கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஈரானில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகள் மீட்பு

iran-plane.jpgஈரானில் நேற்று விபத்துக்குள்ளான விமானத்தின் மூன்று கருப்புப் பெட்டிகளில் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றதைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டின் வீதி மற்றும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

மீட்கப்பட்ட இரு கருப்புப் பெட்டிகளும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளன. எனினும் அவற்றிலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் அனர்த்த செயற்பாட்டுக் குழுத் தலைவர் அஹ்மத் மாஜித் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தில் பயணம் செய்த 15 விமான ஊழியர்கள் உட்பட 168 பேரும் பலியாகியுள்ளனர். அவர்களுள் 7 பேர் வெளிநாட்டவர்கள். ஏனைய அனைவரும் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானிலிருந்து ஆர்மேனியாவின் தலைநகரான யேரேவான் நகருக்குப் பயணித்துக்கொண்டிருந்த இவ்விமானம் நேற்று அந்நாட்டின் வடமேற்குப் பிரதேசத்திலுள்ள குவாஸ்வின் நகர பகுதியில் வைத்து விபத்துள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் சில காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. இவ்விபத்து காரணமாக நிலத்தில் ஒரு பாரிய பள்ளம் ஏற்பட்டிருப்பதையும்,  விமானத்தின் சிதறிய பகுதிகளிலிருந்து புகை வந்து கொண்டிருப்பதையும் ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் உலகில் நிகழ்ந்த மிகப்பெரிய 5ஆவது விமான விபத்தாக ஈரான் விமான விபத்து கருதப்படுவதாக சீ.என்.என். சர்வதேச செய்திச் சேவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தபால் மூலவாக்களிப்பு: வாக்குச்சீட்டுகள் நேற்று அனுப்பி வைப்பு

வவுனியா நகர சபை தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித் தவர்களில் தெரிவான 183 பேருக்குரிய வாக்குச் சீட்டு க்கள் நேற்று புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டதென மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 27ம், 28ம் திகதி களில் நடைபெறுமெனவும் அவர் சொன்னார்.

அடுத்த மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள வவுனியா நகர சபைத் தேர்தலுக்குரிய வாக்கு சீட்டுக்கள் வவுனியா தேர்தல் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. மிகவும் பாதுகாப்பான முறையில் வாக்குச் சீட்டுக்கள் வைக்கப் பட்டுள்ளதென மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

பங்களாதேஷ் வீரர்களுக்கு அபராதம்

16-07-2009.jpgமேற் கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நடுவரிடம் அளவுக்கு அதிகமாக முறையீடு செய்த பங்களாதேஷ் சகலதுறை ஆட்டக்காரர் ஷகீப் அல் ஹஸன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷஹ்தாத் ஹொஸை ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை முடிவடைந்த பங்களாதேஷ்மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் பங்களாதேஷ் அணித்தலைவராக செயல்பட்ட ஷகீப் அல் ஹஸன் மற்றும் ஷஹ்தாத் ஹொஸை ஆகியோர் போட்டி நடுவரிடம் அளவுக்கு அதிகமாக முறையீடு செய்தனர்.

இது ஐ.சி.சி. ஒழுக்க விதியை மீறும் செயல் என ஐ.சி.சி. போட்டி மத்தியஸ்தர் அன்டி பைக்ரொப்ட் தெரிவித்துள்ளார். இதற்காக ஷகீப் அல் ஹஸனுக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 10 வீதமும் ஷஹ்தாத் ஹொஸைனுக்கு 5 வீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே குற்றத்திற்காக பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இம்ருல் கைஸுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் ஜனாதிபதிகள் 29, 30 இல் முக்கிய பேச்சுவார்த்தையில் பங்கேற்பர்

ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இம் மாதம் 29, 30 ம் திகதிகளில் சந்திக்கவுள்ளனர். தஜிகிஸ்தான் தலைநகர் டுஷான்பேயில் இச் சந்திப்பு இடம் பெறவுள்ளது.

எரிவாயு போக்குவரத்து, தொடர்பாடல், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்குடன் இத் தலைவர்கள் சந்திக்கவுள்ளதாக தஜிகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய ஜனாதிபதி மெத்விடில், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலிசர்தாரி, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் அல் கார்ஸாயி ஆகியோர் இரண்டு மாதங்க ளுக்கு முன்னர் ரஷ்யாவில் சந்தித்தனர். இதன் போது பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம் பற்றிப் பேசினர்.

இப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஏற்பட்டுள்ள முன் னேற்றங்கள் அதிலுள்ள தடைகள் பற்றியும் தஜிகிஸ் தான் மாநாட்டில் ஆரா யப்படவுள்ளது.  சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் தஜிகிஸ்தானும், ரஷ்யாவும் இறுக்கமான உறவுகளில் உள்ளன.

தஜிகிஸ்தானிலுள்ள மின்சார உற்பத்தித் திட்டங்கள் பலவற்றை ரஷ்யாவே நடாத்துகின்றது. இதனூடாக மத்தியாசியாவுக்கான மின்சாரத்தை விஸ்தரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப் படவுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஜனாதிப திகளும் இந்த மின்சாரத் திட்டங்களைப்பார்வையிடுவர். பல மில்லியன் ரூபா செலவில் இந்த மின்சாரம் ஏனைய நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

ஜென்துல்லா அமைப்பின் 13 பேர் ஈரானில் தூக்கிலிடப்பட்டனர்

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர் புடைய 13 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை ஈரானில் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் ஷிஆ முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு குற்றச் செயல்களுடன் ஈடுபட்டதால் நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டனர்.

ஆட் கடத்தல், கொலை, கொள்ளை, போதைவஸ்து வியாபாரம் மற்றும் வெளிநாட்டோரைக் கடத்துதல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களை “ஜென்துல்லா” என்ற அமைப்புக்காகச் செய்து வந்தனர்.

சுன்னி முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழும் ஷியா முஸ்லிம்களுக் கெதிராக சதி வேலைகள் செய்து ஈரானின் அமைதியான ஆட்சிக்குத் களங்கம் ஏற்படுத்தியோர்களாவர். ஈரானில் ஷியா முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்கள் அனைவரும் ஷெஹ்டான் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டதாகவும் இவர்களின் உறவினர்களும் இதற்காக அழைக்கப்பட்டு பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டதாக மாகாண தலைமை நீதிபதி கூறினார்.

இதில் ஜென்துல்லா அமைப்பின் தலைவர் அப்துல்லா மலிகின் சகோதரரான அப்துல்லா ரஹீமும் தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷெஹ்டான் ஈரானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரமாகும். இது ஆப் கான், பாகிஸ்தான் எல்லைகளிலுள்ளது. இங்கு தான் ஷெஹ்டான் சிறைச்சாலையுள்ளது.

போதை வஸ்துக் கடத்தல்கள் அதிகம் நடை பெறும் பகுதியான இங்கு ஈரான் அரசுக்கெதிராக ஜென்துல்லாக்கள் பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அண்மையில் ஷியா முஸ்லிம் பள்ளிவாசலில் நடந்த தாக்குதலில் 25 பேர் பலியாகினர். இதற்கு ஜென்துல்லாவே உரிமைகோரியது.

நியூசிலாந்தை தாக்கிய பயங்கர நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை

tsunami111.jpgநியூசிலாந் தில் இன்று மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து பசிபிக் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைத் தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சிறிய அளவிலேயே சுனாமி அலைகள் உருவானதால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.

தெற்கு, மேற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து. இதில் தென் தீவின் மேற்குப் பகுதியில் பியோர்ட்லாண்ட் என்ற இடத்தில் அந் நாட்டு நேரப்படி இரவு 8.22க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அருகே நிலத்தின் அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இது ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவானதையடுத்து பசிபிக் கடலில் சுனாமி ஏற்படலாம் என நியூசிலாந்து முழுவதும் எச்சரிக்கை விடப்பட்டது.

முதலில் தென் தீவையும் பின்னர் தலைநகர் ஆக்லாந்து மற்றும் முக்கிய நகரான வெலிங்டன் ஆகியவை அமைந்துள்ள வடக்குத் தீவையும் சுனாமி தாக்கக் கூடும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் இந்த அலைகள் ஆஸ்திரேலியாவையும் அடையக் கூடும் என்ற முன்னெச்சரிக்கையோடு அங்கு கிழக்குக் கடற்கரை பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், சிறிய அளவிலான சுனாமி அலைகளே உருவானதாகவும் இதனால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாகவும் ஆஸ்திரேலிய வானிலை மையம் பின்னர் அறிவித்துவிட்டது. இந்த அலைகள் ஆஸ்திரேலியாவின் தென் கிழக்குக் கடல் பகுதியை (டாஸ்மான் கடல் பகுதி) நோக்கி சீறியதாகவும் அந்த மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவின் தெற்குத் தீவில் உள்ள குயீன்ஸ்டெளன், கிரைஸ்ட்சர்ச் ஆகிய நகர்கள் உள்பட பெரும்பாலான பகுதிகளும் குலுங்கின. மக்கள் அலறியடித்துக் கொண்டு கட்டடங்களை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தையடுத்து தென் தீவு முழுவதும் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. நிலநடுக்கம் மிக பயங்கரமாக இருந்ததாக வனாகா என்ற நகரைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று பிரித்தானியாவில் சாதியப் பாகுபாடு விழிப்புணர்வு மாநாடு

Virendra Sharma MPபிரித்தானியாவில் காணப்படும் சாதியப் பாகுபாட்டை அடையாளப்படுத்தம் மாநாடு ஒன்று யூலை 15ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Voice of Dalit International (VODI) என்ற அமைப்பும் Catholic Association for Racial Justice (CARJ) என்ற அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இம்மாநாட்டில் ஆபிரிக்க ஆசிய சமூகங்கள் முகம்கொடுக்கும் இனப்பாகுபாடு பற்றியும் பேசப்பட இருக்கின்றது.

ஈலிங் சவுத்தோல் பா உ விரேந்திர சர்மா சிறப்புப் பேச்சாளராக உரையாற்றும் இம்மாநாட்டில் சகல சமயக் குழுக்கள், தேவாலயங்கள், பாதிக்கப்பட்ட சமூகங்கள், பொது அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் என 70 பேர்வரை கலந்துகொள்கின்றனர்.

National Council of Dalit Christians (NCDC) என்ற இந்தியாவில் உள்ள அமைப்பில் இருந்து வி ஜே ஜோர்ச் சர்வதேசப் பேச்சாளராகக் இம்மாநாட்டில் உரைநிகழ்த்த உள்ளார்.

பிரித்தானியாவில் ஆசிய சமூகங்களின் பெருக்கத்துடன் சாதியப்பாகுபாடு சமுகங்களை சாதிய அடிப்படையில் பிளவுபடுத்துவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு இம்மாநாடு பற்றிய தனது அழைப்பிதழில் தெரிவித்து உள்ளது. இச்சாதியப் பாகுபாடு ஒரு பரம்பரையில் இருந்து மற்றைய பரம்பரைக்கு கைமாற்றப்படுவதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.

சாதியப்பாகுபாடு பாதிக்கப்பட்டவர் மீது கீழான முத்திரையைக் குத்துவதாகவும் அவருடைய ஆளுமையை பாதிப்பதாகவும் சமூகத்தில் பெறுமதி அற்றவர் என்ற உணர்வைத் தோற்றுவிப்பதாகவும் Catholic Association for Racial Justice (CARJ)  தெரிவிக்கின்றது. பிரித்தானியா உறுதியாகக் கடைப்பிடிக்கும் சுதந்திர விதிகள் சமத்துவம் என்ற ஜனநாயக விழுமியங்கள் சாதியப் பாகுபாட்டினால் கீழ்நிலைப் படுத்தப்படுவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் 3.5 மில்லியன் தெற்காசியர்கள் வாழ்கின்றனர். இவர்கள் பிரித்தானியாவின் மொத்த மக்கள் தொகையில் 5.7 வீதம். இவர்களில் 50 000 தொடக்கம் 200 000 பேர் வரையானவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என Voice of Dalit International (VODI) அமைப்பு தெரிவிக்கின்றது.

‘இதனைச் சிலர் இந்து சமயப் பிரச்சினையாகக் கூறுகிறார்கள். ஆனால் அப்படியல்ல’ என்று கூறும் ஈலிங் – சவுத்தொல் பா உ விரேந்திர சர்மா  ‘இஸ்லாம், சீக், கிறிஸ்தவம், பௌத்தம் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் துணைக் கண்டத்தில் இருந்த வந்திருந்தால் அவர்களது சமூகப் பின்னலில் சாதியமும் பின்னப்பட்டு இருக்கும்’ என்கிறார். சர்மா IANSற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்து இருந்தார்.

மேற்கு லண்டனில் உள்ள Voice of Dalit International (VODI) அமைப்பின் அலுவலகத்திற்கு சாதியப் பாகுபாடு பற்றிய 20 குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு வாரமும் வருவதாக அவ்வமைப்பின் இயக்குநர் Eugene Culas தெரிவிக்கின்றார். இக்குற்றச்சாட்டுக்கள் திருமணம், தொழில், சேவைகள், கல்வி அகியவை தொடர்பாக வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பாதிக்கப்பட்டவர்களில் ராம் லஹாக் என்ற கொவன்ரியின் முன்னாள் மேயர் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்தியர் இல்லாத பகுதியில் போட்டியிட நேர்ந்தது. பள்ளியில் இவரது பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். இவர் தனது கதையை ‘No Escape: Caste Discrimination in the UK. என்ற அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி

srilanka-cri.jpg“பாகிஸ் தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. மூன்று நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் 171 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸக்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட் இழப்பிற்கு 174ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு பீ. சரவணமுத்து மைதானத்தில் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 240 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

தொடர்ந்து 150 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 320 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இதில் பாகிஸ்தான் அணி சார்பில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் பவாட் அலாம் தனது கன்னி டெஸ்ட் செஞ்சரியைப் பெற்றார். பவாட் அலாம் பெற்ற ஓட்டங்கள் 168

ஒரு கட்டத்தில் 294 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து வலுவான நிலையிலிருந்த பாகிஸ்தான் அணி இலங்கை அணி வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஏனைய 7 விக்கட்டுக்களையும் 26 ஓட்டங்களுக்குள் அடுத்தடுத்து இழந்தது.

இலங்கை அணி சார்பாக இரு இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்து வீசிய நுவன் குலசேகர மொத்தமாக 8 விக்கட்டுக்களை வீழ்த்தினார். இவரைத் தவிர இரண்டாவது இன்னிங்ஸில் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

171 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸ{க்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட் இழப்பிற்கு 174ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. வர்ணபுர 54 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி அதன் புதிய தலைவரான குமார் சங்கக்கார தலைமையில் தனது இரண்டாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக்கொண்டதோடு இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரர்களாக பவாட் அலாம், நுவன் குலசேகர தெரிவானர்.

இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் 3 போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது

பங்ளாதேஷூக்கு வெளிநாட்டில் கிட்டிய முதல் டெஸ்ட் வெற்றி!

cricket.jpgகிரிக்கெட் உலகில் அந்நிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பங்ளாதேஷ் பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பங்ளாதேஷ் அணி 2 டெஸ்ட,  3 ஒருநாள் போட்டி மற்றும் 1 டுவென்டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. முதலில் களம் இறங்கிய பங்ளாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 238 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 302 ஓட்டங்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பங்ளாதேஷ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

அதனையடுத்து  களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பங்ளாதேஷ் அணி 95 ஓட்டங்;கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பங்ளாதேஷ் அணி அந்நிய மண்ணில் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் – பாகிஸ்தான் சகல விக்கட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்கள்

pakisthan-cri.jpg“இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சகல விக்கட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

இதேவேளை இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணியை விட 150 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்று இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் இலங்கை அணியை விட 170 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 171 ஓட்டங்கள் பெற வேண்டும்