உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக எந்த வகையிலேனும் எங்களுடைய போராட்டங்கள் தொடரும்.” – மாவை சேனாதிராஜா

“தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக எந்த வகையிலேனும் எங்களுடைய போராட்டங்கள் தொடரும்.” என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனால் இன்றைய தினம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளளோம்.

கொரோனா அச்சுறுத்தலால் மக்களை ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்ற போதிலும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக எந்த வகையிலேனும் எங்களுடைய போராட்டங்கள் தொடரும்.

தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழ் இனத்தின் பெரும்பான்மைத்துவத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம்.”  எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

“நான் புலியென்றால் நீ நாய், நாய்தான் இடையில் புகுந்து குரைக்கும் வாயை மூடிக்கொண்டு இருடா பைத்தியக்காரா.” – பேச விடாது தடுத்த பாராளுமன்ற உறுப்பினரை நோக்கி இரா.சாணக்கியன் !

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இரா. சாணக்கியன்   பேசும் போது   புலி என்று கூறியவருக்கு “நான் புலியென்றால் நீ நாய், நாய்தான் இடையில் புகுந்து குரைக்கும் வாயை மூடிக்கொண்டு இருடா பைத்தியக்காரா.” என பதில் வழங்கி தன்னுடைய பாராளுமன்ற உரையை ஆற்றியுள்ளார் இரா. சாணக்கியன்.
 Covid 19 இன் மூன்றாவது அலையினை எமது நாடு எதிர்நோக்கியுள்ளது. 700 பேர் மட்டில் இறந்துள்ளார்கள். இதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை விசாரிப்பதற்கென இதற்குரிய ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். எம் நாட்டு மக்கள் இறப்பதற்கு யார் காரணம் என்பதனை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும்.
2020ஆம் ஆண்டு அவசரமாக தேர்தல் நடத்தியமையினாலேயே Covid 19 முதலாவது அலையை எதிர்கொண்டோம். Covid 19 முதலாவது அலை ஏற்படுவதற்கான முழுக் காரணம் இந்த அரசாங்கமே. Covid 19 முதலாவது அலையிலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.
மார்ச் மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை இடம்பெற்ற Covid 19 முதலாவது அலையில் 20 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியது இந்த அரசாங்கம். Covid 19 மூன்றாவது அலை Fort City அலை. பாராளுமன்றம் இங்கு கூடியிருப்பது நாளைய தினம் Fort City இனது இரண்டாவது வாசிப்பினை எடுக்க வேண்டும் எனும் காரணத்திற்காகவே ஆகும். பல்வேறுபட்ட கருத்திட்ட செயற்றிட்டங்களை மேற்கொள்வது என்று கூறி கிராமிய மக்களை ஏமாற்றாமல் நாட்டிற்குத் தேவையானதை செயற்படுத்துங்கள்.
 கிழக்கு மாகணத்தில் மாகண சபைத் தேர்தல் நடைபெறுமா? நடை பெறாதா? என்ற நிலை காணப்பகின்றது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசாங்கத்துடன் இணைந்து 20 வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள், அரசாங்கத்தின் கைக்கூலிகள் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு முதலமைச்சரை கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்தில் 2008 – 2012 வரை ஒரு தமிழ் முதலமைச்சர், 2013 – 2017 வரை முஸ்லீம் முதலமைச்சர் அடுத்த தேர்தலில் ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த முதலமைச்சரைக் கொண்டு வர வேண்டுமென்ற எண்ணம் கொண்டுள்ளார்கள். 25 மாவட்டங்களில் 25 RDHS மாத்திரமே உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 26 வது RDHS ஒன்று உள்ளது. கல்முனைப் பிரதேசத்திற்கென ஒரு RDHS, அம்பாறை மாவட்டத்திற்கென ஒரு RDHS காணப்படுகின்றது. கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஒன்று உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்துடன் நிலத்தொடர்பு இல்லாத கல்வி வலயம் ஒன்று உள்ளது. இன்று கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் என்ற ஒன்றை உப பிரதேச செயலகமாக தரம் குறைத்துள்ளனர். இதற்கு கல்முனையை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் இதற்கு பின்னணியாக இருப்பார் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. இந்தச் செயலானது தமிழ் – முஸ்லீம் மக்களுக்கிடையில் இருக்கும் உறவினை சீர்குலைப்பதற்காகவே நடைபெறுகின்றது.
 இலங்கையில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல பிரச்சினைகள் எழுகின்றன. ஒரு கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்கள், அசாத் சாலி அவர்களைக் கைது செய்து வைத்துள்ளார்கள், புர்கா அணிவதைத் தடை செய்துள்ளார்கள், மதரசாக்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளார்கள். இதில் எதற்காவது முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்தார்களா? ஆனால் தமிழ் – முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக செயற்படுகின்றார்கள்.
இங்கு அவர்கள் அரசியல் ஆதாயத்தையும் தங்கள் இருப்பையும் தக்கவைத்துக்கொள்ள முனைகின்றார்கள். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரச தமிழ் அரசியல் வாதிகளும் மக்களுக்கு எதிரான செயல்களை மேற்கொள்கின்றார்கள். இராஜங்க அமைச்சர் வியாளேந்திரன் அவர்கள் கூறினார் கல்முனை பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவில்லை என்றால் கிழக்கு மாகண நிர்வாகத்தை முடக்குவேன் என்று. ஆனால் இன்று அதைப் பற்றி எவ்வித பேச்சுக்களும் இல்லை.
பிள்ளையான் அவர்கள் பாராளுமன்ற பங்குபற்றல் மற்றும் செயல்பாடுகளின் தர வரிசையில் 223 வது இடத்தில் காணப்படுகின்றார். ஆனால் சம்மந்தன் ஐயா 88 வயதிலும் 216 வது இடத்தில் உள்ளார். மட்டக்களப்பு மக்கள் மட்டக்களப்பினை மீட்பேன் என்று பிள்ளையான் கூறிய பொய்யினை நம்பி அவருக்கு வாக்களித்துள்ளார்கள். இவரால் இன்று வரை கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்குரிய நடவடிக்கை எதனையும் செய்யவில்லை. கருணா அம்மான் என்பவர் வந்தார் மக்களின் வாக்குகளைப் பிரித்தெடுத்து விட்டு தற்போது அவரையும் காணவில்லை. தமிழ் – முஸ்லீம் மக்களுக்கிடையிலான ஒற்றுமையினை பலப்படுத்த வேண்டும். கிழக்கு மாகாணத்தில் சிங்கள பேரினவாத ஆதிக்கம் அதிகரித்துகொண்டு வருகின்றது. விகாரை மற்றும் பெளத்த மையம் என்பவற்றினை கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மயிலத்தமடுவில் 10,000 ஏக்கர் காணியும் மற்றைய இடங்களில் 5000 ஏக்கர் பறிபோயுள்ளது . இதைப்பற்றி கதைக்க முடியாத கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இன்று தமிழ் – முஸ்லீம் மக்களுக்கிடையிலான ஒற்றுமையினை சீர்குலைக்கப் போகின்றார்கள் அதற்கான திட்டம் தீட்டுகின்றார்கள்.” எனவும் கூறியுள்ளார்.

“சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான்.” – எம்.ஏ.சுமந்திரன்

“சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான். ஆகவே அரசியலில் பொய் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் எனக்கு கிடையாது. ”  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான். ஆகவே அரசியலில் பொய் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் எனக்கு கிடையாது. குறிப்பாக எதிரணியினர் இவ்வாறு கூறி திரிகின்றார்கள். ஜெனிவா தொடர்பாக பல இடங்களில் பல விளக்கங்களை கொடுத்திருக்கின்றேன்.

அதில் கேட்கப்பட்ட கேள்வி அனைத்திற்கும் பதில் கூறியுள்ளேன். ஆகவே எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை கூட நான் சொன்னது கிடையாது. மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பதால் பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது. ஏனென்றால் சந்திரனை கொண்டு வருவோம், சூரியனை கொண்டு வருவோம் என மக்களுக்கு அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நான் அவ்வாறு இல்லை. இப்படி தான் என தெளிவு படுத்துகின்றேன். இவ்விடயம் தான் அவர்களுக்கு கசக்கின்றது என குறிப்பிட்டார்.

“உண்மையற்ற செய்திகள் மக்களுக்குள் பரவி குழப்ப நிலைகளை ஏற்படுத்துவதை ஊடகங்கள பொறுப்புடன் தடுக்க வேண்டும்.” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது மட்டுமே ஊடகங்களின் பணி அல்ல, உண்மையற்ற செய்திகள் மக்களுக்குள் பரவி குழப்ப நிலைகளை ஏற்படுத்துவதையும் ஊடகங்களே பொறுப்புடன் தடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்துலக ஊடக சுதந்திர தினத்தையொட்டி விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ள அவர் ,

இன்று நாடு சந்தித்து நிற்கும் பெரும் சுகாதார நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், அவ்வாறு செயற்படுவதே ஊடகங்களின் பெரும் பொறுப்பாகவும் இருக்க முடியும்.

நிறைவுகள் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்து, குறைகளை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தி ஒரு நாட்டையும் அதன் மக்களையும் திறம்பட நிர்வகித்துச் செல்வதில் ஓர் அரசாங்கம் சந்திக்கும் சவால்களை விமர்சிப்பது அல்லாமல், மக்களை நல்வழிப்படுத்திச் செல்வதில் அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான உறுதுணையாகவும் ஊடகங்களே திகழ வேண்டும்.

அவையே, ஊடக சுதந்திரம் என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் ஆகும். எமது நாட்டில் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் எமது அரசாங்கம் உறுதிப்பாட்டோடு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் இடம் இல்லை – மக்களோடு மக்களாக அலைந்து திரிந்த பெண் கொரோனா நோயாளி !

காய்ச்சல் மற்றும் சளி காரணமாக இந்த மாதம் 28 ஆம் திகதி அம்பியூலன்ஸ் மூலம் தம்பதெனிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்க பெண்ணுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரத்தரன் ஹேன பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கே இவ்வாறு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த பெண்ணுக்கு 1ஆம் திகதி அறிவிக்கப்பட்டதுடன், மருத்துவமனையில் இடம் இல்லாததால் வீட்டில் தங்கும்படி கூறப்பட்டது. பின்னர் அவர் தம்பதெனிய மருத்துவமனையில் இருந்து கிரியுல்ல பகுதிக்கு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

மீண்டும் கிரியுல்ல பகுதியிலிருந்து மீரிகம விலவத்த பகுதிக்கு பஸ்ஸில் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் விலவத்த பகுதியிலிருந்து யயத்தல்கொட வரை ரயிலில் பயணம் செய்து ரத்தரன் ஹேனவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருந்தார்.

பின்னர் அன்று மாலை இந்த பெண் தம்பதெனிய கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டதாக சுகாதார அதிகாரி கூறினார்.

குறித்த பெண் கொரோனாவுடன் பஸ் மற்றும் ரயிலில் பயணம் செய்துள்ளதால் இவரால் பலருக்கு கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பெண்ணுடன் பஸ் மற்றும் ரயிலில் பயணித்தவர்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

“முஸ்லிம் கட்சிகளுடன் எம்.ஏ.சுமந்திரன் , சாணக்கியன் பேசியிருக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தையே தவிர கூட்டமைப்பினுடையது அல்ல.” – கோவிந்தன் கருணாகரம்

“முஸ்லிம் கட்சிகளுடன் எம்.ஏ.சுமந்திரன் , சாணக்கியன் பேசியிருக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தையே தவிர கூட்டமைப்பினுடையது அல்ல.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். ஒன்றிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கருத்தாக அவர்களின் தீர்மானங்களைக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நேற்று முன்தினம் ஊடகங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றியும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப் பற்றியும் வந்த செய்திகள் மக்கள் மத்தியில் குழப்பமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாகக் கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே அந்த செய்திக்குப் பின்பு ஒரு அதிர்வலை ஏற்பட்டது. எனக்கும் பல தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களாக அதாவது முஸ்லிம்களுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்காக நாங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றோம் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பத்திரிகையாளர் மாநாட்டிலே குறிப்பிட்டிருந்தார்கள்.அந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் கூட அப்படி நடந்ததாகக் கூறியிருந்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் மூன்று கட்சிகள் அதில் அங்கம் வகிக்கின்றன. அதன் ஒரு கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமாகக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நான் பதவி வகித்துக் கொண்டிருக்கின்றேன்.

இந்த வேளையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அலுவலக ரீதியாக எந்தவொரு கட்சிகளுடனோ குறிப்பாக முஸ்லிம் கட்சிகளுடனோ முஸ்லிம் காங்கிரஸுடனோ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை.

சிலவேளைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , சாணக்கியன் பேசியிருக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தையோ விருப்பமோ தவிர தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையாகக் கருத முடியாது. என்றார்.

யாழில் கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறி ஆலய திருவிழா – உபயக்காரர் தனிமைப்படுத்தலில் !

கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத்தில் திருவிழா நடத்திய உபயக்காரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காரைநகர் களபூமி பகுதியில் உள்ள ஆலயத்தில் வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. நேற்றைய தினம் திங்கட்கிழமை தேர் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் நேற்றைய தினம் சப்பர திருவிழா நடைபெற்றது.

அதன் போது காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரின் அறிவுறுத்தல்களை மீறி ஆலயத்தில் பெருமளவானோர் சப்பர திருவிழாவில் கூடியிருந்தனர்.

சுகாதார விதிமுறைகள் , கட்டுப்பாடுகளை மீறி 50க்கும் மேற்பட்டோர் உரிய முறையில் முக கவசங்கள் இன்றியும் , சமூக இடைவெளிகளை பேணாதும் திருவிழாவில் கூடி இருந்துள்ளனர்.

அதனை அடுத்து, ஆலயத்திற்கு சென்றிருந்த சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்டோர் ஆலய திருவிழாவினை நிறுத்தி, ஆலய குருக்கள் , உபாயக்காரர் , ஆலய நிர்வாகத்தை சேர்ந்தோர் உள்ளிட்ட 4 பேரை தனிமைப்படுத்தி உள்ளனர்.

ரஷ்யாவிலிருந்து இலங்கையை வந்தடைந்த ஸ்புட்னிக் தடுப்பூசிகள் !

ரஷ்யாவிலிருந்து 15,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன.

இந்த தடுப்பூசிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொறுப்பேற்றுக்கொண்டார்.

இது இலங்கையால் ரஷ்யாவிடம் கொள்வனவு செய்யப்படுகின்ற மொத்த தடுப்பூசிகளின் முதற்கட்ட எண்ணிக்கையாகும்.

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 800 குற்றச்சாட்டுக்கள் !

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 800 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவர்களுக்கு எதிரான வழக்குகள் இரண்டு விசேட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணை செய்யப்படவுள்ளன எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 800 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்திருந்த நிலையிலும், தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் – 13 பேர் பலி !

இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 113,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதே நேரம் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றையதினம்  உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளது.