான கோட்பாட்டை தாம் உருவாக்கிய அதேநேரம் நடைமுறை அரசியலிலும் பங்கெடுத்ததுடன் அதற்கும் வழிகாட்டினர் என்பதே எனது அறிவு. நடைமுறை அரசியலுக்கு உடாகத்தான தமது கோட்பாடுகளை செழுமைப்படுத்தின்ர் என்பதே எனது புரிதல். ஆனால் தமிழ் சுழலில் உதாரணமாக செந்தில் வேல் தலைமையிலான புதிய ஐனநாயக கட்சியினர் நீண்ட காலமாக இடதுசாரி அரசியலில் செயற்படுகின்றனர். ஆகக் குறைந்ததது அவ்வாறான ஒரு தோற்றத்தை தருகின்றனர். ஆனால் அவர்களிடம் காணப்படும் மரபுவாத சிந்தனையும் அதை அப்படியே பின்பற்றுகின்ற போக்கும் புதிய கோட்பாடுகள் தொடர்பான அக்கறையீனமும் அவர்கள் செயற்படும் சமூகத்தில் குறிப்பான எந்தவொரு தாக்கத்தையும் அவர்களால் ஏற்படுத்த முடியாமலிருக்கின்றது. மறுபுறம் வியூகம் நண்பர்கள் புதிய கோட்பாட்டுருவாக்கத்தில் காண்பிக்கும் அக்கறையை நடைமுறை அரசியலில் காண்பிப்பதாக தெரியவில்லை. பொதுவான அரசியலில் செயற்படுவதற்காக தமக்கான கோட்பாட்டை உருவாக்கும் வரை காத்திருப்பதாகவே தெரிகின்றது. அவ்வாறு இவர்கள் கோட்பாட்டை உருவாக்கும் பொழுது புறச் சுழல் புதியதொரு நிலைமைக்கு மாறியிருக்கும். மீண்டும் அப் புதிய சுழலுக்கு ஏற்ப புதிய கோட்பாட்டின் தேவை ஏற்படும். இதுவே கட்ந்தகாலத்திலும் நடந்தது. இப்பொழுதும் இவர்களுக்கு நடக்கின்றது என்றால் மிகையல்ல. ஆகவே வியூகம் நண்பர்கள் தாம் இருக்கின்றன நாடுகளில் ஒரு சிறு குழுவையாவது அமைத்து கோட்பாட்டுருவாக்கத்திற்கு சமாந்தரமாக நடைமுறை அரசியல் செயற்பாட்டிலும் பங்குபற்றுவதே ஆரோக்கியமானது என்பது எனது நிலைப்பாடு. ஆல்லது 2000ம் ஆண்டும் தமிழிழ மக்கள் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையே மீண்டும் இவர்கள் உருவாக்கப் போகும் கட்சிக்கு எதிர்காலத்தில் எற்படும் என்பதில் சந்தேகமில்லை.

உதராணமாக கனடாவில் வாழும் பெரும்பான்மையான தமிழ் பேசும் மனிதர்கள் தமது வர்க்க சாதிய சமூக மற்றும் புலம் பெயர் தகுதி அல்லது அந்தஸ்திற்கு ஏற்ப லிபரல் கட்சிக்கும் பழைமைவாதக் கட்சிக்குமே அதிகமாக ஆதரவளித்து வாக்களிக்கின்றனர். புதிய ஐனநாயக கட்சி பல விடயங்களில் லிபரல் கட்சியை போன்றது எனவும் வெற்றி பெறாத கட்சி என்ற கருத்துக்கள் பொது மனிதர்கள் மத்தியில் சர்வசாதராரணமாக நிலவுகின்றது. இருப்பினும் தமிழ் பேசும் மனிதர்களைப் பொருத்தவரை தமது அரசியல் கோரிக்கைகளுக்காகவும் இலங்கையின் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் விடுதலைக்காகவும் உறுதியாக ஆதரவளிப்பது மட்டுமல்ல குரலும் கொடுக்கின்ற கட்சி புதிய ஐனநாயக கட்சி என்றால் மிகையல்ல. தமிழ் தேசிய விடுதலைக்கான அரசியலின் அடிப்படையில் இக் கட்சிக்கே தமிழ் பேசும் மனிதர்கள் ஆதரவளிக்கவும் இக் கட்சியின் சார்பாகவே தமது பிரதிநிதிகளை ஒன்றுபட்டு நிறுத்தவும் வேண்டும். அவ்வாறு செய்ய முடியுமாயின் நிச்சயமாக புலம் பெயர் தமிழ் பேசும் மனிதர்களுக்கான கனடியப் பிரதிநிதி ஒருவரை தெரிவுசெய்யலாம். ஆனால் தமிழ் பேசும் மனிதர்கள் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு தமக்கு யார் இடம் தருகின்றார்களோ அவர்களுடனையே சந்தர்ப்பவதா பயன்படுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணம் தமிழ் பேசும் மனிதர்களுக்கான ஒழுங்கான அரசியல் கட்சி இல்லாமையே. ஆவ்வாறு ஒரு கட்சியை உருவாக்குவதன் மூலம் கனடிய புலம் பெயர் தமிழ் சமூகத்தில் சித்தாந்த மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் இம மனிதர்களை சமூக நலன் சார்ந்த அரசியல் செயற்பாட்டிற்காக வழிநடாத்தலாம். இதையே வியூகம் குழுவினர் தமது கோட்பாட்டு செயற்பாடடுக்கு சமாந்தரமாக பொதுவான தளத்தில் தமது ஆரம்ப செயற்பாடாக முன்னெடுக்கவேண்டும். ஏனனில் எதிர்கால அரசியல் என்பது தளத்திலும் புலத்திலும் சர்வதேரீதியிலும் என் மூன்று தளங்களில் செயற்படவேண்டியிருக்கும். மற்றது புலத்தில் இருக்கின்றவர்களில் அதிகமானவர்கள் தள அரசியல் கதைத்தாலும் அங்கு சென்று செயற்படமாட்டார்கள் என்பது திண்ணம். ஆகவே அவர்கள் புலம் பெயர் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே தமிழ் தேசிய விடுதலைக்கான சமூக விடுதலைக்கான பங்களிப்பை சிறிதளவாவது செய்யலாம். இதை உணர்ந்து வியூகம் குழுவின்ர் செயற்படுவார்களா அல்லது அக்கறை உள்ளவர்களுக்கு வழிகாட்டுவார்களா?

வியூகம் இதழ்கள் 1-2 இல் ஒன்றை நீங்கள் நன்றாக கவனித்தால் ஒரு விடயத்தைப் புரியலாம். அதாவது இக் கட்டுரைகள் ஒரு குழுவின் அல்லது தனிமனிதரின் கருத்துக்களையா பிரதிபலிக்கின்றன என்பதில் சஞ்சிகை முழுக்க தடுமாற்றம் காணப்படுகின்றது. சில கட்டுரைகளில் பொதுவான தளத்தில் “நாம்” எனவும் சில இடங்களில் தனிநபர்சார்ந்து “நான்” என்ற சொற்பிரயோகங்கள் மாறி மாறி வருகின்றன. இது பார்ப்பதற்கு சிறிய பிரச்சனையாக இருக்கல்hம். ஆனால் இது முக்கியமான ஒரு பிரச்சனை. வியூகம் ஒரு குழுவாக செயற்படுகின்றதாயின் இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கருத்துக்களாக இருப்பதுடன் இக் கட்டுரைகளில் அவை பிரதிபலிக்கவேண்டும். அல்லது தம் குழுவிற்குள் அவ்வாறான ஒருமித்த பார்வை அல்லது அனைத்துக் கருத்துக்களிலும் உடன்பாடு இல்லை எனின் அதை பொது இடத்தில் முன்வைத்து வெளிப்படுத்து வேண்டும். மேலும் இந்த இதழ்களில் வரும் கருத்துக்கள் கட்டுரையை எழுதியவரின் சொந்தக் கருத்துக்கள் எனவும் வீயூகத்தின் கருத்துக்கள் அல்ல எனவும் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் இவர்கள் அனுப்பு மின்னஞ்சல்களில் அனுப்புகின்றவர்களின் பெயர் ஒன்றும் இருக்காது. மற்றும் நாம் அனுப்பும் மின்னஞல்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் மட்டுமல்ல ஆகக் குறைந்தது மின்னஞ்சல் கிடைத்ததா என கூட உறுதிசெய்வதில்லை. இவ்வாறான செயற்பாடுகள் இவர்களது பொறுப்பற்றதன்மையை அக்கறையின்மையை காண்பிக்கின்றது.

இச் சந்தர்ப்பத்தில் மனிதர்களின் பண்பு தொடர்பாக நிச்சயமாக கதைக்கப்பட வேண்டும். குறிப்பாக புரட்சிகர மற்றும் சமூக மாற்றத்திற்கான அரசியல் கதைப்பவர்களிடம் இது குறித்த பிரக்ஞை நிச்சயமாக இருக்க வேண்டும். நாம் ஏன் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றோம். அரசியலில் அக்கறை இருப்பதற்கு என்ன காரணம்? அநீதி நடப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லையா என்பதாலா? அல்லது மனித இனத்தின் மீதான அன்பினால், மனிதர்கள் சுரண்டப்படாது கஸ்டப்படாது சகல உரிமைகளையும் அனுபவித்துக்கொண்டு நலமாக இன்பமாக வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கமா? ஆல்லது புpற தொழில்கள் போல் இதுவும் பணம் பெருக்கும் ஒரு தொழிலா? அல்லது பணம் இருப்பவர்களுக்கான பொழுது போக்கான செயற்பாடா அல்லது தமது சமூக அந்தஸ்ததை நிறுவிக்கொள்வதற்கான ஒரு வழியா? இப்படி பல காரணங்களுக்கா சாதாரண அரசியலில் மட்டுமல்ல புரட்சிகர அரசியலில் கூட ஈடுபடுகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

நாம் எந்தளவு உயர்ந்த இலட்சியங்கள் கோட்பாடுகள் தத்துவங்கள் கருத்துகள் என்பவற்றைக் கதைக்கலாம் எழுதலாம். ஆனால் அடிப்படையில் நாம் கதைப்பதன்படி எழுதுவதன் படி நமது இலட்சியக் கனவுபடி ஒரு சிறிதளவாவது செயற்படுகின்றோமா அல்லது மாற்றத்திற்கான முதற்படியகா நம்மை மாற்றுகின்றோமா அல்லது அது தொடர்பாக பிரக்ஞையாவது கொண்டுள்ளோமா என்றால் இல்லை என்றே கூறுவேன். இது தொடர்பான பிரக்ஞை இல்லாது தம்மை மாற்றுவதைப் பற்றிய அக்கறை இல்லாது இருப்பவர்கள் அனுவமும் கல்வியறிவு குறைந்தவர்கள் என்றால் புரிந்துகொள்ளலாம். ஆனால் பல கால வித விதமான சமூக அரசியல் செயற்பாட்டு அனுபவங் பெற்றுக்கொண்டவர்களும் சமூகப் பிரக்ஞையுடன் உயர் கல்வி கற்றவர்களும் கூட இவ்வாறு நடந்து கொள்வது நம்பிக்கையீனத்தையே தருகின்றது. குறிப்பாக நமது பொதுவான சமூக பிரச்சனைகளை கதைக்கும் போது; குறிப்பாக தனிநபர்சார்ந்த பிரச்சனைகளை வெளிப்படையாகவும் நேரிடையாகவும் கதைக்கும் பண்பு நம்மிடம் இல்லை. மாறாக ஒருவருக்கு பின்னால் கதைக்கும் பண்பே பரவலாக காணப்படுகின்றது. ஒருவருக்குப் பின்னால் கதைப்பது தவறல்ல. ஆனால் அதற்கு முதலில் குறித்த நபருக்கு முன்னால் கதைத்த அல்லது விமர்சனத்தை வைத்த பின்பே அந்த நபர் இல்லாதபோது கதைப்பது பண்பாகும். அப்பொழுது அதில் தவறில்லை. ஆனால் நாம் மறுதலையாகவே செய்கின்றோம். குறித்த நபருக்கு முன்னால் அவரது வாழ்க்கை கல்வி தொழில் சமூக பதவி தரம் அந்தஸ்து என்பவற்றைப் பொருத்து அவருடனான உறவின் தரத்தைப் பேணுகின்றோம். குறித்த நபர் தொடர்பான விமர்சனங்கள் இருந்தால் அவரது சமூக அந்தஸ்து தேவை என்பவற்றுக்கு ஏற்ப விமர்சனங்களை தவிர்க்கின்றோம் அல்லது காரசாரமாக முன்வைக்கின்றோம். இவ்வாறு விமர்சனங்கள் முன்வைக்காமல் இருப்பதற்கு இன்னுமொரு காரணம் இருக்கின்றது. விமர்சனங்களை ஆரோக்கியமாக ஏற்கின்ற மனப் பக்குவம் பண்பு நம்மிடம் இல்லை. மறுபுறம் ஒருவரை நம்க்கு பிடிக்கவில்லை அல்லது உடன்பாடு இல்லை எனின் மூன்றாம்தர பாணியிலான ஆரோக்கியமற்ற பிரயோசனமற்ற விமர்சனங்களை முன்வைப்பது. இவ்வாறன அனுபவங்களே கடந்தகால செயற்பாடுகளின் மூலம் நான் பெற்றவை. இவ்வாறான எதிர்மறை மனிதப் பண்புகள் மற்றும் மனித உறவுகளை நாம் கொண்டிருக்கும் பொழுது சமூக மாற்றத்தை எப்படி ஏற்படுத்துவது. தனி மனித மாற்றம் அவசியமில்லையா? சக மனிதர்களுடனான நமது உறவுகள் மேம்படத்தேவையிலலையா?

இன்று இக் கூட்டத்திலும் இதற்கு முன் வியூகம் ஒழுங்கு செய்த கூட்டங்களுக்கும் வந்த பலர் நாம் முன்பு தமிழிழ மக்கள் கட்சியாக செயற்பட்டபோது எம்மைக் கண்டுகொள்ளவே இல்லை. புறக் கணித்தார்கள். ஜான் மாஸ்டர் இன்று செய்வதைத் தான் அன்றும் செய்தார். ஆனால் அன்று இவருக்கு கனடாவிலுள்ள வேறு நபர்களின் ஆதரவு இருந்தது. இன்று அவர்கள் ஆதரவு இல்லை என்றவுடன் இவர்கள் ஆதரிக்கின்றார்கள். ஆகவே இங்கு கருத்துக்களுக்கா கொள்கைகளுக்கா அல்லது தனி மனிதர்களுக்கா முக்கியத்துவம் கொடுத்து நாம் செயற்பட விரும்புகின்றோம் என்பது எனக்கு கேள்வியாகவே இருக்கின்றது. அன்று ஒரு மாற்றாக உருவான அக் கட்சியை திறந்த மனதுடன் விமர்சனங்களை முன்வைத்து ஆதரித்திரிந்தால் தமிழ் பேசும் மனிதர்களுக்கு எதிரான போர் நடைபெற்றபோது புலிகளின் தலைமைக்கு சார்பற்ற பொது மனிதர்களின் நலன் சார்ந்த உரிமைகள் சார்ந்த ஒரு போராட்டத்தை நாம் ஆகக் குறைந்தது புகலிட நாடுகளிலாவது மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்ய முடியாமல் போய்விட்டது. இதற்கு இப்படியான நமது பண்புகள் தான் காரணம் என்றால் மிகையல்ல.

கட்சிக்குள் புலிகள் இருக்கின்றார்கள் என கூறி அன்று கட்சியை புறக் கணிகத்தவர்கள் இன்று வியூகம் குழுவினர் முன்வைக்கும் கருத்துக்களின் படி முன்னால் புலி உறுப்பினர்களை இனிவருங் காலங்களில் உள்வாங்குவது தவிர்க்க் முடியாது என்பதற்கு என்ன சொல்லப்போகின்றார்கள். நான் இப்படி கூறியவுடன் நான் இன்னாரின் ஆள் என உடனடியாக முத்திரை குத்தாதீர்கள். இன்று நான் எந்த அமைப்பு சாரத ஒரு நபர். ஆனாhல் சமூக மாற்றத்திலும் அதற்காக செயற்பட வேண்டும் என்பதில் மட்டும் அக்கறை கொண்டுள்ள மனிதர். ஆகவே நான் முன்வைக்கும் சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கே முக்கியத்தும் கொடுங்கள். இதன் மூலம் அவற்றுக்கான தீர்வுகளை கண்டுபிடிப்போம். மாறாக வழமைபோல் முத்திரை குத்தி முன்வைக்கும் பிரச்சகைகளை ஓதுக்கிவிடாதீர்கள்.

இப்படியானவர்கள் தான் சமூமாற்றம் மற்றும் புரட்சிகர அரசியல் என்பவற்றில் அக்கறை கொண்டு செயற்படுகின்றோம். உயர்ந்த தத்துவங்கள் கோட்பாடுகள் கருத்துக்கள் என்பவற்றை அள்ளி விசுகின்றோம். என்னைப் பொருத்தவரை நமது மாபெரும் தவறுகளுக்கான அடிப்படை முரண்பாடு இங்குதான் இவ்வாறன பண்புகள் சிந்தனைகள் செயற்பாடுகளில்தான் ஆரம்பிக்கின்றது என்கின்றேன். இதற்குக் காரணம் நாம் எவ்வளவுதான் நமது வாசிப்புக்கள் எழுத்துக்கள் தொடர்பாக பிரக்ஞையாக இருந்தாலும் நம்மைப் பற்றிய பிரக்ஞை நம்மிடம் மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதாவது நமக்கு வெளியே உள்ள அனைத்தையும் பற்றி ஒரளவாவது பிரக்ஞையுடன் செயற்படுவோம் செயற்படலாம். ஆனால் நமக்குள்ளே நடப்பவை பற்றிய நம் மன சிந்தனையோட்டங்கள் தொடர்பான பிரக்ஞை என்பது நம்மிடம் மிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை எனக் கூடக் கூறலாம். புரட்சிகர முன்னேறிய கோட்பாடு என்பது பிரக்ஞையுடன் தமக்கு வெளியில் அதாவது சமூகத்தில் நடப்பவற்றவை அறிவது புரிவதும் அதிலிருந்து உருவாக்குவதுமாகும். இது உள் அதாவது தனிமனித பிரக்ஞையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? ஒரு புரட்சியில் தனிமனித பிரக்ஞையின் முக்கியத்துவம் என்ன? இவைபற்றிய விரிவான விளக்கத்தை இவர்கள் முன்வைக்க வேண்டும். மனிதப் பிரக்ஞை என்பது முக்கியமான விடயமாக இருந்தபோதும் அது தொடர்பாக விரிவாக கதைப்பதற்கு இது பொருத்தமான இடமல்ல என்பதாலும் இன்றைய எனது பணி அதுவல்ல என்பதாலும் இத்துடன் நிறுத்திக்nhகள்கின்றேன்.

இறுதியாக புரட்சி செய்வது அல்லது சமூகமாற்றத்திற்கான செயற்பாடு என்பது ஒரு அரசாங்கத்தை அல்லது முதலாளித்துவ கம்பனி ஒன்றை நிர்வகிப்பதற்காக செயற்படுவதைவிட பன்மடங்கு ஆற்றலும் மனித வலுவும் தேவைப்படுகின்ற ஒன்று. விஞ்ஞானிகளை விடவும் சமூக அறிஞர்கள் சிந்தனையாளர்களை விடவும் புரட்சியாளர்கள் தமது முழுமையான உடல் மனம் மற்றும் சிந்தனை செயற்பாட்டு பங்களிப்பை முழுமையாகவும் பிரக்ஞைபூர்வமாகவும் வழங்க வேண்டியவர்களாக உள்ளார்கள். அவ்வாறு வழங்காதவிடத்து மேற்குறிப்பிட்ட நிறுவனங்களாலையே முழுநேரம் வேலை செய்தும் தமது நோக்கங்களை நிறைவு செய்ய அவர்களால் முடிவதில்லை. அப்படியிருக்கும் பொழுது இவ்வாறான புரட்சிகர வேலைகளை அரை நேரம் வேலை செய்து நமது உயர்ந்த நோக்கங்களை அடையளாமா என்பது என்முன் உள்ள மிக்பெரிய கேள்வி. ஏனனில் என்னிடம் சிலர் முன்னாள் அல்லது இடதுசாரி மார்க்ஸிய அரசியலில் ஈடுபட்டவர்கள் பின்வருமாறு கூறினார்கள். சில முன்னாள் தோழர்கள் கட்சி அங்கத்தவர்கள் போராளிகள் முழுநேரம் கட்சி வேலை செய்ததால்தான் அவர்களது குடும்பம் அழிந்தது அல்லது கஸ்டப்பட்டது. தம்மைப் போல பகுதி நேரம் வேலை செய்திருந்தால் அவ்வாறு நடைபெற்றிருக்காது என. ஆகவே நண்பர்களே சமூக மாற்றத்திற்கான செய்ற்பாட்டில் எது சரியான பாதை? முழமையான அர்ப்பணிப்பா? ஆல்லது பகுதி நேர பங்களிப்பா? ஆல்லது பொழுது போக்கான செயற்பாடா?

புpன்வரும் குறிப்புகள் கடந்த காலங்களில் பழகிய உறவுகளிலிருந்து நான் பெற்ற அனுபவங்கள்.

பல் வேறு தொழிற்சங்க அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து இப்பொழுது வயதுபோனதன் காரணமாக பேச்சு தடுமாறும் பலர் நம் மத்தியில் இருக்கின்றனர். இவர்கள் கதைக்கும் பொழுது குறிப்பாக அரசியல் கதைக்கும் பொழுது அவர்களை புறக்கணிப்பது அல்லது நையாண்டி செய்வது. இவ்வாறு பலவற்றை அவர்களுக்கு எதிராக அல்லது அவர்களை அசிங்கப்படுத்த செய்கின்றோம். இந்த் வயதுப் புறக்கணிப்பும் மதியாமையும் எதானால் செய்கின்றோம்? நாம் செய்கின்ற அரசியலுக்கும் இதற்கு சம்பந்தம் இல்லையா?

பொது இடங்களில் கதைக்கும் பொழுது தாம் மிகவும் நியாயமானவர்களாகவும் உயர்ந்த பண்புள்ளவர்களாகவும் சிலர் கதைக்கின்றனர். ஒரு முறை தமிழீழ மக்கள் கட்சியின் தமிழீழம் பத்திரிகை விற்பதற்காக ஒரு நபரிடன் வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து அனுமதி பெற்றுவிட்டே சென்றிருந்தேன். அவருக்கு அந்தப் பத்திரிiகையை வாங்க விருப்பமில்லை. தன்னிடம் தற்பொழுது பணம் இல்லை எனவும் விட்டில் பல இடங்களிலும் தேடித் தேடி ஒரு சதம் ஐந்து;சதம் போன்ற சில்லறைகளைச் சேர்த்து 25 சதமோ 50 சதமோ தந்தார். இப்படித்தான் இவர்கள் அரசியல் செய்பவர்களை பகிடி செய்து துன்புறுத்துவது. புத்திரிகை வாங்க விருப்பமில்லை எனின் விருப்பமில்லை என நேரடியாக கூறலாம். அதுவே நேர்மையான பண்பு.

இன்னுமொருவர் பெயர் பெற்ற மனித உரிமையாளர் மற்றும் சிந்தனையாளர். என்னுடன் என்ன பிரச்சனையோ எனக்குத் தெரியாது ஆனால் என்னைக் கண்டவுடன் திரும்பிவிடுவார். ஆல்லது வேறு வழியில் சென்றுவிடுவார். அதாவது என்னுடன் கதைப்பதை தொடர்ந்து தவிர்க்கின்றார். எதுவும் என்னுடன் பிரச்சனை என்றால் நேரடியாக கதையுங்கள் என மின் அஞ்சலும் அனுப்பியிருந்தேன். கதைப்போம் என் பதில் எழுதியிருந்தார். ஆனால் நேரில் கண்டவுடன் பழைய கதையே. ஒருவர் என்னுடன் கதைக்க விரும்பாதபோது அவருக்கு தொந்தரவு செய்வதை நான் விரும்புவதில்லை. ஆனால் பிரச்சனை என்னுடன் கதையாமலிருப்பதல்ல. சமூக அக்கறை உள்ள ஒருவர் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றவர் மனித உரிமைகளில் அக்கறை உள்ளவர் மற்றும் மனிதர்களின் நூண்உணர்வுகளை புரிந்துகொள்ளக் கூடியவர் என அறியப்பட்டவரின் செயற்பாடுகள் இப்படித்தான் இருக்கும் எனனின் அவர் எழுதுபவைகளிலும் பேசுபவைகளிலும் உள்ள அறம் என்ன? அர்த்தம் என்ன.? பயன் என்ன? அல்லது அவ்வாறு தன்னை வெளிப்படுத்துவதற்காக பகட்டு வேசமா?

சிலர் மனிதர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தாம் விரும்பியவர்களை கட்சியின் அதிகாரப்பிடங்களுக்கு தள்ளிவிடுவதும் விருப்பாதவர்களை வெட்டி விடுவதும் என மனிதர்களையும் அவர்களுடனான உறவுகளை கையாள்பவர்கள். அதாவது மறைமுக செயற்பாடுகள் மூலமாக பயன்படுத்தி தமது நோக்கங்களை முன்னெடுப்பவர்கள்.

இன்னுமொருவர் சமூக மாற்றத்திற்கான அரசியல் செயற்பாட்டாளர். ஆனால் மனித நட்பைவிட தனது உடமைகளை மிகப் பெரிதாக மதித்து நட்பை கொச்சைப்படுத்தி உதறியவர். தனது தவறை இவர் உணர்ந்தார என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

தமிழ் பேசும் சமூகத்தில் இருக்கின்ற மார்க்ஸியர்கள் கம்யூனிஸட்டுக்கள் தமது வீடுகளுக்குள் சாதி பார்ப்பதும் தமது பெண்களை அடக்குவதும் அவர்களது வேலைகளுக்கு மதிப்பு கொடுப்பாததும் சர்வசதாரணமாக நடைப்பவை. இவர்களது பிரக்ஞை சமூகத்தை கட்டமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதைப் பற்றி மட்டுமே. தம்மைப் பற்றிய தமது பிரக்ஞை நிலைபற்றிய மற்றும் சக மனித உறவுகள் பற்றிய பிரக்ஞையில்லாதவர்களாகவே இவர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

ஆனால் இவ்வாறன மனிதர்களுடன்தான் நாம் ஆரம்ப அரசியல் செயற்பாடுகளையும் செய்யப்போகிறோம் எனின் நாம் நமது நோக்கத்தை அடைவோம் என்பதில் எனக்கு சந்தேகமே.

புரட்சிகர மாற்றம் என்பது சமூகத்தில் நடப்பது அல்லது சமூகத்தில் உருவாக உழைப்பது மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதரிலும் புரட்சிகர மாற்றத்திற்கான அடிப்படைகளாவது உருவாகவேண்டும். புரட்சி செய்யும் மனிதர்கள் புரட்சியாளர்கள் அல்ல. மாறாக அவர்கள் எந்தளவு தாம் நம்பும் கோட்பாடுகள் கொள்கைகளின் அடிப்படையில் தம்மை மாற்றியுள்ளார்கள் அல்லது மாற்ற முற்படுவதற்கு முயற்சிக்கின்றார்கள் என வாழ்பவர்களளே உண்மையான புரட்சியாளர்கள் என்பது எனது நிலைப்பாடு.

நட்புடன்
மீராபாரதி

மே 18 இயக்கம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

வியூகம் இதழ் 2- ஒரு பார்வை: பாராளுமன்றமும் புரட்சியாளர்களும்…- தேவை ஒரு புதிய கோட்பாடு : மீராபாரதி

வியூகம் சஞ்சிகையின் இதழ் 2 வெளியீடு

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

பாராளுமன்ற ஜனநாயகமும் ஜனநாயக முன்னணியும் : ரகுமான் ஜான்

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்