கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இலங்கைத் தமிழ் இடதுசாரி கட்சிகள் ஈடாட்டம்!

இலங்கைத் தமிழ் இடதுசாரி கட்சிகள் ஈடாட்டம்ிய வகையில் இடதுசாரிப் பாரம்பரியத்தோடு செயற்படுகின்ற ஒரே கட்சியான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி மற்றும் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்களால் பிரித்தானியாவில் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி என்ற இரு கட்சிகளும் கொரோன காலத்து குழுவாத சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளன. தனிநபர் குழுவாத முரண்பாட்டால் கட்சியின் உறுப்பினர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டார். அதற்கு முன்னரும் பின்னரும் இக்குழுவாத போக்கு காரணமாக கட்சியில் இருந்து சிலர் வெளியேறியும் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பும் இக்குழுவாத போக்கிற்குள் இழுத்துவிடப்பட்டு உள்ளது.

இவ்விரு கட்சிகளுமே சராசரி மக்களைப் பொறுத்தவரை முகவரியற்ற கட்சிகளாக இருந்த போதும் நுண் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட அமைப்புகள். அமைப்பு வடிவத்தில் இயங்குகின்ற போராட்டங்களை முன்னெடுக்கின்ற அமைப்புகள். புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி இலங்கை தமிழர்கள் மத்தியில் பல போராட்டங்களை நடத்திய வரலாற்றைக் கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன் கிந்துசிட்டி மயானப் போராட்டம் முக்கியமானது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் ஒரு பலமான குரலாக இருந்து வருகின்றது. அதேபோல் பிரித்தானியாவில் தமிழ் சொலிடாரிட்டி அகதிகள் உரிமை, தொழிலாளர் உரிமை போன்றவற்றிற்காக பிரித்தானியாவில் உள்ள ஏனைய இடதுசாரி மற்றும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராடி வருகின்றது. இவ்வமைப்புகள் மீது பல விமர்சனங்கள் இருந்த போதும் அமைப்பு வடிவில் இயங்குகின்ற இடதுசாரி நிலைகொண்ட அமைப்புகள் இவையிரண்டுமே.

உங்களுக்கு தெரிந்த வலதுசாரிகளை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் அந்தப் பட்டியல் மிக மிக நீண்டு செல்லும். ஆனால் உங்களுக்கு தெரிந்த இடதுசாரிகளை அடையாளம் காட்டுங்கள் என்று கேட்டுப் பாருங்கள். ஓரிரு பெயர்களை முன் வைத்ததுமே ‘அவரை இடதுசாரி என்று யார் சொன்னது? என்ற கேள்வி வெவ்வேறு திசைகளில் இருந்து வரும். ‘தோழர்’ என்று பெயருக்கு முன் போட்டால் இடதுசாரியா? ‘மார்க்ஸ், லெனின், கார்ள் மார்க்ஸ்’ படத்தை முகநூல் வட்ஸ் அப் ப்ரோபைலில் போட்டால் இடதுசாரியா? மார்க்ஸ் படம் போட்ட தேநீர் கப்பில் ரீ குடித்தால் இடதுசாரியா? இப்படி ஆளுக்கு ஒரு அடையாளத்தோடு நான் கொம்னிஸ்ட், நான் சோசலிஸ்ட், நான் லெப்டிஸ்ட் என்ற தோரணையோடு பலர் உலாவருகின்றனர்.

இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே வாழ்கின்ற இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியிலும் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்டவர்கள் மிகச் சிறுபான்மையினராகவே உள்ளனர். வலது சாரிக் கருத்தியலுடன் ஒப்பிடுகையில் இடதுசாரிகள் முற்போக்கானவர்களாகவும் சக மனிதர்களை மதத்தவரை இனத்தவரை ஒடுக்கப்பட்ட சாதியினரை பெண்களை மதிப்பவர்களாக இருந்த போதிலும் பல்வேறு காரணங்களாலும் இக்கருத்தியல் பிரிவினரின் கருத்தியல் பிரதான அரசியல் சமூக நீரோட்டத்தில் இல்லை. அதற்கு தங்களை இடதுசாரிகளாக காட்டிக்கொள்ளும் பலரின் தனிமனித நேர்மையின்மையும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இந்தப் பின்னணியிலேயே தனிப்பட்ட ஆண் – பெண் உறவை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய அரசியலையும் அவர்கள் சார்ந்த அரசியல் அமைப்புகளையும் மலினப்படுத்தும் போக்கு இக்கொரோனா காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு முதற் களப்பலியானவர் புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் நன்கு அறியப்பட்ட உறுப்பினர் மு மயூரன். இவ்வாண்டு மார்ச் 21 கட்சியின் அரசியற் குழு வருமாறு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மு மயூரன் பெண்களுடன் முறைகேடாக நடந்துகொண்டுள்ளார்; என்ற குற்றச்சாட்டுக்கள் கட்சிக்கு முன்வைக்கப்பட்டதாகவும் மு மயூரன் முன்வைத்த விளக்கங்கள் நம்பகத்தன்மையற்றவையாகவும் முன்னுக்குப் பின் முரணாணதாக இருப்பதாகவும்; கட்சி குற்றம்சாட்டி அவரை கட்சியின் வெகுசன அமைப்புகளிலும் வகித்த பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக இடை நிறுத்தி வைப்பதென அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இக்குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட பெண், மு மயூரனுக்கும் தனக்கும் இருந்த உறவை வஞ்சக எண்ணத்தோடு அரசியல் பழிவாங்கல்களுக்கு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி இருந்தார். அவர் மு மயூரன் மீது சுமத்தப்பட்ட பழியை களைவதற்காக தனது முகநூலில் குற்றம்சாட்டியவர்களை கடுமையாக விமர்சித்தும் வருகின்றார்.

கட்சிக்கு அல்லது கட்சியில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருக்கு நிதிப்பங்களிப்பினைச் செய்த மோகனதர்ஷினி என்பவர் மேற்கொண்ட தனிநபர் தாக்குதலே இதுவென கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன. மோகனதர்ஷினியிடம் இருந்த பெறப்பட்ட பணம் மீளளிக்கப்பட்ட போதும் அவர் கட்சியில் அதீத செல்வாக்கை செலுத்துவதாகவும் அவ்வட்டாரங்கள் தேசம்நெற் க்கு தெரிவிக்கின்றன. இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த ஒரே இடதுசாரி அமைப்பான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி யின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதன் தலைவராக சி கா செந்தில்வேல் உள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் பொதுவெளியில் கருத்துக்கள் எதையும் வெளியிடவில்லை. ஆனால் பலரும் அவருக்கு இந்நிலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இதே போன்றதொரு குற்றச்சாட்டு பிரித்தனியாவில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி கண்டுவரும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் மீதும் சுமத்தப்பட்டு உள்ளது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தரும் தமிழ் அரசியல், கலை, இலக்கிய எழுத்துக்கள் மூலமும் அறியப்பட்டவரான சேனன் உருவாக்கி இருந்தார். இன்று இவ்வமைப்பு கணிசமான உறுப்பினர்களைக் கொண்டிருப்பதுடன் புலம்பெயர் நாடுகளில் அமைப்பு வடிவில் உள்ள ஒரே தமிழ் இடதுசாரி அரசியல் ஸ்தாபனம் இதுவென்றால் அது மிகையல்ல.

தங்களை முற்போக்காளர்கள் பெண்ணிய போராளிகள் என முத்திரைகுத்திக் கொண்ட 20 பேர் கையெழுத்திட்ட முகநூல் போராட்டம் ஒன்று ஓகஸ்ட் பிற்பகுதியில் பெரும் பரபரப்புடன் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர் மோகனதர்ஷினி, தீப்பொறி அமைப்பினரான ராகுல் சந்திரா (ரகுமான் ஜான்) ஆகியோர் கையெழுத்திட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். குற்றம்சாட்டப்பட்டவருடனும் குற்றம்சாட்டப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி அமைப்புடனும் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர்களும் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்திருந்தவர்களுமே இப்போராட்டத்தில் குதித்துள்ளனர். முற்றிலும் தனிப்பட்ட வஞ்சம் தீர்க்கின்ற செயலாகவே இது பார்க்கப்படுகின்றது.

தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிக உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கும் சூழலில் தங்கள் சொந்த நலன்களை முன்நிறுத்தி அப்பாவிப் பெண்களின் பெயர்களை தெருவுக்கு இழுத்துவிடுகின்ற முயற்சியாக மட்டுமே இதனைப் பார்க்க முடிகின்றது. ஏற்கனவே தமிழ் பெண்கள் பொது வெளிக்கு வரமுடியாத அளவுக்கு அவர்கள் அச்சமான சூழலில் உள்ள போது காதல் மற்றும் உறவுப் பிரச்சினைகளை பொதுவெளியில் கொண்டுவந்து விவாதித்து பெண்களை கேவலப்படுத்துவதும் இடம்பெற்று வருகின்றது. தங்களுடைய கருத்துக்கு மாறான பதிவுகளுக்கு ‘லைக்’ போட்டவர்களை அணுகி அவர்களை அச்சுறுத்திய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் ‘தம்பி எனக்கு வயசாச்சு இவையோட எனக்கு மல்லுக்கட்ட முடியாது. அது தான் ‘லைக்’கை எடுத்துப்போட்டன்’ என தேசம்நெற் க்கு தெரிவித்தார். ‘தம்பி நாளைக்கு உங்களைப் பற்றியும் ஏதும் எழுதிப் போடுவினம், கவனம்’ என்று என்னை எச்சரிக்கையும் செய்தார். முகநூல் ரவுடிகள் ஜாக்கிரதை.

புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி போல் குழுவாதத்திற்குள் சிக்காத தமிழ் சொரிடாரிட்டி அமைப்பு மேற்படி குற்றச்சாட்டை முற்றிலும் பாறுபட்ட கோணத்தில் அணுகியுள்ளது. தமிழ் சொலிடாரிட்டியின் முக்கியஸ்தர் ராஜரஞ்சன் புஸ்பராகவன் இவ்விடயம் தொடர்பில் வெளியிட்ட பதிவில்: “அரசியல் ரீதியாக அமைப்பை எதிர்கொள்ள வக்கற்றவர்கள் இத்தகைய சிறுமைத்தனமான செயல்களில் – அவதூறுகளில் ஈடுபடுகிறார்கள். இதில் சம்மந்தப்பட்டவர்கள் பலரது அரசியற் போதாமை பல முன்பே விமர்சிக்கப் பட்டிருக்கிறது. இதில் பலர் சமூக விரோத அரசியலை நீண்ட காலம் செய்து வருபவர்கள் என்பது தெரிந்த விசயமே” எனத் தெரிவித்துள்ளார். மேலும் “அவதூறுகளுக்கு நாம் அடிபணியப் போவதில்லை“ என்றும் அறிவித்துள்ளனர்.

இவ்வாறான தனிமனித உறவு சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் இது ஆரம்பமும் அல்ல முடிவும் அல்ல என்பது தெளிவாகின்றது. தமிழ் இடதுசாரி அரசியல் ஒரு தெளிவுக்கு வருவதற்கு முன் இன்னும் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என்பது திண்ணம். இவற்றை கடந்துசெல்லும் வல்லமை ஏற்கனவே நலிந்துள்ள இடதுசாரி ஆர்வலர்களிடம் இருக்கின்றதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஆப்கானிஸ்தான் தொடக்கமும் அல்ல முடிவும் அல்ல : மேற்குலகின் தலையீடுகள் எப்போதும் ஆபத்தானதே !

இன்று ஆப்கானின் நெருக்கடிகள் ஒன்றும் புதில்ல. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகள் காலம் காலமாகச் செய்துவருகின்ற குறளி வித்தைகளின் தொடர்ச்சியே. செல்வத்தால் கொழுத்த மேற்கு நாடுகள் ஐநா வின் பொது உடன்பாடு இன்றி. ஏனைய நாடுகளில் தலையீடு செய்வது தங்களின் சொந்த நலன்களுக்காக மட்டுமே. அதனால் இத்தலையீடுகள் பெரும்பாலும் அந்நாடுகளைச் சீரழிவிற்குள்ளேயே தள்ளி விடுகின்றன. அண்மைய தசாப்தங்களில் வளைகுடா யுத்தம் – ஈராக், லிபியா, யேர்மன், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளில் தலையீடு செய்து அங்கிருந்த அதிகாரக் கட்டமைப்புகளை உடைத்து தங்களுக்கு சாதகமான பொம்மைத் தலைமைகளை உருவாக்கும் முயற்சி எதனிலும் மேற்குலகம் வெற்றிபெறவில்லை.

ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்கின்றோம் என்ற பெயரில் இந்த மேற்கு நாடுகள் நேரடி அல்லது மறைமுக தலையீடுகளைச் செய்து அந்நாடுகளின் மக்களையும் வளங்களையும் அழித்து அந்நாடுகளை பல தசாப்தங்களுக்கு முன்னேற முடியாதளவிற்கு சீரழித்து வந்துள்ளன. ஈராக், லிபியா போன்ற நாடுகளில் ஆராஜகப் போக்குகளை ஆரம்பத்தில் ஊக்குவித்தவர்களும் இந்த மேற்கு நாட்டினரே. ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசைனுக்கு உயிரியல் ஆயுதங்களை வழங்கியது, லிபிய அதிபராக இருந்த கேர்ணல் கடாபிக்கு ஆயுதங்கள், நிதியை வழங்கியது மேற்கு நாடுகளே. ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன்களையும் தலிபான்களையும் தொடர்ந்து அல்ஹைடா பின்லாடனையும் வளர்த்துவிட்டது இந்த மேற்குலகமே. சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் க்கு ஆயுதம் வழங்கி வளர்த்ததும் இவர்களே. இப்போது தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடாத்தியதும் இந்த மேற்குலகமே.

இவ்வாறெல்லாம் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுக்கும் இந்த மேற்குலகின் நடவடிக்கைகள் தங்களுக்கு லாபத்தை தரவில்லை என்றால், அவர்கள் அம்போ என்று அந்த நாடுகளை கைவிட்டு ஓடிவிடுவார்கள். இதுதான் ஒவ்வொரு தலையீட்டின் போதும் நடைபெற்றது. அதுவே ஆப்கானிஸ்தானிலும் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு முன்னர் அமெரிக்க நேட்டோ படைகளுடன் சேர்ந்து போரிட்ட குர்திஷ் போராளிகள் கைவிடப்பட்டனர். அமெரிக்க துருப்புக்கள் மீளப்பெறப்பட்ட போது குர்திஷ் வீரர்கள் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு விடப்பட்டனர். அமெரிக்க நேசநாட்டுப் படைகளுக்கு மொழிபெயர்ப்பு மற்றும் உதவிகளுக்கு உதவிய உள்ளுரவர்கள் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். இவர்களில் பல நூற்றுக்கணக்கானோரை பயங்கரவாதிகளிடம் கைவிட்டுவிட்டே இந்த மேற்கத்தைய படைகள் வெளியேறின. வெளியேறிக் கொண்டிருக்கின்றன.

இதே மாதிரியான அரசியல் சூழல் இலங்கையிலும் இருந்தது. 1980களில் தனக்கு மாறாக அரெிக்காவுடன் உறவைப் பேணிய இலங்கை அரசுக்கு பாடம் புகட்ட இந்திய அரசு விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஆயுதப் பயிற்சியும் வழங்கி, ஆயுதங்களையும் வாரி வழங்கியது. ஆனால் இந்திய புலனாய்வுத்துறை இந்தப் போராளிகளுக்கு தமிழீழம் அமைவதை இந்தியா ஒரு போதும் அனுதியாது என்பதை மிகத் தெட்டத் தெளிவாக தெரிவித்தும் இருந்தது. ஆனால் இந்த ‘ஈ’ அமைப்புகள் (EPRLF & EPDP) தவிர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் என்பன மக்களை தொடர்ந்தும் தமிழீழம் என்ற போர்வையில் ஏமாற்றியே போராட்டத்தை முன்னெடுத்தன. ஈபிஆர்எல்எப், ஈபிடிபி மட்டுமே வெளிப்படையாக தமிழீழத்தைக் கைவிட்டு தூர நோக்கோடு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை ஏற்று ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு வந்தது. EPDP, தமிழீழ விடுதலைப் புலிகளோடு இருந்த முரண்பாட்டால் தொடர்ந்தும் ஆயுதம் ஏந்தியதும் விடுதலைப் புலிகள் போல ஆயுத வன்முறைகளில் ஈடுபட்டதும் வரலாறு.

1987இல் இலங்கையில் நேரடித் தலையீட்டை மேற்கொண்ட இந்திய இராணுவம் 1990இல் இலங்கையை விட்டு வெளியேறியதும் அக்கால கட்டத்தில் இந்திய இராணுவத்திற்கு உதவியவர்கள் அவர்களுக்கு ரற்றா காட்டியவர்கள், இந்திய இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து நூற்றக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர்.

மீண்டும் இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் சில தசாப்தங்களுக்கு பின் தள்ளப்பட்டு நிற்கின்றது. இந்த போராட்டங்கள் என்ற பெயரில் கொல்லப்பட்ட போராளிகள், பொதுமக்கள், இராணுவ வீரர்கள் என்று எந்த உயிரிழப்பிற்கும் எவ்வித அர்த்தமும் இல்லை. டட்ட கஸ்டங்களுக்கும் இழப்புகளுக்கும் கூட எவ்வித அர்த்தமும் இல்லை. ஏனெனில் நாங்கள் மீண்டும் ஆரம்பப் புள்ளியில் வந்து நிற்கின்றோம். எங்களிடம் எஞ்சியிருப்பது வெறும் அனுபவங்கள் மட்டுமே. அதிலிருந்தும் எதனையும் கற்றுக்கொள்ளவும் நாங்கள் தாரில்லை.

இன்று உலகமே ஒரு கிராமமாகிவிட்டது. இன்று ஆப்கானிஸ்தானில் வெளியேற்றம் பற்றி 24 மணிநேரச் செய்திச் சேவைகள் பிளந்து தள்ளுகின்றன. இன்னும் சில வாரங்களில் ஆப்கானிஸ்தான்காரர்கள் எங்கள் நாடுகளுக்கு அகதிகளாக படையெடுக்கிறார்கள் என்று இந்த மேற்கு நாட்டுச் செய்தி நிறுவனங்கள் ஒப்பாரி வைக்கும். ஈராக் அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள், லிபிய அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள், சிரிய அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள் இன்றும் இத்தாலியின் மெடிற்றிரேனியன் கடற் பரப்பில் தினமும் அகதிகள் உயிரிழக்கின்றனர். ஏன்? இந்த மேற்கு நாடுகள் தலையீடு செய்து அவர்களின் நாடுகளைச் சீரழித்து சின்னாபின்னமாக்கியதால், அவர்கள் வாழ வழியின்றி மேற்கு நோக்கி வருகின்றனர். அவர்களுடைய இந்த நிலைக்கு இந் நாடுகளே தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

நீங்கள் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்து கிழித்தது போதும், உங்கள் சர்வதேச பொலிஸ்காரன் அடாவடிகள் போதும், மூடிட்டு இருங்கள் செய்த பாவங்களுக்கு, அனைவருக்கும் அகதி அந்தஸ்த்தை வழங்குகள்.

என்னதான் நடக்கின்றது ஆப்கானிஸ்தானில் … : சிவா முருகுப்பிள்ளை (பகுதி 1)

உலகின் ஒரு மூலையில் மனித குலம் எதிர்பாராத நிகழ்வுகள் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அப்படியான ஒரு வரலாற்று திருப்பு முனையாக 20 வருடம் ஆப்கானிதானில் நிலை கொண்டிருந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் திடீர் வெளியேற்றமும தொடரந்தாற் போல் ஒரு கிழமையிற்குள்…? அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட அரசு பதவியை இழந்ததும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வும் நடைபெற்று இருக்கின்றது தற்போது.

எதிர்பாராத நிகழ்வு என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தாலும் உண்மையில் இவை எல்லாம் ஒரு வரலாற்றுப் போக்கில் நடைபெற்ற ஒரு வேக நிகழ்வுதான்.

இன்றைய ஆப்கானிஸ்தான் பிரச்சனையை புரிந்து கொள்வதற்கு நாம் ஆப்கானிஸ்தானின் வரலாற்றை குறைந்தது ஐம்பது வருடங்களாவது பின் சென்று பார்த்தாக வேண்டும். அந்த வகையில் உலகின் வல்லரசுகளா ஒரு காலத்தில் இருந்த சோவியத் யூனியன் அமெரிக்கா என்று இரு முகாங்கள் வலுவாக உலகில் கோலோச்சிய காலத்தில் இருந்து நாம் வரலாற்றைப் பார்த்தாக வேண்டும்
அதிகம் மலைப் பிரதேசங்களையும் தட்டையற்ற நிலப்பரப்பையும் மலைகளில் அதிக கனிம வளங்களையும் கொண்டிருப்பதுதான் ஆப்கானிஸ்தான். பல்வேறு சிற்றரசுகளாக அவற்றிற்கிடையே அதிக தொடர்புகள் குறைவாக வெவ்வேறு ஆளுமையிற்குள் காலத்திற்கு காலம் இருந்து வந்திருக்கின்றது ஆப்கான். இன்று கூட நிலமை அவ்வாறுதான் உள்ளது.

ஆப்கானிஸ்தான் ஒரு பல்லின மற்றும் பெரும்பாலும் பழங்குடி சமூகங்களைக் கொண்ட நாடு. பஷ்தூன்;, தாஜிக், ஹசாரா, உஸ்பெக், ஐமக், துர்க்மேன், பலோச், பாஷாய், நூரிஸ்தானி, குஜ்ஜார், அரபு, பிராகுய், கிசில்பாஷ், பமிரி, கிர்கிஸ், சாதத் என்ற இனங்களையும் மேலும் சில மிகச் சிறிய அளவிலான இனங்களையும் தன்னகத்தே கொண்டது. ஆப்கான் அரசியலமைப்பு, தேசிய கீதம் போன்றவற்றில் பதினான்கு இனங்கள் பற்றி குறிப்புக்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது தலிபான் முழு ஆப்கானிஸ்தானையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றதா என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும். வடக்கு கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் பஷ்தூன்; இனம் தவிர்ந்த ஏனைய சிறுபான்மை இனங்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலை அமைப்பும் இங்கு பலமான ஒரு நிலையில் உள்ளது சில பிரதேசங்களில். குறிப்பாக பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியைக் குறிப்பிடலாம்.

வரலாற்றில் சற்று பின் நோக்கிச் செல்வோம்….

இஸ்லாமிய மக்களை அதிகம் கொண்டுள்ள உலக நாடுகளில் பல நாடுகள் முன்னேற்றகரமான சமூக அமைப்பை, ஆண் பெண் சமத்துவத்தை தமது மத நம்பிக்கை மார்க்கத்தையும் தொடர்ந்த வண்ணம் உள்ளதை உதாரணத்திற்கு காட்ட முடியும். உலகின் பொதுப் பார்வையில் இஸ்லாமிய மார்க்கம் மத அடிப்படைவாத செயற்பாட்டை தமக்குள் வகுத்துக் கொண்டு செயற்படுபவர்கள் என்ற பார்வை அதிகம் மேலோங்கி உள்ளது. ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை.

மத அடிப்படை வாதத்திற்கு அப்பால் மனித குல மேம்பாடு என்ற தளத்தில் இவற்றின் அடிப்படைக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு பயணிக்க முற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களும் அங்கு உருவான அரசுகளும் கடந்த காலங்களிலும் இருந்து வந்தன என்பதை வரலாறு கூறி நிற்கின்றது.
மன்னர் ஆட்சிக் கோலோட்சிய 1960 களில்….

மன்னராட்சிக் காலத்தில் மன்னரின் மைத்துனரும் பஷ்தூன் தேசியவாதியான முகமது தாவூத் கான் பஷ்துனிஸ்தான் என்ற நாட்டை ஆப்கானிஸ்தானில் உருவாக்க முயன்றார் இதனால் அயல்நாடான பாகிஸ்தானுடன் முறுகல் நிலை ஏற்படட்டது. 1963 வரை பதவியில் இருந்த பத்து ஆண்டுகளில், தாவூத் கான் சமூக நவீனமயமாக்கல் சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுத்தார் மற்றும் சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவையையும் பேணி வந்தார். இதன் தொடர்ச்சியாக 1964 ஆப்கானிஸ்தானுக்கான புதிய அரசியலமைப்பும் உருவாக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் சர்தார் தௌவுத் கானின் மன்னராட்சிக்கு எதிராக ஆப்கானிய கம்யூனிஸ்ட்களின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஏப்ரல் 1978 இல் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. இவர்கள் கிளர்ச்சிக்கு ஆதரவாக அன்றைய ஆப்கானிய அரச இராணுவம் செயற்பட்டது.

இந்தப் புரட்சியை தலைமை தாங்கிய நூர் முஹம்மது தராக்கி சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் ஆட்சியமைத்தார். அவர் பழமைவாதம் நிறைந்த ஆப்கானிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை நவீனப்படுத்தும் திட்டங்களையும் முக்கியமாக நிலப் பிரபுகளுக்கு எதிரான நில சீர்த்திருத்தத்தையும் செயற்படுத்தினார்.

இது ஆப்கானிய நிலப் பிரபுக்களை ஆப்கானிய கம்யூனிச அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை செய்வதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அன்றைய ஆப்கானிஸ்தான் அரசில் அங்கம் வகித்த ஆப்கானிய கம்யூனிஸ்ட் தலைவர் நூர் மற்றும் நிலப்பிரபுகளுக்கு ஆதரவான ஹபிசுல்லா அமினுக்கு இடையே மோதல் முற்ற, இராணுவத் தளபதி அமின் இன் உத்தரவின் பேரில் நூர் படுகொலை செய்யபடுகிறார்.

அதனைத் தொடர்ந்து அமின் சோவியத் நாட்டை தவிர்த்து அமெரிக்காவின் பக்கம் சாய்கின்றார் என்பதன் அடிப்படையில் சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி தளபதி அமினை படுகொலை செய்து விட்டு சோவியத் ஆதரவாளரான பாப்ரக் கர்மலை நாட்டின் தலைவராக நியமித்தது.

அதனைத் தொடர்ந்து மத்திய ஆசியாவின் கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானிஸ்தானில் கம்யூனிசம் காலூன்றுகின்றது என்ற வெறுப்பு மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளைப் பற்றிக் கொண்டது. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இதற்கு எதிராக செயற்படத் தொடங்கினர். சோவியத் இராணுவம் உடனடியாக ஆப்கானை விட்டு வெளியேற வேண்டும் என்று தீர்மானங்களை அவை நிறைவேற்றின. சோவியத் ஆப்கானை விட்டு வெளியேற மறுக்கின்றது.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் சோவியத் படைகளை வெற்றி கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், சவூதிஅரேபியா, சீனா போன்ற நாடுகள் ‘முஜாஹிதீன்” என்ற இஸ்லாமிய சித்தாந்த ரீதியிலான மத அடிப்படைவாதப் போராளிகளை உருவாக்குகிறார்கள்.

அதன் தலைவர் முல்லா உமர் தலமையில் சோவியத் படைகளுக்கு எதிராகவும் அவரின் ஆதரவு ஆப்கானிஸ்தான் கம்யூனிச அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அன்றைய காலகட்டத்தில் சோவியத் சீனா இடையிலான முரண்பாடுகள் காரணமாக சீனாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் அமெரிக்கா இருந்தது.

உண்மையில் மேற்கத்திய நாடுகளின் சோவியத்திற்கு எதிரான பனிப்போரை முஜாஹிதீன்கள் நடத்தினார்கள். இவர்களின் தளபதிகள் பெரும்பாலும் நிலப்பிரபுக்களாக இருந்து போராளிகளாக உருமாறியவர்கள். பெரும்பாலும் இவர்கள் பழங்குடியினர் மத்தியில் இருந்து வந்த பஷ்தூன்; இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதற்கிடையில் பாப்ரக் கர்மலின் ஆட்சியின் மீது மக்களின் அதிருப்தி அதிகரிக்க, சோவியத் யூனியன் புதிய அதிபராக முஹம்மது நஜிபுல்லாவை நியமித்தது.

முஜாஹிதீன் களின் கெரில்லா யுத்தம் சோவியத் நாட்டுக்கு பெரும் இழப்பையும் பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தியதன் விளைவாக பத்து வருடங்கள் ஆப்கானில் நிலை கொண்டிருந்த சோவியத் இராணுவம் பெப்ரவரி 1989 ஆப்கானை விட்டு வெளியேறுகிறது.

ஆனாலும் தொடர்ந்து பொருளாதார இராணுவ உதவிகளை நஜிபுல்லா அரசிற்கு வழங்கி வந்தது. 1991 இல் சோவியத்தின் வலிந்த உடைவும் அதனைத் தொடர்ந்த சோவியத் ஆதரவு அற்ற ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லா அரசும் அதிக காலம் தாக்கு பிடிக்க முடியவில்லை. முஜாஹிதீன் இற்கு பாகிஸ்தான் ஊடாக அமெரிக்க கூட்டமைப்புகள் ஆயுத பொருளாதார ஆதரவுகளை வழங்கி வந்த நிலையில் ஆப்கான் அரசு 1992 இல் வீழ்சியடைகின்றது.

முஹம்மது நஜிபுல்லா பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்குத் தப்பியோட முயற்சித்தார். அது தோல்வியில் முடிய – ஆப்கானில் இருக்கும் ஐக்கிய நாடுகளின் தலைமை குடியிருப்பில் தங்கியிருந்த முஹம்மது நஜிபுல்லாவை முஜாஹிதீன் துக்கிலிட்டு படுகொலை செய்து அதன் பின்பு வாகனம் ஒன்றில் பின்புறமாக கட்டி தெருத் தெருவாக இழுத்துச் சென்றனர்.

முஜாஹிதீன்களின் ஆட்சி ஆப்கானிஸ்தானில் துவங்கியது இவ்வாறுதான்.

கம்யூனிசத்திற்கு மாற்றாக இஸ்லாமிய நாடுகளில் மத அடிப்படைவாதத்தை பரப்பிய ‘பெருமை’ மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளையே சேரும். சவூதிரேபியாவின் எண்ணெய் வளம், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, அமெரிக்காவின் நேட்டோ கூட்டணி என்பது இந்த மத அடிப்படைவாதத்தின் அச்சாணி.
இதனைத் தொடர்ந்து பல்வேறு முஜாஹிதீன் பிரிவுகளின் கூட்டணியினர் அரசாங்கத்தை சலாவுதீன் ரப்பானி தலமையில் உருவாக்கினர். ஆனால் மற்றொரு உள்நாட்டுப் போர் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 1996 வரை தொடர்ந்த உள்ள நாட்டுப் போரின் இறுதியில்தான் தலிபான்களின் முதல் தவணை ஆட்சி ஆப்கானில் உருவானது…

மிகுதி அடுத்த பதிவில்…

(நன்றி: சிவா முருகுப்பிள்ளை – அவருடைய முகநூலில் இருந்து)

தம் முற்போக்குத் திரைகளை தாமே கிழிக்கும் முற்போக்குப் பெண்ணியப் போராளிகள்!!!

பாரிஸில் ஓகஸ்ட் 11 இல் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு உறவுக்கார ஆண் தான் இக்கொலையைப் புரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அமைச்சர் ரிச்சட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய பெண் குழந்தை ஷாலினி ஜூட் குமார் யூலை 3இல் தீக்குழித்து தற்கொலைக்கு முயற்சித்து யூலை 15இல் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்தார். கனடாவில் சுனில் சுமித்திரா வீட்டில் கணவனின் தொல்லை தாங்க முடியாமல் ஏப்ரல் பிற்பகுதியில் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பில் மே 1, சுமித்திராவின் சினேகிதி தனோ பரதன் விரிவான பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். மார்ச் 03 வட்டக்கட்சியில் தாய் ஒருத்தி மூன்று குழந்தைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றினுள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். தனது கணவர் குடித்துவிட்டு செய்கின்ற கொடுமைகள் தாங்க முடியாமையினாலேயே அவர் இந்த விபரீத முடிவுக்கு வந்தார். இச்சம்பவத்தில் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். இவை கடந்த சில மாதங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள். அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளிய சம்பவங்கள்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் 2015 ஓகஸ்ட் 09 இல் சஜிந்திகாவைக் காதலித்து அவரைத் திருமணம் செய்வதாகவும் கூறி ஏமாற்றி அவரைத் தாயுமாக்கி சஜிந்திகாவையும் ஆறு மாதக் குழந்தையையும் அடித்துக்கொலை செய்து எரித்த சம்பவம் இவ்வாண்டு ஓகஸ்ட் 07 இல் அம்பலமாகியது. குற்றவாளியான மனோராஜ் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டார்.

இவை நாளாந்தம் உலகெங்கும் வாழும் தமிழ் பெண்களுக்கு நிகழும் அநீதிகளில் ஒரு சில மட்டுமே. ஆனால் இந்த அநீதிகளுக்கு எதிராக தமிழ் புலம்பெயர் சூழலில் வாழும் பெண்ணிய முற்போக்கு போராளிகள் குரல்கொடுத்தது என் காதுகளுக்கு எட்டவில்லை. மேற்படி செய்திகள் தேசம்நெற் மற்றும் எனது முகநூலிகளில் பதிவாகி உள்ளது.

லண்டனில் கடந்த 30 ஆண்டுகளாக வாழும் நான் குடும்பவன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சவுத்தோல் சிஸ்ரர்ஸ்’, ‘புரோக்கின் அரோ’ போன்ற அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பான இருப்பிடங்கள் கிடைப்பதற்கு வழிசெய்துள்ளேன். தொடர்ச்சியாக குடும்ப வன்முறை பற்றிய செய்திகளுக்கு எனது ஊடகங்களில் முன்னுரிமை அளித்து பிரசுரித்துள்ளேன்.

பெண்ணியம் பேசும் முற்போக்கு கோஸ்டியொன்று பெண்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்காக தற்போது முகநூலில் நியாயத்திற்காகப் போராடுவதாக ஒரு அறிக்கைவிட்டுள்ளது. பல்வேறுவ கையிலும் தினம் தினம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்களுக்காக குரல் கொடுப்பவர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்களே. அதே சமயம் பெண்ணிய போர்வை போர்த்திக்கொண்டு பிலிம் காட்டுபவர்களும் தற்போது முகநூலில் பெருகி உள்ளனர். இவர்கள் பெண்கள் மீது நடத்தப்படுகின்ற மோசமான மேற்குறிப்பிட்ட வன்முறைகளை ஓரம்கட்டிவிட்டு, தங்களுடைய சொந்த நலன்களை அடைவதற்கு பெண்ணிய போர்வைக்குள் ஒழிந்துகொள்கின்றனர். இவர்களின் போர்வைகளை களைந்து அவர்களை அடையாளப்படுத்துவது உண்மையான பெண் ஒடுக்குமறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு செயற்பாடுகளுக்கு அவசியமானது. இதன் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்களுக்காகக் குரல்கொடுக்கும் பெண்களும் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைக்கவும் போராடவும் முடியும்.

ஆனால் இந்த முற்போக்கு பெண்ணிய போராளிகள் தற்போது கையில் எடுத்திருக்கும் விடயம் மிக அபத்தமானது. தங்களுடைய சொந்த அரசியல் நோக்கங்களுக்காக இவர்களுடன் சம்பந்தப்படாத இரு பெண்களைக் கூட அவர்கள் பந்தாட முற்பட்டுள்ளமை அவர்களது முகத்திரையை அவர்களையே அம்பலப்படுத்த வைத்துள்ளது. நான் இந்தப் பதிவை மிகவும் கனத்த உணர்வோடு எழுதுகின்றேன். ‘முற்போக்கு முகமூடிகளுடன் பெண்கள் மீது செய்யப்படும் சுரண்டல்களுக்கு எதிராக அணி திரள்வோம்’ என்ற இந்த அறிக்கையுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட முக்கியமானவர்களை நான் நன்கு அறிவேன். என்னைப் பொறுத்தவரை உண்மைக்கு மட்டுமே முதலிடம். ஏனையவை எல்லாம் இரண்டாம் பட்சம். அது நட்பாக, உறவாக, தோழமையாக இருந்தாலும் இதுவே என் நிலைப்பாடு. கடந்த காலங்களிலும் இதையே செய்துள்ளேன்.

Sri Lanka Democracy Foorum SLDF – இலங்கை ஜனநாயக முன்னணி என்ற பெயரில் செயற்பட்ட சின்னத்துரை ராஜேஸ்குமார் – ராகவன் ரிபிசி வானொலி உடைப்பில் சம்பந்தப்பட்ட விடயத்தை அம்பலப்படுத்தியதன் மூலம் அவருக்கும் எனக்கும் இருந்த நட்பு முடிவுக்கு வந்தது. ‘ராகவன் அண்ணை’ என்றே நான் அவரை எப்போதும் அழைத்திருக்கிறேன். ஒரு ஊடகவியலாளனாக மௌனம் காப்பது மிக ஆபத்தானது. சட்ட வல்லுனரான அவர் சட்ட நடவடிக்கையில் இறங்குவார் என்றே எதிர்பார்த்திருந்தேன். மாறாக அவர் கையெழுத்து வேட்டையில் இறங்கி தேசம்நெற்க்கு மூடு விழாச் செய்ய முற்பட்டதெல்லாம் வரலாறு. நட்புக்காக, குடும்ப உறவுக்காக, சட்ட உதவிகளுக்கு நம்பி இருந்ததால் என்று பல்வேறு காரணங்களுக்காக ‘முற்போக்கு வாதிகள்’ என்று சொல்லிக்கொண்டவர்கள் சிலர் கையெழுத்திட்டனர். இன்னும் சிலர் உள்ளடக்கம் என்னவென்று தெரியாமலேயே பெயரைக் கொடுத்தனர். இப்படி இந்தக் கையெழுத்து வேட்டையில் பெயரைக் கொடுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருந்தது.

இப்போது வந்துள்ள சுரண்டல்களுக்கு எதிராக அணிதிரண்ட கோஸ்டியலுக்கும் இப்படிக் காரணங்கள் இருக்கும். சிலர் தம்பதி சமேதர்களாகவும் பேரைக் கொடுத்து இருக்கிறார்கள். கட்டியாச்சு உதோட இத்தினை வருசமாய் குப்பை கொட்டுறம். இனி என்ன ஒரு கையெழுத்தையும் போடுவம் என்று பேரைக் கொடுத்தவையும் இருப்பினம். அதனால் உமா ஷனிக்கா வின் முகநூல் போராட்டத்தின் பின்னணி பற்றி ஒரு பதிவு அவசியமாகின்றது.

அதற்கு முன் இப்பதிவு உண்மையில் ‘முற்போக்கு முகமூடிகளுடன் பெண்கள் மீது செய்யப்படும் சுரண்டல்களுக்கு எதிரான…’ பதிவு அல்ல என்பதை நீங்கள் மேலுள்ள குறிப்பின் மூலமாக அறிந்திருப்பீர்கள். சிலவேளை அவர்கள் தங்கள் செயற்பாடுகளை தாங்களே சுயவிமர்சனம் செய்யும் வகையில் தலைப்பிட்டு இருந்தால் அத்தலைப்பு மிகச் சரியானது.

இந்த அறிக்கை தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் யூலை 17இல் திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையே அல்ல. இந்த அறிக்கையின் பின்னுள்ள உண்மை நோக்கத்திற்கும் அவ்வுறுப்பினரின்ரின் முன்னாள் காதலிக்கும் இந்நாள் மனைவிக்கும் சம்பந்தம் கிடையாது. அவ்வுறுப்பினரும் அவருடன் சம்பந்தப்பட்ட உறவும் ஒரு weakest link என்பதால் அவர்களுடைய strategyக்கு அது வாய்ப்பாக அமைந்தது அவ்வளவுதான். தன்னையும் தாங்கள் சார்ந்தவர்களது பெயர்களையும் அடிபடவிடாமல் பாதுகாத்துக்கொண்டு எவ்வித சம்பந்தமும் இல்லாத தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினரையும் அவர் தொடர்புபட்ட உறவுகளையும் வைத்து இப்பந்தாடல் இடம்பெற்றிருக்கின்றது.

தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் நீண்டகாலமாக ஒரு பெண்ணை காதலித்தார். இது உலகறிந்த உண்மை. அந்த உறவைத் தொடர முடியவில்லை. அதனால் அவ்வுறவு முறிந்தது. அதுவும் உலகறிந்த உண்மை. அதற்குப் பின் தனக்கு பிடித்த ஒருவரைச் சந்தித்தார். இரு மனம் இணைந்தது. யூலை 17இல் மணவாழ்க்கையில் அவர்கள் இணைந்தனர். இதுவும் உலகறிந்த உண்மை. அதற்கு மேல் 20 பெண்ணிய போராளிகள் கையெழுத்திட்ட அறிகையில் உள்ள சோடிப்புகள் விவாகரத்து வழக்குகளில் இரு தரப்பு சட்டத்தரணிகளும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை உசுப்பிவிட்டு பணம் கறக்கின்ற வேலை. இந்த விவாகரத்துச் சட்டத்தரணிகள் (பெரும்பாலானவர்கள்) போன்ற கேடிகளை வேறெந்த தொழில்துறையிலும் காண முடியாது. அதே போல் தான் இந்த அறிக்கையின் பிதாமகர்கள்.

இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு இருந்தனர். இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் தங்களைச் சுற்றி நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி அறிந்திருந்தனர். இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் பெண்களுக்கு எதிராக வன்முறை செய்தவர்களுடன் நெருங்கிய அரசியல் உறவையும் கொண்டிருந்தனர்.

இலங்கையில் இருந்து கையெழுத்திட்ட மோகனதர்ஷனியின் கட்சியுடன் சம்பந்தப்பட்ட ஒருவரின் மகன் திருமணம் செய்த தனது மனைவியை மிகக் கொடூரமான முறையில், தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்தவர். அப்பெண்ணின் சொத்துக்களை எல்லாம் சுரண்டிக் கொண்டவர். தற்போது பாதிக்கப்பட்ட பெண் விவாகரத்து பெற்றுச் செல்ல அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்கின்றான். இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.

இவ்வாண்டு ஏப்ரல் சுமித்திரா சுனில் கணவனின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டார். தீப்பொறி குழவினருக்கு – ரகுமான் ஜான் உட்பட இந்த விடயம் தெரியாதா? சுனில், தீப்பொறிக்கு குழுவின் உறுப்பினர்களுக்கு மிக வேண்டப்பட்டவர். இன்றும் தொடர்பில் உள்ளனர். இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.

தீப்பொறிக் குழவினர் சம்பந்தப்பட்ட, கூட்டுப் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு பற்றி சம்பந்தப்பட்டவர்கள் ஏன் மௌனமாக உள்ளனர். அவ்வாறானதொரு சம்பவமே இடம்பெறவில்லை என்று வாதிட்டார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தான் சம்பந்தப்படவில்லை என்று ஒருவர் எழுதி வாங்கியுள்ளார். ‘Men Can Stop Rape’ என்று முகநூல் முகப்பில் பதிவிடும் உமா செனிக்கா இந்த விடயத்திற்கும் ஒரு கையெழுத்துப் போராட்டம் நடத்தவில்லை. இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.

இதற்கு மட்டுமா மௌனமாக இருந்தனர். 13 வயது மலையகச் சிறுமியை பல தடவை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய பொங்கு தமிழ் கணேசலிங்கம் இன்றும் வவுனியா வளாகத்தில் விரிவுரையாளராக உள்ளார். இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர். மேலதிக தகவல்கள் தேவைப்படின் இராஜேஸ் பாலா வை கேளுங்கள். சிலவேளை அவர் உங்கள் ‘முற்போக்கு’ வரைவிலக்கணத்தினுள் வரமாட்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வரும் விரிவுரையாளர்கள் இளங்குமரன், விசாகரூபன் பற்றி இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர். இது தொடர்பாக மேலதிக விபரங்கள் எனது ‘யாழ் பல்கலைக்காகழகம் ஒரு பார்வை’ என்ற நூலில் உள்ளது. இது பற்றி மேலதிக விபரங்கள் தேவையானால் அல்லது தமிழ் சமூகத்தில் உள்ள ‘womanizers’ பற்றி மேலதிக விபரங்கள் தேவையானள் அவுஸ்திரேலியா மற்றும் சர்வதேச புலனாய்வுப் புயல் அருண் அம்பலவாணரிடம் கேளுங்கள் முழுவிபரமும் finger tipsஇல் வைத்திருப்பார். மேலும் நீங்கள் moral policing செய்வதாக இருந்தால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு பற்றி அருண் அம்பலவாணரிடம் கேளுங்கள். இதில் கையெழுத்திட்டவர்களுடைய விபரங்களும் கூட அவரிடம் இருக்க வாய்ப்புள்ளது.

மட்டக்களப்பு ஜெயில் உடைக்கும் போது கூட தம்பி பிரபாகரனின் ஆட்கள் வந்தால் தான் வெளியில வருவன் என்று அடம்பிடித்த நிர்மலா ராஜசிங்கம், சொலிடாரிட்டி உறுப்பினரை ஒரு பிடி பிடித்திருக்கின்றா. சொலிடாரிட்டி உறுப்பினர் அயோக்கியனாம். நிர்மலா ராஜசிங்கத்தின் அரசியல் அயோக்கியத்தனங்களை ‘பூரணி பெண்கள் அமைப்பு பற்றிய அவணப்படுத்தலில் இருந்து …’ இன்னொரு சந்தர்ப்பத்தில் பட்டியலிடுவோம்.

இதைவிடவும் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்த கருணா, பிள்ளையான் குழுவினர் பல்வேறு பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு இருந்தமை சர்வதேச உரிமை நிறுவனங்களால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.

இப்படியெல்லாம் இருக்கும் போது எவ்வித பாலியல் சுரண்டலும் அற்ற தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினரின் உறவு முறிவு மற்றும் புதிய உறவு விடயத்தில் இந்த முற்போக்கு பெண்ணிய வாதிகள் இவ்வளவு முக்க என்ன காரணம்? “பத்து பிள்ளைகள் பெற்றவளுக்கு ஒற்றைப் பிள்ளை பெற்றவள் முக்கிக்காட்டிய கதை போல்” என்பர். இப்பழமொழி ஆணாதிக்கப் பழமொழியா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இவர்கள் தாங்களும் பெண்ணிய வாதிகள் என்று காட்ட முக்குவது நகைச்சுவையாகவே உள்ளது.

இந்த அறிக்கையின் பின்னணி:

என் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் போராட்டங்களின் பின்னரே இந்தப் பின்னியைப் பதிவு செய்கின்றேன். இதில் மீண்டும் உண்மைக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்ற முடிவுடனேயே இப்பதிவு. இப்பதிவைத் தொடர்ந்து என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சேறடிப்புகள் இடம்பெறும் என்பதை மிகத் தெளிவாக அறிவேன். இது எதுவும் எனக்கு புதிதும் அல்ல. என் எழுத்துக்களால் அம்பலப்படுத்தப்பட்ட ஈழபதீஸ்வரர் ஆலய தர்மகர்த்தா ஆர் ஜெயதேவன், எஸ்எல்டிஎவ் சட்ட வல்லுனர் ராகவன், இந்திய உளவுநிறுவன முகவர் வெற்றிச்செல்வன், ரில்கோ புரப்பட்டி சேர்விஸ் உரிமையாளர் திலகராஜா, தீபம் தொலைக்காட்சி உரிமையாளர் பத்மநாதன் என இந்தப் பட்டியல் மிக நீளமானது. எனக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கும் குறைவில்லை. த ஜெயபாலன் ஒரு பொய்யன், முட்டாள், பொம்பிளைப் பொறுக்கி, துரோகி, கைக்கூலி, அரசாங்கத்தின் ஏஜென்ட், காட்டிக் கொடுத்தவன், ஏமாற்றுக் காரன், ஆணாதிக்கவாதி, பூஸ்சுவா என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் பொலியப்படும். ஆனால் சேற்றுக்குள் இறங்காமல் நாற்றுநட முடியுமா? ஒரு ஊடகவியலாளனாக களைகளைப் பிடுங்கி நாற்று நட வேண்டியது என்னுடைய பொறுப்பு.

பாவம் அந்த தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர். அவருடைய முன்னாள் காதலி. இவர்களைவிடவும் பாவம் தற்போது அவரை மணந்து கொண்டவர். லேட்டஸ்ட் முற்போக்கு மொழியில் சொல்வதானால் ‘இணையர்’. நாங்கள் செயலில் தெளிவில்லாவிட்டாலும் மொழியில் தெளிவாய் இருப்பம் இல்ல.

பாடசாலைகளில் bullyingஇல் பாதிக்கப்படுவது strong ஆனவர்கள் அல்ல. Weak ஆனவர்கள் தானே. இந்த தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் இந்த ‘முற்போக்கு’ உலகிற்கு புதியவர். ஒரு புலி ஆதரவாளராக இருந்தவர். அவருடைய முறிந்த உறவு இலங்கையில். புதிய உறவும் weakest link. இவர்களை முற்போக்கு பெண்ணிய போராளிகள் தங்கள் strategical taget ஆக்கியுள்ளனர். இதற்கு அவ்வுறுப்பினரின் இணையின் பெயரைக் குறிப்பிட்டு ‘இப்ப இவரை யார் வைத்திருக்கிறார்கள்?’ என்று fake ID இல் வந்து comment அடிக்கிறார் ஒருவர். இதையெல்லாம் தெரிந்துகொண்டு தான் இந்த முற்போக்குப் புயல்கள் இரு அப்பாவிப் பெண்களின் தலையை பந்தாடுகின்றனர்.

மீண்டும் விடயத்திற்கு வருவோம். இதில் கையெழுத்திட்டுள்ள ராகுல் சந்திரா வேறு யாருமல்ல. ரகுமான் ஜான். இந்த அறிக்கைக்கும் பெண்கள் மீதான சுரண்டலுக்கும் மிக நெருக்கமான சம்பந்தம் உள்ளது. சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாவிப் பெண்களின் தலைகள் உருட்டப்படுகிறது. இதனை வெறும் தனிநபர் பிரச்சினையாகவும் பார்த்துவிட முடியாது. ஏனெனில் சம்மந்தப்பட்டவர்கள் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் இயங்கு சக்தியாகவும் இருப்பதால் அறிக்கையின் குற்றச்சாட்டு தமிழ் சொலிடாரிட்டிக்கு எதிராகவும் வைக்கப்பட்டு இருப்பதால் இதனை விரிந்த தளத்தில் நோக்க வேண்டியுள்ளது.

அண்மைக்காலம் வரை ரகுமான் ஜானில் எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. அவர் என்னுடைய நண்பனாகவும் ஏதோ நான் இன்று எழுதுகின்ற இந்த கொஞ்ச அரசியல் விளக்கம் கூட அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டது தான். எனக்கு அரசியல் பூஜ்ஜியம் என்று நீங்கள் முணுமுணுப்பதில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு. ஆனால் உண்மையை மறைப்பதில் எனக்கு துளியும் உடன்பாடு கிடையாது. ரகுமான் ஜான் திரைமறைவில் இருந்து இதனைச் செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இன்னொருவர் மீது குற்றச்சாட்டை பொது வெளியில் வைக்கின்ற போது அக்குற்றச்சாட்டு உண்மையானால் அதனை உங்களுடைய சொந்த அடையாளங்களுடன் வைக்க வேண்டும். இல்லையேல் ‘கம்’ என்று இருக்க வேண்டும்.

இப்பொழுது நீங்கள் பந்தாடுகின்ற இப்பெண்கள், இன்றோ இன்னுமொரு நாளோ மனநிலை பாதிக்கப்பட்டு அவர்களுக்கு ஏதும் நடந்தால் நீங்கள் பொறுப்புடையவர்கள். தீப்பொறி உறுப்பினரொருவரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதாகச் சொல்லப்பட்ட பெண், பல ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிநாடு வந்து திருமணமாகி குழந்தைகளும் பிறந்த பின்னரே மனப்பிறள்வு ஏற்பட்டு மரணமானார். மனநலப் பாதிப்பு என்பது கொரோனா போல் தொற்று ஏற்பட்டு பத்து நாட்களிலோ இரு வாரங்களிலே வந்து ஆட்டிப்படைப்பதில்லை. அது வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களின் விளைவாக எப்போதும் வரலாம். எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உடைந்துபோகும் மனநிலையில் இருக்கும் இரு vulnerable பெண்கள் அவர்களை அறியாமலேயே ஆட்டத்திற்குள் திட்டமிட்டு இழுத்துவிடப்பட்டு உள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டால் அந்தப் பழியயையும் பாவம் அவ்வுறுப்பினரின் தலையில் கட்டலாம் என்பது உங்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.

ஊமா செனிகாவின் முகநூலில் நிரோஜன் ஞானசீலன் சுட்டிக்காட்டியது போல் இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றம்சாட்டியவர்களுக்கும் இடையே நீண்ட கால பகையும் உறவு இருந்து வந்தது என்பது உண்மையே. குற்றச்சாட்டப்பட்டவர் பல்வேறு அமைப்புகளில் சம்பந்தப்பட்டவராக இருந்தாலும் தமிழ் சொலிடாரிட்டியே தாக்குதல் இலக்காக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் குற்றத்தை முன்வைத்தவர்களுக்கு அவ்வமைப்பு சார்ந்தவர்களுடன் இருந்த தனிப்பட்ட பகைமையே. இதற்கும் பெண்ணியத்திற்கும் முடிச்சுப் போட்டது முளங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போட்டதைப் போன்றது.

தமிழ் சொலிடாரிட்டி அரசியல் பற்றி நான் அதிகம் அக்கறைகொள்வதில்லை. ஏதோ நாலு நல்லது செய்கிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. எனக்கு அரசியலே இல்லை என்பது அவர்களுடைய கணிப்பு. நான் தத்துவஞானி கோக்கிரட்டீஸ் போல ‘ எனக்கு ஒன்றும் தெரியாது என்பது எனக்கு நன்கு தெரியும்’.

இதற்குள் கொரோனா வந்து லொக்டவுன் எல்லோரையும் வீட்டிற்குள் முடக்கிவிட்டது உங்களுக்கே தெரியும். மன உளைச்சல் கூடி பலரும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டனர். அதற்குள் அவ்வுறுப்பினர் பொது அழைப்பு ஒன்றை விடுத்துவிட்டு தனது திருமணத்தை செய்துவிட்டார். இவர் ஐயரைக் கூப்பிடாவிட்டாலும் இது கனன்றுகொண்டு இருந்த ஓமத்தில் ஐயர் நெய்யூற்றியது போல் ஆக்கிவிட்டது. நாள் நட்சத்திரம் பாராமல் ஐயர் இல்லாமல் செய்த திருமணம் எல்லோ அது தான் ஏழரை ஆட்டுது. பாவம் அவர்.

முற்போக்கு ஜீவன்களே உங்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் யாராவது எதையாவது நீட்டினால் வாசித்து தீர விசாரித்து உங்கள் பெயரைக் கொடுங்கள். தேவையில்லாமல் உங்கள் பெயரைக்கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் இணையர்கள் பெயரைக் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக நீங்களும் உடன்கட்டை ஏறாதீர்கள்.

எவ்வறிக்கை யார் யாரிடம் இருந்து வரினும்
அவ்வறிக்கையின் மெய்ப்பொருள் கண்டு கையெழுத்திடுக.

இளம் குடும்பஸ்தர் ஒரு குழந்தையின் தந்தை வீதி விபத்தில் மரணம்! தெற்காசியாவில் இலங்கையின் வீதிகளே ஆபத்து நிறைந்தது – உலகவங்கி

ரமணன் என்றழைக்கப்படும் காண்டீபன் ஜெகநாதன் (44) விபத்தினால் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஓகஸ்ட் 8இல் மரணமடைந்தார். இளம் குடும்பத்தவரான ஒரு குழந்தையின் தந்தையான காண்டிபன் வாகரை டிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர். ஓகஸ்ட் 2 இல் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது மாங்கேணி பகுதியில் விபத்துக்கு உள்ளானார். அவருக்குப் பின்னால் வந்த டயலக் நிறுவனத்தின் வான் மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்தது. அவ்வாகனத்தை ஓட்டி வந்த 21 வயது இளைஞர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இலங்கையின் வீதிகளில் தினமும் எண்மர் மரணிப்பதாகவும் 22 பேர் காயமடைவதாகவும் வீதி போக்குவரத்து விபத்துப் பற்றி உலக வங்கி மேற்கொண்ட புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இவ்விபத்துக்களில் மூன்றில் ஒரு மரணங்கள் பாதசாரிகளிலும் 50 வீத மரணங்கள் இரு அல்லது முச்சக்கர வாகனப் பாவனையாளர்களிலும் நிகழ்வதாகவும் இப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இலங்கையின் வீதிகளில் 2011 – 18 ஆண்டுகளுக்கு இடையே வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 67 வீதத்தால் அதிகரித்து உள்ளது. இந்த அதீத அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படாவிட்டால் வீதிகளின் விபத்து தொடர்ந்தும் அதிகரிக்கும் என உலக வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.

தெருக்களில் வாகனங்களின் அதிகரிப்பு, பராமரிப்பற்ற அல்லது பாராமரிப்பு குறைந்த வீதிகள், வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் போது நம்பகத்தன்மை மற்றும் உறுதிப்படுத்தல்களில் காட்டப்படும் அசிரத்தை, வீதிக் குற்றங்கள் முறையாகத் தண்டிக்கப்படாமை, பொதுப் போக்குவரத்து வளர்த்தெடுக்கப்படாமை என்பன வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இலங்கையில் ஒரு இலட்சம் மக்களுக்கு ஆண்டுக்கு 17 பேர் வீதி விபத்துக்களில் மரணமடைகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகின்றது. கூடுதல் வருமானம் உள்ள நாடுகளைக் காட்டிலும் இது இருமடங்கு அதிகமானதாக உள்ளது. வீதிப் பாதுகாப்பு அதிகமான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வீதி விபத்துக்களில் மரணிப்பவர்களின் வீதம் ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது. தெற்காவியாவிலேயே இலங்கையின் வீதிகளே ஆபத்து நிறைந்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.

வீதி விபத்துக்கள் தொடர்பாக கிழக்கு இலங்கை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பதிவுகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 19 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் பெரும்பாலும் நகர்ப்புற வீதிகளில் மரணத்துக்கு காயத்திற்கு உள்ளாவதாக தெரியவருகின்றது. பீதாம்பரம் ஜெபரா, செல்லத்துரை பிரசாத் ஆகியோர் மேற்கொண்ட இந்த ஆய்வில் 35வீதமான மரணங்கள், காயங்கள் தலைக்கவசம் அணியாததால் அல்லது தலைக்கவசம் அணிந்தும் அதன் பட்டியயை கொழுவி விடாததால் ஏற்படுவதாக தெரியவருகின்றது. காயப்பட்டவர்கள் அல்லது மரணமடைந்தவர்களில் 25 வீதமானவர்கள் மது மற்றும் போதைப் பொருள் பாவனையின் பாதிப்பாலும் 17 வீதமானவர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் அற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.

மட்டக்களப்பில் நடைபெற்ற விபத்துக்களில் 70 வீதத்துக்கும் மேற்பட்டவை மோட்டார் சைக்கிள் விபத்து என்றும் இவர்களில் 70 வீதமானவை தலையில் ஏற்பட்ட காயத்தினால் ஏற்படுபவை என்றும் தெரியவருகின்றது. ரமணனின் விபத்தும் தலையில் ஏற்பட்ட பலத்த அடியினால் ஏற்பட்ட இரத்தக் கசிவே அவருடைய மரணத்திற்கு இட்டுச் சென்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

இவ்வாறான சம்பவங்கள் எமது வீதிகளில் நாளாந்த நிகழ்வாகி வருவதால் பாதசாரிகளும் சைக்கிள் மற்றம் மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களும் அவதானமாகச் செயற்படுவது அவசியம் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவரின் மாமி தேசம்நெற்க்கு தகவல் தருகையில் நல்ல எதிர்காலத்தைக் கொண்டிருந்த ரமணனின் திடீர் இழப்பினால் குடும்பமே அதிர்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்தார். பாரிஸில் வாழும் இவர் எமது இளம் தலைமுறையின் உயிர்கள் இவ்வாறு வீதிகளில் இழக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தலைக் கவசம் தலைமுறையைக் காப்பாற்றும்!

வீட்டில் நிகழும் வன்முறைகள்: லண்டன் தமிழ் சிறுமியின் உருக்கமான வேண்டுகோள்!

ஒவ்வொரு குழந்தையும் தனது வீட்டில் சுதந்திரமாகவும் எவ்வித பயமின்றியும் வாழ்வதற்கு உரித்துடையது. அதனை உறுதிப்படுத்துவது பெற்றோர் பாதுகாவலரது கடமை. ஆனால் வீட்டு வன்முறைகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு அவர்களுடைய எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கக் கூடியது. அனைத்து விதமான வீட்டு குடும்ப வன்முறைகளுக்கு எதிராகவும் இப்பதிவு. ஆங்கிலத்தில் அச்சிறுமி எழுதிய பதிவு கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை நான் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளேன்.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற லண்டன் புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலையில் கல்விகற்கும் 13 வயதுச் சிறுமி, மாணவி தன் மனச்சுமையை இங்கு இறக்கி வைக்கின்றாள். தற்போது அரச சமூக ஆதரவுக் குழுவின் பராமரிப்பில் இருக்கும் இச்சிறுமி வேறுயாருமல்ல, இவளுடைய தந்தையும் தாயும் நாங்கள் செல்லும் கடைத் தெருவுக்கும் கோயிலுக்கும் அரசியல் கூட்டங்களுக்கும் வருபவர்கள்தான். அவள் தனது பாடசாலையில் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்:

சிலவேளை நீங்கள் இந்த வலிகளுக்கூடாகப் பயணித்திருக்க மாட்டீர்கள் ஆனால் வேறுயாராவது பயணித்து இருக்கலாம். எங்களில் பலர் அதிஸ்ட்டசாலிகள் ஏனென்றால் எங்களுக்கு தவறிழைக்கப்படும் போது அல்லது அதற்கு மாறாக நடந்தால், போவதற்கு நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் தினமும் எங்களை கடந்துசெல்பவர்களுடைய நிலை. அவர்களுக்கு யாராவது இருப்பார்களா? அவர்கள் இந்த வலியை தனிமையிலேயே தாங்க வேண்டுமா? அதற்காகவே இன்று நான் வீட்டில் நடைபெறுகின்ற வன்முறை, துன்புறுத்தல்; பற்றி கதைக்கின்றேன்.

முதலில் வீட்டில் வன்முறை, துன்புறுத்தல் என்பது உறவுகளில் ஏற்படும் நேரடியான உடல் ரீதியான அல்லது உணர்வு ரீதியான வன்முறை. பெண்கள் இந்த இழிவான, குரூரமான, பயப்படத்தக்க நடத்தைகளுக்கு உட்படுவதையும், அவை கூடிக்கொண்டு செல்வதையும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2019 மார்ச் வரையான ஓராண்டு காலப்பகுதியில் 16 முதல் 74 வயதுக்கு இடைப்பட்ட 1.6 மில்லியன் பெண்கள் வீட்டில் துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுத்து இருப்பதாக வுமின்ஸ் எய்ட் – Women’s Aid அமைப்பு தெரிவிக்கின்றது. ஆனால் இந்தப் புள்ளிவிபரம் சரியானது தான் என்று நாங்கள் எப்படி உறுதிப்படுத்த முடியும். எல்லாப் பெண்களும் துணிந்தவர்கள், உண்மையை வெளிப்படுத்தி இருப்பார்கள் என்றில்லை. இன்னும் பலர் தாங்கள் துன்புறுத்தப்படுகின்றோம் என்பதையே உணராதவர்களாக உள்ளனர்.

ஆகவே வீட்டில் துன்புறுத்தல்கள் நடைபெறுகின்றது என்பதை அறிவதற்கு என்ன வழி? வீட்டில் துன்புறுத்தல்கள் நிகழ்கின்றது என்பதற்கு அறிகுறிகள்: ஏமாற்றிவிட்டாய் என்ற குற்றச்சாட்டுக்கள், உடலியல் ரீதியாக துன்புறுத்துவது – அடிப்பது, பணத்தை கட்டுப்படுத்துவது, மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்துவது – போன் கதைக்க வேண்டாம், சமூகவலைத்தளங்களை பயன்படுத்த வேண்டாம் என்று கட்டுப்படுத்துவது. என்னுடைய தாயாரும் இந்தத் துன்புறுத்தல்களை அனுபவித்தார். நான் இவை எல்லாவற்றையும் கண்டிருக்கிறேன். எனது தாயார் செலவுக்கு பணம் கேட்டால் எனது தந்தையார் கோபப்பட்டு சத்தம்போடுவார்.

ஆனால் நான் ஏன் பெண்களை மட்டும் பாதிக்கப்பட்டவர்களாக கருத்தில் எடுக்கின்றேன். ஏன் எல்லோரும் பெண்கள் விடயத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்? ஏனெனில் பலர் பெண்களுக்கு மட்டும் தான் நிகழ்வதாக நினைக்கின்றனர். இது ஆண்களையும் பாதிக்கின்றது. மான்கைன்ட் – Mankind என்ற அமைப்பின் தகவலின்படி வீட்டில் நடைபெறும் துன்புறுத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 26 வீதமான முறைப்பாடுகள் ஆண்கள் மீதான துன்புறுத்தல்கள் எனப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது நிச்சயமாக பெண்கள் மீதான வன்முறைகளோடு ஒப்பிடுகையில் பெரிதல்ல. ஆனால் இது ஆண்கள் தைரியமானவர்கள், பலமானவர்கள் என்ற விம்பத்தை தகர்த்துவிடுகின்றது. ஆகவே பெண்கள் மட்டும் தான் இந்த துன்பியல் அனுபவத்தை கொண்டிருக்கிறார்கள் என்று இருந்துவிட முடியாது. நாங்கள் இரு பாலார் மத்தியிலும் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள், அதன் தூண்டுதலில் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமலேயே இருக்கின்றனர்.

இத்துடன், 2020 இல் இங்கிலாந்து – வேல்ஸில் வெளியிடப்பட்ட குற்றிவியல் கணக்கெடுப்பில் 7.3 வீதமான (1.6 மில்லியன்) பெண்களும் அதன் 50 வீதமான அதாவது 3.6 வீதமான ஆண்களும் வீட்டில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் இருந்த எண்ணிகையிலேயே காணப்படுகின்றது. ஏன் இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதேயளவில் இருக்கின்றது? நாங்கள் முதலில் வீட்டில் நடைபெறும் வன்முறைகளை கண்டறிய வேண்டும். பிறகு அதனை நிறுத்துவதற்கான அழைப்பை விடவேண்டும். துரதிஸ்ட்டவசமாக இது இலகுவான காரியமல்ல. தொலைபேசியை எடுத்து உதவியை நாடுவது கடினமானது ஏனென்றால் துன்புறுத்தல் மீண்டும் நிகழ்ந்துவிடும் என்ற பயம்…

இறுதியாக, இந்நிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சமூகவலைத்தளங்கள் உதவுகின்றன. இது இல்லாவிட்டால் இன்னும் பலர் இத்துன்புறுத்தல்களைச் மற்றையவர்களுக்குச் செய்வதற்கு ஊக்கப்படுத்தப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அதிகரிக்கும். ஆகையால் உங்கள் நண்பருக்கு உதவியை நாடும்படி மட்டும் சொல்ல வேண்டாம். ஏனெனில் நாங்களும் சில விடயங்களைச் செய்ய வேண்டும். நாங்கள் சிறிது நேரத்தை ஒதுக்கி வீட்டில் நடைபெறும் வன்முறைகள் பற்றி தேட வேண்டும். அறிய வேண்டும். மற்றவர்களை பாரத்துக்கொண்டிராமல் குரலற்ற அவர்களுக்கு எமது குரலைக் கொடுக்க வேண்டும். வீட்டு வன்முறையை நிறுத்துவதற்கு அழைப்புவிடுங்கள்.

நன்றி.
._._._._._.

You might not have gone through this but someone else may have. Many of us are lucky to have friends to go to when something is wrong and vice versa. But what about those we walk past daily. Do they have anyone? Are they dealing with pain all alone? And that’s why today I will be talking about domestic violence and abuse.

To start with domestic abuse is the act of violence that is physical or emotional in a relationship. Women go through this disgusting, cruel, fierce behaviour and it is quite tragic to see the statistics that are starting to rise. Women’s aid tells us that by the end of March 2019 in that year, 1.6 million women aged 16-74 years experienced domestic abuse. Not only that but how can we even be sure this is accurate. Not all women are brave, honest, and open about these situations. Also, some people don’t even know if they are experiencing this.

So what are some ways to recognise domestic abuse? Signs of domestic abuse include accusations of cheating, hurting you physically, controlling your money or even isolating you from others. In fact, my mum experienced this. I witnessed it all. My dad would shout at her and got angry when she asked him for some money.

But why am I just considering women to be the only victims. Why is everyone only raising the attention for women? Although people assume it is just women it also affects men. Statistics from Mankind have given us the information that of the domestic crimes reported, 26% were committed against men. It isn’t a large number of course compared to the rest being women but this defeats the image of men being tough and strong. We cannot just rely on women experiencing this and so we should be raising awareness for both genders. Furthermore, people could be under the influence of drugs or alcohol and they may not be aware of their actions.

In addition, in a recent crime survey for England and Wales(in 2020), 7.3% of women which is the same as last year(1.6 million) and 3.6% of men which is approximately half, experienced domestic abuse. Why are these numbers staying the same? We need to spot it first. Then make a call to stop it. Unfortunately it isn’t that easy. Picking up the phone and reaching out for help can be so difficult because there is some fear… that the abuse will start again.

Finally, social media has helped us become aware of this situation. Without it, many people may be encouraged to do this to others and our victims would just increase. So don’t just tell a friend to call for help. Because WE need to do something. We ALL should commit some time into research and give a voice for those who don’t have one instead of waiting for someone else to. Make a call to make it stop.

Thank you.

என் குடும்பத்தின் எதிர்காலத்தையும் எம் இனத்தின் எதிர்காலத்தையும் புரட்டிப் போட்ட நாள்: கருப்பு யூலை!

ரவி என் அண்ணா, ஊரில் அவனை எல்லோருக்கும் அப்படித்தான் தெரியும். தனபாலன் பதிவுப் பெயர். நாங்கள் அனுராதபுரத்தில் தான் பிறந்தோம். அவன் முதற் பிள்ளை பெரிய உயிரைக் காப்பாற்றுவதா? சின்ன உயிரைக் காப்பாற்றுவதா? என்ற போராட்டத்தோடு தான் அண்ணா சத்திரசிகிச்சை மூலம் இவ்வுலகிற்குக் கொண்டு வரப்பட்டான். அதனால் அவனை இந்த உலகிற்குக் கொண்டுவந்த டொக்கடர் தனபாலனின் பெயரே அவனுக்கும் சூட்டப்பட்டது. அவனையும் ஒரு டொக்டர் ஆக்க வேண்டும் என்ற கனவோடு தான் அம்மா அவனை வளர்த்தார். ஏ எல் பயோ சயன்ஸ் படித்தான். யாழ் வட்டு இந்துக் கல்லூரியில் படித்தான். யாழ் நியூ மாஸ்ரருக்கு ரியூசனுக்குப் போய் வந்தான். ஊரில் நல்ல பிள்ளை என்று பெயர். படிப்பிலும் பரவாயில்லை. ஆனால் டொக்டர் கனவை எட்டியிருக்க முடியுமா தெரியவில்லை. பெரும்பாலான நேரம் அவன் அரசியல் கூட்டங்கள் என்று தான் திரிந்தான்.

யாழ் வட்டு கார்த்திகேய வித்தியாலயத்தில் ஒரு சிவராத்திரி விழா என்று தான் நினைக்கிறேன்; அப்போது அ அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர்; திரு திருமதி அ அமிர்தலிங்கம் உரையாற்றுவதற்காக வந்திருந்தனர். அப்போது கிளர்ச்சியூட்டும் கோசங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் உரைகள் பொறி பறக்கும். அந்தக்காலம் அ அமிர்தலிங்கம் தளபதி. கையைக் கீறி இரத்த திலகம் இடுவதுதான் அன்றைய வைரல் ரென்ற். அன்றைய கூட்டத்தில் அண்ணாவும் அ அமிர்தலிங்கத்திற்கு இரத்த திலகம் இட்டான். ஏ எல் முடித்துவிட்டு கொக்குவில் ரெக்கில் படித்தான்.

1983 யூலை 23 இரவு யாழ் திருநல்வேலியில் 13 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் ஆங்காங்கு எழுந்தமானமான அசம்பாவிதங்களை ஏற்படுத்தினர். இளைஞர்கள் தாக்கப்பட்டனர்.

அப்போது எனக்கு வயது 12. அண்ணாவுக்கு வயது 19. இராணுவ கெடுபிடி என்றாலும் அவன் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கவில்லை. எப்போதும் ஓடி ஆடித் திரிந்துகொண்டுதான் இருப்பான். ஆனால் மாலை ஆறு மணி ஏழு மணிக்குள் வீட்டிற்கு வரவேண்டும். அப்போதெல்லாம் வேலியில் தடியயை முறித்து கோட்டைக் கறீ, கோட்டுக்குள் பிள்ளைகளை நிற்க வைத்து அடிப்பது நல்ல பெற்றோரின் ஸ்ரைல். பத்தொன்பது வயதிலும் அம்மா கீறிய கோட்டைத் தாண்டாமல் துள்ளித் துள்ளி அடிவாங்குவான்.

நாங்கள் யாழ்ப்பாணத்தில். அப்பா அனுராதபுரத்தில் வேலை. ஆண்மகனாக அப்பாவின் இடத்தில் அண்ணா தான் வெளிநிர்வாகம் முழுவதும். அவனுக்கு நட்புகளுக்கும் குறைவில்லை. அவனும் அவனது தலைமுறையும் தேசியவாத அலையில் அள்ளுண்டனர். அதைவிட அங்கு பெரிய மாற்றீடு இருக்கவில்லை. ஊரோடு ஒத்தோடி இருப்பார்கள். ஆனையிறவை பெரிதாக தாண்டாத சிங்களவர்களையோ வேற்று ஆட்களையோ கண்டிராத ஒரு சமூகம். அப்போது என்ன பெரிய அரசியல் அறிவு இருந்திருக்கும். ஈழநாடு சுதந்திரன் போன்ற பத்திரிகைகளின் கருத்தோடு அள்ளுண்ட காலங்கள் அவை.

1976 இல் வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனம் செய்தது அப்போது எங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. 1977 கலவரம் வரை நாங்களும் எல்லோரும் அனுராதபுரத்தில் தான் வாழ்ந்தோம். கலவரம் ஆரம்பிக்கப்பட்டபோது அண்ணா அனுராதபுரம் விவேகானந்தக் கல்லூரியில் ஓல் படித்திருக்க வேண்டும். அன்று பாடசாலைநாள். காடையர்கள் தமிழர்களைத் தாக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழர்களின் வீடுகள் கடைகள் எரியூட்டப்பட்டது. அப்பாவோ சின்னையாவோ தெரியவில்லை பள்ளிக் கூடம் சென்றிருந்த அண்ணாவை ஓடிப்போய் கூட்டிவந்து பக்கத்தில் இருந்த சிங்கள நண்பரின் வீட்டில் ஓரிரு நாட்கள் ஒளிந்துகொண்டோம். சில மங்களான ஞாபகங்கள் இன்றும் உள்ளது.

அனுராதபுரத்தில் யாழ்ப்பாண சந்திக்கு அருகில் இருந்த எங்கள் வீடும் எரிக்கப்பட்டதாக சொன்னார்கள். ஓரிரு நாட்களில் நாங்கள் பொலிஸ் பாதுகாப்போடு அனுராதபுரம் கச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டோம். அப்போதும் கடையர்கள் பெற்றோல் குண்டுகளோடு துரத்தினர். அனுராதபுரம் கச்சேரியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இராணுவ பாதுகாப்போடு வவுனியா வரை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டோம். மாங்குளத்தில் காடையர்கள் பஸ்ஸை கற்கள் கொண்டு தாக்கினர். அக்காலத்திலும் உண்மைச் சம்பவங்களும் வதந்திகளும் சேர்ந்து மரண பயத்தை ஏற்படுத்தி இருந்தது. அப்போது எனக்கு இதனைப் புரிந்துகொள்ளும் வயதில்லை. ஆனால் அண்ணாவுக்கு இவை தெளிவாக மனதில் பதிந்து இருக்கும். அந்த உணர்வுகளோடு தமிழ் தேசியத்தின் தலைநகரான யாழ் மண்ணில் அவன் இளைஞனான்.

கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல் கொழும்புக்கு மறுநாள் மாலையளவில் கொண்டு செல்லப்பட அங்கு பதட்டம் ஏற்பட்டது. கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் இருந்த தமிழர்கள், அவர்களின் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் தாக்குதலுக்கு இலக்கானது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் ஆட்சியில், இக்கலவரம் கட்சி ஆதரவாளர்களால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக யூலை 25 மாலை வெலிக்கடை சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் 35 பேர் சிறைச்சாலை அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்போடு படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 17 அரசியல் கைதிகள் யூலை 27 இல் படுகொலை செய்யப்பட்டனர். பரவலாக தென்பகுதியில் குறிப்பாக கொழும்பில் நடந்த வன்முறையில் சிங்களக் காடையர்களால் 800 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போதெல்லாம் 24 மணிநேரச் செய்திச் சேவைகள் கிடையாது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சொல்வதுதான் செய்தி. லங்கா புவத் – ப்பொறு புவத் என்று கிண்டலாக அழைக்கப்பட்டது. அன்றும் அசம்பாவிதங்கள் வதந்திகளாக வந்துகொண்டிருந்தது. நாளாந்த வாழ்க்கை சீர்குலைந்தது. சமைத்து சாப்பிடுவதே கஸ்டமானதாக இருந்த நாட்கள். ஒவ்வொரு வீட்டுலுமே இழவு நிகழ்ந்தது போன்ற உணர்வு. மாலை ஆறு மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்திகளுக்காக எல்லோரும் மயான அமைதியோடு காத்திருந்தோம். வெலிகடைப் படுகொலைகள் பற்றி சொல்லி கொல்லப்பட்டவர்களின் பெயர்களும் சொல்லப்பட்டது. அண்ணா குமுறினான். அருகில் இருந்தவற்றை தூக்கி எறிந்தான். கொல்லப்பட்டவர்களில் அவனுக்கு நெருக்கமான மாஸ்ரரும் ஒருவர். கொல்லப்பட்டவர்களில் சிலர் அவனுக்கு நெருக்கமாக இருந்தனர் அல்லது அவர்கள் தனக்கு நெருக்கமாக இருந்ததாக உணர்ந்து இருக்க வேண்டும்.

அப்பொழுதெல்லாம் நாளாந்தம் செய்தி கேட்பது நாளாந்த வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை ஒழிப்பு மறைப்பு கூட்டுத்தாபனமானது. அதனால் செய்திகளுக்கு இந்தியாவின் ஆகாசவானியின் செய்திகள், மாநிலச் செய்திகள், பிபிசி இன் தமிழோசை, பிலிப்பைன்ஸில் இருந்து வெரித்தாஸ் வானொலி ஆகியன தமிழ் வீடுகளின் நாளாந்த பெயர்களாக அறியப்பட்டிருந்தது. தமிழ் இயக்கங்கள் கரந்தடிப் படைகள் என வெரித்தாஸ் வானொலியால் என்று தான் நினைக்கிறேன் அழைக்கப்பட்டது.

அவனுடைய போக்குகள் மாற்றம் அடைந்தது. அவன் தன் பொறுப்புகளை உணர்ந்தவன் போல் ஆனான். மேற்கொண்டு தான் படிக்கத் தயாரில்லை என்ற முடிவுக்கு வந்தான். ஊர்விட்டு வேலை விடயமாக வேறோர் ஊரக்குப் போகப் போவதாகக் கூறினான். அவன் பொய் சொல்கிறான் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது சாத்தியமில்லை என்று அவனை நம்ப வைப்பதற்கு எங்களால் முடியவில்லை. நாட்கள் நகர்ந்தது. அவனது நடவடிக்கைகள் முற்றாக மாற்றம் அடைந்தது. ஒரு நாள் இரவு வேலைக்கு போவதாகக் கூறி வெளிக்கிட்டான். ஒரு பாக்கிற்குள் சில உடுப்புகளை எடுத்து வைத்தான். இது எங்களுடைய வீட்டில் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் உள்ள பல வீடுகளில் இதுதான் நடந்தது.

அம்மா கட்டி அணைத்து அழுதா. அவவுடைய கனவுகள் அனைத்தும் அன்று உடைந்தது. அனாலும் அவன் எடுத்த முடிவில் அவன் வெற்றி பெற வேண்டும் என்ற ஆதங்கம் இருந்திருக்க வேண்டும். அம்மா கத்தியை எடுத்து கையை கீறி அவனுக்கு இரத்த திலகம் இட்டா. அவன் எந்த சலனமும் இல்லாமல் இருளோடு கரைந்து, படலைக்கு வெளியே அவனை ஏற்றிச் செல்வதற்காக நின்றவரோடு சைக்கிளில் பயணமானன்.

இவ்வாறு ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் புறப்பட்டனர். புறப்பட்டவர்களில் பலருக்கும் புறப்படுவதற்கான காரணம் பெரும்பாலும் அன்றைய அரசியல் சூழல்தான். சில தனிப்பட்ட காரணங்களும் அவர்களை அதனை நோக்க உந்தியிருக்கும்.

அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சிக் கொண்டது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. யூலைப் படுகொலைகள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பண்பு நிலை மாற்றத்தை தோற்றுவித்தது. இதுவரை சீராக படிமுறை வளர்ச்சி பெற்று வந்த போராட்டம்; தலைமைகளிடம் வீவேகத்தின் அவசியத்தை வலியுறுத்தி இருந்தது. ஆனால் யூலைக் கலவரம் அதனைப் புரட்டிப்போட்டது. விவேகமற்றவர்கள், அவசரக் குடுக்கைகள் தலைமைகளுக்கு முன் தள்ளப்பட்டனர். வெறும் உணர்ச்சிப் பிளம்பில் போராட்டம் வீறுகொண்டு எழுந்தது.

ஆனால் அவர்களுடைய போராட்ட இலக்கையும் வடிவத்தையும் அவர்களோ அவர்களுடைய தலைமைகளோ தீர்மானிக்கவில்லை. மாறாக எதிரியான பேரினவாத அரசிடமும் இந்திய உளவுத்துறையிடமும் அது கையளிக்கப்பட்டுவிட்டது. ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான்’, ‘நாங்கள் ஆயதம் ஏந்த வேண்டும் என்பதையும் எதிரி தான் தீர்மானிக்கிறான்’ என்று பெருமையாக அன்று முழங்கினார்கள். அது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை இன்று உணர முடிகிறது. ஏனெனில் இறுதியில் இவர்களை முள்ளிவாய்காலில் முடிப்பது என்று எதிரியான சிங்கள அரசும் இந்திய உளவுத்துறையும் தான் தீர்மானித்தது. ‘ஒப்ரேசன் பிக்கன்’ என்ற 2006 இல் போடப்பட்ட தீட்டத்திற்கமைய அதன் கால அட்டவணப்படியே தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்ந்து 2009 இல் முடிவுக்கு வந்தது.

சகோதரப் படுகொலைகளையும் சில அங்கொன்றும் இங்கொன்றுமான நாளாந்த தாக்குதல்களைத் தவிர எமது விடுதலைப் போராட்டத்தை பேரினவாத அரசும் இந்திய உளவுத்துறையுமே நடத்தியது.

எமது சகோதரர்களும் சகோதரிகளும் விட்டில் பூச்சிகளாக மடிந்து மறைந்தனர். இன்று எமது வரலாறுகளை பேரினவாத அரசும் இந்திய உளவுத்துறை முகவர்களுமே மும்மரமாக எழுதுகின்றனர். யாழ் நூலகத்தை எரிக்க முன்நின்ற காமினி திஸ்ஸநாயக்காவை பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த எட்வேர்ட் குணவர்த்தன தனது நூலின் மூலம் காப்பாற்றியது போல் இந்திய உளவு முகவர்கள் எமது போராட்டத்திலும் படுகொலைகளிலும் இந்திய உளவுத்துறையின் இரத்தக்கறைகளை கழுவ முயல்கின்றனர். அதற்காகவும் தங்கள் செயல்களை மறைக்கவும் இன்னுயிர் ஈர்ந்த சகபோராளிகள் மீது வீண்பழி சுமத்துகின்றனர் இந்த உளவுத்துறை முகவர்கள்.

இலங்கையில் ஆயத வன்முறையயை ஏற்படுத்துவதில் இந்திய உளவுத்துறையின் பங்கு தீர்மானகரமானது. தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலை இயக்கமும் காத்திரமான அரசியல் இல்லாத அமைப்புகள் என்பதால் அவர்களுக்கு ஆயதங்களை இறைத்து அப்பாவி சிங்கள மக்களைப் படுகொலை செய்யவும் அவர்களைத் தூண்டியது. அதனால் இவ்விரு அமைப்புகளுமே இராணுவ கட்டமைப்பில் பலம்பெற்று இறுதியில் விடுதலைப் புலிகள் ஏகபோக தலைமையாகினர்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த இந்தியாவுக்கு எதிரானவர்களை பலவீனப்படுத்தும் முயற்சியாக சந்ததியார் படுகொலை. பின்னர் உமாமகேஸ்வரன் இலங்கை அரசுடன் நெருக்கமாக அவருடைய படுகொலை, மாலைதீவு தாக்குதல் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை கொண்டு நடத்தியதே இந்திய உளவுத்துறையே. உளவு நிறுவனங்கள் நேரடியாக வெளிப்படையாக தாங்கள் முன்நின்று எதனையும் செயற்படுத்துவதில்லை. ஆனால் அவ்வாறு செயற்படுவதற்கான சூழலை அந்தந்த அமைப்புகளில் உள்ள தங்கள் விசுவாசிகளுடாக அவர்கள் அறியாமலேயே உருவாக்கி விடுவார்கள். இது தான் காகம் இருக்க பனம் பழம் விழுவதென்பது.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் மத்திய குழுவில் இந்திய உளவுத்துறை அதிகாரியும் இருந்தார் என்றால் அது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தான். இந்திய இராணுவத் தளபதியான சேகர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர். இந்திய உளவுத்துறை இன்னமும் பலரையும் தனது முகவர்களாக வளர்த்துக்கொண்டது. இவ்வாறான முகவர்கள் எல்லா இயக்கங்களிலும் இருந்தனர். இன்று இவ்வாறான முகவர்களைக் கொண்டு இந்திய உளவுத்துறை தனது செயல்களுக்கு வெள்ளையடிக்க முயற்சி செய்கின்றது.

தனபாலன் இயற்பெயர். ஊரில் ரவி. தமிழீழ மக்கள் கழகத்தில் வசந்தன் என அறியப்பட்டவன். கழகத்தின் சமூக விஞ்ஞான கல்லூரியில் கற்றவன். இந்த சமூக விஞ்ஞானக் கல்லூரி இந்திய உளவுத்துறைக்கு பிடித்தமான ஒரு அம்சமாக ஒரு போதும் இருந்ததில்லை. இந்திய உளவுத்துறைக்கு அரசியல் தெரிந்து இந்தியாவை தெரிந்துகொள்பவர்களை விரும்பவில்லை. இந்தியாவுக்கு விசுவாசமான முகவர்களும் தாங்கள் சொல்வதைக் கேட்டு களமிறங்கக் கூடியவர்களுமே தேவைப்பட்டனர். சிந்திக்கக் கூடியவர்கள் அவர்களுக்கு ஒரு போதும் தேவைப்பட்டதில்லை.

தோழர் எஸ் பாலச்சந்திரன் தமிழகத்தில் வசந்தனோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர். அங்கிருந்த இடதுசாரி அமைப்புகளுக்கு வசந்தனூடக உதவிகளைப் பெற்றுக்கொடுத்தவர். இன்றும் அந்த நாட்களை நினைவு கூருகின்றார். அண்ணா வசந்தன் பின்நாட்களில் வவுனியா முள்ளிக்குளம் முகாமில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மூன்று நாட்களாக நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டான். இம்மோதலில் தமிழீழம் கேட்டுப் போராடச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பெரும்பாலும் இம்மோதலில் கொல்லப்பட்ட பலரின் உடல்களை அருகே இருந்த கிறிஸ்தவ பாதிரியாரே அடக்கம் செய்திருந்தார். சில மாதங்களுக்குப் பின் அப்பகுதிக்குச் சென்று எம் தந்தையார் அந்த பாதிரியாரைச் சந்தித்து வந்தார். அம்மா சில ஆண்டுகளாகவே அவன் சிலவேளை எங்காவது தப்பியோடி இருந்து வருவான் என்ற நம்பிக்கையிலேயே இருந்தா. அண்ணாவின் உற்ற நண்பனான பரமானந்தன் தான் எனது மூத்த சகோதரியயை மணம் முடித்தார். அவரின் ஞாபகமாகவே அவர்களுடைய மூத்த மகளுக்கு வசந்தினி என்றும் மகனுக்கு வசந்தன் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

(வசந்தனோடு போராடச் சென்ற சக போராளியான நேதாஜி – என்றழைக்கப்படும் பிரேம்சங்கரின் காணொலி கீழே கொமன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.)

இவ்வாறாக பல ஆயிரம் போராளிகள் விட்டில் பூச்சிகளாக பேரினவாதத்தினதும் சர்வதிகாரத்தினதும் உளவு நிறுவனங்களினதும் நோக்கங்களுக்காக பலிகொடுக்கப்பட்டனர். வேடர்கள் எழுதுவது வரலாறு அல்ல. வியட்கொங்கின் வரலாற்றை சிஐஏ முகவர்களும் ஹொலிவூட்டும் எழுத முடியாது. அது போல தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வரலாற்றை இந்திய உளவு முகவர்கள் எழுத முடியாது. உண்மையான போராளிகளை வரலாறு பதிவு செய்யும். அல்லாதவர்களை வரலாறு காட்டிக்கொடுத்துவிடும்.

அமெரிக்க – பிரித்தானிய கூட்டு வக்சீன் உற்பத்தியை தடுக்கின்றது!!!

பிரித்தானியாவில் சுதந்திர நாள்! வறுமைப்பட்ட நாடுகளில் மரண ஓலம்!
அமெரிக்க – பிரித்தானிய கூட்டு வக்சீன் உற்பத்தியை தடுக்கின்றது!!!

தனது நாட்டு மக்களுக்கு வக்சீனை வழங்கி கோவிட்-19 தாக்கத்தை கட்டுப்படுத்தி உள்ள அமெரிக்க – பிரித்தானியா அரசுகள் வக்சீனை ஏனைய நாடுகள் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை சிறிது காலத்திற்கு விட்டுக்கொடுப்பதற்கு மறுத்து வருகின்றது. அதனால் உலகில் பல்லாயிரம் கோவிட் மரணங்கள் சம்பவிக்க உள்ளது. இன்று முற்றிலும் களியாட்டங்களுக்கு நாட்டைத் திறந்துவிட்டுள்ள பிரித்தானிய அரசு உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணமாவதைப் பற்றி எவ்வித கரிசனையும் கொள்ளவில்லை.

நுனிநாக்கில் மனித உரிமை பேசி தங்களை மனித உரிமைகளின் ஜனநாயகத்தின் காவலர்களாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்க – பிரித்தானிய நாடுகள் கோவிட் வக்சீன் உரிமத்தை முற்றிலும் லாபநோக்கத்திற்காக தனியார் நிறுவனங்களிடம் கையளித்து உற்பத்தியை தடுப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மரணங்களுக்கு வழிகோலுகின்றனர். எவ்வித மனிநேயமும் அற்று செயற்படுகின்ற அமெரிக்க – பிரித்தானிய கூட்டு எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு வழிகாட்டவோ தலைமையேற்கவோ தகுதயற்றவையாகி வருகின்றன.

பிரித்தானியா ப்ரீடம்டே – சுதந்திரநாள் என்று அறிவிப்பதற்கு 48 மணிநேரங்களிற்கு முன்னரே சுகாதார அமைச்சர், நிதி அமைச்சர், பிரதம மந்திரி மூவருமே தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியேற்பட்டு விட்டது. தற்போதைய டெல்டா வேரியன் மிகவேகமாகப் பரவி வருகின்றது. ஆனால் நாட்டில் வயது வந்தவர்களுக்கு பெரும்பாலும் வக்சீன் போடப்பட்டு இருப்பதால் பாதிப்பு வீதம் மிக மிகக் குறைவான நிலையிலேயே காணப்படுகிறது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் வரும் இரு மாதங்களுக்குள் வக்சீன் போடப்பட்டு விடும் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்த வக்சீன் காரணமாக கோவிட் பாதிப்பும் மரணங்களும் பெரும்பாலும் முற்றாக தடுக்கப்படுகின்ற நிலைக்கு மேற்கு நாடுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சனத்தொகை அதிகமான வறிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் கோவிட் பாதிப்பும் மரணமும் அதிகரித்து வருகின்றது.

இதனைத் தடுப்பதற்கு தேவையான வக்சீனை உற்பத்தி செய்வதற்கு வக்சீன் உற்பத்தி உரிமத்தை அமெரிக்க – பிரித்தானிய அரசுகள் தற்காலிகமாகவேனும் வழங்கினால் உற்பத்தியயை வேறுநாடுகளிலும் வக்சீன் உற்பத்தி செய்து கோவிட் பாதிப்பையும் மரணத்தையும் கட்டுப்படுத்தலாம். வறிய நாடுகளில் ஒரு வீதமான சன்தொகைக்கு கூட வக்சீன் போடப்படவில்லை. அமெரிக்க – பிரித்தானிய அரசுகளின் சுயநலமிக்க முற்றிலும் லாபத்தையீட்டும் நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயற்படுவது மனித குலத்தை பெரும் அவலத்திற்குள் தள்ளவுள்ளது.

தவறான தெரிவுகளால் சிதைவுறும் உள்ளூராட்சி கட்டமைப்புகள்

செய்தி 1- பாலியல் தேவைக்காக 15 வயது சிறுமி விற்பனை
மிகிந்தலை பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட மூவர் கைது.
செய்தி 2 – ஆலய முன்றலில் வாள்வெட்டு – வலி மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் கைது
செய்தி 3 – சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் தற்கொலை!

இவையெல்லாம் கடந்த சில வாரங்களில் கண்ணில் பட்ட செய்திகள்.  இவற்றில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள். அதிலும் இறுதி இரண்டு செய்திகளும் யாழ்ப்பாண மாவட்டத்தோடு தொடர்புபட்டவை.

பொதுவாகவே மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் மக்கள் மிகுந்த அசமந்தப் போக்குடன் செயற்படுவது வழமை. அதிலும் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளைத் தெரிவதில் அது மிகவும் அதிகம்.

உள்ளூராட்சி சபைகளின் முக்கியத்துவம் அவற்றின் வகிபங்கு தொடர்பில் அவர்கள் கரிசனை கொள்வதில்லை. அவை தொடர்பில் அவர்கள் அறிந்துள்ளனரா என்பதும் கேள்விக்குரிய விடயமே.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது வேட்பாளருடைய தகமை, திறமை, அவர் தன்னுடைய சமூகத்துக்கு என்ன செய்வார், சமூகப் பொறுப்புள்ளவரா, தனிப்பட்ட ரீதியில் சிறந்த நடத்தையைக் கொண்டிருப்பவரா என்று எல்லாம் யோசிப்பதில்லை.

மாறாக அவர் தெரிந்தவரா, சொந்தக்காரரா, எந்த சமூகத்தைச் சேர்ந்தவர், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர், வேலை எடுத்துத் தருவாரா, செலவு இல்லாமல் வேலை முடித்துத் தருவாரா என்று சிந்தித்தே பெரும்பாலான மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றனர்.

உள்ளூராட்சி சபைகள் நாட்டின் மிக அடிப்படைக் கட்டமைப்புகள். மக்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருப்பவர்கள் இவற்றின் பிரதிநிதிகளே. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், சமூக அபிவிருத்தி தொடக்கம் கழிவகற்றல் முகாமைத்துவம் வரை நாட்டில் அடிப்படை வசதிகளுடன் தொடர்புபட்டு பணியாற்றுபவர்கள் இவர்களே. பிரதேசத்தின் சகல விதமான அபிவிருத்திகள், தேவைகள் என்பவற்றைக் கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுத்த வேண்டியவர்கள் இவர்களே.

உள்ளூராட்சி சபைகள் மக்கள் நலன் சார்ந்து உரிய வகையில் செயற்பட்டால் மட்டுமே குறித்த பிரதேசம் வளம் பெற முடியும். ஆனால் எமது சமூகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் உள்ளூராட்சி சபைகளை மக்கள் தெரிவு செய்வதில் காட்டிய அசமந்தப் போக்கு ஒட்டுமொத்த சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது.

ஒரு மக்கள் பிரதிநிதி தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் உள்ள பிரச்சினையை எதிர்கொள்ள முடியாது உயிரை மாய்த்துக்கொள்கின்றார் என்றால் அவரால் எவ்வாறு சமூகத்தின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண முடியும்? இங்கு சுட்டிக் காட்ட வேண்டிய மற்றொரு விடயம் ஒரு வருடத்துக்கு முன்பும் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய மரணமும் தற்கொலை என்றே தெரிவிக்கப்பட்டது.

ஒருவரால் தன் ஊரில் ஒரு கோவில் பிரச்சினையைக் கூட சுமூகமாகக் கையாள முடியாமல் வாளெடுத்து வெட்டப் போகிறார் எனில் அவரால் சமூகத்தில் நிநோக்கற்றகழும் வன்முறைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? அதற்குப் பதிலாக இவர்களே வன்முறைகளைத் தூண்டுவோராக உள்ளனர். தம்முடைய மனவெழுச்சிகளையே கையாள முடியாத கையறு நிலையில் உள்ளவர்கள் எப்படி சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி உடையவர்களாக இருக்க முடியும்? இவ்வாறானவர்களைத் தெரிவு செய்தது மக்களின் தவறல்லவா?

நாட்டில் மீண்டுமொரு தேர்தலுக்கான ஆயத்தங்கள் திரைமறைவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்களும் தம் மாகாண சநோக்கற்றபைகளுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு தயாராக வேண்டிய காலம் நெருங்கியுள்ளது. வெறுமனே தேர்தல் கால பிரச்சாரங்களை மட்டும் கொண்டு வாக்களிக்காமல், நீண்ட கால அவதானத்தின் அடிப்படையில் சரியானவர்களைத் தெரிவு செய்ய மக்கள் முன்வரவேண்டும்.

ரிஷார்ட் பதியுதீன் வீட்டில் இறந்து போன சிறுமியும் – கண்டு கொள்ளாத ஊடகங்களும்  !

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தை வீட்டில் , வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் ஹிஷாலினி எனும் 16 வயது சிறுமி , உடலில் தீ பரவி பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இறக்கும் போது 16 வயதும் 8 மாதங்களும் பூர்த்தியான குறித்த அட்டன் – டயகம மேற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி ஒரு வருடகாலத்துக்கும் மேலாக அங்கு பணியாற்றியுள்ளார்.
 கடந்த 3 ஆம் திகதி வெள்ளியன்று உடலில் தீ பரவியமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஹிஷாலினி அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , வைத்தியசாலை பொலிஸ் பொறுப்பதிகாரி இது தொடர்பில் பொரளை பொலிசாருக்கு அறிவித்து முறையிட்ட நிலையில் , இந்த விவகாரத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன . இது தொடர்பில் கடந்த 7 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் பொரளை பொலிஸாரால் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டு , இரசாயன பகுப்பாய்வுக்கான உத்தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன . இந் நிலையில் பலத்த தீ காயங்களுக்குள்ளான ஹிஷாலினி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 73 ஆவது சிகிச்சை அறையில் தீவிர சிகிச்சைப் பிரிவு 2 இல் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில் , வெளிப்புற தீக்காயங்கள் , கிருமி தொற்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி மரணத்துக்கான காரணமாக அதில் கண்டறியப்பட்டுள்ளது . விஷேடமாக குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையின் படி ,  ஹிஷாலினியின் உடலில் 72 வீதமான பகுதி தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் . அத்துடன் ஹிஷாலினி எந்தவிதமான சித்திரவதைகள் , கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என குறிப்பிட்டுள்ள நிலையில் நாற்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலான சான்றுகள் உள்ளதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
மலையக சிறுமி என்பதாலோ அல்லது அரசியல்வாதி ஒருவரின் பெயர் நேரடியாக தொடர்புபடுவதாலோ என்னமோ பெரிதாக இதைப்பற்றி ஊடகங்கள் எவையுமே பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை போலும்.
இலங்கையில் 16 வயதுக்கு கீழ் கட்டாய கல்விக்கான வயது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வயதுடையோர் வேலைக்கமர்த்தப்படுதல் சட்டப்படி குற்றமாகும் என வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு சிறுமி வேலைக்கமர்த்தப்பட்ட குற்றத்தில் இருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படுதல் வேண்டும். ரிஷாட்பதியுதீன் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதுடன் முன்னாள் அமைச்சர் – இது போக மொறட்டுவை பல்கலைக்கழக பட்டதாரி வேறு. இவருக்கு தெரியாதா சிறுவர்களை வேலைக்கமர்த்தக்கூடாது..? என்று.
இதே வேளை சிறுமி 15ம்திகதி இறந்துள்ள நிலையில் மேலதிகமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு கல்வி கற்றவர் – நாடாளுமன்ற அரசியல்வாதி பல்லாயிரக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தலைவர் என்ற வகையில் எவ்வளவு முன்மாதிரியாக நடந்து கொண்டிருக்க வேண்டும் அவர்.
ஒரு சிறுமி வேலைக்கமர்த்தப்பட்ட போது உன்னுடைய வயது என்ன..? என்ன படித்திருக்கிறாய் என கேட்டு அடுத்த கட்டம் பற்றி செயலாற்றியிருக்க வேண்டும். அந்த பொறுப்பு அவருக்கிருந்தது.  ஆனால் அப்படியாக அவர் செய்யவில்லை. பாவம் முஸ்லீம் சிறுவர்களை மட்டுமே தன்னுடைய பிள்ளைகளாக ரிஷார்ட் பதியுதீன் நினைத்துவிட்டார் போலும்.
சிலர் வழமை போல அரசியல்வாதிகளுக்கு பல்லக்கு தூக்கும் மனோநிலையில் நின்று கொண்டு பிள்ளையை வேலைக்கு அமர்த்திய பெற்றோரை கேளுங்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் வேலை செய்வோர் விபரங்களை எல்லாம் கவனிக்க முடியுமா..?  அது தீக்காயங்கள். பிள்ளை தீ வைத்துக்கொண்டாள் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் ஏதோவெல்லாம்  பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
01. சிறுமியை வேலைக்கு செல்ல விட்ட  பெற்றோரில் பிழை இருக்கின்றது. அவர்கள்  விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் சாதாரணமாக தன்னுடைய வீட்டையே கவனிக்க முடியாத ஒருவர் எப்படி சமூகத்தை கவனிக்கப்போகிறார்..?
02.சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்து – பிள்ளை தற்கொலைக்கு முயற்சித்தால் என்றெல்லாம் ஒரு பக்கத்தால் கூறப்படுகின்றது. சற்று  யோசித்துப்பாருங்கள். ஒரு முன்னாள் அமைச்சருடைய வீட்டில் விறகு அடுப்பா பயன்படுத்தப்போகிறார்கள்…?
இது போக சிறுமியின்யின் உடலில் நாட்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப் பட்டுள்ளமைக்கான தடயங்கள் உள்ள நிலையில் ; அதற்கு காரணமானவர்கள் யார்..? என்பது தீர விசாரிக்கப்பட வேண்டும். அதே நேரம் குறித்த சிறுமி வேலைக்கமர்த்தப்பட்ட நாள் முதல் அவள் தன்னுடைய வீட்டுக்கு அனுப்ப அனுமதி வழங்கப்படவில்லை. காரணங்கள் ஆழமாக தேடப்பட வேண்டியன.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதும் ரிசாட்பதியுதீன் வைத்தியசாலையில் தஞ்சமடைந்துள்ளார். பொருத்திருந்து பார்ப்போம் ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது போல இந்த வழக்கில் சாட்சியங்கள் மறைக்கப்பட்டு –  யார் கேள்வி கேட்கப்போகிறார்கள் என வழக்கை கிடப்பில் போட்டு  அதிகாரவர்க்கம் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளுமா..? அல்லது நீதிமன்றம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிரூபிப்பார்களா என்று.
இலங்கையில் நாளுக்கும் நாள் சிறுவர்கள் மீதான வன்முறைகளும் பாலியல் துஷ்பிரயோகத்துகங்களும் அதிகரித்துள்ள நிலையில் இந்த வழக்கில் வழங்கப்படப்போகின்ற தீர்ப்பு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான திருப்புமுனையாக அமையும்.