கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

வடகொரியா இரண்டாவது அணுகுண்டு பரிசோதனை

statetv_grab-korutroket.jpgவட கொரியாவினால் செய்யப்பட்ட இரண்டாவது அணுகுண்டு சோதனையை அதன் நெருக்கமான இராஜதந்திர கூட்டாளி நாடான சீனா விமர்சித்துள்ளது.நிலத்தடியில் வைத்து செய்யப்பட்டுள்ள இந்த அணுகுண்டு சோதனையை தாம் திட்டவட்டமாக எதிர்ப்பதாக சீனா கூறியுள்ளது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த அணுகுண்டு சோதனை வெற்றிகரமானது என்று வடகொரியா புகழ்ந்துள்ளது.

அந்த வெடிப்பின் சக்தியானது 1945ல் நாகசாக்கியில் போடப்பட்ட அணுக்குண்டுக்கு ஒப்பானது என்று ரஷ்ய இராணுவ அறிக்கை மதிப்பிட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வடகொரியாவின் அணுச் சோதனையை விட இது பெரியதாகும். சிறிது நேரத்தின் பின்னர் வடகொரியா மூன்று குறுந்தூர ஏவுகணைகளையும் பரிசோதித்ததாக தென்கொரிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை விடுதலை செய்யவும். : வீ. ஆனந்தசங்கரி – தலைவர் த.வி.கூ

Anandasangaree V _ TULF Leaderமேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,                        
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

அன்புடையீர்,

மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை விடுதலை செய்யவும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பிரதேச சுகாதார சேவைகளின் பணிப்பாளர்களாக கடமையாற்றிய வைத்திய கலாநிதிகள் ரி. சத்தியமூர்த்தி, ரி. வரதராஜன், முல்லைத்தீவு வைத்திய அத்தியட்சகர் கலாநிதி வி. சண்முகராஜா ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சம்பந்தமாக தலையிட அனுமதிக்கவும். வன்னிப் பகுதி வைத்தியர்கள் தப்பி வர இம் மூவர் மட்டும் அங்கே தங்கியிருந்து இராணுவம் முன்னேற முன்னேற வைத்தியசாலையையும் நகர்த்திக் கொண்டு இரவு பகலாக நோயாளிகளுக்கும், காயமடைந்தோருக்கும் வைத்திய சேவையினை மேற்கொண்டிருந்தனர். தனி ஒருவரால் சமாளிக்க முடியாத பெரும் எண்ணிக்கையினரை இவர்கள் மூவரும் கவனி;த்து வந்தனர். பல நாட்கள் தேநீர் மட்டும் அருந்தி உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சிசு ஒன்றிற்கு வைத்தியம் செய்த ஒரு வைத்தியர், தனக்கு போதித்த ஒரு சிங்கள பேராசிரியரிடம் ஆலோசனை பெற்று அக் குழந்தையை காப்பாற்றியுள்ளார். இரவு பகலாக மோசமான காலநிலையையும், தம்மைச் சுற்றி பாய்ந்து கொண்டிருந்த துப்பாக்கிக் குண்டுகளையும் பொருட்படுத்தாது பணி புரிந்தார்கள்.

தொடர்ந்து செல் தாக்குதல் காரணமாக அரச நிர்வாகம் முடங்கிய நிலையி;ல் உணவுக் கப்பலுக்கு துணைபோவதையும் காயமுற்றோரை மீட்டுச் செல்வதையும் இதே காரணத்துக்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மறுத்திருந்த வேளை, வேறு வழியின்றி இவர்களும்  தமது சேவையிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். இவர்களின் சேவையாலேயே இடம் பெயர்ந்தோரில் பெரும் பகுதியினர் உயிர் வாழ்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்கிய போதும் இனி மக்களுக்கு சேவை செய்யும் நிலை இல்லை என்பதை உணர்ந்த பின்பே தமது சேவையை நிறுத்திக் கொண்டனர். அவ்வேளை அவர்களுக்கு தோன்றிய ஒரேயொரு வழி, ஏனைய இடம்பெயர்ந்தவர்கள் போல தாமும் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறி நலன்புரி முகாம்களுக்கு வந்து சேர்வதே. அவர்கள் குற்றவாளிகளாக தப்பியோடவில்லை. ஆனால் பாதுகாப்புக்கருதி முகாமுக்கு வந்தவேளை முகாமில் வைத்து இருவரும், காயங்களுடன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்றாவது வைத்தியரும் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் விடயத்தில் பின்வரும் உண்மைகள் கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டியவையாகும்.

1. இவர்கள் அரச ஊழியர்களாக வன்னிப் பகுதியில் நீண்டகாலம் சேவை செய்தவர்கள்.

2. அரச ஊழியரோ தனியார்துறை ஊழியரோ விடுதலைப் புலிகளின் கட்டளையை மீறிச் செயற்பட முடியாத நிலையில் அவர்களின் கட்டளைக்கமையவே, ஊடகங்களுக்கு அறிக்கை விடும் விடயங்கள் உட்பட, சகல விடயங்களிலும் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.

3. இவ் வைத்தியர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமைய செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டால் அப் பகுதியிலே சேவை செய்த அரச ஊழியர் ஒருவர் தன்னும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

4. கடமை உணர்வுடன் அவர்கள் கடைசி நிமிடம் வரை கடமையாற்றியதால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

5. விசேடமாக மிக இக்கட்டான வேளையில் காயமுற்றோருக்கு பணியாற்றி அரசினுடைய பெயரையும் காப்பாற்றியமையால் அவர்கள் பராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட வேண்டியவர்களாவர். சுகாதாரத் திணைக்களம் இவர்களுடைய சேவையை பாராட்ட கடமைப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களே! இவர்கள் மீது எதுவித குற்றமும் இல்லையென  இவர்களை விடுவிப்பீர்கள் என நம்புகிறேன். இன்றுவரை நான் அறிந்த வரையில் வன்னிப் பகுதியில் சேவை செய்த ஒரு ஊழியர் தன்னும் அரச கட்டுப்பாட்டுப்பாட்டு கோவையை மீறி செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.

எத்தகைய தண்டனை கொடுக்கப்பட்டாலும் அது சரித்திரத்தில் பெரும் தவறாகவே கணிக்கப்படும்.

நன்றி,

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

ஆகஸ்ட் மாதம் வடக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் – ஜுன் 17 முதல் 24 வரை வேட்புமனுத் தாக்கல்

north_.jpgவவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 17ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் அவரது அமைச்சில் இன்று காலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலின் பின்னர் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வட மாகாணத்தில் இறுதியாக கடந்த 1998ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் அங்கு எந்தத் தேர்தல்களும் நடைபெறவில்லை. எனினும் தற்போது வட மாகாண மக்களுக்கு 11 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இவ்விரு உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.வட மாகாணத்தில் ஒரு மாநகர சபை, 5 நகர சபைகள் மற்றும் 28 பிரதேச சபைகள் உட்பட 34 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

போராட்டம் தொடரவேண்டும். : சேனன்

Wanni_War_Welfare_Campஇரத்தக்களறியின் பின்

இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து பிரச்சார கூட்டம் ஒன்று பிரான்ஸ்ல் நடைபெறவுள்ளது

இந்தக் கூட்டம் இம்மாதம் 28ம் திகதி 2009 அன்று (The meeting place is) AGECA, 144 bd de Charonne, 75011 – Métro Alexandre Dumas (ligne 2) நடைபெறவுள்ளது.

கடந்த ஜனவரி 2ல் இரானுவம் கிளிநொச்சியை பிடித்ததில் இருந்து 20,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளின் கட்டுபாட்டு பகுதிக்குள் இருந்த 300 000க்கும் அதிகமான மக்களை சுற்றிவளைத்த இரானுவம் தினமும் கடும் தாக்குதல்செய்து கொலைவெறியாடியது. உணவு மருத்துவம் தங்கும் வசதிகள் இன்றி பட்டினியில் வாடிய மக்கள்மேல் குண்டுமாரி பொழிந்து கொன்று தள்ளியது. மக்கள் கூட்டமாக இருந்த இடங்கள் மருத்துவமனைகள் என்று முரட்டுத்தனமாக செல்கள் அடிக்கப்பட்டு மக்கள் வேட்டையாடப்பட்டதை மனித உரிமை அமைப்புக்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன. அதனால் இராணுவம் இந்த மனித உரிமை அமைப்புக்களையும் பத்திரிகையாளர்களையும் யுத்தபிரதேசத்தில் இருந்து முற்றாக தடைசெய்தது மட்டுமின்றி தெற்கில் தமக்கெதிராக இயங்க அல்லது பேச முற்பட்டவர்ளையும் வேட்டையாடியது.

கடந்த பல மாதங்களாக நடத்திமுடித்த கொலைவெறியாட்டத்தின் பின் மகிந்த ராஜபக்ச மக்களை ‘விடுதலை’ செய்துவிட்டதாக தற்போது அறிவித்துள்ளார். பயங்கரவாதத்தில் இருந்து இலங்கையை காப்பாற்றி விட்டதாக கடந்த மே 18ல் ‘வெற்றி’ யை அறிவித்துள்ளார் ஜனாதிபதி. இலங்கை மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பாரிய உயிரிழப்புக்காக துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் 20ம் திகதியை கொண்டாடும் நாளாக அரச விடுமுறையை அறிவித்துள்ளது அரசு. 20 000க்கும் மேற்பட்ட உயிர்களை சில மாதங்களுக்குள் சூறையாடியதை வெற்றியாக அறிவித்து கொண்டாடும் சிங்கள இலங்கை அரசு தமிழர் உரிமை பற்றி பேச எந்த தகுதியும் அற்றது. வெற்றி கொண்டாட்டங்களுக்கு முந்திய சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். எதுவித நடவடிக்கைகளையும் எடுக்க மறுக்கும் ஒன்றுக்கும் உதவாத யு.என் கூட இறுதி நாட்கள் நிகழ்வுகளை ‘இரத்தகளறி’ என்று வர்ணித்துள்ளது. மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமை பற்றி எந்த அக்கறையு மற்ற வலதுசாரி வியாபரிகளான ஜரோப்பிய ஒன்றியம் கூட யுத்த குற்றம் சார்பாக தனியாக விசாரனை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

பாரிய அவலத்தை எதிர்கொண்டுள்ள தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த யுத்த முடிவு எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடவில்லை. அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக்கப்பட்டு – இரண்டரை லட்சத்துக்கு அதிகமானவர்கள் அடிப்படை வசதிகளற்ற முகாம்களில் அடைக்கப்பட்டு –பேச்சுரிமை உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டு பயக்கெடுதிக்குள் வாழும்படி தள்ளப்பட்டுள்ள நிலையில் கொண்டாட என்ன இருக்கு? தெற்குக்கு தப்பியோடியவர்கள்கூட திரும்பிவர ஒன்றுமில்லாதபடி தரைமட்டமாக்கப்பட்ட வாழ்விடங்களை பார்த்து சந்தோசப்பட என்ன இருக்கு? யுத்தத்தால் ஏற்கனவே கொடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களை முகாம்களில் அடைத்து தலையாட்டிகள் முன்நிறுத்தி குற்றவாளிகளாக குறுக்கி அவர்களை மேலும் மன உளைச்சல் நோக்கி தள்ளும் அக்கிரமத்தை பார்த்துகொண்டு பேசாமல் இருக்கமுடியாது.

உரிமை போராட்டம் தொடர்வது அவசியதேவை

பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் யுத்தம் ஆயிரக்கணக்கான தமிழர் உயிர்களை வேட்டையாடியுள்ளதால் தமிழர்கள் இனி தம்மேல் திணிக்கப்படும் அரசியலை ஏற்றுக்கnhள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. கொலை வெறியாட்டம் மூலம் தமிழர் தம் உரிமைகளை சரணாகதியாக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது மிகத்தவறு. தமிழ் மக்கள் மிகக்கேவலமான வறுமைக்குள் வாழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள இத்தருணத்தில் தமிழ் மக்களின் பாரிய ஒன்றுபட்ட எழுச்சியே அவர்களை அடக்குமுறையில் இருந்து மீட்கக்கூடியது. இருப்பினும் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்கள் அத்தகைய உரிமை கோரலை தலையெடுக்காவண்ணம் அனைத்து கட்டுப்பாடுகளையும் உருவாக்கியுள்ளது அரசு. இருப்பினும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் தொடர்வதும் மக்கள் சுதந்திரமாக தமது தேவைக்கான குரலை வைக்கும் சூழலை உருவாக்குவதும் அத்தியாவசிய தேவை. அதற்கான முதற்கட்ட போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சியை நாம் செய்துவருகிறோம். எமது அணிதிரட்டல் பின்வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

1 இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்து – தமிழ் மக்கள் வாழும் இடங்களில் இருந்து இராணுவத்தைத் திரும்பப்பெறு. மக்கள் கடத்தப்பட்டும் காணாமற் போய்க் கொண்டிருப்பதை நிறுத்து.

2 தடுப்பு முகாம்களை மூடு – தேர்வு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மூலம் மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளான உணவு, தங்கும் வசதி, மருத்துவத் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்.

3 அனைவருக்குமான ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்து. – பேச்சுரிமை, ஊடக உரிமை, சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களினதும் தொழிற்சங்க உரிமை, இனம் மதம் சாதி பால் வேறுபாடின்றி அனைவரது உரிமைகளையும் சமமாக மதிக்கும் கட்சிகள் சுதந்திரமாக இயங்க தேர்தலில் பங்குபற்றும் உரிமை, முதலான அனைத்து ஜனநாயக உரிமைகளையும் உத்தரவாதப்படுத்து.

4 ஒன்றுபட்ட தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கான ஆதரவைத் திரட்டுவோம். – கூட்டமைக்கும் அல்லது அணிதிரள்வதற்கான உரிமையை வழங்கு. கொலை மற்றும் காணாமற் போகின்றவர்கள் பற்றிக் கண்காணிக்கும் ‘மக்கள் கண்காணிப்பு குழு’ போன்ற அமைப்புகள் சுதந்திரமாக பணியாற்றும் உரிமையை வழங்கு.

5 சுயநிர்ணய உரிமையை உத்தரவாதப்படுத்து (நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயமான மக்கள் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு மூலமோ அல்லது ஒரு சட்ட நிர்ணய சபையை உருவாக்குவதன் மூலமோ அல்லது வேறேதாவது முறையிலோ சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பதற்கான வழியேற்படுத்து.) வறிய மக்கள், தொழிலாளர்கள் ஒன்றுபடுதலின் அடிப்படையில் மக்கள் தம் எதிர்காலத்தைச் சுயமாக நிர்ணயிப்பதற்கான ஆதரவைத் திரட்டுவோம்.

பஞ்சாப்பில் வன்முறை – 2 பேர் பலி

punjab1.jpgஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இரு சீக்கிய பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் சீக்கிய மதகுரு சந்த்ராம் நந்த் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. வன்முறைக்கு
இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ராணுவம் விரைந்துள்ளது. கொல்லப்பட்ட சந்த்ராம் நந்த் மற்றும் குருசந்த் நிரஞ்சன் தாஸ் என்ற மதகுருவும் இணைந்து குருத்வாராவில் ஆன்மீக உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென 6 பேர் உள்ளே நுழைந்து கத்திகள், துப்பாக்கிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை மோதல் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வியன்னாவில் நடந்த தாக்குதல் பஞ்சாபில் எதிரொலித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறை மற்றும் கலவரம் மூண்டுள்ளது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ஜலந்தரில் பஸ்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. போலீஸ் வேன்களும் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. அங்கு துணை ராணுவப்படை விரைந்துள்ளது. ராணுவமும் விரைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லம்ப்ரா கிராமத்தில், ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு பேர் காயமடைந்தனர். அதேபோல ஜலந்தர் கன்டோன்மென்ட் பகுதியில், போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். பக்வாரா பகுதி வழியாக சென்ற கன்னியாகுமரி – ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயிலை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி தீவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ரயிலின் 3 பெட்டிகள் எரிந்து போய் விட்டன.

மும்பை விமான நிலையத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு

Gun 01மும்பை விமான நிலையத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடந்தது. 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை விமான நிலைய சரக்குப் பிரிவு வளாகத்திற்குள் இன்று காலை 3 ஆயுதம் தாங்கிய கும்பல் உள்ளே நுழைந்து சரமாரியாக சுட்டது.இதில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 3 பேரும் காரில் வந்ததாக தெரிகிறது. யார் அவர்கள், எதற்காக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து தெரியவில்லை.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல்:டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியன்

ipl-2009-01.jpg
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை (24.05.2009) இரவு நடைபெற்ற, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் (இந்தியன் பிரிமியர் லீக்) இருபது ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில்  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி  சாம்பியன் பட்டத்தை வென்றது.

கடந்த மாதம் 18 ந் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கிய 2 வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம்  நேற்று நடந்தது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் கடந்த முறை 7 வது இடம் பெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கடைசி (8 வது) இடம் பெற்ற ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் நேற்றைய இறுதிப் போட்டியில் மோதியது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி பேட் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. கிப்ஸ் 48 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன்னுடனும், ஹாரிஸ் 5 பந்துகளில் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

பின்னர் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய, அனில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கியது.

வழக்கமாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

எரித்திரியாவை தடை செய்யுமாறு ஐ.நாவிடம் கோரிக்கை

somaliaauforce.jpg எரித்திரியா மீது ஐ.நா. பாதுகாப்பு சபை தண்டனைத் தடைகளை விதிக்க வேண்டும் என்று ஆப்பிரிக்க ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தனது உறுப்பு நாடுகளில் ஒன்றுக்கு எதிராக ஆப்பிரிக்க ஒன்றியம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருப்பது இதுவே முதல் முறை.

சோமாலியாவின் இஸ்லாமியவாத கிளர்ச்சிக்காரர்களுக்கு எரித்ரியா ஆயுதங்கள் வழங்கிவருவதாக ஆப்பிரிக்க ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. சோமாலியாவில் இடைகால அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆப்பிரிக்க ஒன்றியம் நான்காயிரம் துருப்பினரை பணியமர்த்தியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை எரித்ரியா மறுத்துள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியம் ”திறனற்ற மற்றும் வலிமையற்ற ஓர் அமைப்பு” என்று கூறி அதனைப் புறக்கணித்துள்ள எரித்ரிய தகவல் தொடர்பு அமைச்சர் அலி அப்து, எரித்ரியா அவ்வமைப்பிலிருந்து தனது உறுப்புரிமையை இடைநிறுத்திக்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சோனியாவுக்கு விசேஷ கைத்தறி சேலை; மம்தா பானர்ஜி வழங்கினார்

mamta-banerjee.jpg டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அண்மையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். அப்போது, அவருக்கு மேற்கு வங்காளத்தின் பிரசித்தி பெற்ற டோனேகாலி கைத்தறி சேலை ஒன்றை பரிசாக வழங்கினார்.

வெளிறிய நிறம் கொண்ட இந்த கைத்தறி சேலையை பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுக்கும் நாளன்று அணிந்து கொண்டு வருமாறும் சோனியாவிடம் அப்போது மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்துக்கு இந்த கைத்தறி சேலையை சோனியா அணிந்து வந்தால் டோனேகாலி ரக சேலைகள் மேற்கு வங்கத்தில் மட்டுமின்றி நாட்டின் பிறபகுதி பெண்களையும் ஈர்க்கும். இதன் மூலம் நலிவடைந்துள்ள மேற்கு வங்க கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையில் மீண்டும் மலர்ச்சி ஏற்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் வீரமரணச் செய்தியை அடுத்து புலிகளுக்குள் பிளவு! : த ஜெயபாலன்

LTTE LOGOPirabakaran_Vபுலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்து அவருடைய உயிரிழப்பு உறுதிப்படுத்துவதற்கு முன்னரேயே புலிகள் அமைப்பிற்குள் பெரும் பிளவு உருவாகி உள்ளது. மே 18ல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதை புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் என்று அறியப்பட்ட கே பி மறுத்திருந்தார். ஆனால் நேற்று மே 24ல் அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கே பி புலிகளின் தலைவர் முக்கிய தளபதிகள் வே பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி உள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த விடயம் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ள கே பி ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து ஆயுதப் போராட்டம் தவிர்ந்த வழிகளில் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே கே பி உடைய அறிக்கையை மறுத்து அவரைத் தேசத் துரோகி எனச் சித்தரித்து புலிகளின் மற்றுமொரு அணி தமிழகத் தலைவர்கள் வைக்கோ நெடுமாறன் ஆகியோருடாக ‘தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை’ எனத் தெரிவித்து அறிக்கைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த புலிகளின் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் தலைமைப்பீடத்தை கைப்பற்றுவதற்கான போட்டியாக அவதானிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் உயர்மட்டம் முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில், இந்த அழிவில் இருந்து மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுத் தளபதி ராம் மற்றுமொரு தளபதி நகுலன் ஆகியோரும் சில நூற்றுக்கணக்கான போராளிகளுமே எஞ்சியுள்ளனர்.

இதற்கிடையே புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பொறுப்பாளர் அறிவழகன் மே 22ல் தமிழ் நெற்றிற்கு அறிக்கை ஒன்றை வழங்கி இருந்தார். அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாகவும் அவர் இறந்தது என்பது திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தேசம்நெற் இற்கு கிடைக்கும் தகவல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்தலக வெளியுறவுத் செயலகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைக்குமிடையே அதிகார இழுபறி ஒன்று ஏற்பட்டு உள்ளதை உறுதிப்படுத்துகின்றன. மே 18ல் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முற்றாக அழிக்கப்படுவதற்கு அண்மையாக புலம்பெயர் நாடுகளில் உள்ள முக்கிய பொறுப்பானவர்கள் மாற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது. குறிப்பாக வே பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சார்ந்தவர்கள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று (மே 24 2009) வே பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக வே பிரபாகரன் உயிரிழந்த விடயம் சர்வதேச நாட்டுப் பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களுடாக அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கும் இது தெரியப்படுத்தப்பட்டது. கடந்த 72 மணி நேரத்தில் ஏற்படுத்தப்ட்ட தொடர்புகளில் முதலில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் மறுநாள் இல்லை உயிருடன் இருப்பதாகவும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. வே பிரபாகரனின் உயிரிழப்புத் தொடர்பாக கே பி புலிகளின் சர்வதேச நாடுகளின் பொறுப்பாளர்களிடம் இருந்து கடுமையான கேள்விகளை எதிர்கொண்டு உள்ளதாகத் தெரியவருகிறது. சர்வதேச நாடுகளின் பொறுப்பாளர்களும் தங்களின் உறுப்பினர்களிடம் இருந்து பலத்த கேள்விக்கணைகளை எதிர்நோக்கி இருந்தனர்.

புலிகளின் ஆதரவாளர்கள் தங்களின் நாட்டுப் பொறுப்பாளர்களிடமும் சர்வதேசப் பொறுப்பாளர்கள் கே பி இடமும் எழுப்பியதாக அறியவந்தள்ள கேள்விகளே இவை. ஆனால் இதற்கான பதில் இன்னமும் அவர்களுக்குத் தெரியவில்லை.

தலைவர் கொல்லப்பட்டாரா? இல்லையா?
அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்?
அத்தனை தளபதிகளும் எவ்வாறு ஒரே இடத்தில் இருந்தனர்?
அத்தனை பேரும் தலையிலும் நெஞ்சிலும் காதிலும் மட்டுமே சுடப்பட்டு உள்ளனர்?
அவர்கள் சரணடைவதற்கு நம்பிக்கையூட்டப்பட்டு உள்ளனரா?
அந்த நம்பிக்கையைக் கொடுத்தது யார்?
அந்த நம்பிக்கை ஏன் காப்பாற்றுப்படவில்லை?
நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்டு இருந்தால் ஏன் அதனை அம்பலப்படுத்தவில்லை?
தலைவர் கொல்லப்பட்டால் அது எதற்காக மறைக்கப்பட்டது?
தலைவர் கொல்லப்பட்டதை மறைத்தவர்கள் இப்போது ஏன் அதனை வெளிப்படுத்தினர்?

இவ்வளவு கேள்விகளுக்கு மத்தியில் கே பி ”எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.” எனத் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே புலிகளுக்குள் ஏற்பட்டுள்ள இப்பிளவு ஊடகங்களுக்குள்ளும் பரவியுள்ளது. விடுதலைப் புலிகளின் காணொளி ஊடகமாக விளங்கிய ஜிரிவி கே பி உடைய அறிக்கையை வெளியிட்டு இன்று (மே25 2009) முதல் துக்க தினம் அனுஸ்டிக்கப்படப் போகிறது. மறுமுனையில் விடுதலைப் புலிகளின் வானொலியாக விளங்கிய ஐபிசி வே பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லி உயிருடன் இருப்பவருக்கு என்ன அஞ்சலி என்று துக்க தினத்தை நிராகரித்து உள்ளனர்.

ஜிரிவி கே பி சார்பான நிலைப்பாட்டையும் ஐபிசி புலனாய்வுப் பிரிவு சார்பான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன. அடுத்த சில நாட்களில் இந்தப் பிளவுகள் ஊடகங்களில் வெளிப்படையாகத் தோண்றுவதைக் காணலாம். மேலும் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களும் ஆதரவாளர்களும் தாங்கள் அணியை தெளிவுபடுத்த வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

புலிகளின் அனைத்துலகச் செயலகம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தி உள்ளது. நேற்று அம்பாறையில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்து ஐபிசி புதினம் ஆகிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து இருந்தது. இவ்விரு ஊடகங்களும் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் கே பி யின் அறிக்கையை வெளியிடவில்லை.

இவ்விடயத்தில் தமிழ்நெற் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் கே பி யின் அறிக்கையை வெளியிடாத போதும் அவர்கள் இவ்விடயத்தில் நடுநிலை வகிக்க முற்பட்டு இருப்பதை அவர்களது ஆசிரியர் குழு அறிக்கை தெரிவிக்கிறது. ”பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா ஆயுதப் போராட்டம் தொடர வேண்டுமா இல்லையா போன்ற கேள்விகளால் தமிழ் தேசிய போக்கு பிளவுபடுவதோ சுரண்டப்படுவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. – The Tamil national cause cannot afford to be deviated and exploited by others through questions such as whether Pirapaharan is alive or not or whether the armed struggle has to be continued or not.”

இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? யார் எந்த அணியில் செல்வார்கள்? என்பது விரைவில் வெளிவரலாம்.

இப்போது ஏற்பட்டுள்ள பிளவு ஒரு உடன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் தீர்த்துக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அருகி வருகிறது. இப்பிரச்சினையில் புலிகளின் பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களும் சம்பந்தப்பட்டு இருப்பதால் இப்பிளவுகள் இன்னமும் ஆழமாவதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றது. பல்வேறு ஆவணங்களும் தொடர்புகளும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட பல முதலீடுகள் அவரவரின் சொந்த சொத்துக்களாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சில குழு மோதல்களுக்கும் வித்திடும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சர்ச்சையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் தளபதிகளுக்குமான அஞ்சலி நிகழ்வுகள் பந்தாடப்படப் போகின்றது. இப்போது ஏற்பட்டுள்ள முரண்நிலையால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலகளின் முன்னாள் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஆதரவாளர்கள் பெரும் குழப்பம் அடைந்து உள்ளனர்.

இலங்கையில் இன்னமும் ஆயுதங்களை வைத்துக்கொண்டுள்ள நூற்றுக் கணக்காண இளைஞர்களின் நிலையும் ஆபத்தானதாக உள்ளது. கே பி ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு உள்ளதால் அந்த இளைஞர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதற்கான பாதுகாப்பான வழிமுறை ஒன்றை மேற்கொள்ள முயற்சிப்பதாக அறியப்படுகிறது. அதே சமயம் ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக புலனாய்வுப் பிரிவுப் புலிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மாறுபட்ட அறிக்கைகள் அந்த நூற்றுக் கணக்கான இளைஞர்களை ஆபத்தில் தள்ளியுள்ளது.