உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஐவர் பலி !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு-13 பகுதியில் 54 மற்றும் 88 வயதுடைய இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினார் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு-12 பகுதியில் 88 வயதுடைய ஒருவரும் கொழும்பு-15 பகுதியில் 39 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.  மேலும், பொரள்ள பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவரும் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

இதே நேரம் நாட்டில் மேலும் 544 பேருக்கு தற்போது வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 127 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 171 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக காணப்படுகின்றது.

அரச காணிகளை தொழில்முனைவோருக்கு பிரித்து வழங்கும் வேலைத்திட்டம் – தமிழர்கள் விண்ணப்பிக்காதவிடத்து காணிகள் தென் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சென்றடையவுள்ளது”  – தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் என். இன்பம்

“அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரச காணிகளை தொழில்முனைவோருக்கு பிரித்து வழங்கும் வேலைத்திட்டம் – தமிழர்கள் விண்ணப்பிக்காதவிடத்து காணிகள் தென் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சென்றடையவுள்ளது”   என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் என். இன்பம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(15.11.2020)  யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே என்.இன்பம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

20201115 103949

அவர் மேலும் தெரிவிக்கையில்….

அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரச காணிகளை தொழில்முனைவோருக்கு பிரித்து வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசியல்வாதிகளால் பொதுமக்களுக்கு பூரண விளக்கம் வழங்கப்படவில்லை.

குறித்த திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வின்மை காரணமாக பல பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் கரிசனை செலுத்த வில்லை. ஒரு சில அரசியல்வாதிகளை தவிர ஏனையவர்கள் குறித்த விடயம் தொடர்பில் பொது மக்களுக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்த தவறி விட்டார்கள் .

இதன் காரணமாக காணி வழங்குவது சம்பந்தமான விடயம் பொது மக்களை சென்றடையவில்லை எனவே தமிழர் பகுதிகளில் தமிழ் மக்கள் காணிக்கு விண்ணப்பிக்காத விடத்து தென் இலங்கையைச் சேர்ந்தவர்கள் குறித்த காணிகளை பெறக் கூடிய நிலைமை காணப்படுகின்றது.

எனவே தமிழ் மக்களுக்கு இந்த காணி வழங்குவது தொடர்பான விழிப்புணர்வை அரசியல்வாதிகள் ஏற்படுத்த தவறினால் தமிழர் பகுதியில் உள்ள காணிகள் தென் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சென்றடையவுள்ளது எனவே இந்த விடயம் தொடர்பில் அரசியல் வாதிகள் இதுவரை கரிசனை செலுத்தாதது கவலையளிக்கின்றது.

நாளை வரை விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு இந்த வருட இறுதி வரை விண்ணப்பிக்க அரசிடம் காலநீடிப்பை கோர முயற்சிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

தொழில் முனைவோருக்கு அரசினால் காணி வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றிற்கான விண்ணப்படிவங்கள் அரசினால் கோரப்பட்டிருந்ததுடன் கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் போதுமான விண்ணப்பங்கள் கிடைத்திராமையால் திகதி இந்த மாதம் (கார்த்திகை .15) நீட்டிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இது தொடர்பாக மக்களிடையே தகவலை கொண்டு சென்று சேர்க்கவேண்டிய அரசாங்க அதிகாரிகளும் சரி அரசியல்வாதிகளுமு் சரி முறையாக தகவலை மக்களிடையே எடுத்துக்கூற தவறிவிட்டனர் என்பது தொடர்பாக பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுழிபுரம் மத்தி குடாக்கனை இரட்டைக்கொலை – “21 பேர், அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்” – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் !

யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்து இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 பேரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியில் நேற்றுமுன்தினம் (13.11.2020) வெள்ளிக்கிழமை மாலையளவில், மரணமடைந்த குறித்த நபர்கள் இருந்த இடத்திற்கு வந்த 21 பேர், அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், DIG அஜித் ரோஹண தெரிவித்தார்.

இம்மோதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த  சின்னவன் செல்வம் (55) மற்றும் இராசன் தேவராசா (32) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் (14) மல்லாகம்  நீதவானினால் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டதோடு, பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு நேற்று முன்தினமும் ஏற்பட்டுள்ளது. மாலை இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறும் சூழல் காணப்பட்ட போது அயலவர்களால் இரு தரப்பினரும் சமாதானப்படுத்தப்பட்டனர்,

பின்னர் பின்னிரவு நேரம் ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

அதில்  சின்னவன் செல்வம் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார், மற்றையவரான இராசன் தேவராசா (32) சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த 21 பேரில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களை இன்றையதினம் (15.11.2020) மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

………………………………………………………………………………………………………………………..

வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை குணாதிசயங்கள் இன்மையினால் ஏற்படுகின்ற சொத்து இழப்புகள் உயிரிழப்புகள் மட்டுமல்ல வாழ்க்கையின் விலை மதிப்பற்ற சந்தோசங்களையும் மன அமைதியயையும் நாங்கள் இழக்கின்றோம். இந்த சண்டை சச்சரவுகளை தீர்க்க பொலிசார் அதனை தீர்த்து வைக்க நீதிமன்றம் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் இரு வருமானமீட்டுபவர்களை இழந்தால் அதற்கு அரசும் சுற்றியுள்ளவர்களும் நிதி உதவி வழங்க வேண்டும் உடல் உறுப்புக்களை இழந்தால் ஏற்படும் துன்பம். இவை எல்லாவற்றுக்கும் ஏற்படும் செலவை சிந்திப்பதற்கு சில நிமிடங்கள் செலவழித்து இருந்தால் தவிர்த்திருக்கலாமே. உளவியல் கற்கையயை அறிமுகப்படுத்தி முதலில் சிறந்த மனிதர்களை உருவாக்கினால் குடும்பம் மட்டுமல்ல உலகமே அமைதிப் பூங்காவாகும். (ஜெயபாலன்.த)

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்பரவு பணிகளில் ஈடுபட்ட சிவஞானம் சிறிதரன் மீது  பொலிஸார் வழக்கு பதிவு !

அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி யுத்தத்தில் உயிர் நீத்த வீரர்களை நினைவு கூறும் நாள் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ் மக்களினால்  மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அதனை முன்னிட்டு இன்று (15.11.2020) காலை, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்பரவு பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையிலும் அப்பகுதி மக்களுடைய இணைவிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, குறித்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், துப்பரவு பணிக்கு அனுமதி வழங்கியது யார்?  என வினவியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீது  வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துப்பரவு பணிகளில் மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.  குறித்த துயிலுமில்லத்தை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ள மக்களின் விபரங்களை கிளிநொச்சி காவல்துறையினர் பெற்றுச்சென்றுள்ளதாக வும் தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை இம்முறை மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமா? என்பது தொடர்பில் இதுவரை எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

முன்னதாக மாவீரர் தினத்தை உணர்வு ரீதியாக அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களுக்கு சிவஞானம் சிறிதரன் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மீது இளைஞர்கள் தாக்குதல் – இருவர் கைது !

வவுனியா கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர்.

எஸ்.வினோ நோகராதலிங்கம் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

நேற்று (14.11.2020 ) மாலை 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவொன்று அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர். அதனையடுத்து வாகனத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் கிழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர்.

இதனை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தர் மேல் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியமையினையடுத்து அவ் இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

அதன் பின்னர் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பாராளுமன்ற உறுப்பினரை ஏற்றிக்கொண்டு வாகனம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி பூவரசங்குளம் பொலிஸ் பிரிவு என்பதனால் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்த பூவரசங்குளம் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்தின் சி.சி.ரிவி காணொளி உதவியுடன் சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை இராணுவ சேவைக்கு இளைஞர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு கிழக்கில் !

இலங்கை இராணுவ சேவைக்கு நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் முப்பத்தையாயிரம் பேரை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்றுவருகிறது.

இத்திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளை இராணுவ சேவையில் இணைப்பதற்கான நேர்முகப்பரீட்சை நேற்றையதினம் (14.11.2020) மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இராணுவ சேவை நேர்முகப்பரீட்சைக்குச் சமுகமளித்திருந்தனர்.

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இந்த நேர்முகப்பரீட்சையை நடாத்தினர்.

இராணுவ படையில் பணியாற்ற விரும்பும் இளைஞர் யுவதிகளை இன மற்றும் பிரதேச வேறுபாடின்றி இணைத்துக்கொள்ளும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

“கடற்றொழில் அமைச்சர் சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுளை ஊக்குவிக்கின்றாரா? ” -துரைராசா ரவிகரன் கேள்வி !

“கடற்றொழில் அமைச்சர் சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுளை ஊக்குவிக்கின்றாரா? என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுகளால் முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டின் வட மாகாணத்திலுள்ள முல்லைத்தீவு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் மற்றும், இந்திய மீனவர்களினால் சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை அடைய மாவை.சேனாதிராஜா தலைமையில் புதிய அமைப்பு ?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழர் தேசிய சபை என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை அடைந்துக் கொள்வதற்காக இத்தகைய புதிய அமைப்பை உருவாக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

குறித்த அமைப்பில், ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யாஸ்மின்சூக்கா ஆகியோரையும் உள்ளடக்க இருப்பதாக  தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மாவை சேனாதிராஜா தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், குறித்த விடயம் தொடர்பாக தற்போதைய நிலைமையில் எந்தவிளக்கத்தையும் வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.

“அரசு கொண்டுவந்த 20 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேரையும் எதிர்க்கட்சியுடன் அமர வைக்க வேண்டாம்” – சபாநாயகரிடம் லக்ஸ்மன் கிரியெல்ல வேண்டுகோள்!

அரசு கொண்டுவந்த 20ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேரையும் ஆளும் தரப்புடன் இணைத்து விடுமாறும், எதிர்க்கட்சியில் அவர்களை வைத்திருந்தால் பாரிய பிரச்சினைகள் உருவாகும் எனவும் எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (13.11.2020) நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சி கொண்டுவந்த விவாதம் முடிந்த பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் கூறியதாவது:-

“அரசு கொண்டுவந்த 20 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேரையும் எதிர்க்கட்சியுடன் அமர வைக்க வேண்டாம் எனக் கடிதம் மூலம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளேன். எனவே, நீங்கள் அதனைக் கருத்தில்கொண்டு அவர்கள் 8 பேரையும் ஆளும் தரப்பின் பக்கம் ஆசனங்களை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும்.

எதிர்வரும் 17ஆம் திகதி வரவு – செலவுத் திட்ட விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறும். ஆகவே, இவர்கள் 8 பேரையும் ஆளும் கட்சியின் பக்கமோ – ஆளும் கட்சியின் கும்பலிலோ ஆசனங்களை ஒதுக்கிக்கொடுங்கள்” – என்றார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், “இந்தக் காரணிகள் குறித்து நான் ஆராய்ந்து முடிவு ஒன்றை வழங்குகின்றேன்” என்றார்.

“அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி மக்களின் நினைவேந்தல் உரிமையை பறிக்கக்கூடாது” – பாராளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன்..!

“அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி மக்களின் நினைவேந்தல் உரிமையை பறிக்கக்கூடாது” என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் காராணமாக நிலவும் அசாதாரண சூழல் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று(13.11.2020) இடம்பெற்ற விசேட ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நவம்பர் மாதம் உலகெங்குமுள்ள மக்கள் போரில் மரணித்த தம் மாவீரர்களை நினைவேந்தும் காலம். எமது நாட்டிலும் மூன்று தசாப்த யுத்தமொன்று நிகழ்ந்தேறியது. வடக்கு-கிழக்கில் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக ஆயுதம் ஏந்திப் போராடி மரணித்த தாய்மார்கள், தந்தையர்கள், சகோதரர்கள் மற்றும் பிள்ளைகளைக் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். நவம்பர் மாதத்தில் தான் அவர்கள் இவர்களைக் காலம் காலமாக நினைவேந்தி வருகிறார்கள்.

ஜே.வி.பியின் தலைவர் ரோகன விஜயவீரவை நினைவு கூருவதற்கு அனுமதியிருக்கிறது. கவலைக்கிடமாக நினைவு கூரலிலும் கூட இந்த நாட்டில் பாகுபாடு காட்டப்படுகிறது. எமது தமிழ் பெற்றோர்களுக்கோ இங்கு தம் இறந்த பிள்ளைகளை நினைவு கூரும் உரிமை மறுக்கப்படுகிறது. இந்த விடயத்தை நான் இந்த ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்தில் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் உண்டு.

கொரோனாவைக் காரணம் காட்டி பொலீசாரும், ஏனைய அதிகாரிகளும் மக்கள் துயிலும் இல்லங்களுக்குச் செல்வதை இடைமறிக்கத் தயாராவதை நான் அறிகிறேன். அரசாங்கம் கொரோனாவைக் காரணம் காட்டி மக்களது நினைவேந்தல் உரிமையைப் பறிக்கக் கூடாதெனக் கேட்டு நிற்கின்றேன்” எனக் குறிப்பிட்டார்.