கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பிரதியமைச்சர் பாயிஸை எம்.பி. பதவியிலிருந்து நீக்க நேற்று இடைக்கால தடை

கால்நடை அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.ஏ. பாயிஸை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிராக நேற்று கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்தார்.

பிரதியமைச்சர் பாயிஸ் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அல்லவென்றும், அவர் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும், இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி மூலம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறும் கோரியே முஸ்லிம் காங்கிரஸ் இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. இவரை நீக்குவதற்கு எதிரான தடையுத்தரவு எதிர்வரும் 8ம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க. மற்றும் மு.கா. ஆகிய கட்சிகளுக்கே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷிய அணைக்கட்டு உடைந்ததில் 58 பேர் பலி

indo.jpg
இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்தாவின் அருகே அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் குறைந்தது ஐம்பத்து எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போயுள்ள டஜன் கணக்கானவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடிவருகிறார்கள்.

டாங்கெரங் வட்டகையில் நகரவாசிகள் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் வந்த வெள்ளம் கார்களை அடித்துச் சென்றதோடு பள்ளங்களை நிறைத்தது. நீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் சடலங்களும் குப்பைகூளங்களும் மிதக்க ரப்பர் படகுகளில் மீட்புப் பணியாளர்கள் பயணிக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்த இந்த களி மண் அணைக்கட்டு கடும் மழையை அடுத்து உடைந்திருந்தது.

நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு

ipl-images.jpgதென் ஆப்ரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ள நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) இருபது-20 கிரிக்கெட் தொடரின் துவக்கப் போட்டி ஏப்ரல் 18ஆம் தேதி துவங்கி மே 24ஆம் தேதி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் துவக்கப் போட்டி கேப்டவுனிலும், இறுதிப்போட்டி ஜோஹன்னஸ்பர்க் நகரிலும் நடக்கிறது. அரையிறுதிப் போட்டிகள் மே 22ஆம் தேதி பிரிடோரியாவிலும், மே 23ஆம் தேதி ஜோஹன்னஸ்பர்க் நகரிலும் நடத்தப்பட உள்ளன.

இந்தாண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 59 போட்டிகள் நடக்கும் என்றும், இவை கேப்டவுன், ஜோஹன்னஸ்பெர்க், டர்பன், பிரிடோரியா, ஈஸ்ட் லண்டன், கிம்பெர்லி, ப்லோம்ஃப்ன்டெய்ன், போர்ட் எலிசபெத் ஆகிய நகரங்கள் நடத்தப்படும் என்றும் ஐ.பி.எல் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் டர்பனின் கிங்ஸ்மெய்ட் மைதானத்தில் 16 போட்டிகளும், பிரிடோரியாவின் செஞ்சுரியன் மைதானத்தில் 12 போட்டிகளும், ஜோஹன்ன்ஸ்பர்க்கின் வான்டெரர்ஸ் மைதானம், கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் தலா 8 போட்டிகளும், போர்ட் எலிசபெத் நகரின் செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் 7 போட்டிகளும், ஈஸ்ட் லண்டனில் 4 போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

ராமதாசுடன் சந்திப்புக்கு ஜெயலலிதா போட்ட திடீர் நிபந்தனை

jaya-ram.jpgஅதிமுக வில் சேர முடிவெடுத்து விட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை சந்திக்கிறார். அதிமுக கூட்டணியில் இணைய நேற்று பாமக பொதுக்குழுக் கூட்டம் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து அதிமுக கூட்டணிக்கு வருகிறது பாமக.

பொதுக்குழுக் கூட்டம் முடிந்ததும், ஜெயலலிதாவை, ராமதாஸ் சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படி எந்த சந்திப்பும் நேற்று நடைபெறவில்லை. அதேசமயம், அதிமுக தரப்பிலிருந்தும் பாமக முடிவு குறித்து எந்தவித ரியாக்ஷனும் வெளியாகவில்லை. இதனால் பாமக தரப்பில் லேசான பீதி பரவியது.

மத்திய அமைச்சர்கள் அன்புமணியும், வேலுவும் ராஜினாமா செய்துவிட்டு வந்த பிறகு சந்திக்கலாம் என்று ராமதாசுக்கு ஜெயலலிதா திடீர் நிபந்தனை போட்டதால் தான் இந்தச் சந்திப்பு நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. நாளை இருவரும் டெல்லி சென்று பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தரவுள்ளனர். இதையடுத்து ராமதாஸ் நாளை காலை 10 மணிக்கு ஜெயலலிதா சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் தரப்பட்டுள்ளது.

பாமக தேர்தல் அறிக்கையில் தனி ஈழம்

26-ramsoss.jpgஇலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக பாமக பாடுபடும் என்று அக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கையை அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். அதில் மொத்தம் 44 தலைப்புகளில் திட்டங்கள், கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

ஈழத் தமிழர்கள் பிரச்சனையைத் தீர்க்க அங்கு தமிழர்களுக்கு தனி நாடு அமைவது தான் ஒரே வழி. அதை உருவாக்க பாடுபடுவோம். இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டியது இந்தியாவின் கடமையாகும். இந்தியா தனது கடமையை ஆற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாமக எடுக்கும்.

கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுப்போம்.

நாட்டை சிறப்பாக ஆளும் வகையில் மாநிலங்களைப் பிரித்து சிறியதாக 50 மாநிலங்களை உருவாக்க மத்திய அரசை நெருக்குவோம். என்று கூறப்பட்டுள்ளது.

வருண் காந்தி இன்று பிலிபித்தில் கைதாகலாம்?

20-varun-ganthi.jpgவருண் காந்தியின் முன்ஜாமீன் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து இன்று பிலிபித் தொகுதிக்கு வருண் காந்தி செல்கிறார். அங்கு போலீஸாரிடம் கைதாக அவர் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. பிலிபித் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வருண் காந்தி, அங்கு நடந்த கூட்டத்தில், இஸ்லாமியர்களை தலையை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் புகாரின் பேரில் பிலிபித் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் வருண் காந்தி மீது இரு மதப் பிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் வருண் காந்தி. மேலும், முன்ஜாமீ்ன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்திலும் மனு செய்தார். இதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தது. இந்த முன்ஜாமீன் இன்றுடன் முடிகிறது.

அதேசமயம், அலகாபாத் நீதிமன்றம், வருண் காந்தியின் கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது.  இந்தச் சூழ்நிலையில் தனது முன்ஜாமீனை நீட்டிக்க விரும்பாமல் கைதாக முடிவு செய்து விட்டாராம் வருண் காந்தி. அதன்படி இன்று பாஜகவினருடன் அவர் பிலிபித் செல்கிறார். அங்கு அவர் போலீஸாரிடம் கைதாவார் என்று கூறப்படுகிறது. மேலும் வருண் காந்தியின் முன்ஜாமீன் மனுவை இன்று அவரது வக்கீல்கள் உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

முன்ஜாமீனை நீட்டிக்காமல், அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யாமல் கைதாக வருண் காந்தி முடிவு செய்திருப்பது அரசியல் லாபம் கருதியே என்று கூறப்படுகிறது. தான் கைதானால் அதனால் அனுதாபம் ஏற்படும், அது தனக்கும், பாஜகவுக்கும் லாபமாக அமையும் என்பதால் இந்த முடிவை வருண் காந்தி எடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் தனது முடிவை இதுவரை வருண் காந்தி கட்சி மேலிடத்தில் சொல்லவில்லையாம். இருப்பினும் எது செய்தாலும், சட்டத்திற்கு உட்பட்டு செய்யுமாறு வருண் காந்திக்கு கட்சி மேலிடம் அறிவுரை கூறியுள்ளதாம்.

‘ புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை அருகே ஷெல் வீச்சுக்களில் 20 பேர் பலி”

இலங்கையின் வடக்கே அரச படைகளுக்கும் வி்டுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் எஞ்சியுள்ள ஒரேயொரு தற்காலிக மருத்துவமனையாகிய புது மாத்தளன் மருத்துவமனையைச் சூழ்ந்த பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணியளவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 140க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்கள் இந்த மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், சிகிச்சை பயனளிக்காத காரணத்தினால் அவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவித்தார்.

வியாழக்கிழமை மாலை வரையில் தொடர்ச்சியாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்ததாகவும், ஷெல் தாக்குதல்களில் சம்பவ இடங்களில் இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படவில்லை என்றும், டாக்டர் ரீ.வரதராஜா கூறினார்.

புதுமாத்தளன் மருத்துவமனையில் குழந்தைகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற விடுதி பக்கமாக உள்ள வேலியருகில் இன்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஷெல் ஒன்று வந்து வீழ்ந்து வெடித்ததாகவும், இதனையடுத்து, அந்த குழந்தைகள் விடுதியில் தங்கியிருந்த நோயாளர்கள் அனைவரும் மருத்துவமனையைவிட்டு ஓடிவிட்டதாகவும், தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் காரணமாக மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் பதட்டத்தி்ற்கு உள்ளாகியிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவித்தார். அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், வலயர்மடம் ஆகிய பிரதேசங்களில் இன்று நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் உட்பட 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருக்கி்ன்றார்கள்.

முன்னதாக இன்று அதிகாலை புதுமாத்தளன் மருத்துவமனைமீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 நோயாளர்கள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் காயமடைந்ததாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவிக்கின்றார்.

மேலும் 485 பொதுமக்கள் புல்மோட்டைக்கு அனுப்பப்பட்டனர்

navy_rescue_civil.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவடத்தில் போர் நடக்கும் பகுதிகளில் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அடங்கிய சுமார் 485 பொதுமக்கள் வியாழக்கிழமை செஞ்சிலுவை சங்கக் கப்பல் மூலம் திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை தற்காலிக மருத்துவ முகாமுக்கு கொண்டுவரப்பட்டனர்.

இவர்களில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் என்றும் பிறர் அவர்களுக்குத் துணையாக வந்த குடும்ப உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வந்தவர்கள் கடலிலிருந்து படகுகள் மூலம் கரைக்கு அழைத்துவரப்பட்டனர். இவர்களில் பலருக்கு உடனடி மருத்துவ உதவி, புல்மோடையில் அமைந்துள்ள இந்திய மருத்துவ முகாமில் அளிக்கப்பட்டது.

மாநாடுகள் முல்லை அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? : த ஜெயபாலன்

Wanni_Tragedy1.

இந்தத் தலைப்பை இட்டுக் கொண்டு இருக்கையில் வந்த தொலைபேசி அழைப்பு, எனது மனைவியின் மைத்துனியும் அவரது மூன்று குழந்தைகளும் நேற்று (26 மார்ச்) நடந்த செல்வீச்சில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. பிற்பகல் 3 மணியளவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 20 பேர் உயிரிழந்தனர். புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை அருகே இடம்பெற்ற இத்தாக்குதலிலேயே இத்தாயும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். தனது மனைவியையும் குழந்தைகளையும் பறிகொடுத்த இளம் தந்தை விடுதலைப் புலிகளின் ஒரு முன்னாள் போராளி. பதின்மூன்று வயதில் இயக்கத்தில் இணைந்த ஒரு குழந்தைப் போராளி. இன்று உடல்முழுவதும் சன்னங்களுடன் சிகிச்சை பெறவும் வசதியின்றி தெற்காசிய நாடொன்றில் சிறையில் உள்ளார். அவர் சிறையில் இருப்பது மட்டை போட்டல்ல புலத்து மக்கள் பகட்டுக்காகச் சொல்லும் தாயக விடுதலைக்கு உதவியாக இருந்தமைக்காக.

அவர் தனது மனைவியையும் பிள்ளைகளையும் கண்டு மூன்று வருடங்கள் இருக்கும். இளம் குடும்பம். அவர் புலத்தில் உள்ள உறவுகளுடன் கதறி அழுகிறார். இங்குள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் வார்த்தைகள் இல்லை. அவரை ஐரோப்பாவிற்கு எடுத்துவிட முடியவில்லையே என்ற குற்ற உணர்வும் நெஞ்சை நெருடியது.

காயப்பட்டதனால் போராட இயலாத நிலையில், தொழில் வாய்ப்புகளும் இல்லாத நிலையில், புலிகளுக்கு வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே அவருடைய குடும்பம் தங்கி இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அவர் வெளிநாடு வர முயற்சித்து இருந்தார். ஆனால் அவ்வளவு தொகையை அவரால் திரட்டிக் கொள்ள முடியவில்லை. அப்படி முடிந்திருந்தால் அவரது மனைவி பிள்ளைகள் வன்னியில் இருந்திருக்க மாட்டார்கள். இந்த யுத்தத்தில் மடிந்திருக்க மாட்டார்கள்.

தான் இளவயதிலேயே இயக்கத்தில் சேர்ந்து கல்வியைப் பாழடித்ததால் தன்னுடைய மகனை படிப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் அந்த இளம் குடும்பத்தினரிடம் இருந்தது. ஆர்வம் மட்டுமல்ல அவ்வளவு கஸ்டத்திலும் தாயார் தன் மூத்த மகனை புலமைப் பரிசில் பரீட்சையிலும் சித்தி பெற வைத்தார். இது நடந்தது சில மாதங்களுக்கு முன். இன்று அவர்கள் நினைவுகளில் மட்டுமே உள்ளனர்.

இது விதியல்ல. சிங்கள – தமிழ் அரசியல் தலைமைகளின் சதி. அதில் புலத்து தமிழனுக்கும் பங்கு இருக்கின்றது. இப்படி வன்னி மண்ணில் உள்ள ஒவ்வொருவரிடமும் ஒரு உருக்கமான சொந்தக் கதையுண்டு. சொல்வதற்கு நாதியில்லை. அதனால் புலத்த தமிழன் ‘வணங்கா மண்’ என்று றீல் விடுகின்றான்.

ஒவ்வொரு தாயும் தனது குழந்தையை தனது உயிராகவே கருதுகின்றனர். தாய் தந்தையைப் பொறுத்தவரை குழந்தையின் இழப்பு என்பது அவரகளது மரணம் வரை தொடரும் சோகம். ஆனால் அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது ஏற்படுகின்ற வலியின் கொடுமையில் ‘இந்தப் பிள்ளை எனக்கு வேண்டாம்’, ‘இந்தப் பிள்ளையைக் கொல்லுங்கள்’ என்று தாய் கதறுவாள். அவர்களுக்கு உயிருக்கு உத்தரவாதமும் குழந்தை பிறந்ததும் ஏற்படப் போகும் பெருமகிழ்ச்சியும் இருந்தாலும் வலியின் கொடுமை அவர்களை அவ்வாறு சொல்ல வைக்கிறது.

ஆனால் இன்று வன்னி மக்கள் அனுபவிப்பதோ மரணவலி. அடுத்த நிமிடம் உயிருடன் இருப்போமோ என்கிற பயம். அந்த மரண பயத்தில் தப்பி ஓடினாலும் கலைத்து வந்து சுட்டுத் தள்ளுகிறார்கள் பிடித்துவந்து பச்சை மட்டையால் அடிக்கின்றனர் புலிகள். ஒரு புறம் இலங்கை அரச படைகள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்துகின்றனர். மறுபுறம் புலிகள் தாக்குதல் நடத்தப்படும் பகுதிகளில் இருந்து வன்னி மக்களை வெளியெறவிடாமல் அடைத்து வைத்துள்ளனர். புலிகளதும் புலத்து தமிழர்களதும் தாயக வேள்விக்கு வளர்க்கப்பட்ட விலங்குகள் போல் ஆகிவிட்டனர் வன்னி மக்கள்.

2.

Sambandan R TNA MPஇந்த நிலையை வேதனையை யாரிடம் சொல்ல முடியும். யாருக்கு எடுத்துரைக்க முடியும். ‘விடுதலை புலிகள் பொதுமக்களை பாதுகாப்பான பிரதேசத்திற்கு வெளியேற விடாது தடுக்கின்றனரா’ என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, ”அம்மக்கள் ஏன் வன்னியை விட்டு வெளியேற வேண்டும்? அம்மக்கள் அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள்” எனப் பதிலளிக்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர் சம்பந்தன். ஆர் சம்பந்தன் சொல்வது போல் அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தவர்கள் அவர்கள் வெளியேற வேண்டிய அவசியமில்லை என்றே வைத்துக் கொண்டால் அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தகின்ற இந்த 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் எங்கே? அவர்களது குடும்பங்கள் எங்கே? அவர்கள் மட்டும் ஏன் தங்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறினார்கள்? தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் மிக மோசமான அவலத்தை எதிர்கொண்டுள்ள போது அந்த மக்களை மரணப்பொறியில் விட்டுவிட்டு கொழும்பிலும் இந்தியாவிலும் ஐரோப்பாவின் நகரங்களிலும் இருந்து கொண்டு ‘வன்னி தமிழர்களின் பூர்வீக மண்’, ‘ஏன் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்’ என்று கேட்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்த அரசியல் அருகதையும் கிடையாது. அந்த ‘மக்களை வெளியேற்ற வேண்டாம்’, ‘வெளியேற வேண்டாம்’ என்று சொல்வதற்கு புலத்துத் தமிழனுக்கும் எந்த அருகதையும் கிடையாது.

‘தெற்கிற்குச் சவப்பெட்டிகள் வரும்’ என்று முட்டாள்தனமாகப் பாராளுமன்றத்தில் பேசுவதும், பொழுது போக்காக பொங்கு தமிழ் வைத்து போர் முழக்கம் செய்வதும், இன்று தமிழ் மக்களை எங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. புலிகளின் அரசியல் வங்குரோத்துக்கு துணைபோன இவர்களின் அரசியலை என்னவென்பது.

‘தமிழ் சமூகம் படித்த சமூகம். லண்டனிலலும் ஆயிரக் கணக்கான டொக்டர்கள் என்ஜினியர்கள் எக்கவுண்டன்கள் இருக்கிறார்கள். இந்த நாட்டுக்கு தங்கள் சேவையை செய்கிறார்கள்.’ என்று மேரிக் கொல்வினை அழைத்து நடத்திய சந்திப்பில் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் சென் கந்தையா குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டது. உண்மை. படித்தவர்கள். பிழைக்கத் தெரிந்தவர்கள். லண்டனுக்கும் மேற்கு நாடுகளுக்கும் வந்து தங்கள் சேவையைச் செய்கிறார்கள். தங்கள் பெருந்தன்மையைக் காட்ட ‘வணங்கா மண்’ கப்பல் விடுகிறார்கள். ‘வன்னி மாடுகள்’ படிக்கவில்லை. வசதியும் இல்லை. புலியைக் கட்டிக்கொண்டு மாரடிக்கிறார்கள்.

மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே வருகிறேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிகாந்தா, ஜெயானந்தமூர்த்தி, சிவாஜிலிங்கம் ஆகியோரை தேசம்நெற் க்காக நேர்கண்ட போது கேட்கப்பட்ட பல கேள்விகளில் ஒன்று ‘நீங்கள் ஏன் இந்தப் பாராளுமன்ற உறுப்புரிமையை வைத்துள்ளீர்கள்?’ என்பது. அதற்கு அவர்கள் மூவருமே கிட்டதத்தட்ட ஒரே பதிலையே தெரிவித்தனர். ‘நாங்கள் இந்த உறுப்புரிமையை எடுக்காவிட்டால் அரச ஆதரவாளர்கள் தமிழ் விரோத சக்திகள் அதில் உட்கார்ந்து தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளைச் செய்வார்கள்.’ அப்படியானால் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பாராளுமன்றத்தில் இருந்து தமிழ் மக்களுக்காக இதுவரை சாதித்தது என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வை ஏன் முன்வைக்கவில்லை? ‘புலிகள் தமிழ் மக்களுடைய ஒரு ஆயுத அமைப்பு’ என்று எடுத்துக் கொண்டால் தமிழ் மக்களுடைய அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் முன்னெடுக்கவில்லை. ‘விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வுத் திட்டதை முன் வைக்கத் தவறிவிட்டது என்றே நான் கருதுகிறேன். அவ்வாறான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்காதது மிகப்பெரிய தவறு என்றே நான் கருதுகிறேன்’, என்று சிவாஜிலிங்கம் தேசம்நெற் க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்தத் தவறிற்கு வன்னி மக்கள் கொடுத்துக் கொண்டுள்ள விலை மிக மிக அதிகம். அது மட்டுமல்ல தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட வரலாற்றுத் தவறுகள் என்று பட்டியல் இட்டால் அதனைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிடலாம். அந்தப் பட்டியலை தேசம்நெற்றின் கருத்தாளர்களிடமே விட்டுவிடுகிறேன்.

முல்லைத் தீவில் நடைபெறும் மனித அவலத்தில் – இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் அரசு – புலிகள் என்ற இரண்டு தரப்புகள் சம்பந்தப்பட்டு உள்ளன. இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டு வர இந்த இரு தரப்புகளுமே உடன்பாட்டுக்கு வரவேண்டும். அதற்கு இந்த இரு தரப்புகளுடனும் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவது அவசியம். நாங்கள் ஒரு தரப்பினருடன் மட்டுமே பேசுவோம் மற்றயைவர்களைத் தீண்டமாட்டோம் மற்றையவர்களுடன் பேசமாட்டோம் என்று அடம்பிடித்தால் எப்பொதுமே இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியாது. இதுவே யதார்த்தம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று (26 மார்ச்)  இடம்பெறவிருந்த சந்திப்பில் தமது கட்சி கலந்து கொள்ளாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்து இருந்தார். ‘வடக்கில் இடம்பெற்று வரும் படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை ஜனாதிபதியுடன் தமது கட்சி எந்தச் சந்திப்பையும் மேற்கொள்ளாது’ எனவும் குறிப்பிட்டு ஆர் சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். வன்னிப் படை நடவடிக்கைகள் பெரும்பாலும் இப்பொது ஒரு சில 10 கிரோமீற்றருக்குள்ளேயே முடக்கப்பட்டு உள்ளது. இன்று தினம் தினம் மக்கள் கொல்லப்படுகின்றனர்.  யுத்தத்தை நடத்துகின்ற அரச தரப்பை சந்தித்து தங்களது நிலைப்பாட்டை வலியுறுத்துவதை விட்டுவிட்டு ‘படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும்வரை சந்திப்பை மேற்கொள்ள மாட்டோம்’ என்று ஜனாதிபதிக்கு கடிதம் போடுவது எவ்வகையில் வன்னி மக்களின் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நீங்கள் கேட்பதை மகிந்த அரசு மட்டுமல்ல எந்த அரசும் தந்துவிடாது. அதற்காகப் தொடர்ந்து அவர்களுடன் போராட வேண்டும். ‘நாங்கள் உங்களுடன் டூ. உங்களுடன் பேசமாட்டோம்’ என்று கோபித்துக் கொண்டிருக்க இது என்ன எங்கள் வீட்டு குழந்தைகளின் சண்டையா? மூத்த அரசியல் சாணக்கியன் என்று சொல்லப்படும் ஆர் சம்பந்தனின் அரசியல் சாணக்கியத்தால் என்ன பயன்?

யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வருபவர்கள் சரியான முறையில் கவனிக்கப்படுகிறார்களா என்பதை வன்னி முகாம்களில் நின்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் பி க்கள் மேற்பார்வை செய்திருக்க வேண்டும். பாராளுமன்றம் சென்று மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும்படி கோரி இருக்க வேண்டும். அப்படி கேட்பதற்கு முடியாவிட்டால் ‘எங்களை வன்னிக்கு அனுப்பி வையுங்கள்! எங்கள் மக்களோடு இருக்க விடுங்கள்!’ என்று பாராளுமன்றத்தில் போராடி இருக்க வேண்டும். அதற்கு அரசு சம்மதிக்கவில்லை என்றால் ஒரே நேரத்தில் தங்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை திறந்து சர்வதேசத்தின் அழுத்தத்தை இலங்கை அரசுக்கு எதிராகத் திருப்பி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இதுவரை நீங்கள் பிரிதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களுக்கு உங்கள் பாராளுமன்ற பதவியை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை. இன்று ஒட்டுமொத்த வன்னி மக்களும் அழிந்து கொண்டிருக்கிறார்கள். வன்னி மக்களுக்கு கொள்ளி வைப்பதற்காக நீங்கள் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினீர்கள். உங்கள் எம்பி பதவிகளை எதற்கு இன்னமும் காவிக்கொண்டு திரிகிறீர்கள்.

3. 

இதற்கிடையே லண்டன் கொழும்பு பெங்களுர் என்று இலங்கையின் நிலவரம் பற்றிய மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இலங்கைத் தமிழர்களின் பற்றி எரிகின்ற ஒரு பிரச்சினை பற்றி தமிழர்கள் கலந்துகொள்கிற மாநாடு. ஆனால் மூன்று மாநாடுமே பெரும்பாலும் இரகசியமான முறையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரு சாரார் மற்றைய மாநாட்டை குழப்பி விடுவார்கள் என்ற அச்சம் இரு தரப்பிலுமே காணப்படுகிறது. இது தமிழ் மக்கள் தங்களுடைய மிக முக்கிய அரசியல் விடயம் தொடர்பாக வெளிப்படையான விவாதம் ஒன்றை மேற்கொள்ள முடியாத சூழல் இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.

அறுபது நாட்களுக்குள் 3000 உயிர்கள் இழக்கப்பட்ட போதும் அந்த மக்களின் அவலங்களை அரசியலாக்குகின்ற மூன்றாம்தர அரசியலே நடைபெறுகின்றது. அவல ஓலங்களை ஐபிசி வானலைகளில் பரவவிட்டும், மரணத்தின் அவலத்தை ஜி ரிவியில் காட்சிப்படுத்தியும், தங்கள் புலி அரசியலை விற்கும் இவர்கள், ‘காணத் தவறாதீர்கள் சூரியாவின் ‘அயன்” என்று சொல்லவும் தவறுவதில்லை. மாறாக புலிப் புலம்பல் புலம்பி, அரசுக்கு வக்காலத்து வாங்கி, தங்கள் பழைய இயக்க சாகசங்களை தூசிதட்டி றீல்விடும் இணையங்களுக்கும் குறைவில்லை.

இந்த துருவ அரசியலில் இதுவரை தமிழ் மக்களின் அரசியல் நலன்கள் பந்தாடப்பட்டது. ஆனால் இன்று அதற்கும் மேல் சென்று தமிழ் மக்களின் – வன்னி மக்களின் தலைகளே பந்தாடப்படுகிறது.

இவ்வளவு அவலங்களுக்குப் பின்னரும் ஒரு காத்திரமான அரசியல் விவாதத்தை வெளிப்படையாக நடத்துவதற்கு முடியாத சூழல் இருக்கின்றது என்பது வேதனையான விடயம். புலிசார்பான அமைப்புகள் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்தால், புலி எதிர்ப்புக் குழுக்களும், அரச ஆதரவு சக்திகளும் அதனை குழப்ப விளைகின்றனர். அதேபோல் புலிக்கு ஆதரவற்றவர்கள் மாநாடுகளை போராட்டங்களை ஏற்பாடு செய்தால் புலி ஆதரவு சக்திகள் அவற்றைக் குழப்புகின்றனர். இதன் எதிரொலியே லண்டன் – கொழும்பு – பெங்களுர் மாநாடுகள் இரகசியமாக நடத்தப்படுவதற்குக் காரணம்.

லண்டன் மாநாடு நேற்று (26 மார்ச்) புலிகளுக்கு சார்பான அரசியல் நிலைப்பாட்டையுடைய பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் தமிழர்களுக்கான சர்வகட்சி பாராளுமன்றக் குழு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. டெல்லியில் நடக்க இருந்து பின்னர் சிங்கப்பூருக்கும் அதன் பின்னர் கொழும்பிற்கும் மாற்றப்பட்ட மாநாடு இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுசரணையுடன் இம்மாத இறுதிப் பகுதியில் நடைபெற இருக்கின்றது. பெங்களுர் மாநாடு இந்திய அரசில் தங்கியுள்ள ஈஎன்டிஎல்எப் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இம்மாநாடு ஏப்ரல் முற்பகுதியில் நடக்க இருக்கிறது.

இந்த மூன்று மாநாடுகளுமே ஒரே விடயத்தைப் பற்றியே பேசுகின்றன. அதாவது இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை. அவர்களின் எதிர்காலம். மூன்று மாநாட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் முக்கிய பங்கேற்று உள்ளனர். வட அமெரிக்கா ஐரோப்பா அவுஸ்திரெலியாவில் இருந்து வேறு வேறு புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் இந்த மாநாடுகளில் பங்கேற்கின்றனர்.

இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மட்டுமல்ல இந்த மாநாடுகளும் திரைமறைவிலேயே நடத்தப்படுகிறது. ‘ஏன் இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றது, என்ன விடயங்கள் விவாதத்திற்கு எடுக்கப்பட இருக்கின்றது’ என்பது பற்றிய விடயங்களை முன்னரே வெளிப்படுத்தி இருந்தால் அது பற்றிய விவாதங்களை மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி, மக்களுடைய கருத்துக்களையும் பெற்றிருக்க முடியும். மக்களையும் இன்றைய அரசியலுடன் ஈடுபடுத்தி இருக்க முடியும். அதுவே ஜனநாயகச் செயன்முறையாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாமல் தெரிவு செய்யப்பட்ட சிலர் (மக்களால் அல்ல), கூடி ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதனை வெளியிடுவது, அதற்கு மக்கள் ஆதரவைக் கோருவது ஜனநாயக நடைமுறையாகாது. இந்த மூன்று மாநாடுகளின் ஏற்பாட்டாளர்களுமே அடிப்படையில் மக்களை மிகத் தொலைவிலே வைத்துக்கொண்டு மக்கள் பற்றிய விவாதத்தை நடத்துகின்றனர்.

இந்த மாநாடுகள் நடத்தப்படுவதும் விவாதங்கள் ஊக்குவிக்கப்படுவதும் அவசியம். ஆனால் இந்த மாநாடுகளை அதன் ஏற்பாட்டாளர்கள் தங்கள் அரசியல் நலன்சார்ந்து கையில் எடுக்கும் அபாயம் உள்ளது. அது தொடர்பான விழிப்புணர்வு அதில் கலந்து கொள்பவர்களிடம் இருப்பது அவசியம். அவற்றிற்கு அப்பால் இவ்வாறான மாநாடுகள் உடனடித் தீர்வை ஏற்படுத்தாத போதும் தீர்வை ஏற்படுத்துவதற்கான விவாதிப்பதற்கான அரசியல் சூழலை உருவாக்க இவை அவசியம்.

லண்டன் – கொழும்பு – பெங்களுர் மாநாடுகள் வேறு வேறு நாடுகளில் மட்டுமல்ல வேறு வேறு அரசியல் பின்புலத்திலும் நடைபெறுகின்றன. இந்த மாநாடுகளின் ஏற்பாட்டாளர்கள், அதாவது பின்னணியில் உள்ளவர்கள், அவர்களே உண்மையான அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள். இன்றைய அவலங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய அதிகாரமும் அவர்களிடமே உள்ளது. அவர்களுடன் தொடர்ந்தும் மக்கள் சார்ந்து உரையாடுவதும் விவாதிப்பதும் தவிர்க்க முடியாதது.

30 வருடமாக ஆயுதத்தை நம்பிய தலைமை இன்று மரண ஓலத்தையே தனது அரசியல் ஆயுதமாக்கிக் கொண்டு உள்ளது. ஆனால் 30 வருடம் உறுதியான அரசியலுடன் விவாதித்து இருந்தால் ஏனைய சிறுபான்மை மக்களை மட்டுமல்ல பெரும்பான்மைச் சிங்கள மக்களது ஆதரவையும் தமிழர் போராட்டம் பெற்றிருக்கும்.

இந்திய அமைதிப்படையை வெளியேற்ற முற்பட்ட போது பிரேமதாசாவே பிரபாகரனை தம்பி என்று அழைத்தது மட்டுமல்ல மாவீரர் உரையும் இலங்கை முழுவதும் ஒலிபரப்பப்பட்டது. அதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. சுனாமியைத் தொடர்ந்து தமிழ் பகுதிகளுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டியவர்கள் எல்லைப்புற மாவட்டங்களில் உள்ள சிங்கள மக்கள். அன்றைய காலத்தில் தமிழ் – சிங்கள – முஸ்லீம் மக்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் ஒத்தழைத்தனர். ஆனால் திட்டமிட்ட இனவாதப் பிரச்சாரங்கள் அம்மக்கள் இணைந்துவிடமால் தடுத்தது.

இந்த மாநாடுகளால் முல்லை அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆனாலும் இவ்வாறான மாநாடுகள் விவாதங்கள் அதன் மீதான விமர்சனங்கள் மட்டுமே இலங்கையில் உள்ள இனமுரன்பாட்டை தீர்ப்பதற்கான அரசியல் சூழலை ஏற்படுத்தும். சகல சமூகங்களும் நெருங்கி வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். ஆயுதங்களிலும் பார்க்க இந்த மாநாடுகளும் விவாதங்களும் அவற்றின் மீதான விமர்சனங்களும் ஆரோக்கியமானதே.

வன்னியிலிருந்து ஒரு வாரத்தில் ஒன்பதாயிரம் பேர் வருகை

_mullai_1.jpg
வன்னியிலிருந்து கடந்த ஒரு வாரத்தில் சுமார் ஒன்பதினாயிரம் பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் செட்டிகுளம் நலன்புரிநிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  தற்போது வரும் மக்கள் எதுவித மாற்றும் உடைகளுமின்றி வருகின்றார்கள். அவர்கள் மாற்றுவதற்கு உடைகளும் வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நீண்ட நாட்களாக போசாக்கு உணவு உண்ணாதபடியால் சோர்வான நிலையில் காயங்களுடனும் பயங்கர கோலத்துடனும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இவர்கள் வருவதாக இராணுவ தரப்பினர் தெரிவித்தனர்.

தினமும் குறைந்தது ஆயிரம் பொது மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை வந்தடைவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.