உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ஐ.நா வில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் எதிரொலி – வெளிநாடுகளில் இயங்கும் 7 தமிழ் அமைப்புக்கள் கறுப்பு பட்டியலில் இணைப்பு !

வெளிநாடுகளில் இயங்கும் 7 தமிழ் அமைப்புகளையும், தனிப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் உள்ளிட்ட 300ற்கும் அதிகமானவர்களையும் இலங்கை அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்ந்துள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 25ம் திகதியிடப்பட்ட வர்த்தமானியின் ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1968ம் ஆண்டின் 45ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் 2012ம் ஆண்டின் 1ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதியின் பிரகாரம், பெயர் குறிப்பிட்ட ஆட்களின் நிரலுக்கான திருத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னணியிலேயே, இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை , அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை , தமிழ் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்புக்களே மீண்டும் தடை செய்யப்பட்டு கறுப்பு பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன.

“கிழக்கு மாகாணத்தில் 15 வருடங்களின் பின்னர் அப்பா, அம்மா என்பது இல்லாமல் போய் தாத்தே, அம்மே என்று தான் அழைப்பார்கள்.” – இரா.சாணக்கியன் !

“கிழக்கு மாகாணத்தில் 15 வருடங்களின் பின்னர் அப்பா, அம்மா என்பது இல்லாமல் போய் தாத்தே, அம்மே என்று தான் அழைப்பார்கள்.”என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை – கல்முனையில் நடைபெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,

நான் எப்போதும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். அந்தவகையில் அண்மையில் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில், ஒருவர் என்னிடம் கூறினார், வடக்கில் 20 வருடங்கள் கடந்த பின்னர் அப்பா, அம்மா என்றுதான் அழைப்பார்கள்.

அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் வாப்பா, உம்மா என்றுஅழைக்கும் நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டார். இதன்போது நான் அவரிடம் கூறினேன், கிழக்கு மாகாணத்தில் 10 அல்லது 15 வருடங்களை கடந்த பின்னர் அப்பா, அம்மா என்பதும் இல்லை வாப்பா, உம்மா என்பதும் இல்லாமல் போய் தாத்தே, அம்மே என்று தான் அழைப்பார்கள்.

இதற்கு காரணம், கிழக்கு மாகாணத்தை தமிழ் மக்கள் வாழும் பிரதேசம் என்பதை மாற்றி பெரும்பான்மையினர் வாழுகின்ற பிரதேசமாக காட்டுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் தனிமையில் வசித்து வந்த ஆண் வெட்டிப்படுகொலை !

யாழ்ப்பாணம்- புத்தூர் வீரவாணி பகுதியில் தனிமையில் வசித்து வந்த ஆணொருவர், இனந்தெரியாத சந்தேக நபர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் புத்தூர் வீரவாணி பகுதியினைச் சேர்ந்த துரைராசா சந்திரகோபல் (வயது-52) என்பவரே  இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலையிலேயே குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்  முன்பகையே கொலை செய்வதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

“ஐ.நா.வில் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டுள்ளன.” – அட்மிரல் சரத் வீரசேகர

“ஐ.நா.வில் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டுள்ளன.” என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது,

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது குறுகிய அரசியல் நோக்கங்களுக்கானதாகும். மேலும் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆகவே, இலங்கைக்கு எதிராக தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை  செயற்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. அத்துடன் இவ்விடயத்தில் எவரும் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியாது.

ஆகவே, ஐ.நா.பிரேரணை குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் இன்று ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனா – நிலை இன்னும் தீவிரமடைய வாய்ப்பு !

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று  சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 127 பேர் அடங்குகின்றனர்  என்று   வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பபாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆய்வுகூடங்களில் 746 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

143 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பீட மாணவர்கள் மூவர், தாதிய மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதியில் உள்ள மரக்கறி வியாபாரிகள், கடைகளின் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் என 127 பேருக்கு தொற்று உள்ளமை இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட  ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டிருத்த நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“இந்த நாடு இனவாதத்தில் அழியப்போகின்றது. சர்வதேசத்தின் பிடிக்குள் இந்த நாட்டைக் கொண்டு செல்ல நீங்கள் தயாராகி விட்டீர்கள். ” – நாடாளுமன்றில் சிறீதரன் !

“இந்த நாடு இனவாதத்தில் அழியப்போகின்றது. சர்வதேசத்தின் பிடிக்குள் இந்த நாட்டைக் கொண்டு செல்ல நீங்கள் தயாராகி விட்டீர்கள். ” என  வலியுறுத்தியுள்ளதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை(25.03.2021) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழ் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைகளுக்கான, அவர்கள் மீது புரியப்பட்ட போர் குற்றங்களுக்கு எதிரான, அவர்களுக்கு நீதிக்கு புறம்பாக நடைபெற்ற கொலைகளுக்கு எதிராக, சொத்தழிவுகளுக்கு எதிராக ஒரு நீதி வேண்டுமென்ற அடிப்படையில்தான் கடந்த 12 ஆண்டுகளாக ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்தியா நடுநிலை வகித்திருந்தாலும் இலங்கையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டுமென்ற செய்தியை தெளிவாக எடுத்துரைத்துள்ளதுடன், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் அவர் உரையாற்றிய பல இடங்களில் இந்த நாட்டில் ஒரு தமிழினம் இருப்பதாக,அவர்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதாக கூறியதுமில்லை. ஏற்றுக்கொண்டதுமில்லை. அவரின் கிராம மட்ட சந்திப்புக்கள் கூட இதுவரை வடக்கிலோ கிழக்கிலோ நடந்ததுமில்லை. அமைச்சர்கள் இனவாதத்தை கக்குகின்றார்கள். இந்த நாடு இனவாதத்தில் அழியப்போகின்றது. சர்வதேசத்தின் பிடிக்குள் இந்த நாட்டைக் கொண்டு செல்ல நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்றார்.

“உயிர்த்தஞாயிறு தாக்குதல் தீவிரவாத தாக்குதல் போன்று தோன்றினாலும் அது அரசியல் ரீதியிலான நோக்கங்களை கொண்டது” – அனுரகுமார திசநாயக்க

“உயிர்த்தஞாயிறு தாக்குதல் தீவிரவாத தாக்குதல் போன்று தோன்றினாலும் அது அரசியல் ரீதியிலான நோக்கங்களை கொண்டது” என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு முக்கிய சூத்திரதாரியை நோக்கத்தை தாக்குதலின் பின்னால் இருந்தவர்களை அடையாளப்படுத்த தவறியுள்ளது என தெரிவித்துள்ள அவர் அறிக்கை தாக்குதலை தடுக்க முடியாமல் போனமைக்கான காரணங்களை மாத்திரம் முன்வைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த சில பாதுகாப்பு தலைவர்கள் தாக்குதலின் பின்னணியில் மறைகரமொன்றின் சதி உள்ளது என தெரிவித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பாரதூரமான நிலைமை இதனை விசாரணை செய்யவேண்டும் சதிமுயற்சி உள்ளதா என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலை தவிர்க்க முடியாமல் போனமைக்கான காரணங்களை சரிசெய்ய முடியும் ஆனால் சதித்திட்டம் குறித்த விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படாத பட்சத்தில் நாட்டில் மீண்டும் அவ்வறானதொரு தாக்குதல் இடம்பெறும் ஆபத்துள்ளது எனவும் ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு சதிதிட்டம் குறித்து ஆராய தவறிவிட்டது என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் ஆணைக்குழு அதனை அலட்சியம் செய்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

“தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும்” – கஜேந்திரகுமார் ஜேர்மனி அரசுக்கு கடிதம் !

ஜேர்மனியில் தஞ்சம்கோரித் தங்கியிருந்த தமிழ் மக்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் 30இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கடந்த சில நாட்களில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள், பெரனில் உள்ள நாடுகடத்தல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வரும் மார்ச் 30ஆம் திகதி அவர்கள், டுசெல்டோர்ஃப் (Düsseldorf Airport) விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கூட்டு விமானத்தில் நாடு கடத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் “தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும்” என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜேர்மன் அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மார்ச் 30 ம் திகதி புகலிடக்கோரிக்கையாளர்களான பெருமளவு இலங்கை தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஜேர்மன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிந்து நாங்கள் பெரும் மனக்கலக்கம் அடைந்துள்ளோம்.
ஜேர்மனியில் உள்ள தமிழ் சமூகத்திற்கு இது ஏற்படுத்தக்கூடிய வேதனை அச்சங்களிற்கு அப்பால் இலங்கையில் இடம்பெற்ற இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை காண்பதற்கான சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் மீதும் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜேர்மனி ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய ஒருவாரகாலத்திற்குள் அந்த அரசாங்கத்திடமிருந்தே புகலிடம் கோரும் புகலிடக்கோரிக்கையாளர்களை அந்த அரசாங்கத்தின் கரங்களில் ஒப்படைப்பதற்கு ஜேர்மனி முயல்வது முற்றிலும் எதிர்மாறான செய்தியை தெரிவிப்பதாக அமையும்.
இதன் காரணமாக புகலிடக்கோரிக்கையாளர்களின் உயிர்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த தவறான முடிவை உடனடியாக மீள் பரிசீலனை செய்யுமாறு ஜேர்மன் அரசாங்கத்தை கைவிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு பலிக்கடாக்களாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி கிடைக்கவேண்டும்.” – நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்

“ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு அரசியல், பொருளாதாரம் மற்றும் இதர வழிகளில்  பலிக்கடாக்களாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி கிடைக்கவேண்டும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலருடன் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ‘சமூக நீதி’ தொடர்பான கலந்துரையாடலின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையானது முழுமையற்றதொன்றாகவே இருக்கின்றது. அதுமட்டுமல்ல அவ்வறிக்கையின் இணைப்புகள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

எனவே ஒரு பகுதியை வைத்துக்கொண்டுதான் தற்போது விவாதம்கூட நடைபெறுகின்றது.

குறித்த தாக்குதலின் பின்புலம் என்ன, பிரதான சூத்திரதாரிகள் யார், திட்டமிட்டது யார் என்பன உட்பட தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறியப்பட வேண்டும் என்பதுதான் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அனைவரினதும் கோரிக்கையாக இருந்தது.

இந்நிலையில் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு தவறியவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு கூடுதல் கவனம் செலுத்தியிருந்தாலும் அடி, முடி தொடர்பில் உரிய வகையில் ஆராயவில்லை என்பதுதான் பொதுக்கருத்தாக இருக்கின்றது.

எனவே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து வழிகளிலும் உண்மைகள் கண்டறியப்படவேண்டும். சூத்திரதாரிகள் யார் என்பது தொடர்பிலும் தாக்குதலின் உண்மையான நோக்கமும் உரிய வகையில் பகிரங்கப்படுத்தப்படவேண்டும்.

இதன் பின்னணியில் செயற்பட்டுள்ள வெளி சக்திகள் உள்ளிட்ட விடயங்களும் வெளிச்சத்துக்கு வரவேண்டும். அவ்வாறு செய்வதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்துக்கு நீதியை பெற்றுக்கொடுக்ககூடியதாக இருக்கும்.

மேலும் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் மீதும் பேரினவாதிகள் பயங்கரவாத முத்திரை குத்தினர். இஸ்லாம் மதத்தையும் அவதூறுபடுத்தினர். அப்பாவி முஸ்லிம் மக்கள் பலிக்கடாக்களாக்கப்பட்டனர். அவர்கள் வேட்டையாடப்பட்டனர்.

முஸ்லிம் வியாபாரிகளின் வர்த்தகமும் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டது. எனவே தாக்குதலையடுத்து பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி வேண்டும்.

அவர்கள் தொடர்பான களங்கம் நீக்கப்படவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“வலிமை மிக்க நாடுகளின் பூகோளஅரசியல் தேவைகளிற்காக இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பதற்கு நான் தயாரில்லை.” – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச

“இந்துசமுத்திரத்தின் வலிமை மிக்க நாடுகளின் பூகோளஅரசியல் தேவைகளிற்காக இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பதற்கு நான் தயாரில்லை” என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 அங்கு மேலும் பேசிய அவர் ,
சுதந்திரமான நாடு என்ற அடிப்படையில் அனைத்து சர்வதேச சவால்களையும் சந்திப்பதற்கு தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரiவையின் சவால்கள் காணப்படுகின்ற போதிலும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய சர்வதேசநாடுகளிற்கு இடையிலான மோதல்களின் ஒரு பகுதியாக விளங்குவதற்கு நான் தயாரில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பை விட்டுக்கொடுக்க தயாரில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.