கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பிரித்தானிய அரசியல் கேலிக்கூத்து! தொழிற்கட்சியினுள் யூதர்களுக்கு எதிரான போக்கு ! ஜெரிமி கோபின் தொழிற்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்!

பிரித்தானியாவின் மிக உன்னதமான மனிதத்துவ போராளியான ஜெரிமி கோபின் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது கட்சியில் இருந்த யூதர்களுக்கு எதிராக செயற்பாடுகளை கண்டுகொள்ளவில்லை என்று சமத்துவத்திற்கும் மனித உரிமைக்குமான ஆணைக்குழு நேற்று (29/10/2020) குற்றம்சாட்டி இருந்தது. இந்த அறிக்கை வெளிவந்து சில நிமிடங்களிலேயே ஜெரிமி கோர்பின் இந்த அறிக்கையை விமர்சித்து இருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக மிகைப்படுத்தப்பட்டது என ஜெரிமி கோபின் மிகச்சரியாகவே குற்றம்சாட்டி இருந்தார்.

ஆனால் ஜெரிமி கோபினின் இந்த விமர்சனத்தை தற்போதைய தொழிற்கட்சித் தலைவர் ஹியஸ் ராமர் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அடுத்த சில மணிநேரங்களில் ஜெரிமி கோபின் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்ககாணலில் தன்னுடைய விமர்சனத்தை மிக அழுத்தம் திருத்தமாக வெளியிட்டார். அதன்படி தனக்கு எதிரான ஒரு அரசியல் சதி என்பதை அவர் மிகத் தெளிவாக சுற்றிக்காட்டினார். இதனை தொழிற்கட்சியில் இருக்கும் பல யூதப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், ஜெரிமி கோபினுக்கு தங்களுடைய ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். ஜெரிமி கோபினின் இந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பப்பட்டு சில நிமிடங்களிலேயே ஜெரிமி கோபின் நேற்று மதியம் ஒரு மணியளவில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அன்ரிசெமற்றிசம் – anti semitisam என்பது ஹிட்லருடைய காலத்தில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் யூதர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை மறுப்பது. இவ்வாறான எவ்வித மறுப்பையும் ஜெரிமி கோபின் செய்ததற்கு நேரடியான மறைமுகமான எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆனால் கட்சியில் இருந்த சிலர் அவ்வாறு நடந்து கொண்டிருந்தனர். அது சம்பந்தப்பட்ட ஒழுங்காற்று நடவடிக்கைகளை கட்சி எடுத்துவந்தது. ஆனால் தொழிற்கட்சியில் இருந்த வலதுசாரி பிரிவினர் ஜெரிமி கோபினின் தீவிர இடதுசாரியப் போக்கை நிராகரித்து வந்ததுடன்; ஜெரிமி கோபினை கட்சியின் தலைமையில் இருந்து ஓரம்கட்ட இந்த அன்ரி செமற்றிசம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து ஊதிப் பெருப்பித்து இந்நிலைக்கு இட்டுச்சென்றனர். இதுவொருவகையில் சகல விதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கின்றவர்களை கேலிக்கூத்தாக்கும் ஒரு செயலாகவே கருதப்படுகின்றது.

பிரித்தானியாவில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர் அதனால் அவர்கள் தினம் தினம் அவமானப்படுகின்றனர் வன்முறைக்கு உள்ளாகின்றனர். சிறுபான்மைச் சமூகங்கள்நாளாந்தம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். கறுப்பினத்தவர்கள் தங்களுடைய தோற்றம் இயல்புகளுக்காக பொலிஸாரின் ஸ்ரொப் அன் சேர்ச் போன்ற கெடுபிடிகளுக்கு உள்ளாகின்றனர். ஸ்லாமியர்கள் தினம் தினம் பிரித்தானியாவில் நையப்புடைக்கப்படுகின்றனர். அகதிகள் கேவலப்படுத்தப்படுகின்றனர். இவையெல்லாம் பிரித்தானிய தெருக்களிலும் பாராளுமன்றத்திலும் அப்பட்டமாக வெளித்தெரிகின்ற சமத்துவம் மனிதஉரிமை மீறல் சம்பவங்கள். இந்த கோவிட்-19 இந்நிலையயை மேலும் மோசமாக்கி ஒடுக்குமுறைகளையும் அடக்குமுறைகளையும் தூண்டியுள்ளது.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களோடு ஒப்பிடுகின்ற போது யூதர்கள் தொழிற்கட்சிக்குள் ஒடுக்குமுறைக்கு உள்ளானார்கள் என்பது மின்னணு நூக்குக்காட்டியயைக் கொண்டு பெருப்பித்து பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம். மேலும் இந்த அன்ரிசெமற்றிசம் என்ற குற்றச்சாட்டை வைப்பவர்கள் இஸ்ரேலிய கொடுங்கோன்மை கொலைவெறி அரசை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர். இஸ்ரேலிய கொடுங்கோண்மை அரசை விமர்சிப்பது எந்தவகையிலும் யூதர்களின் உரிமைகளை மறுப்பதாகாது. தொழிற்கட்சி உறுப்பினர்கள் பலர் அன்ரி ஸ்யோனிஸ்ட் anti zionists டுக்களாக உள்ளனர். அவர்கள் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதையும் இஸ்ரேலிய அரசின் நில ஆக்கிரமிப்பையும் பலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய அரசின் கொடுங்கோண்மையயையும் வன்மையாகக் கண்டிக்கின்றனர். இந்தப் பின்னணியியேலயே ஜெரிமி கோபின் மீது இவ்வாறான ஒரு அபாண்டமான பழி போடப்பட்டு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

இஸ்ரேலிய அரசு மனிதத்துவத்திற்கு எதிரானது; இஸ்ரேலிய அரசை எதிர்ப்பது; பாலஸ்தீன மக்களின் நில அபகரிப்புக்கு எதிராக குரல்கொடுப்பது; பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல்கொடுப்பது ஒருபோதும் யூதமக்களை அவமானப்படுத்துவதாகாது. ஜெரிமி கோபினை தொழிற்கட்சியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவு கட்சிக்குள் உள்ள வலதுசாரி சக்திகள் கடந்த ஆண்டுகளாக ஜெரிமி கோபின் சாதித்த மக்கள் நலன்சார்ந்த முடிவுகளை நிராகரிக்க முயற்சிப்பதன் வெளிப்பாடே.

2020 நோபல் பரிசு முழுயைான விபரங்கள் – பரிசு பெற்றவர்களும் பரிசுக்கான காரணங்களும் – ஒரே பார்வையில் !

நோபல் பரிசு 2020
ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, 1901ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் இந்த வருட நோபல் பரிசுகளை பெற்றவர்களுடைய விபரங்கள் இதோ !
மருத்துவத்துக்கான நோபல்பரிசு 2020
அதன்படி இந்த ஆண்டிற்கான மருத்துவ துறையின் நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஹார்வி ஜே ஆல்டர், மைக்கேல் ஹாஃப்டன், சார்லஸ் ரைஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பரிசு பெற்றவர்களில் விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் ஆகியோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் பிரிட்டனை சேர்ந்தவர். நோபல் பரிசு பெறும் இந்த மூன்று மருத்துவர்களுக்கும் பரிசு தொகை ரூ.8 கோடி ஆகும்.
காரணம்:
ஹெப்பாடைடிஸ் சி என்ற வைரஸின் கண்டுபிடித்ததற்காக இந்த மூன்று மருத்துவர்களும் கூட்டாக நோபல் பரிசு பெறுகின்றனர்.
மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டது! – Thinakkural
இயற்பியலுக்கான நோபல் பரிசு 2020
விஞ்ஞானிகள் ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ்  ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நோபல் பரிசு 2020
காரணம்:
‘கருந்துளை’ பற்றிய ஆய்வுக்காக இந்த மூன்று விஞ்ஞானிகளும் இயற்பியலுக்கான நோபல் பரிசினை கூட்டாக பெறுகின்றனர்.
2020 இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு- Dinamani
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2020
அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு இந்த ஆண்டிற்கான இலக்கியத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
நோபல் பரிசு 2020
காரணம்:
Unmistakable Poetic Voice என்ற திறனிற்காக அவருக்கு இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அமெரிக்காவின் லூயி க்ளூக்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு| Dinamalar
அமைதிக்கான நோபல் பரிசு 2020
 இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ”உலக உணவுத் திட்டம்’ அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு 2020
காரணம்:
கொரோனா வைரஸ் பரவலின் காரணத்தினால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட நேரத்திலும் இந்த அமைப்பு உலகம் முழுவதும் இருந்த ஏழைகளுக்கு உணவு வழங்கியது. மேலும் அதன் மூலம் நாடுகளுக்கிடையே சமாதானத்தினையும் ஏற்படுத்த பாடுபட்டதன் காரணத்தினால் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு |  pavoor.in
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2020
பால்.ஆர்.மில்க் ரோம் மற்றும் ராபர்ட்.பி. வில்லசன் ஆகிய இருவர் இந்த ஆண்டிற்கான பொருளாதாரத்தின் நோபல் பரிசினை கூட்டாக பெறுகின்றனர்.
நோபல் பரிசு 2020
காரணம்:
ஏல கோட்பாட்டின் மேம்பாடு மற்றும் ஏல கோட்பாட்டின் புதிய வடிவமைப்புகளை உருவாக்கியதற்காக இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பெறுகின்றனர்.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.! | Paul R Milgrom and Robert B  Wilson win 2020 Nobel Prize in Economics | Puthiyathalaimurai - Tamil News  | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
வேதியியல் நோபல் பரிசு 2020 
 2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இம்மானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகிய 2 பெண் அறிவியலாளர்களுக்கு மரபணு மாற்ற ஆய்வுகளுக்காக நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டது.
காரணம் –
ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் புதன்கிழமை 2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை இம்மானுவேல் சர்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுட்னா ஆகிய 2 பெண் அறிவியாலாளர்களுக்கு மரபணு மாற்றத்திற்கான முறையை உருவாக்கியதற்காக வழங்கியுள்ளது.
“இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுட்னா ஆகியோர் மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்: அது CRISPR/Cas9 மரபணு கத்தரிக்கோல் என்று அகாடமி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

கொரோனா அபத்தமும் – சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களமும் !

ஐக்கிய அமெரிக்காவின்  ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில்  விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் இந்தத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.  இந்தத்தேர்தலின் முடிவுகள் எவ்வாறு இருக்கப்போகின்றன என்று உலகநாடுகள் ஒவ்வொன்றும்  எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கின்றன.

அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தல் வேட்ப்பாளராக களமிறங்கும் ஆசிய-அமெரிக்கப்பெண் | lankapuri

இந்தத் தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.  அதேபோல் துணை ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி உள்ள மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

வழமையான ஜனாதிபதி தேர்தல்களைப் போலன்றி இந்தவருட தேர்தலில் கொரோனா பரவல் தொடர்பான விடயங்களே அமெரிக்க தேர்தலின் அதீத பேசு பொருளாகியுள்ள நிலையில் வேகமாக அமெரிக்காவில் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டமையே அவர் மீது முன்வைக்கப்படும் மிகப்பெரிய குற்றமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொதுத்தேர்தலை நடாத்துவது என்பதே கடினமான ஒரு செயலாக காணப்பட்ட போதிலும் கூட அதை வெற்றிகரமாக நடாத்திய ஒரு சில நாடுகளில் கொரோனா பரவலை முறையாக கட்டுப்படுத்திய தலைவர்களை மீள மக்கள் ஆட்சியில் அமர வைத்துள்ளமையை காணமுடிகின்றது. இலங்கை , நியூசிலாந்து போன்ற நாடுகளில் இதனை மிக நன்றாக காணமுடிந்தது. அது மட்டுமன்றி கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய தலைவர்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் வலுவடைந்து வருவதையும் சமகால அரசியல் தெளிவாக காட்டிநிற்கின்றது.

இந்நிலையில் இந்த வருட அமெரிக்க தேர்தல் பிரச்சார மேடைகளில் கொரோனா பரவலை ட்ரம்ப் கட்டுப்படுத்தவில்லை என்ற தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டியவராகிறார் ட்ரம்ப். குறிப்பாக மக்கள் மத்தியில் பிரசன்னமாகுகின்ற போதோ அல்லது கூட்டத்தொடர்களின் போதோ கூட முகக்கவசம் அணியாது அவர் கலந்து கொண்டமையானது எந்தளவு தூரம் இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிவிட்டார் என்பதை காட்டுகின்றது. இன்றைய திகதிக்கு 83 இலட்சத்துக்கு மேற்பட்ட அமெரிக்கர்கர்கள் கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொரோனாவால் இறந்துபோயுள்ளமையானது தேர்தல் வெற்றியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

அது மட்டுமன்றி ஜோர்ஜ்பிளைட் எனும் கறுப்பினத்தவர்  கொலைசெய்யப்பட்டமையும் – அது நிறவெறிவாத போராட்டமாக வெடித்த பின்னணியும் ட்ரம்பினுடைய தேர்தல் வெற்றியை பாதித்துள்ளமையை மறுத்து விட முடியாது. இதனை மிகச்சரியாக கையாண்ட ஜனநாயகக்கட்சியினர் தங்களுடைய கட்சியின் துணைஜனாதிபதி வேட்பாளராக ஆபிரிக்க – இந்திய வம்சாவழி அமெரிக்கரான கமலாஹாரிஸை நியமித்துள்ளமை ஜனநாயகக்கட்சிக்கு இன்னும் வலுச்சேர்ப்பதை காணக்கூடியதாகவுள்ளது. மேலும் அமெரிக்காவாழ் ஆபிரிக்க வம்சாவழியினரின் வாக்குகள் என்ற விடயத்துடன் அமெரிக்கா வாழ் இந்தியவம்சாவழியினரின் வாக்குகளும் ஜனநாயயகக்கட்சியின் பக்கம் குவிவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகியுள்ளது. இதனை மிக தந்திரோபாயமாக ஜனநாயககட்சியினர் அணுகுவதையும் அவதானிக்க முடிகின்றது. தேர்தலின் வேட்பாளர்கள் இந்தியாவில் நவராத்தரி தினத்துக்கும் – விநாயகர் சதுர்த்திக்கும் போட்டி போட்டு  வாழ்த்து தெரிவிக்குமளவிற்கு இந்த தேர்தல் அமெரிக்காவாழ் வெளிநாட்டவர்களின் வாக்குகளை எதிர்பார்த்து நிற்பதை காட்டுகின்றது.

நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்தனர் அமெரிக்க அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்

இது ஒருபுறமிருக்க அமெரிக்காவின் முன்னாள் தலைவர்கள் பலருடைய ஆதரவும் கூட ஜோபைடன் பக்கமே இருப்பதையும் காணமுடிகின்றது. பில் கிளின்டன் மற்றும் ஜிம்மி காட்டார், அதேபோன்று முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பொவல், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் கிலாரிகிளின்டன்  ஆகியோரும் தமது ஆதரவை ஜோபைடனுக்கு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்தப்பட்டியலில் புதிதாக “அக்டோபர் 21 ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பென்சில்வேனியாவில் ஜோ பைடனுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்” என்ற செய்தியும் உத்தயோக பூர்வமாக வெளியாகியுள்ளமையானது ஜனநாயகக்கட்சியின் பக்கத்தை மேலும் பலப்படுத்துவதாக உள்ளது. அண்மையில் பிரித்தானிய அரசும் ஜோபைடனுக்கு சார்பான போக்கினை கடைப்பிடிப்பதாக தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருந்தமையானது ஜனநாயகக்கட்சி வலிமையாக இருப்பதை காட்டுகின்றது.

இதே நேரத்தில் டொனால்ட் ட்ரம்பும் தன்னுடைய பக்கத்தை,  தேர்தலில் தன்னுடைய வகிபாகத்தை மிகச்சரியாக நகர்த்துவது போலவே படுகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் டொனால்ட் ட்ரம்பிற்கும் அவருடைய அமைதி ஒப்பந்தத்திற்கும் கிடைத்த வெற்றியானது ட்ரம்பின் வெளிநாட்டுக்கொள்கைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். குறிப்பாக இஸ்ரேல் – பக்ரைன், இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ட்ரம்பின் நகர்வுகள் ட்ரம்பை சமாதானப்பிரியராக அடையாளம் காட்டியுள்ளமையானது ட்ரம்பின் தேர்தல் நகர்வுகளில் கனிசமான செல்வாக்கு செலுத்தவுள்ளது.

மத்தியகிழக்கு நாடுகளில் அமைதியான முகத்தை காட்டிவரும் ட்ரம்ப், அமெரிக்கா என்னும் வல்லாதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்து வரும் சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்துவது போன்றதான விம்பம் ஒன்றையும்  தன்னுடைய தேர்தல் அரசியலில் நகர்த்துகின்றார். ஜோபைடனை அமெரிக்காவின் கைக்கூலியாக காட்டிவரும் ட்ரம்ப் சீனாவிற்கு எதிரான பல பொருளாதாரத்தடைகளை விதித்தமையினையும் சீனாவை கட்டுப்படுத்துவதையும் தன்னுடைய பெரிய சாதனையாக அடையாளப்படுத்த தவறவில்லை. தன் மீது சுமத்தப்பட்ட கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை மிக இலாவகமாக சீனாவின் திட்டமிட்ட சதிதான் கொரோனா என்ற மாயவலையால் மூடிவிட்டார் ட்ரம்ப் என்பது போலவே ஒரு பக்கம் தோன்றுகின்றது.

trump-announces-peace-deal-between-bahrain-and-israel

வடகொரியாவுடனான அணுஆயுதப்பிரச்சினையை முறையாக கையாண்டு அமைதி ஒப்பந்தம் ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டமை, மத்தியகிழக்கு நாடுகளில் சமாதானத்தூதுவனாக பணியாற்றியமை,   இந்தியாவுடனான அரசியல் நகர்வுகளிலும் ஓரளவுக்கு தன்னை நிலைநிறுத்திக்கொண்டமை என பல வெளிநாட்டு நகர்வுகளில் ட்ரம்ப் மகத்தான வெற்றிகளை பதிவுசெய்துள்ளமை அவருடைய தேர்தல் வெற்றியிலும் தாக்கம் செலுத்தும்.

“அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே சொந்தமானது” என தீவிர பிரச்சாரத்தை இந்த தேர்தலிலும் ட்ரம்ப் முழுமூச்சாக கையிலெடுத்துள்ளார். அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தொடங்கி அனைத்திலும் முன்னுரிமை அமெரிக்கர்களுக்கு வழங்க வேண்டும் என்ற தீவிர பிரச்சாரத்தை ட்ரம்ப் முன்வைத்து வருவது அவருடைய பக்கம் கனிசமான அமெரிக்கர்கர்களை ஈர்த்து வைத்திருக்கும் என்பதை காட்டுகின்றது.  மேலும் வழமை போல கொமினியூச எதிர்ப்பையும் தன்னுடைய கையில் எடுத்துள்ள ட்ரம்ப் “ஜனநாயக கட்சியினர் அமெரிக்காவை கம்யூனிஸ்ட் நாடாக மாற்ற விரும்புகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டையும் தீவிரமாக முன்வைத்து வருகின்றமையும் முதலாளித்துவ கோட்பாட்டை விரும்பும் ஒருதொகை  அமெரிக்கர்களை திருப்திப்படுத்த முனைவதை தெளிவாக காட்டுகின்றது.

இந்த நிலையில் அமெரிக்காவின் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தல் பற்றி குறிப்பிட்டுள்ள ட்ரம்ப் “ அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றுவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவன் ‘ என குறிப்பிட்டுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் ஜனநாயகக்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள கொரோனா தொடர்பான பழியிலிருந்து மீண்டு ட்ரம்ப் மீள ஆட்சியமைப்பாரா..? அல்லது ஜோபைடனின் நகர்வுகளும் அரசியல் அனுபவங்களும் வெற்றி பெறப்போகின்றனவா என்று….!

 

தற்கொலை உளவியல் : த ஜெயபாலன்

“தற்கொலை”: ஒரு பொதுச்சுகாதாரப் பிரச்சினை

தற்கொலைகளை நாங்கள் இன்னமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சம்பவங்களாகவே பார்க்கின்றோம். ஆனால் உண்மை அதுவல்ல. தற்கொலைகள் உலகின் முக்கிய பொதுச் சுகாதாரப் பிரச்சினை.

உலகின் மக்களில் இறப்பவர்களில், ஆண்டுக்கு 1.4 வீதமானவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். அண்ணளவாக ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். உலகின் மரணத்துக்கான காரணிகளில் முதல் 20 காரணிகளில் ஒன்று தற்கொலை.

15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்தில் தற்கொலை இரண்டாவது முக்கிய காரணியாகும். 20 தற்கொலை முயற்சிகளில் ஒன்றுதான் மரணமாகின்றது. அப்படியாயின் எவ்வளவு பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதை கணித்துப்பாருங்கள்.

இன்னும் 15 ஆண்டுகளில் உலகில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை வருடத்துக்கு பத்து லட்சத்தை எட்டும் என உலக சுகாராத அமைப்பு எச்சரித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியிலேயே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தற்கொலைப் போக்கை நோக்க வேண்டியுள்ளது.

தமிழர் தற்கொலைகள்:
இக்கட்டுரையை எழுதுவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்த போது, ஒக்ரோபர் 3இல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் ஒரே தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு கொலையாளி தற்கொலைக்கு முயற்சித்து கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நால்வர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்செய்தியின் முழுவிபரங்ளும் வெளிவருவதற்கு முன்னமே ஆங்கிலக்கால்வாயின் அடுத்த கரையில், லண்டன் பிரன்ட்பேர்ட்டில் இன்னுமொரு தமிழர் ஒக்ரோபர் 6 இல் தன் மனைவியையும் மகனையும் கொலை செய்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆய்வை மேற்கொண்டிருந்த வேளையில் எனது சகோதரி முறையான ஒருவரின் உணவகத்தில் பணியாற்றிய 22 வயதேயான வெள்ளையின இளைஞன் கிழக்கு லண்டனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இச்சம்பவங்கள் எல்லாமே ஒரு சில நாட்கள் இடை வெளியில் நடைபெற்றவை.

லண்டனில் நான் ஊடகவியலாளனாக கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்சமூகத்தின் மத்தியில் நடைபெற்ற பல தற்கொலை மரணங்களைப் பதிவு செய்துள்ளேன். அதில் மூன்று சம்பவங்களில் தாய்மார் தம் இரு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தாங்கள் தற்கொலைக்கு முயற்சித்து, அதில் தோல்வியடைந்தனர். ஒன்றில் தந்தை தன் இரு குழுந்தைகளைக் கொலை செய்துவிட்டு தான் தற்கொலைக்கு முயற்சித்து அதில் தோல்வியடைந்தார். பிரன்ட்பேர்ட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் மட்டுமே கொலை செய்தவர் அதே முறையில் தற்கொலைக்கு முயற்சித்து தானும் தற்கொலை செய்து இறந்துபோனார்.

அதாவது, மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்துமே மிக குரூரமான வன்முறையால் – கூரிய ஆயுதங்களால் குத்தி மரணம் ஏற்படுத்தப்பட்டவையாகும். அதே முறையில் தங்களைத் தாங்களே குத்தி மரணத்தை விளைவிக்க முனைந்த போது அவர்களால் அது சாத்தியப்படவில்லை.

இவற்றைவிட பல தமிழர்கள் பல்வேறு சமூக பொருளாதார மற்றும் வெவ்வேறு வயதுடையவர்கள் பலர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்கள் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்வதை தங்கள் தற்கொலை முறையாகக் கொண்டிருந்தனர். சிலர் தூக்கிட்டு இறந்துள்ளனர். தங்களை கூரிய ஆயுதத்தால் குத்திக்கொண்டு, தற்கொலை செய்ய முயற்சித்தவர்கள் பெரும்பாலும் அதில் தோல்வியயையே தழுவினர்.

இலங்கையில் தமிழர்:
இந்தப் பின்னணியில் இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் நடைபெறும் தற்கொலைகள் பற்றிய ஆய்வுக்காக வடக்கில் செப்பரம்பர் 01 முதல் செப்ரம்பர் 14 வரை நடைபெற்ற மரணங்களை தேசம்நெற் ஊடகவியலாளர்களுடாக சேகரித்தேன், அதன் விபரம் பின்வருமாறு: (அருகில் தரப்படும் திகதியானது சம்பவம் நிகழ்ந்த திகதியல்ல. அச்சம்பவம் பத்திரிகையில் பிரசுரமான திகதி)
செப்ரம்பர் 01:
முல்லைத்தீவு தீர்த்தக்கரை: மூன்று பிள்ளைகளின் தந்தை, 47 வயது, பொது மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 04:
வவுனியா மாங்குளம்: தங்கவேல் சிவக்குமார், 26 வயது இளைஞர், வீட்டில், தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 07:
யாழ் மாதகல் நாவலடி: பாலசுப்பிரமணியம் முருகதாஸ், 32 வயது, காதல் விவகாரமாக தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 09:
யாழ் கோப்பாய் மத்தி: குகதாஸ் தினேஸ், 18 வயது, இளைஞர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விசமருந்தி தற்கொலை
செப்ரம்பர் 09:
வவுனியா கூமாங்குளம்: ரஞ்சித் வசந், 22 வயது, இளம் குடும்பஸ்தர் (மனைவி 4 மாத கர்ப்பிணி) தற்கொலை
செப்ரம்பர் 11:
கிளிநொச்சி பெரியபரந்தன்: சசிதரன் வயது 28, தனுஷியா வயது 27ஆகிய இருவரும் காதலுக்கு குடும்பத்தார் சம்மதிக்காததால் காட்டுப்பகுதியில், தூக்கிட்டு தற்கொலை
செப்ரம்பர் 12:
கிளிநொச்சி அம்பாள் நகர்: 15 வயது, யுவதி, தற்கொலை
செப்ரம்பர் 14:
யாழ்ப்பாணம் குப்பிளான்: இளைஞர் தாய் பணம் தர மறுத்ததால் தற்கொலை

உணர்ச்சிவயப்பட்ட முட்டாள்கள்:
எமது மூளையின் சிந்தனையின் செயற்பாடானது இன்னமும் முழுமையாக அறியப்படாத, மிகவும் சிக்கலான, ஆனால் ஆழமான செயன்முறையாகும். அன்பு, பாசம், காதல், கோபம், வெறுப்பு, வேதனை, துயரம், ஆற்றாமை, சிரிப்பு, அழுகை, சோகம் போன்ற உணர்வுகள் மனம் சார்ந்ததாகவும் மனமே எமது தனித்துவத்தை தீர்மானிப்பதாகவும் உள்ளது.

ஆனால் எமது உடலில் மனம் என்ற ஒரு அங்கம் இல்லை. எமது உணர்வோட்டங்களே மனமாகச் சித்தரிக்கப்படுகின்றன. எமது உடலில் சுரக்கின்ற ஹோமோன்களே எங்களில் உருவாகின்ற காதலையும் வெறுப்பையும் சந்தோசத்தையும் அழுகையையும் தீர்மானிக்கின்றனவேயொழிய சம்பவங்களோ நபர்களோ அல்ல என்பதே விஞ்ஞானபூர்வமானது.

ஆனால் என்னாலும் எனக்கு வெளியே நின்று உணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு அவ்வாறு நோக்க முடிவதில்லை என்பதே உண்மை. நாம் எல்லோருமே ஒரு வகையில் எமோசனல் இடியட்ஸ் – உணர்வு வயப்பட்ட முட்டாள்கள். அதனால்தான் நாங்கள் விலைமதிக்க முடியாத உயிரைக் கூட சிறிய சம்பவங்களுக்காக, நபர்களுக்காக (அவை வெறும் இரசாயன மாற்றங்கள் என்று புரிந்துகொள்ளாமல்) மாய்த்துக்கொள்ளத் துணிகின்றோம்.

உளவியல் வலி:
நாங்கள் எத்தனை வயதுள்ளவர்களாக வளர்ந்தாலும் எமது நாற்பதுகளையும் ஐம்பதுகளையும் தொட்டாலும் எம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணர்வு வளர்ச்சி என்பது ஒன்பது வயதைத் தாண்டுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எமக்கு உயிராபத்தான விடயங்களில் கூட ஒன்பது பேரில் எண்மர் சரியான முடிவை எடுப்பதில்லையெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏன் இவர்கள் தற்கொலைக்கு உந்தப்படுகின்றனர் என்ற கேள்விக்கான பதில் பல காரணிகளில் தங்கி இருக்கின்றது. அதில் மிகப் பிரதானமானது அவர்களுக்கு ஏற்படுகின்ற உளவியல் ரீதியான வலி.
இந்தத் தாங்க முடியாத உளவியல் வலியில் இருந்து தப்பித்துக்கொள்வதே அவர்களுக்கு மிகப்பெரும் நிம்மதியைத் தருகின்றது. அதுவே தற்கொலைக்கான உந்துதலாக அமைகின்றது. பொதுவாக அச்சம் உண்மைச் சம்பவங்களிலும் பார்க்க பீதியை ஏற்படுத்தக் கூடியது. தற்கொலைக்கு உந்தப்படுபவர்கள் இந்த அச்சத்தினால் ஆட்கொள்ளப்பட்டு விடுகின்றனர். இதனோடு ஒருவருடைய தனித்துவ பரம்பரையலகு, உணர்வுநிலை, உணர்வுப் பிரதிபலிப்பு, முடிவெடுக்கும் ஆற்றலின் பற்றாக்குறை என்பன தற்கொலைக்கு காரணமாகின்றன.

மனிதன் ஒரு சமூக விலங்கு:
மேலும் மனிதன் ஒரு சமூக விலங்கு. அப்படியிருக்கையில் தற்கொலை என்பது முற்றிலும் தனிநபர் சார்ந்தது என்று வரையறுத்துவிட முடியாது என்கிறார் எமிலி டேர்க்ஹெய்ம். அவர் தற்கொலைக்கு ஒரு சமூக இயல்பும் உள்ளது என்றும் கலாச்சாரகூறுகளும் அதற்கு காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றார்.
உளவியல் நிபுணர் தோமஸ் ஈ ஜோய்னியரின் தற்கொலைக்கான உள்ளுணர்வு கொள்கையின்படி “தற்கொலை மீது விருப்பம் இல்லாதவராலும், தற்கொலையை நிறைவேற்ற முடியாதவராலும், தற்கொலையைச் செய்ய முடியாது” என்கிறார். அதாவது தற்கொலைக்கான விருப்பமும் தற்கொலை செய்துகொள்வதற்கான வல்லமையும் உள்ள ஒருவரே தற்கொலையயைச் செய்ய முடியும் என்கிறார். இதற்கு அவர் இரு உள்ளுணர்வு கட்டமைப்புகளை முன்வைக்கிறார் ஒன்று நான் இன்னொருவரில் தங்கியிருக்க வேண்டியுள்ளது என்ற கற்பனை எண்ணப்பாடும், நான் நிராகரிக்கப்படுகின்றேன் என்ற எண்ணப்பாடும் இதற்கு காரணமாக உள்ளன.

நிலையை உணர மறுக்கும் வயோதிபர்:
வயதானவர்கள் தங்கள் பிந்தைய காலத்தில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. ஆனால் இந்த மாற்றங்கள் தொடர்பில் மிகவும் உணர்வுரீதியில் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். அதனால் வாழ்க்கையின் பின்நாட்களில் ஏற்படும் தற்கொலைக்கு இது காரணமாகின்றது. சில நாளாந்த பழக்கங்களையும் எண்ணங்களையும் அவர்களால் செய்துகொள்ள இயலாத நிலையேற்பட்டும். மிகவும் உணர்வுமயப்பட்டு இருப்பதால் சிறு விமர்சனங்களையும் தாங்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இவை வாழ்க்கையின் பிற்பகுதியில் ஏற்படும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைகின்றது.

இலங்கை நிலவரம்:
மேலே பட்டியலிடப்பட்ட வடமாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைச் சம்பவங்கள் எதுவுமே பொதுவிதியில் இருந்து விலகியவையல்ல. உலகில் 75 வீதத்திற்கும் அதிகமான தற்கொலைகள் வருமானம் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் உடைய நாடுகளிலேயே நடக்கின்றன. இதில் இலங்கை உட்பட்ட 11தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நாற்பது வீதம் வரையான தற்கொலைகள் நடைபெறுகின்றது.
1955இல் இலங்கை தற்கொலை வீத பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது முதல் தற்போது வரையில் இலங்கை தற்கொலைகளைக் கட்டுப்படுத்துவதில் பாரிய முன்னேற்றத்தை தொட்டு உள்ளது. ஆனால் 1995இல் இலங்கை தற்கொலை வீதத்தின் உச்சத்தை தொட்டு இருந்தது.

1990இல் உலகில் அதன் மக்கள் தொகைக்கு தற்கொலைகள் கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்தது. அப்போது இலங்கையில் 100,000 பேருக்கு 55 பேர்வரை தற்கொலை செய்யும் நிலையிருந்தது. அதற்கு அப்போது இலங்கை யுத்தத்தின் உச்சத்தில் இருந்தமை காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அமைதிப் பூமியான கிரீன்லாந்தில் 100,000 பேருக்கு 100 பேர் வரை தற்கொலை செய்துகொண்டனர். கிரீன் லாந்தின் ஒரு நாளில் 20 மணிநேரம் இருட்டாக இருக்கும் காலநிலை அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் அடுத்த கால் நூற்றாண்டு காலத்தில் இலங்கையும் கிரீன்லாந்தும் தற்கொலை தடுப்பு கொள்கைகளை அறிமுகப்படுத்தித் தற்கொலை வீதத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டன. 2017இல் கிரீன்லாந்தும் இலங்கையும் முறையே 50, 20 ஆக தங்கள் நாடுகளின் தற்கொலைகளைக் குறைத்துக்கொண்டன. இன்று இலங்கை உலக தற்கொலை நாடுகளின் பட்டியலில் 29வது இடத்தில் உள்ளது.

இலங்கையில் தமிழ் மாவட்டங்களில் தற்கொலைகளின் போக்கை அவதானிக்கும் எவரும் வடக்கில் குறிப்பாக வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்கள் தற்கொலை போக்கின் உச்சத்தை தொடுவதைக் காணலாம். (கீழுள்ள பட்டியல் தற்கொலை எண்ணிக்கை 100,000 பேருக்கு எத்தினைபேர் தற்கொலை செய்துள்ளனர் என்பதனைக் காட்டுகின்றது.) பொதுவாக வடமாகாணம் (விதிவிலக்கு மன்னார் மாவட்டம்) இயல்பாகவே தற்கொலை இயல்புடைய மாகாணமாக உள்ளது. தற்கொலைப் பதிவுகள் மேற்கொள்ளப்பட ஆரம்பிக்கப்பட்டது முதல் இற்றைவரை வடமாகாணம் தற்கொலைகளில் முன்னிலை வகிக்கின்றது.

இதற்கு யுத்தமும் ஒரு காரணமாக இருந்த போதும் அது முழுமுதற்காரணமல்ல என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பொதுவாகவே தற்கொலைகள் சனத்தொகை அடர்த்தி குறைந்த கிராமப்புறங்களில் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இலங்கையில் சனத்தொகை அடர்த்தி மிகக் குறைந்த 5 மாவட்டங்களில் நான்கு மாவட்டங்கள் வடமாகாணத்தில் உள்ளன. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார். தென்னிலங்கையிலும் ஒப்பீட்டளவில் சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்களில் தற்கொலை வீதம் அதிகம் காணப்படுகின்றது.

இலங்கையில் தற்கொலை வீதமானது இனங்களிடையே வேறுபடுகின்றதா என்பதற்கு வலுவான ஆய்வுகள் செய்யப்படவில்லை. மேலும் யுத்தத்தைக் காட்டிலும் சனத்தொகை அடர்த்தி தற்கொலையில் கூடிய செல்வாக்கைச் செலுத்துகின்றது. சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பதும் வறுமை தனிமை வேலையின்மை போன்றன அப்பகுதிகளின் பொது இயல்பாக இருப்பதும் இங்கு தற்கொலைகள் அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளன.

தற்கொலையைத் தூண்டும் தனிமை:
தற்கொலைக்கு முக்கிய காரணிகளில் தனிமையும் ஒன்று. கிராமப்புறங்களில் இதுவொரு ஊக்கியாக அமைகின்றது. வெறுமைக்கும் விரக்திக்கும் அவர்களை இட்டுச்செல்கின்றது. தனிமையில் இருக்கின்ற போது சனநடமாட்டம் அற்ற பகுதிகளிலேயே தற்கொலைகள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களின் சூழல் தற்கொலைக்கு வாய்ப்பாகின்றது.

இலங்கையில் தற்கொலை முறைகள்:
இலங்கையில் 1990களில் உச்சத்தை தொட்டிருந்த தற்கொலைகள் பெரும்பாலும் கிருமிநாசினி – நஞ்சருந்தி – விஷமருந்தி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகளாகவே இருந்தன. சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் விவசாயத்தை தொழிலாகவும் கொண்டிருந்தனர். அதனால் கிருமிநாசினிகள் – விஷம் – நஞ்சு நினைத்ததும் கிடைக்கக் கூடியதாக இருந்தது.

தற்போது தற்கொலை சாதனமாக “தூக்கிடுவது”முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தற்கொலைக்கு இந்தப் பொருட்களின் நுகர்வை, பாவனையை, பரிமாற்றத்தைத் கட்டுப்படுத்தியதன் மூலம் இலங்கையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த விவசாய கிராமங்களில் தற்கொலை வீதம் சடுதியாக வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. இப்பொழுதெல்லாம் விசமருந்தி தற்கொலை செய்பவர்களின் வீதம் வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது தூக்கிட்டு கொள்வதே தற்கொலைக் கருவியாக உள்ளது.

தற்போது தற்கொலைச் சாதனமாக தூக்கிடுவது முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. தூக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் கயிறு, சேலை, கட்டித் தொங்கப் பயன்படும் வளை என்பன நாளாந்த வாழ்வியலின் அம்சங்களாக இருப்பதால் அதனை கிடைக்காமல் செய்வது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. ஆனால் கயிறு போன்றவற்றை பெறுவதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடியும். சட்டப்படி கூரைகள் இவ்வளவுஉயரமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் ஏற்படுத்தப்படலாம். இவற்றின் மூலம் இலகுவில் தூக்கிடுவதற்கானவாய்ப்புகளை இல்லாமல் செய்ய முடியும்.

தடுத்தல்:
முக்கியமாக தற்கொலைக்கான ஆபத்தான காரணியான தனிமையை வழங்கக் கூடாது. தற்கொலைக்கான இயல்புடையவர்கள் ஏற்கனவே தற்கொலை முயற்சியில் இறங்கியவர்கள் தனிமையில் இருப்பதை அனுமதிக்கக் கூடாது.

தற்கொலைகள் முற்றிலுமாக தடுக்கக் கூடியவை. அதனால் அதனைத் தடுப்பதற்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனைச் சாதிப்பதற்கு அனைத்துத் தரப்பினர் (சம்பந்தப்பட்டவர்கள், குடும்பம், சமூகம், அரசு) அனைவரும் ஒருமுகப்பட்டு செயற்பட வேண்டும்.
தற்கொலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தற்கொலைக்கான சாதனங்கள் கிருமிநாசினிகள், சுடுகருவிகள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் நுகர்வு, பாவனை, பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும். மனநலம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மனநலம் தொடர்பாக சமூகத்தில் உள்ள எதிர்மறையான எண்ணங்கள் களையப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் மனம் திறந்து பேசுவதற்கான சமூகச் சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஊடகங்கள் தற்கொலைகளை உணரச்சியூட்டும் செய்திகளாக வெளியிடுவதற்கு மாறாக அறிவுபூர்வமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்திகளாக வெளியிட வேண்டும்.

உளநலம் குறித்த தப்பெண்ணம்:
தற்கொலைகள் தொடர்பாக கிழக்கு இலங்கை பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் ஒருவர் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கில் மனநலம் பற்றிய தப்பெண்ணங்கள் தற்கொலைகளைத் தூண்டுவதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் விபரீதம் நிகழ்வதற்கு முன் உளநல உதவிகளைப் பெறுவதற்கு முன்வருவதில்லை என அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக உளநல சிகிச்சைக்கு முன்வந்து செல்வதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு வருகின்ற போதுதான், பொது மருத்துவர்கள் மற்றும் உடற்கூற்று மருத்துவர்கள் உளநல பிரச்சினைகளை இனம்கண்டு அவர்களை மனநல மருத்துவர்களிடம் காண்பிக்குமாறு அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் கூட அடுத்த கட்டத்திற்கு செல்வதில்லை. அவர்கள் சமூகத்தின் எதிர்மறையான கருதுகோள் காரணமாக கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் வைப்பதுடன் நின்றுவிடுகின்றனர். அதனால் பாதிக்கப்பட்டவரின் உளநிலை மேலும் மோசமடையவே செய்கின்றது.

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையில் உளநல சிசிச்சையாளர்கள் இருக்கின்ற அளவிற்கு உளவியலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதாவது பொது உளநலப் பணியாளர்களின் போதாமை காணப்படுவதால் ஆரம்பத்திலேயே பொது உளநலப் பிரச்சினைகளை இனம்கண்டு அதனை மோசமடையாமல் தடுப்பதற்கான உளவியலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பிரித்தானியா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே உளநலம்பற்றிய தவறான எண்ணக் கருக்கள் இன்னமும் சமூகத்தில் காணப்படுகின்றது. அப்படி இருக்கயில் மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இச்சூழலில் ‘ஜோதி’ என்ற இலவச உளவியல் ஆலோசணை அமைப்பு நண்பர் மு. கோபாலகிருஷ்ணந் என்பவரால், அவருடைய மகன் அகிலன் நினைவாக உருவாக்கப்பட்டு, தற்போது பத்தாண்டுகளுக்கு மேலாக இலவச உளவியல் ஆலோசனையை வழங்கி வருகின்றது.
பிரித்தானியாவில் 24 மணிநேர தற்கொலைத் தடுப்பு தொலைபேசிச் சேவையும் தற்கொலைத் தடுப்பு ஆலோசனைச் சேவையும் கூட உள்ளது. ஆனால் தமிழ் சமூகம் தன்னுடைய எதிர்மறையான எண்ணக்கருவை மாற்றிக் கொள்ளாதவரை இச்சேவைகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லை.

(‘அரங்கம்’ இணையத்தளத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை)

தன்னுடைய கடமைகளை உணர்ந்து ஆரோக்கியமான தளத்தில் பயணிக்கின்றதா யாழ்பாணப் பல்கலைக்கழகம்..? – அருண்மொழி

ஒரு காலகட்டத்தில் ஒட்டுமொத்தமான தமிழ்மக்களுடைய பிரச்சினைகளை தங்களுடைய பிரச்சினையாகவும் பொறுப்பாகவும் முன்னெடுத்தச்சென்ற வகையிலும் , தமிழ் மக்கள் தங்களின் அடையாளம் என்ற வகையிலாக பிரகாசித்த எத்தனையோ உயர்பதவி வகித்த கல்விமான்களையும் உருவாக்கித்தந்த மையமாகவும், இலங்கைத்தமிழர்களுடைய அடையாளமாகவும் பல தசாப்பதங்களாக திகழ்ந்து வந்த உயர்கல்விக்கூடமான யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் இன்றைய காலகட்டங்களில் தன்னுடைய அடையாளங்கள் யாவற்றையும் படிப்படியாக இழந்து சுழியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதே கசப்பான உண்மையாகும்.

உண்மையில் இதற்கான காரணங்களை என்னவென்று தேட முற்படும்போதெல்லாம் சிலருடைய பதில் அரசு திட்டமிட்டு இங்குள்ள வளங்களையும் மாணவர் ஒற்றுமையையும் அழிக்கின்றது..?  என்றோ அல்லது திட்டமிட்ட வகையிலான கலாச்சார அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றோ யாரோ ஒருவர் மீது பழி போட்டு விட்டு  கடந்து போகின்ற ஒரு போக்கு தொடர்கின்றதே தவிர, கல்வி கற்கும் மாணவர்களோ அல்லது அங்குள்ள விரிவுரையாளர்களோ யாரும் தங்கள் மீது உள்ள தவறுகளை பேசத்தயாராகவும் இல்லை.., அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையோராகவும் இல்லை.

கடந்த 08.10.2020 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் கலைப்பீட 2ம் மற்றும் 3ம் வருட மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற பிரச்சினை யாவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து அந்தப்பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்கவேண்டிய விரிவுரையாளர்கள் கூட மாணவர்களுடன் மேலும் விவாதத்தில் ஈடுபட்டு பொலிஸாரின் உதவியுடன்  பிரச்சினை தீர்க்கப்பட்டு பின்னர் விரிவுரையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு, தொடர்ந்து 21 மாணவர்களுக்கு வகுப்புத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே அங்கு கடமையில் இருந்த விரிவுரையாளர்களாக இருக்கலாம் அல்லது பிரச்சினைக்கு காரணமாக இருந்த மாணவர்களாக இருக்கலாம் யாருமே தங்களுக்கு உள்ள சமூகப்பொறுப்பு என்பது தொடர்பாக எவ்வளவு தூரம் ஆரோக்கியமான புரிதலுடன் உள்ளனர், மாணவர்களுக்கானதா பல்கலைக்கழகம்..? அல்லது விரிவுரையாளர்களுக்கானதா பல்கலைக்கழகம்..? யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் தமிழர்களுடைய அடையாளமாக இருக்கின்றதா என பல விடயங்களை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களிடையே காலாதிகாலமாக இருக்கக்கூடிய இந்த சீனியர் – ஜூனியர் இடையேயான ஒரு முறுகலின் வெளிப்பாடே இந்த பிரச்சினையும் கூட. யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட மாணவர்களை பொறுத்தவரை இன ஒடுக்குமுறை சார்ந்து தமிழர்களை சிங்களவர்கள் ஒடுக்குகிறார்கள், தமிழர்களின் அடக்கு முறைக்கான தீர்வுகள் எவை என்பன பற்றி எல்லாம் காலாதிகாலமாக பேசிக்கொண்டே வருகின்ற , அதற்காக குரல் கொடுத்து வருகின்ற ஒருபோக்கு காணப்படுகின்ற போதிலும் கூட அது எந்தளவு தூரம் அவர்களுடைய ஆழ்மனதில் இருந்து வெளியே வருகின்றது என்பது கேள்விக்குட்படுத்தப்படவேண்டியதாகின்றது. ஏனெனில் சிங்களவர்கள் தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதாக கூறிக்கொண்டிருக்கும் இதே மாணவர்கள் தான் தங்களுடைய புதுமுக சகோதரர்களை அல்லது கீழ் வகுப்பு மாணவர்களை பகிடிவதை என்ற போர்வைக்குள்ளேயோ அல்லது நான் சீனியர் எனக்கு நீ அடங்கிப்போகத்தான் வேண்டும் என்ற ஒரு விதமான கருத்துருவுக்குள்ளேயோ அடக்கியாள முற்படுகின்றனர். இலகுவாக சிந்திக்க வேண்டியது ,து தான் தான்..“ சிறிய பல்கலைக்கழக வளாகம் ,எங்களுடைய மொழியை பேசுகின்ற எங்களுடைய சகோதரர்களையே பிரிவினைகள் கூறி அடக்கியாள  முற்படும் நாம்,   அடக்கு முறையை ஏதோவொரு விதத்தில் செய்து கொண்டிருக்கும் நாம் , – எந்த கோணத்தில் பெரும்பான்மை சமூகத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல்கொடுக்க தகுதியானவர்கள் என்பதை ஒவ்வொரு மாணவனும் சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியமாகின்றது”.

மாணவர்களிடையே அதிகரித்து வரும் இந்தப்பிரச்சினைகளுக்கு விரிவுரையாளர்கள் – மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள பாரிய இடைவெளியே மிக முக்கியமான காரணம் என்பதை மறுத்து விடலாகாது. விரிவுரையாளரகள் பலரும் பாடத்திட்டத்தை கற்பிப்பது , அதற்கான பெறுமதிகளை வழங்குவது என்ற செயற்பாட்டுடன் தங்களுடைய மாணவர்ளுடனான உறவை முடித்துக்கொள்கின்ற ஒரு போக்கே தொடர்கின்றது. அதே நேரத்தில் யாழ்.பல்கலைகழக மட்டத்தில் குறிப்பிட்ட சில  விரிவுரையாளர்களைத் தவிர ஏனைய  பெரும்பாலான விரிவுரையாளர்கள் மாணவர்களுடைய சுய ஒழுக்கம் பற்றியோ, அல்லது அவர்களுடைய கல்விக்கான தேவைகள் என்ன என்பது பற்றியோ,  மாணவர்களுக்கு என்ன பிரச்சினைகள் என்பது பற்றி சிந்திக்கவோ அல்லது மாணவர்களுடன் பேசவோ தயாராகவேயில்லை. மாணவர்கள் தவறு செய்தவுடன் அவர்களுடைய வகுப்புத்தடை பற்றி மட்டும் அதிகம் அலட்டிக்கொள்ளும் பல்கலைக்கழக உயர்மட்டம் அதிலிருந்து அவர்களை மீட்பது எப்படி..? அல்லது இந்தப்பிரச்சினைகளுக்கான ஆக்கபூர்வமான முடிவுகள் எவையாவது உள்ளனவா? என சிந்திக்க தவறிவிடுகின்றனர்.

விரிவுரையாளரகள் மாணவர்களுடன் இணைந்து பயணிக்க முன்வராத வரை இந்தப்பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.  விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக கல்வித்திட்டங்களுக்கு அப்பால் மாணவர்களுடைய சமூகப்பொறுப்பை உணர வைக்க வேண்டிய மிகப்பெரும் பணியை ஆற்ற முன்வர வேண்டும்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற போர்கள், இடப்பெயர்வுகள் அவற்றின் மூலமான இழப்புக்கள் என பல விடயங்கள் காரணமாக வட -கிழக்கு தமிழர் சமூகமானது இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது  கல்வி , பொருளாதாரம், சமூக மேம்பாடு என பல்வேறுபட்ட வகையிலும் பின்தங்கி நிற்கின்ற ஒரு நிலையே காணப்படுகின்றது.  இந்த நிலையில் எங்களுடைய சமூகத்தை முன்னேற்ற கல்வி மட்டுமே இப்போதைக்கு எம்மிடம் உள்ள ஆயுதம் என்பதையும் அதனை மேலும் பட்டை தீட்டி கூர்மையாக்க வேண்டிய தேவை இந்த யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மிகப்பெரிய கடமை என்பதையும் ஒவ்வொரு பல்கலைகழக மாணவர்களும் – விரிவுரையாளர்களும்  உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

எங்களுடைய தமிழ்ச்சமூகங்களில் காலை தொடங்கி மாலை வரை கூலிவேலை செய்யும் ஒரு கூலித்தொழிலாளியிடம் சென்று ஏன் இப்படி உழைக்கின்றீர்கள் எனக் கேட்டால் “ என் புள்ளைய படிக்க வைச்சு கெம்பஸூக்கு அனுப்பிட வேணும் ” என்ற பதிலை இப்பொழுதும் கேட்க முடியும். அது போலத்தான் உயர்தரம் படிக்கின்ற மாணவர்களிடமும் இலக்கு என்ன என கேட்டால் “ படிச்சு எப்படியாச்சும் கெம்பஸ் போய்டனும்” என்கின்ற  பதிலே கிடைக்கும்.  இன்னமும் இந்த சமூகம் கல்வியை நம்பி நடைபோட்டுக்கொண்டிருக்கின்றது என்பதே இந்த பதில்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இப்படியான சமூகம் ஒன்றில் வாழும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுடைய எதிர்காலத்தலைமுறைக்கு ஆக்கபூர்வமான முன்மாதிரிகளாக திகழவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு பல்கலைக்கழக கல்வி மீதான நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கான இலவசக்கருத்தரங்குகளை செய்தல்,  தமிழர் பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை ஆவணப்படுத்தல் மற்றும் அதற்கான தீர்வுத்திட்டங்களை ஆவணங்களாக வெளிக்கொண்டுவருதல், மாணவர்களுக்கான உளப்படுத்தல் கருத்தரங்குகளை மேற்கொள்ளுதல், இறுதி வருட மாணவர் ஆய்வுகளை சமூகத்துக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தல் என பயணிக்க எத்தனையோ வழிமுடுறைகள் உள்ளன.

இவையெல்லாவற்றையும் விடுத்து விட்டு இன்னமும் பகிடிவதைகள் , சீனியர் – யூனியர் பிரச்சினைகள், தேவையற்ற சண்டைகள் என பல்கலைக்கழக மாணவர்கள் பயணிப்பது அவ்வளவு ஆரோக்கியமானது இல்லை என்பதை உணர்ந்து செயலாற்ற மாணவர்கள் முன் வரவேண்டிய அதே நேரத்தில் மாணவர்களும் தங்களுடைய பிள்ளைகள் தான் என்ற கோணத்தில் சிந்திக்க விரிவுரையாளர்களும் தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் தானே. அவர்களுடன் தோழமையாக பழகுவதாலும் பல ஆரோக்கியமான மாற்றங்களை  ஏற்படுத்தலாம் என்பதை விரிவுரையாளர்கள் உணர்ந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறாக பயணிக்க முனைகின்ற போது மட்டுமே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தனக்கான அடையாளத்தை பேணிக்கொள்ள முடியும்.

தங்களுக்குள்ள சமூகப்பொறுப்பை  உணர்ந்து கொள்ளாது,  பிரிவினைகள் பாராட்டி நீ – நான் பெரியவன் என பல்கலைக்கழக சமூத்தினர் இனியும் பயணிப்பார்களாயின் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகமானது தன்னுடைய அடையாளங்கள் அனைத்தையும் இழந்து உயர் கல்வி கற்பிக்கப்பட்டாலும்  மீண்டும் பாலர்பாடசாலையாகவே மாறிவிட வேண்டிய நிலைதான் ஏற்படும் என்பதை மாணவர்களும் – விரிவுரையாளர்களும் நினைவில் வைத்து செயலாற்ற வேண்டும்.

பரிஸ்யை உலுக்கிய தமிழ் குடும்பப் படுகொலைகள்! இரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை! ஐவர் மருத்துவமனையில்!! கொலையாளி தற்கொலை முயற்சியிலில் இருந்து தப்பி மருத்துவமனையில்!!!

பாரிஸில் தமிழர் வாழும் பகுதியான நொய்ஸ்-லி-சக் இன்ற இடத்தில் இன்று காலை நடந்த கொடிய சம்பவத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழர்கள் செறிந்த வாழ்கின்ற பொபினி பிக்காசோ ரான்ஸி ஆகிய பகுதிகளுக்கு அண்மையாக இந்த நொய்ஸ்-லி-சக் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது மைத்துனர் குடும்பத்தினரை அறையிலி வைத்து பூட்டிவிட்டு தனது மனைவியயையும் பிள்ளைகளையும் கொலையாளி படுகொலை செய்ததாகவும் அவருடைய மனைவி மற்றையவர்களைக் காப்பாற்ற போராடியதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் பற்றி பாரிஸ் பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இலங்கையயைச் சேர்ந்த நடுத்தர வயது மிக்க தந்தை ஒருவர் தனது மனைவியயையும் 5 வயது 18 மாதங்களேயான பிள்ளைகளையும் படுகொலை செய்ததுடன் அவ்வீட்டில் இருந்த மருமக்களான 5 வயது 9 வயதுப் பிள்ளைகளையும் படுகொலை செய்துள்ளார். தனது மனைவி பிள்ளைகளைப் படுகொலை செய்தவர் அதன் பின் மைத்துனரின் குடும்பத்தினரையும் தாக்கி உள்ளார். அத்தாக்குதலில் மைத்துனரின் இரு பிள்ளைகள் கொல்லப்பட்டு உள்ளனர். அதன் பின் கொலையாளி தற்கொலை செய்ய முயற்சித்து தன்னை மிகவும் காயப்படுத்திக்கொண்டுள்ளார்.
இக்கொலைகளுடன் சம்பந்தப்பட்ட நபர் பற்றி ஏற்கனவே பொலிஸில் புகார் செய்யப்பட்டும் இருந்துள்ளது. பொலிஸார் இந்நபர் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டும் இருந்தனர். ஆனால் பொலிஸார் விசாரணைகளை மெற்கொண்ட போது அது குடும்பத்தகராறு என்று அதனை பெரிதுபடுத்தாமல் குடும்பத்தினர் பின்னர் சமாளித்துவிட்டதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது. இவ்வளவு கொடூரமான முடிவுக்கு என்ன காரணம் என்பது பற்றிய முழுமையான விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. இது வெறுமனே குடும்பத் தகராறுடன் மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையா அல்லது சம்பந்தப்பட்ட நபருக்கு உளவியல் சார்ந்த பிரச்சினைகள் இருந்ததா என்பதும் இதுவரை தெரியவரவில்லை. இன்று இச்செய்தி பிரான்ஸ் தொலைக்காட்சியின் முக்கிய செய்தியாகி உள்ளது. நாளை பிரான்ஸ் தேசிய பத்திரிகைகளிலும் முதற்பக்கத்தை நிரப்பும் முக்கிய அதிர்ச்சிக்குரிய சம்பவமாக மாறியுள்ளது.
கொலையாளி மிகவும் அமைதியான சுபாவம் உடையவர் என்றும் அவர் சந்திப்பவர்களை கன்னியமாக நலம்விசாரித்துக் கொள்பவர் என்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் அப்பாவித்தனமான இம்மனிதர் எவ்வாறு இப்படியொரு கூட்டுப்படுகைலையயைச் செய்தார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அதிர்ச்சியயை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி மக்கள் இச்சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினர் யாழ் சண்டிலிப்பாயயைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் நேறைய தினம் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடித்து வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. அங்கு குழந்தையயை விற்று வாங்கும் ஒரு விடயம் இடம்பெற்றதாகவும் அதில் கணவன் வழி குடும்பமா? மனைவி வழிக் குடும்பமா என்றொரு சர்ச்சை எழுந்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
சம்பந்தப்பட்ட நபர் இக்கொடூரத்தை மேற்கொண்டிருந்த வேளை வீட்டில் யன்னல் வழியாக் ஏறிக் குதித்து தப்பி வெளியே சென்ற 13 வயதுச் சிறுவன் அருகில் இருந்த கபே ஒன்றிற்குள் சென்று உதவி கோரியதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உதவி கோரச் சென்ற சிறுவன் தங்களது மாமா பைத்தியம் பிடித்தவராக தங்களைத் தாக்குவதாக தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்த இன்னும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் பாரிஸில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. வழமையாக பாரிஸில் மாடிக்கட்டிடத் தொகுதியிலேயே தமிழ் மக்கள் பெரும்பாலும் வாழ்கின்றனர். ஆனால் இக்குடும்பத்தினர் தனி பங்களோவீட்டில் இருந்துள்ளனர். அதனால் அச்சிறுவன் யன்னல் வழியாக தப்பித்து குதித்துச் செல்லக் கூடியதாக இருந்துள்ளது.
கொலைகளை மேற்கொண்டவர் கத்தி சுத்தியல் போன்ற நாளாந்தம் வீட்டில் பாவிக்கின்ற ஆயுதங்களையே பயன்படுத்தி இக்கொடூரத்தை மேற்கொண்டுள்ளதாக பிந்திக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இக்கொலைகளை அவர் திட்டமிட்டுச் செய்தாரா? என்ன நோக்கத்திற்காகச் செய்தார்? அவருடைய மனநிலை என்ன? என்பது பற்றிய விபரங்கள் தொடரும் பொஸில் விசாரணைகளில் இருந்தே தெரியவரும்.
இதுவரை தாய்மார் தங்கள் பிள்ளைகளைக் கொலை செய்து தாங்களும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவர்கள் பிரித்தானியாவில் மூன்று சம்பவமும் கனடாவில் ஒரு சம்பவமும் அஸ்திரேலியாவில் ஒரு சம்பவமும் இடம்பெற்று இருந்தது. இச்சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் இரு குழந்தைகள் கொல்லப்பட்டு இருந்தனர்.
மாறாக இவ்வாண்டு ஏப்ரல் பிற்பகுதியில் லண்டனில் தமிழ் தந்தை இரு குழந்தைகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்து இருந்தார். நேற்றைய பாரிஸ் படுகொலையானது இவை எல்லாவற்றையும் காட்டிலும் மிக மோசமானதாக அமைந்துள்ளது. இச்சம்பவத்தில் கொலையாளி தாயயைக் கொன்றதுடன் மைத்துனர் குடும்பத்தையும் கொல்ல முயற்சித்துள்ளார். மருமக்களையும் கொன்றுள்ளார். தமிழர்களுடைய அண்மைய வரலாற்றில் இடம்பெற்ற மிகமோசமான கொடூரமான கூட்டுப்படுகொலைச் சம்பவம் இதுவாக அமைந்துள்ளது.
இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலைகள் மற்றும் இவ்வாறான கொடூரமான கொலைகள் சகஜமாகி வருகின்றது. முன்னைய சம்பவங்களில் கொலையாளிகள் இவ்வாறான ஒரு கொடூரத்திற்கு துணிவதற்கான எவ்வித அறிகுறியயையும் வழங்கவில்லை. தங்கள் பிள்ளைகளை காப்பாற்றுவதாக எண்ணிய மனநிலையுடனேயே கொலைகளில் ஈடுபட்டு தற்கொலை செய்யவும் முயற்சித்தனர். ஆனால் பரிஸ் சம்பவத்தில் கொலையாளி சில அறிகுறிகளை காட்டி இருக்கலாம் அவர் ஒரு காரணத்தோடு செயற்பட்டாரா என்ற எண்ணங்கள் எழுகின்றது.
தமிழ் சமூகம் தன்னுடைய உளவியல் மனநிலை பற்றி நிறையவே ஆராய்ந்து அறிய வேண்டியுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தின் தொடரும் பௌத்தமயமாக்கலும் – வெடுக்குநாறிமலை தமிழர் பல தலைமுறை வழிபாட்டுக்கான தடையும் !

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இக்கோவில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு-பாலமோட்டை கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலையின் உச்சியில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த மலையின் வரலாறானது பல வரலாற்று சிறப்புகளைக்கொண்டு காணப்படுகின்றது.

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் - Nallurlk

300 மீட்டர் உயரமான வெடுக்குநாறிமலை அடிவராத்தில் கேணி, தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் என்பன அதன் வரலாற்றைக் கூறுகின்றது. இம்மலையின் உச்சியில் ஆதிலிங்கேசுவரர் என்ற சிவனுடைய இலிங்கம் அமைந்துள்ளது.கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையினருக்கு மேலாக இப்பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டில் இலங்கை தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் இம்மலைக்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ளத் தடை வித்தனர். ஆனாலும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பினை அடுத்து, இத்தடையினை தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேணி காவல்துறையினர் தற்காலிகமாக நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்கொள்ள அனுமதித்தனர். ஆனாலும் கோவிலைப் புனரமைக்கவோ அல்லது புதிய கட்டடங்களை அமைக்கவோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீண்டகாலமாக வழிபடப்பட்டுவருகின்ற எமது  வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 17ம்திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்ற நிலையில்  அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்த நிலையில் பொலிஸார் அதனை தடுத்து நிறுத்துவதற்காக கடும் பிரயத்தனங்களை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது.
ஆலய திருவிழாவினை தடுத்து நிறுத்த கோரி அவசர அவசரமாக தொல்லியல் திணைக்களத்தினால் நெடுங்கேணி பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் ஆலய நிர்வாகத்தினரை அழைத்த பொலிஸார் தொல்லியல் திணைக்களம் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை காண்பித்துள்ளனர். இரண்டு பக்கங்கள் நிரம்பிய அந்தக்கடிதம்  முற்று முழுதாக சிங்கள மொழியில் எழுதப்பட்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த கடிதத்தை காண்பித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அதில் சில விடயங்களை குறிப்பிட்டு தொல்லியல் சார்ந்த இடங்களை சிரமதானம் செய்ய முடியாது எனவும் அது தொல்லியலுக்குறிய இடம் என்றும் அங்கு செல்வதோ திருவிழா செய்வதோ தடை செய்யுமாறு குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக எமக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கு விளக்கமளித்த ஆலய நிர்வாகத்தினர் எமக்கான வழக்கு நீதிமன்றத்தில் சென்றுகொண்டிருக்கின்றது.எம்மை ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை செய்யுமாறு குறிப்பட்டிப்பதோடு அபிவிருத்திகளை மாத்திரமே செய்ய முடியாது என குறிப்பட்டு இருப்பதாக வழக்கு தொடர்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும் இதனை ஏற்கமறுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி தொல்லியல் திணைக்களம் கூறிய கூற்றுக்கு இணங்கியே செயற்பட முடியும் என்றும் ஆலய உற்சவத்தினை நிறுத்துமாறு நாளையதினம் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலய நிர்வாகத்தினரை  நீதிமன்றம் வருகைதருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மொழிசார்ந்த நம்முடைய அடையாளங்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமானதோ ..?அதை விட முக்கியமானது நம்முடைய கலாச்சாரம் சார்ந்த விடயங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிப்பது. அதற்கானவையே இந்த திருவிழாக்களும் பண்பாடு சார் நிகழ்வுகளும்.
வெடுக்குநாறிமலை சிவன் ஆலயம் தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள் - Tamilwin
அண்மையில் கிழக்கு தொல்லியல் செயலணியில் உள்ள ஒரு பிக்கு ஒருவர் திருக்கோணேஸ்வர ஆலயம் ஒரு விகாரை என குறிப்பிட்டு அதற்கு பௌத்த மயமாக்கல் ரீதியான விளக்கம் ஒன்றை வழங்கியிருந்தார். இது போன்றதான ஒரு நிலையே வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கும் ஏற்பட்டுள்ளது. வெடுக்குநாறி மலை ஆலய வழிபாடுகளை பொலிஸார் தடுப்பது இது முதல்முறையல்ல. கடந்த காலங்களிலும் இது போன்றதான ஒரு கெடுபிடிக்குள்ளேயே இங்கு வழிபாடுகளெ் மேற்கொள்ளப்பட்டன.
மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது ஒரு மலைக்கோவில் இதனாலென்ன வந்து விடப்போகின்றது எனத்தோன்றும் உண்மை நிலை அவ்வாறானது இல்லை. எங்களுடைய கண்ணுக்குத் தெரியாமல் படிப்படியாக தமிழர்களுடைய வழிபாட்டு தலங்கள் பௌத்தமயமாக்கப்பட்டவண்ணமுள்ளன. அண்மையில் கூட முல்லைத்தீவில் நீராவியடி பிள்ளளையார் கோவிலில் கூட இது போன்றதான ஒரு பிரச்சினை அரங்கேறி இறுதியில் பௌத்தபிக்கு ஒருவருடைய உடல் அப்பகுதியில் மக்களுடைய எதிர்ப்பையும் மீறி தகனம் செய்யப்பட்டிருந்தது. அதனுடைய இன்னுமொரு பகுதியாகவே வெடுக்குநாறி மலையை பௌத்தமயபடுத்தும் முயற்சியை தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
வெடுக்குநாறி மலை ஆலய வழிபாடுகள் தொடர்ந்தும் அப்பகுதியில் வாழும் பல தலைமுறையினரால் வழிபடப்பட்டு வருகின்ற நிலையில் அதனை தடுப்பது அல்லது மக்களை அங்கு சென்று வழிபாடியற்ற தடை செய்வது எவ்வளவு வக்கிரமான ஒரு மனோநிலை. ருவன்வெலிசாய 2000 வருட பழமையான ஒரு விகாரை . அங்கு இப்போதும் வழிபாடுகள் அதே புனிதத்தன்மையுடன் இடம்பெறுகின்றன. அதே போன்றதான ஒரு வழிபாட்டு மையமே வெடுக்குநாறி மலையும் அதற்கு மட்டும் ஏன் இத்தனை
கட்டுப்பாடுகள் ..? தொல்லியல்திணைக்களம் என்பது ஒரு நாட்டினுடைய எல்லா பிரஜைகளுக்குமானதாக இருக்க வேண்மே தவிர ஒரு தரப்பினருடைய வரலாற்றை அழித்து இன்னொரு தரப்பினருடைய வரலாற்றை பதிய வைப்பதாக இருக்க கூடாது. இத்தனைக்கும் வெடுக்குநாரிமலை ஆலயபகுதி தொல்லியல் பகுதி என்பதற்கான எந்த வர்த்தமானி அறிவிப்புமே வெளியாகியிராத சூழலில் இந்த செயல் எத்தனை அபத்தமானது.
ஊடகங்களும் பெரிதாக இது பற்றி அலட்டிக்கொள்வதில்லை. நகர்ப்புறங்களில் இடம்பெறும் பிரச்சினைகளுக்கும் சொந்த அரசியலுக்காகவும் அதிக பக்கங்களையும் நேரத்தையும் ஒதுக்கும் ஊடகங்கள் கிராமப்புறம்தானே என வெடுக்குநாரியை ஒதுக்கிவிட்டனர் போலும். பாராளுமன்ற அமர்வுகளில் தேவைக்கில்லாத விடயங்களை பற்றி அலட்டிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகளுடைய பார்வை கூட வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் மேல் பட்டதில்லை.
வெடுக்குநாறி தனிப்பட்டு அப்பகுதி மக்களுடைய பிரச்சினை மட்டுமேயில்லை. வெடுக்குநாரி தொல்லியல்துறையினரிடம் பறிபோகுமாயின் அழியப்போவது ஆலய சூழல் மட்டுமல்ல. எம்முடைய 2000 ஆண்டுகால வரலாற்று நிலைப்பும் தான். ஊடகங்களுடைய பார்வையும் அரசியல் தலைவர்களுடைய பார்வையும் படாத இடமாகவும் ஒதுக்குப்புறமாக நம்மால் கவனிப்பாரற்றும் வெடுக்குநாறி கிடப்பதால் தான் இலகுவாக அதனை கையகப்படுத்த தொல்லியல்துறை முயற்சிக்கின்றது.
தமிழ் ஊடகங்கள் விரைந்து இந்த செய்தியை எல்லா தரப்பினருக்கும் கொண்டு செல்ல முயற்சிப்பதுடன் வெடுக்குநாறி வரலாற்றை ஆவணப்படுத்தவும் முன்வரவேண்டும். மேலும் இந்த விடயம் தொடர்பில் தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் அரநியல்தலைமைகளும் அதிக கவனம் செலுத்தி விரைந்து இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற பல வெடுக்குநாரிமலைகளை தொல்லியல் திணைக்களத்திடம் இருந்து பாதுகாக்க முடியும்.

இலங்கை தமிழர்களின் எதிர்கால நிலைத்திருப்பில் அரசியல் சாராத பொதுக்கட்டமைப்பு ஒன்றினுடைய தேவையும் அவசியமும்….! – அருண்மொழி

வடக்கு – கிழக்கு சமூக அக்கறையுடைய இளைஞர்களிடையேயும் அரசியல் விமர்சகர்களிடையேயும்  பொதுக்கட்டமைப்பு ஒன்றின் தேவை பற்றிய விடயங்கள் ஆழமான  பேசுபொருளாக மாறி வருகின்ற இந்த நிலையில் தேசம் நெற் இன் இந்தக்கட்டுரை பொதுக்கட்டமைப்பின் தேவை பற்றியும் அதன் செயல் கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் பேசுகின்றது.

முதலில் இந்த பொதுக்கட்டமைப்பு ஏன் தேவை..? என்பது பற்றி நோக்குதல் அவசியமாகின்றது.

இவ்வாறான பொதுக்கட்டமைப்பு ஒன்றின் உருவாக்கத்துக்கு மிக அவசியம் ஏற்பட்ட பின்னணியில் இலங்கை வாழ் தமிழ் மக்களை இணைக்ககூடிய ஒரு மையப்புள்ளியாக ஒரு பொது அமைப்பு ஒன்றின் தேவை அதிகமாக கடந்த காலங்களில் உணரப்பட்டமையேயாகும். உலகின் ஒவ்வொரு அடக்கப்பட்ட சமூகங்களிலும் அரசியல் சார்ந்த அமைப்புக்களே அரசிற்கும் அடக்கப்பட்ட சமூகங்களுக்குமிடையான தொடர்பாளராக செயற்பட்டு, மக்களினுடைய உரிமைகளை மையப்படுத்திய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியோராக காணப்படல்  வேண்டும். ஆனால் இலங்கை தமிழர் அரசியலை பொறுத்த வரை அப்படியான ஒரு அமைப்பு இல்லை என்பதே உண்மை.  தமிழர் மத்தியில் பல அமைப்புக்கள் அரசியல் சார்ந்து உருவாகியுள்ளமையால் மக்கள் எந்த அமைப்பின் பக்கம் நிற்பது என்ற குழப்பமான ஒரு சூழலே நிலவுகின்றது. கடந்த காலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஓரளவேனும் பலமான ஒரு அமைப்பாக காணப்பட்டமையால் மக்களுடைய வாக்குகள் முதல் ஆதரவு என அனைத்துமே அதனை மையப்படுத்தியதாக காணப்பட்டடது. எனினும் கூட்டமைப்பு தன்னுடைய அரசியலை மக்கள் நலன்சார்ந்து பெரியளவிற்கு நகர்த்தியிராத நிலையில் மக்கள் மாற்று அணிகளுக்கு வாக்களித்து பாராளுமன்றில் தமிழரின் வாக்கு பலத்தை சிதைத்துள்ளதுடன் சிறுபான்மை இனங்களின் ஆதரவு இல்லாமலேயே ஒரு கட்சி பெரும்பான்மையுடன் அரசமைக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கியமான காரணத்தை நாம் சிந்தித்தித்து பார்க்க வேண்டியோராகவுள்ளோம்.

தமிழ் மக்கள் பேரவையுடைய தோல்வியும் கூட பொதுக்கட்டமைப்புக்கான வெளி ஒன்றினை உருவாக்கியுள்ளது. முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து விலகியதை தொடர்ந்து வடக்கு – கிழக்கின் புத்தி ஜீவிகளையும் இளைஞர்களையும் இணைத்து பாரிய கொள்கைப் பிரகடனங்களோடு உருவாக்கப்பட்ட அந்த அமைப்பானது தன்னுடைய அரசியலுக்காக மக்களுடைய எதிர்பார்ப்பை சிதைத்து எஞ்சி நின்ற நம்பிக்கையையும் தவிடுபொடியாக்கியது. இது பொதுக்கட்டமைப்பு பற்றி அதிக இளைஞர்கள் சிந்திக்க பயப்படுகின்ற ஒரு சூழலையும் உருவாக்கி விட்டது. இந்த நிலையிலேயே பொதுக்கட்டமைப்பு பற்றி சிந்திக்க வேண்டியோராக நாமுள்ளோம்.

தமிழர் சமூகத்தினுடைய பின்தங்கிய நிலையை அடிப்படையில் இருந்து கட்டமைக்க பொதுக்கட்டமைப்பு ஒன்றினுடைய தேவை அவசியமாகின்றது. கல்வி சார்ந்து தமிழர் சமூகம் அடக்கப்பட்டமை கூட கடந்தகால போராட்டங்களுக்கான மையமாகும். உண்மையிலேயே அந்த அடக்கு முறையில் நாம் தோற்றுப்போய் பெரும்பான்மை சமூகம் வென்றுவிட்டது என்பதே உண்மை. நம்முடைய தமிழர் சமூக கல்வி நிலை அண்மைக்காலங்களில் அதிகம் பின்தங்கியுள்ளது. மாணவர்களிடம் கல்விக்கு தடையாக போதைப் பொருள்பாவனை,  வறுமை , சமூக ஏற்றத்தாழ்வுகள் என பல காரணங்கள் துணை போகின்ற நிலையில் ஆக்கபூர்வமான சமூகம் ஒன்றை கட்டி எழுப்புவது தொடர்பாக கவனம் செலுத்தக்கூடிய பொது அமைப்பு ஒன்று இன்றியமையாததாகிறது.

அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்காக பிரச்சினைகள் ஏற்படும் போது எதிர்வினையாற்றக் கூடியோராகவோ..? அல்லது மக்களுடைய மனதை புரிந்து கொண்டோராகவோ..? இல்லை. மக்களுடைய நிலையை புரிந்து அதனை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக அரசியல் தலைவர்கள் இல்லை. நம்முடைய அரசியல் தலைவர்கள் தங்களுள் சண்டையிட்டு கொள்வதிலும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதிலும் கவனம் செலுத்துகின்றனரே தவிர மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கவில்லை என்பதே நிதர்சனமும் கூட. இந்த நிலையிலேயே மக்களுக்கான அரசியல் தலைவர்களை உருவாக்கவும் அடையாளம் காட்டவும் இந்த பொதுக்கட்டமைப்பு அவசியமாகிறது.

தமிழர் சமூகங்களிடையே பொருளாதார அபிவிருத்தியை உருவாக்க அரசியல் தலைமைகள் தவறிய நிலையில் பொருளாதார மேம்பாட்டை மையப்படுத்தி ஒரு பொது அமைப்பின் தேவை அவசியமாகின்றது. சொல்லப்போனால் மக்களுடைய வாழ்வை அபிவிருத்திப்பாதையில் கொண்டு செல்வோம் எனக்கூறும் தேர்தல்கால  அரசியல்வாதிகளுடைய வாழ்க்கையிலும் வாகனங்களிலும் மட்டுமே அபிவிருத்தி தென்படுகிறதே தவிர வட – கிழக்கில் ஏழை எந்த அபிவிருத்தியும் இல்லாமலே இருக்கின்றான். மேலும் ஆளும் கட்சியுடன் இணைந்து செயலாற்றும் அரசியல்வாதிகள்  பொருளாதார அபிவிருத்தி என்னும் பெயரில் உள்ள  வேலைவாய்ப்பு வெற்றிடங்களை நிரப்புகின்றனரே தவிர புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கவோ,  தொழில் முயற்சிகளை தமிழர் பகுதிகளில் உருவாக்கவோ முனைவதாக தெரியவில்லை. இதனாலேயே தமிழர் சமூகம் பொருளாதார நிலையிலும் பின்நிற்க வேண்டியுள்ளது. இந்தநிலையிலேயே தொழில்வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய அமைப்பு ஒன்றினுடைய தேவை அவசியமாகின்றது.

இதே வேளை இனம் எனும் போது தமிழர் என நம்மை நாமே குறிப்பிட்டாலும் கூட பிரதேசவாதத்தால் வடக்கு தமிழர்,  கிழக்கு தமிழர்,  மலையகத் தமிழர் எனவும் [அதற்குள்ளும் பல உபபிரதேச பிரிவுகள் உள்ளன] சாதிய கட்டமைப்புக்களாலும் சமயரீதியாகவும் பல கூறாக பிரிந்துள்ள தமிழர்களை ஒன்றிணைத்து பயணிக்க வேண்டிய ஒரு பொதுக்கட்டமைப்பு தேவையாக உள்ளது.

விமர்சனங்கள் தாண்டி 2009 க்கு முன்பு வரை மக்களை வழிப்படுத்த காணப்பட்ட ஒரு அமைப்பினுடைய தேவையை இன்று உணரக்கூடியதாக உள்ளது.

இந்தநிலையில் மக்களை வழிப்படுத்தவும் அரசியல் சார்ந்து நம்முடைய கருத்துக்களை ஒரு சேர பதிவு செய்யவும் அரசியலை தீர்மானிக்கூடிய எனினும் அரசியல் பின்னணியற்ற ஒரு அமைப்பினுடைய தேவை காலத்தின் கட்டாயமாகியுள்ளது. இங்கு பொதுக்கட்டமைப்பு என்னும் போது ஆயுதக்கலாச்சாரம் பற்றி சிந்திப்பதல்ல. ஆக்கபூர்வமான நகர்வுகளூடாக நம்முடைய உரிமைகளையும் நிலைப்பையும் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யபப்ட்டுள்ள அரசிடம்  இருந்து பாதுகாப்பதும் பெற்றுக்கொள்வதும் தமிழர் பகுதிகளின் சமூக,  பொருளாதார,  கல்வி, கலாச்சார  நிலைகளை மேம்படுத்துவதுமேயாகும்.

பொதுக்கட்டமைப்பின் செயல் பயணம் எப்படி இருக்க வேண்டும்..?

இந்த பொதுக்கட்டமைப்பினுடைய எழுச்சியானது திரையில் நாம் காண்பது போல ஒரு சில உணர்ச்சி பாடல்களுடன் முழுமை பெற மாட்டாது. அது தன்னுடைய தளத்தை ஒவ்வொரு கிராம மட்டங்களிலும் இருந்து தொடங்க வேண்டும். கிராமங்கள் ஒவ்வொன்றிலும் ஆக்கபூர்வமாக சமூகத்துக்காக சிந்திக்க கூடிய சரியான நபர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவர்கள் மூலமாக அந்த கிராம முன்னேற்ற நடவடிக்கைகளை படிப்படியாக பொதுக்கட்டமைப்பு நகர்த்த வேண்டும். கிராமங்களின் இளைஞர் அமைப்புக்கள் / விளையாட்டுக் கழகங்களை கொண்டு அவர்களுடைய சமூகத்தின் தேவையை அவர்ககளே பொறுப்பெடுக்க கூடிய ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த பொதுக்கட்டமைப்பு வடக்கு – கிழக்கு – மலையகத்தின் கிராமங்களை மையப்படுத்தியதாக நகர ஆரம்பிக்க வேண்டும். இதுவே அமைப்பினுடைய முனைப்பான வளர்ச்சிக்கான அடிப்படைகளை ஏற்படுத்தும்.

பொதுக்கட்டமைப்பின் நகர்வுகள் ஏழ்மையை மாற்றக் கூடியதாக நகர வேண்டும். புலம்பெயர் தேசங்களிலிருந்து அனுப்பப்படும் பணம் முறையாக எல்லோரிடமும் போய் சேர்வதில்லை. அத்துடன் அந்த பணம் பசியோடு இருப்பவனுக்கு ஒரு வார காலமோ அல்லது குறிப்பிட்ட காலத்துக்கான உணவுத்தேவையை பூர்த்தி செய்யுமே தவிர பணம் முடிய அந்த குடும்பத்தின் நிலை…? எனவே புலம்பெயர் அமைப்புக்களுடாக கைமாற்றப்படுகின்ற பணத்தை முறையாக பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பசியோடு இருப்பவனுக்கு நிரந்தமான சுயதொழில் ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்க அந்தப்பணத்தை பயன்படுத்தல் ஆரோக்கியமானது. மேலும் பண்ணைகள் அமைத்தல்,  தள்ளு வண்டிக்கடைகள் ஏற்படுத்திக்கொடுத்தல், தொழில் உபகரண வசதிகளை வழங்குதல், இப்படியாக பொருளாதார மாற்றங்களை அடிப்படையில் இருந்து ஏற்படுத்துவதுடன் தன்னம்பிக்கையாளர்களை உருவாக்குதும் வறுமை ஒழிப்பின் ஒரு படியே..!

இவ்வளவு பெரிய இழப்புக்களின் பின்னணியில் நம்முடைய கல்விக்கு பெரிய பங்குண்டு. நம்முடைய அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக வளப்படுத்துவது காலத்தின் அதிமுக்கிய தேவையாகவுள்ளது. போதைப்பொருள் பாவனை, வாள் வெட்டுக் கலாச்சார மோகம், என அடுத்த தலைமுறை தன்னுடைய கல்வியை நம்கண்முன்னேயே தொலைத்துக்கொண்டு நிற்கின்றது. நெல்சன் மண்டேலா கூறுவது போல ஒரு சமூகம் தன்னை மாற்றிக்கொள்ளவோ அல்லது முன்னேறவோ  நினைக்குமிடத்து கல்வி மட்டுமே தெளிவான ஒரு ஆயுதம் என கூறுகின்றார்.  எனவே எல்லா மாணவர்களுக்கும் சரியான முறையான ஆரோக்கியமான கல்வி கிடைக்க வகை செய்தல் அவசியமாகின்றது. மாணவர்களிடையே வாசிப்பு பழக்கதைத்தை மீள கட்டியெழுப்பல்,  நம்முடைய வரலாற்றை ஆரோக்கியமாக கடத்துதல்,  மாணவர் தொழில்வழிகாட்டல் கருத்தரங்குகளை மேற்கொள்ளல், பாடசாலை மட்டங்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வான நிலையை இல்லாதாக்க செயற்படல்,  மாணவர்களின் கல்விக்கான வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுதல் என பல நடவடிக்கைகளை தொடர்ச்சியாகவும் மாணவர்களோடு மாணவர்களாகவும் மேற்கொள்கின்ற பட்சத்தில் ஆரோக்கியமான அடுத்ததலைமுறையை உருவாக்க முடியும்.

மிக முக்கியமாக உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பு தனித்து ஒரு மாவட்டத்தை மட்டுமே மையப்படுத்தி இயங்காது எல்லா பகுதி தமிழர்களையுப் மையப்படுத்தி இயங்குவதே பொதுக்கட்டமைப்பின் வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவு கிடைக்கவும் இலகுவாக வழி செய்யும். இதை விடுத்து யாழ்ப்பாண பகுதியை மட்டுமே மையப்படுத்தி பொதுக்கட்டமைப்பு நகருமாயின் அது வீண் முயற்சியே..!

ஆக்கபூர்வமான வகையில் எங்களுடைய தேவைகளையும் வலிகளையும் பெரும்பான்மை சமூகத்திடம் முன்வைக்க வேண்டிய பொறுப்பினை பொதுக்கட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள், மாணவர் படுகொலை நிகழ்வுகள் என்பன பற்றிய நிகழ்வுகளை ஆக்கபூர்வமாக எல்லா தரப்பினருக்கும் தெரியப்படுத்தல் வேண்டும். அதாவது எங்களுடைய வலிகளையும் தேவையையும் அதன் நியாயப்பாட்டையும் பெரும்பான்மை சமூகத்துக்கு எடுத்துக்கூற கூடிய ஒரு ஊடகமாக இந்த பொதுக்கட்டமைப்பு செயற்பட வேண்டும்.

இவை தவிர பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்புக்கான உதவிகளை வழங்குதல்,  நுண்நிதி உள்ளிட்ட தொடரும் சமூக பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடையே பேசுதல், அழிந்து வரும் கலைகளையும் கடந்த கால வரலாறுகளையும் ஆவணப்படுத்துதலும் மீள் ஆக்கப்படுத்தலும் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்ற வகையிலாக சமூகப்பபொறுப்புடன் கூடிய ஒரு பொதுக்கட்டமைப்பே இன்றைய காலத்தின் தேவையாகும்.

இந்த வகையிலாக எல்லா பகுதி தமிழர்களையும் ஒரே கோர்வையாக இணைத்துக்கொண்டு செல்லக்கூடியதான நெகிழ்திறன் உள்ள ஒரு அமைப்பாகவும், தமிழர் சமூகத்தின்  அடிப்படையில் இருந்து ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களூடாக தன்னுடைய எதிர்கால தூரநோக்குககளையும் இலக்குகளையும் கட்டமைத்து பயணிக்க கூடிய ஒரு அமைப்பாகவும் இருக்கின்ற பட்சத்தில் மட்டுமே இந்த அமைப்பினுடைய பயணத்தின் மீது முழுமையான மக்கள் நம்பிக்கையும் திருப்பப்பட்டு அரசியல் சார்பற்ற ஆனால் அரசியலை தீர்மானிக்க கூடிய அமைப்பாக அது வளர்ச்சி கண்டு தமிழ் மக்களுக்கான அமைப்பாக மிளிர முடியும். இந்த அமைப்பினுடைய வெற்றிக்காக எத்தனை வருடங்களும் எடுக்கலாம். ஆனால் அமைப்பினுடைய வெற்றியின் இறுதியில் இந்த பொதுக்கட்டமைப்பு மக்களிடம் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையின் அளவே மதிப்பீடாக காணப்படும். அந்த மக்கள் நம்பிக்கையே பொதுக்கட்டமைப்பு கைகாட்டும் வழி சரியெனும் நிலைக்கு மக்களை கொண்டு செல்ல அத்தியாவசியமானது.

பொறுத்திருந்து பார்க்கலாம் பொதுக்கட்டமைப்பு என்ற விடயத்தை இலங்கைத்தமிழ் இளைஞர்களும் புத்திஜீவிகளும் அரசியாலாளர்களும் எவ்வாறு கையாளப்போகின்றனர் என்று……..!

யாழ் மேலாதிக்கம் என்பது என்ன? : எம் ஆர் ஸ்டாலின்

யாழ் -மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது எப்படி சிங்கள மக்களை குறிக்காமல் அந்த சிங்கள சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகள் கொண்டிருக்கின்ற இனமேலாதிக்க கருத்தியலை குறிக்கின்றதோ அதேபோலத்தான் இக்கருத்தியலை நாம் புரிந்துகொள்ள முயலவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது சிங்கள மக்களை குறிக்கவில்லை. சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிரானதும் இல்லை. அதேபோலத்தான் யாழ் மேலாதிக்கம் என்பதையும் அதற்கெதிரான கருத்துப்பரிமாறல்கள் என்பதையும் யாழ்ப்பாண மக்களுக்கு எதிரானதாக கொச்சையாக புரிந்துகொள்ளக்கூடாது.

ஆனால் துரதிஸ்ட வசமாக இந்த புரிதலில் சிலருக்கு சிக்கல் இருக்கின்றது மேலும் சிலர் புரிந்து கொள்ளாதவாறு திரித்து கிழக்கில் இருந்து யாழ்-மேலாதிக்கம் குறித்து கருத்திடுவோர் மீது பிரதேசவாத துரோக முத்திரை குத்த முனைகின்ற போக்கும் அதிகரித்து வருகின்றது.

தமிழ் தேசியமென்பது பரந்துபட்ட தமிழ் மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளில் இருந்து உருவாகிய கருத்துருவமா? அன்றில் தமிழ் சமூகத்தில் ஆதிக்க சக்திகளாக அகல கால்பதித்து நின்ற யாழ்-மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்தே அச்சிந்தனையுருவாக்கம் நிகழ்ந்ததா? இக்கேள்விகளுக்கான விடைகளை நாம் மேலோட்டமாக பார்ப்போம். அதனுடாகவே தமிழ் தேசியம் என்பதையும் யாழ் மேலாதிக்கம் என்பதையும் விளங்கிக்கொள்ளலாம்.

ஒரு சமூகமோ அல்லது ஒரு இனமோ அதன் அசைவியக்கம் சார்ந்து தனக்கான ஒரு கருத்தியலுடனேயே பயணிப்பது வழமையாகும். அந்த கருத்தியலின் உருவாக்கத்தில் அச்சமூகத்தின் சமூக பொருளாதார பண்பாட்டம்சங்களே நிச்சயம் தாக்கம் செலுத்தும். எனவே அந்த சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினரின் செல்வாக்கானது அச்சமூகத்தினது கருத்தியல் உருவாக்கத்தில் பிரதான பங்கெடுக்கும்.

அந்த வகையில் தமிழ் தேசியத்தின் வேர்களாகவும் பிதாமகர்களாகவும் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதையிட்டு ஆராய்வோமானால் பொன் இராமநாதன், ஜ ஜி பொன்னம்பலம், சுந்தரலிங்கம், எஸ் ஜே வி செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரை தவிக்கமுடியாது. இவர்களெல்லாம் தனவந்தர்களாகவும், பிற்போக்குவாதிகளாகவும், ஏழைகளை சுரண்டி பிழைப்போராகவும், ஆதிக்கசாதி வெறியர்களாகவும், ஆணாதிக்க மற்றும் பிரதேசவாதிகளாகவும், ஏகாதிபத்தியத்தின் முகவர்களாகவும் இருந்தார்கள் என்பது நமக்கேயுரித்தான வேதனையான வரலாறு ஆகும். இந்த பின்னணியில் இருந்துதான் தமிழ் தேசியமென்பதன் சிந்தனை மற்றும் கருத்தியல் உருவாக்கத்தில் தாக்கம் செலுத்திய வர்க்கத்தினரையும் இத்தமிழ் தேசியமென்பதன் ரிஷிமூலம் என்ன என்பதையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

1920களில் பள்ளிக்கூடங்களிலே அனைத்து மாணவர்களுக்கும் சம ஆசனமும் சமபந்தி போசனமும் வழங்கப்படக்கூடாதென்றும் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டுமென்றும் பிரித்தானிய தேசாதிபதியிடம் சென்று தலைகீழாக நின்று வாதாடியவர் பொன்.இராமநாதன் ஆகும்.

அதேபோல எல்லோருக்கும் வாக்குரிமை வழங்க கூடாது ‘வேளாளருக்கும் தனவந்தருக்கும்’ மட்டுமே வாக்குரிமை வேண்டும் என்றும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டால் அது கும்பலாட்சிக்கு வழிகோலும் என்று டொனமூர் ஆணைக்குழு முன் சென்று சாட்சியம் சொன்னவரும் இந்த பொன்.இராமநாதன்தான்.

1944ஆம் ஆண்டு இலவச கல்வி மசோதா முன்வைக்கப்பட்டபோது
ஜி.ஜி பொன்னம்பலம் சிறிபத்மநாதன், மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் சட்டசபையிலே ஒருமித்து நின்று அந்த மசோதாவை எதிர்த்தார்கள்.

அதுமட்டுமல்ல ஆங்கிலத்தை அகற்றி சுயபாஷைகளை அரச கரும மொழியாக்குவோம் என்று தென்னிலங்கையில் சுயபாஷை இயக்கம் உருவானபோது அதனை கடுமையாக எதிர்த்து ‘சிங்களமும் வேண்டாம் தமிழும் வேண்டாம்’ என்று அரச கரும மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டுமென்று காலனித்துவத்தின் முகவர்களாக வாதங்களை முன்வைத்தவர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தலைமைகளேயாகும்.

1947ல் பத்து லட்ஷம் மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க காரணமான பிரசா உரிமை சட்டத்தை ஆதரித்து யுஎன்பியின் மக்கள் விரோத ஆட்சிக்கு துணைபோனவரும் இந்த பொன்னம்பலம்தான்.

இன்னுமொருவர் தமிழ்த்தேசியத்தின் தத்துவவாதி என்றும் ‘அடங்கா தமிழன்’ என்கின்ற ‘பெருமைமிகு’ அடைமொழியாலும் போற்றப்படுபவர் சுந்தரலிங்கம். அந்த மனிதனைப்போல் சாதிவெறியன் இனியொருபோதும் பிறக்க முடியாது.

1957 ல் நெற்காணி சட்டம் கொண்டுவரப்பட்டபோது செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினர் அதை எதிர்த்தனர்.

ஏழை எளிய மாணவர்களுக்கு சமபந்தி போசனத்தையும் சம ஆசனத்தையும் மறுத்தவர்கள், இலவச கல்வி கூடாது ‘கண்ட கண்டவர்களுக்கு’ கல்வி எதற்கு என்று குவித்திரிந்தவர்கள், வாக்குரிமையா ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கூடவே கூடாது என்று கொக்கரித்தவர்கள், சுயபாஷையா? எதற்கு? ஆங்கிலத்தை அகற்றத்தேவையில்லை என்று தமது சொந்த நலன்களில் நின்று அடித்து பேசியவர்கள், மலையக மக்களை நிர்கதிக்குள்ளாக்கியவர்கள், ஏழைமக்களுக்கு காணிகளை வழங்குவதை எதிர்த்தவர்கள் எல்லோரதும் அரசியல் பரம்பரியமே இன்று வரை தொடருகின்ற தமிழ் தேசிய அரசியலாய் இருக்கின்றது.

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களையும் மசோதாக்களையும் எதிர்த்தவர்கள், பிரித்தானிய-சிங்கள ஆளும் வர்க்கத்தோடு இணைந்து கொண்டு ஏழை மக்களை ஒடுக்கி பிரபுத்துவ அரசியல் செய்தவர்கள் யாரோ அவர்களே துரதிஸ்ட வசமாக எமக்கு தேசியத்தை போதித்தனர்.

1947 ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது ‘அங்கே ஜின்னா பாகிஸ்தானை பிரித்தார். இங்கே பொன்னா தமிழீழத்தை பிரித்து எடுப்பேன்’ என்று பேசித்திரிந்தார் பொன்னம்பலம். பாராளுமன்ற முறைமை அறிமுகமானபோது தேர்தல் அரசியலுக்கான இனவாத அணிதிரட்டல் ஒன்றை நோக்கியே அவரது இந்த பேச்சுக்கள் இருந்தன.

1956ல் அரச கருமமொழிச்சட்டம் வந்தபோது பிரித்தானியரின் அருவருடிகளாக ஆங்கிலம் கற்று அரச நிர்வாக அதிகாரிகளாக இலங்கையெங்கும் பரவியிருந்த யாழ்ப்பாணத்து அதிகார வர்க்கம் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டது.

1971ல் கல்வி தரப்படுத்தல் வந்தபோதும் இந்த அதிகார வர்க்கத்தின் வாரிசுகளே பாதிப்படைந்தனர். இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளவே ‘தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது ஒட்டுமொத்த தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள்’ என்று ஒப்பாரிவைத்தனர் இந்த யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தினர்.

ஆனால் அதற்கு மாறாக கல்வித்தரப்படுத்தல் என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய ஆறு மாவட்ட மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாய் அமைந்திருந்தன. இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குரிய இட ஒதுக்கீட்டுக்கு சமனான அந்த சட்டத்தை தமிழரசு கட்சியினர் யாழ் மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்து எதிர்த்தனர்.

மூதூர் பிரதிநிதியான தங்கதுரையும் மட்டக்களப்பு பிரதிநிதியான இராஜதுரையும் கல்வி தரப்படுத்தலால் பரந்து பட்ட தமிழர்களுக்கு வரலாற்றில் முதற்தடவையாக பல்கலைக்கழக வாய்ப்புக்கள் கிடைக்கும் என்கின்ற மாற்று கருத்துக்களை தமிழரசு கட்சியில் முன்வைத்தபோது அவை புறந்தள்ளப்பட்டன. கல்வி தரப்படுத்தல் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் எதிரான இனவாத செயற்பாடு என்றே தமிழரசு கட்சி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

பிரிவினை கோரிக்கை எமது மக்களையை அழித்தொழிக்கும் என்று வட்டுக்கோட்டை மாநாட்டிலேயே வந்து சொன்னார்கள் கனவான் தேவநாயகமும் தொண்டமானும். ஆனால் கிழக்கினதும் மலையகத்தினதும் அதிருப்திகளை அமிர்தலிங்கம் போன்றோர் கருத்தில் கொள்ளவில்லை.

யாழ்-மேட்டுக்குடிகள் யாழ்ப்பாணத்துக்கு உள்ளே ஒடுக்கப்பட்ட மக்களினதும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே வாழும் ஏனைய பிரதேச மக்களினதும் சமூக பொருளாதார வாழ்வியல் பிரச்சனைகளை பின்தள்ளி தாமும் தமது வாரிசுகளும் எதிர்கொண்ட உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் மட்டுமே அனைத்து தமிழருக்கும் உரியதான பிரச்சனைகளாக அரசியல் மயப்படுத்தினர். தமது நலன்களை அடிப்படையாக கொண்டே ஆயுத போராட்டத்தை முன்மொழிந்தனர். அதையே தமிழ் தேசியமென்றனர். தமிழீழ கோரிக்கையை பிறப்பித்தனர்.

இதுதான் யாழ் மையவாத சிந்தனை ஆகும். ஒரு சமூகத்தில் மேலாட்சி செலுத்துபவர்கள் தமது நலன்களில் மட்டுமே மையம்கொள்ளும் சிந்தனையின் வழியிலேயே அனைவரையும் பயணிக்க கோருவதும் அதுவே தமிழ் தேசியம் என்று முழங்குவதும் மேலாதிக்கமாகும்.

அதனால்தான் 1960-1970 காலப்பகுதியில் வடமாகாணத்தில் வெளிக்கிளம்பிய சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை தலைமையேற்று நடத்த அன்றைய காலத்தில் முக்கிய அரசியல் சக்திகளாக இருந்த தமிழ் காங்கிரசும் தமிழரசு கட்சியும் முன்வரவில்லை. அது முழுக்க முழுக்க வர்க்க அரசியல் பேசுகின்ற இடதுசாரி கட்சிகளாலேயே வழிநடத்தப்பட்டது. அதுமட்டுமன்றி அந்த சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை பாராளுமன்றத்தில் கிண்டலடித்து உரையாற்றினார் தளபதி அமிர்தலிங்கம். தமிழ் தேசியத்தின் தந்தை என்று விளிக்கப்படுகின்ற செல்வநாயகமோ ‘நான் கிறிஸ்தவன் இது இந்துக்களின் பிரச்சனை’ என்று ஒதுங்கிக்கொண்டார்.

ஆனால் தேசியமென்பது சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை புறமொதுக்கி ஆதிக்க வர்க்க நலன்களை முதனிலைப்படுத்துவது அல்ல. மேட்டுக்குடிகளின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதற்கு பெயர் தேசியமல்ல. மாறாக பரந்துபட்டு பெரும்பான்மையாக வாழும் அடித்தள மக்களிடமிருந்து அவர்களின் பிரச்சனைகளில் மையம்கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியவாத குரலாகும். தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல. அது குறிக்கின்ற எல்லைக்குள் வாழும் முழு சமுதாயங்களினதும் வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்கவேண்டும்.

ஒரு தேசியவாதத்தின் தொடக்கத்தில் அந்த இனத்தின் சிந்தனை மட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் பிரச்சனைகளே முன்னிறுத்தப்படுவது சிலவேளைகளில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களது குறைபாடுகளையும் உள்வாங்கி தன்னை முற்போக்கான தேசியமாக வளர்த்துக்கொள்வதுண்டு. ஆனால் தமிழ் தேசியத்தில் அது இம்மியளவும் சாத்தியமாகவில்லை.

ஒரு தேசிய இனத்தின் முதன்நிலை பண்பு கூறுகளான மொழி நிலம் பண்பாடு பொருளாதாரம் என்பவற்றை வெறும் சடத்துவ நோக்கில் அணுகுவதால் மட்டும் தேசிய கூட்டுணர்வை உருவாக்கி விட முடியாது. வடக்குக்கும் கிழக்குக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான (மடுவென்பது கிடங்கெனக்கொள்க) அரசியல்,பொருளாதார,பண்பாட்டு வித்தியாசங்கள் குவிந்து கிடக்கின்றன. வரலாற்று ரீதியாக ஒருபோதும் வடக்குக்கும் கிழக்குக்குமான ஒரே அரசியல் தலைமை இருந்ததுமில்லை.

அதையும் தாண்டி வடக்கில் எங்கே பொதுப்பண்பாடு காணப்படுகின்றது. யாழ்ப்பாண சமூகம் என்பது சாதிகளால் கட்டமைக்கப்பட்ட அதிகார படிநிலை சமூகமாகும். சாதிக்கொரு சவக்காலையும் சாதிக்கொரு வீதியும் சாதிக்கொரு கோவிலும் வைத்துக்கொண்டு தமிழினத்துக்கான பொதுப்பண்பாட்டை எப்படி உருவாக்க முடியும்? எல்லோருக்குமான சமூகநீதியை எங்கே தேடுவது? நாமெல்லோரும் ஓரினம் என்னும் கூட்டுணர்வு எப்படி சாத்தியமாகும்? இன்றுவரை அகமண முறையை கைவிட தயாரில்லாது சாதிகளின் பொருட்காட்சி சாலையாக தோற்றமளிக்கும் யாழ்ப்பாணத்தில் வாழுவது ஓரினமா? அன்றி ஒரே மொழி பேசும் பல பழங்குடியினங்களா என்று கேட்க தோன்றுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்றுவரை பல கோவில்கள் தலித் மக்களுக்காக பூட்டிக்கிடக்கின்றன. ‘ஊர்கூடி தேரிழுப்பதென்பது’ முதுமொழி. ஆனால் ஊரிலுள்ள ஆதிக்க சாதிகள் புலம்பெயர்ந்து போனபின்பு தேரிழுக்க உயர்குடிகள் இல்லை என்பதால் ஜெஸிபி மெசினை கொண்டு தேரிழுக்கின்றோம் எதற்காக? தலித் மக்களை தேரில் கை வைக்க விடக்கூடாதென்பதற்காகத்தானே, தேர் தீட்டு பட்டுவிடும் என்பதற்காகத்தானே. இந்த நிலையில் தமிழருக்கான பொது பண்பாடு எங்கேஇருக்கின்றது? இருப்பதெல்லாம் வெறும் சாதிய பண்பாடு மாத்திரமேயாகும். அவற்றை கட்டிக்காப்பதுவும் யாழ்ப்பாண- மேலாதிக்கம்தான் நாம் குரல் கொடுப்பது யாழ்பாணத்து மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் ஏழைகள் மற்றும் சாதியரீதியில் ஒடுக்கப்படும் தலித் மக்களுக்காகவும்தான்.

இந்த லட்ஷணத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்களில், பாராளுமன்ற உறுப்பினர்களில், மாகாண சபை உறுப்பினர்களில் யாதொருவராயினும் தாழ்த்தப்பட்ட குலத்தவர் உண்டோ என்கின்ற கேள்வியெழுப்புதல் அவசியமற்றது ஆகும். அப்படி எதுமே இன்னும் சாத்தியமாகவில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலன்சார்ந்து ஒரு சிறு துரும்பையேனும் நகர்த்திய வரலாற்றை கொண்டிராத கறுவாக்காட்டு பரம்பரைகளான சுமந்திரனும்,விக்கினேஸ்வரனும்,கஜேந்திரகுமாரும் மக்களின் தலைவர்களாக வலம் வர முடிகின்றது.

உண்மையில் தமிழ் தேசிய கொள்கை சார்ந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் எத்தனை சிவில் அமைப்புக்கள் செயலாற்றுகின்றன? எத்தனை தன்னுரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வேலை செய்கின்றனர்? என்று கேட்டால் என்ன பதில்? வெறுமனே வாக்கு வங்கி அரசியலுக்காகவே இந்த தமிழ் தேசியவாத பிதற்றல்களை யாழ்ப்பாண கட்சிகள் காவித்திரிகின்றன என்பதே உண்மையாகும். அதனாற்தான் இந்த யாழ் மேட்டுக்குடிகள் பேசுகின்ற தேசியம் என்பது போலியானது. மக்களை ஏமாற்றி மேட்டுக்குடிகளின் நலன்களை மட்டுமே பூர்த்திசெய்கின்ற கபட நோக்கம் கொண்டது என்று சொல்லுகின்றோம்.

ஆனால் தேசியவாதமென்பது இதுவல்ல. பொங்கு தமிழ் ஆரவாரம் பண்ணி மக்களை அணிதிரட்டுவதாலோ பொங்காத தமிழ் ஆர்ப்பரிப்போ செய்து தென்னிலங்கைக்கு சவால் விடுவதாலோ தமிழ் தேசியம் தழைத்தோங்க முடியாது. பூர்வீகம் பற்றிய புல்லரிக்கும் வீர வசனங்களாலோ முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுக்கின்ற ஆசாமிகளாலோ தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது.

தேசியம் என்பது பற்றி ரஷ்ய புரட்சியாளன் லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக் ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் நமக்கு புதியவையல்ல. இவையனைத்தையும் எமது முன்னோர்களே சொல்லிச்சென்றுள்ளனர்.

‘துடியன்,பாணன் கடம்பன்,பறையன் என இந்நான்கல்லது குடியும் இலவே’ என்கின்றது புறநானுற்று அறம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பான் கணியன் பூங்குன்றனார் என்னும் சங்ககால தமிழ் புலவன். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பார் திருவள்ளுவர்.

இவைதான் அனைவரையும் உள்ளீர்க்கின்ற தேசிய தர்மம் ஆகும். தமிழர்தம் தேசியத்தின் போற்றத்தக்க முதிசங்கள் இவையே ஆகும். இத்தகைய அரவணைப்பிலும் அகன்று விரிந்த மனப்பான்மையிலும் உருவாகின்ற தமிழுணர்வுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும்.

தேசியவாதமென்பது இன வெறி, மதவெறி, சாதிய ஆதிக்கம், தனவந்தரதிகாரம், பிரதேச வெறி, ஆணாதிக்கம், பரம்பரையதிகாரம், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சுரண்டல், ஏகாதிபத்தியம் போன்ற அனைத்துவித அதிகாரங்களுக்கும் எதிரான ஒருமித்த குரல்களின் சங்கமமாக உருப்பெறவேண்டியதாகும். அதனுடாக சுயநிர்ணயம் கொண்ட வன்முறையற்ற சமூகநீதியுடன் கூடிய சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்பும் இலட்சிய வேட்கை கொண்டதே தேசியவாதமாகும்.

ஆனால் நமது தமிழ் தேசியமோ யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் மையத்தில் நின்றுகொண்டு இவன் பள்ளன், இவன் பறையன் அவன் வன்னிக்காட்டான், அடுத்தவன் மட்டக்களப்பு மடையன், அதற்கப்பால் சோனி, தொலைவில் இருப்பவன் தோட்டக்காட்டான் என்று வக்கணம் சொல்லி சொல்லியே தன்னை உருவாக்கியது. பன்மைத்துவ தன்னிலைகளையும் தனித்துவங்களையும் அங்கீகரித்து உள்ளீர்ப்பதற்கு பதிலாக அனைவரையும் நிராகரித்து தனிமையப்படுத்தி வெளித்தள்ளியது.

நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும், நீர்நிலைகளையும் பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும் உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே அதன் தாற்பரியமாகும். அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும் மனதளவிலும் செயலளவிலும் திரளாகின்ற உணர்வே தேசிய உணர்வாகும்.

செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு தமிழரசு கட்சியை தொடங்கி கிழக்கு மாகாணத்துக்கு வந்து தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாகி அணிதிரளுங்கள் சமஷ்டியை பெற்றுத்தருகின்றேன் என்று அறைகூவல் விடுத்தார். அப்போது சமஸ்டி சாத்தியமில்லாதது,கிழக்கு மூவினங்களும் வாழும் இடம் இங்கே இனவாத அரசியல் வேண்டாம், இரத்த ஆறு ஓட வழிவகுக்க வேண்டாம் என்று செல்வநாயகத்தை எச்சரித்தார் மட்டக்களப்பின் நல்லையா மாஸ்டர் என்னும் பெருந்தகை. பதிலுக்கு கிழக்குமாகாணத்தின் சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார, மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டு சாதனை புரிந்த அந்த மகானை அரச கைக்கூலி என்று பிரச்சாரம் செய்து தோற்கடித்தது தமிழரசு கட்சி.

மறுபுறம் செல்வநாயகத்தின் அறைகூவலின் பின்னால் ஒன்றுபடுவோம் என்று சொல்லி தமிழரசு கட்சியை கிழக்கு மாகாணத்தின் மூலை முடுக்குகளெல்லாம் கொண்டு சென்று வளர்த்து 1977ல் தமிழர் தலைவராக மட்டக்களப்பிலிருந்து மேலெழுந்து வந்த இராஜதுரைக்கு என்ன நடந்தது? அவரை வஞ்சித்து, ஒதுக்கி, துரோகியாக்கி வெளியேற்றியது தமிழரசுகட்சி. சொல்லப்பட்ட காரணம் என்னதெரியுமா? 1978ஆம் ஆண்டு சூறாவளியால் அழிந்து கிடந்த மட்டக்களப்பை பார்வையிட வந்த பிரதமர் ‘பிரேமதாசாவை வரவேற்கச்சென்றது குற்றம்’ என்றது அமிர்தலிங்கத்தின் குற்றப்பத்திரிகை. அத்தனைக்கு பின்னரும் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரலில் செல்வநாயகத்தின் 35 வது நினைவு கூட்டமொன்றுக்காக யாழ்ப்பாணம் சென்ற ராஜதுரையை ‘மட்டக்களப்பு சக்கிலியா’ ‘துரோகி’ என்று துரத்தினார் சிவாஜிலிங்கம் என்கின்ற தமிழ் தேசிய பித்தர்.

* யாழ் மேயரான செல்லன் கந்தயன் யாழ்- நூலகத்தை திறந்துவைத்தல் கூடாது என்கின்ற மேட்டுக்குடிகளுக்கு ஒத்தாசை வழங்கி திறப்புவிழாவை தடுத்து நிறுத்தினர் தமிழீழவிடுதலைப்புலிகள்.

*தமிழ் பேசும் இஸ்லாமியரை தமிழ் தேசியத்துக்கு வெளியே துரத்தியடித்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள்.

*2004 ல் தமிழீழத்தின் நிழல் நிர்வாக கட்டமைப்புக்கு 32 துறை செயலாளர்களை தமிழீழ விடுதலை புலிகள் நியமித்தபோது 31 செயலர்களை வடமாகாணத்துக்குள் சுருட்டிக்கொள்ளுதல் தகுமோ? என்று கேட்ட கருணாம்மானை துரோகி என்று அறிவித்து வெருகல் படுகொலைக்கு ஆணையிட்ட அன்றே அறுந்து போனது வடக்கு கிழக்கு தாயக உறவு.

பிரபாகரனது முப்பத்துவருட ஆயுதப்போராட்டம் தமிழ் பேசும் மக்களின் (சாதி,மத, பிரதேச,) பன்மைத்துவத்துவ குரல்களை அங்கீகரிக்க மறுத்து வீணாகி மண்ணோடு மண்ணாகிப்போனது..

இப்போது கிறிஸ்தவரையும் கழித்துவிட்டு இந்து கட்சிகளின் உருவாக்கத்துக்கு அத்திவாரம் இட்டுக்கொண்டிருக்கின்றது. யாழ்-மையவாத சிந்தனை முகாம். அதனை மூத்த தமிழீழவாதிகளில் ஒருவரான மறவன் புலவு சச்சுதானந்தம் கச்சிதமாகவே செய்து வருகின்றார்.

அண்மைக்காலமாக பெண்களின் குரலை உதாசீனம் செய்துவருகின்றது தமிழரசுக்கட்சி. கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மங்களேஸ்வரி சங்கருக்கு வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்டமைக்கு சுமந்திரன் சொன்ன காரணம். ‘அவர் துரோகம் செய்ய கூடியவர்’ என்று முன்னரே உணர்ந்தாராம் சுமந்திரன். இப்படி அவரே முடிவெடுப்பதென்றால் கட்சியின் செயலாளர் பதவியை துரைராசசிங்கத்துக்கு கறிவேப்பிலைக்கா கொடுத்து வைத்திருக்கின்றது தமிழரசு கட்சி? இதைத்தான் யாழ் மேலாதிக்கம் என்கின்றோம். ஒரு கணவனை இழந்த பெண் என்னும் வகையில் சசிகலா ரவிராஜை வைத்து வாக்குசேகரிக்க முயன்றது தமிழரசு கட்சி. அதன்பின்னர் அவருக்கு நடந்த அநியாயத்துக்கு விளக்கம் தேவையில்லை.

தமிழ் சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்ற இந்த யாழ்ப்பாண மேட்டிமை சக்திகளிடத்தில் உண்மையான தமிழ் தேசிய சிந்தனை இல்லை. இருப்பதெல்லாம் ஆதிக்க சிந்தனை மட்டுமேயாகும். அதில் சிங்களவர்களிடமிருந்து அதிகாரத்தை கைமாறி புதிய எஜமானர்களாக தங்களுக்கு முடி சூட்டி கொள்ளுகின்ற கபட நோக்கம் மட்டுமே மறைந்திருக்கின்றது. அதுவே வடமாகாண சபை முதலமைச்சர் விடயத்திலும் நடந்தேறியது.

நம்மை நாமே ஆளுதல் என்கின்ற அற்புதமான சிந்தனை ஆட்சியாளர்களை அடையாளமிட்டு மலினப்படுத்தப்பட்டுவிட்டது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு பதிலாக தமிழ் எம்பிக்களும் அமைச்சர்களும் முதலமைச்சரும் வந்துவிட்டால் தமிழ் தேசியம் தழைத்தோங்கும் என்று அப்பாவித்தனமாக நம்பவைக்கப்பட்டுள்ளனர் எமது மக்கள். வெறும் இனவாத வெறியை விதைத்து ஆளுவதற்கான உரிமைக்காக மட்டுமே போராட்டம் என்கின்ற எளிமைப்படுத்தப்பட்ட கருத்துருவமே சாமானிய மக்களின் மனநிலையில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது..

இதுவரைகாலமும் தமிழ் தேசியத்தை தலைமையேற்று வழிநடத்தியவர்களில் அநேகமானோர் யாழ்- மேட்டுக்குடி நலன்களில் மையம்கொண்டுள்ள ஆதிக்க சிந்தனைக்கு மாற்றானவர்களாய் இருக்கவில்லை. அப்படியிருக்க முனைந்த ஒரு சிலரும் மைய நீரோட்ட அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். ஒதுக்கப்பட்டனர். அல்லது துரோகிகள் என்று கொன்றொழிக்கப்பட்டனர். இத்தகைய கேடுகெட்ட யாழ்-மேட்டுக்குடி தலைமைகளுடைய ஆதிக்க சிந்தனையின் அம்மணத்தை மறைக்க தேசியம் என்றும் தாயகமென்றும் விடுதலையுணர்வு என்றும் வேசம்கட்டுவதற்கு பெயர்தான் யாழ்- மேலாதிக்கம் என்பதாகும்.

அதனால்தான் சொல்கின்றோம். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழீழம் என்பது யாழ்-மேலாதிக்க தமிழீழம்தான் . இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் தேசியம் என்பது யாழ் மேலாதிக்க தமிழ் தேசியம்தான். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் நோக்கு என்பதும் யாழ் மேலாதிக்க தமிழ் நோக்குத்தான். என்றொருநாள் தமிழ் பேசும் மக்களின் தலைமையானது யாழ்-மேட்டுக்குடிகளிடமிருந்து கைமாறுகின்றதோ அன்றுதான் தமிழர்களின் நன்னாள் தொடங்கும். (Source: padakutv.lk)

வெலிகடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணியின் மனைவி இன்று காலமானார்!

குட்டிமணி அவர்களது துணைவியார் திருமதி.இராசரூபராணி இன்று காலை காலமானார். ‘குட்டிமணி’ என்ற இயக்கப் பெயரால் பரவலாக அறியப்பட்ட செல்வராஜா யோகச்சந்திரன் என்பவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவராவார்.

குட்டிமணியை தேடி வீட்டிற்கு சென்ற ஆமி, பொலிஸ்இ இரகசியப் பொலிசாரினாலும் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார். 1972 ல் குட்டிமணி தேடப்பட்ட காலம் முதல், இரு (ஆண், பெண்) பிள்ளைகளையும் பல கஸ்டங்களுக்கு மத்தியில் வளர்த்து ஆளாக்கியுள்ளார். அவரும் தமிழினத்திற்காக குட்டிமணி போராடிய காலங்களில் பலவகையிலும் தனது கணவருக்கு ஒத்தாசையாக இருந்து விடுதலைக்கு உதவியுள்ளார்.

ரெலோ தளபதி குட்டிமணி: பொலிஸார் மீது தாக்குதல், வங்கிக்கொள்ளை எனக் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டிருந்த ரெலோ போராளியான குட்டிமணி, 1981 ஏப்ரல் முதலாம் திகதி படகு ஒன்றின் மூலம் தமிழ்நாடு செல்ல முயற்சிக்கும் போது, அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டார். அவரோடு ஸ்தாபக தலைவர் தங்கதுரை என்பவரும், தேவன் என்பவரும் கைதுசெய்யப்பட்டார்கள்.

பல்வேறு குற்றங்கள் தொடர்பில் அவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு நடத்தப்பட்டது.

வழக்கில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் படி, கைதுசெய்யப்பட்ட குட்டிமணியும் ஜெகன் என்பவரும் பல மாதங்களுக்கு எந்த வெளியுலகத் தொடர்புமின்றி, சட்டத்தரணிகள் கூட அணுகமுடியாதபடி, தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

தடுத்து வைத்திருக்கப்பட்ட போது, சொல்லொணாச் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். குறித்த சித்திரவதைகள் பற்றிய விவரணங்கள் வழக்கின் சாட்சியப் பதிவுகளில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

குட்டிமணி மற்றும் ஜெகனுக்கு எதிரான கொழும்பு உயர்நீதிமன்றில் நடந்த வழக்கில் 1982 ஓகஸ்ட் 13 ஆம் திகதி அவ்விருவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டபின், மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட முன்பதாக, குட்டிமணி ஏதேனும் தெரிவிக்க நீதிபதியினால் தரப்பட்ட வாய்ப்பில் குட்டிமணி தெரிவித்த விடயமானதுஇ தமிழ் இளைஞர் மத்தியில் நீண்ட தாக்கம் செலுத்தியதொரு கூற்றாக அமைந்து.

தன்னுடைய கூற்றிலே குட்டிமணி “நான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. நான் ஒரு நிரபராதி. பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட என்னை, அவர்கள் சித்திரவதை செய்து சில வாக்குமூலங்களில் கையெழுத்துப் பெற்று, அவை எனக்கெதிரான சான்றாக இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுஇ நான் குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறேன்.

இந்த நீதிமன்று இன்று வழங்கியுள்ள ஆணையைப் பற்றி, நான் என்னுடைய சில அடிப்படை எண்ணங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இன்று இந்த வழக்கிலே, இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது தமிழீழம் அமைக்கப்படுவதற்கான புதிய உத்வேகத்தையும் வளம்மிக்க உரத்தையும் ஊக்கத்தையும் வலுவான காரணங்களையும் வழங்கும்.

இன்னும் வேறும், தமிழ் இளைஞர்களும் இந்த நீதிமன்றின் முன் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் நிற்கவைக்கப்படுவார்கள். இது தொடருமானால், விதிக்கப்படும் தண்டனையானது தமிழர்களின் விடுதலைக்கான ஊக்கமாக அமையும்.

நான் தமிழீழத்திலேயே தூக்கிலிடப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய முக்கிய உறுப்புகள், அவை தேவைப்படுவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

என்னுடைய  கண்பார்வையற்ற ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என்று வேண்டுகிறேன். அப்போதுதான் தமிழீழம் நிதர்சனமாவதை குட்டிமணி இந்தக் கண்களால் காணமுடியும். என்னுடைய உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார். (Source: telo.org)