“அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரச காணிகளை தொழில்முனைவோருக்கு பிரித்து வழங்கும் வேலைத்திட்டம் – தமிழர்கள் விண்ணப்பிக்காதவிடத்து காணிகள் தென் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சென்றடையவுள்ளது” என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் என். இன்பம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(15.11.2020) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே என்.இன்பம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்….
அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரச காணிகளை தொழில்முனைவோருக்கு பிரித்து வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசியல்வாதிகளால் பொதுமக்களுக்கு பூரண விளக்கம் வழங்கப்படவில்லை.
குறித்த திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வின்மை காரணமாக பல பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் கரிசனை செலுத்த வில்லை. ஒரு சில அரசியல்வாதிகளை தவிர ஏனையவர்கள் குறித்த விடயம் தொடர்பில் பொது மக்களுக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்த தவறி விட்டார்கள் .
இதன் காரணமாக காணி வழங்குவது சம்பந்தமான விடயம் பொது மக்களை சென்றடையவில்லை எனவே தமிழர் பகுதிகளில் தமிழ் மக்கள் காணிக்கு விண்ணப்பிக்காத விடத்து தென் இலங்கையைச் சேர்ந்தவர்கள் குறித்த காணிகளை பெறக் கூடிய நிலைமை காணப்படுகின்றது.
எனவே தமிழ் மக்களுக்கு இந்த காணி வழங்குவது தொடர்பான விழிப்புணர்வை அரசியல்வாதிகள் ஏற்படுத்த தவறினால் தமிழர் பகுதியில் உள்ள காணிகள் தென் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சென்றடையவுள்ளது எனவே இந்த விடயம் தொடர்பில் அரசியல் வாதிகள் இதுவரை கரிசனை செலுத்தாதது கவலையளிக்கின்றது.
நாளை வரை விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு இந்த வருட இறுதி வரை விண்ணப்பிக்க அரசிடம் காலநீடிப்பை கோர முயற்சிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
தொழில் முனைவோருக்கு அரசினால் காணி வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றிற்கான விண்ணப்படிவங்கள் அரசினால் கோரப்பட்டிருந்ததுடன் கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் போதுமான விண்ணப்பங்கள் கிடைத்திராமையால் திகதி இந்த மாதம் (கார்த்திகை .15) நீட்டிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இது தொடர்பாக மக்களிடையே தகவலை கொண்டு சென்று சேர்க்கவேண்டிய அரசாங்க அதிகாரிகளும் சரி அரசியல்வாதிகளுமு் சரி முறையாக தகவலை மக்களிடையே எடுத்துக்கூற தவறிவிட்டனர் என்பது தொடர்பாக பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.