கொன்ஸ்ரன்ரைன் ரி

கொன்ஸ்ரன்ரைன் ரி

பேராசிரியர் திஸ்ஸ விதாரனவுடன் கேள்வி நேரம் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Tissa_Vitharanaஒக்ரோபர் 18ல் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுடனான கேள்வி நேரம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மே 18 நிகழ்வுகளுக்குப் பின் இலங்கை அமைச்சர் ஒருவர் புலம்பெயர்ந்து வாழும் சாராதண தமிழர்களைச் ஒரு பொது இடத்தில் சந்திக்கின்ற ஒரு சந்திப்பாக இது அமைய உள்ளது.

இச்சந்திப்பு அமைச்சர் திஸ்ஸ விதாரண தனது கருத்துக்களைத் தெரிவித்துவிட்டுச் செல்லும் சந்திப்பாக அல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் முகம் கொடுக்கின்ற வகையிலேயே  ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. மூடிய கதவுகளுக்குள் அரசியல் நடத்துவதும் சிலர் தங்களை அரசியல் முகவர்களாக புரட்சியின் முகவர்களாக காட்டி மேதாவித்தனம் செய்வதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். பத்திரிகையாளர்களும் தங்களை அரசியல் மேதாவிகளாகக் காட்டிக்கொள்வோரும் தான் அரசியல் பேசுகின்ற நிலையைக் கடந்து சாதாரண ஒரு புலம்பெயர்ந்த தமிழனும் இலங்கை அரசை நோக்கி கேள்விகளை எழுப்புவதற்கு இச்சந்திப்பு இடமளிக்கும்.

தேசம்நெற் வாசகர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவு செய்யும் பட்சத்தில் அக்கேள்விகளுக்கான பதிலைப் பெற்று தேசம்நெற்றில் பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். ஆகையால் தேசம்நெற் வாசகர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவிடவும்.

ஒக்ரோபர் 18ல் நடைபெறவுள்ள சந்திப்பில் கேள்வி நேரத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு உங்கள் வரவை உறுதிப்படுத்தவும். மட்டுப்படுத்தப்பட்ட இருக்கைகளே இருப்பதால் தங்கள் வரவை உறுதிப்படுத்தாதவர்களை அனுமதிக்க முடியாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

என்னுடைய தொடர்புகளுக்கு :
ரி கொன்ஸ்ரன்ரைன்
tarrin@desilugroup.com

டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்

Little_Aid_Med_Deliveryபிரித்தானியாவில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட்1140 கிகி (1.12 தொன்) எடையுள்ள மருந்தப் பொருட்களை வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இவ்வளவு தொகையான மருந்துகளும் டென்மார்க்கில் உள்ள மருத்துவ பொது அமைப்பான எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டு இருந்தது. இம்மருந்துகளின் காலாவதிக் காலம் யூலை 2011. வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மருந்துப் பொருட்கள் பரவலாக உள்ள நோய்களுக்கான 7 வகையான மருந்துகளை உள்ளடக்கி இருந்தது. வலி நிவாரணம், மன அழுத்தம் மன உளைச்சல், இதய எரிவு, வயிற்று அல்சர், உயர் கொலஸ்திரோல் ஆகியவற்றிற்கான மருந்துகள் இந்த மருந்துத்தொகுதியில் உள்ளடங்கி இருந்தது. இம்மருந்துப் பொருட்களின் மதிப்பீடு 16,000 பவுண்கள் (30 லட்சம் ரூபாய்.) டென்மார்க்கில் உள்ள இனிசியேறிவ் 2009 என்ற அமைப்பு எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மருந்துப்பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது. லிற்றில் எய்ட், இனிசியேற்றிவ் 2009, எல்லைகளற்ற மருத்துவர்கள் குழுவாக ஒரு நோக்குடன் செயற்பட்டு மருந்துப் பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு சென்று கொடுத்தனர்.

Little_Aid_Med_Deliveryசெப்ரம்பர் 16ல் விமானமூலம் இந்தப் பொருட்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒக்ரோபர் 6ல் வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டது. லிற்றில் எய்ட் சார்பில் டொக்டர் நிமால் காரயவாசம், திரு மார்க் பெர்னான்டோ ஆகியோர் இம்மருந்துத் தொகுதியை வவுனியாவுக்கு எடுத்துச் சென்றனர். வவுனியா மருத்துவமனையின் உயர் அதிகாரியான டொக்டர் பவானி பசுபதிராஜா வவுனியா உதவி அரசாங்க அதிபர் சம்பந்தர் முன்னைலையில் டொக்டர் நிமால் காரியவாசம், திரு மார்க் பெர்னான்டோ ஆகியோரிடம் இருந்து உத்தியோகபூர்வமாக மருந்துப் பொருட்களைக் கையேற்றார்.

இந்த மருத்துவத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இனிசியேற்றிவ் 2009, மற்றுமொரு 7000 கி கி எடையுள்ள மருந்துப் பொருட்களை நோர்வேஜிய நிறுவனம் ஒன்றினூடாக பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தி உள்ளது. இம்மருந்துப் பொருட்களை வவுனியா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க லிற்றில் எய்ட் விரும்புகின்றது.

லிற்றில் எய்ட் பதிவு செய்யப்பட்ட பொது அமைப்பு. மே 18 2009ல் பிரித்தானிய பொது அமைப்புகள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. கடந்த 5 மாதங்களில் மரக்கறிகள், குழந்தைகளுக்கான பால்மா, துணிவகைகள் ஆகியவற்றை தம்புல்லவில் இருந்து செட்டிகுளம் முகாம்களுக்கு அனுப்பி வைத்தது. மேலும் அம்பேபுச முகாமில் உள்ள முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வில் அவர்களுக்கு இசைப் பயிற்சி வகுப்புகளை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருக்கின்றது. இத்திட்டம் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இத்திட்டம் சட்ட மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் லிற்றில் எய்ட் இனால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் பொது அமைப்புகளின் செயற்பாடுகளை வெளிப்படையாகவும் கணக்குகளைத் திறந்த புத்தகமாகவும் வைத்திருக்கும் பழக்கத்தையும் லிற்றில் எய்ட் ஏற்படுத்தி உள்ளது. அதன் இணையத்தளத்தில் சகல விபரங்களையும் காணலாம்.

மேலதிக விபரங்களுக்கு : www.littleaid.org.uk

ரி கொன்ஸ்ரன்ரைன்
தலைவர்
லிற்றில் எய்ட்.

அரசியலில் ஒரு பொது ஊடகம் ……. சாராயம்: – ரி கொன்ஸ்ரன்ரைன்

Alchocol_Labelபல நூறு ஆண்டுகளாக உலக ராஜதந்திர அரசியலில் இரண்டு விடயங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. இவற்றிற்கு அடிமையாகி மண்கவ்வியவர்கள் பலர். பெரியார் ஈ வே ராமசாமி ஊடாக அண்ணாத்துரையைத் தொட்டு நம்ம ஜோன் மேஜர் வரைக்கும் ‘பொம்பிளைப் பிரச்சினை’. சேர்ச்சில் தொடக்கம் சந்திரிக்கா ஊடாக விஜயகாந்த் வரைக்கும் ‘தண்ணிப் பிரச்சினை’.

தமிழ்நாட்டில் கறுத்தக் கண்ணாடி அரசியல்வாதிகள் வலம்வருவதற்கு இரண்டு காரணம் கூறப்படுகிறது. முதலாவது இவர்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதை மற்றவர்கள் அவதானிக்க முடியாது. மற்றையது சம்பந்தப்பட்டவரின் கண்ணின் நிறத்தை அல்லது நிதானத்தை யாரும் கணிப்பிட முடியாது.

அண்மையில் 90 வயதை அடைந்த உலகப் பிரசித்திபெற்ற நெல்சன் மண்டேலாவைப் பற்றி அவருடைய நெருங்கிய நண்பர்கள் கருத்துத் தெரிவித்தபோது… அழகிய பெண்கள் மீது மண்டேலாவிற்கு இருந்த கவர்ச்சியைப் பற்றி பலமுறை தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். “What ever he did in his life Nelson Mondela always had an eye for a good looking women”.

சர்வதேச ராஜதந்திர அரசியல் ஒருபுறம் இருக்க நம்மட லோக்கல் விஷயத்திற்கு வருவோம். போர்க்காலங்களில் வடக்கு கிழக்கு மாகாணம் ஸ்ரீலங்காவின் மதுபான வியாபாரத்தில் முன்னிலையில் இருந்திருக்கின்றது. இவ் மதுபான வியாபாரம் சட்டரீதியாக இடம்பெறாத காரணத்தினால் இதுகுறித்த புள்ளிவிபரங்கள் கணிப்பீடுகள் ஒன்றும் வெளியாகவில்லை. வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மதுபான வியாபாரத்தில் நேரடியாக ஈடுபட்ட இருபெரும் சிங்கள வியாபாரிகளின் கருத்தே இங்கு மூல காரணிகளாக மேற்கோள் காட்டப்படுகிறது. இவ்விரு சிங்கள வியாபார முதலாளிகளும் பல சொத்துக்களுக்கு அதிபதிகள். கொழும்பின் பிரபல வீதியில் மாளிகை போன்ற வீடுகளும் வெளிநாடுகளில் பல சொத்துக்களும் வைத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்க அரசு உட்பட சந்திரிகா அரசிற்கும் பணஉதவிகள் புரிந்தனர். இரண்டு முக்கிய கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் ஒரே நேரத்தில் பல லட்சக் கணக்கான பணத்தை வாரி வழங்கியவர்கள். யார் பதவிக்கு வந்தாலும் நாம் எப்போதும் வெல்லும் கட்சிதான் என்ற அரசியல் தத்துவார்த்தத்தை பின்பற்றுபவர்கள். இவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான வியாபாரத்தை தொடக்கி வைத்ததே சந்திரிக்கா அரசின் உயர் அதிகாரிகள் என்று தெரிவிக்கின்றார்கள். விடுதலைப் புலிகளில் இருந்து கருணாவும் பிள்ளையானும் பிரிந்தபின் இதே வியாபாரத்தை தாம் கிழக்கிலும் தொடர்ந்துள்ளார்கள். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் கிழக்கு மாகாண பிரிவின் பின் முஸ்லிம் பெயருடன் கூடிய ஒரு முக்கிய நபரும் தமது மதுபான வியாபாரத்தில் முக்கிய தொடர்பாளராக இருந்துள்ளதாக கூறுகிறார்கள்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபின்னர் தமது வியாபாரத்தில் மிகுந்த மந்த நிலைமை தொடங்கியதாக கூறும் இவர்கள் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மிக உயர்வாக மதிக்கிறார்கள். பண கொடுக்கல் வாங்கல்களில் விடுதலைப் புலிகளைப்போல் நேர்மையானவர்கள். ஒருவரும் இல்லை என பற்றுச் சான்றிதழ்கூட கொடுக்கிறார்கள். தங்களின் மதுபான பௌசர்கள் சொன்ன நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் மிகவும் பவுத்திரமாக திருப்பி கையளிக்கப்படும். சம்பவங்களை பெருமையாக விபரிக்கின்றனர்.

வாழைச்சேனையிலும் அம்பாறையிலும் வவுனியாவிலும் கொள்வரவாகிய மதுபானங்களுக்காக London Tooting பகுதியிலுள்ள கடையொன்றில் பணம் கைமாறப்பட்டுள்ளது. ஜந்து பவுண் நோட்டில் உள்ள இலக்கம் குறிப்பிடப்பட்டு அந்த ஜந்து பவுணை இங்கு Tooting இல் கையளிக்கப்படும் பட்சத்தில் பல ஆயிரக் கணக்கான பவுண்கள் கைமாறப்பட்டுள்ளன. வருபவரை அடையாளப்படுத்துவதற்காக கையளிக்கப்படும் ஜந்து பவுண் நோட்டை ஏற்கும் லண்டன் கடைக்காரர் அந்த ஜந்து பவுணிற்கு சமனான ஜந்து பவுண் குத்திகளை கொடுக்கும் கண்ணியவராம்.
இவர்களின் கணிப்பின்படி போர்க்காலங்களில் ஸ்ரீலங்காவின் அனைத்து மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு மாகாணத்தின் மதுபான வியாபாரம் அதிகளவில் இருந்திருக்கின்றது. சிங்கள பிரதேசங்களில் மதுபான வியாபாரத்தில் ஈடுபடும்போது இவர்கள் பலவிதமான இடையூறுகளையும் செலவுகளையும் ஈடுகொடுக்க வேண்டியிருக்கின்றது. பல தனிப்பட்டவர்களையும் பல திணைக்களங்களையும் தாஜாபண்ண வேண்டியிருந்தது. அதற்கும் மேலாக வரி செலுத்த வேண்டும். ஆக மொத்தமாக 295 ரூபாய்க்கு விற்பனையாகும் 750 ml சாராயத்திற்கு 200 ரூபாய் வரை செலவாகிறது. இதே மதுபானத்தை இவர்கள் வடக்கு மாகாணத்திற்கு விற்கும்போது 100 ரூபாய்தான் செலவாகிறது. மிகுதி அனைத்தும் நயம். அதுமட்டுமல்லாமல் பணம் பவுண்ஸில் லண்டனில் சுளையாகக் கொடுக்கப் படுகின்றது. அதிலும் குறிப்பாக வரி இல்லை. ஒரு இழுபறியோ தாமதமோ இல்லை.

போரில் இடம்பெற்ற உயிரிழப்பு மற்றும் ஏனைய அனர்த்தங்களுடன் இவ்வாறான சமுதாய குளறுபடிகளும் மௌனமாக கூட்டாக வளர்ந்துள்ளன. இதன் தாக்கங்களை சமுதாயம் வளரும் காலங்களில்தான் முகம்கொள்ளப் போகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மொக்குத்தனமான போராட்டம் முள்ளிவாய்க்காலில் கோரத்தனமாக முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை. அதன் விளைவுகளை நாம் தொடர்ந்தும் சந்திக்கத்தான் போகின்றோம்.

இலங்கை சென்று திரும்பிய குழுவின் மாநாடு ஜேர்மனியில்.

அண்மையில் நடந்தேறிய அனர்த்தங்களால் இடம்பெயர்ந்து தற்போது வன்னியில் தடுப்பு முகாம்களில் வசித்துவரும் தமிழ் மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் முகமாக ஜரோப்பிய முழுமையான அமைப்பொன்றை நிறுவுவதற்காக July 17ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை Germany – Stuttgart இல் கூட்டத் தொடர் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு ஜேர்மனி, டென்மார்க், சுவிற்சலாந்து, பிரான்ஸ், ஜக்கிய இராச்சியம், நோர்வே போன்ற நாடுகளில் இருந்து எழுபதிற்கும் அதிகமான பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மகாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த பங்குனி மாதம் ஸ்ரீலங்கா விஜயம் செய்து பசில் ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டாக்கடர் பாலித கோகன்ன ஆகியோருடன் 3 நாட்கள் மாநாட்டில் கலந்து கொண்டதுடன், செட்டிக்குளம் தடுப்பு முகாம்களுக்கும் விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவ் விஜயத்தில் ஜக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, சவுதி அரேபியா, சுவிற்சலாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து 21 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் இலங்கை அரசின் அதிகாரிகளை தனிப்பட்டரீதியில் சந்தித்து பேசுவதை தவிர்த்து, ஒரு சர்வதேச அமைப்பாக இயங்குவதே இக்குழுவின் முக்கிய நோக்கம்.

மார்ச் மாதத்தில் கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டை தொடர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவில் இக்குழு இயங்கத் தொடங்கியுள்ளது. ஜரோப்பாவில் அமையவிருக்கும் இக்குழு அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளில் அமையவிருக்கும் குழுவுடன் இணைவாக பணிபுரியும் எனத் தெரியவருகின்றது.

வன்னி முகாம்களின் நிலை தொடர்ந்தும் மோசமானதாக உள்ள நிலையில் ஏற்பாட்டாளர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

துரோகிகள் …….??? : ரி கொன்ஸ்ரன்ரைன்

Pro_LTTE_Protest_in_Bernதுரோகிகள் என்றதும் நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று ஒரு கணம் எண்ணியிருப்பீர்கள். இன்றைய புலிகளின் தலைவர் பத்மநாபனா…….? அல்லது நடேசனா?? புலித்தேவனா??? இளந்திரையனா???? அல்லது மறைந்த தலைவர் பிரபாகரனைத் தான் குறிப்பிடுகிறேனா?????

அரசியலில் மாற்றுக் கருத்தாளர்களை, அரசியல் எதிரிகளை, விமர்சகர்களை அனைவரையும் வரிசையாக துரோகிகள், எட்டப்பர்கள் என்று கூறி சுட்டுக் கொன்றதை விடுதலையின் பேரில் மௌனமாக ஏற்றுக் கொண்டவர்களும் அரசியல் வியாக்கியானங்கள் கொடுத்து நியாயம் கற்பித்தவர்களும் வாயடைத்துப் போய் மௌனிகளாக நிற்கின்றனர். இன்று மக்களைக் காப்பாற்றுகிறோம் விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் எனக்கூறி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிப்பதைக் கண்டித்து இலட்சக்கணக்கில் படை எடுத்துள்ளனர்.

அன்று புலிகள் எந்த வாதத்தை மூலகாரணமாக வைத்து தமது அரசியல் விமர்சகர்களையும் சக போராளிகளையும் அழித்தனரோ, அதே வாதம் ஸ்ரீலங்கா அரசினால் முன்வைக்கப்பட்டு கொடூர இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த காலம் சென்ற நடேசனும் புலித்தேவனும் சரணடைய எடுத்த முனைப்புகளை Times (UK) பத்திரிகையாளரான Marie Covin தனது குறிப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார். நடேசனும் புலித்தேவனும் சரணடைய விடுத்த விடயம் ஜனாதிபதி ராஜபக்ச உட்பட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டாக்டர் பலிதகோகன்ன, ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் அனைவரிடமும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதை திகதி கால குறிப்புடன் வெளிப்படுத்துகிறார் மேரி. இவ்வாறான ஒரு தெளிவான சரணடையும் விடயம் தெரிவிக்கப்பட்டும் ஸ்ரீலங்கா அரசு நடந்து கொண்ட விதம் சர்வதேச போர் விதிகளுக்கு புறம்பானது என தற்போது பலதரப்பட்டவர்களால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.       

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களும் ஆதாரங்களும் எந்தளவு சர்வதேச நீதிமன்றம் வரை சென்றடையும் என்பது பெரிய கேள்விக்குறி. விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கைகள், அதிலும் குறிப்பாக முன்னாள் இந்தியப் பிரதமரின் கொலையை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்பட்ட சர்வதேச தடை, இவற்றுடன் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு எடுத்த நடவடிக்கை சர்வதேச நீதிமன்றத்தை எட்டும் சாத்தியம் மிகமிக குறைவு என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக ஸ்ரீலங்கா அரசின் இந்த மூர்க்கத்தனமான இராணுவ முன்னெடுப்பின் பின்னணியில் சீனா, இந்தியா போன்ற பலம் மிக்க நாடுகள் வெளிப்படையாக உடந்தையாக இருந்திருக்கும் நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் சர்வதேச நீதிமன்றம் வரை போக சாத்தியம் இல்லையென்றே கூறவேண்டும்.

சர்வதேச சட்ட முனைப்புக்களை விடுத்து சாதாரண முறையில் ஸ்ரீலங்கா அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் வித்தியாசமான வாதத்தை தனிப்பட்ட முறையில் முன்வைக்கிறார்கள். பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தின் போதும் ஜனாதிபதி ராஜபக்சவின் ஆட்சி ஆரம்பத்தின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கிழக்கு மாகாணத்தில் சரணடைந்த நிராயுதபாணிகளான சிங்கள பொலிசாரை விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்ற சம்பவங்களை அவர்கள் கூறுகின்றனர்.

இன்று இல்லாத ஒருவர் உயிருடன் இருப்பதாக கூறி அரசியல் நடாத்த பலர் தயாராகின்றனர். நடைமுறை இப்படி இருக்கும் போது பிரபாகரனின் குடும்பத்தில் ஒருவரையோ அல்லது விடுதலைப் புலிகளின் உயர் தலைவர் ஒருவரையோ உயிருடன் பிடித்திருந்தால் அது தேவையில்லாத அரசியல் தலையிடியை தமக்குத் தந்து சிங்கள இராணுவ வீரர்கள் இதுவரை செய்த தியாகங்களை வீணடித்திருக்கும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தமாக பார்க்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிப்பும், அதனை ஒட்டிய அரசியல் அழுத்தங்களும் காலப்போக்கில் மங்கிப் போகும். அதற்குரிய சகல நடவடிக்கைகளையும் அரசு அதிகூடிய வேகத்தில் செயலாற்றி வருகின்றது. வரும் ஓகஸ்ற் மாதத்தில் வடமாகாணத்திற்கான தேர்தல் என்ற அரசின் அறிவிப்பும், 180 நாட்களில் பெரும்பாண்மையான அகதிகளை மீள் குடியமர்த்துவோம் என்ற அறிவிப்பும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளிநாடுகளில் செய்யப்படும் அரச எதிர்ப்பு பிரச்சாரங்களை முற்றாக தவிடுபொடியாக்கப் போகின்றது. மற்றும் தற்போது புலம் பெயர்ந்த நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மிகவும் மோசமாகவும் கோமாளிகளாகவும் ஆக்கப்போகின்றது.

இன்று விடுதலைப் புலிகளின் பெயரில் சேர்க்கப்பட்ட பணம் லண்டனில் கோயில்களாகவும், நகைக்கடைகளாகவும், வீடுகளாகவும், தனிப்பட்டவர்களின் பெயரிலும், சில வசரளவ களிலும் உள்ளன. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல இன்றைய நிலையில் பல லட்சக்கணக்கான புலிகளின் சொத்துக்கள் சில தனிப்பட்டவர்களை சென்றடைய இருக்கின்றன. இதன் முதற்கட்டமாக விடுதலைப் புலிகளை மையப்படுத்தி வன்னியில் இயங்கும் வெண்புறா, அம்மன் வசரளவ போன்ற அமைப்புக்களின் கணக்கு விபரங்களை ஆராய்வதற்கு புலிகளின் உண்மையான விசுவாசிகளையும் சில பொதுவானவர்களையும் நியமித்து விசாரணை குழுக்கள் அமைக்கப்படல் வேண்டும். அதன் முதற்கட்டமாக வணங்கா மண் வேலைத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட பணத்தைப் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் பெயரில் சேர்க்கப்பட்ட பணம் மீள வசூலிக்கப்பட்டு வன்னிப் பிரதேசத்தில் அகதிகளாக உள்ள மக்களுக்கு செலவிடப்படல் வேண்டும். அத்துடன் ஆயிரக்கணக்கில் அநாதரவாக விடப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு காத்திரமான பங்களிப்பை செய்ய புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும். இன்றைய யதார்த்த அரசியலைப் புரிந்து, ஆதாரம் பெற முடியாத கோசங்களை முன்வைத்து, நடைமுறை சாத்தியம் இல்லாத அரசியல் வேலைத் திட்டங்களை கைவிட்டு, யதார்த்த அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மே 18ம் திகதி இடம்பெற்ற சம்பவம் புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு தூரம் கனவுலகத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்பதை கோடிட்டு காட்டியுள்ளது. இனிமேலாவது தமிழ் மக்கள் துரோகி, எட்டப்பர் என்ற வெற்று பதங்களை மறந்து ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க உடந்தையாக இருக்க வேண்டும்.

எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி!? ‘வணங்கா மண்’ வரிசையில் ஜனனி ஜனநாயகத்தின் அரசியல் கப்பலும் கவிழ்ந்தது!!! : ரி கொன்ஸ்ரன்ரைன்

Jan Jananayagamதேர்தல்களில் நிற்பவர்கள் எல்லோரும் வெற்றி பெறுவதில்லைத் தான் அதிலும் குறிப்பாக தேர்தலில் நிற்பவர்கள் எல்லோரும் தாம் வெற்றி பெறப் போவதில்லை என்று எண்ணுவதும் இல்லை. சிலர் கட்சியின் சார்பாக நிறுத்தப்படுகின்றனர். சிலர் ஏதோகொள்கையின் நிமித்தம் தேர்தலில் நிற்கின்றனர். சிலருக்குப் பேராசை. இன்னும் சிலருக்கோ நப்பாசை. இதில் லண்டன் தொகுதியில் நின்று தோல்வியுற்ற ஜனனி ஜனநாயகம் எவ்வகை?

யூன் 4ல் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் இடம்பெற்றது. பிரித்தானியா உட்பட 27 நாடுகளில் உள்ள 375 மில்லியன் பிரஜைகள் 736 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். பிரித்தானியாவில் உள்ள 72 ஆசனங்களில் லண்டனில் 8 ஆசனங்களுக்கு 19 பேர் போட்டியிட்டனர். அதில் ஜனனி ஜனநாயகம் புலியாதரவு அலையுடன் தேர்தலில் நின்றார். தேர்தலின் முடிவுகள் இன்று (யூன் 7) வெளியாகியது. 

இவ்வாரம் வெளியாகிய புலியாதரவு ஈழமுரசு பத்திரிகையில் ‘வணங்கா மண்’ கப்பலைத் தொடர்ந்து ஜனனியின் தேர்தல் பிரவேசம் புலத்து தமிழர்களின் விடுதலைப் பாதையை தெளிவாகச் செப்பனிடுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. வீர காவியங்களோடு புறப்பட்ட ‘வணங்கா மண்’ ‘வணங்கிய மண்’ ணாக போய் சிறிலங்கா அமைச்சரின் காலில் கூனிக் குறுகி நிற்கின்றது.

ஈழப் பிரச்சினையுடன் கூட்டாக பொஸ்னியா தீபெத் பிரச்சினையையும் தீர்க்கப் புறப்பட்ட ஜனனியின் கப்பல் ஈஸ்ற்ஹாமைத் தாண்ட முதலே கவிழ்ந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் மிகவும் செறிந்து வாழும் ஈஸ்ற்ஹாமில் ஜனனி பெற்ற வாக்குகள் 3520 மட்டுமே. முருகானந்தன், ஒரு பேப்பர் கோபி, பற்றிமாகரன், ராஜாமனோகரன், மற்றும் வெற்றுவாய் அரசியல் ஆய்வாளர்களின் அரசியல் சித்தாந்தங்களை நம்பியும் தீபம் ஜிரிவி ஐபிசி ஒரு பேப்பர் ஈழமுரசு போன்ற ஜால்ரா ஊடகங்களை நம்பியும் நடாத்தப்படும் அரசியலின் விளைவு தான் ஜனனியின் தோல்வி.

ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு லண்டனில் ஒரு ஆசனத்தைப் பாதுகாக்க குறைந்தது 8 வீத வாக்குகளாவது (190 000) தேவையென்று தேசம்நெற்றில் முன்னரே குறிப்பிட்டு இருந்தோம். இம்முறை ஒரு ஆசனத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட ஆகக் குறைந்த வாக்கு 188 440. ஜனனி ஜனநாயகத்திற்குக் கிடைத்த வாக்குகள் 50 014. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.9 வீதமான வாக்குகளை ஜனனி ஜனநாயகம் பெற்றிருந்தார். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் அவர் தனது கட்டுப் பணத்தை தக்க வைத்துக் கொள்ள 40 000க்கும் அதிகமான வாக்குகளை 2.5 வீதமான வாக்குகள் –  பெற வேண்டி இருந்தது. 2.5 வீதத்திற்கு சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டதால் ஜனனி ஜனநாயகம் தனது 5000 பவுண் கட்டுப்பணத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ( தமிழீழத் தேசியத் தலைவி மேதகு ஜன ஜனநாயகம் அவர்களே! : ஈழமாறன் )

எவ்வித பொது அறிவும் இல்லாமல் யதார்த்தமற்ற கொள்கையினாலும் முரட்டுப் பிடிவாதங்களாலும் தடம்புரண்ட ஈழப்போராட்டம் அதே அணுகுமுறையினால் புலத்திலும் தடம் புரண்டது. அதிஸ்டவசமாக தாயகத்தில் ஏற்பட்டது போன்ற மனித அவலம் எதுவும் புலத்தில் ஏற்பட்டுவிடவில்லை.

புலத்து தமிழர்ளும் புலிப் பினாமிகளும் இன்னும் யதார்த்தத்தில் இருந்து வெகுதொலைவில் நிற்கின்றனர். தமிழகத்தில் மம்மியை கொண்டாடி மம்மியை கவிழ்த்து விட்டார்கள். இங்கு பேபியைக் கொண்டாடி பேபியையும் கவிழ்த்து விட்டார்கள். ஒரு பேப்பர் கோபியும் ஈஸ்ற்ஹாம் முருகானந்தனும் வோட்டுப் போடாதவர்களுக்கு இனி ‘துரோகிகள்’ என்று சிறப்புப் பட்டம் கொடுத்து கௌரவிப்பார்கள்.

ஜனனி ஜனநாயகம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் ஒவ்வொரு தமிழரும் 5 வேற்று இனத்தவர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைப்பார்கள் அதன் மூலம் தனது சீற்றை செக்குயர் (secure)பண்ணலாம் என்று குறிப்பிட்டார். பாவம் ஜனனி புலத்து தமிழர்களைப் போல் முட்டாள்கள் வேற்று இனத்திலும் இருப்பார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார்.

எமது சமூகத்தில் பெண்களின் அரசியல் பங்களிப்பு மிகக் குறைவான நிலையில் ஜனனி ஜனநாயகம் போன்றவர்களின் அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் புலிப் பினாமிகளின் தற்கொலை குண்டுதாரிகள் போன்று அரசியலில் நுழைவது அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தையே சிதறடித்துவிடுகின்றது.

இலங்கையில் கொல்லப்பட்ட 20 000 தமிழர்களின் இரத்தக்கறை ஜனனி போன்றவர்களிலும் இருக்கின்றது. அம்மக்கள் இலங்கை அரசாலும் புலிகளாலும் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் தனது அரசியல் நலன்களுக்காக புலிகளைக் காப்பாற்றுவதிலேயே ஜனனி ஜனநாயகம் மிகத் தீவிரமாக இருந்தார். யுத்தப் பகுதிக்குள் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருப்பதை ஜனனி எச்சந்தர்ப்பத்திலும் கண்டிக்கவில்லை. புலிகள் பலவந்தாமாக இளைஞர்களையும் யுவதிகளையும் பிடித்து யுத்த முன்னரங்கிற்கு அனுப்பி அவர்களைப் பலிகொடுத்த போது ஜனனியும் அவரது ஆதரவாளர்களும் பிரபாகரனது படத்தையும் புலிக்கொடியையும் தாங்கிச் சென்றனரேயன்றி அம்மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மிகப்பெரும் மனித அவலத்தில் குறுகிய அரசியல் நோக்குடன் செயற்பட்ட ஜனனி ஜனநாயகம் வன்னி முகாம்களில் தேர்தலில் நின்றிருந்தால் கட்டுக் காசையும் பறிகொடுத்து இருப்பார்.

வணங்கா மண்: வசூல் மர்மம் தொடர்கிறது! பொருட்கள் இல.அரசிடம் ஒப்படைக்கப்படும்!!! : ரி கொன்ஸ்ரன்ரைன் & த ஜெயபாலன்

Nithiyananthan_DrVanni_MissionMoorthy N S DrThaya_Idaikadar_Clrசெய்தி: கெப்டன் அலி கப்பல் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.

கெப்டன் அலி என்ற கப்பல் இன்று (SL_June 05 2009) அதிகாலை கடற்படையால் கைப்பற்றப்பட்டது. இலண்டனிலிருந்து அகதிகளுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்து வந்ததாக கூறப்படும் இக்கப்பல் இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் நுழைந்த போதே கடற்படையால் கைப்பற்றப்பட்டது எனக்கூறப்படுகிறது.

ஆயினும் வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்கனவே இலங்கை அரசுடன் இரகசியமாக மேற்கொண்ட உடன்படிக்கைக்கு அமையவே கப்பல் இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைய அனுமதிக்கப்பட்டது. எந்தவொரு கப்பலும் அதன் புறப்படும் துறைமுகத்திலிருந்து புறப்படும் போது அது எத்துறைமுகத்திற்குச் செல்கிறது என்பது போன்ற விதிமுறைகளுக்கு அமையவே புறப்பட முடியும். அதற்கு ஏற்ப வணங்கா மண் ஏற்பாட்டாளர்கள் இலங்கை அரசுடன் ஒரு இரகசிய உடன்பாட்டுக்கு வந்தே கப்ரன் அலியை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக ‘லண்டன் குரல்’ பத்திரிகைக்கு தெரியவந்துள்ளது. ‘வணங்கா மண்’ ‘கப்டன் அலியாகி’ இலங்கைக்குச் செல்ல இலங்கை அரசு அவர்களைக் கைது செய்வது போல் கைதுசெய்து விடுவிக்க உள்ளது.

லண்டன் வந்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லகமவிடம் வணங்கா மண் தொடர்பாக தேசம்நெற் ஆசிரியர் ரி சோதிலிங்கம் இன்று (யூன் 4) கேள்வி எழுப்பியபோது, கப்பல் தகுந்த ஆவணங்கள் இன்றி இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைந்தால் இலங்கை அரசு தனது பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் எனத் தெரிவித்தார். வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினருடன் இரகசிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது தொடர்பாக அவர் எதனையும் குறிப்பிடவில்லை. கப்பலில் உள்ள பொருட்கள் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் மனிதாபிமான உதவிப் பொருட்கள் விதிமுறைகளுக்கு அமைவாக வழங்கப்பட்டால் அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதில் எவ்வித தடையும் இல்லை என்பதை இலங்கை உயர்ஸ்தானிகர் தேசம்நெற் இற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். இதற்கான இரகசிய உடன்பாடும் ஏற்கனவே ஏற்பட்டு இருந்தது.

செய்தியின் பின்னணி:

இன்று லண்டனில் வெளியான ‘லண்டன் குரல்’ பத்திரிகையின் பிரதான செய்தி. தேசம் நெற் வாசகர்களுக்காக மீள் பிரசுரமாகிறது. இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவின் நேர்காணலை பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.

வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 2

வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 3

வணங்கா மண் தொடர்பாக வெளியான முன்னைய கட்டுரை.

புலத்து தமிழ் மக்களின் இஸ்ரேலியக் கனவு ‘வணங்கா மண்’ : த ஜெயபாலன்

வணங்கா மண்: வசூல் மர்மம் தொடர்கிறது! பொருட்கள் இல.அரசிடம் ஒப்படைக்கப்படும்!!!

‘உலகமே கை விட்ட பின் எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்.’ என்று பெரும் எடுப்பில் ஆரவாரித்த வணங்கா மண் ஒருங்கிணைப்புக் குழுவின் வசூல் மர்ம் இன்னும் தொடர்கிறது.

‘சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டினியால் சாவு கொள்ள விடுவோமா? வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம்பெயர்ந்து வாழும் நாம் எம்மினம் அழிய விடுவோமா? அரசுகள் கைவிட்டால் என்ன? மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து செல்லுங்கள் எம்துயரை, பெற்றுக்கொள்வோம் அவர்கள் ஆதரவை. காத்திடுவோம் எம் உறவுகளை!!!’ என்று உணர்ச்சிகளைத் தூண்டி முழுவீச்சில் வணங்கா மண் பொருட்களையும் நிதியையும் சேகரித்தது.

ஆனால் பட்டினியால் தவித்த மக்களின் இறுதிப் பகுதியினர் மீட்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு இருவாரங்கள் கடந்தும் இன்னமும் இக்கப்பல் வன்னி மக்களை நெருங்கவில்லை. முல்லைத் தீவு கடற்பரப்பிற்கு கொண்டு சென்று சர்வதேச கவனத்தை ஈர்க்கப் புறப்பட்ட வணங்கா மண் தற்போது இலங்கை அரசிடம் கையளிக்கப்பட உள்ளது. தற்போது சுயஸ் கால்வாயைக் கடக்கும் இக்கப்பல் இலங்கை அரசின் உடன்பாட்டுடன் கொழும்புத் துறைமுகத்தை அடைந்து பொருட்கள் அரசினால் கையேற்கப்பட உள்ளதாக லண்டன் குரலுக்குத் தெரிய வருகிறது. 

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொள்ள ஆரம்பிக்க்பட்ட இந்த வணங்கா மண் கப்பல் திட்டம் அதன் ஆரம்பத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது தங்கள் ஆரம்ப முடிவில் இருந்து U-turn எடுத்து இலங்கை அரசிடம் பொருட்கள் கையளிக்கப்பட உள்ளது.

மார்ச்சில் ஆரம்பிக்க்பட்ட “Mercy Mission to Vanni” என்றழைக்கப்பட்ட இக்கப்பல்த் திட்டத்திற்கு கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி ஆகியோரைக் கொண்ட Dr மூர்த்தி தலைமையிலான குழு பொறுப்பாக இருந்தது. இக்குழுவில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவருடன் லண்டன் குரல் தொடர்பு கொண்ட போது இது பற்றிய விபரங்கள் தனக்கு தெளிவாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

வன்னிமிசன் என்ற பெயரில் உள்ள உத்தியோகபூர்வ இணையத்தளமும் முக்கிய தகவல்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. வன்னிமிசனில் அனுப்பப்படும் பொருட்களின் விபரம், அதற்கு சேகரிக்கப்பட்ட நிதி விபரம் அதற்கான செலவு விபரங்கள் எதுவுமே அறிவிக்கப்படாமல் கப்ரன் அலி, சிரியா நாட்டுக் கொடியுடன் கப்பல் இலங்கை நோக்கிச் செல்கிறது.

இக்கப்பலின் கொள்ளளவு Maximum TEU capacity : 5560 Reefer containers : 1080. ஆனால் கப்ரன் அலியின் கொள்ளளவிலும் மிகக் குறைவான தொகையான 900 மெற்றிக்தொன் வரையான உணவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களுமே அனுப்பப்படுகின்றது.குறைந்த அளவான பொருட்களுக்கு தனியாக ஒரு கப்பலை ஒழுங்கு செய்து அனுப்புவதற்கான செலவுத் தொகை மிக மிக அதிகமாகும்.

பிரித்தானியாவில் உள்ள இந்துக் கோவில்கள் ஒன்றியம் மட்டும் 200 000 பவுண்களை வன்னிமிசனுக்கு வழங்க முன்வந்து 50 000 பவுண்களுக்கு காசோலையை உடனடியாக வழங்கி இருந்ததாக வன்னிமிசன் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.

வன்னி மக்களின் அவலத்தை முன்நிறுத்தி ஆபிரிக்காவில் உள்ள உயர்ந்த மலைச் சிகரமான கிளிமொஞ்சதாரோ மலையில் ஏறிய கீரன் அரசரட்ணம் என்ற இளைஞர் 30 000 பவுண்சை சேகரித்து வணங்கா மண் திட்டத்திற்கு வழங்கி உள்ளார்.

இதனைவிட வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஆலயங்கள், வியாபார ஸ்தாபனங்கள், சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், பொது அமைப்புகள், தனிநபர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இந்த வன்னிமிசனுக்கு பொருளாகவும் நிதியாகவும் உதவிகளை வழங்கி உள்ளனர்.

ஆனால் இந்த வன்னி மிசனின் ஏற்பாட்டுக் குழுவினர் ஒரு கப்பலை ஒழுங்கு செய்து  பொருட்களை அனுப்பினால் தங்கள் பொறுப்பு முடிந்தது என்ற வகையில் நடந்துகொள்கிறார்கள் என இவர்களுடன் தொடர்பு கொண்ட பொதுமக்கள் லண்டன் குரலுக்குத் தெரிவித்தனர்.

இத்திட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினரான கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி, Dr மூர்த்தி ஆகியோர் இந்த வன்னிமிசன் தொடர்பாக பொறுப்புடன் நடந்து கணக்கு மற்றும் விடயங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற குரல்கள் தற்போது எழ ஆரம்பித்து உள்ளது.

வட்டுக்கோட்டை பிரகடனம் மீதான வாக்கெடுப்பு புலிகளின் அரசியல் வங்குரோத்தின் அப்பட்டமான பதிவு : ரி கொன்ஸ்ரன்ரைன்

Vaddu_Resolution_in_Norwayசின்னஞ்சிறு வயதில் மண்வீடு கட்டி விளையாடிய அனுபவம் எம்மில் பலருக்கு உண்டு. மனதில் எழுகின்ற பெரிய ஆசைகளை, நிறைவேறாத ஆதங்கங்களை ஏதோ எங்களுடைய இயலுமைக்கேற்ப சிறிய அளவில் செய்து மகிழும் ஒரு கற்பனை திருப்தி தான் இது. ஏன் ஒரு சிற்றின்பம் என்று கூட சொல்லி விடலாம். தற்போது ஐரோப்பிய, ஸ்கன்டிநேவிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் நடாத்தப்படும் இந்த வட்டுக்கோட்டை பிரகடனம் மீதான வாக்கெடுப்பும் இச் சிறுபிள்ளைத்தன விளையாட்டிற்கு ஒப்பானதே.

கடந்த 30 வருட காலத்திற்கு மேலாக தமிழ் தேசியத்தை வலிந்து தலைமை தாங்கிய தலைவர் பிரபாகரன் எந்தவொரு காலகட்டத்திலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றியோ அல்லது அத்தீர்மானத்திற்கு அத்திவாரமாக இருந்த தமிழ் அரசியல் தலைவர்களைப் பற்றியோ பெரிதாக ஏதும் கூறிவிடவில்லை. அங்கீகரிக்கக் கூட இல்லை. அதற்கு மாறாக………. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றவர்களை வரிசையாக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுடத் தவறவில்லை. ஏன் அவ்வாறு சந்தர்ப்பம் கிடைத்தால் தொண்டமான் என்ன தந்தை செல்வா உட்பட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடித்தளங்களை கூட சுட்டுத்தள்ள ஒரு கணம் கூட யோசித்திருக்க மாட்டார்கள். அடிப்படை அரசியலுக்கும் குறைந்த பட்ச ஜனநாயகத்திற்கும் கூட எந்தவித இடமும் கொடுக்காத விடுதலைப் புலிகளும் அதன் ஆதரவுகளும் இன்று காலாவதியாகிப் போன வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தூக்கிவைத்து தாண்டவம் ஆடுவது கண்கெட்ட பின் நடத்துகின்ற சூரியநமஸ்காரத்திற்கு ஒப்பானது.

தனித்தமிழ் ஈழம் ஏதோ மூன்றடி தூரத்தில் இருப்பதாக இதுவரை காலமும் கதையளந்து மாவீரர் தினத்திற்கு வரிசையாக போய் விசிலடித்து வந்த இந்த புலம்பெயர்வுகள் இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறி வரிசையாக நிற்பதைப் பார்க்கும் போது அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. ஆக மொத்தமாக பார்க்கும் போது 98.95% நோர்வே மக்கள் தமிழீழத்தை ஆதரிக்கின்றனர் என்று வெளியாகிய செய்தி சதாம் உசைன் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் ஈராக்கில் இடம்பெற்ற தேர்தலில் சதாம் உசைன் ஈட்டிய மாபெரும் வெற்றிக்கு ஒப்பானது. 16 ஒக்ரோபர் 2002 ல் ஈராக்கில் இடம்பெற்ற வாக்களிப்பில் சதாம் உசைன் 99.96% வாக்குகளைப் பெற்று மேலும் 7 ஆண்டுகள் ஈராக்கை ஆள மக்களின் ஆதரவை பெற்றுக் கொண்டார். இன்று மே மாதம் 10ம் திகதி 2009ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு 98.95% ஆதரவு கிடைத்துள்ளது.

சாதாரண மக்களை ஒரு புறம் விடுவோம். இந்த வாக்கெடுப்பைப் பற்றி ஐரோப்பாவில் பரவலாகச் செயற்படும் தீபம் தொலைக்காட்சி, GTV தொலைக்காட்சி, IBC வானொலி போன்ற நிலையங்கள் நிகழ்த்தும் அரசியல் பதிவேடுகள் மிகவும் கோமாளித்தனமானது. நாளுக்கு நாள் ஏதோ புதிய புதுமையான அரசியல் பரிணாமத்தை விபரிப்பதைப் போல் இவ்வாறான அரசியல் கோமாளித்தனங்களை ஒலிபரப்பி ஒரு மனிதனின் அடிப்படை அறிவுத்திறனை சோதிக்கின்றனர். ஐரோப்பிய சமூகம் இந்த தேர்தல் முடிவுகளை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கிறதாக கூறுகிறது லண்டனில் இருந்து ஒளிபரப்பப்படும் தீபம் தொலைக்காட்சி.

அமையவிருக்கும் தமிழ் ஈழத்தில் தன்னுடைய பெயர் மட்டும் முதன்மை வகிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் அதனை மையப்படுத்தி இடம்பெற்ற 1977ம் ஆண்டு தேர்தலையும் அத்தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டிய தலைவர்களையும் சுட்டு வீழ்த்திய இயக்கம் இன்று அழிவின் விளிம்பில் நின்று கொண்டு வரலாற்றுத் தவறுகளை திருத்த எத்தணிப்பது காலம் கடந்து வந்த ஞானம். இன்று இடம்பெறுகின்ற அரசியல் முனைப்புகள் எப்போதோ நடந்திருக்க வேண்டும். தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்க வேண்டும். எங்கோ இருந்து வருகின்ற கைகளுக்கும், கை மாற்றுக்களையும் அடிப்படையாக வைத்து நேச நாடுகளின் தலைவர்களைக் கூட மண்டையில் போடத் துணிந்தவர்கள் இன்று 24 மணி நேரத்தில் 3 கிலோ மீற்றரில் முடங்கிக் கிடக்கும் போது நடாத்துகின்ற இந்த அரசியல் முனைப்புக்கள் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவரப்போவதில்லை.

Vaddu_Resolution_UTROPஊதறுப் பத்திரிகை (UTROP):

இன்று நோர்வேயை மையப்படுத்தி இடம்பெற்ற இத்தேர்தலின் பின்னணியில் ஊதறுப் பத்திரிகை இருந்துள்ளது. இப்பத்திரிகை நோர்வேயின் பல்லின மக்களால் பல்லின மக்களின் தேவை கருதி 2001ம் ஆண்டில் இருந்து நடாத்தப்படுகின்ற பத்திரிகை. இப்பத்திரிகை இணையத்தளத்தை மையப்படுத்தி நடாத்தப்படுகின்ற ஒரு சமுதாயப் பத்திரிகை. இது நோர்வே மக்களினால் வாசிக்கப்படுகின்ற பத்திரிகை அல்ல. இது தினசரி பத்திரிகையும் அல்ல. இப்பத்திரிகை Europeans Minorities On Line (Eminol.com) என்ற ஸ்தாபனம் ஒன்றுடன் கூட்டாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டு பண உதவியுடன் நடாத்தப்படுகின்ற ஒரு இணையப் பத்திரிகை. இத்தாபனங்களின் முக்கிய பொறுப்பில் மஜோரன் விவேகானந்தன் என்ற இலங்கைத் தமிழர் ஒருவர் பதவி வகிக்கிறார். மஜோரன் விவேகானந்தன் நோர்வேயில் இருந்து அந்நாட்டின் அமைப்புகளுடன் இணைந்து புலிகளுக்கு சார்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக இந்திய கொழும்புப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இன்று வெளிநாடுகளில் முக்கிய ஸ்தாபனத்தில் அல்லது ஏதோ ஒரு வித்தத்தில் தனிப்பட்ட பலம் உள்ளவர்கள் அமைப்புகள் தமது பலத்தை அல்லது அழுத்தத்தை கொழும்பு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் கொடுத்து ஏதாவது தீர்விற்கு உந்துதலைக் கொடுக்க வேண்டுமே தவிர காலாவதியாகிப் போன வெத்து அரசியல் கோசங்களுக்கு பலம்கொடுத்து பல நூற்றுக் கணக்கான மக்களைக் கொல்லவும் பல லட்சக் கணக்கான மக்களின் எதிர்காலத்தை இருட்டடிக்கவும் துணை போகக் கூடாது.

புலம்பெயர்ந்த தமிழர் குழு – இலங்கை அரசு – கொழும்பு மாநாடு : ரி கொன்ஸ்ரன்ரைன்

Conference_PanelDialogue with the Sri Lankan Diaspora – 27th to 29th of  March 2009 – Mount Lavania Hotel Colombo.

ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியை பதிவு செய்து அதன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமுகமாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இம்மாநாடு சம்பந்தமான பேச்சுக்கள் கடந்த கார்த்திகை மாதம் பரவலாக அடிபடத் தொடங்கியது. இதற்கான முனைப்புகள் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் டாக்டர் நடேசன் (உதயன் பத்திரிகை) அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இம்மாநாடு டில்லியில் கூடவிருப்பதாக பேசப்பட்டது. பின்னர் காலப் போக்கில் இந்திய இடைத் தேர்தலை காரணம் காட்டி சிங்கப்பூருக்கு மாற்றியமைக்கப்பட்டு அதற்கான முழு நிகழ்ச்சி நிரல்களும் அழைப்பிதழ்களும் அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சி இடம்பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இந்நிகழ்ச்சி கொழும்பிற்கு மாற்றப்பட்டது. இந்நிகழ்ச்சி சிங்கப்பூரில் இடம்பெறுவதற்கு சில பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்ததாக பின்னர் தனிப்பட்ட முறையில் அமைச்சு ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இடம்பெற இருந்த இந்த மாநாடு தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்கள், நிகழ்ச்சி நிரல் அனைத்தும் tamilnet உட்பட பல இணையத்தளங்களில் வெளியிடப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து கொழும்பிற்கு மாநாடு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து பலர் தங்களது பங்களிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டனர். கொழும்பிற்கான மாற்றத்தில் தமது அதிருப்தியை தெரிவித்த சிலர் சிங்கப்பூரில் இடம்பெற இருந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் குறித்து அதிருப்தியை குறிப்பிட்டு இருந்தனர்.

இந்நிகழ்ச்சி நிரல் ஆகமொத்தமாக அமைச்சர்களும் அரசின் ஆலோசகர்களும் பேசுவதை இருந்து கேட்டுவிட்டு வரும் நிகழ்ச்சியாகவே இருந்தது. இம்மாநாட்டில் புலம் பெயர்ந்த தமிழர்களின் கருத்துக்களை பரிமாற அதிக நேரம் ஒதுக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை பலரால் குறிப்பிடப்பட்டு இருந்தது. மற்றும் அரசு இந்த மாநாட்டை ஓர் அரச பிரச்சார அரங்காக மாற்றக் கூடாது என்ற கோரிக்கை விடப்பட்டது. பங்காளர்களின் இந்த கோரிக்கையை செவிமடுத்த அதிகாரிகள் நிகழ்ச்சி நிரலை மாற்றியமைத்து இந்த அமர்வு அரசினால் பிரச்சாரத்திற்கு பாவிக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தையும் கொடுத்தனர். அரச உத்தரவாதம் ஒருபுறம் இருக்க இம்மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் ஆலாய்ப் பறந்து பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்த சம்பவங்கள் கவலைக்குரியது. அதிலும் குறிப்பாக இம்மாநாட்டை மகிந்த ராஜபக்ச அரசை ஆதரிக்கும் அரசியல் கூட்டமாகவும், மற்றும் புலிகளை எதிர்க்கும் கூட்டமாகவும் சிலர் மாற்ற எத்தனித்தது கவலைக்குரிய விடயம். எது எப்படி இருப்பினும் ஆகமொத்தமாக சகல உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தும், ஒற்றுமையும், ஒருவரை ஒருவர் மதித்து அனுசரித்து போகும் தன்மையும் பரவலாக இருந்தது குறிப்பிடத்தக்க விடயம்.

இம்மாநாட்டில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ்லாந்து, நோர்வே, சவுதிஅரேபியா, டென்மார்க், அவுஸ்திரேலியா, கனடா ஆகிய 9 நாடுகளில் இருந்து 21 பேர் கலந்து கொண்டனர். அரச சார்பில் இருந்து குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டாக்டர் பலித கோகன்ன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க, ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பசில் ராஜபக்ச, அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அமைச்சர் டியு குணசேகர மத்திய வங்கி தலைவர் அஜித் ஹவாட் கப்ரல் உட்பட பல உயர்மட்ட அரச ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

28.03.09 (சனிக்கிழமை)

‘புத்த சமயத்தை பின்பற்றுவோரை பெரும்பான்மையினராக கொண்ட இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் இடம் இருக்கக் கூடாது.’ – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டாக்டர் பலித கோகன்ன:

Dr_Palith_Kokannaமுதல் நாள் அமர்வு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டாக்டர் பலித கோகன்ன அவர்களின் உரையுடன் ஆரம்பமாகியது. 30 வருட யுத்தத்தின் பின் நாடு தற்போது புதிய அத்தியாயம் ஒன்றை எழுத ஆரம்பித்திருப்பதாக குறிப்பிட்ட டாக்டர் பலித கோகன்ன தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் பேசும் மக்களின் ஏகபிரதிநிதிகள் மற்றும் விடுதலைப் போராளிகள் என்ற பதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார். புத்த சமயத்தை பின்பற்றுவோரை பெரும்பான்மையினராக கொண்ட இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் இடம் இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட டாக்டர் கோகன்ன சகல இன மக்களும் பகையை மறந்து ஒன்றுபட அழைப்பு விடுத்தார். வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் வடக்கு கிழக்கில் வாழும் சிறுவர்களின் கல்விக்கும் எதிர்கால சுபீட்சத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 30 ஆண்டு கால போரினால் நாடு பல பெறுமதி மிக்க உயிர்களை இழந்துவிட்டதுடன் பல ஆயிரக்கணக்கான அறிவாளிகளையும் உழைப்பாளிகளையும் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து விட்டதாகவும் குறிப்பிட்டார். தற்போதைய நிலமையில் போர் நிறுத்தம் ஒன்றை அரசு கடைசிவரை அமுல் படுத்தாது என்று சூழுரைத்த டாக்டர் கோகன்ன சகல போர் நிறுத்தங்களும் விடுதலைப் புலிகளினால் தவறான காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

13வது திருத்தச் சட்டமூலத்தை புலிகள் ஏற்காதது ஒரு வரலாற்று தவறு – வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லகம:

Rohitha_Bhogollagamaஅவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லகம ‘ஸ்ரீலங்காவின் எதிர்காலம் போரின் பின்’ என்ற தலைப்பில் பேசினார். அரசு சகல ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து செயற்பட ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர் தற்போதைய காலகட்டத்தில் TNA அரசுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாதது ஒரு மிகப்பெரிய தவறு என்று குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான காலம் சென்ற அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வனை சந்தித்த சம்பவங்களை நினைவு கூர்ந்த அமைச்சர், 13வது திருத்தச் சட்டமூலத்தை புலிகள் ஏற்காதது ஒரு வரலாற்று தவறு எனக் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள அகதிகளின் நிலவரம் பெரும் சிக்கலானது என்பதை ஒத்துக் கொண்ட அமைச்சர் தனது அரசு இம்மக்களின் பிரச்சனைகளை தீர்க்க மிகவும் பிராயச்சித்தம் எடுப்பதாக குறிப்பிட்டார். ஸ்ரீலங்காவின் ஒருமைப்பாட்டு கோட்பாட்டுக்கு அமைய அரசியல் யாப்பில் தேவையான மாற்றங்களை கொண்டுவர தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

‘கிழக்கில் அனுபவம் வாய்ந்த கல்வித் தகமைகளைக் கொண்ட அரசியல்வாதிகள் எவரும் இல்லை’ அமைச்சு ஆலோசகர்:

அமைச்சர் ரோகித போகொல்லகம அவரின் செயலாளர் டாக்டர் பலித கோகன்ன இருவரினது பேச்சும் ஆழமற்றதும் நுனிப்புல் மேய்ந்த ஒரு sentimental பேச்சாகவே இருந்தது. கிழக்கு மாகாணத்தின் மாற்றத்தை ஒரு பெரிய ஜனநாயக மாற்றமாக வர்ணித்த பேச்சாளர்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் நடைமுறைச் சிக்கல்களையும் ஜனநாயகத்தை அமுல்படுத்த முடியாத நிலைமைக்கான இடர்ப்பாடுகளை குறிப்பிடத் தவறி இருந்தனர். தேசிய அரசியல் நீரோட்டத்தில் உள்ள அரசியல் புள்ளிகளிடம் இருந்து வெளிப்படையான நடைமுறை அரசியலை கலந்தாலோசிப்பது என்பது நடக்காத விடயம் தான்.

எது எப்படியிருப்பினும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனும் அவர்களுடைய அதிகாரிகளுடனும் தனிப்பட்ட முறையில் பேசிய போது பல நடைமுறைப் பிரச்சனைகள் மிகவும் வெளிப்படையாக சம்பாசிக்கப்பட்டது. கிழக்கு மாகாண அரசியல் பரவலாக்கல் பற்றி தனிப்பட்ட முறையில் பேசிய ஒரு உயர் அமைச்சரவை ஆலோசகர் ஒருவர் இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அளவுக்கு சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் அறிவையும் கொண்ட அதிகாரிகள் இல்லாத காரணத்தினால் தாம் சகல நடவடிக்கைகளையும் மத்தியில் இருந்து (கொழும்பில்) நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார். எனவே நிர்வாக அமைப்பையும் அதற்கான ஆளுமை கொண்ட அதிகாரிகளையும் இரவோடு இரவாக ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார். இன்னுமொரு ஆலோசகர் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்கும் போது, கிழக்கில் அனுபவம் வாய்ந்த கல்வித் தகமைகளைக் கொண்ட அரசியல் வாதிகள் எவரும் இல்லை என்பதால், வரும் காலங்களில் மத்தியில் தலையீடு தவிர்க்க முடியாதது என்றும், இது அரசின் திட்டமிட்ட செயல் இல்லை, இது ஒரு நடைமுறைப் பிரச்சனை என்றும் தெரிவித்தனர்.

கிழக்கின் ஜனநாயகத்தை தான் அரசு வடக்கிற்கும் கொடுக்க இருந்தால் அது முன்னேற்றத்தின் அறிகுறியில்லை என தமிழர்களின் பிரதிநிதி ஒருவரால் மிகவும் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்காத டாக்கடர் நடேசனின் பேச்சு:

Nadesan_Drஅமைச்சரின் பேச்சைத் தொடர்ந்து தமிழ் பிரதிநிதிகளின் சார்பில் டாக்டர் நடேசன் (அவுஸ்திரேலியா) உரையாற்றினார். இன்று தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு உறுதியான அரசியல் தலைமை இல்லை என்றும், தம்மை தலைவர்களாக வர்ணித்துக் கொள்பவர்கள் யதார்த்தத்தை முகம் கொடுக்க தயாராக இல்லை என்றும் தெரிவித்தார். டாக்டர் நடேசன் அவர்களின் பேச்சு அரசு கேட்க வேண்டிய விடயத்தை கூறியதை தவிர தமிழர்களின் நிலமையையும் அரசியல் அபிலாசைகளையும் பிரதிபலிக்கவில்லையென்றே கூற வேண்டும். அவரின் பேச்சில் அரசின் பொறுப்பு வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அரசியல் யாப்பை திருத்தியமைக்கும் வேலைப்பாடுகள் ஏன் வருடக்கணக்காக இழுபடுகிறது என்ற ஆதாரம் தெரிவித்திருக்கப்படல் வேண்டும். இம்மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து பிரதிநிதிகளிடமும் இந்த அங்கலாய்ப்பு இருந்த போதிலும் டாக்டர் நடேசனின் பேச்சில் அக்கருத்து குறியிடப்படவுமில்லை, வலியுறுத்தப்படவுமில்லை. நீங்கள் செய்யிறதை செய்யுங்கள், நாங்கள் ஆதரவு தருவோம் என்பது போன்ற தொனி இருந்தது மனவருத்தத்திற்குரியது.

APRC – சர்வகட்சிப் பிரிதிநிதிகள் குழு:

Tissa_Vitharanaடாக்டர் நடேசனின் பேச்சைத் தொடர்ந்து அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அரசியல் பரவலாக்கல் தொடர்பாக உரையாற்றினார். அவர் தனது ஆரம்பத்தில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தொடர்பான வரலாற்றைக் கூறி அதில் தற்போது முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அங்கம் வகிக்கவில்லை எனவும் அவர்கள் வரும் காலத்தில் ஒன்று சேருவதாக நம்பிக்கை தெரிவித்தார். ஆகமொத்தமாக APRC ஐ பார்க்கும் போது அது பல்லில்லாத பாம்பாக பல ஆண்டு காலமாக முடிவில்லாமல் இழுபடும், ஒரு நல்ல நோக்கம் கொண்ட ஆனால் நடைமுறைச் சாத்தியம் அற்ற அமைப்பாகவே புலப்பட்டது.

இன்று வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 53 வீதமான மக்கள் வெளி மாவட்டங்களில் வாழ்வதாகவும் devolution தவிர்ந்த ஏனைய அரசியல் கோரிக்கைகள் மிகவும் சாத்தியமற்றது என்று பேராசிரியர் விதாரண குறிப்பிட்டார். அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணயின் நீண்ட பேச்சு அரசியல் சூச்சுமங்களைத் தவிர்த்து உண்மை நிலமையை விளக்கினாலும் APRC யின் பலமற்ற தன்மை மிகவும் வெளிப்படையாக தெரிகின்றது.

Devolution  உடன் கூடிய Westminister பாராளுமன்ற அமைப்பைத் தான் APRC பரிந்துரைக்கும் என்று கூறிய திஸ்ஸ விதாரண அதற்குரிய காலத் தவணையைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் திஸ்ஸ விதாரண ஒரு நல்ல நோக்கம் கொண்ட ஆனால் அரசியல் பலமற்ற ஒருவராகவே புலப்பட்டார்.

சிங்களம் மட்டும் சட்ட மூலம் 96 கறைபடிந்த அத்தியாயம் – ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க:

அடுத்த கட்டமாக சிவில் நிர்வாகம் தொடர்பாகவும், அதன் நடைமுறைப் பிரச்சனைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அவர்கள் உரையாற்றினார். இன்று சிவில் நிர்வாகத்தில் தமிழர்கள் இணைவது மிக மிக குறைவு எனவும் உயர் மட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழர்களே உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார். காலம் காலமாக தமிழர்கள் பட்ட துயரத்தை இந்த அரசாங்கம் முழுமையாக உணர்வதாகவும் அதை நிவர்த்தி செய்யும் வேலைத்திட்டத்தில் தனது அரசு இறங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு 5 நிமிடமும் மகிந்த சிந்தனையை ஆதாரம் காட்டிய வீரதுங்க ஸ்ரீலங்காவின் வரலாற்றில் தற்போதைய ஜனாதிபதி ஒருவரே தனது கொள்கைகளை எழுத்தில் பதித்தவர் எனவும், மகிந்த சிந்தனையில் தான் விடுதலைப் புலிகளின் தலைவருடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக் காட்டினார். ஸ்ரீலங்காவின் வரலாற்றில் சிங்களம் மட்டும் சட்ட மூலம் 96 கறைபடிந்த அத்தியாயம் என வீரதுங்க வர்ணித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் பேச்சைத் தொடர்ந்து ஒரு மணி நேர திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழ் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு பதிலளித்த ஜனாதிபதியின் செயலாளர் சட்ட மூலங்களால் மட்டும் நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்த முடியாது. என தெரிவித்தார். ஜனாதிபதி ராஜபக்ச தமிழ் மொழி அமூலாக்கத்திற்கு தனது தனிப்பட்ட பலமான ஆதரவை அளித்து வருவதாகத் தெரிவித்தார். ஜனாதிபதியின் காரியாலயத்தில் உள்ள 40 அதிகாரிகள் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் தமிழ் கற்று வருவதாகத் தெரிவித்தார்.

தமிழ் பிரதிநிதி ஒருவரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் திஸ்ஸ விதாரண இன்று அரசியலின் மறைமுகமான மூன்றாவது பலம் ஒன்று இயங்கி வருவதாக கூறினார். இந்த மூன்றாவது பலம் போரை தொடர்வதில் மிகவும் அக்கறை செலுத்துவதாக தெரிவித்தார்.

போருடன் கூடி வரும் நிர்வாக சீர்கேடு, ஊழல், மோசடிகள் ஆகியவற்றில் இருந்து பலர் பல கோடிக் கணக்கான ரூபாய்களை உழைத்து வருவதாகத் தெரிவித்தார். இவ்வாறான நபர்கள் எப்போதும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த இடையூறாக இருப்பார்கள் என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். சில வருடங்களுக்கு முன்னர் நத்தார் தினம் அன்று கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கு பின்னணியில் இதே சக்திகள் இருந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த மூன்றாம் சக்திகள் தற்போது பல கோடிகளை செலவழித்து தமது அடியாட்களை பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட நிறுத்தி வருவதாக தெரிவித்தார்.

கிழக்கின் உதயம்:

கேள்வி பதில் கலந்துரையாடலை தொடர்ந்து வடமாகாணத்திற்குரிய அபிவிருத்தி தொடர்பாக கிழக்கின் உதயம் ஆலோசகர் சந்திர பெர்னான்டோ உரையாற்றினார். அவரின் உரையின் போது கிழக்கில் மேற்கொள்ளப்படும் பாரிய வேலைத்திட்டங்களின் படங்கள் காண்பிக்கப்பட்டன.

கொடுக்கப்பட்ட தரவுகளில் இருந்தும், காண்பிக்கப்பட்ட விளக்கப் படங்களில் இருந்தும் கிழக்கில் பெரிய வேலைத்திட்டங்கள் இடம்பெறுவது கண்கூடு. ஆனால் இவ்வேலைத்திட்டத்தில் கிழக்கின் முக்கிய ஜனநாயக துருவங்களான முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் அமைச்சர் கருணாவிற்கும் பெரிய தொடர்புகள் இருப்பதாக புலப்படவில்லை. சகல அபிவிருத்தி திட்டங்களும் ஜனாதிபதியின் உயர் ஆலோசகர் பசில் ராஜபக்சவின் நேரடி கண்காணிப்பிலேயே இடம்பெறுகின்றது.

கலந்துரையாடல்: ஸ்ரீலங்கா அரசியலில் பிரதேச, சமய, இன சார்ந்த அரசியல் கட்சிகள் பலமாக அமைவது ஓர் ஆரோக்கியமான சமூகத்திற்கு உகந்தது அல்ல. இது மிகவும் ஆபத்தான வளர்ச்சி. வெளிவிவகார அமைச்சர்

இதனைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லகம தலைமையில் கேள்வி, பதில், கலந்துரையாடல் பகுதி ஆரம்பமாகியது. கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரோகித போகொல்லகம பின்வரும் விடயங்களை தெரிவித்தார்.
1. வடக்கிற்கான தேர்தல் வெகு விரைவில் நிகழும்.
2. அகதிகள் மீள் குடியமர்வு வேலைத்திட்டம் மிகவிரைவில் அமுல்படுத்தப்படும்.
3. ஸ்ரீலங்கா அரசியலில் பிரதேச, சமய, இன சார்ந்த அரசியல் கட்சிகள் பலமாக அமைவது ஓர் ஆரோக்கியமான சமூகத்திற்கு உகந்தது அல்ல. இது மிகவும் ஆபத்தான வளர்ச்சி.
4. வடக்கிலிருந்து தெற்கிற்கு குடியேறும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பெரும் பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இக்குடிப் பெயர்வைக் குறைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
5. விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரச்சாரங்கள் மிக சிறப்பாக செயற்படுகின்றன. இதனை முகம் கொடுப்பதற்கு நாம் இப்போது தயாராகிவிட்டோம்.

தமிழ் பிரதிநிதிகளின் கருத்துக்கள் கூடுதலாக ஒரு அடிப்படையில்லாத போதனைகளாக இருந்த போதிலும், அவுஸ்திரேலியாவில் இருந்து கலந்து கொண்ட ரவீந்திரனின் கருத்து மிகவும் ஆணித்தரமாகவும், தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த அபிலாசைகளை பிரதிபலிப்பதாகவும் அமைந்தது. தமிழ் டாக்டர் பிரதிநிதி ஒருவர் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விசிறி என சூழுரைக்க இன்னொரு பிரதிநிதி தனியாக கைதட்ட கோமணத்துடன் நடமாடும் தமிழரின் சுயமரியாதை, அந்த சிறுதுண்டையும் இழந்த உணர்வு எனக்குள் ஏற்பட்டது.          
 
29-03-09 ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் டியு குணசேகர:

கடைசி நாள் அமர்வு அபிவிருத்தி தொடர்பாகவும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு தொடர்பாகவும் இடம்பெற்றது. இத்தொடரில் அரசியல் சட்ட தேசிய ஜக்கிய அமைச்சர் டியு குணசேகர முக்கியமாக உரையாற்றினார். அமைச்சர் டியு குணசேகர சிறீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் பழைமையான அரசியல்வாதியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் எவ்வாறு அனைத்து அரசியல் சிந்தனைகளையும் வேறுபட்ட அரசியல் கட்சிகளையும்  அடக்கியது என்பதை ஞாபகப்படுத்திய அமைச்சர் தனது கட்சியின் வடமாகாண அமைப்பாளர் விடுதலைப் புலிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சகமும் எரியூட்டப்பட்டதை குறிப்பிட்டார். அரசியல் அமைப்பில் சிறுபான்மையினரின் நலன் பேணும் விடயங்கள் பற்றியும் சரணடைந்தவர்களின் மறுவாழ்விற்கு சட்டரீதியான பாதுகாப்பு பற்றியும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

தடுப்பு முகாம்கள் – நலன்புரி நிலையங்கள்:

IDP_Camp_Barbed_Wireபயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மிக நீண்ட காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் நிலைமை குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்ட போது: இவ்விடயத்திற்கு பொறுப்பான நீதி அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் இத்தமிழ் இளைஞர்களை சட்டத்தின்முன் கொண்டுவருவதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களை விபரித்த பின்னர் மிக விரைவில் சட்ட ரீதியாக குற்றமற்ற அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளிலிருந்து கைது செய்யப்படும் அல்லது சரணடையும் சிறுவர்களை பராமரிக்கும் மூன்று நிலையங்கள் குறித்து நீண்ட நேரம் கருத்து பரிமாறப்பட்டது.

கொழும்பிற்கும் கண்டிக்கும் இடையிலுள்ள அம்பேபுச என்ற இடத்திலுள்ள சிறுவர்கள் நிலைய பராமரிப்பு நிலையத்தை வந்து பார்க்குமாறு தமிழ் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

IDP_Camp_CDCஇதன் பிரகாரம் மறுதினம் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அம்பேபுச நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு போர்களத்திலிருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர்களையும் யுவதிகளையும் பார்வையிட்டனர்.

கல்வி உணவு உடை பாதுகாப்பு உட்பட சகல வசதிகளுடனும் பராமரிக்கும் இப்பராமரிப்பு நிலையங்களுக்கு பல உதவிகளை அரசு புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழர்களிடமிருந்து எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மிக நீண்டநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் உதவி பல தடவைகள் அமைச்சர்களால் கோரப்பட்டது. உதவிசெய்ய விரும்பும் தமிழ்ர்கள் தமது உதவியை சிறீலங்கா அரசிற்கு நேரடியாக அளிக்கத் தேவையில்லை எனவும் சம்பந்தப்பட்ட நிலையங்களை அல்லது பொறுப்பதிகாரிகளை நேரடியாக சந்தித்து உதவிகளை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தொடரின் முடிவு:

இக் கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவரும் இறுதி உரையில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்  டாக்டர் பாலித்த கோகன்ன பின்வரும் விடயங்களைத் தெரிவித்தார்.
 
1. புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டின் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ள முன்வரவேண்டும்.
2. கடந்த கால சம்பவங்களை இதயசுத்தியுடன் பேசி பிரச்சினைக்கு பரிகாரம் கூட்டாக தேட முன்வரவேண்டும்.
3. இவ்வாறான ஒன்றுகூடல்களும் தமிழர்களுடனான கலந்துரையாடல்களும் முன்பே நடாத்தப்பட்டிருக்க வேண்டும் எனவே இனியும் தாமதிக்கக் கூடாது.
4. உள்நாட்டில் புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்கப்படுவது அவசியம்.
5. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசு தற்போது 225 ஆசனங்களில் 59 மட்டும் தான் தன்வசம் வைத்துள்ளது. ஏனைய அனைத்து உறுப்பினர்களும் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் எனவே அரசியலில் ஏற்ப்படும் நடைமுறைச்சிக்ல்களை உணர்ந்து அனைவரும் சமாதானத்திற்கான வேலைத்திட்டத்தில் ஒத்துழைக்க வேண்டும்.
6. நாட்டிலுள்ள தற்போதய பிரச்சினைகளுக்கு அனைவரும் பொறுப்பு. எனவே அனைவரும் இணைந்து பரிகாரம் தேடவேண்டும்.
7. இன்று நாட்டில் நடைபெறுவது இனப்படுகொலை என்பது முற்றிலும் தவறான பிரச்சாரம். இன்று இவ்வளவு பிரச்சினைகளின் மத்தியிலும் ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொழும்பிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் குடிபெயர்ந்து வாழ்கிறார்கள். வெள்ளவத்தையில் 95 சதவீதமான மக்கள் தமிழர்கள். இதை அரசு மிகவும் ஆரோக்கியமான வளர்ச்சியாகவே கருதுகிறது.
8. பழைய புண்ணை திரும்பத் திரும்ப சொறிவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. அனைவரும் தங்கள் இதயங்களில் இருந்து சிந்தித்து பிரச்சினைக்குப் பரிகாரம் தேட வேண்டும். (think from the heart)
9. எமக்கு அகதிகள் பிரச்சினைகள் ஒன்றும் புதிய பிரச்சினையில்லை. வாகரை மூதூர் பகுதியில் இருந்த 95 வீதமான மக்கள் தற்போது மீண்டும் தமது நிலப்பரப்பில் மீளக்குடியேற்றப் பட்டுவிட்டார்கள். இதே வேலைத் திட்டத்தை நாம் வடக்கிலும் செய்து வருகிறோம்.

புலம்பெயர் குழுவின் கேள்விகளுக்கு பசில் ராஜபக்சவின் பதில்கள்:

இந்த கூட்ட நிகழ்ச்சி நிரலில் கலந்து கொள்ள ஜனாதிபதியின் விஷேட ஆலோசகர் பசில் ராஜபக்ச அவர்களின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் பசில் ராஜபக்ச மொன்ட்லவெனியா கொட்டலுக்கு வருகை தரவில்லை. அவர் கூட்டத் தொடருக்கு வருகை தராதது ஒரு கடைசிநேர பாதுகாப்பு ஏற்பாடாக இருக்க வேண்டும் என்ற உணர்வே அங்கு இடம்பெற்ற சம்பவங்களில் இருந்து உணரக் கூடியதாக இருந்தது.

இக்கூட்டத் தொடர் முடிவுற்றதும் அனைவரும் வாகனமொன்றில் ஏற்றப்பட்டு காலி வீதியிலே  பழைய பாராளுமன்றத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தமிழ் உறுப்பினர்களுக்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நான்கு மணிநேர கலந்துரையாடல் இடம்பெற்றது. மிகமிக சாந்தமாகவும் பொறுமையாகவும் அனைத்துக் கேள்விகளுக்கும் தகுந்த முறையில் ஆதாரங்களுடன் பதிலளித்த பசில் ராஜபக்ச தான் ஒரு hand on நபர் என்பதை எவ்வித சந்தேகமும் இன்றி புலப்படுத்தினார்.

புலம்பெயர்ந்த மக்கள் காணாமல் போவதாக வரும் செய்திகளைப் பற்றியும் இடம்பெயரும் தமிழ் அகதிகளின் நீண்டகால எதிர்காலத்தைக் குறித்து கடுமையான கேள்விகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றை நேரடியாக முகம்கொடுத்து தகுந்த பிரதிவாதங்களுடன் பதிலை முன்வைத்தது ஆலோசகர் ராஜபக்சவின் ஆளுமையையும் ஆற்றலையும் மிகவும் தெளிவாகப் புலப்படுத்தியது.

முதலில் 20 தொடக்கம் 25 கேள்விகள்வரை உள்வாங்கிய ராஜபக்ச எல்லாக் கேள்விகளுக்கும் நேரடியாக பதிலளித்தார். பசில் ராஜபக்சவின் முக்கிய பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. மகிந்த சிந்தனையில் இந்த அரசு விடுதலைப் புலிகளுடனும் அதன் தலைவர் பிரபாகரனுடனும் நேரடியாகப் பேசி பிரச்சினைகளைத் தீர்க்கத் தயார் என வெளிப்படையாகவே தெரிவித்து தேர்தலில் வெற்றிகாண்பது.

2. நாட்டில் நிலவும் பிரச்சினையைத் தீர்ப்பதில் நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். இதில் நாம் எந்த வரையறைக்கும் உட்பட்டவர்கள் இல்லை. நான் தனிப்பட்ட முறையில் புலித்தேவன் காலம்சென்ற பாலசிங்கம் தமிழ்ச்செல்வனுடன் நேரடியாக தொடர்பில் இருந்தேன். இரகசியமான முறையில் பத்திரிகையாளர்களுக்குத் தெரியாமல் இவர்களைச் சந்திக்க ஜெனீவா சென்றிருந்தேன்.

3. விடுதலைப் புலிகளின் ஆயுதபலம் மிகவும் பாரியது. இது எமக்குத் தெரியும். வன்னிவாழ் மக்கள் எவ்வித அரசியல் சக்தியும் இல்லாத மக்கள். இவர்களின் கருத்தை வெளிநாடுகளில் உள்ள தமிழ்பேசும் மக்கள்தான் விடுதலைப் புலிகளுக்கு உணர்த்த வேண்டும்.

4. இன்று வன்னியிலுள்ள அகதிகளை பலர் மிருகக் காட்சிச் சாலையில் உள்ள மிருகங்களைப் போல் போய்ப் பார்க்க எத்தனிக்கிறார்கள். இது நியாயமில்லை. சம்பந்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் காட்சிப் பொருட்கள் இல்லை.

5. நான் தனிப்பட்ட முறையில் ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் வினோதனை அகதிமுகாமிற்கு அனுப்பி இவ்முகாம் தொடர்பான நல்ல விடயங்களை பாராளுமன்றத்தில் தெரிவிக்க ஊக்குவித்ததாக குறிப்பிடுகிறார்கள். இது உண்மைக்குப் புறம்பானது. வினோதன் அவர்கள் தனது உறவினர்களை அகதி முகாமில் பார்வையிட அனுமதி கோரினார். அதன் பிரகாரம்தான் ஒழுங்குகள் செய்து கொடுத்தேன். அவ்வளவுதான். அவர் பாராளுமன்றத்தில் அகதிகள் பற்றி கூறிய கருத்து அவர் கண்ணால் கண்ட விடயம். அதை பாராளுமன்றத்தில் தெரிவிக்க யாரும் அழுத்தம் கொடுக்கவுமில்லை. அப்படி கேட்கவும் இல்லை.

6. தற்போதய அகதி முகாம்களை தொடர்ந்து வைத்திருப்பது சாத்தியமுமில்லை. அது எமது நோக்கமுமில்லை. நாங்கள் அரசியல்வாதிகள். மக்களின் வாக்குகளில் தங்கியிருப்பவர்கள். கடந்தகால அனுபவங்களில் இருந்து எமக்கு ஒரு விடயம் நன்றாகத் தெரியும். அதாவது அகதி முகாம்களில் உள்ளவர்கள் எப்போதும் அரசிற்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள். கடந்த தேர்தலில் நாம் சில அகதி முகாம்களில் எட்டாவது நிலைக்குத் தள்ளப்பட்டோம். இது தேவையா??

7. எமது திட்டத்தின்படி மூன்றுவருட காலத்தில் சிறீலங்காவில் அகதி என்ற பேச்சிற்கே இடம் இருக்காது. சிறீலங்கா அரசு மிக குறுகிய காலத்தில் 200 000ற்கு அதிகமான அகதிகளை மீளக் குடியமர்த்தியது. இது உலகத்தில் ஒரு சாதனை.

8. தற்போது வன்னியில் உள்ள அகதிகள் ஒரு குறுகிய இடத்தினுள் முற்கம்பி வேலிகளினுள் அடைக்கப்பட்டு அவர்கள் வெளியே செல்வதற்கு தடை இடப்பட்டுள்ளது. இது உண்மைதான். இந்தநிலை பல நாட்களுக்கு நீடிக்கப் போவதில்லை. நூற்றுக்கணக்கான மக்களை ஆவணப்படுத்தி அடையாள அட்டை வளங்குவது இலகுவான காரியமில்லை. அகதிகள் பலரிடம் அவர்கள் யார் என்பதை நிரூபிக்க எதுவித அத்தாட்சியும் இல்லை. கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றது போல் நாம் சகலரையும் பதிவுசெய்து வெகு சீக்கிரத்தில் விசேட அடையாள அட்டைகள் கொடுப்போம். இதே வேலைத்திட்டத்தை நாம் கிழக்கு மாகாணத்தில் வெற்றிகரமாக செய்தோம். இதை வடக்கிலும் அமுல்படுத்தி வருகிறோம்.

9. உங்கள் அனைவருக்கும் நான் சுயாதீனமாக இந்த அகதிமுகாம்களுக்கு சென்று பார்வையிட ஒழுங்குகள் செய்து தருகின்றேன். நீங்கள் போய்ப் பாருங்கள். அங்கு நடைமுறைப் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் அவற்றிற்கு இயன்றவரை உடன் பரிகாரம் தேடுகிறோம். கடந்த சில வாரங்களில் மட்டும் குற்றம் சாட்டப்பட்ட 10 அதிகாரிகளும் உடன் இடம் மாற்றினோம்.

10. அகதி முகாம்களில் உள்ளவர்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் படுவதாகவும் கருத்தடை தடுப்பூசிகள் போடப் படுவதாகவும் வெளிநாடுகளில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. நீங்களே போய் நிலைமைகளைப் பாருங்கள். எமது மக்களுக்கு நாம் துரோகம் இழைக்கவில்லை. டாவூர் மற்றும் உலகிலுள்ள அனைத்து அகதி முகாம்களுடன் ஒப்பிடும் போது எமது அகதி முகாம்கள் நல்ல தரத்தில் உள்ளன. இது மிகவும் குறுகியகால நடவடிக்கை. நாம் மீளக் குடியமர்த்துவதில் மிகவும் அக்கறையாக உள்ளோம்.

11. இன்று அகதி முகாம்களில் அரசியல் இராணுவ  நடைமுறைப் பிரச்சினைகளைவிட பல சமூகப் பிரச்சினைகளும் உள்ளது. வெளியில் உள்ள பலர் தமது உறவினர்கள் எனக்கூறி அகதிகளை அழைத்துச் சென்று தமது வீட்டில் வேலைக்காக வைத்துள்ளனர். அகதி முகாம்களில் உள்ளவர்கள் பொருளாதாராத்திலும் கல்வி அறிவிலும் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள். சிறியகடிதம் எழுதுவது தொடக்கம் அதிகாரிகளுடன் பேசுவது வரை ஒன்றுமே ஏதும் உதவி இல்லாது செய்ய முடியாதவர்கள். இவர்களிடம் பெரும் ஆதங்கங்கள் உள்ளன நாம் இவற்றை முழுமையாக உணர்வோம்.

12. இன்று அரசு அகதிப் பிரச்சினைகளை முடுக்கி விட்டு தமிழர்களை தமது பாரம்பரிய பிரதேசத்திலிருந்து திட்டமிட்ட முறையில் வெளியேற்றுவதாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மிகவும் உண்மைக்கு புறம்பானது. அண்மையில் கிழக்கு மாகாணத்திலிருந்து அகதிகளாக வெளியேறிய 97சதவிகித மக்கள் அதே நிலத்தில் மீள குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

13. உத்தியோகப்பற்றற்ற முறையில் நாம் நோர்வே அரசை மற்றும் புலிகளின் புதிய உயர் உறுப்பினர் கே.பி மற்றும் பல வெளிநாட்டு புலிகளின் உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளோம. நேற்றுக் கூட John Holmes  கே பி யுடன் பேசியுள்ளார. இவை வெளியில் ஒருவருக்கும் தெரியாது. நாம் போர் மறுபக்கத்தில் அரசியலை மறந்து விடவில்லை. எது எப்படி இருப்பினும் நாம் பிரபாகரன் பொட்டம்மான் உட்பட 7 பேருக்கு எதிரான சர்வதேச பிடியாணை குற்றச்சாட்டு தொடர்பாக எமது கொள்கைகளை  மாற்ற முடியாது. மாற்றவும் மாட்டோம். இவர்கள் 7 பேரும் சர்வதேச சட்டததிற்கு முகம் கொடுக்க வேண்டியவர்கள் இந்த விடயத்தை தவிர அனைத்து விடயங்களை நாம் பேசித்தீர்க்க தயாராக உள்ளோம்.

14. நாம் ரிஎன்ஏ உடன் இணைந்து வேலை செய்ய ஆயத்தமாக உள்ளோம். எம்முடன் பேசாமல் இருந்தால் நாம் எப்படி பிரச்சினைகளை பேச முடியும்? இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் ரிஎன்ஏ தலைவர் குரு சம்பந்தருக்கு சொல்லி வருகிறேன்.

பசில் ராஜபக்ச வின் பதில் அனைத்தும்  ஆதாரங்களுடன் கூடியிருந்தது அவர் தனக்கு பக்கத்தில் ஆள் உயரத்திற்கு ஆவணங்களை குவித்து வைத்திருந்து ஒவ்வொரு கருத்திற்கும் அதற்கு தகுந்த ஆவணங்களை எடுத்து எமக்கு காட்டினார். அவரைச் சுற்றி 3 செயலாளர்கள் இருந்த போதும் செயலாளர்களை விட பசில் ராஜபக்ச சகல ஆவணங்களுடனும் மிகவும் பரிட்சயமாக இருந்தார். செயலாளர்கள் ஆவணங்களை ஆலோசகருக்கு சுட்டிக்காட்டுவதைவிட அவரே சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஏன் பக்கங்களைக் கூட தனது செயலாளர்களுக்கு கூறி உதவி செய்தார். சில தருணங்களில் மிகவும் நகைச் சுவையாகவும் பதில் அளித்த ராஜபக்ச சம்பந்தப்பட்ட தருணத்தில் அங்கிருந்த பத்திரிகையாளர்களை குறிப்பாக வீடியோ படப்பிடிப்பாளர்களை சைகை மூலம் அறையை விட்டு வெளியேற்றினார்.

ஒரு கட்டத்தில் (IDP) ஜடிபி முகாம்களைப் பற்றி விளக்கிய பசில் ராஜபக்ச தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி தனக்கு எழுதிய கடிதம் ஒன்றை ஆதாரமாக காட்டினார். இக்கடிதத்தில் வன்னியில் உள்ள அகதி முகாமில் காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் பிஸ்கற்றும் தேனீரும் கொடுக்க வேண்டும் என ஆனந்தசங்கரி குறிப்பிட்டு இருந்தததை ராஜபக்ச சுட்டிக்காட்டியதும் சிரிப்பொலி எழுந்தது.

அதேபோல தமிழர் மீது நடாத்தப்படும் கடுமையான சோதனை குறித்து கேட்கப்பட்ட போது தான் அண்மையில் ஜெனீவாவிற்கு சென்ற போது ஏற்ப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

தான் UN இற்கு வேட்டியுடன் சென்றபோது தனது இடுப்புப் பட்டியை கழற்றுமாறு பாதுகாப்பாளர்கள் உத்தரவிட அதற்கு தான் இந்த பெல்ட்டைக் கழட்டினால் அதனுடன் கூடவே இந்த வெள்ளைப் போர்வையும் – வேட்டியும் சேர்ந்து விழுந்துவிடும் என்று தான் விளக்கியதாகத் தெரிவித்தார்.

நான் சந்தித்த பிரமுகர்கள்:

Diaspora_with_Minister_Douglasஇந்த இரண்டு நாள் கூட்டத் தொடரிலும் அதனையொட்டி இடம்பெற்ற விருந்துபசாரங்களிலும் நாம் சம்மதித்த நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்டு பல விடயங்கள் நடந்தேறின. பல அரச ஊழியர்கள் கலந்துகொண்ட சிலரை தனியாகக் கதைத்து எதேச்சையாக சில சந்திப்புகளை ஏற்படுத்தினர். இந்த சந்திப்புகளில் நான் சந்தித்தவர்களில் முக்கிய பிரமுகர்கள்:
1. அமைச்சர் ரோகித்த போகொல்லாகம
2. செயலாளர் டாக்டர் பலித கோகன்ன
3. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க
4. ஜனாதிபதியின் விஷேட ஆலோசகர் பசில் ராஜபக்ச
5. அமைச்சர் டியூ குணசேகர
6. அமைச்சர் திஸ்ஸ விதாரண
7. ரிஎன்ஏ எம்பி சிறிகாந்தா
8. அமைச்சர் கருணா
9. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
10. புளொட் தலைவர் சித்தார்த்தன்
11. TULF தலைவர் திரு ஆனந்தசங்கரி
12. ஈபிஆர்எல்எவ் நாபா அணி-சுகு
13. கிழக்கு மாகாண அமைச்சின் ஆலோசகர் சந்திரா பெர்ணான்டோ
14. அமைச்சர் மிகந்த ஆனந்த அலுத்கம
15. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேட் பிளேக்
16. இந்திய தூதராலயத்தின் முதற்செயலாளர் பி சியாம்
17. சட்ட அமைப்பின் செயலாளர் கம்லத்
18. அமைச்சர் கருணாவின் பிரத்தியேக செயலாளர் சாந்தினி பெரேரா

இவர்களைத் தவிர பலதரப்பட்ட அதிகாரிகளையும் ஆலோசகர்களையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதில் முக்கியமாக நான் கவனித்த விடயம் என்னவெனில் (குறிப்பாக சிங்கள அதிகாரிகளிடம்) இன்று சிங்கள அரசியல்வாதிகள் அரசியல் ரீதியாக மிகவும் பக்குவப்பட்டுள்ளார்கள். தமிழ் அரசியல் வன்முறையை மையப்படுத்தி தமது அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுக்க சிங்கள அரசியல்வாதிகள் இராணுவத்தடன் கூடிய ஒரு பாரிய அரசியல் வேலைத் திட்டத்தையும் கூட்டாக முன்னெடுத்துச் சென்றுள்ளனர். இதனால் தமது நிலைப்பாட்டை சர்வதேச அரங்கில் மிகக் கச்சிதமாக முன்னெடுக்க தமிழ் சமுதாயமோ மேளங்களுடன் கத்திக் கூத்தாடி தேம்ஸ் நதியில் கூட்டாக பாயும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

புலம்பெயர் குழுவின் சுயபுராணம்:

சிங்கள அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் இருந்த அரசியல் பக்குவமும் அரசியல் அணுகுமுறையும் 20 வருடத்திற்கு மேலாகமேலத்தேய நாடுகளில் வசிக்கும் தமிழர்களில் காண முடியவில்லை. இந்த புலம்பெயர் தமிழ் குழுவிடமும் அதனைக் காண முடியவில்லை.

இந்தப் புலம்பெயர் குழுவில் கலந்துகொண்ட சில பிரதிநிதிகள் புலிகளைச் சாடுவதிலும் தமது சொந்த தம்பட்டங்களை அடிப்பதிலும் சுயபுராணம் பாடுவதிலும் துதிபாடுவதிலும் தமது கவனத்தை செலுத்தினரேயொழிய கூட்டாக அரசை ஆதாரத்துடன் கேள்வி கேட்கும் அரசியல் சம்பாஷணைகளில் ஈடுபடவில்லை. சிலர் தமது தொழிலை மையப்படுத்தியும் தமது பிள்ளைகளை மையப்படுத்தியும் கருத்துக்கள் தெரிவித்ததை கேட்டபோது மிகவும் வெட்கித் தலைகுனிய வைத்தது.

பல தமிழ் பிரதிநிதிகள் ஜன்ஸ்டைன் செர்ச்சில்வின் தத்துவங்களை எழுதி வாசித்து தமிழ் பேசும் மக்களின் எஞ்சியுள்ள மானத்தையும் சபையில் வாங்கினார்கள்.

ஒருசபையில் சம்பந்தப்பட்ட கூட்டத்தில் எவ்வாறு பேசவேண்டும் அணுக வேண்டும் என்ற அடிப்படையான protocol பலரிடம் இல்லாதிருந்தது கவலையளித்தது.

கூட்டத்தின் இறுதியில் நன்றி கூறப் புறப்பட்ட தமிழ் பிரமுகர் தனது வேலையைப் பற்றியும் தனது மனைவியின் பின்புலத்தையும் பற்றிப் பேசியது தமிழர்கள் அங்கு சென்ற குழுவினர் இன்னமும் அரசியலில் கிணற்றுத் தவளைகள் என்பதை படம்போட்டுக் காட்டியது.

அதுமட்டுமல்லாமல் சில பிரதிநிதிகள் தம்மை தமிழ்த் தலைவர்களாகவும் தமிழர்களின் பிரதிநிதிகளாக தம்மைத்தாமே உயர்த்திக் கொண்டது கவலைக்குரியது.

இக்கூட்டத் தொடரினைத் தொடர்ந்து சில தமிழ் பங்காளர்கள் கொழும்பு பத்திரிகைகளுக்கு வலிந்து கொடுத்த பேட்டிகள் அனைத்தும் பிரதிநிதிகளின் கூட்டான கருத்தின் பிரதிபலிப்பல்ல.

இக்கூட்டத்தில் தமிழ் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்ட மகஜர் அரசின் உத்தியோகபூர்வ அறிக்கை மற்றும் இக்கூட்டத் தொடர் தொடர்பாக வெளியாகிய செய்திகளை  இவ்விணைப்பில் பார்க்கலாம். http://srilankan-diaspora.org/

புலம்பெயர் குழுவின் பொதுக்கருத்து:

இக்கூட்டத் தொடரில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஒருவிடயம் பொதுவாக இருந்தது. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை இனியும் இராணுவ ரீதியில் அணுக முடியாது. விடுதலைப் புலிகள் தமிழ் பேசும் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல. சிறீலங்கா அரசுடன் பேசுவதன் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். மற்றும் விடுதலைப் புலிகளினால் மேல்நாடுகளில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் புலிகளின் தலைமையைக் காப்பாற்றுவதையே அடிப்படையாகக் கொண்டதே தவிர தமிழ் மக்களின் அரசியல் விடிவிற்கல்ல. போர்நிறுத்தம் அமுல் செய்யப்படல் வேண்டும். அகதிகள் தமது சொந்தப் பிரதேசங்களில் குடியமர்த்தப்படல் வேண்டும் போன்றன.

31-03-2009 – செவ்வாய்கிழமை

வவுனியா IDP camp விஜயம்:

IDP_Camp_Barbed_Wireஇவ்விஜயம் தமிழ் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க பசில் ராஜபக்சவின் உத்தரவின் பேரில் வெளிவிவகார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவ்விஜயத்தில் 9 தமிழ் பிரதிநிதிகளும் 4 வெளிவிவகார அமைச்சின் உத்தியோகத்தவர்களும்  பல பாதுகாப்பாளர்களுடன் தரை மார்க்கமாகப் புறப்பட்டனர்.

மதவாச்சியை அண்மித்த பிரதேசத்தில் இருந்து காடுகள் பற்றைகள் என்ற பேதம் இல்லாமல் 50 அடிக்கு ஒரு இராணுவம் அல்லது பொலிஸ் கடமையில் ஈடுபட்டிருந்தனர். எமக்கு விஷேட பாதுகாப்பு ஒழுங்கு கொடுக்கப் பட்டிருந்ததால் அவர்களுடன் பேசும் சந்தர்ப்பமோ அல்லது நீண்ட நேரம் நிலைமைகளை அவதானிக்கும் சந்தர்ப்பமோ எமக்குக் கிடைக்கவில்லை. எது எப்படி இருப்பினும் அனைத்துத் தடை முகாம்களிலும் சோதனைச் சாவடிகளிலும்  மக்கள் இறக்கப்பட்டு முழுமையாக சோதனையிடப்படுவதை கண்கூடாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இச்சோதனைகளில் பலவந்தமோ அல்லது அதிகார துஸ்பிரயோகமோ இடம்பெறவில்லை. நாம் அவதானித்தவரை அனைத்து சோதனைகளும் வேகமாகவும் பிரச்சினைகள் எதுவுமின்றி நடந்தேறின. இச்சோதனைச் சாவடிகளில் நீண்ட வரிசையும் இருக்கவில்லை.

மதவாச்சி தாண்டிக்குளம் ஈரப்பெரியகுளம் செட்டிகுளம் ஊடாக A9 பாதை வழியாக சென்றபோது கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் பரவலாக இடம்பெறும் தடயங்களும் அதற்கான அறிவுப்புகளையும் காணக் கூடியதாக இருந்தது. மதவாச்சிச் சந்திவரை புத்த விகாரைகளும் பள்ளிவாசல்களும் இந்துக் கோயில்களும் சாதாரணமாகவே காணப்பட்டன.

வவுனியா சந்தியை மகிந்த ராஜபக்சவின் பாரிய போஸ்டர் ஒன்றும் சிறுவர்களை போரில் ஈடுபடுத்துவதற்கு எதிரான பெரிய போஸ்டர் ஒன்றும் பிரமாண்டமாக நிமிர்ந்து நின்றன. கலகலப்பற்ற ஒரு சோக நிலமாக வவுனியா காட்சியளித்தது. வவுனியா உதவி அரசாங்க அதிபர் சம்பந்தன், உயர் அதிகாரி பரமநாதனுடன் வவுனியா நிலைமைகள் குறித்து சுருக்கமாக கலந்துரையாடப்பட்டது. 30.3.09 வரை 49,859 அகதிகள் போர் பிரதேசத்தில் இருந்து வருகை தந்து 15 பாடசாலைகளில் தங்க வைத்துள்ள விபரத்தை சம்பந்தன் தந்தார்.

IDP_Camp_Eenaiஅகதி முகாம்களில் உள்ள மக்கள் மிகவும் விரக்தியுடன், கவலையுடன் கோபமாக உள்ளதாக கூறிய உதவி அரசாங்க அதிபர், இம்மக்கள் தமது கோபங்களை தமது அதிகாரிகள் மீது காட்டுவதாக கூறி கவலைப்பட்டார்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து நாம் வவுனியா சந்தியில் இருந்து அரை மைல் தொலைவில் உள்ள காமினி மகாவித்தியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அரசாங்க அதிபரின் கணக்கின் படி அங்கு 1487 பேர் 30.3.09 வரை பதிவாகி இருந்தனர். நாங்கள் சென்ற நேரத்தில் 300 இற்கும் மேற்பட்ட புதிய அகதிகள் உள்ளே செல்வதற்காக வாசலில் காத்து நின்றனர். இவ்வாறு புதிதாக வந்த மக்கள் மத்தியில் இறங்கிய போது எம்முடன் விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சின் ஊழியர்கள் தொடக்கம் அனைவரினதும் கண்கள் ஈரமாகின. புதிதாக வந்து இறங்கிய மக்களின் கோலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

மனைவி சேற்றிலே புதையும் போது மகளை கையிலேந்தி கரை மீண்ட கணவன், மகளின் சடலத்தைக் கடந்து வந்த தாய்………………… காமினி மகா வித்தியாலயத்திற்குள் புக முன் நாம் சந்தித்த மக்களின் முகங்களும், குரல்களும் எம் வாழ்நாள் முழுவதும் எம் மனதிற்குள் ஓர் மூலையில் எதிரொலித்துக் கொண்டிருக்கும். நாம் யார், நாம் எதற்காக அங்கு வந்திருக்கிறோம் என்று அறியாத அந்த அப்பாவி மக்கள் நாங்கள் ஏதோ வெட்டிக் கிழிக்கப் போகிறோம் என எண்ணி தமது துயரங்களை குவிந்து நின்று எங்களுக்கு சொல்லத் தொடங்கினார்கள். அவர்களுக்கு எதைக் கூறுவது எப்படிக் கூறுவது என்று நாங்கள் திணறிக் கொண்டிருக்க எங்களுடன் விஜயம் செய்த சிங்கள வெளிவிவகார அமைச்சின் ஊழியர்கள் கூட அழத் தொடங்கினர்.

அமைச்சரின் கடிதம் காட்டிய போதிலும் அங்கு கடமையில் ஈடுபட்ட இராணுவத்தினர் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இறுதியில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி உயர் இராணுவ அதிகாரியைத் தொடர்பு கொண்ட பின் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

IDP_Camp_Injured_Manஅந்த அகதி முகாமினுள் நாம் கண்ட காட்சிகள் இதயத்தை பிழிந்து எடுத்தன. ஒரு வாரத்தினுள் பிறந்த 16 கைக் குழந்தைகள் தரையில் படுத்திருந்த காட்சி, இரு கால்களும் ஒரு கையும் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த ஒரு இளைஞன், ஒரு கை அரைகுறையாக துண்டிக்கப்பட்ட சிறுவன், புறமுதுகில் துப்பாக்கி சன்னத்துடன் 8 வயது சிறுவன்………………………….. ஒரு மனம் எவ்வளவு கொடுமையை சிந்திக்க முடியுமோ, அவ்வளவு கொடுமையையும் அந்த சிறு இடத்திற்குள் காணக் கூடியதாக இருந்தது.

தப்பி ஓடும்போது விடுதலைப் புலிகள் தாக்கிய வடுவை ஒரு பெண் வெளிப்படையாகவே காட்டினார். அங்கு உள்ள மக்கள் மிகவும் வெளிப்படையாகவும் இயல்பாகவும் பேசுகிறார்கள். யார் ஆண்டாலும் பரவாயில்லை, எம்மை எமது கிராமங்களுக்குத் திருப்பி அனுப்புங்கள் என்ற கோசமே அங்கு பரவலாகக் கேட்டது. ஸ்ரீலங்கா இராணுவம் அல்லது வைத்தியசாலைகளில் ஊசி ஏதாவது உங்களுக்கு போடப்பட்டதா என 25 பேர் வரை கேட்டோம். அனைவருக்கும் அது ஒரு புதுமையான கேள்வியாக இருந்தது. கீபீர் விமானத்தில் இருந்து விமானப்படை தாக்கியழித்தது பற்றி சொல்லவும் அவர்கள் தயங்கவில்லை. கடுமையான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்று இதில் பல உயிர்களை இழந்ததாகக் கூறினர். அரச படைகளின் உக்கிரமான வான் தாக்குதல்கள் பற்றி கூறிய மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேகரிப்பு, கட்டாய வேலை, கட்டாய பணச் சேகரிப்பு பற்றியும் கூறினர்.

வவுனியா காமினி வித்தியாலயத்தில் உள்ள மக்களைச் சந்தித்த பின்னர் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ல்ஸ் அவர்களை சந்தித்தோம். மிகவும் ஆளுமை கொண்ட அதிகாரியாக புலப்பட்ட திருமதி சார்ல்ஸ் நாம் கேட்ட கேள்விகளுக்கு மிகவும் நேரடியாகவே பதில் அளித்தார்.

IDP_Camp_Play_Areaஇன்று ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் IDP முகாம்களில் கருத்தடை ஊசிகள் ஏற்றப்படுகின்றன, பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள் என பிரச்சாரங்களை செய்து வருகின்றன. வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களுக்கு பதில் சொல்வதற்கு எமக்கு வசதிகள் இல்லை. நீங்களே போய் அங்குள்ள மக்களுடன் பேசிப் பாருங்கள். அங்கே நடப்பனவற்றை கேட்டறியுங்கள். இங்கு இனப்படுகொலை நடப்பதாக இருந்தால் அதை நான் தான் செய்கிறேன் என்று அர்த்தம், எனக் கூறிய திருமதி சார்ல்ஸ் IDP முகாம்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை ஏற்றுக் கொண்டார். வெளிநாட்டில் உள்ளவர்கள் பிள்ளைகள், பெண்களுக்கான ஆடைகள், ஊட்டச்சத்துள்ள உணவுகளை வாங்கித்தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இடம்பெயர்ந்த மக்களை பாடசாலைகள் தவிர வேறு இடங்களில் வைத்திருக்க வசதிகள் இல்லை என தெரிவித்த அவர் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் இந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

30.3.09 வரை வவுனியா மாவட்டத்தில் 15 தற்காலிக அகதி முகாம்களில் 49,859 பேர் பதிவாகியுள்ளனர். போர் பிரதேசங்களில் இருந்து வெளியேறும் மக்களின் தொகை இந்த 15 முகாம்களை மையப்படுத்தியே கணிக்கப்படுகின்றது. ஆனால் போர்ப் பிரதேசங்களில் இருந்து எத்தனை பேர் வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வருகிறார்கள் என்ற கணக்கு ஒருவர் கையிலும் இல்லை. இந்த இரண்டு இடைவெளியினுள் பலர் காணாமல் போகிறார்கள் என விடுதலைப் புலிகள் சொல்கிறார்கள். இது குறித்து அங்குள்ள பல மக்களிடம் நாம் கேட்ட போது மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டை அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

இந்த 15 தற்காலிக அகதி முகாம்களைத் தவிர மேலதிகமான ஓரளவு நிரந்தரமான 4 அகதி முகாம்களை அரசு நிறுவியுள்ளது. அதில் 2 தற்போது திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் விபரம் வருமாறு.
1. கதிர்காமர் கிராமம் – தற்போது முழுமையாக பாவனையில் உள்ள கிராமம். 6000 பேர் இங்கு வசிக்கின்றனர்.
2. அருணாச்சலம் கிராமம் – 333 ஏக்கர் நிலப்பரப்பு. 11,863 பேர் தற்போது இங்கு வசிக்கின்றனர்.
3. ஆனந்தகுமாரசாமி கிராமம் – 260 ஏக்கர் நிலம். இன்னும் திறக்கப்படவில்லை.
4. ராமநாதன் கிராமம் – 376 ஏக்கர் நிலம். இன்னும் திறக்கப்படவில்லை.

கதிர்காமர் கிராமம்:

IDP_Camp_Bank_of_Ceylonகாடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு பரந்துபட்ட பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கிராமம். தென்னோலைகளினால் அமைக்கப்பட்ட கூரையுடன் கூடிய ஓரளவு பெரிய வீடுகள். மக்கள் வங்கி, தபால்கந்தோர், கைத்தொழில் பயிற்சி நிலையங்கள், கோயில், வைத்தியசாலை என அனைத்து வசதிகளும் இருக்கின்றன. இவை எல்லாம் இருந்த போதிலும் இவை நிச்சயமாக ஒரு கிராமத்திற்கு ஈடாகாது.

வன்னி, முல்லைத்தீவு மக்கள் இப்படியான இறுக்கமான சூழ்நிலையில் வாழ்ந்து பழக்கப்படாதவர்கள். இந்த முகாம்களில் பல சமுதாய மனநோய் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எல்லா வசதிகளும் உணவும் இருந்தாலும் அங்குள்ள மக்கள் குறிப்பாக வேலை செய்யும் வயதில் உள்ளவர்கள் வேலையில்லாமல் இருக்கின்றார்கள். பிள்ளைகள் படிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள பாடசாலை நல்ல வசதிகளுடன் உள்ளது. அங்கு உயர்தர வகுப்பு வரை இருக்கின்றது. தாம் முன்பு படித்த பாடசாலையை விட கதிர்காமர் கிராமத்தில் படிப்பு வசதிகள் நன்றாகவே உள்ளதாக அங்கு படிக்கின்ற மாணவிகள் சரோஜி, தர்சிகா ஆகியோர் தெரிவித்தனர். இ தயாகரன் என்ற 19 வயது மாணவன் பேசிய போது தன்னுடைய குடும்பம் நவம்பர் மாதம் 23ம் திகதி குடிபெயர்ந்து கனகராயன் குளத்தில் இருந்து வவுனியா வந்ததாக தெரிவித்தார்.

ஆகமொத்தமாக பார்க்கும் போது எமக்கு எந்த IDP முகாமிற்கும் சென்று எவரும் எம்மை பின்தொடராமல் சுயாதீனமாக யாரையும் அழைத்து கதைக்கும் சுதந்திரம் இருந்தது. சில சந்தர்ப்பங்களில் மக்கள் எம்மைச் சுற்றிக் குவியும் போது ஒரு மனப்பயம் தோன்றினாலும் சிறிது நேரத்தில் யாவரும் மிகவும் பரிட்சயமுடையவர்கள் போன்ற உணர்வு ஏற்பட்டது.

நான் சென்ற 2 அகதி முகாம்களிலும் 8000 மக்கள் வரை இருந்தனர். இதில் 20 பேர் வரை நீண்ட நேரம் கதைத்தார்கள். மற்றும் கூட்டாக பலருடன் கதைத்தேன். என்னுடன் பேசியவர்களில் ஒருவர் கூட தமிழீழத்தைப் பற்றியோ, அல்லது புலிகளைப் பற்றியோ நல்லாகச் சொல்லவில்லை. சிலர் புலிகள் பணம் சேர்ப்பதையும், வேலைக்கு அழைப்பதையும் பற்றி சொன்னார்கள். 7 வயதிற்கும் 10 வயதிற்கும் இடையிலான 25 சிறுவர்களுடன் கதைத்தேன். வயதிற்கேற்ப குறும்புடன் அழகான தமிழில் கதைத்தார்கள். கீபீர் விமானத்தைப் பற்றி அடிக்கடி கூறினார்கள். முகாம்களில் உள்ள இராணுவ பொலீஸ் அதிகாரிகளினால் தமக்கு பிரச்சனை இல்லை என்பதே எல்லோருடைய அபிப்பிராயமாக இருந்தது.
 
IDP முகாம்களினுள் சிங்கள வைத்தியர்களும், சிங்கள அதிகாரிகளும் தமிழ் அதிகாரிகளும், சிங்கள இராணுவமும், முஸ்லீம் அதிகாரிகளும் என ஒரு சாம்பாராக இருந்தனர். இக்கால கட்டத்தில் இந்த முகாம்கள் தவிர்க்க முடியாதது தான். போர் நிலவும் நிலப்பரப்பில் என்ன நடக்கின்றதோ தெரியாது. ஆனால் IDP முகாம்களில் உள்ள மக்களைப் பற்றி விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்படும் பிரச்சாரங்களில் எதுவித உண்மையும் இல்லை. அங்கு வாழும் மக்களுக்கு உதவ வேண்டியது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் கடமை.

மீண்டும் வலியுறுத்தி கூறுவேன். இன்றைய காலகட்டத்தில் அந்த முகாம்கள் தவிர்க்க முடியாதது தான். ஆனால் அந்த முகாம்கள் வெகுவிரைவில் மூடப்பட்டு அங்குள்ள மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல வசதிகள் செய்து கொடுக்கப்படாத பட்சத்தில் இன்னும் 10 பிரபாகரன்களும் நூற்றுக் கணக்கான தற்கொலை இளைஞர்களும் உருவாகப் போவது திண்ணமே.

அவைக்காற்றுக் கழகத்தின் மரணத்துள் வாழ்வு ஒரு அலசல் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Balendra_Kநாடகம் : மரணத்துள் வாழ்வு
நெறியாள்கை : க பாலேந்திரா
நடிப்பு: மனோகரன் மனுவேற்பிள்ளை, க பாலேந்திரா, ஆனந்தராணி பாலேந்திரா
பிரிதியாக்கம் : சி சிவசேகரம் மனோகரன் மறுவேற்பிள்ளை

இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வீதியோரத்தில் ஸ்ரீலங்கா படையினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களில் ஒருவராக இருந்து பின்னர் விடுதலையாகி லண்டன் வந்து வழமையான குடும்ப சக்கரத்தில் ஈடுபடுகிறார் மாலினி. மாலினியின் கணவர் உலகமறிந்த ஒரு மனித உரிமைவாத சட்டத்தரணி (தமிழ் சட்டத்தரணி).

கொடுமையான சித்திரவதைகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் பலியாகி அந்த மனவடுக்களுடன் மனஉளைச்சலுடன் துன்பப்படும் மாலினி நாளடைவில் ஒரு உணர்வற்ற நடைபிண வாழ்க்கையை முன்னெடுக்கிறாள். மாலினியின் நிலமை இப்படி பரிதாபகரமாக இருக்க, அவரின் கணவர் ஸ்ரீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க முனையும் ஒரு சர்வதேச சட்ட நிபுணர்கள் குழுவின் முக்கிய சட்டத்தரணியாக சர்வதேச நீதி உலகில் பவனிவருகிறார். வாகனம் பழுதுபட்டு வீதியோரத்தில் நிற்க தமிழ் சட்டத்தரணிக்கு எதேட்சையாக உதவி செய்கிறார் ஒரு தமிழ் டொக்டர் ராஜரட்ணம்.

இந்த டொக்டர் ராஜரட்ணம் தான் கதையின் கிளைமாக்ஸ்…….. இவர் தான் சிங்கள இராணுவத்தினரால் மாலினி பாலியல் வன்செயலுக்கு உட்படுவதற்கு  உடந்தையாக இருந்தவர். அத்துடன் மாலினியை வன்முறைக்கும் உட்படுத்தியவர். மாலினியின் கணவரின் கார் பழுதுபட உதவிக்கு வந்த இந்த டொக்டர் ராஜரட்ணம் சட்டத்தரணியுடன் சேர்ந்து தண்ணியடிக்க வீட்டுக்கு வந்து மாலினியிடம் அகப்பட்டுக் கொள்கிறார். மாலினியின் அடிமனதில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வேதனைகள் இங்கிலாந்தில் கடற்கரையோரத்தில் உள்ள வீட்டில் துப்பாக்கி சண்டைகளாக வெடிக்கின்றன. ஆப்பிழுத்த குரங்கின் கதை போல வீட்டினுள் மாட்டிக் கொள்கிறார் டொக்டர் ராஜரட்ணம்.

உலக மனித உரிமை சட்டவாதியின் மனைவி வீட்டினுள் துப்பாக்கியை ஒழித்து வைத்திருந்து அட்டகாசம் பண்ணும் சம்பவங்களும், தலைவிரி கோலமாக துப்பாக்கியுடன் திரியும் மனைவியுடன் சமரசம் செய்யும் உலகம் தெரிந்த தமிழ் சட்டவாதியும், ஸ்ரீலங்கா இராணுவத்தில் வைத்தியராக இணைந்திருந்து தமிழ் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் தமிழ் வைத்தியரும், வீதியில் உதவி செய்ய வந்து மாட்டிக் கொள்ளும் டொக்டர் ராஜரட்ணமும்………… இங்கிலாந்து வீட்டில் இடம்பெறும் இச்சம்பவங்கள் யதார்த்தத்திற்கு முற்றும் விலகி நிற்கின்றன.

ஓர் நியாயமான யதார்த்தமான கருவை யதார்த்தமற்ற சம்பவங்கள் நியாயப்படுத்த தவறியதால் கரு அடிபட்டுப் போனது போன்ற உணர்வு தென்படுகின்றது.

ஒலி, ஒளி, நடிப்பு வழமைபோல் உயர்தரத்தில் இருந்தாலும் இப்படைப்பை கதைச் சூழ்நிலைகளும் சம்பவங்களும் நியாயப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்தக் காரணத்தால் க பாலேந்திராவின் ஏனைய நாடகங்களில் இருந்த தாக்கம் மரணத்தில் வாழ்வு நாடகத்தில் இருக்கவில்லை என்றே கூறவேண்டும்.

தண்ணி அடித்து நியாயம் பேசும் நடுத்தர வயது லண்டன் தமிழ் வைத்தியர், மனைவியை சமாதானப்படுத்துவதையே முழுநேர தொழிலாக வைத்திருக்கும் தமிழ் சட்டத்தரணி…………… லண்டனில் உள்ள சகஜ நிலமையை மனக்கண் முன் கொண்டு வருகிறது. மாலினியாக நடித்த ஆனந்தராணியின் நடிப்பு தரமாக இருந்தாலும் அந்த திறமையை பாத்திரம், சம்பவங்கள் நியாயப்படுத்தவில்லை.

ஓர் ஆழமான அரசியல் நியாயத்தை கூற முற்பட்ட இந்த படைப்பு யதார்த்தமற்ற கற்பனைகளால் மூழ்கடிக்கப்பட்டதைப் போன்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது.