பிரபாகரன் பயங்கரவாதி அல்ல எனது நல்ல நண்பர்- கருணாநிதி : பிரபாகரனை எதிர்க்கிறேன் – ஜெயலலிதா.

karunanidhi-prabhakaran.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. ஒரு வேளை அவர் கொல்லப்பட்டால் நான் மிகவும் வருத்தப்படுவேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு (என்டிடிவிக்கு) அளித்துள்ள பேட்டியில், இலங்கை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈழ ஆதரவாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

அந்த பேட்டியில் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது ..

விடுதலைப் புலிகளின் நோக்கம் உன்னதமானது. நல்ல தீர்ப்புக்காக உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்பது அற்புதமான கொள்கை. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின்மையால் அது தவறான பாதைக்கு திரும்பி விட்டது. அவர்களது லட்சியம் பெரிது. ஆனால் கையாண்ட முறை தவறாகி விட்டது.

பிரபாகரன் எனது நல்ல நண்பர், பயங்கரவாதி அல்ல. அவருடைய இயக்கத்தி்ல் பயங்கரவாதிகள் இருக்கலாம். அது பிரபாகரனுடைய தவறு அல்ல.

தீவிரவாதம் வேறு, இது வேறு. பிரபாகரனைப் பொறுத்தவரையில் எனக்கும், அவருக்கும் இடையே ஒரே ஒரு முறைதான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிரன்ட்லைன் இதழுக்கு அவர் பேட்டி அளித்தபோது, நீங்கள் வெற்றி பெற்று தமிழ் ஈழம் மலர்ந்தால் ஜனநாயக ஆட்சியை நடத்துவீர்களா என்று கேட்டனர். அதற்கு பிரபாகரன், இல்லை, சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும் என்றார். அது மட்டும்தான் எனக்கு கருத்து மாறுபாடாக அமைந்தது.

இலங்கையில் தாக்குதலில் உயிரிழப்புகளை கேள்விப்படும் போது நான் மிகவும் மனம் வருந்துகிறேன். ஈழத்தமிழர் வாழ்வில் விரைவில் விடிவெள்ளி பிறக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை எதிர்க்கிறேன் – ஜெயலலிதா.

jayalalitha.jpgஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன். இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

நாகர்கோவிலில் நேற்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஈழத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. என்றுமே ஆதரவுதான். ஆனால் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக உள்ளோம். அதனால் பிரபாகரனை எதிர்க்கிறோம் என்றார்.

சேது சமுத்திரத் திட்டத்தை முதலில் ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்று கேட்டதற்கு, மீனவர்கள் நலனுக்கு எதிரான திட்டமாக சேதுசமுத்திர திட்டம் இருப்பதால் அதனை நாங்கள் எதிர்க்கிறோம் என்று விளக்கினார் ஜெயலலிதா.

காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேராததால், தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, எங்களது நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக வின் சக்தி தேர்தலுக்குப்பின் தெரிய வரும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • BC
    BC

    என்ன இவர்!.புலிவால்களை திருப்திபடுத்துவதற்காக இவ்வளவு குழப்பமாகவும் கோமாளிதனமாகவும் கதைக்க வேண்டுமா? இவர் என்ன சொன்னாலும் அவர்களுக்கு துரோகி கருணாநிதி தான்.

    Reply
  • நாஞ்சில் கி மனோகரன்
    நாஞ்சில் கி மனோகரன்

    பிரபாகரனை சமீபத்தில் உறுதியக கொல்லப்பட போகிறார் என்று யாராவது உங்களிடம் உறுதியாக கூறினார்களா??.சில நாட்களுக்கு முன்பு “விடுதலைப் புலிகள் உங்களை கொல்ல அச்சுறுத்தல் கடிதம் அனுப்பினார்கள்” என்றீர்களே அது!!.தமிழ் மக்கள் வேறு,விடுதலைப் புலிகள் வேறு,என்றுதான் இங்கு பலர் கூற கேள்விப் பட்டிருக்கிறேன்!,நீங்கள் கூறுவதைப் பார்த்தால்,”பிரபாகரன் வேறு,விடுதலைப் புலிகள் வேறு” என்றல்லவா அர்த்தமாகிறது!!!.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது,20பது ஆண்டுகளுக்கு முன்பு,தேர்தல் பிராச்சார கூட்டத்தில் அழுதீர்கள்,”ஜோசியர் சொல்லிவிட்டார் நான் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குதான் உயிரோடு இருப்பேன்,கடைசிமுறையாக உங்களிடம் ஓட்டுக்காக வருகிறேன் என்று நா தழுதழுத்தீர்கள்!,என் கண்களில் நீர் ததும்பியது-அப்போது அரைக்கால் சட்டை அணிந்திருந்த எனக்கு இப்போது வயதாகிவிட்டது,ஆனால் அதே வசனத்துடன் இப்போதும் இன்னொரு ரவுண்டு வருகிறீர்கள்!-ஒரு சிரிய வித்தியாசம் இப்போது பிரபாகரனையும் சேர்த்துக் கொண்டுள்ளீர்கள்!!.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தேர்தல். பல்டி. அதில் அவர் தான் ஒரு கலைஞன் என்பதை கருனாநிதி பலதடவை நிரூபித்திருக்கிறார்.
    ஜெயலலிதா அவரில் கற்றுக்கொண்ட மாணவியே!அவரின் கலைநுட்பத்தை கற்றுக் கொள்ள இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும். மற்றும்படி ஒரு காமராஜ்ரையோ ஒரு ப.ஜீவானந்தத்தையோ தமிழ்நாடு கண்டுகொள்வதற்கு இன்னும் எவ்வளவு…?

    Reply
  • மாயா
    மாயா

    எல்லாரும் கத்துறது தங்கட பிளைப்புக்காகத்தான். தமிழாவது மண்ணாவது?

    Reply
  • பூனை
    பூனை

    ஏன் பிரபாகரன் மகன் சார்லஸ் அன்ரனி கரும்புலி ஆகவில்லை?

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பர்; அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தனது நண்பர் எனக் குறிப்பிட்டது கவலை தருகின்றது என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

    கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ்நாடு முதலைமைச்சர் மு.கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பன். ஆனால், எமது நண்பன் கருணாநிதி எமது எதிரியான விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தனது நண்பன் என குறிப்பிட்டது எமக்கு கவலை தருகின்றது.

    எனினும் தற்போது தேர்தல் காலம் என்பதனால் தமிழகத்தில் அரசியல் இலாபத்தை கருத்தில் கொண்டே கருணாநிதி இந்த அறிக்கையை விடுத்திருப்பார் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழக பிரசாரக் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை முக்கிய சர்ச்சையாக்கப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நாளுக்கு நாள் சூடுபிடித்துவரும் நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி தெரிவித்திருக்கும் கருத்தை அவரின் தேர்தல் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நிராகரித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

    கருணாநிதி இந்தப் பேட்டியளித்த சில மணித்தியாலங்களில் காங்கிரஸ் கட்சி அவரது கருத்துகளை வெளிப்படையாக நிராகரித்திருக்கின்றது. புதுடில்லியில் நேற்று மாலை இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் கபில் சிபால் “கருணாநிதியின் கருத்துக்கள் தனிப்பட்டவை. பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு காங்கிரஸ் கோரும்’ என்று கூறியிருக்கின்றார்.

    “அது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஆனால், நாம் விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாகவே கருதுகிறோம். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் சம்பந்தப்பட்ட அனைவரையும் நாம் பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றோம். இதுவே எமது நம்பிக்கை’ என்று கபில் சிபால் கூறியிருக்கின்றார்.

    பிரபாகரன் குறித்து கருணாநிதி தெரிவித்திருக்கும் கருத்தைப் பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸைச் சாடியிருக்கிறது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் கருணாநிதி மீது ஜெயின் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியதை அடுத்து 1997 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்ட காங்கிரஸ், இப்போது இந்தப் பிரச்சினையில் இருந்து நழுவ முடியாது என்று பாரதிய ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று நாம் ஏற்கனவே கூறியிருக்கின்றோம். மோதல்கள் இடம்பெறும் பகுதிக்குள் அகப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழ் குடிமக்கள் மீது மாத்திரமே எமக்கு அக்கறை? என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

    தொலைக்காட்சி சேவைக்கு கருணாநிதி அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கும் கருத்துகளை காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக நிராகரித்திருப்பதால் எதிரணிக் கட்சிகள் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சர்ச்சைகளை உருவாக்க முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. புதுடில்லியில் காங்கிரஸ் பேச்சாளர் கருணாநிதியின் கருத்துகள் தொடர்பில் வெளியிட்ட கருத்துகளை தமிழ்நாடு மாநில காங்கிரஸ்காரர்கள் எந்த விதமாக நோக்கி தேர்தல் பிரசாரங்களின்போது செயற்படுவர் என்பது அவதானிகளால் முக்கியமாக நோக்கப்படுகிறது.

    Reply
  • BC
    BC

    இப்போ கருணாநிதி என்ன சொல்கிறார் என்றால் “என்டிடிவியில் நான் கூறிய கருத்துக்களை அவர்கள் முழுமையாக வெளியிடவில்லை. நான் கூறிய செய்தி திரித்துக் கூறப்பட்டுள்ளது. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு எதிரான டிவி.”

    Reply