உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இரசாயன பசளையை தாருங்கள் என விவசாயிகள் போராட்டம் – எதிர்காலத்துக்காக சேதனப்பசளையை பயன்படுத்துமாறு அரசு வலியுறுத்தல் !

இலங்கையில் இதுவரை காலமும் இரசாயனப்பசளை அதிகம் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அது தடை செய்யப்பட்டு  வேகமாக சேதனப்பசளை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இது இரு வேறு விதமான கருத்துக்களை இலங்கையில் தோற்றுவித்துள்ளது.

நீண்ட காலமாக இரசாயனப்பவளையையே பயன்படுத்தி விளைச்சல் பெற்று வந்த விவசாயிகள் இந்த சேதன பசளை பயன்பாடு மற்றும் அறிமுகம் தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்த எதிர்ப்புக்களில் எதிர்க்கட்சியினுடைய குரல்களும் உள்ளடக்கம்.

நேற்று கூட கிண்ணியாவில் இரசாயனப்பசளையை மீள வழங்கக்கோரி விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும்  ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ “ கடினமாக இருந்தாலும் பரவாயில்லை – நாங்களு் கஷ்டப்படாலும் பரவாயில்லை. எதிர்கால சந்ததிக்காக சேதனப்பசளையை பயன்படுத்துங்கள்.” என எல்லா கூட்டங்களிலும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில் ” ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகியுள்ளதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்துவது முக்கியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேதனப் பசளை மற்றும் சேதனப் பயிர்ச்செய்கை தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மத்தியில் இது தொடர்பில் தவறான கருத்து ஏற்படுத்தப்பட்டுள்ளமையால், அவர்களுக்கு விழிப்பூட்டுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்று அவசியமாகும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

“எங்களோடு சேர்த்து எங்கள் பிள்ளைகளும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாது இருக்கிறார்கள்.” – மலையக மக்கள் ஆர்பாட்டம் !

நீண்ட நாட்களாக அமுலில் உள்ள பயணத்தடை காரணமாக சாதாரண குடும்பங்கள் மிகப்பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. முக்கியமாக உணவு தொடர்பான பிரச்சினை பல குடும்பங்களை வாட்ட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அரசினால் வழங்கப்பட்டிருந்த 5000 ரூபாய்கூட மக்களை ஒழுங்காக போய்ச்சேரவில்லை. கடந்த வருட ஊரடங்கு நேரம் தேர்தல் காலம் என்பதால் பலருடைய உதவிகள் மக்களுக்கு கிடைத்திருந்தது. ஆனால் இந்நத வருடம் அப்படியான உதவிகள் கூட இல்லாது போயுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான மக்களுடைய அதிருப்தி வௌிப்பட ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக  நுவரெலியா- வட்டவளை, கரோலினா தோட்டத்திலுள்ள மக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுக் கோரி, ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூறியதாவது,

“பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக வெளியிடங்களுக்கு சென்று தொழில் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நாம் வாழ்வாதாரத்தை இழந்து தற்போது நிர்க்கதியாகி உள்ளோம். மேலும் குறித்த காலகட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபாய் நிவாரணம் கூட இதுவரை எமக்கு கிடைக்கவில்லை.

இதனால் எம்முடன் சேர்ந்து எங்களது பிள்ளைகளும் ஒருவேளை உணவுக்காக கஸ்டப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட  எங்களது பகுதிக்கு வருகைத்தந்து எமது நிலைமைகள் தொடர்பாக கவனம் செலுத்தவில்லை.

ஆகவே, எங்களது இத்தகைய பிரச்சினைக்கு உரிய தீர்வை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என போராட்டத்தில் ஈடுபட்டோர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அரசாங்கத்தின் கொரோனா தடுப்பசி வழங்கலில் சமூக தேவைகளை விட அரசியல் தேவைகளே முன்னிலை பெற்றுள்ளன.”- ஜேவிபி குற்றச்சாட்டு !

“அரசாங்கத்தின் கொரோனா தடுப்பசி வழங்கலில் சமூக தேவைகளை விட அரசியல் தேவைகளே முன்னிலை பெற்றுள்ளன.” என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி  தொடர்பில்  கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் மோசமான நிலை காணப்படுகின்ற சூழலில் மக்கள் தடுப்பூசியை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் ஒருவருடன் ஒருவர் சண்டையிடுகின்றனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இன்று வரும் நாளை வரும் என அமைச்சர்கள் பல திகதிகளை தெரிவித்தனர்.  அமைச்சர் பிரசன்னரணதுங்க மே மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவோம். ஆனால் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. முதலாவது டோஸ் கொரோனாவைரஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் தங்களிற்கு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் உள்ளனர்.
தடுப்பூசியை அரசாங்கம் பலன்அளிக்க கூடிய விதத்தில் வழங்கவில்லை.
அரசியல்தேவைகள் சமூக தேவைகளை விட முன்னிலை பெற்றுள்ளன. என அவர் தெரிவித்துள்ளார்.

“30 வருடங்களாகியும் மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு இந்தியா எந்ததொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.” – சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு !

“மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு இந்தியா எந்ததொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.”  என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (19.06.2021) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறியுள்ளதாவது,

“இலங்கை- இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருந்தால், தமிழ் மக்களிற்கு ஏற்ப்பட்ட இழப்புக்களை தடுத்திருக்க முடியும். இவ்விடயத்தில் ஏனைய தமிழ்த் தலைவர்கள் தவறிழைத்துள்ளதுடன் இலங்கை அரசாங்கமும் பாரிய தவறிழைத்துள்ளது.

மேலும் இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருடங்கள் கடந்துள்ளன. அதாவது போருக்கு பின்னரான காலப்பகுதியிலாவது, மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு எந்ததொரு முயற்சிகளையும் இந்தியா எடுக்கவில்லை.

இந்நிலையில் இன்றுள்ள அரசு, மாகாணங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

எனவே இந்தியா, எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தனது முழு முயற்சியினையும் மேற்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

“கருணா தப்பிச்செல்வதற்கு நானே காரணம் என அறிந்து பிரபாகரன் சீற்றமடைந்தார்.” – முன்னாள் நா.உ மௌலானா ரணில் சொல்லியே செய்ததாகவும் ட்வீட் !

“17 வருடங்களிற்கு முன்னர் எனது கட்சி தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார்,  எனக்கு துரோகமிழைத்தார்.“ என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் தெரிவிவித்துள்ளதாவது,

அந்த நாள் ஜூன். 22. 2004

நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து 17 வருடங்களின் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் அவரது பெயர் ரணில் விக்கிரமசிங்க . எனக்கு துரோகமிழைத்த கட்சி தலைவர் தொடர்ந்தும் நாட்டிற்கு துரோகமிழைக்கின்றார்.

கருணா தப்பிச்செல்வதற்கு நானே காரணம் என பிரபாகரன் அறிந்ததை தொடர்ந்து சீற்றமடைந்த அவர் தனது அரசியல் பிரிவினை செய்தியாளர் மாநாட்டினை நடத்துமாறும் எனக்கு அதில் தொடர்பிருப்பதை அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஜூன் 20 ம் திகதி அது நடந்தது.
மறுநாள் எனது கட்சி தலைவரிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்புகள் வந்தன தனது அலுவலகத்திற்கு என்னை வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். மங்களசமரவீரவும் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களும் செய்தியாளர் மாநாட்டினை நடத்தி தங்கள் குறுகிய அரசியலை முன்னெடுததவண்ணமிருந்தனர்.
எனது நடவடிக்கைக்கு எனது கட்சியே காரணம் என தெரிவித்து சமாதானபேச்சுக்களை குழப்ப நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். கட்சி தலைவர் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டார் நான் மிகவும் அமைதியாக உங்கள் உத்தரவின் பேரிலேயே செயற்பட்டேன் என தெரிவித்தேன்.
நாங்கள் தற்போது அரசாங்கத்தில் இல்லை நாங்கள் எதிர்கட்சியில் இருக்கின்றோம்- சமாதான பேச்சுவார்த்தைகள் முக்கியமில்லை என அவர் தெரிவித்தார். நான் அதிர்ச்சியடைந்து இவ்வாறு பதிலளித்தேன் – சேர் நீங்கள் கொழும்பில் இருந்தவாறு இதனை தெரிவிக்கலாம். நான் மக்கள் யுத்த பயத்தில் வாழும் பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றேன். நீங்கள் தான் இது நல்ல நடவடிக்கை என தெரிவித்தீர்கள் என்றேன்
நான் தற்போது கட்சியை பற்றி சிந்திக்கவேண்டும் நான் மிகவும் அவமானகரமான சூழலில் இருக்கின்றேன் நீங்கள் பதவி விலகவேண்டும் என அவர் தெரிவித்தார். நான் அந்த சந்திப்பிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினேன்.
17 வருடங்களிற்கு முன்னர் எனது கட்சி தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார்,  எனக்கு துரோகமிழைத்தார்.
நான் வெறுமனே அவரது உத்தரவுகளை மாத்திரம் பின்பற்றினேன், நாட்டிற்கு நல்லது என நினைத்ததை மாத்திரம் செய்தேன்
எனக்கு இராணுவ புலனாய்வு பிரிவினரிடமிருந்து தகவல்கள் கிடைத்தன எனது பாதுகாப்பு ஆபத்திற்குள்ளாகியுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
என்னை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

எரிகாயங்களுடன் இறந்த நிலையில் மன்னாரில் கரையொதுங்கிய திமிங்கலம் – இலங்கை கடற்பரப்பில் தொடரும் அச்சமூட்டும் சம்பவங்கள் !

மன்னார்-முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரடிக்குளி கடற்கரை பகுதியில் எரிகாயங்களுடன் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று இன்று சனிக்கிழமை (19) காலை கரையொதுங்கியுள்ளது.

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின் மன்னார் மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ச்சியாக கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மன்னார்- முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரடிக்குளி கடற்கரை பகுதியில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுளளது.

ஏற்கனவே குறித்த கப்பலின் இரசாயன கழிவுகள் கரை ஒதுங்குவதால் வாழ்வாதாரத் தொழில் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர்கள் குறித்த திமிங்கலம் கரை ஒதுங்கியதால் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் தாழ்வுபாடு,வங்காலை மற்றும் சிலாபத்துறை கடற்கரை பகுதிகளில் உயிரிழந்த நிலையிலும்,கடுமையான காயங்களுடனும் கடலாமைகள் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை கடற்கரையிலும் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்றும் , மட்டக்களப்பு தாழங்குடா கடற்கரை பகுதியில் மேலும் ஒரு டொல்பின் மீன் இனம் உயிரிழந்த நிலையிலும், கல்முனை மாநகர பெரிய நீலாவணை பிரதேச கடல் மற்றும் பாண்டிருப்பு பிரதேச கடலில் மூன்று கடலாமைகளும்  கரை ஒதுங்கியுள்ள சம்பவமானது சூழலியளாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் மக்களுக்கான தீர்வை சஜித் பிரேமதாஸ வழங்கியே தீருவார்.”  – ஐக்கிய மக்கள் சக்தி

தமிழ்தேசிய கூட்டமைப்பினரை ஜனாதிபதி கோட்டாபாயராஸபக்ஷ சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் கூட அந்த சந்திப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே இலங்கைக்கான இந்தியத்தூதுவருடன் கூட்மைப்பு பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் குறித்த ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக ஐக்கியமக்கள் சக்தி தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்து ஏமாற்றியவர்கள்தான் ராஜபக்சக்கள். இப்போது பேச்சு என்று அறிவித்துவிட்டு அதனை நடத்தாமலேயே ஒத்திவைத்துள்ளனர். என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ராஜபக்ச அரசு புதிய அரசமைப்பை ஒருபோதும் கொண்டுவராது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வையும் ஒருபோதும் வழங்கவும் மாட்டாது. இது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் தெரிந்த விடயம்.

ராஜபக்சக்களின் கடந்த ஆட்சியில் பேச்சு மேசைகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல தடவைகள் அழைக்கப்பட்டு இறுதியில் ஏமாற்றப்பட்டனர். அதேபோல் இந்த ஆட்சியில் முதலாவது பேச்சைக்கூட நடத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஏமாற்றியுள்ளார்.

முதலாவது பேச்சுக்கு முதல் நாள் காலை அழைப்பு விடுத்த ஜனாதிபதி செயலகம், அன்று மாலையே பேச்சை இரத்துச் செய்துள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பேச்சு இரத்துச் செய்யப்பட்டமைக்கான காரணத்தை ஜனாதிபதி செயலகம் இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால், சர்வதேச அழுத்தத்தைச் சமாளிக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச்சுக்கு ஜனாதிபதி அழைத்திருந்தார் என்பது உண்மை. எனினும், இறுதியில் அந்தப் பேச்சை நடத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதி ஏமாற்றியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலர்ந்தால் தமிழர்களுக்கான தீர்வை நாம் வழங்கியே தீருவோம். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவார் – என்றார்.

மகனின் பிரேத பிரிசோதனையில் சந்தேகம் – புதைக்கப்பட்ட உடலை தோண்டி மீள பிரேத பரிசோதனை !

மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த் 3ம் திகதி புலனாய்வுப்பிரிவினர் எனக் கூறி வந்தவர்களினால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் சடலத்தினை தோண்டியெடுத்து இலங்கையிலேயே சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் முன்னிலையில் மீள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 3ம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஏ.இளங்கோவன் அவர்களின் தலமையிலான சட்டவைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த இளைஞன் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியானது என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியிருந்தனர்.

இவரின் மரணம் தொடர்பான வழக்கில் மரணமானவரின் குடும்பத்தினர் சாட்சியம் அளிக்கையில் தங்களின் மகனின் பிரேத பிரிசோதனையில் சந்தேகம் இருப்பதாக அதற்கான நீதி கிடைக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தனர். குறித்த வழக்கானது இன்று(18.06.2021) கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீதிபதியின் அறையில் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் முன்நிலையில் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.

புதைக்கப்பட்ட விதுஷனின் உடலை வருகின்ற திங்கட்கிழமை தோண்டி எடுத்து இலங்கையில் மிகவும் அனுபவம் வாய்ந்த பேராதனை பல்கலைக்கழகத்தினுடைய பேராசிரியர் அவர்களின் தலமையில் பிரேத பரிசோதனை செய்ய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொள்வதற்காகவே ரணில் பாராளுமன்றம் வருகின்றாரராம் !

முன்னாள் பிரதமரும் , ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணமானது வரலாறு காணாத பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவுடன் சேர்த்து ஐக்கிய தேசிய கட்சியும் தன்னுடைய மக்கள் ஆதரவை இழந்துவிட்டதை அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. ஒரு ஆசனத்தை கூட பெற்றுக்கொள்ளாத ரணிலின் கட்சிக்கு ஒரே ஒரு தேசியப்பட்டியலே கிடைத்தது. அது தொடர்பாக கூட நீண்டநாள் இழுபறி நீடித்ததது. இறுதியில்  ரணில் விக்ரமசிங்க அக்கட்சி சார்பாக தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றம் செல்கிறார்.

இந்நிலையில் ரணிலின் வருகை பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்து. அரசாங்கத்தை தீவிரமாக எதிர்த்து வரும் சஜித்தரப்பினரை ரணில்விக்கிரமசிங்கவை வைத்து ஓரங்கட்ட அரசு முனைவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற நிலையில், நாமல் ராஸபக்ஷ இன்றைய தினம் ரணிலா..? அல்லது நஸித்பிரேமதாஸவா நாட்டினுடைய எதிர்க்கட்சி தலைவர் என கேள்வியெழுப்பினார்.

இது தொடர்பில் ஐக்கியதேசிய கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமது இலக்கு அல்ல. மாறாக ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொள்வதற்கான அடித்தளமாகவே ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்கின்றார் என கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் சென்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலருடன் கலந்துரையாடி எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதே எமது நோக்கமாகும். அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி பதவியை பெற்றுக்கொண்டு, நாடு வீழ்ந்துள்ள இந்த பாரிய நிலைமையில் இருந்து மீட்கமுடியாது. அதனால் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.

அத்துடன் வீழ்ந்திருக்கும் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதென்றால், நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை பெற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான அடித்தளமே ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற வருகை. இதற்கு நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என சிலர் கேட்கலாம்.

எந்தவொரு விடயத்தையும் சாதிப்பதற்கு அதுதொடர்பான அனுபவமும் திறமையும் இருக்கவேண்டும். அத்தகைய அரசியல் அனுபவமும் திறமையும் ரணில் விக்ரசிங்கவிடம் இருக்கின்றது. ஏனெனில் 2015இல் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது நாடாளுமன்றத்தில் எமக்கு 46ஆசனங்களே இருந்தன.

நாட்டின் வரலாற்றில் ஆளுங்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல் அரசியலமைப்பு திருத்தம் இடம்பெற்றதில்லை. ஆனால் அன்று பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அரசிலயமைப்பின் 19ஆம் திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொண்டார்.இதுதான் அவரின் அரசியல் ஞானம்.

அதனால் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை பெற்றுக்கொள்ள நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஒரு ஆசனம் இருந்தாலும் அதனை சாதிக்க முடியும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் பல விடயங்களை நிறைவேற்றிக்கொண்ட அனுபவம் ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கின்றது.

அதனை அனைவருக்கும் செய்ய முடியாது. அதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியைபெற்றுக்கொண்டு தற்போதுள்ள நிலைமையில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை பெற்றுக்கொண்டு நாட்டை மீண்டும் கட்டியயெழுப்புவதே எமது இலக்காகும் என்றார்.

“இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவா..? அல்லது சஜித் பிரேமதாஸவா..?” – புதிய சர்ச்சையை ஆரம்பித்து வைத்தார் நாமல் !

“முதலில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவா..? அல்லது சஜித் பிரேமதாஸவா..?, என தெரிவு செய்வதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.”  என்று விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

எரிபொருள் விலையேற்றத்தை எதிர்தரப்பினர் தங்களின் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள். பொருளாதார காரணிகளை கருத்திற் கொண்டு எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மற்றும் வாழ்க்கை செலவு தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவின் அனுமதியுடன் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினர் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முன்னர் முதலில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவா எதிர்க்கட்சி தலைவர் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவா எதிர்க்கட்சி தலைவர் என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை முதலில் நடத்துவது அவசியமாகும்.

எதிர்தரப்பினர் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது பயனற்றது. இதனை சிறந்த முறையில் எம்மால் வெற்றிகொள்ள முடியும். மக்களின் தேவைகளை உணர்ந்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது. எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டுமாயின் அவை குறித்து உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும். அரசாங்கம் பலமாக செயற்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி , ஐக்கிய தேசிய கட்சி ஆகிய தரப்பினருடன் எவ்வித தொடர்பும் எமக்கு கிடையாது. குறைபாடுகளை திருத்திக் கொண்டு சிறந்த முறையில் செயற்படுவோம்.”என்றார்.