ஜெயபாலன் த

ஜெயபாலன் த

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க போகின்றதாம்? அதை பைடனும் பொறிஸ்சும் தடுக்கப் போகிறார்களாம்? – முதலைக் கண்ணீர்!!!

கொரோனோ பெரும்பாலும் இந்த மேற்கு நாடுகளையெல்லாம் ஒரு உலுப்பு உலுப்பி விட நாளொன்றொக்கு இன்னமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்துகொண்டிருப்பதே இன்றைய சாதாரண நிலையாக வந்துவிட்டது. அதனை சர்வ சாதாரணமாக கருதும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொரோனாவை சீனாவோடு தொடர்புபடுத்தி மக்களின் பழியையும் பாவத்தையும் சீனா மீது திருப்பிவிட்டுவிட்டு இப்போது கூடுதலாகப் பேசுவது உக்ரைன் பற்றி. அமெரிக்காவில் ஜனாதிபதி பைடனும் பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ்சும் உள்ளுரில் பெரும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்க அவர்களுக்கு அவல் கிடைத்தது மாதிரி அமைந்தது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கப் போகின்றது என்ற கதையாடல்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கின்ற விவகாரம், ரஷ்யா கிரேமியாவைக் கைப்பற்றியது முதல் இருக்கின்ற ஒரு விசயம். இதனை ஏதோ ரஷ்யா இப்ப தான் படையெடுப்பிற்கு தயாராகின்றது என்று அமெரிக்க பிரித்தானிய ஊடகங்கள் ரீல் விடுகின்றன. இந்நாடுகளின் உளவுத்துறைகளுக்கும் இந்த ஏழு வருடங்களில் தெரியாததெல்லாம் அமெரிக்க ஜனாதிபதி மீதும் பிரித்தானிய பிரதமர் மீதும் நம்பிக்யையீனம் ஏற்பட்ட பின் தான் புதிய புதிய தகவல்கள் தெரிய வருகின்றதாம். இப்போது இவ்விரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் உள்ளுர் நெருக்கடியை சமாளிக்க உக்ரைனை பந்தாட முற்பட்டு உள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் தனது வீட்டை திருத்தம் செய்வதற்கு விதிமுறைகளுக்கு விலக்காக நிதியைப் பெற்றுக்கொண்டது, தானே முன்னின்று அமுல்படுத்திய லொக்டவுன் விதிகளை அவரும் அவரது சகாக்களும் அவருடைய உத்தியோகபூர்வ அலுவலகமான நம்பர் 10 டவுனிங் ஸ் ரீற்றில் ஒன்றல்ல இரண்டல்ல 18 முறை மீறியது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது ஆளும் கொன்சவேடிவ் கட்சிக்கு உள்ளேயே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் சிரேஸ்ட்ட அரசாங்க பணியாளர் சூ கிரேயின் அறிக்கையை மேலும் இழுத்தடித்து அதில் முக்கியமான விடயங்கள் எதுவும் இடம்பெறாமல் செய்யும் வகையில் ஸ்கொட்லன்ட் யாட் தாங்களும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் முக்கிய தகவல்களை ஆதாரங்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நம்பர் 10 டவுனிஸ் ஸ் ரீற் கார்டனில் நடந்த பார்ட்டிகளை நேரடியாக சிசிரிவி இல் அதே நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்த ஸ்கொன்லன்ட் யாட் உத்தியோகத்தர்கள் யாரும் இதுவரை எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமல் இருந்தனர். இப்போது உண்மைகள் வெளியே வரப்போகின்றது என்றதும் தங்களையும் ஆளும் குழுமத்தையும் காப்பாற்ற துரித நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை உட்பட்ட ஆசிய நாடுகளில் சட்டத்தை உருவாக்குபவர்கள், சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க வேண்டியவர்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்கள் எல்லோரும் கூட்டாக இணைந்து ஊழலில் ஈடுபடுவது போன்ற ஒரு நிலையே இன்று ஜனநாயகத்தின் காவலர்களாக தங்களை அறிவிக்கும் பிரித்தானியாவில் நடைபெறுகின்றது.

இலங்கையில் ஜனாதிபதி சந்திரகா குமாரதுங்கா ஒரு இனவாதியாக இருக்கவில்லை. ஓராளவு லிபரலான தலைவராகவே இருந்தார். ஆனால் அவருடைய காலத்திலேயே நாட்டில் ஊழல்கள் அதிகரித்திருந்தது. அதற்கு அவருடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்களும் காரணமாக இருந்தது. இதே நிலையிலேயே பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் உள்ளார். இவரும் கொன்சவேடிவ் கட்சியாக இருந்தாலும் லிபரல் போக்குடையவர். ஆனால் தனிப்பட்ட முறையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு நேர்மையற்றவர். அரசியல் கொள்கையுடையவரும் அல்ல. மதில் மேல் புனையாக இருந்து எந்தப் பக்கம் சரிந்தால் தனக்கு அரசியல் ஆதாயம் வருமோ அப்பக்கம் சாய்பவர். ஜரோப்பாவில் இருந்து பிரித்தானியா பிரிய வேண்டும் என்ற அவரது முடிவும் அவ்வாறே எடுக்கப்பட்டது.

கோவிட் காலத்தில் அவருடைய விவேகமற்ற போக்குகளே பிரித்தானியா தனது சனத்தோகை விகிதாசாரத்தைக் காட்டிலும் பல்லாயிரக் கணக்காணோரை கோவிட்இல் பலிகொள்ளக் காரணம். மேலும் கோவிட் கால நெருக்கடிக்கு கடன் பெறப்பட்ட 200 பில்லியன் பவுண்களில் 10 வீதம் (20 பில்லியன் பவுண்கள்) லஞ்சம் மற்றும் ஊழலில் வீணடிக்கப்பட்டது. முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு அங்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களை தங்கள் ஆளும் குழுத்திற்குள் வழங்கி இந்த 20 பில்லியனை இந்த ஆளும் குழுமத்தை அண்டிப்பிழைப்பவர்கள் சுரட்டிக்கொண்டனர். இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நடைபெறும் அதே மாதரியான லஞ்சம் ஊழல் பிரித்தினிய ஆட்சிபீடத்திலும் மிகச் சர்வசாதாரணமாக்கப்பட்டு உள்ளது.

20 பில்லியனை ஒரு காலாண்டில் ஏப்பம் விட்ட பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசு வரும் ஏப்ரல் மாதம் முதல் சராசரி ஊதியமீட்டும் பல மில்லயன் கடும் உழைப்பாளர்களின் வரியை அதிகரித்து 12.5 பில்லியன் பவுணை அறவிடவுள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள இன்னும் சில தினங்களில் பிரித்தானிய பிரதமர் உக்ரைன் சென்று போர்பறை முழங்க உள்ளார். கடந்த காலங்களில் அமெரிக்க – பிரித்தானிய கூட்டு மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியே காரணமாக இருந்தது.

தற்போது கூட உக்ரைன் ஆட்சித் தலைவர் அமெரிக்க பிரித்தானிய நாடுகளின் போர் முழக்கத்தை தனக்கு விளங்கவில்லையென்றே தெரிவித்து வருகின்றார். ரஷ்யாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுடைய அவர் ரஷ்யாவை வலிந்து யுத்ததிற்கு இழுக்க வேண்டாம் என்றே கேட்டுக்கொண்டுளார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் எல்லையோரமாகக் படைகளைக் குவிப்பது ஒன்றும் புதிதல்ல என்று குறிப்பிடும் அவர், ரஷ்யா தன் நாடுமீது உடனடியாகப் படையெடுக்கும் நிலையில்லை என்ற பாணியிலேயே நடந்துகொள்கின்றார்.

உக்ரைனில் அவ்வாறான ஒரு யுத்தப் பதட்டம் காணப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவும் தனது படையணிகளை உக்ரைனில் குவித்திருந்த போதும் இது கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஒரு விடயமே என்றும் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லையென்றுமே தெரிவித்து வருகின்றது. நேட்டோ தனது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படுவதனாலேயே தாங்கள் உக்ரைன் எல்லையில் படைகளைக் குவிப்பதாக ரஷ்யா தெரிவிக்கின்றது.

ஆனாலும் விளாடிமீர் பூட்டினுக்கு சோவியத் ரஷ்யாவை மீண்டும் கட்டியெழுப்பும் கனவு இல்லையென்று சொல்வதற்கில்லை. அதனை அவர் படைபலத்தின் மூலம் சாதிக்க முயற்சிக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கலங்கிய குட்டையில் தங்கள் இருப்பைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் மீண்டும் கை கோர்த்துள்ளன. உக்ரைனில் ஆயதங்களை இவர்கள் குவிக்கின்றனர்.

ஆமை புகுந்த வீடு உருப்படுகிறதோ இல்லையோ அமெரிக்காவும் பிரித்தானியாவும் தலையிட்ட எந்த நாடும் உருப்படவில்லை. காலனித்துவ காலத்திற்குப் பின்னான நவகாலனித்துவ காலத்தில் அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா என இவர்கள் தலையீடு செய்த நாடுகள் அத்தனையும் இவர்கள் தலையீடு செயவதற்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் மிக மிக மோசமான நிலைக்கே சென்றுள்ளன. அந்நாடுகளில் சாதாரண உயிர்வாழ்வே தற்போது மிக மோசமானதாக்கப்பட்டு உள்ளது.

இவ்விரு நாடுகளினதும் மிக நெருங்கிய நேசநாடான சவுதியரேபியாவின் மன்னன் துருக்கியில் உள்ள தங்கள் தூதராலயத்தில் வைத்து ஒரு ஊடகவியலாளனை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்ததையே கண்டுகொள்ளாமல் தங்களை இன்னமும் மனித உரிமைக்காவலர்களாகக் காட்டிவருகின்றனர். சவுதியரேபியா, அமெரிக்க பிரித்தானிய ஆயதங்களைப் பயன்படுத்தி யேர்மன் நாட்டினை கடந்த சில ஆண்டுகளாகவே சின்னா பின்னமாக்கி வருகின்றது. அது பற்றி இந்நாடுகள் வாயே திறக்கவில்லை. இப்போது உக்ரைனை சின்னா பின்னமாக்க தயாராகிக் கொண்டுள்ளனர்.

இப்போது உலகின் பொருளாதார தொழில்நுட்ப படைப்பலச் சமநிலையில் பாரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கையில் ஆண்ட பரம்பரைதான் ஆழ வேண்டும் என்ற திமிருடன் தொடர்ந்தும் இந்நாடுகள் உலகின் அமைதியைக் குலைத்து யுத்தத்தை உற்பத்தி செய்து வருகின்றனர். ரஷ்யாவுக்கு எதிராக இவ்வளவு துள்ளும் பிரித்தானியாவில் தான் ரஷ்யாவின் சட்ட விரோதப் பணத்தின் பெரும்பகுதி குவிந்துகிடக்கின்றது. அதைப் பற்றியும் பிரித்தானியா மௌனமாகவே உள்ளது.

தீப்பொறியாக வெளியேறினது மூவர் பரந்தன் ராஜனின் பின்னால் 300 பேர்! உமாவின் தலைமைக்கு சவால்!!! : பாகம் 26

பாகம் 26: தீப்பொறியாக வெளியேறினது மூவர் பரந்தன் ராஜனின் பின்னால் 300 பேர்! உமாவின் தலைமைக்கு சவால்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 26 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 26

தேசம்: பின்தள மாநாடு பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறோம். அதில நீங்கள் பரந்தன் ராஜன் பி.எல்.ஓ பயிற்சி முடித்துவிட்டு இங்க வரேக்க, காக்கா சிவனேஸ்வரன் கொலை செய்யப்படுகிறார். அந்த முரண்பாட்டில் அவர் வெளியேறுகிறார். அவர் வெளியேறும் போது 300 – 350 போராளிகளும் சேர்ந்து வெளியேறுகிறார்கள் என்று சொல்லுறீங்க. என்னுடைய கேள்வி என்னவென்றால், இதுவரைக்கும் கதைக்கப்பட்ட விடயங்களை பார்க்கும் போது, பரந்தன் ராஜன் ஒரு முற்போக்கான பாத்திரம் வகித்ததாக எங்கேயும் சொல்ல வில்லை. அப்படி அவருக்கு பாத்திரம் இருக்கா? முற்போக்குப் பாத்திரம் வகித்ததாக சொல்லப்படுவது அல்லது இடதுசாரி சிந்தனை அரசியலில் சொல்லப்பட்ட தீப்பொறி குழு ஆட்கள் வெளியேறும்போது அவர்கள் மூன்று பேர்தான் போகிறார்கள். அது எப்படி சாத்தியமானது? ராஜனுக்கு பின்னாடி எப்படி இவ்வளவு 300 – 350 போராளிகள் சேர்ந்து பிரிகிறார்கள் என்றால் அவர் ஒரு சக்தியாக இருந்திருக்கிறார் தானே? அது எவ்வாறு?

அசோக்: ஒருவரை நம்பி நாம் செல்வதற்கு அடிப்படைக் காரணம் ஒரு நம்பிக்கைதான். நீங்கள் ஒரு நெருக்கடியான உயிர் பயமுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்ற ஒரு நிலையில், யார் உங்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் தருகிறார்களோ, உங்கள் மீதான அக்கறையை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு பின்னால்தான் போவீர்கள். இங்க வந்து முற்போக்கு கருத்துக்களும், மாக்சிஸ ஐடியோலொஜிகளும் துணை புரியாது. மாக்சிஸ ஐடியோலொஜி உள்ளவர்கள், தோழர்களை காப்பாற்ற கூடிய வல்லமை இருந்தால் அவர்களுக்கு பின்னால போவார்கள். அது ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்எடுப்பதற்கான சாத்தியத்தை வழங்கக் கூடும். ஆனால் உயிர் ஆபத்துக்கள் இருக்கின்ற சூழ்நிலையில் தங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் போன்ற விடயங்களைத்தான் தோழர்கள் முதல் கவனத்தில கொள்வாங்க.

இங்க கோட்பாடு அரசியல் என்பது இரண்டாம்பட்சமாகி விடும். தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறின பிற்பாடு அவர்களுக்கு பின்னால போகாதது ஏனென்று கேட்டால் அவர்கள் மீது நம்பிக்கை இருக்கேல. அவர்கள் கருத்தியல் ரீதியாக வளர்ந்தவர்களேயொழிய இவர்கள் ஒரு ஸ்தாபனத்தை கொண்டு நடத்துவார்கள் என்றோ தோழர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள் என்றோ வழி காட்டுவார்கள் என்றோ எந்த நம்பிக்கையும் தோழர்களுக்கு வரவில்லை.

அடுத்தது பொறுப்புக்கூறல் அவங்களுக்கு இல்லை. நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அவங்கள் வெளியேற முதல் யோசித்திருக்க வேண்டும் தங்களால் வந்த தோழர்கள் சந்தேகப்பட்டு பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணமே அவர்களுக்கு இருக்கேல. அப்போ அடிப்படைப் பிரச்சனை என்னவென்று கேட்டால் பொறுப்புக்கூறல் அவங்களுக்கு இருக்கேல. உண்மையிலேயே அவர்கள் பைட் பண்ணியிருக்க வேண்டும்.

அனைத்து முகாம்களுக்கும் போய் வருபவர் தோழர் ரகுமான் ஜான். நிறைய தோழர்களுடைய அன்பும் ஆதரவும் கிடைத்திருக்கும். குறைந்தபட்சம் அவர்களுக்காகவாவது உள்ளுக்க இருந்து ஃபைட் பண்ணி இருக்க வேண்டும். இனி புளொட்டில் இருப்பது பிரயோசனம் இல்லை என தோழர்களுக்கும் தெரியப்படுத்திவிட்டு வெளியேறி இருந்தால் தோழர்கள் மத்தியில் பிரச்சனை உருவாகி அவர்களும் இவங்களோட வெளியேறி இருப்பாங்க. முகுந்தனால் எதுவும்செய்ய முடியாமல் போய் இருக்கும்.

ராஜனைப் பொறுத்தவரை இதுதான் நடந்தது. ராஜனோடு தோழர்களும் நிறைய வெளியேறிவிட்டதினால் முகுந்தனினால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது. ராஜனை பொறுத்தவரையில் ராஜனுக்கு முற்போக்குப் பாத்திரம் இல்லை. விமர்சனங்கள் இருக்கு. ஆனால் ராஜனிடம் மனிதாபிமானம் இருந்தது. வெளியேறிய தோழர்களை காப்பாற்ற வேண்டும் அவர்களுக்கு பொறுப்பு கூறல் வேண்டும் என்ற உணர்வு இருந்தது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் ராஜன் தொடர்பாய் என்ன விமர்சனங்கள் இருந்தன…

அசோக்: உளவுத் துறை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் ராஜன் தொடர்பாக விமர்சனம் இருந்ததாக நான் அறியவில்லை. ஆனால் ராஜன் பி கேம்ப் போட்டது தொடர்பாக விமா்சனம் இருந்தது.

தேசம்: அது என்ன மாதிரியான விமர்சனம்…

அசோக்: அதுல தான் டோச்சர் நடந்தது.

தேசம்: ராஜன்ட கேம்பிலையோ?

அசோக்: பீ கேம்ப் (basic camp – b camp) என்பது ஆரம்ப பயிற்சிநிலை கொண்ட முகாம். அது பேசிக் காம்பாக இருந்தமையால் பீ கேம் என்று சொல்லப்பட்டது. ராஜன் தான் பேசிக் கேம்ப் போட்டது. அங்க தோழர்கள் மீதான சித்திரவதைகள் நடந்த படியால், ராஜன் மீது அந்த குற்றங்கள் வந்து விட்டதென நினைக்கிறன். ராஜன் தொடங்கிய நோக்கம் பேசிக் கேம்ப். ஆரம்ப பயிற்சிக்காக தொடங்கப்பட்டது. அங்கதான் டோச்ஜர் நடந்தது.

தேசம்: அதுக்கு ராஜன் பொறுப்பாக இருக்கேல?

அசோக்: இல்லை இல்லை அந்த காலகட்டத்தில் ராஜன் பீ.எல்.ஓ பயிற்சிக்காக போய் விட்டார் என நினைக்கிறன்.

தேசம்: ராஜன்ட முரண்பாட்டுக்கு அதுவும் காரணமாக இருக்கலாமா? தான் தொடங்கின முகாமில் …

அசோக்: அது தெரியல. பீஎல்ஓ ரெயினிங் முடித்து வந்த பின் முகுந்தனுக்கும் ராஜனுக்கும் பிரச்சனை தொடங்கிவிட்டது. நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறார். உள்ளுக்குள்ள நடந்த கொலைகள் தொடர்பாக. அவர் கலந்துகொண்ட சென்றல் கமிட்டி மீட்டிங் பிறகுதான் நடந்தது. தனிப்பட்ட சந்திப்புகள் நடக்கும் தானே அதுல முரண்பட்டுதான் கேள்விகள் கேட்கிறார்.

தேசம்: ராஜனுக்கும் தோழர் ரகுமான் ஜான் போன்றவர்களுக்கும் இடையில் தொடர்புகள்…

அசோக்: தொடர்புகள் ஒன்றுமில்லை.

தேசம்: அது எப்படி ஒரே அமைப்பின் மத்திய குழுவில் இருந்தவர்களுக்கு இடையில் தோழமை உரையாடல் இல்லாமல் இருந்தது?

அசோக்: இவங்களைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் ராஜனை முகுந்தனுடைய ஆளாகத்தான் இவங்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படித்தான் ஆரம்ப காலகட்டத்தில் ராஜன் முகுந்தனுடைய ஆதரவு நிலைப்பாட்டோடுதான் இருந்திருக்கிறார். ராஜன் மாத்திரம் அல்ல ஆரம்ப காலகட்டத்தில் தோழர் ரகுமான் ஜான், கேசவன் நான் உட்பட எல்லோரும் முகுந்தன் விசுவாசிகள்தான். முகுந்தன் விசுவாசம் இல்லாவிட்டால் கட்டுப்பாட்டுக்குழுவில் தோழர் ரகுமான் ஜான், சலீம் எப்படி இடம் பெறமுடியும். காலப்போக்கில் முரண்பாடு ஏற்பாட்டு விட்டதே தவிர ஆரம்ப காலங்களில் எல்லோரும் ஒன்றுதான். விசுவாசம் வேண்டுமென்றால் ஆளுக்கால் கூடிக் குறையலாம் …

தேசம்: இதெல்லாம் ஒரு கற்பனை மாதிரி தெரியவில்லையா. கிட்டத்தட்ட ஒரு கற்பனாவாதம் தான். ஒருவருக்கொருவர் தோழமை இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தாமல் உரையாடல் நடத்தாமல் என்னென்று நீங்கள் எலலோரும் மத்தியகுழுவில் இருந்தீங்க.

அசோக்: இப்ப யோசிக்கேக்க அது பிழையாகத் தான் தெரியுது. அந்தக் காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் ஒரு சந்தேகம் பயம் இருந்திருக்கலாம்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் சந்தேகங்கள் பயம்கள் உருவாகுவதற்கான சாத்தியங்கள் இல்லையே. குறிப்பிட்ட காலத்துக்குள் தானே இது எல்லாம் நடக்குது. ஒன்றில் நீங்கள் அதீத எப்படி சொல்வது, தெனாலியில் கமலஹாசன் சொல்வது மாதிரி அதைக் கண்டால் பயம், இதைக் கண்டால் பயம், அப்படி பயம் என்று சொல்லுறது மாதிரியான பயத்தை நாங்கள் இப்ப கட்டமைக்க இயலாது. மற்றது அந்த காலகட்டத்தில் தான் நீங்கள் புலிகளிடமிருந்து வந்து இதை ஆரம்பிக்கிறீர்கள். ஒரு வருஷத்துக்குள்ள அவ்வளவு ஒரு கொலை கூட்டமாக மாறுவது வாய்ப்பில்லை…

அசோக்: உண்மையிலேயே இப்ப திரும்பி பார்க்கும் போது எங்கள் மீது நிறைய விமர்சனங்கள் வருகிறது. இயக்கம், போராட்டம் விடுதலை என்பதக்கு அப்பால், எங்களிடம் எங்களின்ற தனிப்பட்ட இருத்தலுக்காக அடையாளத்திற்காக முயற்சித்தோமே தவிர எந்த இயக்க நலன்சார்ந்த உரையாடல்கள், விட்டுக்கொடுப்புக்கள், பரஸ்பர நம்பிக்கைகளுக்கு ஊடாக எதையுமே நாங்க முயற்சிக்கல்ல போல தெரிகிறது. முகுந்தனும் உளவுத்துறையும் தான் மிக மிக முக்கியமான பிரச்சினை என்றால் முகுந்தன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியங்கள் இருந்திருக்கு.

தேசம்: முகுந்தன் பாவித்த அத்தனை பேருமே சுழிபுரத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் எல்லாருமே சந்ததியாரால் புளொட்டிக்கு கொண்டு வரப்பட்டவர்கள். படைத்துறைச் செயலாளர் கண்ணன் இந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

அசோக்: யாழ்ப்பாணம், எந்த பிரதேசம் என்று தெரியவில்லை.

தேசம்: அவரும் ஒரு இடதுசாரி…

அசோக்: இடதுசாரி பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்.

தேசம்: பரந்தன் ராஜன் வெளியேறும்போது… நீங்கள் சொல்கிறீர்கள் பரந்தன் ராஜன் ஒரு தனிக் குழுவாக செயற்பட்டார் என்று.

அசோக்: தனிக் குழுவாக இல்லை. ராஜன் வெளியேறின பிற்பாடு முகாம்களுக்குள் அதிருப்தி அடைந்து வெளியேறின தோழர்கள் அனைவரும் ராஜனிட்ட பாதுகாப்புத்தேடி போயிட்டாங்க.

தேசம்: இந்தத் தோழர்கள் யாரும் தீப்பொறி குழுவோட போகல…

அசோக்: யாரும் போகவில்லை. முதலில் நம்பிக்கை வேண்டுமே. அவங்களோடு மிக நெருக்கமான நாங்களே அவங்களோடு போகவில்லை. தோழர்கள் எப்படி நம்பி போவார்கள். முதலில் தோழர்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும். ராஜன் ஆட்கள் அந்த நம்பிக்கையை கொடுத்தாங்க. அந்தக் காலகட்டத்தில் தான் நாங்களும் பின்தள மாநாட்டுக்கு போறோம்.

தேசம்: நாங்கள் என்னதான் தலைமைத்துவம் இடதுசாரி, அரசியல் இதெல்லாம் கதைத்தாலும் சரியான தலைமையை அந்த போராளிகளுக்கு கொடுக்க தவறி விட்டோம்.

அசோக்: எங்களிடம் நிறைய தவறுகள் இருந்திருக்கின்றன. புளொட்டின் ஆரம்ப உருவாக்கமே தனிநபர் விருவாசம், குழுவாதம் போன்றவற்றோடு தொடங்கியதுதான் எல்லா வீழ்ச்சிக்கும் காரணம். உங்கட இந்த விமர்சனம் எங்கள் எல்லோருக்கும் உரியது. நாங்கள் சரியான தலைமையை கொடுத்திருந்தால் அந்தத் தோழர்கள் எங்களை நம்பி வந்திருப்பார்கள். நாங்கள் சரியான தலைமையையும் கொடுக்கல்ல. தனி நபர்களாக கூட தோழர்கள் மத்தியில் எங்கள் மீது நம்பிக்கைகளை ஏற்படுத்த தவறிட்டம். இதுதான் ரகுமான் ஜான் தோழர் ஆட்களுக்கு நடந்தது. பிறகு பின்தளம் சென்ற பிறகு நாங்கள் என்ன செய்கிறோம் என்றால் டேவிட் ஐயாவை சந்திக்கிறோம். சரோஜினிதேவி, சண்முகலிங்கம், ஜூலி..

தேசம்: ஜூலி பற்றி சொல்லுங்கள் முதல் சொல்லப்படவில்லை என்று நினைக்கிறேன்…

அசோக்: ஜூலி வந்து காந்தியத்தில் வேலை செய்த ஒரு துணிச்சலான கருத்தியல் ரீதியில் வளர்ந்த தோழர். முதன் முதல் காந்தீயம் வவுனியாவில் நடாத்திய சத்தியா கிரக போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில் முக்கியமானவர். பொலிசாரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர். மாதகல் பிரதேசத்தை சேர்ந்தவர்.

தேசம்: இப்ப எங்க இருக்கிறா…

அசோக்: இப்ப திருமணம் செய்து. நான் நினைக்கிறேன் அவர்களுடைய சொந்த வாழ்க்கைக்கு போயிட்டாங்க. அப்போ முகுந்தன் மீது அதிருப்தி கொண்ட ஆட்கள் எல்லாரும் அங்க சந்திக்கிறோம். பின் தளத்திலிருந்த மத்திய குழு ஆட்களையும் சந்திக்கிறோம் நாங்கள். ராஜனை சந்திக்கிறோம். பாபுஜி, செந்தில், ஆதவன், சீசர், சேகர் அதாவது முகுந்தனோடு அதிருப்தியாகி மத்திய குழுவில் இருந்து இவங்களும் வெளியேறிட்டாங்க. முகுந்தனோடு இருந்தது கண்ணன், வாசுதேவா, கந்தசாமி, மாணிக்கதாசன், ஆனந்தி. 5 பேர் தான் முகுந்தனோடு இருந்தது. மிச்ச பேர் வெளியில் தான் இருக்கிறார்கள். தளமத்திய குழு நாங்க நாலு பேர் மற்ற முன்னரே வெளியேறி இருந்த சரோஜினி தேவி உட்பட முகுந்தனுக்கு எதிராக மொத்தம் 11 பேர் வெளியில் இருக்கிறம்.

தேசம்: செந்தில், சீசர், ஆதவன் எல்லாம் எங்க…

அசோக்: அவங்க அந்த நேரம் பின்தளத்தில் இருந்தவர்கள்.

அப்போ, வெளியேறின சென்ட்ரல் கமிட்டி உறுப்பினர்களை எல்லாம் சந்திக்கிறோம். அவங்க சொல்லுறாங்க நாங்கள் ஒரு சென்றல் கமிட்டி மீட்டிங்கை முதல் கூட்டவேண்டும் என்று. சென்றல் கமிட்டி மீட்டிங் போட்டு பின்தள மாநாடு நடத்துவது தொடர்பாக முகுந்தன் ஆட்களோடு கதைக்க வேண்டும் என்று. அதற்கிடையில் தளக்கமிட்டி முகுந்தனுடனும் வெளியில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டார்கள். ஓரளவு மாநாடு நடத்துவதற்கு முகுந்தன் ஒத்துக்கொண்டு, வெளியில் மாநாட்டை தடுப்பதற்கான எல்லா வேலைகளிலும் ஈடுபட்டு கொண்டிருந்தார். சின்ன சின்ன பயமுறுத்தல்கள் எங்களை தனி வீட்டில் தங்க வைத்து வெளித் தொடர்பில்லாமல் வைத்திருப்பது. இப்படி தொடர்ந்தது.

அப்ப நாங்க சொல்றம் மத்திய குழுவைக் கூட்ட வேண்டும் என்று. அப்போ முகுந்தன் ஒத்துக்கொள்கிறார். அப்போ மத்திய குழுக் கூட்டம் நடக்குது. அதுதான் கடைசியாக நடந்த மத்திய குழுக் கூட்டம் அதில் எல்லாரும் கலந்து கொள்கிறார்கள்.

அதுல நாங்கள் தளத்திலிருந்து போனவர்கள் 3 பேர். மற்றவர்கள் ராஜன், பாபுஜி, செந்தில், ஆதவன், சீசர், முகுந்தன், கண்ணன், கந்தசாமி, வாசுதேவா, மாணிக்கதாசன், ஆனந்தி அது ஒரு மிகப் பதட்டமான சூழலில் நடக்குது. நாங்கள் முதலில் முடிவெடுத்து விட்டோம் என்னவென்றால், இந்த சென்ற கமிட்டிக்கான பாதுகாப்பை தள செயற்குழு தளக் கமிட்டி இருக்குதானே அவங்களுடைய மேற்பார்வையில் இந்த மத்திய குழுக் கூட்டம் நடக்க வேண்டும் என்று. யாருமே ஆயுதம் கொண்டு வர இயலாது.

தளக் கமிட்டி இவங்கதான் மத்திய குழுக் கூட்டம் நடக்குற மண்டபத்தில் வெளியில் நிற்பார்கள். இவங்கதான் செக் பண்ணி விடுவார்கள் என்று சொல்லி. எங்களுக்கு ஒரு பயம் இருக்கும் தானே முகுந்தன் எங்களை மாநாட்டுக்கு கூப்பிட்டு ஏதாவது செய்யலாம் என்று.

தேசம்: அது யார் முகுந்தனோடு கதைத்து உடன்பட வைத்தது?

அசோக்: அது தள கமிட்டி. தள கமிட்டிதான் போய் சொன்னது சென்ட்ரல் கமிட்டியை கூட்ட வேண்டும் என்று. நாங்களும் ஒரு கடிதம் அனுப்பினோம் சென்றல் கமிட்டியை கூட்ட வேண்டும் என்று. அப்போ முகுந்தன் ஏற்றுக் கொண்டு சென்றல் கமிட்டியை கூட்டுவதற்கு சம்மதிக்கிறார். அதிலதான் பல்வேறு விவாதங்கள் நடக்குது. நாங்கள் பின் தள மாநாட்டை நடத்துவதற்கான அனுமதியை முகுந்தன் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறம்.

ஏனென்றால் பின்தள மாநாடு நடத்துவதற்கான எந்த சாத்தியத்தையும் முகுந்தன் தரவில்லை. அப்போ அதிலே நாங்கள் ஃபைட் பண்ணுவதற்குத் தான் போறோம். அங்க அந்த மத்திய குழுக் கூட்டத்தில் மிகப் கடுமையான விவாதம் நடந்தது. தள மாநாட்டையே முகுந்தன் ஏற்றுக் கொள்ளாத வகையில் தான் கதைக்கிறார். திட்டமிட்டு புளொட்டை தளத்தில் உடைத்ததாகவும், அதே போல் பின் தளத்தில் உடைக்க நாங்க முயலுவதாகவும் எங்கள் மீது குற்றம் சுமத்தினார்.

பிறகு சொன்னார் பின்தள மாநாட்டை நடத்துவதற்கான எல்லாத்தையும் தாங்கள் செய்கிறோம் என்று. நாங்கள் சொன்னோம் அதை நீங்கள் செய்ய இயலாது. மத்திய குழுவைச் சேர்ந்த எவரும் அதில் அங்கம் பெற முடியாது; தீர்மானிக்கவும் முடியாது. அதை தளக்கமிட்டீயும் முகாம்களில் இருக்கிற தோழர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமேயொழிய நீங்கள் தீர்மானிக்க இயலாது. குற்றம் சாட்டப்பட்ட உளவுத் துறை சார்ந்தவர்களும் தீர்மானிக்க இயலாது என்று. முகுந்தன் ஏற்றுக் கொள்ளவே இல்லை. பின்தள மாநாட்டை நடாத்தும் எண்ணமே முகுந்தனுக்கு இல்லை. அதற்கிடையில் சந்ததியார் படுகொலை, செல்வன் அகிலன் படுகொலை பற்றி எல்லாம் பிரச்சனை தொடங்கிவிட்டது.

தேசம்: இப்பிரச்சனைகளை யார் கேட்டது?

அசோக்: சந்ததியார் படுகொலை பற்றி ராஜனும், செல்வன், அகிலன் படுகொலை பற்றி நானும் கேள்வி எழுப்பினோம். இதுபற்றி சென்ற உரையாடலில் சொல்லி இருக்கிறன். எங்க மீது முகுந்தன் ஆட்கள் கடும் குற்றச்சாட்டை வைக்க தொடங்கினாங்க. புளொட்டை தளத்தில் உடைத்தோம். நிறைய குற்றச்சாட்டுகள் நேசன் ஆட்கள் வெளியேறியதை, ரீட்டா பிரச்சனை பற்றி தனக்கு நாங்கள் அறிவிக்கவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தள இராணுவப் பொறுப்பாளர் மெண்டீசிக்கு நாங்க ஒத்துழைப்பு கொடுக்கல்ல என்று சொல்லியும் முகுந்தன் எங்கள் மீது குற்றச்சாட்டு. முகுந்தனுக்கும் ராஜனுக்கும் பெரும் வாக்குவாதம். முகுந்தனிடம் இருந்து எந்தக் கேள்விக்கும் ஒழுங்கான பதில் இல்லை. கேள்வி கேட்பவர்களை குற்றம்சாட்டி கூட்டத்தை குழப்புவதிலேயே முகுந்தனும், முகுந்தன் சார்பானவர்களும் குறியாக இருந்தாங்க.

தேசம்: அதுல ஒரு உறுதியான முடிவும் இல்லை…

அசோக்: உறுதியான முடிவு இல்லை. கடும் முரண்பாட்டுடன் அந்த மத்திய குழு முடிந்தது…

தேசம்: தங்கள் மீதான எல்லா குற்றச்சாட்டையும் மறுத்துட்டாங்க…

அசோக்: அவங்க மறுத்துட்டாங்க. பின் தள மாநாடு நடத்தவும் உடன்படவில்லை. பிறகு முரண்பட்டு அதோட மத்திய குழு கூட்டம் முடியுது. அதுதான் புளொட்டினுடைய இறுதி மத்திய குழு கூட்டம். நாங்க கலந்து கொண்ட கூட்டம்.

தேசம்: 86 கடைசியில் நடந்தது…

அசோக்: இது வந்து எண்பத்தி ஆறு ஜூனில் நடக்குது. அப்போ நாங்கள் முரண்பட்டு வந்த பிற்பாடு, தளத்தில் இருந்து போன தளக் கமிட்டியும் அங்குள்ள மத்திய குழு உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு அறிக்கை ஒன்று வெளியிடுகிறோம். இனிமேல் நாங்கள் தான் புளொட் தொடர்பான உத்தியோகபூர்வமான முடிவுகளை எடுப்போம் என்றும் முகுந்தனுடன் புளொட் தொடர்பான எந்த விடயங்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறும், தளத்தில் இருந்து வந்த தள கமிட்டியும் பின் தளத்தோழர்களும் இணைந்து பின்தள மாநாட்டை நடத்தி அதற்கு ஊடாக தெரிவு செய்யப்படும் மத்தியகுழுதான், புளொட் அமைப்பின் உத்தியோக உத்தியோகபூர்வ நிர்வாகம் என்றும், எனவே புளொட்டின் பெயரில் யாரும் முகுந்தனுடன் தொடர்பு கொள்ளுவதை தவிர்த்துக் கொள்ளும்படியும் அறிக்கை வெளியிடுறோம்.

பெரிய ஒரு அறிக்கை. நிறைய விஷயங்கள் உள்ளடக்கியிருந்தது. அதுல நாங்கள் சைன் பண்ணுறோம். பிறகு தளத்திலிருந்து போன மத்திய குழு உறுப்பினர்களும் அங்குள்ள மத்திய குழு உறுப்பினர்களும் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிடுகிறோம்.

பிறகு நாங்கள் பின்தள மாநாட்டுக்கான ஆயத்த வேலைகளை செய்கிறோம்.

தேசம்: இப்ப புளொட்டில் இருக்கிற யாராவது உறுப்பினர்கள் அதில் இருந்திருக்கிறார்களா? ஆர் ஆர் அல்லது சித்தார்த்தன்.

அசோக்: இல்லை இல்லை ஒருவரும் இல்லை…

தேசம்: இப்ப புளொட்டின் தலைமையில் இருக்கிற ஒருத்தரும் அதுல இருக்கல?

அசோக்: இப்ப புளொட்டின் தலைமையில் யார் யார் இருக்கிறார்கள்?

தேசம்: சித்தார்த்தன் தலைவர். ஆர் ஆர் அதில் முக்கியமான உறுப்பினர் என்று நினைக்கிறேன்.

அசோக்: ஆர் ஆர் முகாமில் முக்கிய பொறுப்பில் இருந்து இருப்பார் என்று நினைக்கிறேன். சித்தார்த்தன் பெருசா தெரியல. சித்தார்த்தன் வெளிநாட்டிலிருந்து தொடர்பாளராக புளொட்டினுடைய மறைமுகமான வேலைகளுக்கு முகுந்தனின் பின்னால் அவர் இயங்கி இருப்பார் என்று நினைக்கிறேன். பணம், ஆம்ஸ் சம்பந்தப்பட்ட விடயங்களை கவனித்திருப்பார். புளொட்டுக்குள் எதுவும் உத்தியோகபூர்வமாக நடக்கவில்லை தானே. தனிநபர் ரீதியாகத்தான். முகுந்தன் சித்தார்த்தனோடையும், சீனிவாசனோடையும், லண்டன் கிருஷ்ணனோடையும் இப்படியான தனிப்பட்ட உறவைத்தான் பேணிக் கொண்டிருந்தார்.

சமூக விஞ்ஞானக் கல்லூரி (T3S) மாணவனும் முன்னாள் போராளியுமான க பிரேம்சங்கரின் ‘கழுதை சுமந்த கவிதை’ நூல் வெளியீடு

தனது பள்ளிப் பராயக் கனவை நனவாக்கும் வகையில் தனது வாழ்க்கை அனுபவங்களை சிறு கவிதைகளாக தொகுத்து ‘கழுதை சுமந்த கவிதை’ என்ற தலைப்பில் வெளியிடுகின்றார் கவிக்கூத்தன் க பிரேம்சங்கர். இளம் பிராயம் முதல் அவர் கிறுக்கிய கவிதைகளை அவர் தனது பதின்ம வயதிலேயே வெளியிட ஆசைப்பட்டாலும் இப்போது தான் அது சாத்தியமாகியுள்ளது. “தொலைக்கப்பட்ட எழுத்துக்களை தோண்டி எடுக்கிறேன் நெஞ்சு வலிகளோடு வருகின்றது…” என்று அவர் இந்நூல் பற்றிய குறிப்பில் பதிவு செய்கின்றார்.

நூல் வெளியீடு பற்றிய விபரம்:
காலம்: January 23, 2022
நேரம்: மாலை 4:00 மணி முதல் 7 மணி வரை
இடம்: London Ayyappan Temple Hall, 36 Masons Avenue, Harrow, HA3 5AR

யாழ் சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியும் பின் யாழ் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியும் கற்ற கவிக்கூத்தன் பிரேம்சங்கர் எண்பதுக்களில் எழுச்சி பெற்ற விடுதலையுணர்வால் உந்தப்பட்டு தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணிக்க முன் வந்த ஆயிரம் ஆயிரம் இளைஞர்களில் ஒருவர். தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து கொண்ட க பிரேம்சங்கர், சென்னையில் உருவாக்கப்பட்ட சமூக விஞ்ஞான கல்லூரியில் சமூக அரசியல் பொருளாதாரம் கற்றவர்.

அனுவம் என்பதே அறிவு. அந்த வகையில் க பிரேம்சங்கரின் வாழ்க்கை அனுபவம் என்பதும் ஒரு அருமையான புத்தகமாக அமையும். அதனை சிறு கவிதைகளாக தொகுத்து இருப்பது அவருடைய வாழ்வின் பிரதிபலிப்பாக அமையும் என்பதில் ஐயம்மில்லை. “பல இளமைக்காலக் கவிதைகள் தொலைந்தாலும்… முதுமையில் மீண்டும் முத்துக்குளித்திருக்கிறேன்” என்று இந்நூல் உள்ளடக்கம் பற்றி குறிப்பிடுகின்றார். “கற்பனை, நிசம் அனுபவமாகின்றது! இங்கு வரிகளாகிறது” என்று குறிப்பிடும் அவர் “நரை விழுந்த காலம் என்றாலும் உரைக்கிறது எழுதுகோல்” என்று தான் இந்நூலை கொண்டுவந்ததன் பின்னணியைக் குறிப்பிடுகின்றார்.

கவிக்கூத்தன் க பிரேம்சஞ்கரும் எனது சகோதரனும் சமூக விஞ்ஞானக் கல்லூரியில் – Thamileelam Social Science School (T3S) ஒன்றாகக் கற்றவர்கள். உற்ற நண்பர்கள். அதனால் நான் லண்டன் வருவதற்கு முன்னரே குடும்ப நண்பரானவர். லண்டன் வந்தபின் அந்த சகோதரத்துவமும் நட்பும் இன்றும் நிலைக்கின்றது.

கவிக்கூத்தன் க பிரேம்சஞ்கரின் வாழ்க்கை அனுபவம் என்பது பன்முகப்பட்டது. படைப்புகள் ஆக்க இலக்கியங்கள் அக்காலத்தினை பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடிகள். அந்த வகையில் இந்தக் ‘கழுதை சுமந்த கவிதை’ நூல் எமது வரலாற்றின் ஒரு கூறைச் சுமந்து வரும் என்ற ஆவலோடு இந்நூல் வெளியீட்டில் கலந்துகொள்ள உள்ளேன். கவிக்கூத்தன் க பிரேசம்சங்கர் வெவ்வேறு படிநிலைகளில் தன் வாழ்வைக் கடந்து செல்கின்றார். ஒரு துடிப்புள்ள இளைஞனாக போராளியாக பிற்காலத்தில் ஆன்மீகத்தின் வழித்தடங்களில் என்று அவருடைய பயணம் தொடர்கின்றது. நிச்சயமாக ‘கழுதை சுமந்த கவிதை’ எம்மைச் சிந்திக்க வைக்கும்.

நூல் வெளியீடு பற்றிய விபரம்:
காலம்: January 23, 2022
நேரம்: மாலை 4:00 மணி முதல் 7 மணி வரை
இடம்: London Ayyappan Temple Hall, 36 Masons Avenue, Harrow, HA3 5AR

 

 

உட்கட்சிப் போராட்டத்துக்காக தள கொமிட்டி பயணம்! பின்தளத்தில் பரந்தன் ராஜன் வெளியேற்றம்!!! – பாகம் 25:

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 25 (ஒளிப்பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 25

தேசம்: தளத்தில் மாநாடு முடிந்து நீங்கள் 17 பேர் போறதுக்கு தெரிவு செய்யப்படுகிறீர்கள். என்ன மாதிரி அந்தப் பயணம் அமைந்தது? எப்படி போனீர்கள் எல்லாரும்? எல்லாரும் ஒன்றாக போனீர்களா அல்லது வெவ்வேறு படகுகளில் …

அசோக்: எல்லோரும் ஒன்றாகவே பயணம் செய்தோம் தளக் கமிட்டி 17 பேர், சென்றல் கமிட்டீ நாலு பேரில் தோழர் முரளி எங்களோடு வரவில்லை. அவருக்கு தனிப்பட்ட சில அலுவல்கள் இருந்ததால அதை முடித்துக் கொண்டு பின் தளம் வருவதாக சொல்லி இருந்தார். மற்ற படைத்துறைச் செயலாளர் கண்ணன், டெலோ பொபி, சந்திரன் பாதுகாப்புக்கு இரண்டு பேர். அதில் ஒருவர் டேவிட்.

தேசம்: டேவிட் கிருஷ்ணன்

அசோக்: ஓம். அவர்தான்.

தேசம்: டேவிட் கிருஷ்ணன் எந்த ஊரைச் சேர்ந்தவர்.

அசோக்: அது தெரியல எனக்கு. பின் தளத்தில்தான் இருந்தவர். இப்ப இங்க பிரான்சில்தான் இருக்கிறார். பயிற்சி பெற்றதற்கு பிறகு புதுக்கோட்டை பயிற்சி முகாமில் நிர்வாகப் பொறுப்பாளராக இருந்தவர் என்று நினைக்கிறேன். பின் தளத்தில் நடந்த நிறைய விஷயங்கள் அவருக்கு தெரியும். ஏனென்றால் நிறைய பேருடன் உறவு வைத்திருந்தவர்.

தேசம்: இந்தக் காலகட்டத்திலும் நிறைய பேருடன் தொடர்பில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அசோக்: புதுக்கோட்டை பயிற்சி முகாமில் 2 பேர் இருந்தவர்கள். இவர் ஒன்று மற்றது அகஸ்டின் ஜெபமாலை என்று சொல்லி ஜீவா. அவர் பயிற்சி பொறுப்பாக இருந்தவர். அவர் இப்ப ஜெர்மனியில் இருக்கிறார்.

தேசம்: அகஸ்டின் ஜெபமாலை?

அசோக்: அவரும் அம்பாறை மாவட்டபுளொட் பொறுப்பாளராக நான் இருந்த காலத்தில் தளத்தில் இருந்தவர்.

தேசம்: இந்தப் பயணம் என்ன மாதிரி போயிட்டு. எல்லாரும் ஒன்றாக போகிறீர்களா? என்ன மாதிரி?

அசோக்: இது ஒரு மோசமான பயணம். மன்னாரில் இருந்து நாங்கள் ஸ்பீட் போட்டில் போறது என்றுதான் முடிவெடுத்தது. ஸ்பீட் போட் கிடைக்கவில்லை எங்களுக்கு. மாதகலிலிருந்து போற பயணங்கள் ஒரு அளவுக்கு பாதுகாப்பானது. ஸ்பீடு போட்டில் போயிடலாம். மன்னாரில் ஸ்பீட்போட் கிடைக்காதபடியால் ரெண்டு மூன்று நாள் அங்கு தங்கிட்டம். ஸ்பீட் போட் தேடிக்கொண்டு. அந்த நேரம் புளொட் பெருசா அதிலே இண்ட்ரஸ்ட் காட்டேல எங்களுக்கு போட் தாறதில. பிறகு தனியார் படகு ஒன்று எடுத்து ரோலர் எடுத்துதான் நாங்கள் மன்னாரிலிருந்து கிளம்புறோம்.

தேசம்: 17 பேரும் ஒன்றாக தான் போகிறீர்கள் எத்தனை பேர் எல்லாமாக பாதுகாப்புக்கு வந்தவர்கள்…

அசோக்: எல்லோருமாகச் சேர்ந்து 25 பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பெரிய ரோலர் மீன்பிடி ரோலர் தெரியும் தானே. ஆனா ஸ்பீடா போகாது. மிக ஸ்லோவாக தான் போகும். பெரிய ஆபத்தான பயணம் இது. ஏனென்றால் எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. ரெண்டே ரெண்டு துப்பாக்கிகளோடுதான் அங்க பாதுகாப்புக்கு வந்தவங்க என்று நினைக்கிறேன். அடுத்தது பகல் நேரப்பயணம். ஆபத்தானது.

தேசம்: கடற்படை வழிமறிச்சா சிக்கல் தான் என?

அசோக்: நேவியின் அந்த அந்த ஸ்பீடுக்கு இவங்களால ஓட இயலாது. ரெண்டு மணிக்கு கிளம்பினாங்க .ரோலர் ஓடியோடி போய் இரவு பட்டபின் சேர்ந்து விட்டோம். அதிர்ஷ்டவசமாக போய் சேர்ந்து விட்டோம்

தேசம்: இவ்வாறு தான் இந்த பயணங்கள் அமைகிறதா? 25 பேர் ஒரே நேரத்தில போறது என்பது…

அசோக்: அப்படி ரோலரில் போறது முட்டாள்தனமான வேலை. யாழ்ப்பாணத்திலிருந்து தோழர்களை பயிற்சிக்கு அனுப்பும்போது ஸ்பீட் போட்டில்தான் அனுப்புவோம். அந்த நேரத்தில் யாழ்ப்பாண கரையோரங்கள் டெலோ – எல் ரீ ரீ ஈ பிரச்சனைகளால் புலிகளின்ற கண்காணிப்பு இருந்தது. டெலோ தோழர்களை கொண்டு பயணம் செய்வது ஆபத்தானது. அத்தோட நாங்களும் தனியப்பயணம் செய்ய தயங்கினோம். புலிகள் ஏதும் செய்வார்கள் என்ற பயம் இருந்தது.

தேசம்: ஏன் அந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஸ்பீட்போட் எடுக்க முடியாமல் போனது?

அசோக்: அந்த நேரத்தில் மன்னாரில் புளொட்டிலும் பெரிய ஸ்பீட் போட் இல்லை என்று நினைக்கிறேன். புளொட்டில் கேட்டபோது அந்த நேரத்தில் தங்களிடம் ஸ்பீட்போட் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அடுத்தது நாங்கள் உட்கட்சிப் போராட்டம் நடத்த, பின் தள மாநாடு நடத்த பின் தளம் போகிறோம். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தேசம்: ஆனால் கண்ணனும் வந்தது அதில். கண்ணனுக்காகவாது பாதுகாப்பு கொடுக்குற முயற்சியை அந்த நேரம் மேற்கொண்டிருக்கலாம். ஒன்றுமே இல்லை. கண்ணன் தானே படைத்துறைச் செயலாளர்?

அசோக்: கண்ணன் படைத்துறைச் செயலாளர் அவருக்கே இந்த நிலை என்றால்…

தேசம்: அப்போ அவ்வளவு மோசமான போக்கு ஒன்று இருந்திருக்கு. என்ன சொல்லுறது …

அசோக்: ஒரு சுவாரசியமான விடயம் சொல்ல வேண்டும். நாங்கள் தளமாநாட்டில் பின்தள படுகொலைகள் பற்றி பின்தள செயற்பாடுகள் பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம் தானே, அப்போ கண்ணன் கொலைகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சொல்லியும் எங்களுடைய எல்லாத் தீர்மானங்களையும் ஏற்றுக் கொண்டவர்.

தேசம்: அதற்கு பின்பு வருவோம் நாங்கள். இப்ப போட்ல போய்ச் சேர்ந்துவிட்டீர்கள். போய் சேர்ந்தா எப்ப மாநாடு நடக்குது? போட்டுக்குள்ள ஏதாவது கருத்து பரிமாற்றங்கள்?

அசோக்: அந்தப் பயணம் மோசமான பயணம் என்றாலும் மிகவும் கலகலப்பான பயணம். எல்லோரும் ஒத்த கருத்துக் கொண்ட தோழர்கள்தானே. கண்ணனும் கூட எங்களோடு உடன்பாடு கொண்டவராகத்தான் இருந்தார். தள மாநாட்டில் எங்களுடைய கருத்துடன் முழுக்க முழுக்க உடன்படுகிறார். புளொட்டுக்குள்ள படுகொலை நடந்தது என்று சொல்லியும் படுகொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சொல்லியும் அதற்கு முழுக்க முழுக்க உமா மகேஸ்வரனும் உளவுத்துறையும் சங்கிலியும் தான் பொறுப்பு என்று சொல்லியும் ஒத்துக்கொண்டார்.

தேசம்: அவர் ஒத்துக் கொண்டது படகுக்குள்ள நடந்த உரையாடலிலா?

அசோக்: இல்லை இல்லை தளமாநாட்டில் பப்ளிக்கா. தள மாநாட்டில் நாங்கள் வைத்த குற்றச்சாட்டுகள் இருக்குதானே தலைமை மீது. அதற்கு முகாமில் நடந்த கொலைகளுக்கு தனக்கு தொடர்பில்லை என்று சொல்லிட்டார். தனக்கு தொடர்பு இல்லை என்று சொல்லியும் கட்டாயம் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியும், பின் தளத்தில் ஒரு மாநாடு நடத்தப்பட வேண்டும் என்ற எங்க நிலைப்பாட்டிக்கு ஆதரவு கொடுத்தவர்.

தேசம்: அப்போ அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர் படைத்துறைச் செயலாளர் தானே…

அசோக்: அவருக்கு எந்த அதிகாரமும் பின் தளத்தில் இல்லை.

தேசம்: அவர் வெளியேறியவர்கள் பற்றி என்ன அபிப்பிராயம் வைத்திருந்தவர்?

அசோக்: நாங்க வெளியேறினதற்குப் பிறகு, பின் தளத்தில் நிறையத் தடவைகள் நான் சந்தித்திருக்கிறேன் கண்ணனை. இயக்கம் தொடர்பாக முழுக்க முழுக்க அதிருப்தியோடு தான் இருந்தவர். நாங்க வெளியேறியது தொடர்பாக அவருக்கு மனவருத்தமும் விமர்சனங்க களும் இருந்தன.

ரகுமான் ஜான், கேசவன் நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்திருந்தால் ஒரு ஆரோக்கியமான போராட்டத்தை ஆரம்பித்து நடத்தி இருந்தால் இயக்கத்தை சரியான வழிக்கு கொண்டு வந்திருக்கலாம் என்ற அபிப்பிராயம் அவரிடம் இருந்தது.

தேசம்: உண்மையிலேயே ஆரோக்கியமான சக்திகள் நிறைய பேர் இருந்தும் அந்த ஆரோக்கியமான சக்திகளுக்கு இடையில் ஒரு…

அசோக்: ஒருங்கிணைப்பு இல்லை. உரையாடலும் நடக்கலை. ஏனென்றால் கண்ணன் நிறைய அதிருப்தியோடு இருந்தது எனக்கு தெரியும். தனிப்பட்டமுறையில் என்னோடு கதைப்பார். ஆனால் வெளிப்படையாக கதைக்க மாட்டார். தன்னுடைய படைத்துறைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு தானும் கொலைசெய்யப்படலாம் என்ற பயம் இருந்தது. பின் தளத்தைப் பொறுத்தவரை உங்களுடைய பதவி என்பது வெறும் பொம்மை. படைத்துறை செயலாளராக இருந்தால் என்ன, அரசியல் துறைச் செயலாளராக இருந்தால் என்ன முகுந்தனும் அவருடைய உளவுத்துறையும் நினைத்தால் யாரையும் கொலை செய்யலாம். அங்க அதிகாரம் என்பது உளவுத் துறைக்கும் முகுந்தனுக்குமானது தான்.

தேசம்: இல்லை பொதுவாக இந்த ராணுவ கட்டமைப்புகளை பார்த்தீர்கள் என்றால் இப்படியான இந்த அதிகாரங்கள் வந்து குவியுறது குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தான் நடக்கும். ஒரு அமைப்பு வந்து மெது மெதுவாக வளர்ச்சியடைந்து பெரிய அமைப்பாக வரேக்க சில ஆண்டுகளுக்குப் பிறகு அது கொலை இயந்திரமாக மாறும். இது நீங்கள் ஐந்து பேர் சேர்ந்து தொடங்குகிறீர்கள். அது பார்த்தா ஆறு மாதத்திலேயோ ஏழு மாதத்திலேயோ நீங்கள் கொலைஞர்களாக மாறுகின்றீர்கள் என்றால் இது ஒரு பெரிய கால இடைவெளி இல்லை தானே.

அசோக்: கால இடைவெளி என்றால்…

தேசம்: 83 க்கு பிறகு தானே இது எல்லாம் ஆரம்பிக்குது.

அசோக்: எண்பத்தி நான்கு நடுப்பகுதி…

தேசம்: எண்பத்தி நான்கு நடுப்பகுதி என்றால் கிட்டத்தட்ட ஆறு, ஏழு மாதத்திற்குள்ளேயே இந்தப் பிரச்சினை வருது. இத்தனைக்கும் புளொட்டுக்குள்ள ஆயுதமும் இருக்கேல. ஆயுதம் வந்து ஒரு கொஞ்ச காலம் தான். மற்றது இதுக்குள்ள இருந்த ஆட்கள் எல்லாம் ஏதோவொரு வகையில் பயிற்சி எடுத்தவர்கள் ஒத்த சிந்தனையோடு இருந்தவர்கள். இவர்களுடைய அக்கறையின்மையா இத்தனைக்கும் காரணம்?

அசோக்: நீங்கள் சொல்லுவது சரி. முழுவதும் ஏற்றுக் கொள்கிறேன். ஆரம்ப காலத்திலேயே சின்ன சின்ன அதிருப்திகள் முரண்பாடுகள் பிரச்சனைகள் வரேக்கையே பேசித் தீர்த்திருக்க வேண்டும். நான் முதலே சொல்லிருக்கிறேன் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஆரோக்கியமான உரையாடல் அவசியம். அந்த உரையாடல் இருக்கல. முரண்பட்ட உடனே முரண்பாடு கூர்மையடைந்து கொண்டு போனதேயொழிய தீர்ப்பதற்கான எந்த வழியும் இல்லை .ஏனென்றால் முரண்பாட்டுக்கு ஊடாக குழு வாதம் உருவாகிவிட்டது. அந்தக் குழு வாதம் எங்க உருவாகுதோ அங்க முரண்பாடுகள் பெரிதாகும்.

முதல்ல எல்லா பேரும் ஒரு சினேகபூர்வமாக வாற முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான உரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள் என்றால் அங்க இந்த உளவுத்துறையினுடைய அதிகாரம், நடவடிக்கைகளை எல்லாத்தையும் கட்டுப்படுத்தி இருக்கலாம். இந்த உரையாடலில் இதைப்பற்றி முன்னமே நிறைய கதைச்சிருக்கம்.

தேசம்: இந்த பிரச்சனைக்காக தானே பிரபாகரனில் இருந்து இவர்கள் வெளியில வாறினம்.

அசோக்: பிரபாகரன் மீது அதாவது புதிய புலிகள் பிறகு புதிய பாதை பிறகு விடுதலை புலிகள் பிறகு புளொட் இந்த வரலாற்றை பார்த்தீர்களென்றால் எல்லாம் ஒரு வரலாற்றுப் பின்னணியோடு தான் வருது. அரசியலற்ற ஒரு தனிநபர் பயங்கரவாத கண்ணோட்டத்தில் தான் உருவாக்கம் பெறுகிறது. இந்த தனிநபர் பயங்கரவாதத்தை யார் முன்னெடுத்து செய்றது, யாரிடம் அந்த அந்த அதிகாரம் இருக்கு என்பதுதான் பிரச்சனையேயொழிய எல்லா வகையிலும் நாங்கள் வரலாற்றை பின்னோக்கி பார்த்தோமென்றால் எங்களுடைய போராட்டம் என்பது தனிநபர் பயங்கரவாதத்தின் ஊடாகத்தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கு. எந்த அரசியலும் இல்லை. எந்தவொரு ஜனநாய அமைப்பு வடிவங்களும் இருக்கவில்லை.

தேசம்: ஏனென்றால் புளொட்டில் இருந்த இந்த தலைமைகளைப் பார்க்க இவர்களுக்கு விடுதலைப் புலிகளையோ பிரபாகரனையோ விமர்சிக்க எந்த ஒரு தார்மீக நியாயம் இருக்கிறதா தெரியவில்லை. ஏனென்றால் கிட்டத்தட்ட அதே போக்கைத் தான் கடைப்பிடிக்கினம் பிறகும்.

அசோக்: அதிகாரம் கிடைத்தால் புளொட்டும் ஒன்றுதான் புலிகளும் ஒன்றுதான். புளொட் தத்துவார்த்த கோட்பாட்டோடு கொலை செய்திருப்பார்கள். புலிகள் தத்துவார்த்த கோட்பாடற்று கொலை செய்திருப்பார்கள். எங்களுக்கு முலாம் பூசுவதற்கு ஒரு தத்துவார்த்த கோட்பாடு இருந்தது தானே சில நேரம் கொலைகளை செய்து போட்டு தத்துவ முலாம் பூசியிருப்போம்.

தேசம்: ஆனால் சங்கிலியன் செய்த படுகொலைக்கு நீங்கள் எப்படி அந்த தத்துவக் கோட்பாட்டை பாவிக்கிறது?

அசோக்: அதுதான் முகுந்தனின் சாணக்கியம். தோழர் சந்ததியாரை கொலை செய்து விட்டு இந்தியாவுக்கு எதிரான ஆள் என்று ரோவிடம் போட்டுக் கொடுத்தார். உண்மையில் முகுந்தன் தொடர்பாக ஒரு நேர்மையான விமர்சனம் வைப்போமானால் அவரை மாத்திரம் குற்றம் சுமத்த முடியாது. முகுந்தன் விசுவாசிகளாக இருந்த பலர் இந்த கொலைகளை நியாயப்படுத்த முகுந்தனுக்கு உதவினாங்க. உதாரணமான டெல்லியிருந்து ரோவுக்கும் புளொட்டிக்கும் டபுல் ஏஜென்சியாக இருந்தவர்கள் முக்கியமானவர்கள். புளொட்டின் அழிவுக்கு இவர்களும் ஒரு காரணம். பிறகு இது பற்றி கதைப்பம்.

தேசம்: இந்த மாநாட்டை சொல்லுங்கள். நீங்கள் போய் எத்தனை நாளில் மாநாடு நடந்தது? அல்லது நீங்கள் போக உங்களுக்கான வரவேற்பு…

அசோக்: வரவேற்பு பெரிய சந்தோசமாக இல்லை. நாங்கள் போய் மன்னாரில் இருந்து வேதாரணியத்துக்கு போறோம். அங்கிருந்து ஒரத்தநாட்டிக்கு போறம். அங்க போன உடனே தளத்தில் இருந்து வந்த 17 பேருக்கும் மத்திய குழு உறுப்பினர்களுக்குமான பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. அது வந்து ஒரத்த நாடு புளாட் ஆபீஸ் இருக்குக்கும் இடத்திலிருந்து ஏழெட்டு கிலோ மீட்டர் உள்ளுக்க இருக்கிற கிராமத்தில் நாங்க தங்குவதற்கு ஒரு இடம் ஒழுங்கு பண்ணி தந்தாங்க. அங்கு பஸ் போக்குவரத்து ஒன்றுமில்லை. ஒரு நாளைக்கு ஒன்று வரும். அந்த கிராமத்தில வீடொன்று எடுத்து எங்களை தங்க வைத்து, எங்களுக்கு பாதுகாப்பு என்ற போர்வையில் கடும் கண்காணிப்பு.

தேசம்: யார் உங்களுக்கு பாதுகாப்பு தந்தது…

அசோக்: அது சங்கிலி ஆட்கள்தான் போட்டது. ஆனால் எங்களுக்கு தெரியும் அது எங்களுக்கான ஒரு பொறி , எங்களை கண்காணிக்க உளவுத் துறையால் போடப்பட்டது என்று. அங்க இருந்து ஒவ்வொரு குரூப்பா ஐந்து பேர் ஆறு பேர் சேர்ந்து முகாம்களுக்கு போவதற்கான அனுமதி கேட்டனாங்கள். முதல்லில் முகுந்தன் அனுமதி தரவில்லை. பிறகு சில நாட்களுக்கு பிறகு அனுமதி தந்தார். தள செயற்குழுவும் நாங்களும் போய் முகாம்களை பார்வையிடலாம் என. முகாம்களுக்கு போய் முகாம்களை பார்வையிட்டு நாங்கள் தளத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று தளத்தில் நடந்த மாநாட்டு பிரச்சனை எல்லாம் சொல்லி, இங்கே ஒரு தள மாநாட்டுக்கான ஆயத்தங்களை செய்ய வேண்டும் என்று சொல்லி விளங்கப்படுத்துகிறோம். தோழர்கள் எங்களின் கருத்துக்களுக்கு மிகுந்த ஆதரவு காட்டினாங்க…

தேசம்: அதற்கு உமாமகேஸ்வரன் அனுமதி கொடுத்தவரா?

அசோக்: உமாமகேஸ்வரன் முகாம்களைப் பார்வையிட மட்டும்தான் அனுமதி கொடுத்தது. முகாம்கள் தொடர்பாக அதிருப்தி இருந்தது தானே. அப்போ முகுந்தன் சொல்லுச்சு உங்களுக்கு அதிருப்தி இருந்தால் நீங்கள் போய் பார்க்கலாம் அங்க எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்று. முகுந்தன் எதிர்பாக்கல தளத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இங்க போய் ஒரு பிரச்சாரமாக மேற்கொள்ளுவோம் என்று.

தேசம்: அது ஓரளவுக்கு எதிர்பார்க்கக் கூடியது தானே அவ்வளவு முட்டாள் இல்லை தானே முகுந்தன். ஒன்றில் அவர் சொல்லி இருக்க வேண்டும் நீங்கள் ஒருத்தரும் கதைக்கக் கூடாது என்று. அப்படி சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. அப்ப அவர் எதிர்பார்த்து தானே இருப்பார்.

அசோக்: எதிர்பார்த்தாரோ தெரியாது, ஆனால் அதற்குப் பிறகு முகாம்களுக்கு போவதற்கான தடை வந்துவிட்டது. அந்த நேரத்தில் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறிட்டார்கள் தானே. வெளியேறினதற்குப் பிறகு முகாங்களுக்குள் கதை பரவிட்டது இவங்க ஒரு குரூப் வெளியேறிவிட்டார்கள் என்று. அதற்கு பிறகு ராஜனோடு ஒரு குரூப் உடைந்து போய்விட்டது. தளப்பிரச்சனைகள் பற்றி தோழர்களுக்கு பெரிசாக தெரிந்திருக்கவில்லை.

தேசம்: பரந்தன் ராஜன்…

அசோக்: ஓம். ராஜன் பாலஸ்தீன பயிற்சி முடித்து வந்த பின் பின்தள நிலைமையை பார்த்து முகுந்தனோடு கடும் பிரச்சனை. முக்கிய பிரச்சினை என்று கேட்டால் காக்கா சிவனேஸ்வரன் என்று உடுவிலைச் சேர்ந்த தோழர் படுகொலை பற்றி …

தேசம்: அவர் எப்ப படுகொலை செய்யப்பட்டவர்?

அசோக்: சரியாக காலம் ஞாபகம் இல்லை. இந்த கொலை சந்ததியார் கொலைக்கு முன்னமே நடந்துவிட்டது.

அப்போ ராஜன் கடும் பிரச்சினை. ஏனென்றால் ராஜனுக்கு மிகத் தெரிந்த நெருங்கிய தோழர் அவர். பிறகு ராஜனுக்கும் முகுந்தனுக்கும் நிறைய முரண்பாடுகள் வருகிறது. ஒரு கட்டத்தில் ராஜன் வெளியேறி விடுகின்றார். காலப் போக்கில் ராஜனோடு நிறையதோழர்கள் வெளியேறிப் போயிற்றாங்க. நாங்கள் பின்தளம் போகும்போது ராஜனோடு 300-350 தோழர்கள் கேம்பிலிருந்து வெளியேறிவிட்டார்கள்.

மத்தியகுழு உறுப்பினர்களான ஆதவன், செந்தில், பாபுஜீ மற்ற முக்கிய தோழர்களும் குறிப்பா PLO ராஜா, PLO காளித் ஐயா, விஜி, மெக்கன்ரோ, சுரேஸ் போன்றவர்களும் ராஜனோடு சென்றுவிட்டார்கள். முகாம்களில் தோழர்கள் பெரும் குழப்பத்தோடுதான் இருந்தாங்க. புளொட்டை விட்டு முன்னரே வெளியேறி இருந்த டேவிட் ஐயா, சரோஜினிதேவி, சண்முகலிங்கம், யூலி, துளசி, தங்கராஜா தோழர் இவங்க எல்லோரும் ராஜனுக்கு சப்போர்ட்பண்ணிக் கொண்டிருந்தாங்க.

பிரிடிஸ் இளவரசராக இருந்தால் என்ன பிரதமரக இருந்தால் என்ன எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியுமா!!!

               Photo by Nils Jorgensen/REX 

வழமைபோல் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது தைப்பொங்கள் வாழ்த்துக்களை ‘வணக்கம்’ என்று ஆரம்பித்து ‘நன்றி’ என்று கூறி முடித்தார். அவருடைய 100 செக்கன்கள் கொண்ட வாழ்த்துச் செய்தியில் பெரும்பாகம் கோவிட் கால நடைமுறைகளை மீள ஞாபகப்படுத்தி அதன்படி தைப்பொங்கலை கொண்டாடும்படி கேட்டுக்கொண்டார். தமிழர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் கோவிட் நடைமுறைகளை அடிக்கடி ஞாபகப்படுத்தும் பிதரமர் தனக்கென்று வரும்போது அவற்றை மறந்துவிடுகின்றார். இந்த தமிழ் புதுவருடமோ ஆங்கிலப் புதுவருடமோ நமக்கெல்லாம் எப்படி அமையப் போகிறதோ இல்லையோ பிரதமர் பொறிஸ்க்கும் பிரித்தானிய மகாராணி எலிசபத்தின் செல்ல மகன் அன்ரூவுக்கும் அட்டமத்தில் சனி ஆரம்பித்துவிட்டது.

பிரதமர் பொறிஸ் ஒரு கவர்ச்சிகரமான அரசியல்வாதி. வாயாலேயே சுடச்சுட வடை சுட்டுத்தரும் வல்லமை அவருக்கு உண்டு. அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே ‘அவுன் ரெடி’ டீல் இருப்பதாக மக்களை ஏமாற்றியவர். பதவிக்கு வந்து இவ்வளவு காலமாகிவிட்டது இன்னமும் அந்த இழுபறி முடிந்தபாடில்லை. பொதுவாகவே பிரித்தானிய பிரதமர் நாட்டு மக்களோடு கதைக்கின்ற போதோ அல்லது நாட்டு தலைவர்களோடு கதைக்கின்ற போதோ கூட உள்ளடக்கம் இல்லாமல் நுனிப்புல் மேயும் போக்கிலேயே பேசுவார். அவருடைய உரைகளில் உள்ளடக்கம் மட்டுமல்ல உண்மையும் இருப்பதில்லை என்பது பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆனால் அவரது பதவியை பாதிக்காத விடயமாக இதுவரை இருந்தது. இவர் தமிழ் மக்களுக்கு தலைவராகவோ அல்லது ஆசிய நாடுகள் ஒன்றின் தலைவராகவோ இருந்திருந்தால் அவருடைய மரணம் வரை அவர் தலைவராக இருந்திருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். நிறம் மட்டும் திராவிட நிறமாக இருந்திருந்தால் பொறிஸ் தமிழர்களுக்கே தலைவராகி இருக்க முடியும்.

துரதிஸ்டவசமாக பொறிஸ் பிரித்தானிய பிரதமராக இருப்பதால் அவருடைய அண்மைய எதிர்காலம் அவ்வளவு இலகுவானதாக இருக்கப் போவதில்லை. மக்கள் பிரித்தானியாவின் பின்னடைவுக்கு ஐரோப்பிய ஒன்றியமே காரணம் என நம்பவைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் மதில் மேல் பூனையாக நின்ற அன்றைய பொறிஸ் பின்னர் பிரதமர் பதவிக்கு வருவதற்கு கொன்சவேடிவ் கட்சியின் அடிப்படைவாதத்தை ஏற்றுக்கொள்வதே சரியெனத் தெரிவுசெய்து, ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா வெளியேறினால் சுபீட்சம் வந்துவிடும் என்று பிரச்சாரம் செய்து, 2016 கருத்துக்கணிப்பில் வெற்றி பெற்று, பின் 2019இல் பிரதமரும் ஆனார்.

அவர் பிரதமராகி ஓராண்டுக்கு உள்ளாக கோவிட் தலைவிரித்தாடியது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் பிரதமர் பொறிஸ் ஒரு காத்திரமான தலைவர் அல்ல. அவருக்கு மக்களைக் கவர்ந்து அவர்களது வாக்குகளைக் கவர்ந்து ஆட்சிக்கு வர முடியுமேயொழிய ஆட்சியை திறம்பட நடத்தும் ஆற்றலும் பொறுப்புணர்வும் இருக்கவில்லை.

அவருடைய பொறுப்பற்ற முடிவுகளால் குறிப்பாக மிக்க காலதாமதமாக முதலாவது லொக்டவுன் கொண்டுவரப்பட்டது முதல் பல அடுத்தடுத்த தவறுகளால் முதல் ஆண்டில் பிரித்தானியாவிலேயே அதன் மக்கள் தொகைக்கு கூடுதலான மக்கள் கோவிட்-19 இல் கொல்லப்பட்டனர். இந்த கோவிட் காலத்தில் பிரித்தானிய பெற்றுக்கொண்ட கடன் தொகை 200 பில்லியன் பவுண்கள். பிரதமர் பொறிஸின் நட்பு வட்டங்களில் இருந்த நிறுவனங்கள் கோவிட் பாதுகாப்பு அங்கிகளை இறக்குமதி செய்வதற்கு அங்கிகாரம் வழங்கி, அதற்கு செலுத்தப்பட்ட லஞ்சம், வாங்கப்பட்ட கடனில் 10 வீதம் 20 பில்லியன் பவுண்கள்.

இவையெல்லாம் போதாது என்று 2021 ஏப்ரலில் புதிய பிரளயம். பிரதமர் பொறிஸ் தனது வீட்டை அழகுபடுத்துவதற்கு கட்சிக்கு நன்கொடை வழங்கும் ஒருவர், அவர் பிரபுக்கள் சபைக்கு தெரிவானவர், அதற்கான செலவு 200,000 பவுண்களை செலுத்தி இருந்தார். அதனை அந்த நபர் இலவசமாகச் செய்யவில்லை. அதற்கு பிரதியுபகாரமாக மற்றுமொரு கொன்ராக் பேசப்பட்டுள்ளது. இந்தப் பொட்டுக்கேடுகளெல்லாம் வெளிச்சத்திற்கு வர பொறிஸ் ஓடிப்போய் தானே திருத்தச் செலவின்கான நிதியைச் செலுத்தினார்.

இதற்கு முன்னரே பிரதமரின் விசேட ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் கோவிட்-19 விதிகளை மீறியது தொடர்பில் சிக்கலில் இருந்தவர். இவரே அன்றைய நாட்களில் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தவர் என கொன்சவேடிவ் கட்சிக்குள்ளேயே பெரும் புகை கிளம்பிக்கொண்டிருந்தது. இறுதியில் 2020 நவம்பரில் கட்சி அவரை பிரதமரின் நம்பர் 10 உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இருந்து கலைத்துவிட்டது.

அன்று டொமினிக் கம்மிங் கோவிட் -19 விதிகளை மீறியதாகக் குறம்சுமத்தப்பட்டது. கடந்த சில வாரங்களாக நம்பர் 10 இல் நடந்த குடியும் கும்மாளங்களும் அம்பலத்துக்கு வந்துள்ளது. 2020 முதலாம் இரண்டாம் லொக்டவுன்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அரசு அனைவரையும் தனிமைப்படுத்தச் சொல்லிவிட்டு அந்த விதியை உருவாக்கிய அரசின் மைய அலுவலகத்திலேயே குடியும் குத்துப்பாட்டு கும்மாளங்களும் இடம்பெற்றுள்ளது.

இதில் ஒரு கும்மாளத்தில் பிரதமர் பொறிஸ் 25 நிமிடங்கள் கலந்துகொண்டுள்ளார். அவர் அடிக்கடி வந்து பார்ட்டியில் கலந்துகொண்டு அம்பலப்படாமல் இருக்க அவரை கீழே பார்ட்டிக்கு வரவிடாமல் தடுக்க கதிரைகளை அடுக்கி அவரை கீழே வரவிடாமல் வேறு செய்துள்ளனர். கிட்டத்தட்ட குழந்தைப் பிள்ளைகளுக்கு சைல்ட் லொக் (chilf-lock) போடுவது போல் என இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி நடவடிக்கைக்கு வைக்கப்பட்ட பெயர் ‘protect the top wild dog‘. இவையெல்லாம் அம்பலமாகி வரும் வேகத்தைப் பார்த்தால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அடுத்த தேர்தல் வரை தாக்குப் பிடிப்பாரா என்ற சந்தேகம் பரவலாக எழுந்து வருகின்றது.

இதுவரை பிரதமர் தப்பிக்கொண்டதற்கு காரணம் கொன்சவேடிவ் கட்சிக்குள் பிரதமர் பொறிஸ்க்கு எதிரான காத்திரமான தலைமைகள் இல்லாததே அல்லது இருந்தும் யார் பூனைக்கு மணி கட்டுவது என்ற பிரச்சினையாகவும் இருக்கலாம். அடுத்த தலைமைக்கு தயாராக இருப்பவர்களில் முக்கியமானவர்கள் மைக்கல் கோவ், ரிஷி சுனாக், சஜித் ஜாவட், ஜெரிமி ஹன்ட். ப்ரித்தி பட்டேலும் அதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளார்.

தற்போது கொன்சவேடிவ் கட்சியில் 360 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 54 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே பொறிஸ்க்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முடுக்கிவிட முடியும். இப்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வெறும் 22 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால் தற்போது நம்பர் 10 இல் இடம்பெற்ற பார்டிகள் பற்றி தனக்கு பெரிதாக எதுவும் தெரியாது என்றும் அவை வெறும் வேலை நேர அல்லது வேலையுடனான கூட்டே என பிரதமர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றார்.

பிரதமரின் நம்பர் 10 கார்டின் 24 மணி நேர சிசிரிவி பொருத்தப்பட்டு அது பொலிஸாரின் கண்காணிப்பிலும் இருந்து வந்தது. இந்தப் பார்ட்டியை சிசிரிவி யில் பார்த்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இதையே மாணவர்கள் செய்த போது பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். அபராதம் வித்தித்தனர். தமிழ் திருமணங்களில் கலந்துகொண்ட பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரமும் பணமும் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம். இல்லாதவர்களுக்கு இன்னொரு சட்டம்.

பல்வேறு அழுத்தங்கள் காரணமாகவும் தற்போது சூ க்ரேவ் என்பவர் தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. சூ க்ரேவ் இன் அறிக்கையிலேயே பிரதமர் பொறிஸ்ஸின் எதிர்காலம் ஊசலாடுகின்றது. சூ க்ரேவ் ஓரளவு நேர்மையுடன் செயற்படுவார் எனவே பலரும் எதிர்பார்க்கின்றனர். அவரை பிரதமரே நியமித்தும் உள்ளார். பிரதமரே சர்ச்சைக்குள்ளான ஒருவராக இந்த விசாரணையில் இருக்கின்ற போது அவரால் நியமிக்கப்பட்டவர் எப்படி பிரதமருக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டை விசாரிக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகின்றது. சூ க்ரேவ் உண்மையில் நம்பர் 10 இல் என்ன நடந்தது என்பதையே ஆராய்கின்றார்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலத்தை கொன்சவேடிவ் கட்சியும் பாராளுமன்றமுமே தீர்மானிக்கும். அடுத்த வாரம் வரவேண்டிய அறிக்கை இன்று வெளியான புதிய தகவல்களை ஆராய மேலும் ஒருவாரம் நீடிக்கப்பட்டு இருக்கின்றது. இன்றைய தகவலின் படி நம்பர் 10 இல் குடிவகைகளை ஸ்ரோர் பண்ணுவதற்கு குளிரூட்டி ஒன்று கொண்டுவரப்பட்டு, அதில் குடிபானங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள வெயிற்ரோஸ் சுப்பர்மார்க்கற்றுக்கு சூட்கேஸ் கொண்டு சென்று குடிபானங்களை வாங்கி கையிருப்பிலும் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

ஜெப்ரி எப்ஸ் ரீன் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள் புரிந்து வந்த ஒரு செல்வந்தர். முதலீட்டாளர். அமெரிக்கர். இவர் இளம் பெண்களை ஆசை வார்த்தைகளைக் காட்டி மயக்கி தனதும் தன்னைச் சார்ந்தவர்களது பாலியல் இச்சைக்கும் வழங்கி வருபவர். ஜெப்ரி எப்ஸ் ரீன் இந்த மாமா வேலைக்கு உடந்தையாக அவருடைய மிகச் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த க்ளைன் மகஸ்வெல் இருந்துள்ளார். இவ்வாறான கிரிமனல் சிந்தனையுடையவர்களுக்கு வின்சர் அரண்மனையில் மகாராண எலிசபத்தின் செல்ல மகன் அன்ரூ விருந்துபசாரம் செய்துள்ளார். ஜெப்ரி எப்ஸ் ரீனின் விடுமுறை வாஸஸ்தலங்களில் அன்ரூ சென்று தங்கியும் வந்துள்ளார். அதனை அவர் ஏற்றுக்கொண்டும் உள்ளார்.

பல பாலியல் குற்றங்களுக்காக 2019 யூலை 6 ஜெப்ரி எப்ஸ் ரீன் கைது செய்யப்பட்டு பிணை மறுக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். சில வாரங்களில் 2019 யூலை 23 இல் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டது, 84 வீதமான அமெரிக்கர்கள் ஜெப்ரி எப்ஸ் ரீன் தற்கொலை செய்துகொண்டதை நம்ப மறுக்கின்றனர். 45 வீதத்தினர் அவர் கொலை செய்யப்பட்டதாகவே நம்புகின்றனர். அந்த வழக்கு நீதி மன்றத்துக்கு வந்திருந்தால் ஜெப்ரி எப்ஸ் ரீன் யாருக்கு யாருக்கு எல்லாம் இளம் பெண்களை வழங்கி இருந்தார் என்பது அம்பலமாகி இருக்கும்.

பிரித்தானியா உட்பட மேற்கு நாடுகளில் மதுக்குடில்களில் (தவறணைகளில்) இளம்பெண்களை அரைநிர்வாண நடனங்களில் ஆட வைப்பதும் இதன் பின் அவர்களை இச்சைகொள்வதும் போதைவஸ்து பாவனையும் கண்டும் காணாமல் நடைபெறும் வியாபாரங்கள். தவறணை உரிமையாளர்களின் முக்கிய வருமானங்கள் இவ்வாறுதான் வரும்.

இந்த இச்சைக்கு பிரித்தானிய மகாராணியன் செல்ல மகன் அன்ரூவும் மயங்கி வேர்ஜினியா கிவ் என்ற பதின்ம வயதுப் பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். வேர்ஜினியா கிவ் இன் இடுப்பை இளவரசர் அன்ரூ பற்றி நிற்பதும் அருகில் க்ளைன் மக்வெல் நிற்கும் படமும் பிரித்தானிய சம்ராஜ்யத்தின் மையத்தை தற்போது ஆட்டம்காண வைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு பொய்யை மறைக்க இன்னுமொரு பொய் என்று இளவரசர் வேர்ஜினியா கிவ் என்பவரை தனக்கு தெரியவே தெரியாது என்று மறுத்து வருகின்றார். ஆனால் இவருடைய லீலைகள் பொதுவாக எல்லோராலும் அறியப்பட்ட விடயங்களாக இருந்தது. இளவரசர் அன்ரூ பிரித்தானிய இராணுவ பட்டங்கள் அதிகாரங்கள் உடைய பொறுப்பில் இருந்தவர்.

கடந்த வருட இறுதியில் க்ளைன் மகஸ்வெல் அமெரிக்காவில் குற்றவாளியாகக் காணப்பட்டதுடன் இவ்வாரம் இளவரசர் அன்ரூவ்க்கு எதிரான சிவில் வழக்கை ஆரம்பிப்பதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து இளவரசர் அன்ரூவின் எதிர்காலம் சிக்கலானது. நேற்று தைப்பொங்கலன்று இளவரசர் அன்ரூவின் பதவிகளை பறிக்க வேண்டும் அவருக்கு வழங்கப்பட்ட பதங்கங்களை நீக்க வேண்டும் என பிரித்தானிய இராணுவ தலைமைகள் மகாராணியை கேட்டுக்கொண்டதற்கு இணங்க இளவரசர் அன்ரூவின் பதவியும் பதக்கங்களும் பறிக்கப்பட்டு அவர் அரண்மனையின் உத்தியோகபுர்வ பங்குபற்றுதல்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இனிமேல் அவருக்கு மரணம் வரை இவை மீளளிக்கப்பட மாட்டாது. ஆனால் தொடர்ந்தும் இளவரசர் என்றே அழைக்கப்படுவார். பதவியும் பதக்கமும் ஆடை ஆபரணங்களும் இல்லாவிட்டாலும் இளவரசர்.

செல்வத்திலும் அதிகாரத்திலும் அதன் உச்சியில் இருந்தாலும் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

ஊடகவியலாளர் சிவராம்: செல்வன் – அகிலன் இரட்டைப் படுகொலை – சிவராமின் (தராக்கி) இரத்தக் கறை!!! : பாகம் 24

(சிவராமின் இரத்தக்கறைக்குரிய படுகொலை செய்யப்பட்ட செல்வன் – அகிலன்)

இவ் உரையாடல் 40 பாகங்களை உள்ளடக்கியது. இதன் 24 வது பாகம் இதுவாகும். இவ் உரையாடலின் முக்கிய நோக்கம், சம்பவங்களை கதைப்பதல்ல. அதற்கப்பால், அதன் உள்ளார்ந்த அரசியல், அதன் மீதான அரசியல் விமர்சனப்பார்வை, மற்றும் அமைப்பு வடிவங்கள் பற்றிய பிரச்சனைகள் என அமையும். அத்தோடு தீப்பொறி குழுவினர் மீது தள மத்திய குழுவினர் வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைக்காமை, மத்தியகுழுவில் தளமத்திய குழு உறுப்பினர்கள் மீது முகுந்தன் சுமத்திய குற்றச்சாட்டுக்கள், பின் தள மாநாடு, இயக்கத்தில் உளவுத்துறைகளின் குறிப்பாக ரோவின் தாக்கம் என உரையாடல் தொடர்கின்றது. இவ் உரையாடல்கள் ரோ முகவர்கள் மற்றும் தனிப்பட்ட விரோதங்களுக்காக பணமுதலைகள் விசிறும் பணத்துக்காக – அவர்களுக்கு வேண்டாதவர்களை தூற்றுவதற்கு எழுதப்படும் ‘அம்புலிமாமா’ கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 24 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 24

தேசம்: தள மாநாட்டுக்கு முன்பாக செல்வன், அகிலன் படுகொலை இடம்பெற்றது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த செல்வன், அகிலன் படுகொலையில் ஏதோ ஒரு வகையில் நீங்களும் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். அது நான் நினைக்கிறேன் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அது உண்மையில் என்ன நடந்தது ? செல்வன், அகிலன் படுகொலை செய்யப்பட காரணம் என்ன? உங்களோடு முதல் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யப்பட்ட பிறகு அவர் எடுபடவில்லை. அப்படி என்றால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அப்பவே தொடங்கிவிட்டது…

அசோக்: அது உண்மையிலேயே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் மத்திய குழுவிற்கு தேர்வு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது உண்மையிலேயே எனக்கு தெரியாது. மத்திய குழுவைச் சேர்ந்த இப்ப உயிரோட இருக்கிற ஆட்கள் தான் அதை சொல்ல வேண்டும். தோழர் ரகுமான் ஜான், சரோஜினிதேவி, சலீம்… செல்வன் தெரிவு செய்யப்படாமைக்கான காரணம் சொல்லப்பட்ட மத்திய குழு கூட்டத்தில் நான் இல்லை. அதற்குப் பிறகுதான் நான் கலந்து கொண்டேன். தோழர் செல்வன் பல்மருத்துவ பீட மாணவர். மிகத் திறமையான தோழர். திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர்.

தேசம்: இதுல முக்கியமாக குறிப்பிட வேண்டும் என்றால் பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடத்துக்கு அல்லது பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மிகத் திறமையான மாணவர்கள் தங்களுடைய படிப்பை குழப்பிக்கொண்டு வந்தவர்கள். தோழர் ரகுமான் ஜானும்…

அசோக்: ஓம் . தோழர் ரகுமான் ஜான் மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர். அதை நிராகரித்துவிட்டு தொடர்ந்து புளொட்டில் வேலை செய்தவர். அவர் மீது எங்களுக்கு விமர்சனம் இருக்கலாம். ஆனால் இன்றும் போராட்ட உணர்வுகளுடன் இயங்கும் ஒருவர் அவர். அடுத்தது அர்ஜுனா என்று சொல்லி ஜெகநாதன். அவர் மன்னார் பகுதியிலிருந்து வந்த மிகத் திறமையான மருத்துவபீட மாணவர். இப்படி படிப்புக்களை விட்டு நிறைய தோழர்கள் வந்திருக்கின்றார்கள். தோழர்கள் படிப்பை கைவிடாமல் தொடர வேண்டும் என்பதில் தோழர் குமரனும், நானும் மிக வும் கவனமாக இருந்தோம். இது பற்றி முன்னர கதைத்திருக்கிறம்.

செல்வன் அகிலன் பிரச்சனை என்னவென்று கேட்டால் சிவராம் இந்தியாவுக்குப் போய் வரும்போது வெங்கட் என்பவரையும் தளத்திற்கு அழைத்து வருகின்றார். முகுந்தனின் உத்தரவின் அடிப்படையிலேயே வெங்கட் வருகின்றார். நான் நினைக்கிறேன் பின்தளத்தின் முடிவோடுதான் செல்வன், அகிலன் படுகொலைகள் நடந்தது என்று. அவர்களின் நோக்கம் செல்வன் தான். செல்வனோடு அகிலனும் இருந்தபடியால் அவரையும் இவர்கள் படுகொலை செய்தார்கள்.

தேசம்: வெங்கட் என்றது…

அசோக்: வெங்கட் என்றது முகுந்தனுடைய உளவுத்துறை யை சேர்ந்தவர்.

தேசம்: பண்டத்தரிப்பா?

அசோக்: இல்லை சுழிபுரம். அவர் சங்கிலி கந்தசாமியோடு உளவுத்துறையில் வேலை செய்தவர். பின் தளத்தில் பல்வேறு படுகொலையுடன் தொடர்புபட்ட ஒராள். அவரும் இன்னொருவரும் அவருடைய பெயர் எனக்கு தெரியாது. ரெண்டு பேரும் சிவராமோடு வாரார்கள். அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் ஈஸ்வரன் நிற்கிறார். அவர்தான் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பாளர். இவங்கள் கிழக்கு மாகாணத்தில் ராணுவ தாக்குதலை செய்ய வேண்டும் அதற்கு சில இடங்களை பார்வையிடுவதற்கு அங்க போக வேண்டும் என்று சொல்லி ஈஸ்வரனிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஏனென்றால் கிழக்கு மாகாண பொறுப்பாளரின் கடிதம் இல்லாமல் இவர்கள் அங்க போக இயலாது. வழிகாட்டிகளோ, தங்குமிடங்களோ, சாப்பாடுகளோ பொறுப்பாளர்களின் அனுமதியோடு தான் செய்ய வேண்டும். தன்னிச்சையாக ஒராள் போக இயலாது. அந்தந்த பொறுப்பாளர்களின் அனுமதியோடு தான் நீங்கள் போக வேண்டும். அடுத்தது வழிகாட்ட வேண்டும்… வழிகாட்டிகள் இல்லாமல் பாதுகாப்பாக பயணம் செய்யமுடியாது.

தேசம்: பொதுப் போக்குவரத்தில் போக இயலாது தானே…

அசோக்: அப்போ ஈஸ்வரன் கடிதமொன்று கொடுத்திருக்கிறார், இந்தக் கடிதம் கொண்டு வருபவருக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கவும் படி.

தேசம்: அடுத்தது அகிலன் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

அசோக்: அகிலன் மூதூரைச் சேர்ந்த தோழர். அங்க மூதூர் பிரதேசத்திற்கு பொறுப்பாளராக வேலை செய்த தோழர். அவரும் திறமையான தோழர். காந்தியத்துக்கூடாக செல்வனை போல வந்தவர் என்று நினைக்கிறேன். மிகத் திறமையான தோழர்கள். அப்போ அந்த நேரத்தில் அவர்கள் மூதூர் பகுதியில் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்தப் படுகொலைகள் மூதூருக்கு பக்கத்தில் தான் நடந்திருக்கு.

தேசம்: இந்த இரண்டு கொலைகளுக்கும் முதல் பின் தளத்தில் சில கொலைகள் இடம்பெற்றதாக…

அசோக்: நிறைய கொலைகள் நடந்து இருக்குதானே.

தேசம்: தளத்தில் அதாவது புளொட்டினுடைய தலைமை புளொட்டினுடைய உளவுத்துறை தளத்தில் இவ்வாறான கொலைகளில் ஈடுபட்டிருந்ததா?

அசோக்: தளத்தில் நடந்த கொலைகள் பற்றி முன்னர் கதைத்திருக்கிறன். அந்த கொலைகளுக்கும் பின் தள உளவுத்துறைக்கும் தொடர்பில்லை. அவைகள் கண்ணாடிச் சந்திரன், நேசன் ஆட்களினால் செய்யப்பட்டவை.

தேசம்: இதுதான் முதல் படுகொலை என்று நினைக்கிறேன்.

அசோக்: சுழிபுரம் படுகொலை நடந்ததுதானே. ஆனா திட்டமிட்டு, அதாவது தலைமையால் உளவுத்துறையால் தளத்தில் நிகழ்த்தப்படுகின்ற முதலாவது படுகொலை, இரட்டைப் படுகொலை இதுதான்.

தேசம்: அதற்கான ஏதாவது சமிஞ்சை இருந்ததா? ஏனென்றால் முரண்பட்டு வந்தது நீங்கள்…

அசோக்: என்ன சந்தேகம் இருந்தது என்று கேட்டால் தளத்தில் தளத்தில் நேசன் ஆட்கள் வெளியேறிவிட்டார்கள் தானே. பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறி விட்டார்கள். செல்வன் ரகுமான் ஜானின் நெருங்கிய தோழர். திருகோணமலை தானே, ஒரே இடம். தோழர் ரகுமான் ஜான் வெளியேறின உடன் அவங்களுக்கு ஒரு சந்தேகம் வந்துட்டுது இவரும் ரகுமான் ஜானின் ஆளாக இருப்பார் என்று. யாழ்ப்பாணத்தில் நேசன் ஆட்கள் வெளியேறியதைப் போன்று திருகோணமலையிலும் குழப்பங்கள் ஏதும் வரலாம் என்று நினைத்திருக்கலாம்.

நிறைய விடயங்களை மறந்திட்டன். இப்பதான் ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. தள மாநாட்டிக்கு பிறகு பின்தளத்தில் ஒரு மத்திய குழு கூட்டம் நடந்தது. அதில்தான் நீண்ட காலத்திற்கு பிறகு ராஜன் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் முகுந்தன் தொடர்பாக கடும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் ராஜனால் வைக்கப்பட்டு, இடையில் குழப்பத்தில் முடிந்த கூட்டம் அது. சந்ததியார் கொலை, செல்வன், அகிலன் கொலை பற்றியெல்லாம் கதைக்கப்பட்டது. முகுந்தனிடம் இருந்து ஓழுங்கான எந்த பதிலும் வரல்ல.

இதைப்பற்றி பிறகு கதைக்கிறன். இதில செல்வன் அகிலன் கொலை பற்றி நான் கேள்வி எழுப்பிய போது முகுந்தன் சொன்னது ஞாபகம் வருகிது. அவர்கள், சந்ததியார், ரகுமான் ஜான் ஆட்களோடு சேர்ந்து புளொட்டை உடைக்க முயன்றதாகவும், விசாரிக்க சென்ற போது செல்வனிடம் இருந்து இவங்க எழுதிய கடிதங்கள் பிடிபட்டதாகவும் கூறி குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டே இருந்தார். ஒழுங்கான எந்த பதிலும் முகுந்தனிடம் இருந்து கிடைக்கல்ல. பிறகு தளத்தில் இருந்த எங்கள் மீது சில குற்றச்சாட்டுக்களை சுமத்த தொடங்கினார். அதற்கிடையில் ராஜனுக்கும், முகுந்தனுக்கும் வாக்குவாதம் அதிகமாகி பெரிய குழப்பமாகி கூட்டம் இடையில் குழம்பிவிட்டது. இதுதான் நாங்கள் கலந்து கொண்ட கடைசி மத்தியகுழு கூட்டம். இதைப் பற்றி பிறகு கதைப்பம்.

உண்மையில பார்த்தீங்க என்றால் இயக்கங்களின் ஆரம்ப வரலாறே பிரச்சனைகளுக்கு முரண்பாடுகளுக்கு ஒரே தீர்வு கொலைதான் என்றுதான் செயற்பட்டு இருக்காங்க. உரையாடல் என்பதே அங்கு இருக்கல்ல. ஆயுத போராட்டம் என்றால் அது வன்முறை ஒன்றுதான் என்ற பார்வைதான் எங்களிட்ட இருந்திருக்கு.

தேசம்: அகிலன்

அசோக்: அகிலன் மூதூர். ரகுமான் ஜானை தெரிந்திருக்குமே ஒழிய பெரிய நெருக்கம் இருக்காது. சிவராம், வெங்கட் ஆட்கள் செல்வனை முதூரில் வைத்து அவரை அரெஸ்ட் பண்ணும் போது கூடவே அகிலனும் இருந்திருக்கின்றார். எங்களுக்கு நடந்ததற்கு பிறகுதான் தெரிய வருது.

தேசம்: இவர்கள் கொல்லப்பட போகிறார்கள் என்பது சிவராமுக்கு தெரியும்.

அசோக்: தான் வழிகாட்ட தான் போனவர், தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று அவர் சாதித்துக் கொண்டிருந்தார். அடுத்தது ஈஸ்வரன் கொடுத்த கடிதம் தன்னிடம் இருக்கு என்று சொல்லி நிறைய பெயரிட்ட சொல்லிக் கொண்டிருந்தவர். கடைசியா பார்த்தா கடிதத்தில் ஒன்றும் இல்லை.

தேசம்: அதுக்குள்ள என்ன இருந்தது…

அசோக்: இந்த கடிதத்தை கொண்டு வருபவருக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கவும் என்று சொல்லி ஈஸ்வரன் எழுதி கொடுத்திருந்தார்.

தேசம்: அப்போ ஈஸ்வரனுக்கும் தெரியாது என்ன நடக்க போகுது என்று சொல்லி…

அசோக்: இல்லை. ஆனால் ஈஸ்வரனுக்கும் தொடர்பு என்று சொல்லி வெளியில கதையை பரப்பினார்கள். என்னைப் பொறுத்தவரை நிச்சயம் தெரிந்திருக்காது என்றே நம்புகிறேன்.

தேசம்: அப்போ வெங்கட்டும் சிவராமும் தான் இந்த கடிதத்தை கொண்டு போயினம்.

அசோக்: இன்னும் ஒருத்தரும் இவர்களோடு வந்தவர். பெயர் ஞாபகம் இல்லை.

தேசம்: இவைக்கு தான் என்ன நடக்கப் போகுது என்று தெரியும்…

அசோக்: மூன்று பேரும் அந்த நோக்கத்தோடு தானே வந்திருக்கிறார்கள்.

தேசம்: மூன்றாவது ஆளைப் பற்றி உங்களுக்கு தெரியாது?

அசோக்: தெரியாது, மூன்று பேரும் அந்த நோக்கத்துடன்தான் வந்திருக்கிறார்கள். இதில இந்த கடிதம் கொண்டு போனால் மட்டும்தான் அங்கு போக முடியும் என்பதற்காக, திருகோணமலை மாவட்டங்களில் ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு இடங்கள் பார்க்க வாரோம் என்று சொல்லித்தான், ஈஸ்வரனிடம் கடிதம் கேட்டிருக்கிறார்கள். ஏனென்றால் பின் தளத்தின் அனுமதியோடுதானே வருகிறார்கள். அப்போ ஈஸ்வரனும் நம்பிட்டு இவங்கள் ஏதோ தாக்குதல் செய்வதற்கு ஆய்வு செய்ய வாறாங்கள் இடங்கள் பார்க்கத்தான் வாறாங்கள் என்று அந்த கடிதத்தை கொடுத் திருக்கிறார்.

தேசம்: அந்தக் கடிதத்தில் செல்வன் அகிலன் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

அசோக்: ஒன்றுமே இல்லை. அப்படி நடந்திருந்தா தள மாநாட்டில் ஈஸ்வரன் மீது குற்றச்சாட்டு வந்திருக்கும். இன்னும் ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். அந்த மாநாட்டில் வாக்கெடுப்பு நடந்தது. பின்தள மாநாட்டிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் சாதாரணமாக தெரிவு செய்யப்படவில்லை. வாக்கெடுப்பின் அடிப்படையில் தான் தெரிவு செய்யப்பட்டார்கள். பின்தள மாநாட்டிக்கு செல்வதற்கு தேர்தல் அடிப்படையில் தோழர்கள் தெரிவு செய்யப்பட்டது பற்றி முன்னர் கதைத்திருகிறன். அந்த தேர்தலில் மத்தியகுழு உறுப்பினர்கள் நாங்க நான்கு பேர்களும் கலந்து கொண்டோம். அதில் கூடிய வாக்கு ஈஸ்வரனுக்கும் அடுத்தது எனக்கும் தோழர் கௌரிகாந்தனுக்கும்தான் கிடைத்தது. எங்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் எனக்கும் ஈஸ்வரனுக்கும் ஏன் தோழர்கள் வாக்கு கூட போடுகிறார்கள்?

தேசம்: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் உங்களுடைய பெயர் வரக் காரணம் என்ன? பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடன் ஆரம்ப காலங்களில் மிக நெருக்கமாக வேலையும் செய்திருக்கிறீர்கள். அவர்கள் எல்லோருக்கும் உங்களைத் தெரியும். தனிப்பட்ட முறையிலும் தெரியும்.

அசோக்: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சின் புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவாளனாக ஆரம்ப காலகட்டங்களில் நான் இருந்திருக்கிறன். UTHRரோடு பெரிதாக எனக்கு தொடர்பு இருக்கவில்லை.

ஆனால் அதில் எனக்கு தெரிந்தவர்கள் இருந்தார்கள். UTHRரோடு பெருசாக உடன்பாடு இருக்கவில்லை. அதுல உள்ள சில நபர்கள் தொடர்பாக சிக்கல்கள் இருந்தது. பிறகு நீங்கள் தான் ஒருநாள் அனுப்பி இருந்தீர்கள். உங்களுக்கு யாரோ ஒரு ஆள் என்னைப் பற்றிய இந்த குற்றச்சாட்டை அனுப்பியதாக.

தேசம்: நட்சத்திரன் செவ்விந்தியன்.

அசோக்: அப்போதான் எனக்கு தெரியும். அதுவரைக்கும் UTHR ரிப்போர்ட்டில் என்னைப் பற்றி இப்படி இருக்கு என்று எனக்கு தெரியாது. பிறகு விசாரிச்சா என் மீது முரண்பாடு இருக்கிற தோழர் ஒருவர் என் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்த வேண்டும் என்பதற்காக அந்த ரிப்போர்ட்டை கொடுத்திருக்கிறார். UTHR ஆட்களும் எந்த விசாரணையும் இல்லாமல், சிவராமுக்கு நான்தான் கடிதம் கொடுத்தேன் என்ற தோழரின் புனைவை தங்களின்ற ரிப்போர்ட்டில் பதிவு செய்திருந்தாங்க. எனக்கே இந்நிலை என்றால் அவர்களின் தகவல்களில் எப்படி உண்மைகள் இருக்கமுடியும்?

தேசம்: உங்களுக்கு முரண்பாடான தோழர் என்றால் இயக்கத்தில் இருந்த தோழரா? அல்லது

அசோக்: புளொட் இயக்கத் தோழர்தான். அப்போ பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் UTHRரோடு சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்தேன். அப்போ விளக்கம் ஒன்று எழுதித்தர சொன்னார்கள் என்ன நடந்தது என்று சொல்லி. நான் பெரிய அக்கறை எடுக்கவில்லை. எழுதிக் கொடுக்கவில்லை. இப்ப எனக்கு எதிரிகளாக இருக்கிறவர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். அது பிரச்சினை இல்லை. தளத்தில் நடந்த மாநாட்டிக்கு வந்த தோழர்களுக்கு தெரியும்தானே. தளத்தில் எத்தனை தோழர்கள் என்னோடு வேலை செய்திருப்பார்கள். அவர்களுக்கு தெரியும் என்னைப்பற்றி.

தள மாநாட்டில் செல்வன், அகிலன் பிரச்சனை முன்வைத்தவர்கள் நாங்கள்தான். சிவராமுக்கும் எனக்கும் அதன் பின் பெரிய முரண்பாடு. தனக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என்றும் அது பின் தள முடிவு என்றும் சொன்னார். நான் நினைக்கிறேன் அவர் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. பிற்காலங்களில் சிவராமை நான் இங்க பரிசில் சந்தித்த போது கூட இதைத்தான் சொன்னார்.

தேசம்: மற்றது அகிலன், செல்வின் படுகொலையில் நான் நினைக்கிறேன் ஜென்னி தோழரும் திருகோணமலையைச் சேர்ந்தவர் என. அந்த பாதிக்கப்பட்ட குடும்பம் அவரிட்டையும் போய்க் கேட்டிருக்க வேண்டும்.

அசோக்: எல்லோரும் திருகோணமலையில் மிக நெருக்கமான தோழர்கள்தான். ஜென்னி, ஜான் மாஸ்டர் எல்லார்கிட்டயும் கேட்டிருப்பார்கள். தோழமைக்கு அங்காள குடும்ப நட்பாக அவங்க எல்லோரும் இருந்தவங்க. செல்வன், அகிலன் எல்லாம் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தளத்தில் சேர்ந்து வேலை செய்த அருமையான தோழர்கள். நான் நினைக்கிறேன். செல்வனுக்கும் சிவராமுக்கும் முன்னரே முரண்பாடு இருந்திருக்கும் என்று. ஏன் என்றால் அவர் நினைத்திருந்தால் நிச்சயம் இக் கொலைகளை தடுத்திருக்க முடியும். பின் தள உத்தரவு என்றால் அங்கேயே இந்த உத்தரவை தடுத்திருக்க முடியும். ஆனால் அவர் செய்யல்ல. இங்க பரிசில் சந்தித்த போது கடுமையாக அவரைப் பேசினேன். பின்தளம்தான் காரணம் என்று தன்னை நியாப்படுத்திக் கொண்டே இருந்தார்.

தேசம்: அதுல நான் நினைக்கிறேன் ஜென்னியும் கடுமையாக எதிர்த்து இருந்தவர் என்று. படுகொலைகளை கண்டித்து இருந்தவர். ஆனால் அவர் மீதும்…

அசோக்: ஜென்னி மீதும் குற்றச்சாட்டு சொல்லப் பட்டது. ஜென்னி இயக்கத்தோடு விசுவாசமாக வேலை செய்வது அவரது அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆனால் அவருக்கு ஒரு தீர்மானம் இருக்கும் முகுந்தன் சரியாக நடக்கிறார் என்று. அதனால அவ சப்போர்ட் பண்ணுவா. இந்த நிலைப்பாடு, அவரின் அரசியல், முகுந்தன் விசுவாசம் இவை எல்லாம் விமர்சனத்திறகுரியதுதான். அவர் முகுந்தன் சப்போர்ட் என்பதற்காக படுகொலைக்கு எல்லாம் அவரை சம்பந்தப்படுத்த இயலாது.

தீப்பொறியினருக்கு நிறைய விமர்சனங்கள் இருந்தன. எங்களைப் பற்றியும் இருந்தன . தங்களோடு நாங்க வெளியேறவில்லை என்ற கோபம் இருக்குதானே. தங்களை நியாயப்படுத்த பல கதைகளைச் சொன்னாங்க. உண்மையிலேயே அவர்கள் தளமாநாட்டில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அவங்க வைக்கிற குற்றச்சாட்டை தானே நாங்களும் வைக்கிறோம். நீங்கள் ஒரு 4, 5 பேர் ஒளிந்துகொண்டு என்னத்தை சாதித்தனீங்க? எங்களோடு தோழர் ரகுமான் ஜான், கேசவன் இருந்திருந்தால் பலமான சக்தியாக நாங்கள் இருந்திருக்கலாம். அந்த அடிப்படையில் அவங்களுக்கும் எங்களுக்கும் முரண்பாடு இருந்தது.

தேசம்: இந்த மாநாடு முடிந்த பிறகு நான் நினைக்கிறேன் விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவு டெலோ புலிகளால் அழிக்கப்படுவது.

அசோக்: உண்மைதான். பெரிய அழிவு அது. அதுல ஒன்று குறிப்பிட வேண்டும் ரெலோ தோழர்கள் நிறைய பேர் இந்த புலிகளின் கொலை வெறி தாக்குதலில் பாதிக்கப்பட்டு எங்களிட்ட வந்து தஞ்சம் கேட்டு பாதுகாப்பு கொடுத்தோம். முக்கியமாக பொபி மற்றது சந்திரன் என்று சொல்லி அவரும் எங்கட குரூப்போட கூட்டிக்கொண்டு தான் நாங்கள் பின்தள மாநாட்டுக்கு சென்றது. யாழ்ப்பாணத்திலிருந்து மிகப் பாதுகாப்பாகத் தான் நாங்கள் போனது. காட்டுப்பாதையால் அவங்களை அழைத்துக் கொண்டு மன்னார் சென்று அங்கிருந்து நாங்கள் பின் தளத்தில் அவர்களை கொண்டு விட்டோம்.

தேசம்: அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு என்னவென்றால் ரெலோ அழிப்பிலும் கூட கூடுதலாகப் பாதிக்கப்பட்டது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். ஏனென்றால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதைகள் எல்லாம் வடிவாக தெரியும். தப்பிப்பதற்கான வழிகளும் தெரியும். அதேநேரம் பிடிபட்டவர்களை அவர்களுடைய பெற்றோரோ உறவினர்களோ போய் சண்டை பிடித்து கூட்டி வந்து இருப்பார்கள். கிழக்கு மாகாண தோழர்கள் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைமையில் தான்.

அசோக்: உண்மைதான். சம்பவம் நடந்த உடனே மட்டக்களப்பு தோழர்கள் சிலர் எனக்கு தகவல் அனுப்பினாங்க இப்படி பிரச்சனை என்று. எனக்கும் மட்டக்களப்பு டெலோ தோழர்களுக்கும் உறவு இருந்தது. ரெலோ பிரச்சினை வந்தவுடன் அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. அப்போ கோப்பாய்க்கு பக்கத்தில் ஒரு கேம்ப் இருந்தது என்று நினைக்கிறேன். அது புலிகளால் வளைக்கப்பட்டு அவர்கள் 4 பேரும் தப்பிட்டாங்க. தப்பி என்னட்ட வந்துட்டாங்க. அவங்களோட நிறைய தோழர்கள் வந்தவங்க. பிறகு மென்டிஸ் தான் அவங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது. இந்த தோழர்களையும் காப்பாற்றி அனுப்பி போட்டுத்தான் நாங்க பின் தள மாநாட்டிக்கு போனது.

தேசம்: எத்தனை தோழர்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்…

அசோக்: கிழக்கு மாகாணத்துக்கு நான் நினைக்கிறேன் பத்து பதினைந்து தோழர்களை அனுப்பி இருப்போம். நான் பொறுப்பெடுத்து அனுப்பினேன். மெண்டிஸ் நிறைய செய்தது. எல்லா தோழர்களுக்கும் மெண்டிஸ் ஆட்கள்தான் பாதுகாப்பு கொடுத்தது.

தேசம்: எப்ப நீங்கள் பின் தளத்துக்கு போகிறீர்கள். ஏப்ரல் மே வரைக்கும் இது நடக்குது என்று நினைக்கிறேன்.

அசோக்: அதுக்குப் பிறகுதான் நாங்கள் போறோம் ஏனென்றால் பின்தள மாநாடு எண்பத்தி ஆறு கடைசியில் தான் நடக்குது.

முன்னாள் போராளியும் பத்திரிகை ஆசிரியருமான தோழர் அமீனுக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்!!!

வாசிப்பை நேசிக்காத ஒரு சமூகத்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய பத்திரிகைகளே வெளிவந்தவன. அவை கூட சில ஆயிரங்களுக்கு மேல் விற்பனையாகவில்லை. ஆனால் இந்தச் சூழலை உடைத்து லட்சம் பிரதிகள் விற்பனையை எட்டியது தினமுரசு பத்திரிகை. அதன் ஆசிரியர்கள் பணியாளர்கள் கொலைப்பட்டியலில் இருந்த போதும் பத்திரிகையின் விற்பனையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்பத்திரிகையும் அற்புதனின் மறைவைத் தொடர்ந்து வீழ்ச்சி கண்ட போது அதனைத் தாங்கி நிறுத்தியவர் தோழர் அமீன். அப்பத்திரிகையின் ஆசிரியராக வருவதற்கு முன்னரே ஏரிக்கரைப் பத்திரிகையான தினகரனில் அவர் ஆசிரியராகப் பணியாற்றியவர். அரசியல் காரணங்களினால் அவர் பதவியிறக்கப்பட்டு சாதாரண உத்தியோகத்தர் ஆக்கப்பட்டார்.
தனது அறுபதாவது வயதைக் கடந்த தோழர் அமீன் கடந்த ஒரு மாதகாலமாக ஆசிறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். அதற்கான செலுவுகளை அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்த செலுத்தியதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக தனியார் மருத்துவ மனைகள் கட்டணம் செலுத்தாமல் உடலை எடுக்க அனுமதிக்க மாட்டார்கள்.
தோழர் அமீன் பல்லாயிரம் இளைஞர்களைப் போல் தாயக விடுதலைக்காப் போராட இடதுசாரி அமைப்பான ஈபிஆர்எல்எப் இல் இணைந்து பின்நாட்களில் தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி அமைப்பில் இணைந்துகொண்டவர். வடமராட்சி பருத்தித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் இயற்பெயர் சிதம்பரப்பிள்ளை சிவக்குமார். இவர் பின்னாட்களில் பெரும்பாலும் தென்மாராட்சி சாவகச்சேரி பகுதியிலேயே தனது இளம்பிராயத்தைக் கழித்தார். அதன் பின் விடுதலைப் போராட்டம் அதன்பின் தொழில் என்று அவர் தலைநகர் கொழும்பிலேயே வாழ்ந்தார்.
2018இல் எனது தாயாரும் ஆசிறி மருத்துவமனையில் பிரைன் அனுறிசம் என்ன மூளை நரம்பு வெடிப்பு சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இரு வாரத்திற்கு 35 லட்சம் ரூபா செலுத்தி உயிரோடு மீண்டார். அதன் பின் ஒரு நாள் நானும் எழுத்தாளர் கருணாகரனும் தேசம் சஞ்சிகையை மீளப் பதிப்பிப்பது தொடர்பாக பேசுவதற்கு தோழர் அமீனை ஓரிரவு சந்தித்தோம். பல மணிநேரம் நீண்ட அந்த உரையாடல் விடுதலைப் போராட்டம் கடந்து வந்த பாதைகள் அப்போதைய அரசியல் எனப் பலதையும் தொட்டு வந்தது.
திறமையும் ஆளுமையும் மிக்க தோழர் அமீன் போன்றவர்கள் இச்சமூகத்துக்கு மிகவும் அவசியமானவர்கள். அவருடன் உரையாடிய சில மணி நேரப் பதிவுகளே ஒரு வரலாற்றின் முக்கிய காலகட்டத்தின் சாட்சியமாக அமைந்தது, அவர்களது தலைமுறையின் மறைவு இலங்கைத் தமிழர்களின் வரலாற்றின் முக்கிய காலகட்டத்தின் சாட்சியங்களின் மறைவும் கூட.
இச்செய்தி பதிவேறுகின்ற போது அவருடைய இறுதிக்கிரியைகள் கொழும்பில் நிறைவேறியிருக்கும் அவரது பிரிவுத் துயரால் வாடும் அனவரது துயரோடும் எனது துயரைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

யாழில் தொடரும் கூட்டுப் பாலியல் வல்லுறவுகள்: ரீட்டா, வித்தியா… யாழ் பல்கலைக்கழகம் எங்கே போகின்றது? தமிழ் சமூகம் எங்கே போகின்றது?

செவ்வாய்கிழமை ஜனவரி 11ம் திகதி நெல்லியடியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் நான்கு கயவர்களினால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு அவரிடம் இருந்த பணம் நகைகள் என்பனவும் சூறையாடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் தவறுதலான தொலைபேசி அழைப்பில் வந்த உறவு மிகக்கொடூரமான நிலைக்கு அப்பெண்ணைத் தள்ளியுள்ளது. துணிகரமான அப்பெண் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பொலிஸில் முறைப்பாடு செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றார்.

தொலைபேசி அழைப்பில் வந்தவருடன் பேசியது காதலாக, தொலைபேசி அழைப்பில் வந்தவன் அப்பெண்ணுக்கு ஆசை வாரத்தைகளைக் காட்டி அவளைத் திருமணம் செய்வதாகக் கூறி சம்பவ தினம் செவ்வாய்க் கிழமை காலை வீட்டில் இருந்த நகைகளையும் பணத்தையும் கொண்டுவரச் சொல்லி கேட்டுள்ளான். அந்த இளம் பெண்ணும் தன்னுடைய காதலனை யோக்கியன் என நினைத்து அவன் சொன்னவாறே செய்துள்ளார்.

அவ்விளம்பெண் தன்னுடைய காதலுக்காக தன் பெற்றோரைவிட்டு புதுவாழ்வைத் தேடிச் செல்ல அவனோ அவ்அபலைப் பெண்ணை தனதும் தன்னுடைய நண்பர்களதும் காமமப்பசிக்கு பயன்படுத்தி விட்டு மீண்டும் அவளின் ஊரடியில் கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளான்.

அவ்விளம் அபலைப் பெண் தனக்கு ஏற்பட்ட இந்த நிலையை யாரிடமும் சொல்லமாட்டாள் அதனால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்ற துணிச்சலிலேயே இந்த அக்கிரமத்தை இக்கயவர்கள் செய்துள்ளனர். பெண்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு அவர்களே காரணம் என்று காரணம் கற்பிக்கின்ற போக்கை தமிழ் சமூகம் இன்னமும் வைத்துக்கொண்டுள்ளதால் இந்தக் கயவர்களும் அதனை வைத்து தாங்கள் தப்பிக்கலாம் என்று நம்பியுள்ளனர்.

ஆனால் அத்துணிகரமான பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொலிஸாரிடம் முறையிட்டு இவ்வாறான கயவர்களுக்கு பாடம் கற்பிக்க முயன்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் நெல்லியடி பொலிஸில் முறையிட்ட போதும் சம்பவம் பருத்தித்துறை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால் சம்பவம் பருத்தித்துறை பொலிஸ்பிரிவுக்கு கையளிக்கப்பட்டது. விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் துன்னாலை பகுதியைச் சேர்ந்த நால்வரில் சந்தேகம் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளனர்.

பெண்களைப் பாலியல் பிண்டங்களாக மட்டும் பார்க்கின்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. யாழில் இவ்வாறான கூட்டு பாலியல் வல்லுறவுச் சம்பவம் நடைபெறுவது இது முதற் தடவையல்ல. எண்பதுக்களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ரீட்டா என்ற பெண்ணை அவ்வமைப்பில் இருந்து தீப்பொறி என்ற பெயரில் வெளியேறிய சிலர் தங்களை வேவு பார்த்ததற்காக கூட்டுப் பாலியல் வல்லுறவை மேற்கொண்டுவிட்டு அப்பெண்ணை புளொட் முகாம் அருகிலேயே வீசியெறிந்துவிட்டுச் சென்றனர். இச்சம்பவம் யாழ் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றது. பிற்காலத்தில் சம்பந்தப்பட்ட பிரான்ஸ் வந்து வாழ்ந்த போதும் மனநிலை பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவர் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு நிகழ்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தற்போது கனடாவில் வாழ்க்கின்றனர்.

மற்றைய சம்பவம் தங்களுக்கு எதிராக சாட்சி சொன்னவர்களைப் பழிவாங்க அவர்களுடைய பள்ளி செல்லும் மகளை மிகக் கொடூரமாக கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அவ்விளம்பெண்ணை படுகொலை செய்த சம்பவம் புங்குடு தீவில் இடம்பெற்றது. இதில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற இரு பெண் பிள்ளைகளின் தாயான விஜயகலா மகேஸ்வரன் முயற்சித்து இருந்தது தெரிந்ததே.

மேற்குறிப்பிட்ட இரு கூட்டுப் பாலியல் வல்லுறவுகளுமே பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நெல்லியடியில் இடம்பெற்ற சம்பவம் ஒரு இளம்பெண்ணை நம்ப வைத்து மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கைத் தூரோகச் செயல்.

தமிழ் சமூகம் இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளையும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கையில் யாழ் பல்கலைக்கழகச் சமூகம், எவ்வித சமூக அக்கறையுமற்ற இதையெல்லாம் மீறிய ரவுடிக் கும்பலாக செயற்படுகின்றது. யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சமூகத்தின் எந்த விடயம் பற்றியும் உருப்படியான ஆய்வுகள் எதையும் இதுவரை செய்து வெளியிடவில்லை. குறைந்தபட்சம் ஏன் தங்கள் மாணவர்கள் காட்டு மிராண்டிகளாக செயற்படுகின்றனர் என்பதை அறிந்து அதனை மாற்றினாலே சமூகத்திற்கு மிகப்பெரும் உதவியாக அமையும். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ராக்கிங் என்ற பெயரில் மேற்குள்ளும் காட்டுமிராண்டித் தனங்கள் பெண்கள் மீது மேற்கொள்ளும் பாலியல் துஸ்பிரயோகங்கள் நாகரீக சமூகம் அருவருக்கத்தக்க நிலைக்கு சென்றுள்ளது. இதையெல்லாம் இவர்கள் தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் ஒழிந்துகொண்டே செய்கின்றனர்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆசிரியர்கள் முதற்கொண்டு பரவலான பொதுத்துறைகளில் பணியாற்றுபவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களே. பல்கலைக்கழகம் பொறுப்பற்ற காட்டுமிராண்டிகளை பட்டதாரி ஆக்கியதன் விளைவுகளில் ஒன்று தான் தமிழ் சமூகம் தொடர்ந்தும் கீழ் நிலைக்குச் செல்வதன் அடிப்படைக் காரணம்.

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ் சற்குணராஜா இந்நிலைமை தொடராமல் இருக்க சில நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார் என்ற போதும் அவருடைய நடவடிக்கைகளில் மிகுந்த போதாமை காணப்படுகின்றது. முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை காலத்தில் ஆரம்பித்த வீழ்ச்சி இன்னும் தொடர்ந்துகொண்டேயுள்ளது.

யாழ் பல்கலைக்கழகம் எங்கு போகின்றதோ அதனை நோக்கியே தமிழ் சமூகமும் செல்லும். காட்ட வேண்டிய பல்கலைக்கழகமே ரவுடிக்கும்பலாக இருந்தால் ரவுடி வாள் வெட்டுக்குழுவாகவும் கூட்டுப்பாலியல் வன்புனர்ச்சியாளர்களாகவும் தான் ஆவார்கள். யாழ் பல்கலைக்கழகம் எப்போது திருந்தும்? யாழில் சமூக மாற்றம் எப்போது வரும்? யாழ் பல்கலைக்கழகத்தை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு துணைவேந்தர் சற்குணராஜாவே வந்துவிட்டாரோ?

ஆனந்தசங்கரி – அரவிந்தன் மோதல் பின்னணி என்ன? யார் இந்த அரவிந்தன்!!!

ஒரு காலத்தில் தமிழீழம் கேட்டு இலங்கையின் எதிர்க்கட்சியாகவும் வந்து, தமிழ் அரசியலைத் தீர்மானித்த தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று நொந்து நூடிள்ஸ்ஸாகி சீரழிந்து போய்க்கொண்டிருக்கின்றது. அரவிந்தன் கோஸ்டி சங்கரியர் பணத்தை சூறையாடுகிறார் என்பதும் சங்கரியர் அரவிந்தன் பணத்தை மோசடி செய்துவிட்டார் என்று ஒப்பாரி வைப்பதும் சமூக வலைத்தளங்களில் தவறணை உரிமையாளர்கள் வேதம் சொல்லும் அளவுக்கு தரம் குறைந்துவிட்டது. சங்கரி ஐயா சொத்துக்களை விற்று காசடித்தாரா இல்லையா என்பதை அரவிந்தன் தரப்பு ஆதாரத்தோடு வைக்கவில்லை. போக்கடி போக்காக சொல்லி வருகின்றனர்.

இந்தச் சொத்துக்களின் மீது பலருக்கும் கண் இருக்கின்றது என்பது உண்மை. அந்த சொத்துக்களுக்காகத்தான் கட்சியில் பலரும் இன்னும் ஒட்டிக்கொண்டுள்ளனர் என்பது அதைவிடவும் உண்மை. இவர்கள் எல்லோரும் சங்கரி ஐயாவில் பழியைப் போட்டுவிட்டு தாங்களும் சுருட்டிக்கொள்ளவே எண்ணுகின்றனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் உள்ள முரண்பாடு கட்சியின் கொள்கை சம்பந்தப்பட்டதாக ஒரு போதும் இருக்கவில்லை. அதற்கு அப்படி ஒரு பெரிய கொள்கையும் இல்லை.

லண்டனில் தசாப்தங்களாக வாழ்ந்த சண்முகராஜா அரவிந்தன், யாழ் மாநகரசபை உறுப்பினராக இருந்து காலத்தில் அப்போது மேயராக இருந்த செல்லன் கந்தையாவை தாக்கி தன் சாதியத் திமிரை வெளிப்படுத்தியவர். அதைவிட அவருக்கு குறிப்பான அரசியல் பின்னணி எதுவும் கிடையாது. லண்டனில் கூட்டணிக்கு பெரிய காசு சேர்க்கும் அளவிற்கு நாணயமானவரோ நம்பிக்கையானவரோ அல்ல. அவர் வற்புறுத்தியிருந்தால் சில சமயம் சில நூறுகளை யாராவது வழங்கி இருப்பார்கள். அந்த சொற்ப பணத்தை ஏமாற்றும் அளவுக்கு சண்முகராஜா அரவிந்தன் ஒரு முட்டாளும் அல்ல. அவர் ஒன்றும் உழைக்கவும் இல்லை அதே சமயம் ஊரைக் கொள்ளையடிக்கவும் இல்லை. பிரித்தானிய அரசின் உதவிப் பணத்தில் தான் அவர் இலங்கையில் அரசியல் நகர்த்துகிறார் என்பது பலரும் அறிந்த விடயம்.

அரவிந்தனுக்கு மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை இருந்ததாக நான் அறியவில்லை. ஆனால் அவருக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் எப்போதும் ஒரு கண் இருந்தது மிகவும் உண்மை. ஆனால் அதற்கான தகுதி அவருக்கு இருக்கின்றதா என்றால் இன்றைக்கு இலங்கையில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டமைப்பில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்களுக்கு (சுமந்திரன் தவிர்ந்த) என்ன தகுதி இருக்கின்றதோ அது அரவிந்தனிடமும் இருக்கின்றது. அரவிந்தன் ஒரு வடிகட்டிய தமிழ் குறும் தேசியவாதி. சாதிய பிரதேச வெறியில் ஊறியவர். பெண்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகவே பார்ப்பவர். பதவி ஆசையைத் தவிர கட்சியைப் போல் அவரிடம் கொள்கையும் இல்லை கோதாரியும் இல்லை. தமிழ் காட்சி ஊடகங்களுக்கு நேரத்தை நிரப்புவதற்கு சங்கரி ஜயாவிலும் பார்க்க இவர் சிறந்த தெரிவாக ஐபிசி மற்றும் ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

தலைவர் எப்ப சாவார் கதிரை எப்ப காலியாகும் என்று லண்டனில் இருந்து வந்த அரவிந்தனுக்கு சங்கரி ஐயா ஒமிக்கிரோனுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு இருப்பது பெரும் சங்கடம் தான்.

தான் தாயகத்திற்கு வரும் முன்பே பொன் சிவகுமாரனின் சகோதரர் பொன் சிவசுப்பிரமணியம் அவர்களை வற்புறுத்தி அனுப்பி வைத்துவிட்டு, அதன் பிறகு அவருக்கே முதுகில் குத்தியவர் அரவிந்தன். சங்கரி ஐயா பொன் சிவசுப்பிரமணியத்திற்கு எதிராகத் திரும்பிய போது அதற்கு முழுவீச்சாக ஆதரவு கொடுத்து அவரைக் கட்சியில் இருந்தே நீக்க முயற்சித்தனர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல் இப்போது அரவிந்தன் – சங்கரி ஐயா இழுபறி இப்போது சில ஆண்டுகளாகவே தொடர்கிறது.

சங்கரி ஐயா இன்னும் நிறைய காலம் வாழ முடியுமா என்பது கேள்விக்குறி. இந்நிலையில் அவரும் கட்சியின் பொறுப்புக்களை ஒப்படைத்து தன் தலைமைத்துவப் பண்பைக் காட்டவில்லை. சாகும் வரைக்கும் தான் தான் தலைவர் என்று இலங்கையில் உள்ள ஏனைய தலைவர்களைப் போல் தானும் சன்னதம் ஆடுகின்றார். இன்றைய நவீன தத்துவவியல் உலகத்திலும் நாம் இன்னும் பரராஜசேகரனை சங்கிலியன் முதுகில் குத்திய அரசியலில் தான் நின்று கொண்டிருக்கிறோம்.

இலங்கைத் தமிழ் அரசியல் சூழலில் சங்கரி ஐயாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் இருந்தது உண்மை. ஆனால் அவர் அதை இவ்வளவு கீழ்நிலைக்கு கொண்டு வந்தது மிகத் துரதிஸ்டம். இன்றுள்ள இலகைத் தமிழ் தலைவர்கள் எல்லோரும் மதிக்கக் கூடியவராக அவர் இருந்திருக்க முடியும். ஆனால் அவர் அதை கெடுத்துக்கொண்டு அரவிந்தன் போன்ற சில்லறைகளுடன் எல்லாம் கீழ்நிலைக்கு இறங்கி சண்டை செய்வது தமிழ் அரசியலின் துரதிஸ்டம்.

2010க்கயையொட்டி சங்கரி ஐயாவின் 75வது பிறந்த தின நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. அப்போது நான் எழுதிய பதிவில் ‘சங்கரி ஐயா அரசியலில் இருந்து ஒதுங்குவது அவருக்கும் நல்லது தமிழ் மக்களுக்கும் நல்லது எனச் சுட்டிக்காட்டி இருந்தேன். அதற்குப் பின்பும் அவரோடு பல தடவைகள் நேர்காணலை மேற்கொண்டு இருந்தேன். அபோதெல்லாம் சங்கரி ஐயாவுடன் மட்டுமல்ல அவரது குடும்பத்தவர்களில் ஒருவராக ஏன் பொன் சிவசுப்பிரமணியத்தின் குடும்பத்திலும் ஒருவராக இருந்தவர் அரவிந்தன். குடும்பம் என்பது சின்ன அரசியல் என்றால் அரசியல் என்பது பெரிய குடும்பம். ‘அரசியலில் இதெல்லம் சகஜம் அப்பா!’

இங்கிலாந்தில் மோசடிகள் அதிகரிக்கின்றது! தமிழர்கள் தமிழர்களையே மோசடி செய்கின்றனர்!!!

இங்கிலாந்தில் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்ந்து வருவதும் இந்த மோசடிகளினால் அப்பாவிகள் பலர் பாரிய இழப்புகளுக்கும் உள்ளாகி வருவதும் தொடர்கதையாகி வருகின்றது. வியாபாரம், இலாப மீட்டுவது என்ற பெயரில் ஊரையடித்து உலையில் போடும் வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். லண்டன் தமிழர்கள் சிலரும் தங்களை சமூகத் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் கூட இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பணத்தை எப்படியாவது ஈட்டலாம் அதுவே தங்களது திறமை எனக்கருதும் இந்த உதவாக்கரைகள் தனிப்பட்ட பலரின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு துணை போகின்றனர்.

இந்த மோசடிகளில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது வீட்டை வைத்து மேலதிக கடன்பெற்று முதலீடு செய்வது தொடர்பான மோசடிகள். ஹரோவில் இளம் தம்பதியினர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் ஆதாரங்களை வழங்கி உள்ளனர். அவர்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகளும் தயாராகி வருகின்றது. ஒரு வயதான தம்பதிகள் இவ்வாறான ஒரு முதலீட்டு திட்டத்தில் 200,000 பவுண்களை வழங்கி கடந்த சில மாதங்களாக எவ்வித வருமானத்தையும் பெறாமல் அவர்கள் இருக்கின்ற வீடே தற்போது வங்கியினால் விற்கப்படும் அபாய நிலைக்கு வந்துள்ளது. இவ்வாறு பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் வீடுகளை வாங்குவதற்கு சட்டத்தரணிகளுக்கு செலுத்தப்படுகின்ற பணத்தை ஒரு சில சட்டத்தரணிகள் கையாடல் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளனர். இவ்வாறு வீட்டை வாங்கவதற்கு வாங்குபவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 100,000 பவுண் வரை செலுத்திய தம்பதியினர் வீடும் வாங்காமல் அவ்வளவு பணத்தையும் இழந்து தொடர்ந்தும் வாடகை வீட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

பப் அல்லது பார் – தவறணை நடத்துகிறோம் என்ற பெயரில் அரை நிர்வாண நடனங்களை ஏற்பாடு செய்து அவ்வாறான இடங்களில் போதைப்பொருட்களையும் கண்டும் காணாமல் அனுமதித்து இளம் சமூதாயத்தை அழிக்கும் தொழிலிலும் ஒரு சில தமிழ் தவறணை உரிமையாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அதீதமாக ஆசைப்பட்டு இல்லாதவர்களை ஆவணங்களில் உருவாக்கி தனிப்பட்ட மோசடிகளில் ஈடுபட்டு இருந்ததையும் இழந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் வீட்டையும் வைத்துக் கொண்டு அரச உதவிகளையும் எடுக்கும் பேராசையில் வீட்டை அவணங்களில் ஒருவரை உருவாக்குவது அல்லது இன்னொருவரின் பெயரில் வீட்டை மாற்றுவது போன்ற மோசடிகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவபவர்கள் இங்குள்ளவர்களின் பெயர்களில் வீட்டை வாங்கி அந்த வீட்டில் இருந்துகொண்டே அரச உதவியை எடுப்பது போன்ற பல்வேறு மொள்ளமாரித்தனங்களிலும் ஈடுபடுகின்றனர்.

கிறடிட்காட் மோசடி மிகச் சாதாரணமான மோசடியாக இன்னமும் காணப்படுகின்றது. அண்மையில் கிங்ஸ்ரன் மருத்துவமனையில் மரணமானவரின் கிறடிட் காட்களை காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் கிறடிட் காட் தொலைத்துவிட்டதாக தாங்களே முறைப்பாடு செய்துவிட்டு அதனை பயன்படுத்திய சம்பவங்களும் சாதாரணமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறானவர்கள் சிலர் மாட்டுப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

பிரித்தானிய பிரதமரே தன்னுடை இல்லத்தைத் திருத்துவதற்கான செலவை மூடி மறைத்த மோசடி தேசிய ஊடகங்களில் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இந்த நேர்மையின்மை சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் வெளிப்பட்டு வருகின்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம் 13 தடவைகள் பாங்கிரப்சி செய்து ஜனாதிபதியானார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மதப் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டு இன்னமும் பலமாக உள்ளது. மோசடிகளைச் சகித்துக்கொள்கின்ற சமூகம் ஒன்று உருவாகிக்கொண்டு இருக்கின்றது.