கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இலங்கையில் ஐ.நா.புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதா – இரு தரப்புக்குமிடையே இராஜதந்திரப் போர்

_sri_lanka_sat_any.gif ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருப்பதையடுத்து இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்குமிடையிலான இராஜதந்திரப் போர் இப்போது மேலும் தீவிரமடைந்திருக்கின்றது.

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய செய்மதி ஒளிப்படங்கள் சில ஐ.நா.வினால் வெளியிடப்பட்டதையடுத்தே இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசு முன்வைத்துள்ளது.

பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல்களை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எனக்கூறி செய்மதி ஒளிப்படங்கள் சிலவற்றை ஐ.நா.சபை கடந்த வாரத்தில் கசிய விட்டதையடுத்து இலங்கை அரசாங்கம் கடும் சீற்றமடைந்திருக்கின்றது.  இந்தச் செயற்பாட்டின் மூலமாக ஐ.நா.சபை தன்னுடைய வழமையான செயற்பாடுகளின் எல்லையைத் தாண்டிச் சென்றிருக்கின்றது என்ற குற்றச்சாட்டையும் இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்கின்றது.

உறுப்பு நாடு ஒன்றின் தகவல்களை இரகசியமான முறையில் பெற்று, அந்த நாட்டுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அந்தத் தகவல்களை பின்னர் ஏனைய நாடுகளுக்கும் ஊடகங்களுக்கும் கசிய விடுவதற்கான உரிமை ஐ.நா.வுக்கு உள்ளதா என இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  “ஐ.நா.வின் ஒரு பிரிவோ அல்லது ஐ.நா.வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தனிநபரோ உறுப்பு நாடு ஒன்றில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சேகரித்து பின்னர் அவற்றைத் தெரிவு செய்யப்பட்ட சில தூதரகங்களுக்கு கசியவிடுவது அல்லது இணையத்தளத்தில் வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோஹன ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கின்றார்.  உலகில் போர்ப்பகுதிகளாக பல இடங்கள் உள்ளன எனச் சுட்டிக்காட்டியிருக்கும் கோஹன. இந்த இடங்களில் எல்லாம் உளவு பார்ப்பதற்கான உத்தேசம் ஐ.நா.சபைக்கு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

இலங்கை அரசாங்கத்துக்குச் சங்கடமான நிலைமை ஒன்றை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த செய்மதிப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன எனக் குறிப்பிடும் கோஹன, இவ்வாறான நடவடிக்கை சர்வதேச உறவுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பதுடன், சக்தியற்ற மூன்றாம் உலக நாடகளுக்கு விடுக்கப்படும் ஒரு மிரட்டலாகவுமே கருதவேண்டுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகள் வசமிருக்கும் எஞ்சிய பகுதியை நோக்கிப் பல முனைகளிலும் படைநகர்வு

waroooo.jpgபாதுகாப்பு அமைச்சு கூறுகிறதுமுல்லைத்தீவில் மோதல் தவிர்ப்பு வலயத்தில் விடுதலைப் புலிகள் வசமிருக்கும் மிகுதிப் பகுதியையும் கைப்பற்றும் கடும் தாக்குதலை படையினர் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பரந்தன் முல்லைத்தீவு வீதியில் “ஏ35′ நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மிக அருகருகே நடைபெற்ற கடும் சமரையடுத்து அப்பகுதியில் புலிகளால் மிகவும் வலுவாக அமைக்கப்பட்டுள்ள மண் அணையை 53 ஆவது படையணியினர் தகர்த்துள்ளனர்.

இதையடுத்து, மோதல் தவிர்ப்பு வலயத்தினுள் புலிகள் வசம் எஞ்சியிருக்கும் கடைசி 5 சதுர கிலோ மீற்றர் பரப்பையும் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 58 ஆவது மற்றும் 53 ஆவது படையணிகள் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.  “ஏ35′ வீதி, முல்லைத்தீவு புதுமாத்தளன் வீதியை இணைக்கும் முக்கிய சந்திக்குத் தெற்கே நந்திக்கடல் வாவிக்கும் “ஏ35′ வீதிக்குமிடையிலுள்ள சிறிய பகுதியில் தற்போது 53 ஆவது படையணி செயற்படுகிறது.

சனிக்கிழமை 58 ஆவது மற்றும் 53 ஆவது படையணிகள், புதுமாத்தளன் முல்லைத்தீவு மற்றும் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் வெள்ளமுள்ளிவாய்க்காலுக்கும் இடையிலுள்ள முக்கிய சந்தியைக்கைப்பற்றியுள்ளது.  இந்தக் கடும் சமரின் போது விடுதலைப் புலிகள், தாங்கள் அமைத்திருக்கும் மண் அணையை படையினர் கைப்பற்றுவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை புலிகள் இந்தப் பகுதிக்கு பல வாகனங்களில் மேலதிகமாக தங்கள் ஆட்களை அனுப்பி படையினரின் நகர்வுகளை முறியடிக்க பல தடவைகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.  எனினும், புலிகளினால் கண்ணி வெடிகள், மிதி வெடிகள் மிக அதிகளவில் புதைக்கப்பட்டு மிகவும் வலுவாக வைத்திருந்த மண் அணையை படையினர் கடும் சமரின் பின்னர் கைப்பற்றியுள்ளதாகவும் இதில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பு கூறியுள்ளது.

தற்போது எஞ்சியிருக்கும் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் படையினர் சகல முனைகளிலும் முன்னேறி வருவதால் புலிகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகவும் படையினர் கூறுகின்றனர்.

கிளிநொச்சியில் சிங்களவனால் இறக்கப்பட்ட புலிக்கொடி இன்று உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது; – சீமான்

semaan.jpg
கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இவ்வாறு  சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய ‘மேலைக் கடலில் ஈழக்காற்று’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீமான் ஆவேசமாகப் பேசினார்.
 
இவ்விழாவில் கலந்து சிறப்பித்த இயக்குனர்  சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார். இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது. காரணம் என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே!  யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல.என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவருமே போராளிகள்தான்.  புலிகள்தான்!

கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. பிரபாகரனை என் அண்ணன் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததாக எனக்கு விளக்கம் அளித்துள்ளார்கள்.

இத்தாலி சோனியாவை “பாரதத்தின் அன்னை” என்று அழைக்கும்போது, என் சொந்த இரத்தம், என் தொப்புள் கொடி உறவு பிரபாகரனை அண்ணன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று அழைப்பேன். தமிழன் சாவதை, தமிழ்ப் பெண்கள் மானம் சூறையாடப்படுவதை, தமிழ்ச் சகோதரன் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிட்பபதை நம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. இழவு வீட்டில் அழத்தானே செய்வார்கள். வாய் மூடி நடிக்க இங்கே என்ன படமா எடுக்கிறார்கள்..சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க…இலங்கை என்ற ஒரு நாடு கிடையாது. ஈழம்தான் அதன் உண்மையான பெயர். சட்டம், போலீஸ், இராணுவம், வரி வசூல், கல்வி, போக்குவரத்து.  என ஒரு பிரபாகரன் கட்டியெழுப்பிய ஒரு அற்புதமான நாட்டை அழிக்க முழு முதல் காரணம் இந்த காங்கிரஸ். அந்தக் காங்கிரஸ் இந்த மண்ணிலிருந்தே விரட்டப்பட வேண்டும். நான் செத்தாவது இந்தக் காங்கிரஸை விரட்டியடிப்பேன்’’ என்று ஆவேசமாக பேசினார்   சீமான்.

இடம்பெயர்ந்தோர் நலன் குறித்து பிரித்தானிய எம்.பி. க்களுக்கு ஜனாதிபதி விளக்கம்

uk_delegation-2009-05-05.pngஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இச்சந்திப்பு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்போது அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் மற்றும் சேவைகள் தொடர்பாகவும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்தும் பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினருக்கு ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.

 இச்சந்திப்பில் அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம,  மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோர் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

4வது கட்டத் தேர்தல்-இன்று பிரச்சாரம் முடிகிறது

iindias-election.jpg மக்களவை தேர்தலில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 85 தொகுதிகளில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்தத் தொகுதிகளில் நாளை மறுநாளான 7ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. நாடாளுமன்றத்திற்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. நான்காவது கட்டத் தேர்தலில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 85 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடக்கும்.

இதில் ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகள், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகள், டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 18 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 4 தொகுதிகளுக்கும், பிகாரில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது.

இந்தத் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.

நான்காம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்களில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, லாலு பிரசாத், கபில் சிபல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரும் அடங்குவர்.

ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்

j-j-j.jpgமுன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் நேற்று மாலை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு இன்று (நேற்று) பகல் 12.30 மணி அளவில் “இன்-லேன்ட்” கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தை அனுப்பியவர் பெயரோ, முகவரியோ இல்லை.

கடிதத்தில் முன்னாள் முதல்-அமைச்சரை கொலை செய்து விடுவோம் என்று கடுமையான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு முன்னாள் முதல்-அமைச்சருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

புகார் மனுவோடு கொலை மிரட்டல் கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது. கடிதத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-

நீங்கள் ரவுடி வக்கீல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசுக்கும், போலீசுக்கும் பிளவை உண்டாக்கும் கருவியாக இருக்கிறீர்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் பிளவை உண்டாக்கும் வகையில் உங்கள் செயல்பாடு உள்ளது. எனவே உங்களை மே 1-ந் தேதியில் இருந்து 4-ந் தேதிக்குள் குண்டு வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் போது சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கலாம். தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டது போல நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள். தேர்தல் பிரசாரத்திற்கு கிளம்பும் போது உங்கள் வீட்டு வாசலில் குண்டு வெடிக்கலாம். நீங்கள் கொலை செய்யப்படும் தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை தினமாக கடைப்பிடிக்கப்படும். எச்சரிக்கையாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் வாசகங்கள் உள்ளன. கடித வாசகங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டிருந்தது.

இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளார்.

போர் நிறுத்தம் கொண்டுவர அனுசரணைப் பணி செய்யுங்கள்- ரவிசங்கர் குருஜியிடம் புலிகள் கோரிக்கை

sri_sri_ravi_shanka.jpg இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அனுசரணைப் பணிபுரியுமாறு இந்தியாவின் ஆன்மீகத் தலைவரும் வாழும் கலை நிறுவனத்தின் ஸ்தா பகருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் நேற்று குருஜியுடன் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசினார். அப்போதே இந்தக் கோரிக்கையை அவர் முன் வைத்தார் என்று இந்தியச் செய்தி ஏஜென்சிகள் தகவல் வெளியிட்டுள்ளன.

மோதல் பிரதேசத்தில் உணவு மற்றும் மருந்துப் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நடேசன் ரவிசங்கர் குருஜியிடம் தமது தொலைபேசி உரையாடலின் போது எடுத்துரைத்தார்.

நாங்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராகவே உள்ளோம். போர் நிறுத்தத்தை நடை முறைப்படுத் தேவையான அனுசரணைப் பணியை மேற்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் நடேசன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சுவாமிகள் வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைமை தொடர்பாக கேட்டறிந்தார்.அதன்பின் 23 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவர் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

‘அடங்காப்பற்று’ மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு

adangappattu-2.jpg கனடாவின் ரொறன்ரோ நகரில் இன்று நடைபெறவிருந்த ‘அடங்காப்பற்று’ நிகழ்வும் மனிதச் சங்கிலிப் போராட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக கனடியத் தமிழ் மாணவர்களும் கனடியத் தமிழர் சமூகமும் தெரிவித்திருப்பதாவது:

பல தரப்பினரது அவசர வேண்டுகோள்களுக்கு இணங்க ரொறன்ரோவின் நகரின் மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (05.05.09) நடைபெறவிருந்த ‘அடங்காப்பற்று’ மற்றும் மனிதச்சங்கிலி – 3 ஆகிய நிகழ்வுகள் தற்காலிகமாக பின்போடப்படுகின்றது. எமது தாயக அவலம் தீர்க்கும் வரை என்றும் அடங்காது எமது ‘அடங்காப்பற்று’.

‘அடங்காப்பற்று’ மற்றும் மனிதச்சங்கிலி – 3 ஆகிய நிகழ்வுகளின் மேலதிக விபரங்களை விரைவில் அறியத்தரப்படும். உறுதியும், ஓர்மமும் கொண்ட ஒற்றுமைப்பட்ட சமூகமாக எமது தாயக அவலம் தீரும்வரை தொடர்ந்தும் முன்னெறுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

கனடிய அமைச்சரின் போர்நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு

can-srila.jpgகனடிய அமைச்சரினால் விடுக்கப்பட்ட போர்நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரித்து விட்டதாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட சர்வதேச ஒத்துழைப்புக்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜேஒடாவே போர்நிறுத்தக் கோரிக்கையை விடுத்திருந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏ.எப்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச ஒத்துழைப்புக்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஒடா வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை நேற்றுக்காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது கனடிய அமைச்சர் போர்நிறுத்தம் குறித்து விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த மாதம் அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒருதலைப்பட்ச மோதல் தவிர்ப்பு தோல்வியில் முடிவடைந்ததாக அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கனடிய அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.

வவுனியாவுக்கு இதுவரை 30 லொறி மருந்துப் பொருட்கள் அனுப்பி வைப்பு

medical_lorry.jpg வவுனியாவுக்கு வந்துள்ள மக்களின் மருத்துவ தேவைகளுக்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரை 30 லொறிகளில் மருந்து வகைகள் அனுப்பிவைக்கப் படடுள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவுப் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.
 
வன்னியில் இருந்து வந்துள்ள மக்களுக்காக நேற்றைய தினமும்  3 லொறிகளில் மருந்து வகைகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் என்பன அனுப்பி வைக்கப்பட்டன. இதேவேளை புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு இன்று கப்பல்  மூலம் மருந்து வகைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு தேவையான மருந்து வகைகள் தொடர்பாக மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் அமைச்சிற்கு அறிவித்திருந்தார். இதன்படி கப்பல் மூலம் புதுமாத்தளனுக்கு மருந்து வகைகள் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும் மருந்துகள் கப்பல் மூலம் புதுமாத்தளனுக்கு அனுப்பப்படும் எனவும் அவர் கூறினார். புதுமாத்தளனுக்கு கடந்த மாதத்தில் இரண்டு தடவைகள் மருந்து வகைகள் அனுப்பப்பட்டுள்ளன.