இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். ஜுலை 18ம் திகதி காலியில் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கூறியுள்ளார்.
முத்தையா முரளிதரனின் இந்த முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விளையாட்டுத் துறை அமைச்சர் சி. பி. ரத்நாயக்க மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
38 வயது நிரம்பிய சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இதுவரையில் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 792 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான முரளிதரன், 337 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 515 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது- 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளை யாட முரளிதரன் விருப்பம் தெரிவித் திருந்தார்.
எனினும் காயம் மற்றும் வயது காரணமாக அண்மைக்கால போட்டிகளில் அவர் பிரகாசிக்கவில்லை. ஐ. பி. எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக விளையாடியுள்ள முரளிதரன் ஐ. பி. எல். உடன்பாட்டின்படி அடுத்த வருடமும் சென்னை அணிக்காக விளையாட முடியும்.
எனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அடுத்த வருடம் வரை அவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.