விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. ஒரு வேளை அவர் கொல்லப்பட்டால் நான் மிகவும் வருத்தப்படுவேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு (என்டிடிவிக்கு) அளித்துள்ள பேட்டியில், இலங்கை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈழ ஆதரவாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
அந்த பேட்டியில் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது ..
விடுதலைப் புலிகளின் நோக்கம் உன்னதமானது. நல்ல தீர்ப்புக்காக உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்பது அற்புதமான கொள்கை. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின்மையால் அது தவறான பாதைக்கு திரும்பி விட்டது. அவர்களது லட்சியம் பெரிது. ஆனால் கையாண்ட முறை தவறாகி விட்டது.
பிரபாகரன் எனது நல்ல நண்பர், பயங்கரவாதி அல்ல. அவருடைய இயக்கத்தி்ல் பயங்கரவாதிகள் இருக்கலாம். அது பிரபாகரனுடைய தவறு அல்ல.
தீவிரவாதம் வேறு, இது வேறு. பிரபாகரனைப் பொறுத்தவரையில் எனக்கும், அவருக்கும் இடையே ஒரே ஒரு முறைதான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பிரன்ட்லைன் இதழுக்கு அவர் பேட்டி அளித்தபோது, நீங்கள் வெற்றி பெற்று தமிழ் ஈழம் மலர்ந்தால் ஜனநாயக ஆட்சியை நடத்துவீர்களா என்று கேட்டனர். அதற்கு பிரபாகரன், இல்லை, சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும் என்றார். அது மட்டும்தான் எனக்கு கருத்து மாறுபாடாக அமைந்தது.
இலங்கையில் தாக்குதலில் உயிரிழப்புகளை கேள்விப்படும் போது நான் மிகவும் மனம் வருந்துகிறேன். ஈழத்தமிழர் வாழ்வில் விரைவில் விடிவெள்ளி பிறக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரபாகரனை எதிர்க்கிறேன் – ஜெயலலிதா.
ஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன். இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
நாகர்கோவிலில் நேற்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஈழத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. என்றுமே ஆதரவுதான். ஆனால் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக உள்ளோம். அதனால் பிரபாகரனை எதிர்க்கிறோம் என்றார்.
சேது சமுத்திரத் திட்டத்தை முதலில் ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்று கேட்டதற்கு, மீனவர்கள் நலனுக்கு எதிரான திட்டமாக சேதுசமுத்திர திட்டம் இருப்பதால் அதனை நாங்கள் எதிர்க்கிறோம் என்று விளக்கினார் ஜெயலலிதா.
காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேராததால், தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, எங்களது நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக வின் சக்தி தேர்தலுக்குப்பின் தெரிய வரும் என்றார்.