கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பாக். உயர் நீதிமன்றத்தில் முஷாரப் ஆஜராகவில்லை

musharap.jpgபாகிஸ் தான் முன்னால் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரபுக்கு எதிரான வழக்கு நேற்று பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முஷாரபோ அல்லது அவர் சார்பாகவோ எவரும் ஆஜராகவில்லை. பாகிஸ்தானில் அவசர நிலையை அமல்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்கும்படி உயர் நீதிமன்றம்; உத்தரவிடடிருந்தும் முஷாரப் சார்பில் நேற்று யாரும் ஆஜராகவில்லை.

பாகிஸ்தானில் கடந்த 99ம் ஆண்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்து அதிபரானவர் முஷாரப். தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி உள்ளிட்ட 60க்கும் அதிகமான நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து, 2007ம் ஆண்டு அவசர நிலையை பிறப்பித்தார்.

முன்னாள் பிரதமர்கள் பெனசிர் புட்டோவும், நவாஸ் ஷெரீப்பும் இணைந்து பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்ததன் விளைவாக, முஷாரப் ஆதரவு கட்சிகள் தோல்வியைத் தழுவின. பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக முஷாரப் பதவி விலகினார். பதவி நீக்கம் செய்யப்பட்ட இப்திகார் அலி சவுத்ரி மீண்டும் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் அவசர நிலையை கொண்டு வந்ததை எதிர்த்தும்,  நீதிபதிகளை பதவி நீக்கம்  செய்ததைக் கண்டித்தும்,  வக்கீல் சங்கங்கள்; உயர் நீதிமன்றத்தில்; கடந்த வாரம் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி தலைமையிலான 14 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு விசாரித்தது.
 

உதவி வழங்குவதும் உரிமைப் போராட்டமும் : த ஜெயபாலன்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இராணுவ பாடப்புத்தகம் போல் கால அட்டவணையிடப்பட்டு மே 18 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது இரு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆயினும் யுத்தம் ஏற்படுத்திய அழிவும் அது ஏற்படுத்திய தாக்கமும் இன்னமும் குறையவில்லை. வன்னி முகாம்களின் முட்கம்பிகள் இலங்கை அரசின் முகத்திரையை இன்னமும் கிழித்துக் கொண்டே இருக்கின்றது. ஆனால் இலங்கை அரசோ அது பற்றி எவ்வித அக்கறையையும் காட்டவில்லை. தமிழ் மக்களின் உரிமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தனிநாடு கேட்ட நிலை போய், தற்போது வன்னி முகாம்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்வதே தமிழ் மக்களின் உயர்ந்தபட்ச கோரிக்கை என்ற நிலைக்கு மறைந்த தலைவர் வே பிரபாகரனும், அவரது விடுதலைப் புலிகள் இயக்கமும், இலங்கை அரசும் தமிழ் மக்களைத் தள்ளி உள்ளது.

வன்னி மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டதன் பின்னணி அரசியல் சார்ந்ததே. முகாம்களில் உள்ள இம்மக்கள் இயற்கை அனர்த்தங்களால் இடம்பெயரவில்லை. தற்போது அவர்களது விருப்பத்திற்கு மாறாகவே தடுத்து வைக்கபட்டு உள்ளனர். அவர்களது சுதந்திர நடமாட்டம் முற்றாக தடுக்கப்பட்டு உள்ளது. இவர்களை 180 நாட்களுக்குள் மீளக் குடியமர்த்தப் போவதாக அரசு அறிவித்த போதும் அவர்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு தடுத்த வைக்கும் திட்டமே இருக்கின்றது என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டு உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் நிரந்தரக் கட்டுமானங்கள் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வன்னி முகாம்களில் வாழும் மக்கள் தொடர்பில் கவனமெடுக்க வேண்டிய கடமைப்பாடு உடையவர்களாக உள்ளனர். இலங்கை அரசு அனைத்து ஜனநாயக வரைமுறைகளையும் மீறி எதேச்சதிகார அரசாக தன்னை கட்டமைத்துள்ளது. இந்நிலையில் வன்னி முகாம்களில் உள்ள தமிழ் மக்களுடைய நிலையை எவ்வாறு கையாள்வது என்பதில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் இன்னமும் தனக்குள் உடன்பட முடியாதவர்களாக முரண்பட்டுக் கொண்டுள்ளனர்.

வன்னி மக்களை மீளக் குடியமர்த்துவது உட்பட அம்மக்களின் நலன் தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழர்களால் இணைந்து செயலாற்ற முடியவில்லை. இவர்கள் பல கோணங்களில் பிரிந்துள்ளனர். இதில் இரு பிரதான பிரிவுகள் உண்டு.
1. அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவது.
2. அரசுக்கு ஒத்திசைவாக நடந்து அரசின் நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது.

முதலாவது பிரிவினர் பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள். இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தங்களை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தி இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி, தனிநாட்டுக்கான தமது அரசியலைப் பலப்படுத்த நினைக்கின்றனர். தனிநாடு அமைப்பதே இப்பிரச்சினைகளுக்கு முற்று முழுதான தீர்வாக அமையும் என நினைக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்காத சிறு பகுதியினரும் இந்நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இவர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவுவது அர்த்தமற்றது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக்கப்பட்டு அரசுக்கு நிர்ப்பங்தங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகின்றனர்.

இரண்டாவது பிரிவினர் அரசுக்கு ஆதரவானவர்கள். முற்று முழுதாக அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே இப்பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முடியும் என நம்புகின்றனர். இவர்கள் இலங்கை அரசு நோகாமல் செயற்படுவதன் மூலமே வன்னி மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என நம்புகின்றனர். அல்லது ரிஎன்ஏ தவிர்ந்த தமிழ் கட்சிகள் போன்று இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரரலின் கீழ் செயற்படுகின்றனர். இவர்கள் தமிழ் மக்களுக்கு உரிமைகளுக்கு முன் சலுகைகளையே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தீவிர புலி எதிர்ப்பாளர்களாக இருந்தனர். இருக்கின்றனர்.

மற்றுமொரு சிறு பிரிவினர் தமிழ் மக்களுடைய அரசியல் விடயங்களில் இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்றும் அதே சமயம் முகாம்களில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகளை வழங்குவதற்கு அரச கட்டமைப்பின் விதிகளுக்கு உடன்பட்டு இயங்குவது தவிர்க்க முடியாது என்றும் கருதுகின்றனர். அதனால் முகாம்களுக்கு உதவிகளை வழங்க முற்படுபவர்களும் முகாம்களில் உள்ள மக்களின் உரிமைகளைப் பேச முற்படுபவர்களும் தங்களுடைய பாத்திரங்களை ஒன்றையொன்று குறுக்கீடு செய்யாமல் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

‘வன்னி முகாம்களில் உள்ள மக்களுடைய பிரச்சினை அரசியல்ப் பிரச்சினை, அதனால் அதனை அரசியல் ரீதியாக மட்டுமே அணுக முடியும்’ என்பது தத்துவக் கோட்பாட்டுக்கு சரியாக அமைந்தாலும் யதார்த்தத்தில் அம்மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு குறைந்தபட்ச உதவிகளைச் செய்வது தவிர்க்க முடியாது. ‘சுவர் இருந்தாலேயே சித்திரம் வரைய முடியும்’ அவலத்தில் இருந்து தப்பிய மக்களை தொடர்ந்தும் அவலத்திற்குள் வைத்துக் கொண்டு அவர்களது உரிமைகளுக்காக போராடி உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும்வரை அவர்களால் காத்திருக்க முடியுமா? புலம்பெயர்ந்த நாடுகளில் போராடி மீட்கிறோம் காக்கிறோம் என்று முல்லைத்தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் காத்திருந்த மக்களை இந்தப் போராட்டங்கள் எதுவும் காக்கவில்லை. மாறாக அம்மக்களை ஆயிரம் ஆயிரமாக மரணத்துள் தள்ளியது.

இந்த அவலத்திற்கு தாக்குதலை நடத்திய இலங்கை அரசு மட்டும் குற்றவாளிகள் அல்ல. அப்பகுதிக்குள் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளும் குற்றவாளிகளே. அதனைக் கண்டிக்கத் தவறிய வன்னி மக்களை வெளியேற அனுமதிக்கும்படி புலிகளைக் கேட்காத அதன் ஆதரவாளர்களும் அதற்குப் பொறுப்புடையவர்கள். ஆயிரம் ஆயிரமாய் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போதும் தத்துவார்த்த ரீதியில் இடதுசாரி அரசியல் பாரம்பரியத்தில் அரசை மட்டுமே கண்டிக்க முடியும் என்று முரண்டு பிடித்தவர்களும் இல்லாமல் இல்லை.

வன்னி மக்களுடைய அடிப்படை மனித உரிமைகள் நிராகரிக்கபட்டு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதை பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்ற பெயரில் ஒட்டுமொத்த வன்னி மக்களையும் தண்டிக்கும் அரசுக்கு, நோகாமல் எடுத்துரைக்க முடியாது. இடித்துரைக்க வேண்டும். அதற்கு அரசு செவிசாய்க்கப் போவதில்லை என்றால் இன்னமும் பலமாக செவிசாய்க்கும் வரை இடித்துரைக்க வேண்டும். அதற்கான வழிகளைக் காண வேண்டும். அவை தோல்வி அடைந்தால் வன்னி முகாம்கள் பிரபாகரன்களை உற்பத்தி செய்வதைத் தடுக்க முடியாது.

அதேசமயம் வன்னி மக்களின் நல்வாழ்வில் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் அவசியமாகின்றது. அவர்களை தொடர்ந்தும் அவலத்திற்குள் வாழ வைப்பதன் மூலமே தங்கள் அரசியலைப் பலப்படுத்த முடியும் என்று எண்ணுவது மூன்றாம்தர அரசியல். வன்னி மக்கள் அனுபவித்த அவலம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. வன்னி மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான அழுத்தங்களை அரசுக்கு வழங்குகின்ற அதேவேளை அதற்குச் சமாந்தரமாக அம்மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக குரல் கொடுப்பதும் முடிந்த உதவிகளை மேற்கொள்வதும் அவசியம். ஒன்றிற்காக மற்றையதை தடுக்க வேண்டிய அவசியமில்லை.

சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள் (ஐஎன்ஜிஓ) மங்களின் போராட்ட குணாம்சத்தை மழுங்கடிக்கின்றது, ஏகாதிபத்தியங்களின் முகவர்களாக செயற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் பொதுவாக உண்டு. அதற்காக வன்னி முகாம்களில் இருந்து ஐஎன்ஜிஓ க்களை அகற்ற வேண்டும் என்று கோருவது எவ்வளவு அபத்தமானது என்பதும் அது இலங்கை அரசின் நோக்கிற்கே துணைபுரியும் என்பதும் வெளிப்படையானது. அதேபோல் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகளை வழங்குவது அரசுக்கு துணை செய்யும் என்கின்ற வாதம் அபத்தமானது. அரசின் விதிமுறைகளை மீறி முல்லைத் தீவுக் கடற்பரப்பில் வணங்காமண் கப்பலை தரையிறக்குவதாக தம்பட்டம் அடித்து பணம், பொருள், நேரத்தை வீணாக்கியது போன்று செய்ய வேண்டியம் அவசியம் யாருக்கும் இல்லை. உதவிகள் மக்களைச் சென்றடைவதற்காக அரசு விதிக்கின்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது தவிர்க்க முடியாதது.

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது போட்டியில் முரளிதரன் அதிரடி ஆட்டம்

murali.jpgபாகிஸ் தான் அணிக்கெதிரான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பாக முத்தையா முரளிதரன் மிகவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியுள்ளார்.
பின்வரிசை ஆட்டக்காரரான முரளிதரன் 15 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுன்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தார்.

இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட இந்த ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று காலை 10.00 மணிக்கு தம்புள்ள, சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி சார்பாக அதன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறினர். எனினும் அஞ்சலோ மெத்திவ்ஸ், அணித் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் முறையே 43,  36, 33 ஓட்டங்ளைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஓரளவு உயர்த்தினர். இறுதியாக முரளிதரனின் அதிரடி ஆட்டத்துடன் இலங்கைய அணி 232 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை மொஹமட் ஆமிர் 3 விக்கட்டுக்களையும் அப்துல் ரஸாக் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். இன்னும் சிறிது நேரத்தில் பாகிஸ்தான் அணி 233 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடவுள்ளது. 

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது போட்டி இன்று

sri-lanka-cri-te.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதிய மூன்று டெஸ்ட் போட்டியில் இலங்கை – அணி 2 – 0 என தொடரைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. டெஸ்ட் தொடரை கைவிட்ட நிலையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணி ஒரு நாள் தொடரில் வெல்லும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.

இரு அணிகளும் பலம் வாய்ந்த நிலையில் களத்தில் குதிப்பதால் யார் வெற்றி பெறப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மியன்மார் ஜனநாயகக் கட்சித் தலைவர் மீதான வழக்குத் தீர்ப்பு வெள்ளிக் கிழமை – குற்றவாளியானால் 5 வருட சிறைத்தண்டனை

miyanmar_s.pngமியன் மாரின் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சாங் சுகீ மீதான வழக்கு விசாரணை தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்ட பிறகு நீதிபதி தாயுங் நியுந்த் இதைத் தெரிவித்தார்.

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற 64 வயதான மியன்மார் ஜனநாயகக் கட்சித் தலைவரான ஆங் சாங் சுகீ வீட்டுக் காவலை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்கர் ஒருவர் அவரது வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டுக் காவலில் இருப்பவர்கள்,  வெளிநாட்டவர்களைச் சந்திக்கக் கூடாது என்பது விதியாகும். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆங் சாங் சுகீ 5 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்  என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வெளியாக இருந்த போதிலும் முன்னதாகவே தீர்ப்பு வெளியாக இருப்பதற்கான காரணம் புரியவில்லை என்று ஆங் சாங் சுகீ யின் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆங் சாங் சுகீ-யைச் சந்தித்த அமெரிக்கர் ஜான் டபிள்யூ யெட்டாவுக்கு அதிகபட்சம் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. குடியேற்ற விதிகளை மீறியது மற்றும் நீச்சல் குளம் இல்லாத பகுதியில் குளித்தது உள்ளிட்ட குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன

கடந்த 20 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார் ஆங் சாங் சுகீ

சொஹைப் அக்தார் மீண்டும் சிக்கலில்…

cricket.jpgகிரிக்கெட் உலகில் அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் சொஹைப் அக்தர் மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கி உள்ளார்.

சொஹைப் அக்தார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்தது  பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அனுமதி பெறாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்ற விதிமுறையை அவர் மீறியதாகவும் அதற்கு விளக்கம் அளிக்கும்படியும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன் பதில் அளிக்குமாறு அக்தாரிடம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும்,  அதிசயம் நிகழ்ந்தால்தான் அவரால் தேசிய அணிக்கு திரும்ப முடியும் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வஸீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் வென்ற பங்களாதேஸ்

bangladesh-cricket.jpgமேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஸ் கிரிக்கட் அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் வென்று சாதனை படைத்துள்ளது.

முதலில் இரு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது பங்களாதேஸ் கிரிக்கட் அணி. இது பங்களாதேஸ்  அணி, சர்வதேச கிரிக்கட் சுற்றுலாவொன்றில் பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாகும். இதையடுத்து ஒரு நாள் போட்டித் தொடரையும் சந்தித்தது. முதல் ஒரு நாள் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு நேற்று 2வது ஒரு நாள் போட்டியில் ஆடியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. வின்ட்சர் பார்க் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியிலும் பங்களாதேஸ்  பந்து வீச்சாளர்கள் மிரட்டினர்.

முதலில் பந்து வீச்சில் மிரட்டிய பங்களாதேஸ் பின்னர் பேட்டிங்கிலும் திறமையைக் காட்டி மேற்கு இந்தியத் தீவுகளை தேல்வியடையச் செய்தனர்.

அபாரப் பந்து வீச்சு காரணமாக ஓட்டம் எடுக்க முடியாமல் திணறிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் டிராவிஸ் டவ்லீன் சிறப்பாக ஆடி 117 பந்துகளைச் சந்தித்து 100 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது சிறப்பான ஆட்டம் காரணமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களை எடுத்தது.

இந்த ஓட்டத்தை  எட்ட பங்களாதேஸ் சிரமப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினர் பங்களாதேஸ் வீரர்கள்.

ஷாகிப் அல் ஹசன் மற்றும் முகம்மது அஷ்ரபுல் ஆகியோர் அரை சதம் அடித்து பங்களாதேஸத்திற்கு வெற்றி தேடித் தந்தனர்.கேப்டன் ஷாகிப், 61 பந்துகளைச் சந்தித்து 65 ரன்களைக் குவித்தார். ஆட்ட நாயகன் விருதும் இவருக்கே கிடைத்தது. அஷ்ரபுல் 77 பந்துகளில் 64 ரன்களைக் குவித்தார்.  ஆட்டம் முடிய கடைசி 6 பந்துகள் இருந்த நிலையில் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் அப்துர் ரஸ்ஸாக். இதன் மூலம் 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்து வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றிருந்தது. 2வது வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பாற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

இதுதான் முதல் தொடர் வெற்றி…

டெஸ்ட் போட்டியில் ஆடும் நாட்டுக்கு எதிராக ஒரு நாள் போட்டித் தொடர் ஒன்றை வங்கதேசம் கைப்பற்றியிருப்பது இதுவே முதல் முறையாகும். இதுவரை 200 ஒரு நாள் போட்டிகளில் பங்களாதேஸ் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த 200 ஒரு நாள் போட்டிகளிலும், இன்றைய போட்டிதான் பங்களாதேஸ் அணி பெற்ற கூடுதலான ஓட்டமாகும்.

பங்களாதேஸ் அணி வெளிநாட்டு மண்ணில் வென்றுள்ள முதல் ஒரு நாள் போட்டித் தொடரும் இதுவே.

செயின்ட் கீட்ஸ் தீவில் உள்ள வார்னர் பூங்காவில் வெள்ளிக்கிழமை 3வது மற்றும் கடைசிப் போட்டி நடைபெறுகிறது. இதையும் வெல்வோம் என்று வங்கதேச கேப்டன் ஷாகிப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதே மைதானத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளுக்கும் இடையிலான டுவென்டி 20 போட்டியும் நடைபெறவுள்ளது.

‘அயலகத் தமிழறிஞர்கள்” – இலங்கைத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு

ilnco.jpgஇலங்கைத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ள ‘அயலகத் தமிழறிஞர்கள்” என்ற தலைப்பில் தமிழக அறிஞர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் எழுதிய இந்த நூல் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளிவர உள்ளது.

இலங்கைத் தமிழறிஞர்கள் தனிநாயகம் அடிகளார், க.சிவத்தம்பி, கா.கைலாசபதி, ஈழத்துப்பூராடனார் (செல்வராசகோபால்),  சி.மௌனகுரு, அ.சண்முகதாசு, எம்.ஏ.நுஃமான், சுப்பிரமணியன், ஆ.வேலுப்பிள்ளை உள்ளிட்டோர் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ள அயலகத் தமிழறிஞர்கள் என்னும் தலைப்பிலான நூல் தமிழ்நாட்டில் வெளிவர உள்ளது. 200 பக்கம் அளவில் அயலகத் தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். 

ayalaka.jpgதமிழகத்தில் வெளிவரும் தமிழ் ஓசை நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவந்த களஞ்சியம் பதிப்பில் ஆறு மாதங்களாக அயலகத் தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளியானது. அதில் 30 அயலகத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, தமிழ் இலக்கியப்பணிகள் இடம்பெற்றிருந்தது. கால்டுவெல், போப் அடிகளார், தனிநாயகம் அடிகளார், அ.கி.இராமனுசன்,  கமில் சுவலபில், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அலெக்சாண்டர் துபியான்சுகி,  தாமசு லேமான், சுப.திண்ணப்பன், ஆ.இரா.சிவகுமாரன், முரசு.நெடுமாறன் உள்ளிட்ட முப்பது தமிழுக்கு உழைத்த அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் இந்தத் தொடர் அறிஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் இடம்பெற்ற கட்டுரைகள் இணையத்தில் வெளிவந்ததால் உலக அளவில் இந்தத்தொடருக்கு ஆதரவு இருந்தது. தொடர் நிறைவு பெற்றதும் வயல்வெளிப் பதிப்பகத்தின் சார்பில் இந்த நூல் வெளிவர உள்ளது. தமிழக விலை 200 ரூபாவாகும்.

முனைவர் மு இளங்கோவன் எழுதிய இணையம் கற்போம் என்ற நூலும் அதேநாளில் வெளிவர உள்ளது. இணையத் தமிழறிஞர் பட்டம் பெற்ற முனைவர் மு. இளங்கோவன் தமிழறிஞர்களின் வாழ்க்கை, கலை, இலக்கியம், கல்வெட்டு, சிற்பம் குறித்து தொடர்ந்து இணையத்தில் எழுதி வருபவர். தமிழ் இணையப் பயிலரங்கைத் தமிழகம் முழுவதும் நடத்தி தமிழ் மாணவர்களுக்கு இணையம் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருபவர். தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல்,  வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியாவில் எழுதுதல், மின்னிதழ்கள் உள்ளிட்ட துறை பற்றி எழுதிய பதினைந்து கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.112 பக்கம் அளவுள்ள இந்த நூலின் தமிழக விலை 100 ரூபாவாகும். 

நூல் ஆசிரியரிடம் தொடர்புகொள்ள பின்வரும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்

.muelangovan@gmail.com
 

காந்தி தங்கியிருந்த தென்னாப்பிரிக்க வீடு விற்பனைக்கு?

gandhi.jpgதென்னா பிரிக்காவில் மகாத்மா காந்தி தங்கியிருந்த வீடு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வீட்டில் மகாத்மா காந்தி 3 ஆண்டுகள் தங்கியிருந்தார். இந்த வீடு விற்பனை செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியும்,  இதை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களில் சிலர் மட்டுமே சிறிதளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜோகன்னஸ்பர்க்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு மரங்கள் சுழ கட்டப்பட்டுள்ளது. மகாத்மா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராயிருந்த ஹெர்மான் காலின்பாக் இந்த வீட்டை வடிவமைத்துள்ளார். மேற்கூரை வேயப்பட்ட இந்த வீட்டில் 1908-ம் ஆண்டிலிருந்து காந்தி மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார். இந்த வீட்டின் உரிமையாளர் நான்சி பால் கடந்த 25 ஆண்டுகளாக இதில் வசித்து வந்தார். இவர் தற்போது கேப்டவுனுக்கு குடிபெயரத் திட்டமிட்டுள்ளார்.

பிரசித்தி பெற்ற இந்த வீட்டை வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால் அவர் விளம்பரம் கொடுத்து இதை விற்க முடிவு செய்துள்ளார் என்று அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த வீட்டின் விலையை அவர் தெரிவிக்கவில்லை இதனிடையே விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக் கழகத்தின் இந்திய கல்வி குறித்த பிரிவை உருவாக்கிய ஸ்டீபன் கெல்ஃபின் உதவியை நான்சி பால் நாடியுள்ளார்.

இந்த வீட்டை வாங்கக் கூடிய இந்தியர்களை தேடி வருகிறார் ஸ்டீபன் கெல்ஃப். இந்த வீட்டை வாங்கி இங்கு வரும் பேராசிரியர்கள் தங்கிச் செல்லும் இல்லமாக இதை மாற்றுவது குறித்தும் அவர் ஆராய்ந்து வருகிறார். தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க்கில் மற்றொரு இடமும் மிகவும் பிரபலமானது. இங்குள்ள காந்தி பண்ணையில்தான் தனது ஆதரவாளர்களுடன் சத்யாகிரஹத்தை அவர் போதித்தார்.

தொடக்கத்தில் டர்பனின் வட பகுதியில்தான் மகாத்மா காந்தியின் ஆதரவாளர்கள் பலரும் குடியேறினர். இங்குதான் சத்யாக்கிரஹத்தை அவர் போதித்தார். பின்னரே அவர் தனது போராட்டத்தை இனவெறிக்கெதிரான போராட்டமாக மாற்றினார். 1800 மற்றும் 1900-ம் ஆண்டுகளில் அவர் நடத்திய போராட்டத்தின் விளைவு இன்றும் நினைவு கூரப்படுகிறது. பல நிறுவனங்களும்,  தெருக்களும் காந்தியின் பெயரை தாங்கி நிற்கின்றன.

மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள் சமீபத்தில் லண்டனில் ஏலத்துக்கு வந்தது. அதை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பெரும் தொகை கொடுத்து வாங்கி அரசிடம் ஒப்படைத்தார். தற்போது காந்தி வசித்த வீடு விற்பனைக்கு உள்ளது.

இந்திய மாவோயிஸ்ட்டுக்களின் இரகசிய ஆவணத்தில் புலிகள் தொடர்பாக பல குறிப்புகள்

இந்தியாவின் பாதுகாப்புக்குப் பாரிய சவாலாக விளங்குகிறார்களென பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்த மாவோயிஸ்ட்டுக்கள், ஆயுதப் போராட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் எதிரிப் படைகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான துணிச்சலான திட்டத்தைத் தயாரித்துள்ளனர். அதே சமயம், இலங்கையில் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டமை தொடர்பாக பாடம் கற்றுக்கொள்ளுமாறு தமது கெரில்லாக்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட்க்கள் கூறியுள்ளதுடன் அளவுக்கு அதிகமாக நம்பிக்கை கொண்டிருக்கவேண்டமெனவும் கூறியுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திச் சேவையை மேற்கோள்காட்டி “த வீக்’ தெரிவித்திருக்கிறது. மாவோயிஸ்ட்டுக்களின் நிகழ்ச்சித்திட்டமானது 20 பக்க இரகசியக் கொள்கை ஆவணத்தின் பகுதியாக உள்ளது. கடந்த மாதம் மறைவான காட்டுப் பகுதியிலிருந்து மாவோயிஸ்ட்டுக்களின் தலைமைத்துவத்தால் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12 ஆம் திகதியிடப்பட்ட அந்த ஆவணத்தின் பிரதியை ஐ.ஏ.என்.எஸ்.வைத்திருக்கிறது.

பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராக இந்தியா நடத்திய அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்திலும் பார்க்க இந்திய அரசாங்கத்திற்கு எதிரான புதிய யுத்தமானது “அதிகளவு நீண்டதாகவும் அதிகளவுக்கு கசப்பானதாகவும்’ இருக்கும் என்று மாவோயிஸ்ட்டுக்கள் எச்சரித்துள்ளனர்.

“தேர்தலுக்குப் பின்னரான நிலைவரம், எமது இலக்குகள்’ என்ற இந்த ஆவணம் ஆங்கிலத்தில் உள்ளது. விடுதலைப் புலிகள் அடைந்த பின்னடைவுகளை மனதில் கொண்டு மாற்றம் செய்யப்பட்ட தந்திரோபாயத்துடன் எவ்வாறு, எங்கே தாக்குதல்களை அதிகரிப்பது என்ற திட்டம் மாவோயிஸ்ட்க்களால் வகுக்கப்பட்டுள்ளது.

“உடனடி இலக்குகள்’ என்ற உப தலைப்பின் கீழ் கட்சியும் அதன் ஆயுதக் கிளைகளும் தந்திரோபாயமான பதில்தாக்குதல்களை பல்வேறு வடிவங்களிலான ஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்ச் சக்திகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்த வேண்டிய தேவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பகைவரின் புதிய யுத்தத்தைத் தோற்கடிக்கவும் மக்கள் யுத்தத்தை தக்கவைக்கவும் நாடளாவிய ரீதியில் மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ட காரண்யம், பிகாரி, ஜார்கண்ட், ஒரிசா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஏனைய இடங்களில் போராட்டங்களை மேற்கொள்வது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ட காரண்ய வனமானது சட்டிஸ்கார் மாநிலத்தின் கனியவளம் நிறைந்த பகுதியான பாஸ்தார் பிராந்தியத்தையும் இந்தியாவின் அடர்ந்த காட்டுப்பிரதேசமான அபுஜ்மார் மலைக்குன்று பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். அங்குதான் மாவோயிஸ்ட்டுக்களின் இராணுவ தலைமையாகமும் தலைவர்களின் மறைவிடங்களும் இருப்பதாக இந்தியப் பொலிஸார் நம்புகின்றனர்.  இந்த ஆவணத்தில் விடுதலைப் புலிகள் பற்றிய பல குறிப்புகள் உள்ளடங்கியிருப்பதாக “த விக்’ தெரிவித்திருக்கிறது.

விடுதலைப்புலிகளின் பின்னடைவானது இந்தியாவிலுள்ள புரட்சிகர இயக்கத்திற்கு எதிர் மறையான விளைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் அத்துடன் தெற்காசிய மற்றும் முழு உலகுக்குமே எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புலிகளின் தோல்வியால் பெற்ற அனுபவமானது ஆராய்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் முக்கியமானதாகும். விடுதலைப்புலிகளின் தவறானது அதன் பகைவரின் தந்திரோபாய மாற்றங்களையும் ஆற்றலையும் ஆய்வு செய்வதிலிருந்த குறைபாட்டையும் எதிராளியை குறைவாக மதிப்பிட்டும் தனது சொந்தப் படையின் ஆற்றலை மிகையாக மதிப்பிட்டிருந்தமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரிப்படைகளுக்கு அதிக நெருக்கடிகளை உருவாக்கும் அதேசமயம் கொரில்லாப் போரை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தி பரந்தளவிலான பகுதிகளுக்கு எதிரிப்படையை கலைத்து இருக்க செய்தலும் மாவோயிஸ்ட்டுகளின் திட்டத்தில் உள்ளது.

அதேசமயம் தலைமைத் துவத்தை பாதுகாத்து தேவையற்ற உறுப்பினர்களின் இழப்புகளை தவிர்ப்பது தேவையெனவும் அத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் நக்கல் பாரி கிராமத்தில் 1967 இல் மாவோயிஸ்ட் இயக்கம் ஆரம்பமானது. இங்கு ஆரம்பமானதால் அந்த அமைப்பை சேர்ந்தோர் நக்சலைட்டுக்கள் என்று அழைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் கொல்லபட்டிருக்கின்றபோதும் அவர்கள் பல பகுதிகளில் தொடர்ந்தும் இயங்கிவருகின்றனர்.