தேர்தல் வாக்களிப்பின் போது, ஓர் ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ளாத கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் விருப்பு வாக்குகளை எதிர்காலத்தில் எண்ணாமல் விடுவதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை ஊவா மாகாண சபை, யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை ஆகிய தேர்தல்களிலிருந்து அமுல்படுத்தப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேர்தல்களில், கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகளை எண்ணியதன் பின்னர் அவற்றுக்குக் கிடைத்துள்ள ஆசனங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும். அதற்கு பின்னரே சகல கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் உறுப்பினர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணப்படும்.
எனினும் எதிர்வரும் 8 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்று தேர்தல்களின் போது ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ளாத கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்படமாட்டாது.
மொத்த வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர் ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ளாத கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் பிரதிநிதிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.