கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பிரபாகரன் பயங்கரவாதி அல்ல எனது நல்ல நண்பர்- கருணாநிதி : பிரபாகரனை எதிர்க்கிறேன் – ஜெயலலிதா.

karunanidhi-prabhakaran.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. ஒரு வேளை அவர் கொல்லப்பட்டால் நான் மிகவும் வருத்தப்படுவேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு (என்டிடிவிக்கு) அளித்துள்ள பேட்டியில், இலங்கை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈழ ஆதரவாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

அந்த பேட்டியில் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது ..

விடுதலைப் புலிகளின் நோக்கம் உன்னதமானது. நல்ல தீர்ப்புக்காக உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்பது அற்புதமான கொள்கை. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின்மையால் அது தவறான பாதைக்கு திரும்பி விட்டது. அவர்களது லட்சியம் பெரிது. ஆனால் கையாண்ட முறை தவறாகி விட்டது.

பிரபாகரன் எனது நல்ல நண்பர், பயங்கரவாதி அல்ல. அவருடைய இயக்கத்தி்ல் பயங்கரவாதிகள் இருக்கலாம். அது பிரபாகரனுடைய தவறு அல்ல.

தீவிரவாதம் வேறு, இது வேறு. பிரபாகரனைப் பொறுத்தவரையில் எனக்கும், அவருக்கும் இடையே ஒரே ஒரு முறைதான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிரன்ட்லைன் இதழுக்கு அவர் பேட்டி அளித்தபோது, நீங்கள் வெற்றி பெற்று தமிழ் ஈழம் மலர்ந்தால் ஜனநாயக ஆட்சியை நடத்துவீர்களா என்று கேட்டனர். அதற்கு பிரபாகரன், இல்லை, சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும் என்றார். அது மட்டும்தான் எனக்கு கருத்து மாறுபாடாக அமைந்தது.

இலங்கையில் தாக்குதலில் உயிரிழப்புகளை கேள்விப்படும் போது நான் மிகவும் மனம் வருந்துகிறேன். ஈழத்தமிழர் வாழ்வில் விரைவில் விடிவெள்ளி பிறக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை எதிர்க்கிறேன் – ஜெயலலிதா.

jayalalitha.jpgஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன். இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

நாகர்கோவிலில் நேற்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஈழத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. என்றுமே ஆதரவுதான். ஆனால் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக உள்ளோம். அதனால் பிரபாகரனை எதிர்க்கிறோம் என்றார்.

சேது சமுத்திரத் திட்டத்தை முதலில் ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்று கேட்டதற்கு, மீனவர்கள் நலனுக்கு எதிரான திட்டமாக சேதுசமுத்திர திட்டம் இருப்பதால் அதனை நாங்கள் எதிர்க்கிறோம் என்று விளக்கினார் ஜெயலலிதா.

காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேராததால், தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, எங்களது நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக வின் சக்தி தேர்தலுக்குப்பின் தெரிய வரும் என்றார்.

இரானிய அமெரிக்க செய்தியாளருக்கு 8 ஆண்டுகள் சிறை

rokchana.jpgஉளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் இரானிய அமெரிக்க செய்தியாளரான ரோக்ஸானா சபரிக்கு இரானிய நீதிமன்றம் ஒன்று 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதாக, அவரது சட்டத்தரணி கூறியுள்ளார்.

இந்த வழக்கு தனியறையில் நடத்தப்பட்டது. வழக்கின் ஆதாரங்கள் எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்த தண்டனையை மிகவும் கடுமையான தண்டனை என்று பிபிசி கூறியிருக்கின்றது. சபரி முன்னர் பிபிசிக்காக செய்திகளை வழங்கியிருந்தார்.இந்த வழக்கின் முடிவுகள் குறித்து இரானிய நீதியமைச்சில் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை.

கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்ட சபரி அவர்கள், முதலில் சட்டவிரோதமாக பணியாற்றுவதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். இந்த வழக்கு அமெரிக்காவுடனான உறவுகளில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று இரானில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறியுள்ளார்.

மேல் மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு

election.jpgகடந்த மாகாண சபைத் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகத் தேர்தலை கண்காணிப்பதற்கான அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் அவ்வமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்துத் தெரிவிக்கையில்;

மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்த போதும் எம்மால் 47 சம்பவங்களையே உறுதிசெய்ய முடிந்துள்ளது. இதில் 37 சம்பவங்கள் பெரியளவானதாகும்.

அதாவது கம்பஹாவில் ஜே.வி.பி. உறுப்பினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆதரவாளர் பலியாகி மற்றொருவர் காயமடைந்த சம்பவத்துடன் மேலும் 16 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை கட்சிகளின் அலுவலகங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களையும் நாம் பதிவுசெய்துள்ளோம்.

நாம் சிறிய சம்பவங்களாக 10 முறைபாடுகளை பதிவு செய்துள்ளோம். இது சட்டவிரோத முறையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டமை மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் என்பன அடங்குகின்றன.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மொத்தமாக நாம் 47 முறைப்பாடுகளைப்பெற்ற நிலையில் மேல்மாகாண சபையில் தேர்தல் நடைபெற 6 தினங்கள் இருக்கையில் 47 முறைப்பாடுகளைப்பெற்றுள்ளோம். எனவே கடந்த மாகாண சபை தேர்தலுடன் இதுவரை இடம்பெற்ற சம்பவங்கள் சமனாக உள்ளபோதும் தேர்தல் நெருங்கும் போது சம்பவங்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை தமிழர் பிரச்சினை: அன்னிய நாட்டு பிரச்சினை. அன்னிய நாட்டு பிரச்சினையில் இங்குள்ள அரசியல் கட்சியினர் தலையிட முடியாது. – ஐகோர்ட்டில் வழக்கு

india-election.jpgஇலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி செய்தியாளர்நகரை சேர்ந்தவர் வி.கண்ணன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். மதுரை ஐகோர்ட்டில் அவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. தேர்தலின் போது முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நிலையான அரசு வேண்டும் என்று தேர்தலின் போது ஓட்டு கேட்கின்றனர். தேர்தல் முடிந்த பின்பு தங்களை எதிர்த்து போட்டியிட்ட அணியுடன் சேர்ந்து கொள்கின்றனர். அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு சேவை செய்வதை விட்டு விட்டு பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். மக்கள் நலனில் அரசியல் கட்சியினருக்கு அக்கறை இல்லை.

ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் போடப்படுகிறது. இந்த தொகையை கொண்டு மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எந்த கட்சிகளும் வாக்குறுதி கொடுப்பது இல்லை. தற்போது அரசியல் கட்சியினர் இலங்கை தமிழர் பிரச்சினையை தேர்தல் பிரசாரத்தின் ஆயுதமாக எடுத்துள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தமட்டும் அன்னிய நாட்டு பிரச்சினை. அன்னிய நாட்டு பிரச்சினையில் இங்குள்ள அரசியல் கட்சியினர் தலையிட முடியாது. இலங்கை பிரச்சினையில் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை அறிந்த அரசியல்வாதிகள் அந்த பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஓட்டு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். தமிழ் பெண்கள் சிங்கள ராணுவத்தினரால் கற்பழிக்கப்படுகின்றனர். இதற்காக பலமுறை வக்கீல்களும், தமிழ் அமைப்புகளும் போராட்டம் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில தேர்தல் கமிஷனுக்கு 11.4.2008 அன்று மனு அனுப்பினேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கிருஷ்ணன், டி.ராஜா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வி.கோபால்சாமி ஆஜராகி வாதாடினார். விசாரணையின் போது நீதிபதிகள், “மனுதாரர் தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பி 6 நாட்கள் தானே ஆகிறது. அந்த மனு தேர்தல் அதிகாரிகளுக்கு இன்னும் கிடைத்து இருக்காதே. அதற்குள் எப்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும்” என்றனர். அதன்பின்பு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ஈழத்துக்கு குரல் கொடுக்க எனக்கு வாய்ப்பு தாருங்கள்: வைகோ

india-elc-2009.jpgஈழத் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். விருதுநகர் தொகுதி மதிமுக வேட்பாளர் வைகோ சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஈழத்தமிழர் பிரச்சனையில் இலங்கை அதிபர் ராஜபச்சேவுக்கு மத்திய அரசு உதவி வருகிறது. ஈழத்தமிழர்களை அழிக்க ராஜபக்சே முடிவு எடுத்து உள்ளார். இப்போது போரை நிறுத்துங்கள் என்றால் அவர் எப்படி நிறுத்துவார். பாராளுமன்ற தேர்தலில் தமிழர்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவே ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு அக்கறை காட்டுகிறது. எனவே ஈழத்தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்றார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் பணய கைதிகளை விடுவித்துள்ளதாக நேட்டோ கூறுகிறது

piratasdentro.jpgசோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடித்து பணயமாக வைக்கப்பட்டிருந்த 20 பேரை ஏடன் வளைகுடாவில் பணியில் ஈடுபட்டிருந்த தமது கடற்படையினர் விடுவித்துள்ளதாக நேட்டோ கூறுகிறது.

அங்கு பணியில் ஈடுபட்ட நேட்டோவின் டச்சு கடற்படையினர் கடற்கொள்ளையர்களை நிர்ப்பந்தித்து, அவர்கள் பிடித்து வைத்திருந்த, பெரும்பாலும் ஏமன் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்று நம்பப்படுகின்ற பணயக்கைதிகளை விடுவிக்கச் செய்ததாக நேட்டோ பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த கடற்கொள்ளையர்களின் ஆயுதங்கள் களையப்பட்ட போதிலும், டச்சுச் சட்டப்படி அவர்களை கைது செய்வது சட்ட விரோதம் என்பதால், அவர்களை தடுத்து வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இரண்டு பெல்ஜியம் நாட்டவர் மற்றும் ஒரு டச்சுக்காரர் உள்ளடங்கலாக 10 மாலுமிகளுடன் சேர்த்து பெல்ஜியம் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்துள்ளதாக பெல்ஜியம் கூறியுள்ளது

Sri Lanka: Trapped and Under Fire : HRW’s Photogenic Report

HRW Logohttp://www.hrw.org/en/features/sri-lanka-trapped-and-under-fire

Human Rights Watch researcher Anna Neistat says both sides in Sri Lanka’s conflict are violating the laws of war. Approximately 100,000 civilians are trapped in a government-declared “no-fire zone” in the northern Vanni region. Tamil Tiger (LTTE) rebels have prevented civilians from leaving a tiny strip of land, while government forces have repeatedly and indiscriminately shelled the area.

These photos are from a makeshift hospital in Putumattalan that was treating survivors of attacks on April 8 and 9, 2009.  Many were women and children who were waiting in a food distribution line in Pokkanai when artillery shells hit.

ஐக்கிய நாடுகள் சபைக்கு முடியாவிட்டால் யாரால் வன்னி மக்களை காப்பாற்ற முடியும்: தமிழீழ விடுதலைப்புலிகள்

nadesan-10.jpgபொது மக்களின் இழப்புகளை தடுக்கும் ஒரே அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை, வன்னியில் உள்ள மக்களை காப்பாற்ற முடியாதுவிட்டால் யாரால் அவர்களை காப்பாற்ற முடியும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கேள்வி எழுப்பினார்.
 
வன்னியில் உள்ள மக்களின் நிலைமையை தெரிந்து கொள்வற்காக இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நம்பியாரின் வன்னிக்கான வருகையை இலங்கை அரசாங்கம் தடுக்கக்கூடாது என தமிழீழ விடுதலைப்புலிகள் கோரியுள்ளனர்.

நம்பியார் வன்னிக்கு வந்தால் உண்மை நிலை தெரியவந்து விடும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் அவரின் வன்னி வருகையை தடுத்துள்ளதாக நடேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் யுத்த நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் -புன்னியாமீன்

day-for-monuments.jpgநினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் (International Day for Monuments and Sites) ஆண்டு தோறும் ஏப்ரல் 18ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1982ம் ஆண்டில் டுயுனீசியாவில் நடைபெற்ற நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக மாநாட்டின் தீர்மானப்படி 1983ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22வது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18ம் தேதியை நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவமிக்க உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைமைத் தன்மை தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவினை ஏற்படுத்துவதும் அவற்றைக் கண்ணியப்படுத்தி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும். உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளிலும் வரலாற்று முக்கியத்துவமிக்க மரபுரிமைச் சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த மரபுரிமைச் சின்னங்கள் நாட்டின் வரலாற்றுச் சான்றுகளை பதிவுகளாக்குகின்றன.

எனவே இந்த மரபுரிமைச் சின்னங்கள் பற்றியும் அவற்றின் இருப்புகள் வரலாற்று பின்னணிகள் பற்றிய அறிவும் விளக்கங்களும் மக்களுக்கு தேவைப்படுகிறது. இத்தினத்தில் மக்களுக்கு இது பற்றிய தெளிவை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இச்செயற்திட்டத்தை நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக சபை (International Council on Monuments and Sites) மிகச்சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக சபை (International Council on Monuments and Sites) என்பது உலக அளவில் உயர்தொழில் அறிஞர்களை அதாவது கட்டிடக்கலைஞர்கள், வரலாற்றாளர்கள், தொல்லியலாளர்கள், கலை வரலாற்றாளர்கள், புவியியலாளர்கள், மானிடவியலாளர்கள், பொறியியலாளர்கள், நகரத் திட்டமிடலாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய ஒர் அமைப்பு ஆகும். ஆங்கிலத்தில் ICOMOS என்னும் சுருக்கப் பெயரால் இந்தச் சபை அழைக்கப்படுகிறது. பண்பாட்டு மரபு சார்ந்த இடங்களை கட்டிடக்கலை மற்றும் தொல்லியல் சார்ந்த மரபுச் சின்னங்களை பராமரிப்புச் செய்வதில், ஈடுபட்டுள்ள, சர்வதேச மட்டத்திலான ஒரே அரசுசாரா நிறுவனமும் இதுவேயாகும்.

1964ம் ஆண்டில் வெனிஸ் நகரில் கூடிய மாநாட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவுச் சின்னங்களையும், அமைவுத் தளங்களையும் பரிபாலனம் செய்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பிலான பட்டயத்தின் அடிப்படையிலேயே இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பட்டயம் வெனிஸ் பட்டயம் எனப் பரவலாக அறியப்படுகிறது.

உலக மரபுத் தளங்கள் தொடர்பில் இவ்வமைப்பு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்துக்கு (யுனெஸ்கோ) ஆலோசனைகளை வழங்கி வருகிறது. உலகளாவிய ரீதியில் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாப்பதில் இந்த அமைப்பு மிகத்திறம்பட செயற்பட்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக உலகின் பண்பாட்டு மரபுகளின் பல்வகைமை தொடர்பிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும், பரிபாலனம் செய்வதிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 18ம் தேதியை நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக நாள் என அறிவித்துக் கொண்டாடி வருகிறது

இன்று கட்டிடக்கலை, தொல்பொருட்கள் (artifacts), தொல்லுயிர் எச்சம், மற்றும் நிலத் தோற்றங்கள் என்பன உள்ளிட்ட எஞ்சிய பொருட்களைக் வெளிக்கொணர்ந்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்யப்படும் மனிதப் பண்பாடு பற்றிய அறிவினை தொல்பொருளியல் (Archaeology) ஊடாக பெற முடிகிறது.

தொல் பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச் சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.

கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டிடக்கலைக்குள் அடக்கும். ஆக இத்துறைகள் ஊடாக நினைவுச்சின்னங்களுக்கும், வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களுக்கும் உலகளாவிய ரீதியில் விழிப்புணர்வை வழங்கி அவற்றைப் பேணி பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.

ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.4.8 கோடி பரிசு

images-ipl.jpg2 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கியது. மே 24 ந்தேதி வரை இந்தப்போட்டி அங்குள்ள 8 நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 2 வது இடம் பிடித்த சென்னை சூப்பர் சிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
 
இந்தப்போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.4.8 கோடி பரிசாக வழங்கப்படும். 2 வது இடத்துக்கு ரூ.2.4 கோடி கிடைக்கும்.  இதில் விளையாடும் 120 வீரர்கள் ரூ.1430 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளனர். இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
 
இதில் டோனி அதிகபட்சமாக 52 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக தெண்டுல்கர், கங்குலி, யுவராஜ்சிங் உள்ளனர். வெளி நாட்டு வீரர்களில் அதிகமான தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டவர் ஜெயசூர்யா ஆவார்.  ஐ.பி.எல். போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். ரூ.10 லட்சம் முதல் ரூ.1.8 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.