உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் – ஹரிணி அமரசூரிய

நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய  தொிவித்துள்ளாா்.

 

வளமான நாடு சுகமான வாழ்வு என்றும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ஹரிணி அமரசூரிய,

 

தேர்தல் நடைபெறும் போது போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கொள்கை பிரகடனத்தை வெளியிடுவது வழக்கமானதே.ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் நாட்டிற்கு பொருத்தமான மக்களுக்கு தேவையான கொள்கை திட்டமொன்றே அவசியமாகின்றது.

 

கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதை பலர் ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுகின்றனர்.இது இன்று நாட்டில் அரசியல் கலாசாரமாக உள்ளது.

 

பலர் கட்சிமாறுகின்றனர் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதனை முற்றாக மாற்றுகின்றார்கள். மக்களால் தெரிவு செய்யடுகின்ற ஆட்சியாளர்களினால் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்.

 

தேர்தல் ஒன்று இடம்பெறும் போது மக்கள் மத்தியில் உரையாற்றும் வேட்பாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை.அதன்பின்னர் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் அங்கு செயலற்றுபோகின்றது.

 

இவ்வாறான அரசியல் கலாசாரத்தை மாற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மேலும் தொிவித்தாா்.

மது அருந்தி விட்டு கடமையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி யாழில் கைது !

குறிகட்டுவான் பகுதியில் மது அருந்திவிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (24) பொதுமகனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் குறிகட்டுவான் பகுதியில் மது போதையில் கடமையில் ஈடுபட்டிருந்தார்.

 

இதன்போது வீதியால் சென்ற நபரை மறித்து அவருடன் முரண்பட்டு, இலஞ்சம் வாங்க முற்பட்டுள்ளார். பின்னர், அவரை தாக்கியுள்ளார்.

 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

அதன் அடிப்படையில் தாக்குதலை மேற்கொண்ட ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைதானவர் மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

 

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை இன்று ஞாயிற்றுக்கிழமை (25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி !

எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சரத்சந்திர தெரிவித்துள்ளார்.தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 128,585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86,889 வாக்காளர்களும் மன்னார் 90,607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

இதேவேளை, 13,389 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 228 தபால் வாக்களர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வன்னி தேர்தல் தொகுதியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சரத்சந்திர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் வைத்தியர்களின் கவனயீனத்தால் இறந்த பெண்ணின் கணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு !

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 26 வயதுடைய எஸ்.சுதன் என்பவரே வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மன்னார் வைத்தியசாலையில் இளம் பட்டதாரி பெண் சிந்துஜா, குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.

இதனைத்தொடர்ந்து அவருடைய கணவர் தனது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டொக்டர் அர்ச்சுனா சாவகச்சேரிக்கு வரலாம்? போராட்டம் தொடர வேண்டும்! : காணொலி

டொக்டர் அர்ச்சுனாவின் ஆறுநாள் விடுமுறை நிறைவடைந்த நிலையில், தான் தற்போதும் பொறுப்பிலிருப்பதாகத் தெரிவிக்கும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தான் செல்ல இருப்பதாக டொக்டர் அர்ச்சுனா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். டொக்டர் அர்சுனாவை மத்திய அரசே நியமித்த காரணத்தால், நாளை தனக்கு இடமாற்றம் தரப்பட்டால் அதற்குக் கட்டுப்படுவேன் எனத் தெரிவித்துள்ள அவர், இடமாற்றக் கடிதம் மத்திய அமைச்சிலிருந்து வழங்கப்படாவிட்டால் தான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணியைத் தொடருவேன் என அவர் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னோடியாக நேற்றையதினம் (13) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மருத்துவக் குழுவினரும் சாவகச்சேரி மருத்துவமனை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். மருத்துவமனையின் அபிவிருத்திச் சங்கத்தினர் தற்போது பொறுப்பேற்றுள்ள மருத்துவ குழுவினர் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை வைத்ததுடன், மூன்றுநாட்கள் திடீர் போராட்டத்தை நடத்த உங்களுக்கு யார் உரிமை தந்தது என்று கேட்டு துளைத்தெடுத்தனர். டொக்டர் அர்ச்சுனா மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

நாளை சாவகச்சேரிக்கு டொக்டர் அர்ச்சுனா வருவார் என்ற நம்பிக்கையில் அவரை வரவேற்க மக்கள் பெருமளவில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டொக்டர் அர்ச்சுனாவின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்பாக பதின்ம வயது முதல் மக்கள் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட இடதுசாரிச் சிந்தனையாளரும் லண்டன் கம்டன் கவுன்சிலில் புரஜக்ற் மனேஜராக இருந்து ஓய்வுபெற்று 2009 முதல் யாழில் பல்வேறு சமூக செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவரும் மயில்வாகனம் சூரியசேகரம் இந்த மக்கள் போராட்டம் பற்றிய கள யதார்த்தத்தை தேசம்நெற் நேயர்களுடன் மனம் திறந்து பகிர்ந்து கொள்கின்றார்.

._._._._._.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முக்கியமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது அமைச்சருடைய அலுவலகத்தில் நேற்றையதினம் (13) இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையின் சீரற்ற பிரச்சனைக்கு காரணமானவர்கள் என்று வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினாலும் மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலை போராட்டத்தில் கலந்துகொண்டவர்களால் குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர்களின் பிரதிநிதிகளுக்கும் அந்த வைத்தியசாலை அபிவிருத்திசங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், வைத்தியர்கள் சார்பாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரன, வைத்தியர் கேதீஸ்வரன் மற்றும் தற்போதைய பதில் வைத்திய அத்தியகட்சகராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதவி ஏற்றிருக்க கூடிய வைத்தியர் ரஜீவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் வைத்தியர் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து வைத்தியசாலையை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் 21 ஆம் திகதி வைத்தியசாலை தொடர்பில் பரந்தளவான சந்திப்பை ஏற்படுத்தி கலந்துரையாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 17 ஆம் திகதி சுகாதார அமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மாகாண சுகாதார பணிமனையில் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘Sugar Daddy’ தியாகியின் ஸ்ரன்ட் பொலிரிக்ஸ் Stunt Politics! : த ஜெயபாலன்

தியாகியின் திருவிளையாடல்கள் அம்பலத்துக்கு வர தியாகி அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை மீள் பிரவேசத்திற்கு தயாராகின்றார். ஒரு ஸ்ரன்ட் அடித்துள்ளார்.’தற்காலிகமான ஓய்வு எடுக்கிறேன், நிரந்தரமா என்று காலம் தான் முடிவு செய்யும்’ என யூன் 10இல் அறிவித்து உதவி வழங்குவதை நிறுத்தியுள்ளார். இது தன்னை நியாயப்படுத்துவதற்கு வாமதேவன் தியாகேந்திரன் அடித்த அந்தர் பல்டி. இவ்வாறு செய்தால் தனக்கு ஆதரவான ஒரு அலையை தன்னுடைய உதவி வேண்டும் என்று கேட்பவர்கள் எழுப்புவார்கள் எனத் தியாகேந்திரன் கருதியிருக்கலாம். மேலும் அவரால் வளர்க்கப்பட்ட யூரியூப்பேர்ஸ் மற்றும் சமூக வலைத்தள பிரகிருதிகள் அவருக்காகக் குரல் கொடுப்பார்கள் அதன் மூலம் றீ-என்ரி (re-entry) ஆகலாம் எனப் பார்க்கின்றார். ஆனால் அது அவ்வளவாக வாய்க்கவில்லை. தம்மன்னா – இந்திரன் கோஸ்டியையே மூடிக்கட்டிக்கொண்டு போக வைத்தது யாழ்ப்பாணம். தியாகியெல்லாம் மற்றரே (matter) கிடையாது. ஆனாலும் தியாகி இன்னுமொரு முயற்சி எடுப்பார், மக்களுக்கு தன்னுடைய உதவி தேவைப்படுகின்றது. மக்கள் கேட்கிறார்கள் என்று ஒரு ரீலோடு இன்னுமொரு என்ரிக்கு இடமிருக்கிறது.

உதவி வழங்குகிறேன் என்ற பெயரில் அண்மைக்காலமாக பணத்தை விட்டெறிந்து வரும் தியாகி என அறியப்பட்ட 74 வயதான வாமதேவன் தியாகேந்திரன் யாழ்ப்பாணத்தை தன்னிடம் தந்தால் ரணில் விக்கிரமசிங்கவை தான் ஆதரிப்பேன் என்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பத்துக் கோடி வழங்குவதாகவும் தெரிவித்து வருகின்றார். மதியாதார் முத்தம் மிதிக்கமாட்டேன் என்றவர் ரணில் விக்கிரமசிங்க தன்னை வந்து சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றார். அண்மையில் சிறிதுகாலமாக பிரபல்யம் அடைந்து வரும் திடீரென முளைத்துள்ள இந்தத் தியாகி யார்? இவருக்கான நிதி எங்கிருந்து வருகின்றது? ஏன் இந்த நிதியை இவர் இவ்வாறு செலவு செய்கின்றார்?

தியாகி யாழ்ப்பாணம் நல்லூரடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர்கள் யாழ் மேட்டுக்குடியினர். தியாகேந்திரனின் தாயார் சொர்ணாம்பிகை இவர் முன்னாள் யாழ்ப்பாணச் சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் ஒன்றுவிட்ட சகோதரி. அதாவது யோகேஸ்வரனின் தந்தை மருத்துவர் ஏ எஸ் வெற்றிவேலுவின் சகோதரன் புகழ்பெற்ற சட்டத்தரணி ஏ எஸ் நவரத்தினத்தின் ஐந்து பெண் பிள்ளைகளில் ஒருவர். தியாகேந்திரனுக்கு யோகேஸ்வரன் மாமா முறை. தியாகேந்திரன் இனப்பிரச்சினை பூதாகாரமாவதற்கு முன்பே புலம்பெயர்ந்து சுவிஸில் குடும்பத்துடன் குடியேறிவிட்டார். இவருடைய மனைவி நந்தினி தியாகேந்திரன். இவருக்கு இரு பெண் பிள்ளைகள் நிலாயினி, தக்சாயினி ஆகிய இருவரும் மருத்துவர்களாக உள்ளனர். நிலாயினி அறக்கட்டளை ஒன்றை நடத்துகின்றார். தக்சாயினி மருத்துவ நிலையம் ஒன்றை இயக்குகின்றார். மற்றும் மகன் அர்ச்சுனா கனன் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக உள்ளார். இக்குடும்பத்தினர் சுவிஸில் தமிழ் சமூகத்தோடு ஒன்றியிருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு இருக்க வேண்டும் என்ற நியதியும் இல்லை. அவர்கள் கண்ணியமானவர்களாக அந்நாட்டோடு இயைந்து வாழ்பவர்களாகவே உள்ளனர்.

ஆனால் இவருடைய மகன் அர்ச்சுனா தியாகேந்திரனின் திருமணத்தின் போது கொழும்பில் ஒரு சீதன வீட்டைக் கேட்டு துன்புறுத்தி இறுதியில் அத்திருமணம் முறிந்தது கிளைக்கதை.

தியாகேந்திரன் 2000ம் ஆண்டு சமாதான காலத்தில் தனியாக இலங்கைக்குத் திரும்பி வாழ்கின்றார். தியாகேந்திரன் கோடிக் கணக்கில் உதவி வழங்குவது பாராட்டுக்குரியது தான். இவருக்கு இவ்வளவு கோடிக்கணக்கில் பணம் எங்கிருந்து வருகின்றது என்பதும் ஏன் இதனை இப்படி வழங்குகிறார் என்பதும் சமூக அக்கறையுடைய ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டிய கேள்வி.

தியாகேந்திரனுக்கு சட்டப்படி பணம் வருகிறதோ சட்ட விரோதமாக வருகின்றதோ என்பதற்கு அப்பால் அவற்றை ஏன் அவர் விசுக்குகின்றார் என்பதை அறிந்தால் பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கலாம்.

விளக்கம் 1: தன்னை எம்ஜிஆர் ரசிகனாகக் காணும் அவர் அவ்வாறான கோமாளித் தனங்களை தொடர்ச்சியாகச் செய்து வருகின்றார். இவ்வாறு அள்ளிக் கொடுப்பதால் தன்னை ஒரு கொடைவள்ளல் என உலகம் போற்றும் என நினைக்கலாம். அவருக்கு 74 வயதாகிவிட்டது. பிள்ளைகளும் நல்ல நிலைக்கு வந்துவிட்டனர். இருக்கிறதை வாரிக் கொடுத்து பெயரெடுக்க எண்ணி இருக்கலாம். இந்த மனநிலை வருவது மிகக்குறைவு. பணத்தை வைத்திருப்பவர்கள் எப்பவும் அதனை மேலும் மேலும் சேர்க்கவே முனைவார்கள். அவர்களின் மரணத்தின் விளிம்பில் கூட. அந்த வகையில் தியாகேந்திரன் வித்தியாசமானவர்.

விளக்கம் 2: தன்னை கொடையாளியாக அறிமுகப்படுத்தி ஒரு அரசியல் வாதியாவது. பிரித்தானியாவில் இருந்து ஊருக்குச்சென்ற தொழிலதிபர் கணேஸ் வேலாயுதம், நெதர்லாந்தில் இருந்து ஊருக்குச் சென்றுள்ள ஐபிசி பாஸ்கரன் வரிசையில் தியாகேந்திரனுக்கும் ஒரு முதலமைச்சர் கனவு இருக்கின்றது. ஆனால் தமிழ் மக்களிடம் இருக்கின்ற அரசியல் விழிப்புணர்வால் அவர்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை கணக்குப் பார்க்கத் தெரியாத முட்டாள் அல்ல தியாகேந்திரன். ஏற்கனவே தேர்தலில் நின்று மண்கவ்விய அனுபவமும் அவருக்கு உண்டு. அதனால் தான் தேர்தலில் நின்று கஸ்டப்படாமல் யாழ்ப்பாணத்தைக் கேட்கின்றார். மிகத் தெளிவாக ஆளுநர் பதவியைக் கேட்கின்றார். போர்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயேர் வந்து ஆண்ட யாழ்ப்பாணத்தை சுவிஸில் இருந்து வந்த தான் ஏன் ஆளமுடியாது என்று நினைக்கின்றார் போலும். அவர் ரிசிரி (TCT: Thiyagi Charitable Trust) சுப்பர் மாக்கற் லெவலுக்கு யாழ்ப்பாணத்தை கொண்டிழுக்கலாம் என நினைக்கிறாரா? அல்லது தனது திருகுதாளங்களைத் தொடர அது வசதியாக இருக்கும் என நினைக்கின்றாரா?

விளக்கம் 3: பணத்தை தேக்கி வைக்காமல் அதனைப் பாய விடுவதன் மூலமே மேலும் பணத்தை சம்பாதிக்க முடியும். அறக்கட்டளைகள் மூலமாக கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் பல நடவடிக்கைகள் உலகம் பூராகவும் நடக்கின்றது. ஆனால் மேற்கு நாடுகளில் இந்த பண பரிவர்த்தனை முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்களை உச்சுவதற்காக உண்டியல் என்ற பண மாற்று முறைமையூடாக கருப்புப் பணத்தை அறக்கட்டளைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அதில் பத்து வீதத்தை அவர்கள் தங்களுக்கு பெற்றுக்கொண்டு மிகுதி தொண்ணூறு வீதத்தை பணம் அனுப்பியவர் தருகின்ற வங்கிக் கணக்கில் வைப்பிலிட வேண்டும். இதன்படி பத்துக்கோடி பரிவர்த்தனை இடம்பெற்றால் உண்டியலில் பெற்று வங்கியில் வைப்பிட ஒரு கோடி கிடைக்கும். இவ்வாறான நடவடிக்கையில் உலகின் பல பாகங்களிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் ஒரு இரகசிய வலைப்பின்னல் இருப்பதாகவும் அவ்வாறான வலைப்பின்னல் உள்ளவர்களுக்கு தான் சிலரை அறிமுகப்படுத்தியதாக சுவிஸ்லாந்தில் வாழும் போராட்ட அமைப்பொன்றின் முன்னாள் உறுப்பினர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

தியாகேந்திரன் தான் எவ்வளவு பணத்தை மக்களுக்கு கொடுத்தார் என்பதையோ பணம் எங்கிருந்து வருகின்றது என்பதையோ குறிப்பாகச் சொல்லவில்லை. தன்னுடைய பிள்ளைகளதும் அல்ல, தன்னுடைய சொந்தப் பணம் தனது பென்சன் பணம், தான் கார்களை பழுது பார்த்து ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் பணம் என்று சொல்கின்றாரேயல்லாமல் அதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. இவர் தன்னுடைய வீட்டில் நிற்கும் கார்களைக் காட்டுகின்றார். ஆனால் பா உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் பென்ஸ் மொடலில் வந்த அத்தனை கார்களும் அருங்காட்சியகம் போல உள்ளது. அவரிடம் உள்ள சொத்துக்கள் தியாகேந்திரனிடம் உள்ளதா தெரியவில்லை. ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்கும் தியாகேந்திரன் பல வேலைத்திட்டங்களைச் செய்துள்ளார். தியாகேந்திரன் இராணுவத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகேந்திரனிடமிருந்து சற்றுத் தள்ளியே நிற்கின்றது. ஆனால் மணிவண்ணன் கோஸ்டி இன்னமும் ஒட்டுறவாகவே உள்ளது. ஆரிய குளத்தை ஒரு சுற்றுலாப் புள்ளியாக்கியது தியாகேந்தரனின் உதவித்திட்டம் தான். மணிவண்ணன் மேயராக இருந்தும் அப்பதவியைப் பயன்படுத்தி எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை.

தியாகேந்திரன் சமூக அக்கறையுடைய ஒரு மனிதராகத் தெரியவில்லை. தன்னுடைய அடையாளத்தை நிலைநிறுத்தவும் ஒரு பிரபலமாக ஆவதையும் விரும்புகின்றார். அதில் எந்தத் தவறும் கிடையாது. அதற்காக சட்டபூர்வமான பணமோ சட்டத்துக்கு புறம்பான பணமோ அதனை மக்களுக்கு வழங்கி இருக்கின்றார். ஆனால் எம்மத்தியில் ஒரு பழமொழி உண்டு. வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என்று. இன்றைய சூழலில் சந்தைப்பொருளாதாரச் சூழலில் எல்லாமே சந்தைக்கு வந்துவிட்டது. அறக்கட்டளைகளும் அப்படித்தான். ஆனால் தியாகேந்திரன் உதவி கேட்பவர்களை தனக்குக் கீழானவர்களாக ஆட்டுவிப்பது, நலிந்தவர்களை, நடக்க முடியாத வயதானவர்களை, நோய்வாய்ப்பட்டவர்களை, உடல் ஊனமுற்றவர்களை அவர்களது தனித்துவத்தை ஏறி மிதிக்கும் வகையில் எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி தனதிடத்திற்கு வரவழைத்து, நெரிசல்படவிட்டு, காத்திருக்க வைத்து இவ்வாறு நடந்துகொள்வது ஒரு சமூக அக்கறையுடையவர் செய்யும் சேவை கிடையாது. தியாகேந்திரன் காசை நிலத்தில் போட்டு மிதித்தது ஒன்றும் பெரிய குற்றமாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தக் காசை மிதித்தன் மூலம் அதனை வேண்ட வந்த சமூகத்தின் நலிந்த மக்களைப் போட்டு மித்திதுள்ளார். அந்த மக்களைக் கேவலப்படுத்தியுள்ளார்.

யாழ் மேட்டுக்குடியிலிருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் தம்பதிகளுக்குப் பிறந்து கல்வியிலும் முன்னேற்றம் கண்டு வாழுகின்ற இவருடைய பிள்ளைகள் பொருளாதார ரீதியில் மேன்நிலையிலிருப்பது ஆச்சரியமல்ல. இவர்களைக் காட்டிலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேல்நிலையில் உள்ள பலரைத் தமிழ்ச் சமூகம் கண்டுள்ளது. இலங்கையிலேயே இந்நிலையில் இருப்பவர்கள் இன்னமும் இலைமறைகாயாக வாழ்கின்றனர். சிறந்த பெறுபேறு பெற்றவர்களையும் பல்கலைக்கழகப் பட்டதாரியானவர்களையும் அவர்களுடைய சுயமரியாதையை மிதிக்கும் வகையில் கேவலப்படுத்துவது அழகல்ல. வடக்கு கிழக்கில் பல கொடையாளிகள், தொண்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கான உதவிகளை நாளாந்தம் எங்கோ ஒரு மூலையில் மேற்கொண்டு வருகின்றன. அவற்றை இன்னமும் வினைத்திறனோடும் சீரான முறையிலும் மேற்கொள்ள வேண்டும் என்ற விமர்சனங்கள் வருகின்ற போது, தியாகேந்திரனின் ரிசிரி நடவடிக்கைகள் காலனித்துவ கால பிரபுக்கள் அடிமைகளுக்கு உதவி வழங்குவது போன்ற தோற்றப்பாட்டையே கொடுக்கின்றது. மேற்குலக நாகரீகத்தில் வளர்ந்த தியாகேந்திரனின் பிள்ளைகள் அவருக்கு இவற்றைச் சுட்டிக்காட்டவில்லையா என்பது ஆச்சரியமானது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தியாகேந்திரன் நடத்திய சிறுவர் இல்லம் 2016இல் விசாரணைகளின் பின் மூடப்பட்டதும் இந்த விடயம் மூடி மறைக்கப்பட்டதும் பலருக்குத் தெரியாது. தெரிந்த பலரும் அரசியல் வாதிகளும் அதனைக் கண்டுகொள்வதில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய முன்னணி, தமிழரசுக் கட்சியின் தலைவர் பா உ எஸ் சிறிதரன் போன்றவர்கள் ‘நக்கினார் நாவிழந்தார்’ என அந்தச் சிறுமிகள் இல்லம் மூடப்பட்ட விடயத்தில் மௌனமாகவே உள்ளனர். இலங்கை விமானப்படை விமானத்தை பார்வையிடச் சென்ற மாணவிகளை பெற்றார் ‘கூட்டிக்கொடுப்பதாகக் கூக்குரலிட்ட செல்வராஜா கஜேந்திரன் இலங்கை இராணுவத்தோடு இணைந்து கொடை செய்யும் தியாகேந்திரனின் திருவிளையாடல் பற்றி மௌனமாகவே உள்ளார். யூரியூபேர்ஸ்ம் தியாகேந்திரன் வானத்திலிருந்து குதித்த வள்ளல் என்ற போர்வையில் கதை அளக்கின்றனர். இது பற்றி பயிற்சிபெற்ற மனித உரிமைக் காப்பாளர் செயற்பாட்டாளர் த கிருஷ்ணன் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி:

இச்சிறுவர் இல்லத்திலிருந்த பதின்ம வயதுச் சிறுமிகளை தியாகேந்திரன் ‘நான் அப்பா ஸ்தானத்தில் உள்ளவர்’, ‘அப்பா மாதிரி’ என்ற தோரணையில் அணைப்பது, மடியில் இருத்துவது, முத்தமிடுவது போன்ற சிலுமிசங்களை மேற்கொண்டதால் சிறுமிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலைக்கும் முயற்சித்துள்ளனர். இக்குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரேயே தியாகி அறக்கட்டளையால் நடாத்தி வரப்பட்ட இல்லம் மூடப்பட்டுள்ளது.

வாமதேவன் தியாகேந்தரனுக்கு ஒன்றுவிட்ட ஒரு சகோதரர் உள்ளார். தியாகேந்தரனின் தாய் சொர்ணாம்பிகை யின் சகோதரி யோகசோதியின் மகன் குடுமி ஜெயா என்ற வெ ஜெயந்திரன். இவரும் இளம்பெண்களை வளைத்துப் போட்டு திருமணம் செய்தும் செய்யாமலும் கைகழுவிவிடுபவர். இவர் இதற்கு முன் திருமணம் செய்த – கூடி வாழ்ந்த பெண்களும் இவரைக்காட்டிலும் முப்பது வயதுவரை குறைந்தவவர்கள். அப்படி வாழும் போதே இவர் வீட்டுக்கு வேலைக்கு வந்த சிறுமிகளை அணைப்பது, முத்தமிடுவது, மடியிலிருத்துவது என்று போய் கட்டிலுக்கும் கொண்டு சென்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. ஒன்றுவிட்ட சகோதரர்களாக இருந்தாலும் இரு சகோதரர்களுக்கும் இடையே மிக நெருங்கிய ஒற்றுமைகள் உண்டு. பிரபல்யம் தேடுவது, சுயபுலம்பல், இளம்பெண்கள் மீதான பரிவு கனிவு, அரசியல் நாட்டம் என்று பல ஒற்றுமைகள். இருவரது முகநூல்பக்கதிலுமே தங்களை நியாயப்படுத்துகின்ற வாசகங்களை குறிப்புகளைப் பதிவிட்டிருப்பார்கள்.

குடுமி ஜெயா என்ற ஜெயந்திரன் தற்போது சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்திக் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். ‘காமவிடுதி என அறியப்பட்ட ஜெயந்திரனின் லக்ஸ் ஹொட்டல் ஐக்கிய மக்கள் கட்சியின் அலுவலகமாக திறந்துவைக்கப்பட்ட போது அதில் வாமதேவன் தியாகேந்திரனையும் காணலாம்.

ஒரு காலத்தில் தமிழர்களின் காலாச்சாரத் தலைநகரம் என்று அறியப்பட்ட கல்வியின் மகுடம் என்று அறியப்பட்;ட யாழ்ப்பாணத்தில் தற்போது ஹொட்டலியர்கள் புகுந்து அதனை அந்தப்புரமாகவும், மது, மாது, போதை களியாட்ட கொட்டகையாகவும் மாற்றி வருகின்றனர். இவற்றை முன்னெடுப்பவர்கள் தான் கட்சிகளின் அமைப்பாளராக உள்ளனர். அல்லது முதலமைச்சர்களாக வரத் துடிக்கின்றனர். இன்னுமொருவர் யாழ்பாணத்தை தாருங்கோ என்கிறார். யாழ் பல்கலையின் கலைப்பீடத்திற்குள் ஆரம்பித்து இப்போது இந்த சுகர் டாடி கலாச்சாரம் எங்கும் பரவிக் கிடக்கின்றது. இளம்பெண்கள் இந்த சுகர் டாடிகள் விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

“அரச பேரினவாதம் நூலகத்தை அழித்தது! தமிழர்கள் நூலகச் சிந்தனையை அழித்தனர்” – த.ஜெயபாலன்

ஆண்டுகள் உருண்டோடி யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டு நாற்பதாவது ஆண்டு ஆகிவிட்டது. ஆண்டுகளைக் கடந்து செல்வது போல் எமது வரலாறுகளையும் பதிவுகளையும் கூட நாம் மிக எளிதில் கடந்து அல்ல பாய்ந்தே சென்றுவிடுகின்றோம். வேகத்திற்கு அளித்த மதிப்பை விவேகத்திற்கு அளிகாததால் தமிழ் சமூகம் இன்று தனது இருத்தலுக்கான அடிப்படைகளையே இழந்துகொண்டிருக்கின்றது. ‘செய் அல்லது செத்துமடி’ என்ற விவேகமற்ற கோசங்கள் என்னத்தையாவது செய்ய வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி’ என்ற நிலையில் நிற்கின்றோம்.

 

இலங்கையில் தமிழ் அறிவுப்புலத்தின் மையப்புள்ளியாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் அமைந்தது. யாழ்ப்பாண நூலகம் பற்றிய குறிப்பு ஏப்ரல் 10 1894 இல் தி ஓவர்லன்ட் சிலோன் ஓப்சேர்வர் என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இது யாழ்ப்பாண நூலகத்தின் தொன்மையயை வெளிப்படுத்தி நிற்கின்றது. நூறாண்டுகளைக் கடந்த யாழ்ப்பாண நூலகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் யாழ்ப்பாண அறிவுப்புலத்தின் எழுச்சியயையும் வீழ்ச்சியயையும் பிரதிபலிக்கpன்றது. இது யாழ்ப்பாண அறிவுப்புலத்தை மட்டுமல்ல அச்சமூகத்தின் சிந்தனையையும் பிரதிபலிக்கும் ஒரு நிறுவனமாகவும் இலங்கைத் தமிழரின் அரசியல் நிலையின் பிரதிபலிப்பாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.

 

வண. பிதா. லோங் அடிகளாரின் சிந்தனையில் தோண்றிய நூலக எண்ணக்கருவுக்காக ஆரம்பத்தில் அவருடைய உருவச்சிலையே நூலகத்தின் முன் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் சைவத்தின் எழுச்சியோடு அந்த இடத்தை கல்விக் கடவுளான சரஸ்வதி எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் 1981 மே 31 இரவு முதல் இலங்கைப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறையின் அடையாளச் சின்னமாக யாழ்பாணப் பொது நூலகம் உலகறியப்பட்டது. அந்த ஒடுக்குறை அடையாளத்தை புத்தனின் வெண்தாமரையை க் கொண்டு மறைக்க நூலகம் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டது.

 

ஆனால் மீளக்கட்டப்பட்ட நூலகத்தை திறந்து வைப்பதுஇ யார் திறந்து வைப்பது என்பதில் சிக்கல்கள் உருவானது. நூலகத்தை சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட அப்போதைய யாழ்ப்பாண மேயர் செல்லன் கந்தையன் திறந்து வைக்கக்கூடாது என்பதில் சாதிமான்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மிகத் தெளிவாக இருந்தனர். அதனால் கட்சியின் தலைவரான வி ஆனந்தசங்கரியயை வைத்து நூலகத்தைத் திறந்து தங்கள் அரசியல் லாபத்தையீட்ட தீவிரமாக செயற்பட்டனர். ஆனால் அது திறக்கப்படுவதை தங்கள் எதிரியான வி ஆனந்தசங்கரியினால் திறக்கப்படுவதை அரசியல் காரணங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. நூலக மீள்திறப்பு பந்தாடப்பட்டது.

அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட சாதிமான்களின் கூடாரமான தமிழர் விடுதலைக் கூட்டணி சாதுரியமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லன் கந்தையன் நூலகத்தை திறப்பதை விரும்பவில்லை என ஒரு பல்டி அடித்தது. பல புலி எதிர்ப்பு வாதிகளுக்கும் இந்த விளக்கம் மிகச்சௌகரிகமாக அமைந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் தமிழ் மக்களின் சிந்தனை மற்றும் செயற்பாடுகளின் ஒரு பிரதிபலிப்பாகவே இன்றும் உள்ளது.

 

யாழ்ப்பாணச் சமூகமானது தன்னுடைய செயற்பாடுகளுக்கும் சிந்தனைக்கும் இடையே பாரிய இடைவெளியயைக் கொண்ட சமூகமாகவே இன்றும் உள்ளது. சிங்கள சமூகத்தின் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையயை எதிர்த்த யாழ்ப்பாண சமூகம் தான் ஏனைய சமூகங்கள் மீது கட்டற்ற ஒடுக்குமுறையயை மிகத்தீவிரமாகக் கைக்கொண்டது. யாழ்ப்பாணப் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்படுவதற்கு முன்னதாகவே ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பள்ளி, நூலகம் என்பன யாழ் ஆதிக்க சமூகத்தினரால் எரியூட்டப்பட்டு இருந்தது. இன்றும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களை ஏற்றுக்கொள்ளாத அரச பாடசாலைகள் யாழ் மண்ணில் உள்ளது. மனித உரிமைகளைக் கோருகின்ற இன்றைய யாழ்ப்பாண சமூகம் ஏனைய சமூகங்களின் அடிப்படை உரிமைகளைக்கூட ஏற்றுக்கொள்ளத் தயாரற்ற சமூகமாகவே உள்ளது.

 

நாற்பது ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூருகின்ற யாழ்ப்பாண சமூகம் இன்னமும் அந்நூலகம் எந்நாளில் எரிக்கப்பட்டது என்ற விடயத்தில் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. வாய்மொழி வந்த செய்திகளிலும் அந்தச் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டஇ பேசப்பட்ட விடயங்களையும் கொண்டே இந்தப் புனைவுகள் உருவாக்கப்பட்டு உள்ளது. ‘கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தன்’ என்ற பழமொழிக்கு ஏற்றாற் போல் எம்மத்தியில் உள்ள சில கேள்விச் செவியர்கள் ‘தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர். அறிவியல் தேடலே இல்லாமல் கூடத்தின் வரலாற்று நிகழ்வொன்றின் முக்கிய தினத்தையே மாற்றிட முனைகின்றனர். இதுவும் ஒரு முரண்நகையே.

அறிவியலின் அடிப்படையே தேடல் ஆனால் யாழ்ப்பாண சமூகம் ஒரு தேடலற்ற சமூகமாக தேடுபவர்களை அவமதிக்கின்ற சமூகமாக மாறிவிட்டது. அறிவு என்பது பரீட்சையில் சித்தியடைவது என்ற நிலைக்கு யாழ்ப்பாணசமூகம் குறுகி நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பொதுவான விடயங்களைத் தேடுவதுஇ அறிவதுஇ கற்பது வீண் விரயம் என்று பாடப்புத்தகங்களுக்குள்ளேயே தன்னை அடக்கியது. பாடப் புத்தகங்களும் வீண் விரயமாகி தற்போது துரித மீட்டல் புத்தகங்களும் வினாவிடைப் புத்தகங்களும் படித்து குறுக்கு வழியில் அறிவைப் பெற்றுவிடலாம் என்று விழுந்து விழுந்து படித்து இப்போது யாழ்ப்பாணத்தினது மட்டுமல்ல தமிழர்களின் கல்வி நிலையே வீழ்ந்து கிடக்கின்றது. ஆனாலும் அங்கு நூலகங்களின் அவசியம் இன்னமும் உணரப்படவில்லை.

 

யாழ்ப்பாண நூலகம் 1981 மே 31இல் எரியூட்டப்பட்டது என்பதை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நுலகவியலாளராக வாழ்நாள் நூலகவியலாளராக உள்ள என் செல்வராஜா மிகத் தெளிவாக வரலாற்று ஆவணங்கள் மூலமாகப் பதிவு செய்துள்ளார். இன்று அவருடைய ஆவணத் தொகுப்புகள் மட்டுமே யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் வரலாற்றை அழிந்து போகாமல் காப்பாற்றிக்கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல.

 

2003இல் என் செல்வராஜாவினால் ‘றைஸிங் ப்ரொம் தி ஆஸஸ்’ என்ற ஆவணம் ஆங்கில மொழியில் 110 பக்கங்களுடன் தேசம் வெளியீடாக வெளிவந்தது. அதனை நான் (த ஜெயபாலன்) வடிவமைத்து இருந்தேன். தற்போது நூலகவியலாளர் என் செல்வராஜா மேலதிக தகவல்களைத் திரட்டி 200 வரையான பக்கங்களுடன் நூலக எரிப்பின் நாற்பதாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் வெளிக்கொணர்ந்துள்ளார். யாழ் நூலக எரிப்புப் பற்றி ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரே ஆவணம் இதுவாகும். என் செல்வராஜா யாழ்ப்பாணப் பொது நூலகம் பற்றிய தமிழ் ஆவணத் தொகுப்பு ஒன்றையும் வெளயிட்டு உள்ளார்.

 

அரச பேரினவாதம் நூலகத்தையும் நூல்களையும் எரித்ததால் நாம் இன்றும் நூலகம் எரித்த நாளை நினைவுகூருகின்றோம். நூலகத்தின் பௌதீகக் கட்டமைப்பை அரசு எரித்து தீக்கிரையாக்கியது. ஆனால் நாம் நூலகச் சிந்தனையையே எமது அடியோடு அழித்துவிட்டோம். எத்தனை நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. எத்தனை பாடசாலைகளில் நூலகங்கள் இயங்குகின்றன. எத்தனை பேர் நூல்களை, பத்திரிகைகளை வாசிக்கின்றனர். அன்று அரச பேரினவாதம் நூலகத்தை எரித்திராவிட்டால் சிலசமயம் இன்று கறையான் அரித்திருக்கும். எரித்த நாளே எமக்கு தெரியாத போது அரித்தநாள் தெரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !” சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

 

சிறிதரனா ? சுமந்திரனா ? : நாளைய செய்தித் தலைப்பு: சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !” சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

 

 

நாளை ஜனவரி 21 தமிழரசக் கட்சியின் தலைவராக யார் தெரிவு செய்யப்படப் போகின்றார் என்பது பெரும்பாலும் தெரியவரும். இதற்கான தமிழரசுக் கட்சி அங்கத்தவர்களின் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நாளை திருகோணமலையில் இடம்பெற இருக்கின்றது. அதற்கு கட்சியின் அங்கந்தவர்கள் 325 பேர்வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து கிழக்கில் உள்ள திருகோணமலைக்குச் செல்கின்றனர். வாக்கெடுப்பு எண்ணிக்கை நிறைவில் வெற்றி தோல்வி அறிவிக்கப்படும் போது அசம்பாவிதங்களும் ஏற்படும் அளவுக்கு நிலைமை பதட்டமானதாக இருப்பதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைமைத்துவத்துக்கு போட்டியிடும் இருவருமே தேர்தல் முடிவுகளை ஏற்று மற்றையவருடன் கட்சியின் நன்மைகருதி இணைந்து பயணிப்போம் எனத் தெரிவித்து இருந்த போதும் தமிழரசுக் கட்சியின் நாளைய தேர்தல் தமிழரசுக்கட்சிக்குள் ஒரு பாரிய பிளவை ஏற்படுத்தும் என்று தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது.

இலங்கையில் உள்ள எந்தவொரு கட்சிக்காவது ஜனநாயகப் பாரம்பரியம் இருக்கின்றதா என்றால் எடுத்த எடுப்பிலேயே இல்லை என்று சொல்லி விடலாம். கட்சிக்குத் தலைவரானால் சாகும்வரை அவரே தலைவராக இருந்துவிடுவார். இதற்கு தமிழ் கட்சிகளும் தமிழரசுக் கட்சியும் விதிவிலக்கல்ல. தமிழரசுக்கட்சி வரலாற்றில் தேர்தல் மூலம் ஒருவரைத் தெரிவது இதுவே முதற்தடவை. ஏகமனதாக, ஏகோபித்த முடிவு, ஏக பிரதிநிதித்துவம் என்று இன்னொரு பக்கம் இருக்கின்றதை ஏற்றுக்கொள்ளாத சமூகமும் கட்சிகளுமாக நாம் எங்களை பன்மைத்துவத்தின் விரோதிகளாக பழக்கிக் கொண்டுவிட்டோம். அப்படிப் பார்க்கின்ற போது தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தேர்தல் ஜனநாயகத்தின் பார்வையில் மிகப்பெரும் பாச்சல் என்றே சொல்லலாம். ஆனால் என்ன இந்தத் தேர்தலினால் தமிழ் மக்களுக்கு ஏதும் நன்மை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றதா என்பதே தற்போதுள்ள கேள்வி.

 

இலங்கைத் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழரசுக் கட்சி அது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை ஒரு இம்மியளவு முன்னேற்றத்தை நோக்கியும் நகரவில்லை. எழுபதுக்களில் தங்களுடைய வீழ்ந்துபோன வாக்கு வங்கியைத் தக்க வைக்க வே பிரபாகரன் போன்ற இளைஞர்களை உசுப்பேத்தி தமிழீழக் கோரிகையை வைத்து, அந்த இளைஞர்களாலேயே மரணத்தையும் தழுவினர். அந்த இளைஞர்களும் ஆளுக்கு ஆள் சகோதரப்படுகொலை செய்து தங்களைத் தாங்களே அழித்தனர். அன்று தப்பித்த இரா சம்பந்தன் ஒருவாறு இறுதியில் வே பிரபாகரனை பொறியில் வீழ்த்தி மீண்டும் தமிழ் தேசியத்தின் ஒற்றைத் தலைவரானார். அன்று மரணத்தில் இருந்து தப்பிய இன்னும் சிலரும் குட்டிக் குட்டித் தலைவர்களாகினர். இப்போது ஒரு காலத்தில் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதியான தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு ஒரு போட்டி வந்துவிட்டது.

 

இத்தேர்தல் முடிவுகளில் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றதோ இல்லையோ புலம்பெயர் தமிழ் – புலித் தேசியவாதிகளின் அரசியல் நலன்கள் பேணப்பட வேண்டும், இலங்கை அரசியலில் தங்களுடைய ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதில் புலம்பெயர் சக்திகள் மிகத் தீவிரமாகச் செயற்படுகின்றனர். புலம்பெயர் புலித் தேசியவாதிகளைப் பொறுத்தவரை ஏ சுமந்திரன் தீண்டத்தகாத ஒரு மனிதர். அதற்கு சுமந்திரனுடைய அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல சுமந்திரனுடைய அறிவும் ஆளுமையும் அவர்களுக்கு மிகுந்த அச்சத்தை கொடுக்கின்றது. தமிழரசுக் கட்சிக்கு சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசிய அரசியலில் புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளின் குரல்களுக்கு இடமிருக்காது. மிகத் தீவிர புலித்தேசியத்தின் குரல்களுக்கு தமிழரசுக் கட்சியில் இடமிருக்காது.

 

அதனால் என்ன விதப்பட்டும் எஸ் சிறீதரனை வெல்ல வைப்பதில் அவர்கள் மிகத் தீவிரமாக உள்ளனர். எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சிக்கு தலைவரானால் புலத்தில் உள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் அவருக்கு அரசியல் வகுப்பும் ஆங்கில வகுப்பும் எடுப்பார்கள். தன்னுடைய வங்கிக் கணக்கை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் கிளிப்பிள்ளை மாதிரி எஸ் சிறிதரன் கேட்பார் என்ற நம்பிக்கை புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளிடம் நிறையவே உள்ளது. அவ்வாறு லண்டனுக்கு மகனையும் அனுப்பி வைத்துள்ளார் எஸ் சிறிதரன்.

 

ஏ சுமந்திரனும் எஸ் சிறிதரனும் 2010இல் ஒரே காலகட்டத்தில் அரசியலுக்குச் சென்றவர்கள். இன்றுவரை பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். கல்வி, கேள்வி ஞானம், அரசியல் அறிவு, உள்ளுர் சர்வதேச தொடர்புகள் என்று பார்க்கின்ற போது ஏ சுமந்திரன் பலமானவராக உள்ளார். மக்கள் மட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் எஸ் சிறிதரன் பலமாக உள்ளார். இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரை இவர்களில் யாரும் இதுவரை அவர்களுக்காக எதனையும் குறிப்பாக சாதித்துவிடவில்லை. ஏ சுமந்திரன் சில அரசியல் கைதிகளை தனது தொழில் ரீதியில் விடுதலைபெறக் காரணமாக இருந்ததைத் தவிர.

 

ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு எஸ் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டால் அந்தக் கட்சியில் தொடர்ந்து செயற்பட ஏ சுமந்திரன் அனுமதிக்கப்பட மாட்டார். அதனை புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகள் அனுமதிக்காது. மேலும் ஆளுமையுள்ள சுமந்திரன் தொடர்ந்தும் கட்சியில் இருப்பது எஸ் சிறிதரனின் தலைமைத்துவத்தை எப்போதும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். அடுத்த ஆண்டு நாடு பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற போது விரும்பு வாக்குகளுக்காக இருவரும் கடுமையாக மோத வேண்டிவரும். அது ஏ சுமந்திரனுக்கு மிக நெருக்கடியாக அமையும். அதனால் ஏ சுமந்திரன் தமிழரசுக்கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தால் பிரிந்துசெல்வதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

 

மாறாக, எஸ் சிறிதரன் தோற்கடிக்கப்பட்டால் அவர் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியில் இருப்பாரா அல்லது பிரிந்து செல்வாரா அல்லது கட்சி தாவுவாரா என்பது அவருக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையிலும் புலம்பெயர் புலித் தேசியவாதிகளின் நிலைப்பாட்டிலும் தங்கியுள்ளது. சிறிதரன் தேர்தலில் தோற்றுப் போனாலும் தமிழரசுக்கட்சியில் தொடர்ந்தும் இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. கிளிநொச்சியில் உள்ள பலமான அந்த வாக்கு வங்கியை அவர் இழப்பதற்கு துணிய வாய்புகள் குறைவு. ஏற்கனவே எம் சந்திரகுமாருடைய சமத்துவக் கட்சி அவருடைய வாக்கு வங்கியை உடைத்து வளர்ந்து வருகின்ற நிலையில் எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியை உடைத்து வெளியேறினால் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அவருடைய வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்துவது கடினமானதாக அமையும்.

 

தேசம்நெற்க்கு கிடைக்கின்ற தகவல்களின்படி புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் தங்களை உயர்சாதியினராகக் கருதுபவர்கள் மத்தியில்; எஸ் சிறிதரனுக்கு செல்வாக்கு உள்ள போதிலும் ஒடுக்கப்பட்ட வன்னியில் வாழும் மலையக மக்கள் மத்தியில் அவருக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இல்லை. அதைவிடவும் சாணக்கியன் உட்பட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் ஏ சுமந்திரனுக்கே ஆதரவைத் தெரிவித்துள்ளனர். 325 வரையான கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் ஏ சுமந்திரனுக்கே ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகின்றது. எஸ் சிறிதரன் செல்வாக்கு ஆனையிறவுக்கும் கிளிநொச்சிக்கும் அப்பால் உள்ளதா என்பதும் கேள்விக்குறியே.

 

இன்னும் சில மணி நேரங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரும்.

நாளைய செய்தித் தலைப்பு:

சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !”

சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

பிலிப்பைன்ஸில் தங்கம் வென்ற அகிலத்திருநாயகிக்கு யாழில் கௌரவம் !

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் அகிலத்திருநாயகியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

 

யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அடாவடித்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வவுனியா வைத்தியசாலை ஊழியர்களும் – மேடைகளில் இலவச வைத்தியத்தை காப்போம் என பேசிக்கொண்டிருக்கும் வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியும் !

அண்மைய நாட்களில் இலங்கையின் இலவச மருத்துவம் தரங்கெட்டு போய்க்கொண்டிருக்கும் துர்பாக்கிய நிலை நீடித்துக்கொண்டிருக்கும் அதேவேளையில் மக்கள் பலரும் இலவச மருத்துவத்தின் மீதான தங்களுடைய நம்பிக்கையை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் மருந்துப்பற்றாக்குறையாலும் – மருந்துப்பொருட்களின் தீவிர விலையேற்றத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களை இந்த வைத்தியசாலைகளின் நிர்வாகமும் – தாதியர்களுமாக சேர்ந்து “மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தாற் போல” கொடூரமாக வதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதன் நீட்சியாகவே நேற்றையதினம் வவுனியா பொதுவைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள துயரமாகும். வைத்தியசாலைக்கு தமது சிசுவுக்கான சிகிச்சைக்கு சென்ற தம்பதியினரிடம் அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார்கள் வவுனியா வைத்தியசாலை அதிகாரிகள் (மருத்துவர்கள் உட்பட) இது தொடர்பில் பாதிக்கபட்ட நபர் தனது பேஸ்புக் கணக்கில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“04.08.2023 அன்று மாலை எமக்கு குழந்தை கிடைத்தது.

வைத்தியசாலையில் சிங்கள மொழி பேசும் Malki அல்லது Dilshaani என அழைக்கப்படும் தாதியர் ஒருவருக்கும் எமக்கும் இடையில் கடந்த 10 நாட்களாக முறுகல் நிலை ஏற்பட்டு வந்தது. அது கடந்த சனிக்கிழமை மாலை அன்று வாக்குவாதமாக மாறியது. நான் அவருடைய பெயரைக் கேட்ட போது அவர் கூறிவிட்டு பின்னர் என்னை மீண்டும் அழைத்து கடும் உரத்த தொனியில் என்னுடைய பெயர் உங்களுக்கு எதற்கு எனக் கேட்க நான் உங்களைப் பற்றிய முறைப்பாடு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினேன்.

அதற்கு அதிக கோபம் அடைந்த அந்த தாதியர் மருத்துவ சிட்டையை முடிவுறுத்தி எங்களை வைத்திய சாலையை விட்டு வெளியேறுமாறு கூற நான் அதற்கு இது அரச மருத்துவமனை உங்களுக்கு அதனை கூற உரிமை இல்லை. நாங்கள் இருவரும் அரச உத்தியோகத்தர்கள் தான் எங்களுக்கும் சட்டங்கள் தெரியும் எனக் கூறி விட்டு நான் வீடு திரும்பிகொண்டிருந்தேன். இதனை பெரிசுபடுத்தவில்லை. ஏனெனில் எனது குழந்தை அந்த தாதியரின் கீழ் சிகிச்சை பெற்று வருவதால்….

சுமார் 15 நிமிடங்களின் பின்னர் நான் தாண்டிக்குளத்தை அண்மித்த பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எனது மனைவியார் அழைப்பு எடுத்து 7th Ward இல் உள்ள தலைமைத் தாதியர் அங்கு வந்து நான் சொன்னால் தான் இங்கு உள்ள தாதியர்கள் உங்கள் பிள்ளைக்கு மருத்துவம் செய்வார்கள். உங்கள் கணவர் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதனால் நாங்கள் செய்ய மாட்டோம் எனக் கூறினாராம்.

அத்துடன் அந்த நேரத்தில் குழந்தை பகுதி 7th Ward இல் கடமையில் இருந்த வைத்தியர் அஸ்ரா (Training period உள்ளவர்) மனைவியை அழைத்து உங்கள் கணவரை எங்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் இல்லை எனில் நாங்கள் உங்கள் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க மாட்டோம் எனக் கூறினாராம்.

நான் உடனடியாக மீண்டும் மருத்துவமனை சென்று 7 ஆம் விடுதிக்கு பொறுப்பான VP Doctor இடம் முறையிட்ட போது அவர் உடனடியாக வைத்திய சாலையில் Director அவர்களுக்கு தெரியப்படுத்த அவரும் உடனடியாக அங்கு வந்து நடந்தைக் கேட்டார். எனக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

அதன் பின்னர் நான் உங்களால் எப்படி மருத்துவம் பார்க்க முடியாது இது அரச மருத்துவமனை நீங்கள் அப்படி கூற முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் எனது குழந்தைக்கு சேவை வழங்காத இந்த மருத்துவமனையிலும், உங்கள் தாதியர் இடத்திலும் எனது 10 நாட்களான பச்சிளம் குழந்தையை விட்டு செல்ல எனக்கு நம்பக தன்மை இல்லை.

நீங்கள் தானே சேவை வழங்க மாட்டீர்கள் எனக் கூறினீர்கள் ஆகவே எனக்கு லாமா முறை அடிப்படையில் எனது குழந்தையை விடுவித்து தருமாறு Director அவர்களை கேட்டுக் கொண்டேன்.

அதனை ஏற்றுக் கொண்ட அவர் தாதியர்களிடமும், வைத்தியர் அஸ்ரா அவர்களிடமும் உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு கூறினார். அதன் பின்னர் லாமா படிவத்தில் எனது மனைவியார் 12.08.2023 இரவு 10.28 மணிக்கு கையொப்பமிட்டார். அதன் பின்னர் குழந்தையின் மருத்துவ படிவங்களை கோரிய போது இந்த நேரத்தில் இந்த வேலை தங்களுக்கு செய்ய முடியாது அதற்கான நேரம் வரும் போது மாத்திரமே நாங்கள் அதை செய்வோம் என உரத்த தொனியில் மிகவும் கடுமையாக கூறினார்கள்.

மீண்டும் நான் Director அவர்களின் அலுவலகத்திற்கு சென்ற போது அது மூடப்பட்டு இருந்தது. பின்னர் அவருக்கு வேறு ஒரு வழியாக தொலைபேசி ஊடாக கதைத்தபோது தான் Off இல் சென்றுவிட்டேன் எனக் கூறினார். பின்னர் நான் மீண்டும் 7 ஆம் விடுதிக்கு வந்து தொலேபேசி ஊடாக வைத்தியர்களை தொடர்பு கொள்ள பல முயற்சிகள் செய்தும் பலன் கிடைக்கவில்லை. ஏனெனில் நேரம் நள்ளிரவு 12 மணியை கடந்திருந்தது. தாதியர்களும் 10 நாட்களான பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல் தங்களது அதிகாரத்தை கைவரிசையாக வைத்து எங்களை பழிவாங்கினார்கள். அவர்களது சேவை துஸ்பிரயோகமே இது.

வைத்தியசாலையின் தலமை அதிகாரி கூறியும் அதை கொஞ்சம் கூட மதிக்காமல் தமது வைத்திய மற்றும் அரச சேவையை துஷ்பிரயோகம் செய்தனர். சற்று கூட இரக்கம் அற்ற பெண்கள் தாய்மையின் வலியை அறியாத ஓர் பிறப்புகளாக கூட இருக்கலாம்.

நீண்ட நேரமாக முயற்சிகள் செய்து ஏதும் பலன் அளிக்காமல் போய் அவ்விடத்தில் தந்தையாகவும், ஓர் அரச உத்தியோகத்தராகவும் தோற்றுபோய் நின்றிருந்தேன். அப்போது நேரம் 13.08.2023 அதிகாலை 2 மணி ஆகிவிட்டது. அப்போது மகப்பேறு விடுதியில் கடமையில் இருந்த சகோதர மொழி பேசும் வைத்தியர் (எனது மனைவிக்கு அறுவைச் சிகிச்சை செய்தவர்) எல்லா வழிகளிலும் தோற்று போய் நின்ற என்னைத் தேற்றி நீங்கள் நம்பிக்கையுடன் வீடு செல்லுங்கள் உங்கள் குழந்தைக்கு நான் பொறுப்பு என என்னிடம் சத்தியம் கூறினார். அவருடைய நம்பிக்கையில் மனைவிக்கும் ஆறுதல் கூறி விட்டு நான் வீடு திரும்பினேன். அந்த உயர்ந்த வைத்தியரிடம் உள்ள இரக்க குணம் கூட அந்த ஈனர் தாதியரிடம் இல்லை.

அதன் பின்னர் மீண்டும் காலை 6 மணிக்கு மீண்டும் வைத்தியசாலை வந்து மனைவியை பார்வையிட்ட பின்னர் 7 ஆம் விடுதிக்கு அந்த வேளையில் கடமையில் இருந்த வைத்தியரிடம் முறையிட்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு மீண்டும் தாதியர்களிடம் அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பணித்தார். ஆனாலும் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை.

சற்று நேரத்தின் பின்னர் அந்த விடுதிக்கு பொறுப்பான VOG Doctor Kunawardena Sir அவர்கள் அங்கு கடமைக்கு சமுகமளித்தார் நான் அவரிடம் இது பற்றி முறையிட்ட போது நான் அவர்களுக்கு கட்டளை இட்டிருக்கின்றேன் இப்போது உங்களுக்கு விடுவித்தல் பத்திரம் கிடைக்கும் நீங்கள் செல்லாம் என பணிவுடன் கூறினார். அப்போது நேரம் 9.30 மணி

மீண்டும் காத்து கொண்டு இருந்தேன். எந்த வித முடிவுகளும் இல்லை. மகப்பேறு விடுதி என்பதால் பார்வை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் ஆண்கள் உள்ளே செல்ல முடியாது.

ஆத்திரம் அடைந்த நான் வைத்திய சாலையின் Director இடம் சென்று எனது மனைவியார் கடந்த இரவு 10.28 pm இற்கு லாமாவில் கையொப்பம் இட்டார் ஆனால் தாதியர்கள் இன்னும் அவர்களை விடுவிக்கவில்லை எனக் கூறினேன். அதற்கு உடனடியாக அவர் அந்த விடுதிக்கு அழைப்பு எடுத்து அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பணித்தார்.

ஆனால் எந்த விடுவிப்புகளும் இடம் பெறவில்லை.

இவ்வாறு வெளியில் மணிக்கணக்காக காத்திருந்த போது நேரம் 12 மணி ஆகி இருந்தது அடுத்த பார்வை நேரமும் வந்தது. அப்போது அங்கு கடமைக்காக பிரசன்னமாகி இருந்த குழந்தை பிரிவுக்கான VP Doctor Ranjith Sir அவர்களிடம் மீண்டும் முறையிட்ட போது நான் உங்களை நேற்று இரவு விடுவிக்குமாறு தாதியர்களுக்கு பணித்தேன் எனக் கூறினார். மீண்டும் அவர் அவர்கள் காலதாமதம் இன்றி உடனடியாக விடுவிக்குமாறு பணித்தார்.

ஆனால் பிற்பகல் இரண்டு மணியாகியும் எந்த விடுவிப்புகளும் இடம் பெற வில்லை. மிகவும் ஆத்திரம் அடைந்த நான் மீண்டும் Director இடம் சென்றேன் அங்கு அவர் இல்லை. அங்கு கடமையில் இருந்த மற்றுமொரு பதவிநிலை உத்தியோகத்தர் இடம் சென்று விடையத்தை கூறி நான் Director ஐ சந்திக்க வேண்டும் என கூற அந்த உத்தியோகத்தர் தொலைபேசி ஊடாக அவரை தொடர்பு கொண்டு விடையத்தை கூறினார். அதற்கு Director 10 நிமிடத்தில் உங்களை விடுவிக்கிறேன் என கூறினார். மீண்டும் நான் விடுதிக்கு வரும் போது குழந்தை பிரிவுக்கான VP அவர்களும் விரைவாக விடுதிக்கு வந்தார் அதன் பின்னரே மாலை 3 மணிக்கே எங்களை விடுவித்தார்கள்.

குழந்தைக்கு infection இருந்ததால் Antibiotics ஊசி தினமும் மூன்று முறை வழங்கப்பட்டு கொண்டு இருந்தது. அந்த தாதியர்கள் 2 மணிக்கு வழங்க வேண்டிய ஊசி வழங்கவில்லை. மாறாக நான் வைத்தியரை வேண்டிநின்ற போது 2.50 மணிக்கே ஊசி வழங்கினர்.

அத்துடன் அங்கு மதிய நேர மருந்து வில்லைகள் மனைவிக்கு வழங்காமல் புறக்கணித்தனர். இது ஒரு மிகவும் கேவலமான சேவை துஸ்பிரயோகம் அவர்களது சேவை சத்திய பிரமாணம் எங்கே போனது இதுவா உங்கள் உயிரைக் காப்பாற்றும் மருத்துவ சேவை?10. நாளான பச்சிளம் குழந்தைக்கு செய்யும் வேலையா இது நீங்கள் எல்லாம் ஓர் பெண்களா? உங்களுக்கு தாய்மை உணர்வு இல்லையா? ஈனப்பிறவிகளா நீங்கள்? உங்களை என்ன வார்த்தைகளை கொண்டு அழைப்பது என எனக்கு தெரியவில்லை…..

விடுதிக்கு பொறுப்பான வைத்தியர்,

VOG

VP

Director என பல வைத்திய அதிகாரிகள் கட்டளை இட்டும் கொஞ்சம் கூட செவி சாய்காத தாதியர்கள்.

உங்கள் மருத்துவமனையின் நிர்வாக கட்டமைப்புகள் தான் என்ன? உங்கள் பணிப்புக்கு கட்டுப்படாதவர்களுக்கு என்ன ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தீர்கள்?

தாதியர்கள் என்ன வைத்தியர்களை விட பெரியவர்களா? எவ்வளவு படித்த வைத்தியர் இவ்வாறு கண்ணியமாக எவ்வளவு பணிவுடன் பொறுப்பாக கதைக்கிறார்கள். இந்த அரைவேக்காடு சில்லறைகள் போடும் கூத்துக்கள் தான் இங்கு பெரியதாக இருக்கிறது.

உங்கள் மருத்துவமனையின் Quality Management System தொடர்பான ஆய்வுகள் யாவும் பொய்த்து தான் போகும்.

உங்கள் Vision and Mission களை எப்படி நீங்கள் அடைய முடியும்?

அந்த இலக்குகளை நோக்கி இந்த தாதியர்களைக் கொண்டு எவ்வாறு பயணிக்க முடியும்?

ஒன்றுக்கும் விடைகள் கிடையாது….

சக மனிதர்களை மனிதர்களாக மதிக்காத ஒர் நாடு நம் நாடு தான்……

இன்னும் பல சகிக்க முடியாத கசப்பான சம்பவங்கள் பல இருக்கின்றன. அதை எல்லாம் ஏழுத பல நாட்கள் எடுக்கும்.” என.

குறித்த பதிவின் முகநூல் இணைப்பு https://www.facebook.com/balasubramaniampavithan

மேற்குறித்த பதிவை எழுதியவர் ஒரு அசர அதிகாரியாவார் . ஒரு அரச அதிகாரியே இலங்கையின் இலவச சேவையை நுகர்வதில் இவ்வளவு தடை இருக்குமாயின் இலங்கையில் வைத்தியசாலைகளில் மருத்துவத்திற்காக செல்லும் பாமரமக்களின் நிலை இன்னமும் மோசமானதாகவே இருக்கும் என எண்ணத்தோன்றுகிறது. மேலும் வவுனியா வைத்திஜயசாலையில் நடைபெறும் அடாவடிதட்தனம் தொடர்பில் பலரும் சமூக வலைத்தளங்களில் தமது அனுபவங்களையும் எழுத ஆரம்பித்துள்ளனர் .

அண்மையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் ஒரே வாரத்தில் பிறந்த ஐந்து சிசுக்கள் வைத்திய பராமரிப்பு இன்றி இறந்த சம்பவமும் நாம் அறிந்தததே. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தந்தை ஒருவர் நீதிக்காக போராடிய போதும் கிளிநொச்சி வைத்தியசாலை அவரை அட்டையை தூக்கி வீசுவது போல கவனத்தில் எடுக்காது விட்டுவிட்டது.

இதனைப்போலவே முல்லைத்தீவு மாவட்டபொது வைத்தியசாலையில் கடந்த 21.05.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த 34 வயது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இலங்கை மருத்துவ சங்கமோ – இலங்கை சுகாதார அமைச்சோ நேரடியாக தலையிட்டு இந்த மருத்துவத்துறையை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த துர்பாக்கியமான மருத்துவ சூழல் பற்றி பேசவவேண்டிய நாடாளுமன்ற அரசியல் தலைமைகள் பாராளுமன்றத்தில் இராவணன் தமிழனா..? சிங்களவனா ..? என பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இது பற்றி தீவிர கவனம் செலுத்த வேண்டிய வடமாகாண சுகாதார பணிப்பாளர் கலாநிதி த. சத்தியமூர்த்தி இன்னமும் செயற்படவே ஆரம்பிக்கவில்லை. பாவம் அவரும் யாழ்ப்பாணம் மட்டுமே தனது பகுதி என ஓய்வெடுத்துவிட்டார் போல. யாழப்பாணத்து முருத்துவத்தை கண்காணிப்பதிலுள்ள அதே அக்கறை அவரிடம் ஏனைய பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளை கவனிப்பதிலும் இருக்கவேண்டும். ஆனால் அவர் கூட்டங்களில் கலந்து கொண்டு “வைத்தியர்கள் நம்நாட்டின் கண்கள். இலவச மருத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.” என பேசுவதுடன் சரி. அந்த இலவச மருத்துவத்தை தூக்கி நிறுத்த – நியாயமானதாக மக்களுக்கு வழங்க அவர் எதுவித நடவடிக்கைகளையுமே எடுக்கவில்லை என்பதே உண்மை. இந்த விடயத்திலும் அதுதான் நீடிக்கும் என தோன்றுகிறது.

இலங்கையில் இன்னமும் மக்கள் தன்னம்பிக்கையுடன் நகர்வதற்கு இலவசமாக கிடைக்கும் கல்வியும் – இலவசமாக கிடைக்கும் மருதா்துவமுமே காரணமாகும். அதை முறையாக மக்களுக்கு வழங்க வேண்டிய தேவை அனைத்து சுகாதார துறை ஊழியர்களுக்கும் உண்டு. மக்களின் வரிப்பணத்தில் இலவசமாக படித்துவிட்டு – மக்களின் வரிப்பணத்தில் மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் வைத்தியசாலை நிர்வாகிகளும் – ஊழியர்களும் மக்களுக்கு சேவை செய்வதற்கு மட்டும் ஏன் இத்தனை அவதானமின்மையுடனும் – அடாவடித்தனத்துடனும் நடக்கிறார்கள் எனத்தெரியவில்லை.

அண்மைய நாட்களில் இலங்கையின் இலவச மருத்துவம் தொடர்பிலும் அது தரங்கெட்டு போய்க்கொண்டிருப்பது தொடர்பிலும் தேசம் இணையதளம் தொடர்ச்சியான பல தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது.