::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

முரளிதரன் பந்து வீச்சில் குறையில்லை வோர்ன் தெரிவிப்பு

muralitharan.jpgஇலங்கை சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பந்து வீச்சில் எந்தக் குறையும் இல்லை அவர் முறையாகவே பந்து வீசுகிறார் என்றார் அவுஸ்திரேலியாவின் வோர்ன்.

இலங்கை அணியின் சுழல் மன்னன் முத்தையா முரளிதரன் உலக அரங்கில் டெஸ்ட் (132 போட்டி, 792 விக்.) மற்றும் ஒரு நாள் (337 போட்டி 515 விக்.) போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவர் வரும் 18ம் திகதி காலியில் நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற உள்ளார்.

பந்து வீச்சு சர்ச்சை கடந்த 1995ல் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, முரளிதரன் பந்தை எறிவதாக நடுவர் டெரல் ஹேயர் குற்றம் சாட்டினார்.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – துடுப்பாட்டத்தில் டோனி பந்துவீச்சில் விட்டோரி முதலிடம்

dhoni.jpgசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி.) ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி கப்டன் டோனி 807 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

தென்னாபிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் அவரை நெருங்கிய நிலையில் உள்ளார். டிவில்லியர்ஸ் 805 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், மைக்ஹசி (அவுஸ்திரேலியா) 792 புள்ளிகள் பெற்று 3வது இடத்திலும் உள்ளனர்.

மற்ற இந்திய வீரர்களில் தெண்டுல்கர் 6வது இடத்திலும் கோலி 16வது இடத்திலும், யுவராஜ் சிங் 17வது இடத்திலும் ஷெவாக் 18வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சில் நியூசிலாந்து கப்டன் வெட்டோரி முதல் இடத்திலும் பங்களாதேஷ் வீரர் சகீப் அல்-ஹசன் 2வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய வீரர்களில் ஹர்பஜன்சிங் 11வது இடத்திலும் பிரவின்குமார் 15வது இடத்திலும் உள்ளனர்.

தங்க காலணி விருது – ஜேர்மனியின் இளம் வீரரான தோமஸ் முல்லருக்கு

ftfa.jpgஉலகக் கோப்பை உதைபந்து போட்டி யின் தங்க காலணி விருது ஜேர்மனியின் இளம் வீரரான தோமஸ் முல்லருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டியில் ஸ்பெயினின் டேவிட் வில்லா, நெதர்லாந்தின் ஸ்னைடர், உருகுவேயின் ஃபோர்லன் ஆகியோர் 5 கோல் அடித்திருந்தனர்.

உருகுவே – ஜேர்மனி இடையிலான ஆட்டத்தில் அடித்த கோல் மூலமாக முல்லரும் இவர்களுடன் இணைந்து கொண்டார். இந்த நிலையில், இறுதிப் போட்டியில் வில்லாவும், ஸ்னைடரும் கோல் அடிக்கத் தவறிவிட்டனர். இதனால் மேற்கூறிய 4 பேருமே 5 கோல் அடித்து சமநிலையில் இருந்தனர். இதனால், அதிக கோலடிக்க உதவியவர் யார் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி தனது அணி வீரர்கள் 3 கோல் அடிப்பதற்கு முல்லர் உதவியிருந்தார்.

மற்றவர்கள் தலா ஒரு முறை மட்டுமே பிறர் கோலடிக்க உதவியிருந்தனர். இதையடுத்து கோல்டன்ஷ¥ விருது முல்லருக்குக் கிடைத்தது. இதுதவிர, போட்டியின் சிறந்த இளம் வீரர் விருதும் முல்லருக்குக் கிடைத்திருக்கிறது.

2006ம் ஆண்டு போட்டியில் ஜேர்மனியின் குளோஸ¤க்கு தங்க காலணி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை கால்பந்து வெல்லப்போவது யார்? மோதலில் நெதர்லாந்து – ஸ்பெயின்

spt2.jpgஉலகின் 6 கண்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து – ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

கால்பந்து விளையாட ஆரம்பித்து 76 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது ஸ்பெயின். 1974-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனியிடமும்இ 1978-ம் ஆண்டு ஆர்ஜென்டீனாவிடமும் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்ட நெதர்லாந்து அணி தற்போது மூன்றாவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் உலகக் கோப்பையை வெல்லும் துடிப்போடு இறுதி ஆட்டத்தில் களமிறங்குகின்றன.

அக்டோபஸ் சோதிடமும், உதைபந்தாட்ட போட்டியும்

octopuspaul.jpgஜேர்மன் பெர்லினில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் போல் என்ற அக்டோபஸ் கால்பந்து போட்டிகளின் முடிவுகளை சரியாக குறிப்பிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறது.

தொட்டிக்குள் 2 சிறிய பெட்டிகள் அக்டோபஸஷுக்கு பிடித்த உணவுகளுடன் இறக்கப்படுகின்றன. அதோடு பெட்டியில் கால்பந்து போட்டியில் மோதும் அணிகளின் நாட்டுக் கொடியும் வைக்கப்படுகிறது. அக்டோபஸ் எந்த பெட்டிக்குள் போகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறுகிறது. கானா அஸ்திரேலியா இங்கிலாந்துடன் மோதிய போது ஜேர்மனிதான் வெற்றி பெறும் என அக்டோபஸ் கூறியது சரியானது. பலமிக்க செர்பியா அணியுடன் ஜேர்மனி தோற்கும் என்றது. அதுவும் சரியாக நடந்தது. இந்த நிலையில் கால் இறுதியில் ஆர்ஜன்டினாவை ஜேர்மனி வீழ்த்தும் என கணித்தது. இதுவும் சரியாக நடந்து விட்டது.

இந்த வகையில் வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் உதைப்பந்தாட்ட போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெறும் என அக்டோபஸ் தெரிவித்துள்ளது.  தொடர்ந்து போட்டி வெற்றி தோல்வியை சரியாக கணித்து வரும் அக்டோபஸ் இறுதி போட்டியின் போது என்ன சொல்லப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இந்தது. இந்நிலையில் இறுதியில் ஸ்பெயின் வெற்றி பெரும் என அக்டோபஸ் கணித்துள்ளது. இது நெதர்லாந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி – உருகுவே இன்று மோதல்

soccer.jpgஉலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் இன்று நடக்கும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனி மற்றும் உருகுவே அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்தவை என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் 19 வது உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடர் நடக்கிறது. இதன் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் – நெதர்லாந்து அணிகள் தெரிவாயின. அரையிறுதியில் தோல்வி அடைந்த ஜெர்மனி- உருகுவே அணிகள் இன்று நடக்கும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

ஸ்பெயின்- இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

spain.jpgஉலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதிப் போட்டிகளில் ஒன்று நேற்று ஸ்பெயின், ஜெர்மன் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின்  அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

நெதர்லாந்து ஸ்பெயின் என்பவற்றுக்கிடையான இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 11ம் திகதி நடைபெறவுள்ளது.

இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து

neda.jpgஉலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதிப் போட்டிகளில் ஒன்று நேற்று இரவு 12 மணிக்கு நெதர்லாந்து, உருகுவே அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் 3 க்கு 2 என்ற கணக்கில் நெதர்லாந்து, உருகுவே அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு

muralitharan.jpgஇலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். ஜுலை 18ம் திகதி காலியில் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கூறியுள்ளார்.

முத்தையா முரளிதரனின் இந்த முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விளையாட்டுத் துறை அமைச்சர் சி. பி. ரத்நாயக்க மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

38 வயது நிரம்பிய சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இதுவரையில் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 792 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான முரளிதரன், 337 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 515 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது- 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளை யாட முரளிதரன் விருப்பம் தெரிவித் திருந்தார்.

எனினும் காயம் மற்றும் வயது காரணமாக அண்மைக்கால போட்டிகளில் அவர் பிரகாசிக்கவில்லை. ஐ. பி. எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக விளையாடியுள்ள முரளிதரன் ஐ. பி. எல். உடன்பாட்டின்படி அடுத்த வருடமும் சென்னை அணிக்காக விளையாட முடியும்.

எனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அடுத்த வருடம் வரை அவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை கால்பந்து – இன்று முதல் அரையிறுதிப் போட்டிகள்

neda.jpgதென்னாப் பிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 ஆவது உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டியில் முக்கிய அணிகளான பிரேசில், அர்ஜெண்டினா அணிகள் தோல்வியடைந்து வெளியேறி விட்டன. அரை இறுதிக்கு ஜெர்மனி, ஸ்பெயின், உருகுவே, நெதர்லாந்து அணிகள் முன்னேறியுள்ளன.

கேப்டவுனில் இன்று நள்ளிரவு நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் உருகுவே அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன.

உருகுவே அணி உலகக்கோப்பையில் 10 முறை பங்கேற்று 1930 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. நெதர்லாந்து அணி 1974 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்துள்ளது.

கானா அணியுடனான காலிறுதிப் போட்டியின் போது உருகுவே நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரெஸ், கோல் நோக்கி வந்த பந்தை கையால் தடுத்ததால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதனால் அவர் இந்த அரையிறுதிப் போட்டியில் விளையாடமுடியாமல் போனது உருகுவே அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. நெதர்லாந்து, உருகுவே என இருஅணிகளுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் இருப்பதால் இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.