உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலுமொருவர் மரணம் !

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றாரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட இலங்கையின் 13 மாவட்டங்களில் கொரோனா பரவல் – ஏனைய மாவட்டங்களுக்கும் பரவும் அபாயம் !

மினுவாங்கொடயிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 13 மாவட்டங்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ள தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியர் சுடத்சமரவீர ஏனைய மாவட்டங்களுக்கும் கொரோனா பரவும் ஆபத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
குருநாகல், புத்தளம், கேகாலை, கண்டி, காலி, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், பொலனறுவை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் விசேடமாக கம்பஹாவிலிருந்தும் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தையில் மீன் விற்பவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மீன் விற்பவர்கள் ஊடாக கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் பரவும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தையிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் மீன்களை விற்பனை செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக தொற்றிற்குள்ளானவர்கள் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

“கொரோனாவிலிருந்து நம்மைக் காக்க ட்ரம்ப் முதல் படியைக் கூட எடுத்து வைக்கவில்லை“ – பராக் ஒபாமா குற்றச்சாட்டு !

கொரோனா பரவலைத் தடுக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தவறிவிட்டார் என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக்ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 3 ஆம் நாள் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   

இந்த நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக்ஒபாமா  தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அமெரிக்காவில் நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் ஒபாமா பேசும்போது, “ 8 மாதங்களாக நமது நாட்டில் கொரோனா பரவல் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டார். கொரோனாவிலிருந்து நம்மைக் காக்க அவர் முதல் படியைக் கூட எடுத்து வைக்கவில்லை. எந்த வேலை செய்வதிலும் ட்ரம்ப் ஆர்வம் காட்டுவது இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும், ட்ரம்ப்புக்கு சீனாவில் வங்கிக் கணக்கு உள்ளது எனவும் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளமையானது பலரையும் ஆச்சரியப்பட சைவத்துள்ளது. ஏனெனில் தன்னுடைய தேர்தல் கால அரசியலிலும் பிரச்சாரங்களிலும் சீனாவை எதிரியாக மட்டுமே ட்ரம்ப காட்டி வந்ததுடன் சீன நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதாரத்தடைகளையும் விதித்தார். இந்த நிலையில் ட்ரம்பினுடைய வங்கிக்கணக்கானது சீனாவில் உள்ளது என்ற ஒபாமாவின் கருத்து பெரிய விவாதங்களை அமெரிக்க ஊடகங்களில் ஏற்படுத்தியுள்ளது.

“இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க முடியாது ”- மைத்திரிபால சிறீசேன திட்டவட்டம் !

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு மைத்ரிபால சிறிசேன எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தத்தை கொண்டுவர முன்னிலையில் இருந்தவன் என்ற ரீதியில் மனசாட்சியின்படி என்னால் 20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது. அதற்காக வருத்தத்தை தெரிவிக்கிறேன்“ என மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உறுதிமொழிக்கு அமைய அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கருத்து வெளியிட்டமையும் இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது.

“1933ஆம் ஆண்டு ஜேர்மனிய நாடாளுமன்றம் கைகளைத் தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது எனவும் அவ்வாறான ஓர் தவறை எமது நாடாளுமன்றம் செய்து விடக்கூடாது” – கருஜயசூரிய ட்வீட் !

“1933ஆம் ஆண்டு ஜேர்மனிய நாடாளுமன்றம் கைகளைத் தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது எனவும் அவ்வாறான ஓர் தவறை எமது நாடாளுமன்றம் செய்து விடக்கூடாது” என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், அவர் தனது ருவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனசாட்சிக்கு இணங்கிச் செயற்பட வேண்டுமெனவும்  சர்வாதிகார ஆட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 1933ஆம் ஆண்டு ஜேர்மனிய நாடாளுமன்றம் கைகளைத் தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது எனவும் அவ்வாறான ஓர் தவறை எமது நாடாளுமன்றம் செய்து விடக்கூடாது எனவும் அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது பெரும்பான்மையினரிடமிருந்து வாக்குகளை கொண்டு வரக்கூடும், ஆனால் அது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல உதவாது” – பாராளுமன்றில் சீ.வி.விக்கினேஸ்வரன் !

“சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது பெரும்பான்மையினரிடமிருந்து வாக்குகளை கொண்டு வரக்கூடும், ஆனால் அது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல உதவாது” என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தம் குறித்த நேற்றைய (21.10.2020) பாராளுமன்ற விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் .

இது தொடர்பாக பாராளுமன்றில் தொடர்ந்தும் பேசிய சீ.வி.விக்னேஸ்வரன்,

இந்த தீவில் மையத்தில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு கட்சியும் பொதுவாக அந்தக் கட்சியின் சுய நலன்களை மேம்படுத்துவதற்காக சட்டமியற்றுவது துரதிஷ்டவசமானது, அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைத்து மக்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் தங்கள் கடமையை மறந்துவிட்டனர்.

லீ குவான் யூ ஆக விரும்புவோர் முன்னேற வேண்டுமென்றால் தங்கள் பாகுபாடான முன்னறிவிப்புகளைக் கைவிட வேண்டும். லீ குவான் யூ சீன புத்த பாதையை பின்பற்றவில்லை. ஒவ்வொரு சிங்கப்பூரரையும் அவர் அல்லது அவள் எந்த சாயலையும் நேசித்தார். சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது பெரும்பான்மையினரிடமிருந்து வாக்குகளை கொண்டு வரக்கூடும், ஆனால் அது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல உதவாது.

ஆகவே இந்த 20ஆவது திருத்தச் சட்டம் மூலமாக அதிகாரத்தை தனிமனிதர் ஒருவரிடம் குவிக்கும் எண்ணத்துடன்தான் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைக்கும் சாவு மணி அடிக்கப் போகின்றது.

ஜனாதிபதி பணிக்குழுக்களின் சாக்குப்போக்கில் சிறுபான்மையினரின் நிலங்கள் துறைகளால் சூறையாடப்படுகின்றன. பாதுகாப்பு என்ற போலிக்காரணத்தின் கீழ், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ உறுப்பினர்கள் தங்களது நியாயமான உணர்வுகளையும் அபிலாஷைகளையும் வெளிப்படுத்த அனுமதிக்காமல் தமிழ் பேசுவதை கட்டுக்குள் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மக்கள் நிலங்கள் வனத்துறை போன்ற துறைகளால் பறிமுதல் செய்யப்படுகின்றன. மறைமுகமான உத்தியோகபூர்வ பொருளாதாரத் தடைகளுடன் சட்டவிரோத சாகசங்களால் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து வளங்கள் அபகரிக்கப்படுகின்றன.

மஹாவலி  திட்டத்தின் கீழ் காலனித்துவம் மற்ற மாகாணங்களிலிருந்து ஏராளமான மாகாணங்களை எங்கள் மாகாணங்களுக்கு கொண்டு வருகிறது, அதே நேரத்தில் நமது வடக்கு மாகாணத்திற்கு ஒரு துளி மகாவலி நீர் வழங்கப்படவில்லை. உண்மையில் எங்கள் பொறியாளர்கள் மகாவலியில் இருந்து தண்ணீர் ஒருபோதும் வடக்கே விடமாட்டார்கள் என்று கூறுகிறார்கள். பாரம்பரியமான தமிழ் பேசும் பகுதிகளில் வெளிநாட்டினரைக் கொண்டுவருவதற்கும் காலனித்துவப்படுத்துவதற்கும் இது ஒரு மோசடி. வடக்கு மற்றும் கிழக்கில் இது தற்போதைய நிலை.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகங்களிடையே உள்ள இன வேறுபாடுகளை சரிசெய்து நாட்டை முன்னோக்கி வழிநடத்தும் ஒரு அரசியலமைப்பைக் கொண்டுவருவது பற்றி நாங்கள் பேசி வருகிறோம். கால் நூற்றாண்டுக்கும் மேலாக நாங்கள் நிர்வாக ஜனாதிபதி பதவியை நீக்குவதாக உறுதியளித்துள்ளோம். இது சம்பந்தமாக இதுவரை எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுவெடிப்பை இந்த 20 வது திருத்தத்தை கொண்டுவருவதற்கான வசதியான காரணியாக ஆக்குகிறது. ஏப்ரல் 21 ம் திகதி சோகத்திற்கு வழிவகுத்த 19 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி அதிகாரங்களை குறைப்பதே அவர்கள் செய்ய முயற்சிக்கின்றனர்.

எனவே ஜனாதிபதிக்கு தடையற்ற அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஜனாதிபதி கூடுதல் சாதாரண அதிகாரங்களைக் கொண்டால் மட்டுமே ஒரு குற்றவாளி அல்லது திருடனைப் பிடிக்கவோ அல்லது கைது செய்யவோ முடியும் என்று சொல்வது நகைச்சுவையாகத் தெரிகிறது?

ஏப்ரல் 21 சம்பவத்திற்கு உண்மையான காரணங்கள் சட்டத்தின் பாதுகாப்புக் குழுவின் கவனக்குறைவு மற்றும் அலட்சியம் ஆகியவையே. இது சமீபத்திய காலங்களில் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன. நீதித்துறை, காவல்துறை மற்றும் பொது சேவை ஆகியவை சுயாதீனமாக செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தால், ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த சோகத்தை நாங்கள் கண்டிருக்க மாட்டோம்.

இந்த 20 ஆவது திருத்தத்தை கொண்டுவருவதற்கு இன்று கடுமையாக உழைப்பவர்களும், இன்று அதை ஆதரிப்பவர்களும் நிச்சயமாக அதே திருத்தத்தை ஒழிப்பதற்காக போராடுவதற்கு நாளை வீதிகளில் இறங்குவார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம்.

இன்று நீங்கள் கொண்டு வரும் இந்த திருத்தம் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் குடும்பத்தின் எதிர்கால தலைமுறையினருக்கும் ஒரு பூமராங் விளைவை ஏற்படுத்தும். தயவுசெய்து உங்கள் கண்களால் உங்கள் விரல்களால் குத்த வேண்டாம். இரு தரப்பிலிருந்தும் என் அன்பான சகாக்கள்! தயவுசெய்து இந்த 20 வது திருத்தத்தை நாளை 2/3 வது பெரும்பான்மையுடன் நிறைவேற்ற அனுமதிக்க வேண்டாம்.

மனித உரிமைகள், ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் அமைதி ஆகியவற்றை மதிக்கும் நாம் அனைவரும் நமது கட்சி வேறுபாடுகளையும் தனிப்பட்ட கடமைகளையும் மறந்து 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கட்டும் எனவும் அவர் மேலும்  குறிப்பிட்டார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் குழிபறிக்கும் வகையிலேயே இரட்டைக் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது” – அமைச்சர் வாசுதேவ நாயணக்கார

‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் குழிபறிக்கும் வகையிலேயே இரட்டைக் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது ஆனால்  நாம் உண்மையாகவே இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களை இந்த நாட்டின் ஆட்சியில் இணைத்துக்கொள்ளக்கூடாது என   அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றும் போதே வாசுதேவ நாயணக்கார மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“காட்டு ஆட்சியிலிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம். புதிய அரசமைப்பொன்றும் புதிய தேர்தல் முறையும் கட்டாயம் அறிமுகப்படுத்தப்படும். அதுவரை இந்தக் காட்டாட்சி சட்டங்களுடன் பயணிக்க முடியாது. ஜனாதிபதியும், பிரதமரும் எமது கட்சியைச் சேர்ந்தவர்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் எமக்குள்ளது. அதனால் அதிகாரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படாது.

இரட்டைக் குடிரிமை இருப்பவர்கள் நாடாளுமன்றம் செல்ல முடியாது என 19ஆவது திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடும் என்பதை அறிந்துகொண்டு அதனைத் தடுப்பதற்காகவே இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்ல முடியாது என்ற சரத்தை உள்வாங்கினர்.

இரட்டைக் குடியுரிமைச் சட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் குழிபறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட போதிலும் அவர் அந்தக் குழியைத் தாண்டி வந்தார். ஆனால், நாம் உண்மையாகவே இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களை இந்த நாட்டின் ஆட்சியில் இணைத்துக்கொள்ளக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள்.

வேறு காரணிகளுக்காக இரட்டைக் குடியுரிமைச் சட்டத்தை அவர்கள் கொண்டு வந்திருந்தாலும் நாட்டின் சுயாதீனத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கு இடமளிக்கக் கூடாது. குழுநிலை விவாதத்தில் நீதி அமைச்சர் இந்தச் சரத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவார் என்று நம்புகின்றோம். முழுமையான ஜனநாயகம் உலகில் எங்கும் இல்லை. சில நாடுகளில் ஜனாதிபதி முறையும் சில நாடுகளில் பிரதமர் முறையும் உள்ளன. அதேபோன்று  பல்வேறு தேர்தல் முறைகளும் உள்ளன. புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படும் வரை நாட்டைக் கொண்டு செல்வதற்கான பின்புலத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே 20ஆவது திருத்தச் சட்ட வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது” – என்றார்.

முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.பாலச்சந்திரன் காலமானார் !

முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.பாலச்சந்திரன் இன்று (22.10.2020) மாரடைப்பால் காலமானார்.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் இவரின் உயிர் பிரிந்துள்ளது.

1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சார்பாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கே.பாலச்சந்திரன் கண்டியை பிறப்பிடமாக கொண்டவராவார். வவுனியாவில் வசித்து வந்த இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் வவுனியாவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்தார். 1951 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 69 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுகிறது ஜப்பான் !

பிராந்தியத்தில் மிக பாராட்டத்தக்க கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதால் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை பலப்படுத்தும் வகையில் 9.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க போவதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கிரா சுகியாமா அமைச்சர் டளஸ் அழகப்பெருமவை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார். மின் சக்தி அமைச்சில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் மின்சார துறையின் முன்னேற்றத்துக்காக ஜப்பான் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளை வழங்க போவதாக தூதுவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வழங்கப்படும் ஆதரவு தொடர்பாக அமைச்சர் ஜப்பான் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னதாக சீனா கொரோனாவால் வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பெருமளவான நிதியினை கடனாக வழங்கியிருந்தது. அது போல போல கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருத்துவஉபகரணங்களை ஐக்கியஅமெரிக்கா வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

“ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் நாட்டுக்கு அவசியமானது , அந்த நிறைவேற்று அதிகாரம் இருந்தமையால் தான் யுத்தத்தை நாம் வெற்றி கொண்டோம்”- பிரதமர் மகிந்தராஜபக்ஸ

“ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லாமல் இருப்பது, நாட்டுக்கு நல்லது அல்ல, அந்த நிறைவேற்று அதிகாரம் இருந்தமையால் தான் யுத்தத்தை நாம் வெற்றி கொண்டோம்”- என நிறைவேற்று தெிகார ஜனாதிபதிமுறைமையின் தேவை பற்றி பிரதமர் மகிந்தராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

“இன்று எமக்கு மிகவும் முக்கியமான ஒரு தினமாகவே நாம் கருதுகிறோம். 20ஆவது திருத்தச் சட்டமூலம் என்பது மக்களின் ஆணைக்கு இணங்கவே கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், அது நீண்ட காலத் தீர்வாக என்றும் அமையாது. அதற்கிணங்க நாம் விரைவில் புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிப்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். நாம் 20ஐ, ஜனநாயக ரீதியாகத்தான் கொண்டுவந்துள்ளோம். எனினும், 19 ஆவது திருத்தச்சட்டமூலம் அவ்வாறு கொண்டுவரப்படவில்லை.

இதற்கு எதிராக கருத்துக்களை வெளியிட வாய்ப்பளிக்கவில்லை. இதனால் நாடு பலவீனமடைந்தது. 19 இன் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. இதனால் ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே தெரிந்துவைத்திருந்தார்கள் என ஆணைக்குழுவில் சாட்சி வழங்கப்பட்டுள்ளது.

அப்படியிருந்தும், இதனை தடுத்துக்கொள்ள முடியாதமைக்கு 19 தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனையிட்டு நாம் வெட்கமடையவேண்டும். நாட்டின் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லாமல் இருப்பது, நாட்டுக்கு நல்லது அல்ல. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு பொலிஸ் மா அதிபரை மாற்றக்கூட அதிகாரம் இல்லை.

இவ்வாறான ஜனாதிபதி முறைமைதான் இன்றும் நாட்டில் இருக்கிறது. நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்திருந்தேன். அந்த அதிகாரம் இருந்த காரணத்தினால் தான் யுத்தத்தை எம்மால் நிறைவுக்குக் கொண்டுவர முடியுமாக இருந்தது.

புலனாய்வுப்பிரிவு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் பிரிவும் அந்தக் காலத்தில் சக்திமிக்கதாக இருந்தது. ஆனால், இந்த நிலைமைகள் எல்லாம் இன்று மாற்றமடைந்து விட்டது. 19 ஐ கொண்டுவந்தவர்களே இது நாட்டுக்கு சரியில்லை என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

பொதுத் தேர்தலின்போது, 20 தொடர்பாக நாம் மக்களிடம் ஆணைக் கோரியிருந்தோம். அதற்கிணங்கவே நாம் தற்போது அதனைக் கொண்டுவந்துள்ளோம். எனவே, இதனைப் புரிந்துக் கொண்டு எதிரணியினரும் இதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.