கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

தென் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளது

election000.jpgதென் மாகாண சபை நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அரச அச்சகக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாகாண சபையின் பதவிக் காலம், எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடைய இருக்கின்ற நிலையிலேயே நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. கலைக்கப்பட்ட தென் மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வது மற்றும் தேர்தல் நடத்துவதற்கான திகதி குறித்து இன்னும் சில தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தவிர,  ஏனைய 7 மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னரே அந்த மாகாண சபைகள் கலைக்கப்பட்டு,  அவற்றிற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டதுடன்,  அதில் 6 மாகாண சபைகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம்

rajanikanth.jpgரஜினி காந்த் அரசியலுக்கு வருவது குறித்து எந்திரன் படத்துக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்ன தானம் வழங்க வந்த அவர் பேட்டி அளிக்கையில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கேயோ பிறந்து,  தமிழகம் வந்து அனைவரின் மனதிலும் ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார். மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார்.  இது குறித்து எந்திரன் படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய்,  தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. எந்திரன் படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம் என்றார் அவர்.

ஆசனம் ஒன்றையேனும் பெறாத கட்சிகளின் விருப்புவாக்குகள் எண்ணப்பட மாட்டாது – தேர்தல்கள் திணைக்களம் தீர்மானம்

election000.jpgதேர்தல் வாக்களிப்பின் போது,  ஓர் ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ளாத கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் விருப்பு வாக்குகளை எதிர்காலத்தில் எண்ணாமல் விடுவதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை ஊவா மாகாண சபை, யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை ஆகிய தேர்தல்களிலிருந்து அமுல்படுத்தப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல்களில்,  கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகளை எண்ணியதன் பின்னர் அவற்றுக்குக் கிடைத்துள்ள ஆசனங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும். அதற்கு பின்னரே சகல கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் உறுப்பினர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணப்படும்.

எனினும் எதிர்வரும் 8 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்று தேர்தல்களின் போது ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ளாத கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்படமாட்டாது.

மொத்த வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர் ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ளாத கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் பிரதிநிதிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது சவுதிப் பெண்களும் வீட்டுப் பணியாளர்களாக..

housemaids.jpgசவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிவது என்பது எவரும் பார்த்து பொறாமைப் படக்கூடியதொன்றல்ல.சவுதி வீசா அனுசரனை நடைமுறைகளின் படி அவர்கள் தமது கடவுச்சீட்டினை வேலை வழங்குனரிடம் ஒப்படைக்க வேண்டும்.

நாளொன்றுக்கு 20 மணித்தியாலங்கள் வரை அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட முடியும்.வீட்டு உரிமையாளர்ளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் இந்த வீட்டுப்பணிப்பெண்கள் உள்ளாக்கப்படக்கூடும்.

அவர்களின் சம்பளங்கள் வழமையில் ஊதிய ஆவணங்களில் பதியப்படுவதுமில்லை.இவர்கள் சட்ட ரீதியாக வேலையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமானால் கூட அவர்களிடம் எந்த விதமான ஆவணங்களும் இல்லாத காரணத்தால் அதுவும் சாத்தியமில்லை.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து தப்பியோடி தத்தமது நாட்டு தூதரகங்களில் தஞ்சமடைகின்றனர்.கடந்த வருடம் அறிக்கையொன்றை வெளியிட்ட ஹியுமன் ரைட்ஸ் வொச் அமைப்பு, சவுதி ஆரேபியாவிலுள்ள வீட்டுப் பணியாட்கள் நடத்தப்படுகின்ற விதம் அடிமைத் தனத்தை ஒத்தது என சுட்டிக்காட்டியது.

சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்ற வாக்குறுதியை நம்பி சுமார் 2 மில்லியன் பெண்கள், அனேகமாக ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பெரும் ஆபத்துகளுக்குள் தள்ளப்படுகின்றார்கள்.

ஆனாலும் சவுதியில் மக்கள் மத்தியில் தற்போது அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, உள்நாட்டவர்களுக்கு தொழில் வழங்குவதற்கான புதிய வழிவகைகள் குறித்து சிந்திப்பதற்கு அரசகாங்கத்தைத் தூண்டியுள்ளது.

சவுதிப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக தொழிற்புரிவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அனுமதியளிக்கப்பட்டது.இவர்களில் முதலாவது குழுவினர் தற்போது தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவர்கள் நாளொன்றுக்கு 8 மணிநேரம் மட்டுமே வேலையில் ஈடுபடுவார்கள். இவர்களின் சம்பளத் தொகை ஒப்பீட்டு அளவில் உயர்வானதும் நிலையானதும் கூட. இவர்கள் வேலை முடிந்ததன் பின்னர் அங்கேயே தங்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனாலும் இந்த தொழிலை தகுதி குறைந்தது என பார்க்கும் அனேகமாக சவுதிவாசிகள் மத்தியில் இவ்வாறு உள்ளுர்ப் பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொடர்ந்தும் எதிர்ப்பு கிளம்பிய வண்ணமே உள்ளது..

ஒருநாள் தொடரும் இலங்கை வசம்

0308mahela.jpgபாகிஸ் தானுடனான ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்ட தொடரில் நேற்று தம்புள்ளை ரங்கிரிய மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இதன்மூலம் பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரையும் இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் இலகுவாக கைப்பற்றிக்கொண்டது. இலங்கை மண்ணில் பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் தொடரொன்றை இலங்கை அணி வெற்றி கொண்டமை இதுவே முதற்தடவை.

நேற்றைய போட்டியில் முதல் விக்கட்டுக்காக வேண்டி மஹேல ஜயவர்தன உபுல் தரங்க ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதலாவது விக்கட்டுக்கான 202 ஓட்டங்களை இணைப்பாட்ட ஓட்டமாக பெற்றனர். பாக்கிஸ்தான் முதலாவது விக்கட்டுக்கான பெறப்பட்ட கூடிய இணைப்பாட்டமாக இதேநேரம், தம்புள்ளை ரங்கிரிய மைதானத்தில் ஒரு அணி பெற்ற கூடுதலான ஓட்டமாக 289 ஓட்டத்தை இலங்கை தனதாக்கிக் கொண்டது. இம் மைதானத்தில் ஒருநாளில் இரு அணிகளும் 577 ஓட்டங்களைப் பெற்றன. இதுவும் தம்புள்ளை மைதான சாதனையாகும்.

ஏற்கனவே இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் இலங்கை வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்குமிடையிலான நான்காவது ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 07ஆம், 02ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டத்தின் ஸ்கோர் விபரம் வருமாறு:

PAKISTAN

Kamran Akmal c Sangakkara b Mathews 45
Nasir Jamshed c Samaraweera b Thushara 1
Younus Khan run out 44
Shoaib Malik c Sangakkara b Fernando 12
Umar Akmal b Muralitharan 66
Fawad Alam c and b Mathews 13
Shahid Afridi b Muralitharan 32
Abdul Razzaq c Jayawardene b Kulasekara 30
Rana Naved not out 30
Mohammad Aamer not out 4

EXTRAS: (b1, w10) 11
TOTAL (for 8 wkts, 50 overs) 288
Did not bat: Saeed Ajmal.

Fall of wickets: 1-9 (Jamshed), 2-80 (Akmal), 3-101 (Malik), 4-107 (Younus),
 5-149 (Alam), 6-190 (Afridi), 7-226 (Naved), 8-266 (Razzaq).
Bowling: Kulasekara 10-0-74-1, Thushara 10-0-46-1 (w7), Fernando 10-1-62-1, Mathews 10-0-41-2, Muralitharan 10-0-64-2 (w3)

SRI LANKA

U. Tharanga lbw b Ajmal 76
M. Jayawardene c Alam b Razzaq 123
K. Sangakkara not out 37
T. Samaraweera c and b Ajmal 0
T. Kandamby b Aamer 32
C. Kapugedera not out 8

EXTRAS:(B-1, LB-4, W-8) 13
TOTAL (for 4 wkts, 46.3 overs) 289
Did not bat: Angelo Mathews, Nuwan Kulasekara, Dilhara Fernando, Muttiah Muralitharan, Thilan Thushara.

FALL OF WICKETS:1-202 (Tharanga), 2-210 (Jayawardene), 3-212 (Samaraweera), 4-268 (Kandamby).

BOWLING: Aamer 9.3-1-45-1 (w2), Razzaq 9-0-62-1 (w1), Naved 7-0-41-0, Afridi 6-0-45-0 (w1), Ajmal 9-0-54-2 (w1), Malik 6-0-37-0 (w3)

உலக ரெபிட் செஸ் சம்பியன் ஷிப் போட்டி: ஆனந்த் பின்னடைவு

viswanathananand.jpgஜெர் மனியில் நடக்கும் உலக ரெபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஜெர்மனியில் உள்ள மெயின்ஸ் நகரில் உலக ரெபிட் செஸ் சம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் ஆனந்த் (இந்தியா), அரோனியன் (அர்மேனியா), நெபோனியாட்சி (ரஷ்யா), நெய்டிட்ச் (ஜெர்மனி) உள்ளிட்ட நான்கு வீரர்கள் விளையாடுகின்றனர்.

நடத்த முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் ஆனந்த், அரோனியன் மற்றும் நெபோனியாட்சியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் நெய்டிட்சை வீழ்த்தினார். இதன் மூலம் ஆனந்த் ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அரோனியன் மற்றும் நெபோனியாட்சி 2.5 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இத் தொடரில் பத்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆனந்த், இம்முறை இறுதிப் போட்டிக்கு முன்னேற கடுமையாக போராட வேண்டிய கட்டா யத்தில் உள்ளார்.

உலக நீச்சல் போட்டி முடிவில் 43 உலக சாதனைகள் முறியடிப்பு

pelps2.jpgஇத்தா லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டி 43 உலக சாதனைகளோடு முடிவடைந்தது.இத்தாலியின் ரோம் நகரில் நேற்று முடிவடைந்த இந்த போட்டிகளுள் 8 நாட்கள் நடந்த நீச்சல் போட்டிகளில் 43 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

இதில் பெரும்பாலான உலக சாதனைகள் சர்ச்சைக்குரிய உயர் தொழில்நுட்பத்திலான நீச்சல் உடையை பயன்படுத்தி முறியடிக்கப்பட்ட உலக சாதனைகளாகும். இந்த நீச்சல் உடைக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் தடைவிதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியின் 200 மீற்றர் பிரீ ஸ்டைல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஒலிம்பிக் சாம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் போட்டி முடிவில் 5 தங்கப்பதக்கங்களை தட்டிச்சென்றார். அவர் 100, 200 மீற்றர் பட்டர்பிளை, ரீலே போட்டிகளில் அமெரிக்காவுக்கு தங்கப்பதக்கங்களை வென்று கொடுத்தார்.

இறுதியில் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் அமெரிக்கா மற்றும் சீனா 11 தங்கப்பதக்கங்களை வென்று முதலாம் இடத்தை பகிர்ந்துகொண்டன. அடுத்ததாக ரஷ்யா 8 தங்கப் பதக்கங்களை வென்று 2 ஆவது இடத்தை பிடித்ததோடு ஜெர்மனி 7 தங்கப்பதக்கங்களுடன் 3 ஆவது இடத்தை பிடித்தது.

ஐ.எம். எப் (IMF) அழுங்குப் பிடியில் இலங்கை : வ அழகலிங்கம்

Protest_Against_IMF கடந்த சில நாட்களாக சர்வதேச நாணய சபை இலங்கைக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாகக் கொடுத்ததை ஒரு வெற்றியாக இலங்கை அரச ஆதிக்ககுழாங்கள் கொண்டாடுகின்றன. ஒரு நாடு கடன்கார நாடாகிவிட்டால்  அந்த நாட்டை அழிக்கப் பிரத்தியேக எதிரி எவரும் தேவையில்லை. அது தானாகவே அழிந்துபடும். எதையும் உயர்வு நவிர்ச்சியாகச் சொல்லும் கம்பன் “கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று கடன் எவ்வளவு பெரிய சோகத்தைத் தரவல்லது என்று குறிப்பிடுகிறான். இந்த நிதியானது கடுமையான நிபந்தனையின் கீழேயே மேலும் இலங்கை மக்களின் வறுமைக் கோட்டக்குக் கீழ் வாழும்  வாழ்க்கைத் தரத்தை மேலும் வெட்டி வீழ்த்தும் நடவடிக்கையாகும். இலங்கைப் பொருளாதாரமோ நெருக்கடிக்கு மேல் நெருக்கடியில் உள்ளது. வெளி நாட்டு முதலீடுகளும் ஏற்றுமதிகளும் பாரிய அளவில் விழ்ந்துள்ளது. மாசி மதத்தில் வெளிநாட்டுச் செலவாணிச் சேமிப்பானது ஒன்றரை மாதத்திற்கே போதுமானதாக இருந்தது. அரச ஊழியர்களுக்குச் சம்பளம்கொடுக்கவே பணம் இல்லாத நிலை இருந்தது.

இதற்கிடையில் நிதிக் கொள்ளை நோய் உலகெங்கும் கடுமையான சீரழிவுகளைச் செய்த கொண்டிருக்கிறது. அது ஒவ்வொரு நாடாகக் கபளீகரம்செய்து கொண்டிருக்கிறது. அதன்விளைவாக வறுமையும் தொழிற்சாலை மூடல்களும் வேலையில்லாத்திண்டாட்டமும் தலைவிரித்தாடுகிறது. நிதி மூலதன ஒட்டுண்ணிகளின் சூதாட்டமானது ருத்திரத் தாண்டவமாடுகிறது. இதன் தாக்கம் யுத்தக் காயங்களால் பீடிக்கப்பட்ட இலங்கையில் பாரியளவு இருக்கிறது. இதிலிருந்து மீளவே மாற்று வழி ஏதுமில்லாமல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கெட்டது.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்ட பழைய காலனித்துவ நாடுகளை இன்றுவரை முன்னேறவிடாமற் தடுத்ததிலே சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு பிரதானமானது. இன்று வரை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெற்று உலகில் எந்த நாடும் முன்னேறியது கிடையாது. ஆனால் இலங்கையோ இது தொடர்பாகப் பிரத்தியேகமான வரலாற்று அனுபவத்தைக் கொண்டுள்ளது. எந்த உரிமையுமே பொருளாதார அபிவிருத்திக்குக் கட்டுப் பட்டது என்று ஏங்கல்ஸ் கூறுகின்றார்.

இலங்கையில் தமிழ் மக்களோ சிங்கள மக்களோ எந்த உரிமையைப் பெற வேண்டுமானாலும் இலங்கை பொருளாதாரத்தில் முன்னேறவேண்டும் என்பதை முன் நிபந்தனையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது வரவு செலவுத்திட்டத்தில் பற்றாக்குறை இல்லாத நாடாக மருந்து எண்ணெய்  இயந்திரங்கள் போன்ற அத்தியாவசிய தேவைப் பொருட்களைத் தேவைக்கு ஏற்ற மட்டத்திற்கு இறக்குமதி செய்வதற்கு வேண்டிய வெளிநாட்டுச் செலவாணி உள்ள நாடாக வேண்டும். அது இலங்கை ஒரு நவீன நாடாகி உலகச்சந்தையோடு இரண்டறக் கலக்கும்பொழுதுதான் அது சாத்தியமாக முடியும். அதற்கு முந்நிபந்தனையாக இலங்கை தொழில் நுட்பத்தில் மேலாண்மை பெற வேண்டும். அப்படி மேலாண்மை பெற்றால் மாத்திரம் தான் சர்வதேசச் சந்தையிற்போட்டி போட்டு இலங்கையின் உற்பத்திப் பொருட்களைப் போட்டிகளுக்கு மத்தியில் விற்று வெளிநாட்டுச் செலவாணியை ஈட்டலாம். அந்த மட்டத்திற்கு இலங்கைத் தொழிலாளர்களின் சமூகஉழைப்பு உற்பத்தித்திறன் உள்ளதாகி விலைக்கு வாங்கும் சக்தி உள்ளதாகும்.

ஒவ்வொரு பொருளாதார அபிவிருத்திகளும் சமுதாய உறவுகளிலே மாற்றங்களைக் கொண்டு வரும். ஒவ்வொரு சமுதாய உறவுகளும் அதற்கேற்றாற்போல பொரளாதாரத்தை மறு சீரமைக்கும். சமூகங்களுக்கு உள்ளேயுள்ள உறவுகள் நாகரீகத்தை முன் நோக்கி உந்தித் தள்ளும் மாற்றங்களாக ஏற்பட்டால் மாத்திரம்தான் பொருளாதாரம் மேல் நோக்கி வளரும். இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களுக்கு உரிமை வழங்காததற்கான முக்கிய காரணம் அதன் பற்றக்குறைப் பொருளாதாரமேயாகும்.  சமூகங்களுக்குள்ளே உரசல் நிகழ்வதால் பொருளாதார வளர்ச்சி தடைப்படுகிறது. மணிக் கூட்டின் உள்ளேயுள்ள பல்லுச்சக்கரங்கள் ஒன்றோன்று இசைந்து இயங்காமல் ஒன்றோடொன்று மல்லுக் கட்டினால் சரியாக மணிக்கூடு இயங்காது போல சமுதாய உறவுகளிலே ஏற்படும் இசையாமையும் உரசல்களும் சமுதாயத்தை முன்னேற விடாது.

அரசியல் என்பது பொருளாதாரத்தின் செறிவே என்று மாக்ஸ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் சின்னப் பொருளாதாரமாக இருந்தால் பெரிய அரசியல் செய்ய வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதாரம் பெரிய பொருளாதாரமாக இருந்தால் சின்ன அரசியலே போதுமானது. இலங்கை மக்கள் அதுவும் சிங்கள வெகுஜனங்கள் அரசியல் பேசுவதுபோல உலகில் எந்த இனமும் பேசுவது கிடையாது. அதன் காரணத்தைப் பற்றாக்குறைப் பொருளாதாரத்தில் தேட வேண்டும்.

இலங்கைக்கு இன்று கடனை வழங்கிய சர்வதேச நாணய நிதியம் என்ன நிபந்தனையின் கீழ் அக்கடனை வழங்கியுள்ளது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
 
“எண்ணைமானியக் கடன், மின்சக்திமானியக் கடன், மற்றய அரசதொழிற்சாலைகள் ஏற்படுத்தியிருக்கும் கடன் போன்றவற்றைக் குறைக்க வேண்டும். வெளி நாடுகளிலிருந்து பெறும் கடன்களை மட்டுப்படுத்த வேண்டும். மானியம் வழங்குவதைக் குறைக்க வேண்டும். இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும். வரவுசெலவுப் பற்றாக்குறையைக் குறைக்கவேண்டும். பற்றாக் குறையை ஈடுசெய்யுமகமாக அரச வருமானத்தைக் கூட்டுவதற்காக வரிகளை உயர்த்த வேண்டும். மற்றய நாடுகளிலிருந்து நிதிஉதவி பெறும்பொழுதும், மற்றய அரசியல் நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பும் சர்வதேச நாணய நிதியத்தோடு கலந்துரையாடிவிட்டே எடுக்க வேண்டும்.’

இந்த நிபந்தனைகளில் இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும் என்பதைத் தவிர மற்றயவை இலங்கை மக்களுக்கு ஏற்புடையதல்ல. இதுகூட புதுமையான நிபந்தனையாகும். இராணுவச் செலவைக் குறையென்று சர்வதேச நாணய நிதியம் ஒரு நாளும் சொல்வதில்லை. இன்று கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்  மூன்றாமுலக நாடுகள், அதிகமாக நேற்று ஏராளமாக ஆயுதங்களை வாங்கிக் குவித்தவை என்பதே உண்மை. ஆயுதங்களுக்காகச் செலவு செய்வதால் அழிவைத் தவிர ஆக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இராணுவச் செலவீட்டில் வெறும் நுகர்வைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. ஆயுதங்களைக் கடனில் வாங்கும் நாடுகள், அசலோடு வட்டியையும் சேர்த்துத் திரும்பக் கட்ட வேண்டியிருக்கும். ஆனால் இவற்றிலிருந்து எந்த வருமானமும் கிடையாது.

இந்தச் சீர்திருத்தங்கள் எண்ணெய் விலையையும் மின் சக்தி விலையையும் மற்றய சாமான்களின் விலையையும் கூட்டும் என்பதை விளங்கிக் கொள்ள  வேண்டும். உலகச் சந்தையிலே விலை கூடினால் அதற்கு ஏற்றாற்போல் இலங்கையிலும் விலையைக் கூட்டவேண்டுமே ஒளிய மானியம் வழங்கி விலையைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று கண்டிப்பாக எச்சரித்துள்ளது.

வரவுசெலவுப் பற்றாக் குறையைக் குறைப்பதற்கு மேலும் வரிகளைக் கூட்டி அரச வருமானத்தை அதிகரிக்கச் செய்வது  விலைவாசியைப் பாரிய மட்டத்திற்குக் கூட்டும். அரசாங்கத்தின் வரிவசூல் இலாகாவுக்கு வரும் வருமானம் குறைந்தால் மேலும் வரிகளைக் கூட்டுவதன் மூலம் அவற்றை ஈடுசெய்ய வேண்டும்.

இன்றைக்குள்ள இலங்கை மக்களின் விலைக்கு வாங்கும் சக்தியோடு ஒப்பிடுமிடத்து இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எவருமே இலகுவாக ஊகிப்பர். மூன்று தசாப்த யுத்தத்தால் விரக்தியின் விழிம்பில் உள்ள இந்த மக்களை இந்தச் செயற்பாடுகள் என்ன செய்யத்தூண்டும் என்பதை ஊகிக்க முடியும்.

சில கிழமைகளுக்கு முன்னர் ஜனாதிபதி ராஜபக்ஸ்ச தான் சர்வதேச நாணய சபையின் நிபந்தனைக்குக் கட்டுப்படப் போவதில்லை என்று சூழுரைத்தார். 2007 மார்ச்சில் சர்வதேச நாணயசபை இலங்கை அரசாங்கத்தின் இசைவு இணக்கமும் ஒத்தாசையும் இல்லாமையால் நாட்டடைவிட்டு வெளியேறியது. இருந்தபோதும் அதன் இருபது வீதமான கடனை சர்வதேச நாணய நிதியத்திற்கு வருடா வருடம் பட்டுவாடா செய்ய வேண்டியிருந்தது. 2004 றணில் விக்கிரம சிங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தால் பல தனியார்மயமாக்கல் நடவடிக்கை செய்யததாலேயே கலைக்கவேண்டி வந்தது. குறிப்பாக றெயில் சேவையை ஓரு இந்திய நிறுவனத்திற்கு விற்க எடுத்ததைத் தொடர்ந்து, அந்த இந்திய நிறுவனம் கொழும்பு கோட்டை புகையிரத நிலயத்தையும் மருதானைப் புகையிரத நிலயத்தையும் இடித்து அந்த இடங்களில் வர்த்தகக் கட்டிடங்களைக் (shopping complex) கட்ட இருந்தது. அதைத்தொடர்ந்த தொழிலாளர் வேலை நிறுத்மானது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு செல்லவே வேறு மார்க்கமில்லாமல் அன்றய ஜனாதிபதி சந்திரிக்கா, றணில்விக்கிரமசிங்கா அரசாங்கத்தைக் கலைக்க வேண்டி வந்தது.

வறிய மக்களின் துன்ப துயரங்களை இந்த நிதிநிறுவனம் ஒருபோதும் கருத்தில் கொண்டது கிடையாது. மாறாக முதலாளித்துவத் தொழிற்துறைகளை வளர்ப்பதற்காக ஏழைகளின் நிதியில் பெருவீதிகள் துறைமுகங்கள் விமான நிலையங் கட்டிக் கொடுத்ததே வழக்கமாக இருந்தது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்கு மூலகாரணம் சர்வதேச நாணய நிதியமாகும். 1950 தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தில் அங்கத்துவ நாடாகச் சேர்ந்து கொண்டது. 1953 இல் இதன் நிர்ப்பந்தத்தால் அரிசிவிலை கூட்டப்பட்டதால்  மாபெரும் கர்த்தால் போராட்டம் வெடித்து பிரதம மந்திரி டட்லி சேனனாயக்கா கொழும்பு துறைமுகத்தில் இருந்த பிரித்தானியக் கப்பலில் ஓடி ஒழித்துக் கொண்டார்.

மீண்டும் 1965 டட்லி சேனனாயக்கா அரசாங்கத்தில் கல்விக்கான மானியத்தை வெட்ட சர்வதேச நாணய நிதியம் நிர்ப்பந்தித்தது. ஆனால் அப்பொழுது சர்வகலாசாலைக்குப் புகுவதற்குத் தகுதியான மாணவர்கள்  இலங்கையில் இருந்த பல்கலைக் கழகக் கொள்ளளவைவிடப் பத்து மடங்காக இருந்தனர். பொன்னம்பலம் செல்வனாயகத்தின் இந்துப் பல்கலைக்கழகமா தமிழ் பல்கலைக் கழகமா என்ற வாத விவாத இழுபறியால் ஒரு பல்கலைக் கழகமுமே போடாமல் டட்லி சேனனாயக்க தப்பிக் கொண்டார். உண்மை சர்வதேச நாணய நிதியம் அதற்கு நிதி ஒதுக்க விடவில்லை.

ஆனால் 1969 இல் பல்கலைக்கழகப் புகுமுகத்திற்கான மாணவர் போராட்டங்கள் நடைபெறவே அது 1970 இல் புதிதாக ஆட்சிக்கு வந்த இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசாங்கத்தால் பல்கலைக் கழகப் புகுமுகத்தில் தரப்படுத்தலை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. மேலும் சர்வதேச நாணய சபை முன்பு பட்ட கடனைத் திருப்பிக் கட்டும்படி பிடிவாதமாக நின்றதால் புதிய நிதி மந்திரி என்.எம் பெரோராவால் வரவு செலவுத் திட்டத்தைச் சமாளிக்க முடியாமற்போகவே அது ஏற்படுத்திய தாக்கத்தாலும் உலக நாணயமாக விளங்கிய அமெரிக்க டொலருக்கும் தங்கத்துக்கும் உள்ள பிணைப்பு ஜனாதிபதி நிக்ஸ்சன் நிர்வாகத்தால் உடைக்கப்பட்டு பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போய் அதன் பிரதி விளைவால் எண்ணெய் விலை உலகச் சந்தையில் நாலுமடங்காக கூடி மேலும் நெருக்கடி ஏற்படவே 1971 இல் ஜே.வி.பி கிராமப் புறச் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி ஏற்பட்டது. அன்று போடப்பட்ட அவசரகாச் சட்டத்தின் கீழான ஆட்சி இன்று வரை நீடிக்கின்றது.

1977 ஜே.ஆர். ஜெயவர்த்தனா யூ.என்.பி அரசாங்கம் வந்தவுடன் அதன் நிதி மந்திரியாக றொணி டீ.மெல் வந்தார். அப்போதும் சர்வதேச நாணய சபை உணவு மானியத்தையும் கல்வி வைத்திய வசத்திக்கான மானியத்தையும் வெட்டும் படி பிடிவாதமாக நின்று கொண்டது. அப்பொழுது ஜெயவர்த்தனா இலங்கையைச் சிங்பூராக்கக் கனாக்கண்டு 1956 இல் இருந்து நிலவிய இறக்குமதித்தடையை எடுத்ததோடு திறந்த பொருளாதாரத்திற்கு வழி வகுத்தார். முதலாவது வரவு  செலவுத்திட்டத்தை வாசிக்கும் நாள் பாராளுமன்றத்துக்குள் இரண்டு சர்வதேச நாணயநிதியப் பிரதிநிதிகள் கேட்போர் கூடத்தில் காத்திருந்து நிதிமந்திரியின் வரவுசெலவுத்திட்ட நகலைத் பரிசீலித்த பின்பே வாசிக்க அனுமதித்தனர்.

அன்று சர்வதேச நாணய சபை மற்றய மூன்றாமுலக நாடுகளுக்கு  ‘மறுசீரமைப்பு” என்று சொன்ன அதே சுப்ரபாதத்தை இலங்கை அரசுக்கும் சொன்னது.

‘நாணய மதிப்பைக் குறை, அரச செலவுகளைக் கடுமையாக வெட்டு. குறிப்பாக சமுதாயச் செலவு உணவு மற்றும் பிறநுகர்வுக்காக அளிக்கப்படும் மானியத்தைக் குறை, அரச நிறுவனங்களைத் தனியார் மயமாக்கு, அரசு கொடுக்கும் பொருட்களின் விலையை உயர்த்து, (மின்சக்தி, எண்ணெய், போக்குவரத்துக் கட்டணம், உரம், பூச்சிகொல்லி, நீர்), விவசாய நீப்பாசனத்திற்கு இலவச நீர் வழங்காதே, விலைக் கட்டுப்பாடுகளை அறவே அகற்று, ஊதியக் குறைப்பு மூலம் நுகர்வைக் குறை, வரி மற்றும் வட்டி விகிதங்களை உயர்த்து.”

கட்டுனாயக்காவில் போடவிருந்த சுதந்திர வாத்தக  வலையத்திற்கு எதிராக ஏற்பட்ட தொழிலாளர் போராட்டங்களைக் கட்டுப்படுத்த 1977 இனக்கலவரத்தை செயற்கையாக ஆத்திரமூட்டி ‘சண்டையெண்டால் சண்டை சமாதானம் என்றால் சமாதானம்” என்று பயமுறுத்தி அதன் பின்னணியில் 1978 இல் பங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப் பட்டது. அது இன்றுவரை நீடிக்கின்றது. அதைத் தொடர்ந்து 1983 இல் இனக்கலவரம் இராணுவத்தின் உள்சதி காரணமாக  வெடித்ததோடு வெறியாட்டம் ஆடிய இராணுவத்தை ஜெயவர்த்தனாவும் கட்டுப்படுத்த முடியாதவராக இருந்தார்.

அதைத் தொடர்ந்து நீடித்த 36 வருடங்களும் சர்வதேச நாணய நிதியம் உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் மேற்கு நாடுகள் எல்லாம் ஒவ்வொரு சமாதானப் பேச்சு வார்த்தைகளின் முன்னும் பின்னும் பொருளாதாரத்தைத் தாரளமயமாக்கு, அரசுடமையான நிறுவனங்களைத் தனியார் உடமையாக்கு என்று உச்சாடனம் செய்வதில் ஓய்ந்ததே கிடையாது. மாவிலாற்றுப் பிரச்சனை மத்தியிலும் கூட அவர்கள் தமது தனியார் மயமாக்கு என்ற நிர்ப்பந்தத்தை நிறுத்தியது கிடையாது. இருந்த போதும் பொருளாதாரத் தாரளமயமாக்கலும் தனியுடமையாக்கலும் இலங்கையில் பூரணம் அடையவில்லை. இன்றுவரை இலவச வைத்திய வசதியும் இலவசக் கல்வியும் உணவு எண்ணெய் மின் போக்குவரத்து உர மானியங்களும் பாதியளவென்றாலும் தப்பிப் பிழைத்துள்ளன. மூன்று தசாப்தமாக லட்சக்கணக்கான இலங்கைத்தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களை வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் ஏகாதிபத்தியங்களும் இரைகொடுத்து தமது உபரி மூலதனங்களை முதலிடுவதற்கான சூழலை ஏற்படுத்தி விட்டன. தமிழ் மக்களுக்கு இந்த யுத்தம் தமிழீழப் போராட்டமாகத் தோன்றிளாலும் மேற்குலக ஏகாதிபத்தியங்களோ இதனுள் தலையிட்டு தமது உபரி மூலதனங்களை முதலிடுவதற்குரிய சூழலை ஏற்படுத்தவே அக்கறையாக இருந்து சமாதானத்தை வஞ்சக வழிகாளாற் குழப்பின. புலியும் அவர்களது மகிடிக்கு வளைந்து வளைந்து ஆடியது.

Board of Investment (BOI), Sri Lanka  என்கின்ற வெளி நாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் திணைக்களம் இன்று இலங்கையிலே எந்தவித அரச தலையீடுமின்றி வெளிநாட்டவர் தமது முதலீடுகளை நூற்றுக்கு நூறுவீதம் தமது சொந்த நிறுவனத்தின் பேரில் முதலிடலாமென்றும் அதனால் வரும் லாபம் முழுவதையும் தமது சொந்த நாட்டிற்கே கொண்டு செல்லலாமென்றும் அதற்காக 15 அன்றேல் 20 வருடங்களுக்கு பூச்சிய வரிச்சலுகை தருவதாகவும் அறை கூவுகின்றன. அவர்களது முதலீடுகளைப் பாதுகாக்க மேலும் 100000 இராணுவத்தைச் சேர்கப் போவதாக இராணுவச் செய்திகள் கூறுகின்றன. இலங்கை மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்ற தோரணையில் இலங்கை அரசு இராணுவத்தைப் பெருக்கி வருகிறது.

இந்த உள் நாட்டு யுத்தத்திலே வென்றதாக எண்ணற்ற இராணுவக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெறும் கெட்டித்தனம் பெற்று விட்டோமென்றும் அரசாங்க மந்திரிகள் புளுகுகிறார்கள். உதவி நிதி மந்திரி றன்ஜித் சியம்பலப்பிற்றியாவும் மத்திய வங்கி முகாமையாளர்  Ajith Nivard Cabraal புலியை வென்றதின் பின் மேலும்ஒரு பெரிய வெற்றி என்று ஊடகங்களக்குக் கூறிப் புழகாங்கிதம் அடைந்தனர்.

சேக்ஷ்பியரின் “ஹம்லெட” நாடகத்திலே வரும், எரிச்சலூட்டும் அந்த வயதான மனிதனான பொலோனியஸ் தன் மகனிடம் இவ்வாறு கூறுவான் ‘கடன் வாங்கவும் செய்யாதே, கடன் கொடுக்கவும் செய்யாதே.”

இந்த இலங்கை அரசாங்கத்தின் கண்மூடித்தனமான கடனுக்குப் பலியான இலங்கை மக்கள் விளைவுகளைக் கட்டாயம் சந்தித்தே தீரவேண்டும். உள்ளுர்ர் அத்தியாவசிய செலவுகளைக் குறைத்து, இலங்கை மக்களின் கல்வி உடல்நலம் போன்ற அடிப்படைத் தேவைகளை அலட்சியம் செய்து வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி
(பட்டினி பரம ஒளடதம்,
மீதூண் விரும்பேல்,
பாவி பட்டினி கிடந்தால் பரிசுத்தவான் ஆகிறான்)

வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும் இருண்ட எதிர்காலத்தை ஏக்கத்தோடு எதிர்பார்க்க வேண்டும். பட்ட கடனில் பாதியளவாவது மேலும் கள்ள வழிகளால் கறுப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளில் போய் சேர்வது திண்ணம்.
(எத்தொழிலைச் செய்தாலும்,
ஏது அவஸ்தைப் பட்டாலும்,
முத்தர் மனமிருக்கும் மோனத்தே)

அந்த அயோக்கியத்தனத்தை மறைக்க நாட்டிலே தேசப்பற்றாளர்களும் தேசப்பற்று இல்லாதவர் என்ற இரு பிரிவினரே இருக்கிறார்கள் என்று கடவுளை ஒத்த அதிஅறிவாற்றல் உடைய உத்தமர்கள்  அந்தரத்தில் நின்று பேசும் சுந்தர வசனங்களால் ஊடகங்கள் இனிக்கின்றன. உண்மையில் முழு இலங்கை மக்களும் தாம் கஷ்டப்பட்டுப் போராடி வென்றெடுத்த ஜனனாயக உரிமைகளையும் வாழ்க்கைத்தரத்தையும் சமூக அன்னியோன்யங்களையும் இழந்து விட்டனர். இலங்கையோ புரட்சி ஒன்றைக் கருக் கொண்டுள்ளது என்பதுவே உண்மையாகும். உலகம் முழுவதும் உதவி செய்தாலும் எந்த நிதி நிறுவனமும் எவ்வளவு காசைக் கொட்டினாலும் நெஞ்சை நெருடும் உண்மையொன்று உண்டு.

வன்னி முகாங்கள்  நல்வாழ்வுக்கான சாதனமாய் இல்லாமல் அவல வாழ்வுக்கு எதிரான பரிகாரமாக மட்டும் இருப்பது  தமிழ் இனத்தின் துர்ப்பாக்கியமாகும்.

வ.அழகலிங்கம்
ஜேர்மனி
30.06.2009

இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி – மஹேல ஆட்ட நாயகன்

0308mahela.jpgபாகிஸ் தானுடனான 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

தம்புள்ளையில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பு செய்ய முடிவு எடுத்தது

முதலில் துடுப்பெடுத்தாடிய  பாகிஸ்தான் அணி  50 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 288 ஓட்டங்களை பெற்றது. கம்ரன் அக்மல் 45 ஓட்டங்களையும்,  யூனுஸ் கான்  44 ஓட்டங்களையும்,  உமர் அக்மல் 66 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் குலசேகர  10  0  74  1, மிரண்டோ  10  0  46  1, பெர்னாண்டோ  10  1  62  1, மதேவ்ஸ்  10  0  41  2,  முரளிதரன்  10  0  64  2,

பின்னர் பதிலெடுத்தாடிய இலங்கை அணி 46.3 ஓவர்களில் 289 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. அதிகபட்சமாக மஹேல 123 ஓட்டங்களையும்,  தரங்க 76 ஓட்டங்களையும், சங்கக்கார ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களையும் கபுகெதர ஆட்டம் இழக்காமல் 08 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மொதம்மாத் ஆம்  9.3  1  45  1,  அப்துல்  9  0  62  1,  சகிட் அபிரிடி  6  0  45  0 , அஜ்மல்  9  0  54  2,  மாலிக்  6  0  37  0  

மஹேலக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

35 ஆவது தேசிய விளையாட்டு போட்டியின் கூடைப்பந்தாட்ட போட்டி மட்டக்களப்பில்

basketball.jpg35 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்டம் மற்றும் ஜூடோப் போட்டி என்பன கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாகக் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த அணிகள் மட்டக்களப்பை வந்தடைந்த நிலையில், ஜூடோ போட்டி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் கூடைப்பந்தாட்டப் போட்டி மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மைதானத்திலும் சென் மைக்கல்ஸ் தேசிய பாடசாலை மைதானத்திலும் ஆரம்பமானது.

இந்நிகழ்வுகளை அமைச்சர் வி.முரளிதரன் ஆரம்பித்து வைத்ததுடன் 35 ஆவது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு புனித சிசிலியா புதிய பெண்கள் பாடசாலை, சென்.மைக்கல் தேசிய பாடசாலையிலும் கூடைப்பந்தாட்ட மைதானம் புனரமைப்புச் செய்ததுடன் கிரான் மகா வித்தியாலயத்தில் புதிய கூடைப்பந்தாட்ட மைதானமும் அமைக்கப்பட்டது.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற 35 ஆவது தேசிய விளையாட்டு விழா ஆரம்ப வைபவத்தில் புனரமைக்கப்பட்ட மைதானத்தை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் திறந்து வைத்ததுடன் விளையாட்டினையும் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன் விளையாட்டுத் துறை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டீ.வீ.தஸா நாயக்க, அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம் உட்பட பல உயரதிகாரிகள், அரச அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.