கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஹிலாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு

hilari.jpgஅமெரிக்க வெளியுறவு அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.வாஷிங்டனைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரியும் டேவிட் சி ரோடீர்மெல் சார்பில் இந்த வழக்கைத் தொடுத்துள்ளது. சட்ட ரீதியாக வெளியுறவு அமைச்சர் பதவியை வகிக்க ஹிலாரி தகுதி அற்றவர் என்றும் அவருக்குக் கீழ் ரோடீர்மெல்லை பணிபுரிய நிர்பந்திக்க முடியாது என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு நிர்பந்திப்பது 1991-ம் ஆண்டு வெளிப்பணி அதிகாரியாக ரோடீர்மெல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்கு எதிரானது என்றும் சுட்டிக் காட்டியள்ளது. தகுதியிழப்பு மற்றும் சம்பளப் படிகள் வழங்குவதற்கான அமெரிக்க அரசியல் சட்டப்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் அவரது பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாக அமெரிக்க அரசு மற்றும் சம்பளம் மற்றும் படிகள் பெறும் பதவிகளில் நியமிக்கக் கூடாது என்ற விதி உள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிலாரியின் சம்பளம் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

ஹிலாரியின் பதவிக் காலம் 2007-ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 2013-ம் ஆண்டு நிறைவடைகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விதிமுறையை மீறி கடந்த மாதம் வெளியுறவு அமைச்சருக்கான ஊதியத்தை ஜனவரி 1,2007-ம் ஆண்டு நிலைக்கு குறைத்துள்ளனர் என்றும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் அரசியல் நிர்ணய சட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.வெளியுறவு அமைச்சரின் சம்பளம் மற்றும் படிகள் உள்ளிட்டவை கிளிண்டனின் பதவிக் காலத்தில் உயர்த்தப்பட்டுள்ளன என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அரசியல் ரீதியாக பழி வாங்குவதற்கோ அல்லது தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் நோக்கிலோ இந்த வழக்கு தொடரவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் அதேநேரம் அரசியல் சட்ட விதிகளில் உரிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று ரோடீர்மெல் தெரிவித்தார்.

லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் – ஒரு நோக்கு : ரி சோதிலிங்கம்

Protest_UKலண்டன் புலம்பெயர் வாழ்வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்களில் முன் மாதிரியாகவும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் பக்குவத்துடனும் BTF-TYO வினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட ஊர்வலம் நடந்தேறியது. இந்த ஊர்வலத்தில் 50000 – 100000 பேர் வரை கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஊர்வலம் கடந்த காலங்களில் புலிகளை முதன்மைப்படுத்தி செய்ய்பபட்ட  நிகழ்வுகள் போலல்லாது பொதுவான வாசக – கோசங்களுடன் நடைபெற்ற போதிலும் புலிகள் தரப்பினர் ஏற்படுத்தும் தவறுகளையோ மனித உரிமை மீறல்களையோ வெளிப்படுத்தி இருந்திருக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேற்ற ஜ நா மற்றும் சர்வதேச அமைப்புக்களின் வேண்டுகொள்களை பிரதிபலித்தோ இருக்கவில்லை என்பதும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

கடந்த கால ஈழப் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட பல அரசியற் தவறுகளை, சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவற்றை  புலிகள் தமிழர்கள் பிரதேச சுயாட்ச்சியை  ஏறப்படுத்தும் மைல்கற்களாக பயன்படுத்தாமல் போனது பற்றி பலரிடமும் விமர்சனங்கள் உள்ள போதிலும் நேரிடையாக இன்று வரை புலிசார்பு ஊடகங்கள் அதனை வெளிப்படுத்தவில்லை. இதை ஒரு சுய விமர்சனமாகக் கூட பார்க்கப்படவில்லை என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் அரசுக்கெதிரான கோசங்களும் யுத்த நிறுத்தம் கோரிய கோசங்களும் இந்திய ஆதரவு கோசங்களும் முன்வைக்கப்பட்ட அதேவேளை புலிகளின் தவறுகள் எதுவும் சுட்டிக்காட்டப் படவில்லை.

கடந்த சில வாரங்களாக ஜரோப்பாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் எடுத்து வரப்பட்ட புலிக் கொடி, பிரபாகரனின் படம் போன்றவைகள் இம்முறை லண்டன் ஊர்வலத்தில் முன்வைக்கப்படாமல் இருந்தது மிகவும் வரவேற்க்கத்தக்கதே. இது எதிர்காலதில் சரியான வழிவகைகளை தேட உதவி செய்யும்.

லண்டன் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட பல முக்கிய பதாகைகளில் யுத்தத்தை நிறுத்து; தமிழர்களை கொல்லாதே; பேச்சு வார்த்ததையை ஆரம்பி போன்ற கோசங்களுடன் இந்தியாவே தமிழர்கள் உனது நண்பன் என்ற பதாகை தாங்கப்பட்டதும் குறிப்பிட்டாக வேண்டும். இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய இராணுவத்துடன் ஏற்படுத்தப்பட்ட முறுகல் முற்றி சமாதானப் படை கொடூரப்படையாகியது. இன்று இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் எதிரி அல்ல என்ற பதாகையுடன் நிற்கின்றனர்.

இதே போல BBC க்கு எமது போராட்டத்தில் அக்கறை செலுத்தும் படியான பதாகைகள் தாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கதே. ஆர்பபாட்டங்களில் ஆளும் அரசகளுக்கு எதிராக பதாகைகள் வருவது வழமையே ஆனால் கடந்த வாரம் BTF-TYO வினர் பிபிசி அலுவலகத்திற்கு எதிரான ஓர் ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது ஊடகங்கள் தமிழர் போராட்டங்களை பாராமுகமாக இருப்பதற்கான காரணங்களை அறிந்து அவற்றின் ஊடாக அந்த ஊடகங்களின்  கவனத்தை ஈர்ப்பதே சரியானது. அதைவிடத்து அந்த BBC க்கு எதிராக போர்க்கொடி ஏந்தி பலவந்தமாக பாடம் கற்பிக்கும் தன்மைக்கு எப்படியான பதில் கிடைக்கும் என இனிவரும் காலங்களில் அறிந்து கொள்ளலாம்.

BTF ன் முக்கிய உறுப்பினர் சுரேந்திரன் SKY ற்கு கருத்தப்பரிமாறிய போது  தமிழர்களின் பிரதிநிதி புலிகள் என்றும் புலிகளுடன் அரசு யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார். இதன் மூலம் BTF தமிழர்களின் ஏகபோக பிரதிநிதி புலிகள் மட்டுமே என்ற கருத்தை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. கடந்த சில வருடங்களாக இலங்கையில் வட – கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை BTF சுரேந்திரன் புரிந்து கொள்ள தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.

ஏதிர்பார்த்ததைவிட மிக அதிகமானோர் ஊர்வலத்திற்கு வந்திருந்ததாலும், லண்டன் பொலீசாரின் இக்கட்டான நிலைமைகளினாலும், ஊர்வலத்தில் பங்கு பற்றிய ஒரு பகுதியினர்க்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதும் அந்த குளிரிலும் அந்த அசௌகரியங்களை தமிழர்கள் பொறுமையாக ஒத்தழைத்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஊர்வலத்தின் இறுதியில் 5000 பேர் வரையிலானவர்கள் பாராளுமன்றதின் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்  பாராளுமன்றத்தில் மகஜர் கையளித்தனர். கையளிக்கப்பட்ட மகஜருக்கு பதில் ஓரிரு தினங்களில் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரம் 4ம் திகதி இலஙகையின் சுதந்திர தின நாளை கரி நாளாக அறிவித்து போரட்டம் ஒன்றை BTF-TYO ஒழுங்கு செய்துள்ளனர்.

உலகின் தலைநகரில் தாயக உறவுகளுக்காக தமிழ் மக்களின் எழுச்சி : த ஜெயபாலன்

Protest_UK_Jan31தங்கள் தாயக உறவுகளுக்காக புலம்பெயர்ந்த லண்டன் தமிழர்கள் உலகின் தலைநகரில் ஓங்கிக் குரல் எழுப்பினர். ஜனவரி 31 பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட யுத்தத்தை நிறுத்தக் கோரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் தங்கள் உறவுகள் மீதான அன்பையும் வேதனையையும் சர்வதேசத்திற்கு எடுத்தக் காட்டியது. பெரும்தொகையான இளவயதினர் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம் யுத்தத்தை நிறுத்த வேண்டும் வன்னி மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்த வேண்டும் என்ற கோசங்கள் உரத்து ஒலித்தன. மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 50000 வரையானோர் கலந்து கொண்டதாக ஸ்கொட்லன்யாட் தெரிவித்து உள்ளது. கலந்த கொண்டவர்களின் தொகை இதனிலும் இரட்டிப்பானது என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் நடவடிக்கைகளில் எவ்வித ஆர்வத்தையும் கொண்டிராதவர்கள் விடுதலைப் புலிகள் மீதான கடுமையான விமர்சனத்தைக் கொண்டிருந்தவர்கள் இடதுசாரிகள் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என பல்வேறு அரசியல் முரண்பாடுடையவர்களும் யுத்தத்தின் அவலத்திற்கு முடிவுகட்டப்பட வேண்டும் வன்னியில் யுத்தத்திற்குள் சிக்குண்டுள்ள மக்களுக்கு ஏற்படப் போகும் மனித அவலம் நிறுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

லண்டனில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களின் வரலாற்றில் நிகழ்ந்த மிக முக்கியமானதொரு மக்கள் எழுச்சி இதுவென முன்னாள் மாற்று இயக்க உறுப்பினர் கா பாலமுருகன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தனக்கு புலிகளுடன் எவ்வித உடன்பாடும் இல்லை. அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை எப்போதும் தீர்க்கக் கூடியவர்கள் அல்ல என்று குறிப்பிட்ட அவர் ஆனால் இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை எதேச்சையாக செயற்படவும் தமிழ் மக்களை அழிக்கவும் அனுமதிக்க முடியாது என்றார்.

இந்த ஊர்வலத்திற்கு வந்த பெரும்தொகையான மக்களால் லண்டன் நிலக்கீழ் புகையிரதம் ஊர்வலம் நடந்த பகுதிகளில் இருந்த புகையிரத நிலையங்களில் நிறுத்தாமல் செல்ல வேண்டி இருந்தது. வீதிகள் சில பொலிசாரால் மூடப்பட்ட போது பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சிறிய சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது. மற்றும்படி ஊர்வலம் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

கோசங்களை எழுப்பி பலருக்கும் நாவறண்டு தொண்டைகட்டியதாக முதற்தடவையா ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட செல்வலக்ஸ்மி தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தனக்கு இந்த ஊர்வலத்தை யார் நடத்தினார்கள் என்பது தெரியாது ஆனால் நான் கேட்கின்ற செய்திகள் தன்னை குடைவதாகத் தெரிவித்தார்.

இந்த ஊர்வலம் தொடர்பாக ஸ்கை நியூஸிற்கு கருத்து தெரிவித்த பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். அதே செய்திச் சேவையில் கருத்துத் தெரிவித்த லிபிரல் டெமொகிரட் பா உ சைமன் ஹியூச் இலங்கை அரசாங்கம் சர்வதேச ஊடகங்களை மனிதாபிமான ஸ்தாபனங்களை யுத்த பகுதிக்குள் அனுமதிக்காததைக் கண்டித்தார். யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் சர்வதேச சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சைம்ன் ஹியூச்சின் அதே கருத்தை அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் வெளியிட்ட நியூஹாம் துணை மேயர் போல் சத்தியநேசன் தனது நாட்டு மக்களைக் காக்க வேண்டிய கடமை அந்த நாட்டு அரசுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். யுத்தத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதனைச் சுட்டிக்காட்டிய அவர் தங்களுடைய தாயக உறவுகளுக்காக ஆயிரக்கணக்கில் மக்கள்  லண்டன் நகரில் கூடி குரல் கொடுப்பதாகத் தெரிவித்தார்.

இந்த ஊர்வலத்தில் ஏனைய நாடுகளில் இடம்பெற்றது போன்று விடுதலைப் புலிகளின் கொடியோ அல்லது அதன் தலைவர் வே பிரபாகரனது உருவப்படமோ ஊர்வலத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. ஏற்கனவே இது தொடர்பாக பொலிகார் அறிவுறுத்தி இருந்ததாகவும் தெரிய வருகிறது. ஆனால் ஆங்காங்கே எங்களது தலைவர் வே பிரபாகரன் புலிகளின் தடையை நீக்குங்கள் போன்ற கொசங்களும் இடம்பெற்றது என்று தெரிவித்த புலிகளின் தீவிர ஆதரவாளரான ஆர் நந்தகுமார் ஆனால் வன்னி மக்கள் மீது இன அழிப்பை நிறுத்து என்பதே பிரதான கோசமாக அமைந்ததாக தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

இந்த மக்கள் எழுச்சி தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விகளுடனேயே தாங்கள் வீடு திரும்பியதாகக் குறிப்பிட்ட முன்னாள் புலிகளின் உறுப்பினர் எஸ் ரவிக்குமார் புலம்பெயர்ந்த நாங்கள் எங்களால் முடிந்ததை எமது உறவுகளுக்குச் செய்ய வேண்டும் என்றும் அவர்களை நாங்கள் கைவிட்டுவிடவில்லை என்பதையும் இங்கு வந்து உறுதிப்படுத்தி இருக்கிறோம் என்றார்.

ஊர்வலத்தின் முடிவில் ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் ஜெயானந்தமூர்த்தி ஆகியோரும் தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கீத்வாஸ் ஆகியொரும் உரையாற்றினர். இவர்களின் உரையில் இந்த யுத்தத்தை நிறுத்த இந்தியாவின் தலையீட்டின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

உடனடித்தேவை – ஒன்றுபட்ட போராட்டம் : சேனன்

இலங்கை தமிழ் மக்கள் வரலாறு காணாத அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளார்கள். யுத்த பிரதேசத்துக்குள் அகப்பட்டுள்ள 250 000க்கும் அதிகமான மக்கள் சாவை எதிர்கொண்டுள்ளார்கள். எந்தவிதமான உணவு -மருத்துவ – மற்றும் தங்கும் வசதியின்றி உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் இம்மக்கள்மேல் குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது இலங்கை இராணுவம். அந்த சந்தோசத்தை வெடி கொழுத்தி கொண்டாடுகின்றன தெற்கு ஆழும் வர்க்க துவேசிகள்.

மக்கள் அகப்பட்டுள்ள பகுதிக்குள் கடந்த பல நாட்களாக எந்த நிவாரணமும் அனுமதிக்கப்படவில்லை. உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் நிவாரண நிறுவனங்கள் எதையும் இப்பகுதிக்குள் அனுமதிக்க கடும் தடை விதித்துள்ளது அரசு. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் இவ்வளவு மக்களும் வரக்கூடிய எந்த வசதியும் செய்யப்படவில்லை. அங்குகூட உணவு நிவாரண பொருட்கள் எடுத்துச்செல்ல அரசு அனுமதிக்கவில்லை.

குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பசியாலும் இராணுவத்தின் தாக்குதல்களாலும் சாவை எதிர்நோக்கியுள்ள நிலையின் கோரம் ‘அமைதி சுனாமி’ என்று வர்ணிக்கப்படுகிறது. உணவுசாலைகள், வைத்தியசாலைகள், கூடாரங்கள் எதுவுமற்ற பிரதேசத்தில் குழந்தைகளுடன் மரங்களுக்குள் – வயல்வெளிகளுக்குள் பதுங்கி எப்பக்கத்தால் ஆமி வரப்போகிறது, எங்கிருந்து சூடு விழப்போகிறது,எங்கு குண்டு விழுகிறது என்று ஒவ்வொரு வெடிச்சத்தத்திலும் உயிரை துடிக்க விட்டுக்கொண்டிருக்கும் மக்களை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். குழந்தைகள் படக்கூடிய அவலத்தை நினைத்துப் பாருங்கள். எத்தனை நாளைக்கு இந்த மக்கள் உணவில்லாமல் சமாளிக்கப் போகிறார்கள்? இலை குலைகளை உண்டா வாழ்வது? குடிக்கத் தண்ணியில்லாத நிலையில் கழுவித்துடைப்பது பற்றி அவர்களால் அக்கறை கொள்ள முடியுமா? காயங்களுக்கு பரவப்போகும் வியாதிகளுக்கு மருந்து எங்கிருந்து வரப்போகிறது.

மக்கள் இவ்வளவு கேவலப்பட வெற்றி பூரிப்பில் விழாக்கான தூண்டுகின்றனர் ஜனாதிபதியும் அவர் குடும்ப அரசும். இப்படியொரு அரசை ஆட்சியில் இருக்கவிட்டு பார்த்துக் கொண்டிருப்பதா? இந்த இனத்துவேச அரசுக்கெதிராக தொழிலாளர்களும் வறிய மக்களும் ஒன்றுபடவேண்டும்.

நாட்டை இராணுவ மயப்படுத்துவதில் மும்முரமாயிருக்கும் அரசு தமக்கெதிரான எல்லாகுரல்களையும் ஒடுக்கி வருவது உலகறிந்ததே. தமது வன்முறை நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் ஆதரவு இருப்பதாக வேறு காட்டிக்கொள்ள முயல்கிறது இந்த அரசு. அந்த பச்சை பொய்யை உடைத்து சிங்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் யுத்தத்துக்கும் வன்முறை ஆட்சிக்கும் எதிராக ஒன்றுபடவேண்டும்.

யுத்தம் பிரச்சினைக்கு தீர்வல்ல. யுத்த வெற்றி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரப்போகிறது என்பது பச்சை பொய். தெற்கில் வறிய மக்கள் படும் அவலத்தை குறைக்க ஒன்றும் செய்யாத இந்த இனவாத அரசு வடக்கு மக்களுக்கு விடிவை கொண்டுவரும் என்று எதிர்பார்ப்பது கேலிக்கிடமானது. எதிர்கட்சியோ அல்லது ஆட்சி பகிரும் எந்த தமிழ் குழுக்களோ மக்களின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுப்பது சாத்தியமில்லை. தமது நலன்களை மட்டும் குறிவைத்து இயங்கும் இவர்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடப் போவதில்லை.

இன்று மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. ஆயுத குழுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பின்னால் நின்று அடிவாங்கியது போதும். எமது போராட்ட முறை மாறவேண்டிய தருணம் இது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டிய தருணம் இது. எல்லா ஆழும் வர்க்கமும் மக்களை சுரண்டுவதே இயல்பாககொண்டவை –அதற்காக அவர்கள் இனத்துவேச பிரச்சாரங்களில் இறங்கி மக்களை மக்களுக்கெதிராக மோதவிட்டு பெருங்கொலைகள் செய்வர் – என்பதை அறிந்து அவர்களை முறியடிக்க ஒன்றுபடவேண்டிய கட்டம் இது.

எந்த ஆழும் வர்க்கமும் மக்கள் பிரச்சினையின் தீர்வை நோக்கி இயங்கிய வரலாறு கிடையாது. சுறண்டல் லாபத்தை குறிவைத்து இயங்கும் அவர்களை எவ்வாறு முறியடிப்பது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

வறுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிங்கள மக்களுக்கு ‘தேசிய வெறியை’ ஊட்டுவதன் மூலம் அடக்கி ஆழலாம் என்று அவர்கள் கனவு கான்கிறார்கள். தேவைகள் நிவர்த்தி செய்யப்படாத அவர்களும் எல்லா பக்கத்தாலும் ஒடுக்கப்படும் முஸ்லிம் மக்களும் கிளர்ந்தெழுவது வெகு விரைவில் நிகழத்தான் போகிறது. ஆடு மாடு நாய்களை விட கேவலமான வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மலையக மக்கள் ஆழும் வர்கத்துக்கெதிரான போராட்டத்தில் இணைவதும் தவிர்க்கமுடியாதது. வாழும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு மிக மோசமாக ஒடுக்கப்பட்டுகொண்டிருக்கும் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் சக மக்களுடன் இணைந்த ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இனம் மொழி மதம் என்று எம்மை கூறுபோட்டு தின்றுகொண்டிருக்கும் ஆழும் வர்க்கத்தின் உயிரில் அடிக்க அதுவே வழி.

சற்று யோசித்துப் பாருங்கள். பெரும்பான்மை மக்கள் இன்று பட்டினியில் வாழ்கிறார்கள். ஆழும் வர்க்க முதலைகளில் யாருக்காவது பசி தெரியுமா? பெரும்பான்மை மக்கள் சரியான தங்கும் வசதியின்றி வாழ்கிறார்கள். ஆழும் வர்க்கம் மாட மாளிகைகள் ஆள் நடமாட்டமற்று கிடக்கின்றன. சழூகத்து ஏற்றத்தாழ்வின் வித்தியாசம் வரலாறு காணாத உச்சம் கண்டுள்ளது. ஆழும் வர்க்க சிறு தொகையினர் அனுபவிக்கும் சொத்துக்கள் யாருடயவை? நாட்டின் வளங்கள் யாருடயவை? எம்மை சூறையாடி வியாபாரம் செய்வது போதாதென்று வன்முறைசெய்து அவர்கள் எமது உரிமைகளை பறித்துக்கொண்டிருக்க பார்த்துக்கொண்டிருப்பதா? –ஒடுக்கப்படும் நாம்தான் பெரும்பான்மை. நாம் ஒன்றுபட்டால் எமது பலம்தான் பெரிது. ஏற்றத்தாழ்வற்ற – வர்க்கமற்ற சமுதாயத்துக்கான போரை நாம்தான் முன்னெடுக்கவேண்டும்.

வடக்கு கிழக்கில் ஜந்து நட்சத்திர விடுதிகள் கட்டுவதாலோ விலை உயர்ந்த உல்லாச கடற்கரைகள் உருவாக்குவதாலோ பெரும் கம்பனிகள் சுரண்டுவதற்கு வசதியாக வர்த்தக வலயங்கள் உருவாக்குவதாலோ எந்த பிரச்சினைக்கும் தீர்வு கொண்டுவந்துவிட முடியாது. ‘வளர்ச்சியடைந்த’ நாடுகள் என்று சொல்லப்படும் மேற்கத்தேய நாடுகளிள் வசதிகளை குவித்துள்ள சிறு மேல் வர்க்க குழுவுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு பெருமளவில் வெடித்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் – முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் திறந்த பொருளாதார கொள்கை உலகமயமாக்கல் முதலியன பெரும் தோல்வி கண்டுள்ளன என்பதை மேற்குலக ஆழும் வர்க்கங்களே ஒத்துக்கொள்ளும் இத்தருணத்தில் இலங்கையில் இந்த பருப்பு வேகும் என்ற கனவு எவ்வளவு பொய் என்பதை நாம் உணர வேண்டும்.

காலம் காலமாக ஒடுக்கப்படுபவர்கள் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய தருணமிது.

காயமடைந்தவர்களுக்கு உதவ வவுனியா ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்

redcrose2801.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்ற அகோர ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் வந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் நிற்க அனுமதிக்கப்படாது நெளுக்குளம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு ஆறு அம்புலன்ஸ்களில் படுகாயமடைந்தவர்களும் ஐந்து பஸ்களில் சிறுசிறு காயமடைந்தவர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களுமென 226 பேர் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து 50 சிறுவர்கள் உட்பட 226 பேர் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆஸ்பத்திரியில் உதவிசெய்து பராமரிப்பதற்காக சேர்ந்து வந்த 139 பேரும், ஆஸ்பத்திரிக்குள் காயமடைந்தவர்களுடன் கூடச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் நேரடியாக நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

படுகாயமடைந்தவர்களில் அதிகமானவர்கள் கைகால்கள் முறிந்த நிலையிலும், அவயங்கள் பாதிக்கப்பட்டும் உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இராணுவத் தளபதி வன்னிக்கு விஜயம்

fonseka2.jpgஇராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று வன்னிப் பகுதிக்குச் சென்று மோதல் நடைபெறும் பிரதேசங்களை நேரில் பார்வையிட்டு,அங்கு இராணுவம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அவருடன் இராணுவ உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர் என இணையத்தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதில் மேலும்  தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயரும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யவும், இராணுவ நடவடிக்கைகள் மேற்பார்வையிடவும் பென்சேகா  வன்னிக்கு வந்ததார் என இராணுவத் தரப்பு தெரிவித்தது. சரத் பொன்சேகா இப்பயணத்தின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் 57, 58, 59 ஆவது படை அணிகளின் தளபதிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்து போர் உத்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார் என்றும் ஜனாதிபதியின் 48 மணிநேர போர் நிறுத்த அறிவிப்பு முடிவுக்கு வந்த பின்னர் முழுவீச்சில் தாக்குதலை நடத்த இராணுவம்திட்டமிட்டுள்ளது என்றும் அதுகுறித்த ஆலோசனைகளை வழங்கவே பொன்சேகா போர்முனைக்குச் சென்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் அறிவிப்பை புலிகள் நிராகரிப்பு

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் சிக்குண்டுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்குப் பாதுகாப்பான வழி அமைத்துக் கொடுக்கப்படும் எனக் குறிப்பிட்டு, அடுத்த 48 மணி நேரத்துக்குள் அவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கும்படி புலிகள் இயக்கத்துக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை மாலையில் பகிரங்க அறிக்கை மூலம் விடுத்தகோரிக்கையைப் புலிகள் இயக்கம் அடியோடு நிராகரித்து விட்டது.

இந்த அறிவிப்பு உலகத்தை ஏமாற்றும் சூழ்ச்சி எனவும் புலிகள் விமர்சித்திருக்கின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு “இரண்டு நாள் போர்நிறுத்தப் பிரகடனம்” என அர்த்தப்படுத்தப்படும் பின்னணியில், நேற்றும் அரசுப் படைகளின் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர்வரை கொல்லப்பட்டு அறுபதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்றும் புலிகள் குற்றம் சுமத்தினர்.

இந்தியாவில் பிரபாகரன் மீது விசாரணை நடத்தப்படும் வரை காங்கிரஸார் ஓய மாட்டார்கள்.

assembly.jpgஇலங்கை அரசு பிரபாகரனை பிடித்தவுடன் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பிரபாகரனை இந்தியாவில் வைத்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. சட்டசபையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் துணைத் தலைவர் யசோதா பேசுகையில்,

எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை நாங்கள் பலி கொடுத்திருக்கிறோம். சிலர் அதை கூட விமர்சனம் செய்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலைமை அவர்களுக்கு வந்தால் தான் வலி தெரியும். ஒரு தொலைக்காட்சியில் இலங்கை எம்.பி ஒருவர் இங்குள்ள தமிழர்களை தூண்டும் விதத்தில் பேசுகிறார். உண்மையான அக்கறை இருந்தால் இலங்கையில் இருந்து போராட வேண்டியது தானே. தமிழகத்தில் அமைதியை கெடுப்பதற்காக அப்பாவிகளை தூண்டி விட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் முதல் குற்றவாளியான பிரபாகரனை இன்னும் கைது செய்யவில்லை. அவரை பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவரை இங்கு வைத்து விசாரிக்க வேண்டும். இப்படி நாங்கள் எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை, இந்தியாவில் அவர் மீது விசாரணை நடத்தப்படும் வரை காங்கிரஸார் ஓய மாட்டார்கள்.

இலங்கையி்ல் அப்பாவி தமிழர்கள் பலியாகும் பிரச்சினையை ஒரு காரணமாக வைத்து சிலர் தேசிய தலைவர்களை அவமதித்து வருகிறார்கள். அவர்களை கைது செய்து அரசியல் நாகரீகத்தை ஏன் காப்பாற்றவில்லை என்று இங்கு நான் கேட்க கடமைப்பட்டிருக்கிறேன். காங்கிரஸ் என்றால் எதுவும் பேசலாம் என்று நினைக்க வேண்டாம். சாது மிரண்டால் காடு கொள்ளாது. எங்கள் கட்சி 125 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. ஆனால் கட்சி தொடங்கி 6 ஆண்டு ஆகாதவர்கள் எங்களை எதிர்க்கிறார்கள். நாங்கள் செய்த நன்றிகளை மறந்தது ஏன்? என்றார் அவர்.

மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் இறந்துவிட்டதாக பாக். பத்திரிகை தகவல்

mumbai.jpgமும்பையில் தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் அஜ்மல் என்பவர் கைது செய்யப்பட்டார். அவனை மும்பையில் பொலிஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அஜ்மலை மும்பை பொலிஸார் விசாரணையின்போது கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவலை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ‘அஜ்மல் வாக்கு மூலங்கள் பற்றி சமீப காலமாக இந்தியாவிடம் இருந்து தகவல்கள் ஏதும் வரவில்லை. அவருடைய மரபு அணு மாதிரியை (டி. என்.ஏ) அனுப்புவதாக இந்தியா கூறியது. ஆனால் இதுவரை மரபு அணு அனுப்பப்ப டவில்லை. எனவே அஜ்மலை கொன்று விட்டார்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.

இதற்கிடையே இந்திய உளவு அமைப்பான ‘ரோ’ ஏராளமானோரை பயிற்சி அளித்து பாகிஸ்தானில் நாச வேலை செய்ய அனுப்பி வைப்பதாகவும் பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன. இப்படி வந்த 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்து இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

வன்னியிலிருந்து வரும் மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் – டக்ளஸ்

 epdp.jpgவன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து யாழ் நோக்கி வரும் எமது மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு யாழ் குடாநாட்டு மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டுமென சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ஏ-9 பாதை விடுவிக்கப் பட்டுள்ளதால் அதன் மூலம் பெரும் நன்மையடையப் போவது குடாநாட்டு மக்களேயாவர் என்றும் இதேபோன்று புலிப் பயங்கரவாதம் முற்று முழுதாகத் தோற்கடிக்கப்படும்போது அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் பாரிய நன்மைகளை அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போது தங்களது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் புலிகள் தங்களது இறுதிப் பாதுகாப்பு அரணாக அப்பாவி பொதுமக்களையே பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தெளிவுபடுத்தியதுடன் இந்த மக்களை விடுவித்துக் கொள்வதும், விடுவிக்கப்பட்டு வரும் மக்களைப் பேணிப் பாதுகாப்பதும் இன்று எம் முன்னுள்ள பாரிய பொறுப்பாக உள்ளதென்றும் உணர்த்தினார்.

வன்னியில் இருந்து வரும் மக்களின் பல்வேறு தேவைகள் குறித்து அரச மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை தான் எடுத்து வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குடாநாட்டில் உள்ள மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இம்மக்களின் நலன்கருதி செயற்பட முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.