கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

எல்ரிரிஈயினரின் பெருந்தொகை படைப் பொருட்கள் கண்டுபிடிப்பு

truck.jpgவிஸ்வமடுப் பகுதியில் எல்ரிரிஈயினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுவரும் 57வது படைப்பிரிவின் 571 வது, 572 வது பிரிகேட் படையினர் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் நேற்று (பெப்:15) அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இத்தேடுதலின் போது எல்ரிரிஈ பயங்கரவாதிகளால் விட்டுச் சென்ற பல படைப்பொருட்களை படையினர் கண்டுபிடித்துள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

571வது பிரிகேட்டின் 17வது கஜபா படையணியினர் விஸ்வமடுப் பகுதியில் நடத்திய தேடுதலில் 20 கைக்குண்டுகள், இரண்டு விருத்தி செய்யப்பட்ட வெடிக்கவைக்கும் உபகரணம்(IED) மற்றும் 81 மிமீ மோட்டார் குண்டுகள் என்பனவற்றைக் கைபற்றியுள்ளனர். அதேவேளை இப்பகுதியில் தேடுதல் நடத்திய  572வது படைப்பிரிவின் 7வது காலால் படையினர் பெருமளவான இராணுவ உபகரனங்களைக் கண்டுபிடித்துள்ளதுடன் பயங்கரவாதிகளால் கைவிடப்பட்ட  டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பீப்பாக்களையும் கைபற்றியுள்ளனர்.

இப்படையணி எல்ரிரிஈ பயங்கரவாதிகளால் கைவிடப்பட்ட முகாமையும் கண்டுபிடித்துள்ளனர்.  7 வது காலால் படையினர் இத்தேடுதல் நடவடிக்கையில் கண்டுபிடித்துள்ள மற்றய  உபகரணங்களின் விபரங்கள் பின்வருமாறு

09 x எல்ரிரிரிஈ பவுச் , 2530 x ரி-56 ரவைகள் ,250 x எப் என்சி ரவைகள் , 07 x கைக்குண்டுகள் , 41 x எல்ரிரிஈ தொப்பிகள், 52 x எல்ரிரிஈ  சீருடைகள் , 03 x ஜெகட்டுகள் , 05 x எல்ரிரிஈ பெக், 02 x 81 மிமீ மோட்டார் குண்டுகள்

விஸ்வமடுப் பகுதியில் 572பிரிகேட்டின்  9வது விஜயபாகு படைப்பிரிவினர் இருவேறு தேடுதல் நடவடிக்கையின் போது பெருந்தொகையான ஆட்டிலறி செல்களைக் கைபற்றியுள்ளனர். மேலும் 14 கிறீஸ் பெரல்கள்(210லீ), பசளைக் (யூரியா) களஞ்சியசாலைக் கட்டிடங்கள் மற்றும் டோசர் இயந்திரங்கள் உட்பட பல உபகரணங்களையும் கைபற்றியுள்ளனர். அத்துடன் கைப்பற்றப்பட்ட மற்றய பொருட்களின் விபரங்கள் பின்வருமாறு.  115 x 122மிமீ.ஆட்டி செல்கள், 40 x 130மிமீஆட்டிசெல்கள், 75 x 81மிமீ மோட்டார் பியூஸ்கள், 05 x 82 மிமீமோட்டார் குண்டுகள், 180 x 60 மிமீ.​மோட்டார் பியூஸ், 10 x 130மிமீஆட்டிலறி பியூஸ், 20 x 130மிமீ வெற்றுச் செல்கள், 01 x கண்ணிவெடி, 01 xடோசர் 02 x ரி- 56 துப்பாக்கிகள்.

மஹேல ஜயவர்தனவின் இறுதி எதிர்பர்ப்பு

mahela1102.jpgஇலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டித் தொடர் ஒன்றில் விளையாடுவதற்காக நேற்று பாக்கிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன பங்குபற்றும் இறுதி டெஸ்ட் போட்டியாக இது அமைகிறது. இந்த போட்டித் தொடரை வெற்றிகொள்வது தமது ஒரே குறிக்கோள் என மஹேல தெரிவிக்கின்றார்.

இரண்டு போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி கராச்சி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
பாக்கிஸ்தானுடனான போட்டித் தொடரை இந்தியா இரத்து செய்ததையடுத்து அந்தப் போட்டித்தொடரில் விளையாட பாக்கிஸ்தான் இலங்கைக்கு அழைப்பு விடுத்தது. பாக்கிஸ்தானின் அழைப்பை இலங்கை ஏற்றுக்கொணடதற்கு ஏற்ப இந்த போட்டித்தொடர் நடத்தப்படுகிறது.

இந்த போட்டித்தொடர் ஒரு நாள் போட்டிகளையும் டெஸ்ட் போட்டிகளையும் கொண்டதாக உள்ள போதிலும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி ஒரு நாள் போட்டித் தொடர் முன்னர் நடத்தப்பட்டதுடன் அதில் இலங்கை அணி வெற்றிபெற்றது. பாக்கிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணியில் புது ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பரன வித்தான மற்றும் வேகப் பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் ஆகிய இரு புதுமுகங்களும் இடம்பெறுகின்றனர்.

மஹேல தலைமயிலான அணியில் குமார் சங்கக்கார, திலக்கரத்ன டில்ஷான், திலான் சமரவீர, பிரசன்ன ஜயவர்தன, மாலிந்த வர்ணபுர,  தரங்க பரன வித்தான,  சமிந்த வாஸ், முத்தையா முரளீதரன், அஜந்த மெண்டிஸ், சாமர கப்புகெதர,பர்வீஸ் மஹரூப், தில்ஹார பெர்னான்டோ, திலான் துஷார, சுரங்க லக்மால் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

மரணங்கள் அதிகரிக்கிறது! முல்லையில் 1000 பொது மக்களுக்கு மேல் உயிரிழப்பு!! வன்னி மக்கள் மரணத்துள் வாழ்வு!!! : த சோதிலிங்கம்

Eelam_Girl300 000 வன்னி மக்களுக்கும் மரணத்துள் வாழ்வு. மரணங்களின் எண்ணிக்கை ரொக்கற் வேகத்தில் அதிகரிக்கிறது. முல்லையில் 1000 பொது மக்களுக்கு மேல் உயிரிழப்பு – பெப்ரவரி 10 வரையான இவ்வாண்டின் கடந்த 40 நாட்களில் வன்னியில் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 40 நாட்களில் தினமும் 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கையின் கடந்த 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் எப்போதுமே இவ்வளவு தொகையான பொதுமக்கள் ஒரு குறுகிய காலத்தில் கொல்லப்பட்டு இருக்கவில்லை. புலிகளிடமுள்ள கடைசிச் சில கிராமங்களுக்காக நடைபெறும் இந்த வன்னி யுத்தத்தில் 5000 முதல் 10000 தமிழ் மக்கள் கொல்லப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

மிக மோசமான வார்தைகளுக்குள் அடக்க முடியாத மனித அவலம் ஒன்று முல்லைத்தீவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச ஊடகவியலாளர்களோ சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையோ இலங்கை அரசு அனுமதிக்காத நிலையில் வன்னி அவலம் சர்வதேசத்தின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு உள்ளது. உண்மைநிலையை அறிந்துகொண்ட சர்வதேச அரசுகள் குறிப்பாக இணைத் தலைமை நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்காமல் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று கோரியுள்ளன.

‘பயங்கரவாதிகளான புலிகளை’ அழிக்கிறோம் என்ற போர்வையில் இலங்கை அரசு ஒட்டுமொத்த வன்னித் தமிழ் மக்கள் மீதும் தாக்குதலை நடாத்துகிறது. உணவு மற்றும் மருத்துவ சேவைகளை அம்மக்களுக்கு வழங்காது வன்னி மக்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்கும் இலங்கை அரசு, தான் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய பகுதிகளையும் மருத்துவமனையையுமே கொலைக்களமாக்கி உள்ளது. அங்குள்ள மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் உடனடியாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு பெப் 11 அன்று உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 300 000 வரையான மக்கள் யுத்தமுனையில் மருத்துவ வசதியின்றி உயிருக்குப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

உலகத்தின் மிகக் கட்டுக்கோப்பான செல்வந்த விடுதலை அமைப்பாக கருதப்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டப்பாட்டில் இருந்து அனைத்து பிரதேசங்களில் இருந்தும் மக்களுடன் பின்வாங்கி முல்லைத்தீவின் விரல் விட்டு எண்ணக் கூடிய சில கீராமங்களில் மக்களை அரணாக வைத்து தாக்குவதாக அனைத்து முக்கிய சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் குற்றம்சாட்டுகின்றன.

யுத்தப் பகுதியில் இருந்து வெளியேற முயலும் மக்கள் மீது புலிகளும் தாக்குதல்கள் மேற்கொண்டதாக வன்னியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் புலிகளின் அரசியல் பொறுப்பாளர்களில் ஒருவரான இளம்பருதி பெப் 11ல் அதனை மறுத்துள்ளார். மக்கள் வெளியேறிச் செல்லும் முன்னரங்க நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தமிழ் பொது மக்களும் இராணுவதினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இத்தாக்குதலுக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்றும் புலிகள் மறுப்புத் தெரிவித்து உள்ளனர். மேலும் புலிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வந்த பல நூற்றுக் கணக்கானவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மூன்று இளைஞர்கள் தீக்குளிக்குமளவிற்கு தமிழக மக்கள் கொந்தளித்த போதும் தமிழக மாநில அரசும் குறிப்பாக இந்திய மத்திய அரசும் இலங்கை அரசின் யுத்த நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளன. புலிகளுக்கு இந்தியா எடுக்கும் கடைசிப் பாடமாக இது கருதப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் படுதோல்வியை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பிளவு ஏற்படலாம் எனச் செய்திகள் கசிகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய இலங்கை அரசு சார்பான அணி ஒன்று உருவாகலாம் என எதிர்வு கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளிடமுள்ள கடைசியான முல்லைக் கிராமங்கள் பறிபோகும் போது இந்தப் பிளவு எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் உயிரிழப்புகள் ஆயிரக் கணக்கில் செல்லும் போது அந்த மனித அவலத்தில் இருந்து மீண்டும் புலிகள் தாங்கள் இழந்த அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் கடைசி முயற்சியாகவே இந்த முல்லைக் கிராமங்களில் நடைபெறும் யுத்தம் கருதப்படுகிறது. இங்கு சிக்குண்ட மக்கள் அனைவரையும் புலிகள் பயங்கரவாதிகள் என்ற தோரணையில் இலங்கை அரசு தாக்குதலை நடத்துகிறது. அங்கு கொல்லப்படும் பச்சிளம் குழந்தையையும் புலிக்குட்டி என்று சொல்வதற்கு இலங்கை அரசு எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

தமிழ் மக்களின் குருதியில் முல்லை மண் சிவக்கிறது என்றால் அது மிகையல்ல. அவலம் முடிவின்றித் தொடர்கிறது. சொல்லி அழ நாதியில்லை! கேட்பதற்கும் யாரும் இல்லை!! வேலிகளே பயிரை மேய்கிறது.

லண்டன் குரல் : இதழ் 27
————————
இலங்கை அரசின் கண்மூடித்தனமான தாக்குதலும் புலிகளின் உதாசீனமும் வன்னி மக்களை சொல்லொனாத் துயரத்திற்குள் தள்ளியுள்ளது. பாதுகாப்பாக இருக்க இடமும் இல்லாமல் தப்பிச் செல்ல வழியுமில்லாமல் அவர்கள் படுகின்ற அவஸ்தை கொடூரமானது. சிங்கத்திடமும் புலியிடமும் சிக்கித் தவிக்கும் இந்த வன்னி மக்கள் கூட்டம் இவ்வாறான ஒரு கொடுமையை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஒருபுறம் மரணங்கள் மறுபக்கம் பிரசவங்களும் நிகழ்கின்றன.

வடக்கு கிழக்கின் சகல பிரதேசங்களிலும் பின்வாங்கிய போதும் புலிகள் மக்கள் செறிந்துள்ள பகுதியை யுத்த மையமாக்கி உள்ளனர். இலங்கை அரசோ எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை வெற்றிக் கொடி ஏற்றினால் போதும் என்றளவில் யுத்தத்தை முடுக்கிவிட்டுள்ளது.

பெப் 9 இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மக்கள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்கவே புலிகளால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த தாக்கதல் இராணுவ இலக்கு மீதான தாக்குதல் என்பதிலும் பார்க்க மக்கள் வெளியேறுவதைத் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டு உள்ளது. இது மனித உரிமைகளை மீறும் செயல். புலிகள் மேலும் மேலும் தவறிழைக்கின்றனர். அதுமட்டுமல்ல இப்படியான தவறுகள் தாக்குதல்கள் நடைபெற்றால் அவற்றை நியாயப்படுத்தும்; அப்படியான நியாயங்களை பரப்புரை செய்யும் முறையும் கண்டிக்கப்பட வேண்டியது.

முற்றிலும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப புலிகளும் புலிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இலங்கை அரசும் செயற்படுவதையே காணக் கூடியதாக இருக்கிறது. அவ்வாறே புலிகளை ஆதரிப்பவர்களும் அரசாங்கத்தை ஆதரிப்பவர்களதும் செயற்பாடுகள் உள்ளது. புலிகளை ஆதரிப்பவர்கள் புலிகள் மீதும் அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள் அரசாங்கததின் மீதும் அழுத்தங்கள் கொடுப்பதில்லை.

மக்கள் தாம் சுயமாக வெளியேற முடியுமாயின் எப்பவோ புலிகளின் பிடியை மீறிக் கொண்டு வெளியேறியிருப்பார்கள். அப்படி அவர்கள் வெளியேற முடியாமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. மக்களுக்கு இலங்கை அரசு மீதும் அரச படைகள் மீதுமுள்ள அவநம்பிக்கை மிக முக்கியமானது. அங்குள்ள மக்களில் பெம்பாலானவர்கள் விரும்பியோ விரும்பாமலோ புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவர்கள். இன்னுமொரு பகுதியினரது குடும்ப உறுப்பினர்கள் புலிகளின் உறுப்பினர்களாக உள்ளனர் அல்லது அவர்கள் மாவீரர் குடும்பத்தினராக உள்ளனர் அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பின் மிகநெருங்கிய அல்லது முக்கிய உறுப்பினர்கள் அல்லது தொடர்புடையவர்கள் இப்படியான புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு யாழ் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் கடந்த காலங்களில் அரசின் ஆதரவுடன் காணாமல் போகும் செயல்கள் நடந்தேறியுள்ளன இவற்றின் காரணமாக மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வர அஞ்சுகின்றனர். அந்த அச்சம் மிகவும் நியாயமானது. அவர்களது அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அரச தரப்பில் பாதுகாப்பு செயலர் பல கருத்துக்களை தெரிவித்து உள்ளார். மேலும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் மக்கள் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு முகாம்களில் என்ன நடக்கும் என்பதைத் தமிழ் மக்களுக்கு விரிவாககச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதனை ரைம்ஸ் பத்திரிகையாளர் தனது கட்டுரையில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார்.

வன்னியில் உள்ள அத்தனை இளைஞர்களும் புலிகளின் பயிற்ச்சி பெற்றவர்கள் அல்ல. ஆயினும் அவர்கள் அத்தனை பேரையும் புலிகளாக அரசு நோக்கும் தன்மையை அவதானிக்க முடிகிறது. தப்பி வந்த இளைஞர்களை அகதி முகாம்களிலிருந்து தனித்து அழைத்துச் செல்லப்படுவதாகவும் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது இதுவரையில் யாருக்கும் தெரியாத நிலை உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகிறது இதில் சில மிககவும் பயமூட்டும் செய்திகளாளாகும். இது தமிழர் வரலாற்றில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ரெலோ(TELO) – ஈபிஆர்எல்எப்(EPRLF) அழிப்பு அல்லது வெருகலில் நடைபெற்ற சம்பவத்திற்க்கு ஒப்பானதொரு செயலாகும். இவை மக்களின் மனதிலிருந்து அகற்ற முடியாத மனித நேயமற்ற செயலாகும்.

வன்னியில் புலிகளின் பிடியில் இருக்கும் தமிழ் மக்களில் பெருந் தொகையானோர் புலிகளை சுயவிருப்பில் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருப்பதால் அவர்களின் சட்ட திட்டங்களுக்கு பணிந்து செயற்பபடுவதாலும் அவர்கள் புலிகளின் ஆயுததாரிகள் என்ற தப்புக் கணக்கில் அரசும் இராணுவமும் செயற்படுவது மிகத் தவறாகும்.

புலிகள் கடந்த காலங்களின் செய்த தவறுகளும், மனித உரிமை மீறல்களும், அரசியல் ஸ்திரமற்ற தன்மையும், அவர்கள் வழிபின்பற்றி வந்த ரிஎன்ஏ(TNA) யினரின் பம்மாத்து அரசியலும் இன்றுள்ள இந்த இக்கட்டான நிலைக்கு தமிழ் பேசும் மக்களை கொண்டுவந்து விட்டுள்ளது.

புலிகள் இறுதியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய போது தமது பாதுகாப்பிற்காக தம்முடன் இழுத்து வந்த மக்களை இன்று இன்னுமொரு தடவை தமது பாதுகாப்பிற்காக வன்னியில் கேடயமாக்கி உள்ளனர். ஒவ்வொரு தடவையும் தமது பாதுகாப்பிற்கு குந்தகமான சூழ்நிலைகள் வரும் போதெல்லாம் புலிகளின் செயற்ப்பாடானது தமிழ் மக்களை போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தியும் மக்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகளைத் தோற்றுவித்துமே வந்துள்ளனர். இவ்வாறான நிலைகளிலும் புலத்தில் உள்ள புலிகள் ஆதரவு அமைப்புக்கள் புலிகளின் மீது எந்தவித அழுத்தங்களையும் கொடுப்பதில்லை. இந்த விடயத்தில் ரிஎன்ஏ(TNA) யும் தவறிழைத்துள்ளது.

இலங்கை அரசு இந்த இக்கட்டான காலகட்டத்தில் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற்றியது மிக மோசமான நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை இலங்கை அரசு எப்படியான மனித உரிமை நடவடிக்கைகளை செய்யப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறிவிக்கின்றது. அப்பாவி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த யுத்தம் தொடரும் வரை மக்களுடைய அவலங்களும் தொடரும்.

அரசும் அரசியற் கட்சிகளும் குறிப்பாக கொழும்புத் தமிழ் அரசியற் கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் போராட்டவாதிகளும் மக்களுக்காகவே என்று சொல்லிக் கொள்கின்ற போதிலும் வன்னி மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வெறும் பகடைக்காய்களாகவே உள்ளனர். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் கொள்கைகளும் நடைமுறைகளும் மக்களுக்காவே இருக்க வேண்டும். இந்த மக்கள் அவர்களின் இனம், மொழி போன்றவற்றிக்கு அப்பால் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த வன்னி மக்களை பாதுகாக்காமல், இந்த மக்களின் உயிர் அழிவிற்கு மேல் இனிமேல் என்றுமே மக்ளுக்கான அரசியல் செய்ய முடியாது. இந்த அரசியல்வாதிகள் தம்மை மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவது அபத்தமாகி விடும். மக்களை பாதுகாக்க முடியாத இந்த கட்சிகள் மக்களின் பெயரால் இனிமேல் தமது அரசியல் நடவடிக்கைகளை செய்ய முடியாது போகும் இந்த அரசியற் கட்சிகள் அர்த்தமற்றதாகி விடும்.

பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு இனவாதத்தை ஊட்டி அடுத்த தேர்தலை சந்திக்கத் தயாராகும் ஆளும் கட்சியும் வன்னியில் உள்ள மக்களை புலிகளாகக் காட்டி அவர்களது அவலத்தின் மீது வெற்றியை நிலைநாட்டத் துடிக்கிறது. அந்த வெற்றியின் மீது இந்த தேர்தலை சந்திக்க தயாராகுகின்றது மகிந்த அரசு. இதற்கான ஒத்திகையாக மாகாணங்களுக்கான தேர்தல்களை அரசு பரீட்சார்த்தமாக (14 பெப்) சந்தித்துள்ளதது.

தமிழ் தேசியப் போராட்டம் ஆரம்பித்த காலம் தொடக்கம் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்ச்சி அளித்து ஆயுதபாணிகளாக்கி தனது பிராந்திய வல்லாதிக்கத்தை பயிற்ச்சி செய்த அதே இந்தியா இன்று வன்னி யுத்த களத்திலும் இலைமறை காயாக நிற்கின்றது. தமிழக மக்கள் கொதித்தெழுந்த போதும் அதனைக் கண்டுகொள்வதாக இல்லை. வன்னி யுத்த களத்தில் இருக்கும் தமிழ் மக்களின் உயிரில் அக்கறையில்லாமல் உள்ளது. தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது.

வன்னி மக்கள் மீதான இராணுவ தாக்கதல்களுக்கு முற்படும் அரசும், அரச ஆதரவு தமிழ் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் அமைப்புக்களும் – வன்னி மக்களை தமது மிக குறுகிய பிரதேசத்தில் அடக்கி வைத்திருக்கும் புலிகளும், புலிகள் ஆதரவு இயக்கங்களும், ரிஎன்ஏ(TNA) யும் வன்னி மக்கள் மீது நடாத்தப்படும் படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வந்து அவர்கள் பாதுகாப்பாக சுயகௌரவத்துடன் வாழ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மாகாணசபை தேர்தல் முடிவு: யுத்தத்திற்கான மக்கள் தீர்ப்பா? ஆளும் கட்சியில் ஒரு முஸ்லிமும் தெரிவாகவில்லை. 3 தமிழர்கள் தெரிவு. : மொஹமட் அமீன்

mahinda1402.jpgவடமேல், மத்திய மாகாண சபைகளுக்காக நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. இலங்கையில் நடைபெற்று முடிந்த வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகள், யுத்தத்திற்கான மக்கள் தீர்ப்பு என சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இரு மாகாணங்களிலும் வெளியான முடிவுகளின்படி இரண்டு தேர்தல் தொகுதிகளைத் தவிர ஏனைய அனைத்துத் தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. கடந்த காலங்களில் ஐ. தே. க வெற்றிபெற்று வந்த தொகுதிகள் பலவற்றில் ஐ. ம. சு முன்னணி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதே நேரம் இதுவரை வெளியான முழுமையான விருப்பத்தெரிவு முடிவுகளின்படி 4 மாவட்டங்களிலிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு முஸ்லிமாவது தெரிவாகவில்லை. 03 தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள்:

ரா. மருதபாண்டி 21544 (நுவரெலியா மாவட்டம்)
ரா.  முத்தையா 18990  (நுவரெலியா மாவட்டம்)
வே ராதாகிருஸ்ணன் 18513 (நுவரெலியா மாவட்டம்) 

6 ஆசனங்களை எதிர்பார்த்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கட்சிக்கு நுவரெலியாவில் 3 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ளது. அமைச்சர் சந்திரசேகரனுக்கு ஒரு ஆசனமேனும் கிடைக்கவில்லை.

வடக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு மக்கள் அங்கீகாரம்

மத்திய மற்றும் வடமேல் மாகாண மக்கள் வடக்கில் முன்னெடுத்துவரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இது தேர்தல் வெற்றியை விட நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். தேர்தல் முடிவு தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

வரலாற்றில் ஒரு போதுமில்லாதவாறு பாரிய வாக்குவீதத்தினால் ஐ.ம.சு. முன்னணி வெற்றியீட்டியுள்ளது. ஐ.ம.சு. முன்னணிக்கு வாக்களித்த வாக்காளர் களுக்கும் கூட்டுக் கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வடபகுதி மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அந்த மக்களை மீட்கவும் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். இந்த தேர்தல் முடிவுகளினூடாக சர்வதேச சமூகத்திற்கும் சிறந்த செய்தியொன்றை மக்கள் வழங்கியுள்ளனர்.

தேர்தல் மிக அமைதியாக நடந்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும் வன்முறைகளில் ஈடுபடாது வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறு மக்களை கோருகின்றோம. வெற்றியீட்டிய இரு மாகாணங்களையும் முன்னரைவிட சிறப்பாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மஹிந்த சிந்தனைக்கு மீண்டும் மக்கள் ஆணை – ஜனாதிபதி

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கும் அரசின் கொள்கைக்கும் மக்கள் மீண்டும் ஆணை வழங்கியுள்ளதையே தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகிறதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. தாயகத்தை நேசிக்கின்ற சகல மக்களினதும் வெற்றியாகவே இதனை நான் பார்க்கிறேன்.

இது நாட்டை வெற்றி பெறச் செய்துள்ள தேர்தல். அதேநேரம், எமது படைவீரர்களின் வெற்றிகளை குறைத்து மதிப்பிடவென தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் இத்தேர்தல் முடிவுகள் தோல்வியடையச் செய்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் இறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் படைவீரர்களுக்கு இம் முடிவுகள் மட்டற்ற தைரியத்தையும் பின் சக்தியையும் வழங்கியுள்ளது.

என் மீதும், எனது அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து செயற்பட்ட மத்திய மற்றும் வட மேல் மாகாண மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரம், இத்தேர்தல் வெற்றியை அமைதியாகக் கொண்டாடுமாறும் சகலரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இத் தேர்தல் முடிவுகள் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கும் அரசின் கொள்கைக்கும் மக்கள் மீண்டும் ஆணை வழங்கியுள்ளதையே எடுத்துக்காட்டுகிறது- இதனையிட்டு நான் நேர்மையாகத் திருப்தி அடைகிறேன்.

அரசாங்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் பிழையான அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்ப சில குழப்பக்காரர்கள் செய்யும் முயற்சிகளை தோற்கடிக்கும் வகையில் மக்கள் இத்தேர்தல் மூலம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது-

குரூர பயங்கரவாதத்தை முழுமையாக நாட்டிலிருந்து துடைத்தெறிந்து எமது சகோதர மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவென அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு இத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் என்பதும் தெளிவாகிறது.

நானும் எனது அரசாங்கமும் நாட்டுக்குத் தான் முதலிடமளிக்கின்றோம். அதனால் கட்சி, நிற பேதங்களுக்கு அப்பால் புதிய இலங்கையை கட்டியெழுப்பவென சகல முற்போக்கு சக்திகளதும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையாளர் உட்பட சகல அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

17 ஆசனங்களை பறிகொடுத்து தேர்தலில் ஜே. வி. பி படுதோல்வி

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகளில் 18 ஆசனங்களைக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி) இம்முறை தேர்தல் மூலம் 17 ஆசனங்களை இழந்து ஒரு ஆசனத்தை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் மூலம் மத்திய மாகாண சபையில் ஒன்பது ஆசனங்களையும் வடமேல் மாகாண சபையில் ஒன்பது பிரதிநிதிகளையும் என்றபடி 18 ஆசனங்களை ஜே. வி. பி. பெற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும் இம்முறை தேர்தல் மூலம் மத்திய மாகாண சபையில் ஒரு பிரதிநிதித்துவத்தையும் பெறாத ஜே. வி. பி. வடமேல் மாகாண சபையில் ஒரு பிரதிநிதித்துவத்தையே பெற்றிருக்கிறது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஜே. வி. பி., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டது. இவ்வாறு போட்டியிட்டதன் மூலம் வடமேல் மாகாண சபையில் புத்தளம் மாவட்டத்தில் மூன்று பிரதிநிதிகளையும் குருநாகல் மாவட்டத்தில் ஆறு பிரதிநிதிகளையும் ஜே.வி.பி. பெற்றுக் கொண்டது.

இதே போல் மத்திய மாகாண சபையிலும் கண்டி மாவட்டத்தில் நான்கு ஆசனங்களையும் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், மாத்தளை மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் ஜே. வி. பி. பெற்றிருந்தது.

இம்முறை மாகாண சபைத் தேர்தலில் ஜே. வி. பி. தனித்துப போட்டியிட்டது. இதனால் குருநாகல் மாவட்டத்தில் மட்டுமே ஒரு ஆசனத்தை வெற்றி பெற்றிருக்கிறது.

இவ்விரு மாகாண சபைகளுக்குமான தேர்தல் முடிவுகளும் ஜே. வி. பி. பாரிய பின்னடைவை அடைந் திருப்பதையே எடுத்துக் காட்டுவதாக அவதானிகள் தெரி விக்கின்றனர்.

இதே போன்று பாரிய பின்னடைவை ஏற்கனவே கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களிலும் ஜே. வி. பி. சந்தித்தது தெரிந்ததே என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

புத்தளம் – நாயக்கர்சேனை வாக்குச் சாவடி வாக்குகள் ரத்து. வடமேல் மாகாண தேர்தல் முடிவுகள் தாமதம்: புதிய தேர்தல் நடத்த ஆணையாளர் தீர்மானம்

புத்தளம் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியொன்றில் மோசடி இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த வாக்குச் சாவடியின் தேர்தல் முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார். அந்த வாக்குச் சாவடிக்கு மாத்திரம் வேறொரு தினத்தில் தேர்தல் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

47 ஆவது வாக்குச் சாவடி அமைந்துள்ள நாயக்கர்சேனை தமிழ் மகா வித்தியாலயத்திலே இவ்வாறு மோசடி நடைபெற்றதாக புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரியினால் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த வாக்குச் சாவடி முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிக்கான தேர்தல் திகதி விரைவில் அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வாக்குச் சாவடி முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக புத்தளம் தேர்தல் தொகுதி யின் இறுதி முடிவுகள் அறிவிப்பது பிற்போடப் பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட முடிவுகள் மற்றும் வடமேல் மாகாண இறுதி முடிவுகள் என்பனவும் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளன.

1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல் சட்டத்தின் 46 ஆவது சரத்தின் படியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் குறித்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க 1145 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

43 சுயேச்சைகளும் கட்டுப்பணம் இழந்தன

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைத் தேர்த லில் போட்டியிட்ட 43 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை இழந்துள்ளன. இச்சுயேச்சைக் குழுக்கள் எதுவும் ஐந்து சத வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறாததாலேயே கட்டுப்பணத்தை இழந்துள்ளன.

இம்மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவ ட்டத்தில் 12 சுயேச்சைக்குழுக்களும், குருநாகல் மாவட்டத்தில் 5 சுயேச்சைக் குழுக்களும், நுவரெலியா மாவட்டத்தில் 10 சுயேச்சைக் குழுக்களும், கண்டி மாவட்டத்தில் 8 சுயேச்சைக் குழுக்களும் மாத்தளை மாவட்டத்தில் 8 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி இருந்தன.

இது இவ்வாறிருக்க, இரு மாகாணங்களிலும் தேர்தல் நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் இடம்பெற்றதாக சுயாதீன கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் தொடர்பாக 43 வன்முறைகள் இடம்பெற்றதாக கபே அமைப்பு கூறியபோதும் ஒப்பீட்டளவில் வன்முறைகள் குறைவாக இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

அண்மைய காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தல்களில் இது மிகவும் அமைதியான தேர்தல் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். கண்டி, நுவரெலியா, மாத்தளை, குருநாகல், புத்தளம் ஆகிய 5 மாவட்டங்களிலும் பாரிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. சுமார் 65% வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது.

இ.தொ.கா., ம.ம.மு. கட்சிகளுடன் எதிர்காலத்தில் தேர்தல்கூட்டு இல்லை – எஸ்.பி. திஸாநாயக்கா கூறுகிறார்

மக்கள் இத்தேர்தலில் அளித்துள்ள தீர்ப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க.முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.பி.திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.

கண்டிஅனிவத்த ஜானகி ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நாம் யுத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல. யுத்தத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். அதேநேரம், நாட்டின் இனப்பிரச்சினைக்கு யுத்தத்தினால் மட்டும் தீர்வுகாண முடியாது. இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

நாட்டின் பொருளாதாரம் இன்று சீர்கெட்டுப்போயுள்ளது. இதனை ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியால் மட்டுமே சீர்செய்ய முடியும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி அகிய இரு கட்சிகளும் எம்முடன் இணைந்து போட்டியிடாததால் வெற்றிபெறவில்லை.

இனிமேல் எதிர்வரும் தேர்தல்களில் இவ்விரு கட்சிகளையும் நாம் எம்முடன் இணைத்துக்கொள்ளப்போவதில்லை.

எம்முடன் இத்தேர்தலில் இணைந்து போட்டியிட்ட தமிழ்க்கட்சிகளையும் தமிழ் உறுப்பினர்களையும் பாராட்டுவதுடன், அவர்களை எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் முன்னெடுத்துச் செல்வோம்.

சதாசிவம், பீதாம்பரம் போன்ற தலைவர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து செயற்படுவார்கள்’ என்றார்.

நான்கு கட்டங்களாக நிரந்தர மீளக்குடியேற்றம் – பசில் ராஜபக்ஷ எம்.பி

vanni.jpgகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்தோர் நான்கு கட்டங்களாக சொந்த இட ங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நான்கு கட்டமாக முன்னெடுக்கப்படும் இந்த உறுதியான திட்டத்தின் மூலம், ஏப்ரல் மாதமளவில் அவர்களது சொந்த இடங்களில் நிரந்தரமாக குடியேற்ற முடியுமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  கடந்த வியாழனன்று அமைச்சுக்களின் செயலாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளையும் வசதிகளையும் அரசாங்கம் முழுமையாகச் செய்து வருகிறது. அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

புலிகளின் பிடியிலிருந்து கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு முதல்நாள் சூடான சாப்பாடும், சிற்றுண்டிகளும் வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் அவர்கள் இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். யு.என். எச். சி. ஆர். மற்றும் ஐ.ஓ.எம். நிறுவனங்கள் இவர்களுக்கான கூடாரங்களை வழங்கவுள்ளதெனவும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். சுகாதார அமைச்சு தேவையான அனைத்து சுகாதார ஏற்பாடுகளையும் செய்துள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.

புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள்: சீமான்

seeman-1302.jpgதமிழீழ மண்ணில் அமைதிப்படை செய்த அக்கிரமங்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.  இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை ராஜபக்சே சொல்லவில்வை. இந்திய அரசின் அதிகாரிகள்தான் சொல்கிறார்கள். அப்படியானால் போரை நடத்துவது யார்?  இந்த போரில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வருகிறதா? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் செய்திகள் வருகிறது.

புலிகளை நெருங்க முடியாது. ஏனென்றால் மக்கள்தான் புலிகள். புலிகள் தான் மக்கள். மக்களிடம் இருந்துதான் புலிகள் உருவாகிறார்கள் என்பதால் மக்களை திட்டமிட்டு அழிக்கிறது சிங்கள அரசு. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் சீமான்  பங்கேற்று பேசினார்..

இயக்குனர் சீமான் பேசுகையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.  7 நாடுகளின் ராணுவ தளபதிகள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கி பார். என்ன ஆகும் என்று தெரியும்.

உலகின் மிகப்பெரிய புரட்சியாளன் எங்கள் அண்ணன் பிரபாகரன். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்களை ஆயுதங்களை கீழே போடச்சொல்லாதீர்கள். அது ஒரு மக்கள் ராணுவம். உயிரையே ஆயுதமாக்கி போராடும் மக்கள் ராணுவத்தை ஆயுதத்தை கீழே போடச் சொல்லாதீர்கள்.  எதுவும் தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். அதுபோல் நாடு தானாக வராது. நாம்தான் அடைய வேண்டும். தமிழீழம் அமைந்தே தீரும் என்றார்.

கூட்டத்தில் பேசிய சீமான், ஏற்கனவே இரு வழக்குகள் இருக்கிறது. அந்த வழக்கை சந்திக்க தயார் என்றும், மேலும் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன், எந்த சிறைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கடந்த 12 ந்தேதி சந்தித்த டைரக்டர் சீமான் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவரது பேச்சினை புதுவை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இப்போது அந்த பேச்சின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத நடவடிக்கை தடை சட்டம் 13(1)(பி), பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுதல் 1பி, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் 124 ஆகிய 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவர முடியாதையாகும். புதுவையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால், சீமானை கைது செய்வதில் உறுதியாக உள்ளது. மேலும் மத்திய அமைச்சர் நாராயணசாமி பத்திரிகைகளில் சீமானை கைது செய்தாக வேண்டும் என்று கூறிவருகிறார்.  சீமானை கைது செய்ய புதுச்சேரி போலீசார் தமிழக போலீசாரின் உதவியை நாடியுள்ளது. இதையடுத்து சீமான் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபிய வரலாற்றிலேயே முதல் பெண் அமைச்சர்.

saudi-arabia.jpgசவூதி அரேபிய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சவூதி அரேபிய அமைச்சரவையில் பெண் கல்வித்துறை துணை அமைச்சராக பிரபல கல்வியாளர் நோரா அல் பயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சவூதியின் முதல் பெண் அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சவூதி வரலாற்றில் மிக உயரிய அரசுப் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து நோரா அல் பயஸ் கூறுகையில், இது மிகவும் கடினமான பணி. எனக்கு துணை கல்வி அமைச்சர் பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. நான் ஒரு முன் மாதிரியாக திகழ்வேன் என நம்புகிறேன். வரும் ஆண்டுகளில் பெண்கள் உயர் பதவிக்கு வர முடியும் என்ற நம்பிக்கை இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சராக சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

தற்போது நோரா அல் பயஸ், சவூதி பொது நிர்வாகக் கழகத்தில் உயர் பதவியில் உள்ளார்.

இவர் தவிர மேலும் சில புதிய அமைச்சர்களையும் மன்னர் அப்துல்லா நியமித்துள்ளார். அதேபோல மத்திய வங்கியின் புதிய ஆளுநராக முகம்மது அல் ஜஸ்ஸர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்துல்லா மன்னரானார். அதன் பின்னர் அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை நிலைவரம் அமெரிக்க செனட் குழு – பெப். 24 இல் விசாரணை

u-s-a-flag.jpgஇலங் கையின் அண்மைய நிலைவரங்கள் தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுகளுக்கான செனட் குழு எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு கூடி விசாரணை நடத்தவுள்ளது. டேர்க்சென் செனட் கட்டிடத்தில் இந்த விசாரணை இடம்பெறுமென குழுவின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. வெளியுறவுக் குழுவின் தலைவர் செனட்டர் கெரி இந்த விசாரணைக்கு தலைமை தாங்கவுள்ளார். இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெவ்ரி ஜே.லன்ஸ்ரட் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அன்னா நெய்ஸ்ரட், பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழுவின் பொப்டியற்ஸ் ஆகியோர் இந்த விசாரணையின் போது சாட்சியமளிக்கவுள்ளனர். 1989 இன் பின்னர் கொழும்பில் அமெரிக்கத் தூதுவர்களாகப் பணியாற்றிய லன்ஸ்ரட் உட்பட முன்னாள் இராஜதந்திரிகள் இலங்கையில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஆழ்ந்த கவலையை தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தனர். “சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்க படுகொலை தொடர்பாகவும் முன்னாள் தூதுவர்கள் தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர 

லண்டனில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்

protestsin.jpgஇலங்கையில் விடுதலைப் புலிகளின் பகுதியில் சிக்கியிருக்கும் பொதுமக்களை விடுவிக்க பிரித்தானியாவின் பிரதமர் கார்டன் பிரவுண் அவர்கள், புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி, இலண்டனிலுள்ள சிங்கள மக்களால் ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த முப்பது ஆண்டுகளாக தீவிரவாதத்தின் காரணமாக, இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பர்கர்கள் ஆகிய அனைத்து மக்களும் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர் என்றும், பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்திவரும் இராணுவத்துக்கும் தமது ஆதரவை வெளிப்படுத்தினர். போர் நடக்கும் பகுதிகளில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என்றும், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய பயங்கரவாத்த்துக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

மேல் மாகாண சபை தேர்தலில் வாக்குகளை வாக்கு சாவடிகளிலேயே எண்ண ஏற்பாடு

sri-lanka-election.jpgமேல் மாகாண சபை தேர்தலின் போது வாக்குச் சாவடியிலேயே வாக்குகள் அனைத்தும் எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். மாலை 4.00 மணிக்கு வாக்களிப்புகள் நடைபெற்று முடிந்தவுடனேயே வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். தபால் வாக்குகள் மட்டுமே வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்தில் வைத்து எண்ணப்படும் என்றும் கூறினார். முதல்முறையாக இந்நடவடிக்கை செய்யப்படுவதாகக் கூறிய ஆணையாளர், வடமேல், மத்திய மாகாண சபை தேர்தல்களின் போது இவ்வாறு நடைபெறமாட்டாது என்றும் கூறினார்.  மேல் மாகாண சபை கலைக்கப்பட்டு தற்போது வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இறுதி தினமான 26ம் திகதியிலிருந்து 36 முதல் 56 வரையிலான தின காலப்பகுதிக்குள் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்க ப்படும். அது ஒரு சனிக்கிழமை தினமாக இருக்கும் என் றும் கூறினார்.  2004 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி மேல் மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்தது. 2004 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யும் காலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் 2004 ஜூன் மாதம் 10 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது