உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

சுய நிர்ணய உரிமையுடன் கூடிய பிரிந்து போகும் உரிமையை கோருபவர்கள் யார்..? ஐ.எம்.எப்பிடம் பெற்ற கடனை மீள செலுத்தாமல் விட முடியுமா..?

சுய நிர்ணய உரிமையுடன் கூடிய பிரிந்து போகும் உரிமையை கோருபவர்கள் யார்..? ஐ.எம்.எப்பிடம் பெற்ற கடனை மீள செலுத்தாமல் விட முடியுமா..?

அரசியல் ஆய்வாளர் – தமிழ் சொலிடாரி முக்கியஸ்தர் சேனனுடனான பரபரப்பான கலந்துரையாடல்..!

 

 

டிசம்பர் 03ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானம் !

இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் வானிலை அறிக்கைகளுக்கு அமைவாக உயர்தரப் பரீட்சையை டிசம்பர் 03ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

 

அதற்கமைய, டிசம்பர் 04ஆம் திகதி முதல் பரீட்சைகள் மீள ஆரம்பிக்கப்படும்.

 

நவம்பர் 27ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 21ஆம் திகதியும்

 

நவம்பர் 28ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 23ஆம் திகதியும்

 

நவம்பர் 29 இற்குரிய பரீட்சை டிசம்பர் மாதம் 27ஆம் திகதியும்

 

நவம்பர் 30ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 28ஆம் திகதியும்

 

டிசம்பர் 2ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 30ஆம் திகதியும்

 

டிசம்பர் 3ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 31ஆம் திகதியும் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

 

பிரதமர், கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

பரீட்சார்த்திகளுக்குரிய புதிய நேர அட்டவணை டிசம்பர் மாதம் 7ஆம் திகதியளவில் அனுப்பிவைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

நேற்று(27), இன்று(28) மற்றும் நாளைய தினங்களில்(29) நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் நடத்தப்படும் என பரீட்சை திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ள இடர் கால உதவித் திட்டங்களை மேற்கொள்ளாமல் ஏமாற்று அரசியல் செய்யும் தமிழ் அரசியல் தரப்பினர் !

பல வாரங்களுக்கு முன்பே கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. அதற்கு தயாராவதற்குப் பதிலாக, தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடி, நாடாளுமன்றத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்,”

இவ்வாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான கீதாநாத் காசிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்தில்  ஆயிரக்கணக்கானோர் உட்பட நாடு முழுவதும் 250,000 க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றனர்.

பேரழிவால் ஏற்கனவே 10 பேர் உயிரிழந்துள்ளனர். பல குடும்பங்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவி தேவைப்பாடுள்ளது.

இயற்கை பேரிடர் ஏற்படும் போது, ​​உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் போன்ற உடனடி உதவிகளை வழங்குவது அரசின் கடமை.

 

இருப்பினும், பல நாட்களாக பெய்த கனமழை மற்றும் கடுமையான வெள்ளம் இருந்தபோதிலும், வடக்கிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் சேவையை செய்வதை விட புகைப்படங்கள் எடுப்பதை தான் அதிகம் செய்கின்றனர்”என்று அவர் குற்றம் சாட்டினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளால் உதவிகள் எதுவும் அனுப்பப்படவில்லை என்று காசிலிங்கம் குற்றஞ்சாட்டினார், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுஜன பெரமுன போன்ற கட்சிகளை நம்பியிருக்கிறார்கள்.

“நாங்கள் இரவும் பகலும் களத்தில் இருந்தோம், முன்கூட்டியே திட்டமிட்டுள்ளோம் மற்றும் காலநிலை எச்சரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிப்போம்,” என்று அவர் கூறினார்.

“பொறுப்பான ஆட்சியை எதிர்பார்த்த மக்கள் வடக்கில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஆனாலும், சில வாரங்களுக்குள்ளேயே, அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறிவிட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் துன்பத்துக்குள்ளாகின்றனர். மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிய பின்னரே நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுன தலைவர் பொறுப்பான நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்து முடித்தார், “நாட்டிற்குத் தேவை தங்கள் மக்களுக்கு அர்ப்பணிப்புள்ள சட்டமியற்றுபவர்கள் தான், பேரழிவு மற்றும் தேவையின் போது தங்கள் கடமைகளை கைவிடுபவர்கள் அல்ல.” என்றார்.

மக்கள் மிகப்பெரிய வெள்ள இடர் ஒன்றில் சிக்கித்தவிக்கின்ற போதும் கூட தங்களுடைய எதிர்ப்பு அரசியலை செய்து கொண்டிருக்கும் தமிழ் தலைவர்கள் களத்தில் இறங்கி மக்களுக்கான எதுவிதமான உதவிகளையும் வழங்கத்தயாரில்லை. மாறாக வழமை போல் மக்கள் வெள்ள அனர்த்தத்தினால் சிக்கி பாடசாலைகளில் தஞ்சம் கோரியிருக்கும் நிலையில் கூட மாவீரர் தினத்தை வைத்து அரசியல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக பல தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர். இதேவேளை இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட ரீதியான அங்கத்தவர்களும் – பாராளுமன்ற உறுப்பினர்களும் நேரடியாக களத்தில் இறங்கி கள நிலவரங்களை ஆராய்ந்து தேவையான நிவாரண உதவிகளை முன்னெடுத்து வருவதை அறிய முடிகிறது. குறிப்பாக கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு வரும் பணிகளையும் – மக்களுக்கான மூன்று வேளை உணவுகளையும் வழங்கி வருவதாகவும் தேசம்நெட்இன் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ் போதைப்பொருள் பாவனை மரணங்கள்!

நாட்டில் அதிகளவில் உயிரைமாய்த்துக்கொள்பவர்கள் ஐஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் 10 பேர் உயிரை மாய்த்துக்கொண்டு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் 16 மற்றும் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் 4 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்பாடானது உடல் ஆற்றலை அதிகரிப்பதுடன்,

குழப்பம், பதற்றம், விரைவான இதயத்துடிப்பு உள்ளிட்ட உடல் நலப்பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தூக்கமின்மை, நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட உடல் நலப்பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றமையால் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த அரசு அனுபவமற்றது என்பது வெளிப்படுகிறது – சாணக்கியன் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் வெள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்குரிய ஆயத்தங்கள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கடற்படையினரால் தகுந்த ஏற்பாடுகள் முன்னரே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலை குறித்து மேலும் கருத்து தெரிவித்த இரா. சாணக்கியன்,

சூறாவளிக்கான முன்னறிவிப்பு 3 நாட்களுக்கு முன்னரே விடுக்கப்பட்டிருந்த வேளையிலும் முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையின் காரணத்தினால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முடிந்தளவு எம்மால் இயன்ற பணிகளை மேற்கொள்வோம். மேலும் வெள்ள நீர் மட்டம் அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மக்களுடன் மக்களாக நின்று மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் படுவான்கரையிலுள்ள தமது இருப்பிடங்களுக்கு செல்ல முடியாது தெவித்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தலையீட்டினால் படகு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை போக்குவரத்து சபையுடன் தொடர்பினை மேற்கொண்டு பேரூந்து சேவைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. இதன் ஊடாக புதிய அரசாங்கத்தினுடைய அனுபவமற்ற தன்மை இங்கு உறுதியானது.” என அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளம் பேரிடர் நேரத்தில் கூட அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்காமல் வழமையான எதிர்ப்பு அரசியலை தமிழ்தேசிய தரப்பு மேற்கொள்ள, வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 11 குழுக்கள் அரசினால் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள் முழுநேர கடமைகளில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே, வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக விமானப் படையின் 50 பேர் 06 இடங்களில் 6 ஹெலிகொப்டர்களுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தொடரும் கனமழை – இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு – ஜனாதிபதி அனுர குமார விடுத்துள்ள உத்தரவு!

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் 59ஆயிரத்து 269 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து ஏழாயிரத்து 582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்தெரிவித்துள்ளது. இதில் வடக்கு இகிழக்கில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் 17ஆயிரத்து 922 குடும்பங்களைச் சேர்ந்த 62ஆயரத்து 505 பேர் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 36 ஆயிரத்து 811 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 29ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.

 

அதற்காக கீழ் மட்டத்திலிருந்து வலுவான பொறிமுறையொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

 

அர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் அரச அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை(27) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

 

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான நிலையங்களில் தங்க வைத்து தேவையான உணவு மற்றும் மலசலகூட வசதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

 

அந்த மக்களுக்கு உதவி வழங்கத் தேவையான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

 

அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுதத்தார்.

 

சீரற்ற காலநிலை காரணமாக அதிக ஆபத்துள்ள வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் மனநிலை மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அவசியம் ஏற்படும் பட்சத்தில் உயர்தர பரீட்சையை மேலும் காலம் தாழ்த்த நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அலோசனை வழங்கினார்.

 

தற்போது மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றிருக்கும் மீனவர்கள் தொடர்பில் தேடியறிந்து அவர்களை பாதுகாப்பாக கரை சேர்ப்பதற்கு அவசியமான வசதிகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

 

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான சேவைகளை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் அறிவுறுத்தினார்.

மாவீரர்களின் முன்னாள் போராளிகளின் குடும்பங்களை தமிழ் தேசியம் கைவிட்டுவிட்டது!

மாவீரர்களின் முன்னாள் போராளிகளின் குடும்பங்களை தமிழ் தேசியம் கைவிட்டுவிட்டது! என்பிபி யிடம் அவர்கள் ஒப்படைக்கபட்டுவிட்டனர்!

இன்றைய தேசம் நெட் செய்திகளை காண கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

இலங்கையைக் கையாள எங்களைப் பயன்படுத்துங்கள் – இந்தியாவிடம் கெஞ்சுகிறது தமிழ் தேசியம்!

இலங்கையைக் கையாள எங்களைப் பயன்படுத்துங்கள் – இந்தியாவிடம் கெஞ்சுகிறது தமிழ் தேசியம்!

1. இலங்கையைக் கையாள எங்களைப் பயன்படுத்துங்கள் – இந்தியாவிடம் கெஞ்சுகிறது தமிழ் தேசியம்: பிரித்தானியாவில் நன்கு அறியப்பட்ட மதிப்பிற்குரிய இராணுவ அரசியல் ஆய்வாளர் கலாநிதி அரூஸ் இலங்கையைக் கையாள்வதற்கு இந்தியா, தமிழர்களைக் கையாள வேண்டும் என்று கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன் தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என இந்தியத் தூதுவர் காட்டிய சமிக்ஞ்சையை ஆகோ ஓகோ என்று புகழ்ந்துள்ளார்.

 

இலங்கையை பக்கத்தில் உள்ள பலசாலியை வைத்து மிரட்டலாம் என்ற தமிழ் தேசியவாதத்தின் மிகமட்டமான போர்மிலாவே கடந்த ஐந்து தசாப்தங்களாக நடைமுறையிலிருந்து வருகின்றது. இந்திய உளவுத்தறையான ரோவின் பாதுகாப்பில் உள்ள மு திருநாவுக்கரசு கோட்பாட்டின் கீழ் இயங்கும் றோ புலிகள் போலவே தற்போது கலாநிதி அரூஸ் தனது ஆய்வை மேற்கொண்டுள்ளார். அவர் இதற்கும் ஒருபடி மேலே போய் அத்தானி குழுமத்தின் ஊழலை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் பிடியாணையை அத்தானியின், இந்தியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் திட்டமாகவும் கருதுகிறார். கொழும்பு துறைமுகக் கட்டுமானம், மன்னார் காற்றாலைக் கட்டுமானம் ஆகியவை இலங்கை மக்களின் நலனுக்கு விரோதமாக மோசடியாக செய்யப்பட்ட ஒப்பந்தம் என்பதை மறைக்கின்றார். இலங்கையைப் பழிவாங்குகின்றோம் என்ற போர்வையில் அத்தானி போன்ற பெரும் முதலைகளுக்கு இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் பலியிடுவதை நியாயப்படுத்துவதாகவே இப்போக்குள் உள்ளது. இது கலாநிதி அரூஸின் ஆய்வு விசிலடிச்சான் குஞ்சுகளை திருப்திப்படுத்த மேற்கொள்ளும் ஆய்வாக உள்ளதாக சில இடதுசாரிச் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

 

2. அத்தானி குழுமத்தை – இந்தியாவை ஆட்டும் அமெரிக்கா: அத்தானியின் குஜராத் வீட்டிற்கு அமெரிக்காவின் Security Exchange Commission இலிருந்து பிடியாணைக்கான கட்டளை வந்து சேர்ந்துவிட்டது. அடுத்த 21 நாட்களுக்குள் நேரடியாக சமூகமளித்து அதானி தன் மீதான முறைப்பாடுகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

 

பிடியாணைக்கான கட்டளையை ஏற்க மறுத்தாலோ நேரடியாக சமூகமளிக்காவிடிலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதே அழைப்பாணை அத்தாயின் மருமகன் சாதர் அதானிக்கும் வந்துள்ளது. சாதர் அதானியின் கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினிகளை சோதனையிட்ட போதே இந்த லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

இந்த விவகாரம் ஆளும் மோடி அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. அதானி முறைகேடு விவகாரத்தால் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை என்பன செப்ரம்பர் 25 திகட்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

மேலும் இப்பிரச்சினையின் எதிரொலியாக அதானி கொடுத்த 100 கோடி நன்கொடையை தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந் ரெட்டி ஏற்க மறுத்து இரத்துச் செய்துள்ளார். தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் இளைஞர்களுக்கு தொழில்துறையில் திறண்சார் பயிற்சிகளை அளிக்கும் பல்கலைக்கழகத்திற்கே இந்த நன்கொடைக்கான காசோலை அத்தானியால் கடந்த மாதம் முதலமைச்சரை சந்தித்து நேரடியாக வழங்கப்பட்டிருந்தது.

 

அத்தானி முறைகோடு விவகாரத்தை எதிர்கட்சியான காங்கிரஸில் புதிதாக இடைத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்டு எம்பியாக வந்துள்ள பிரியங்கா காந்தியால் சிறப்பாக கையாளப்படும் எனவும் மோடி எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.

 

மறுபுறம் இது தொடர்ச்சியான இந்திய நிறுவனங்கள் மீதான தாக்குதல் எனவும். சம்பந்தப்பட்ட அத்தானி குழும இலஞ்ச முறைகேடு விவகாரத்தை உள்நாட்டிலேயே அதாவது இந்தியாவிலேயே விசாரிக்கலாம். இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பெரியண்ணர் சட்டம்பியார் விளையாட்டு எனவும் மேற்கின் மேலாதிக்கத்திற்கெதிரான கண்டனக்குரல்களும் எழாமல் இல்லை. ரஷ்யாவிடம் இருந்து பெற்றோலியத்தை குறைந்த விலைக்கு வாங்கி மேற்குலகிற்கு கூடிய விலைக்கு விற்று பணம் பார்க்கும் இந்தியாவுக்கு, பிரிக்ஸில் (BRICS) உள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா வைக்கும் ‘செக்’ இது எனவும் பார்க்கலாம்.

 

3. ஊசி அர்ச்சுனா ஊழல் அர்ச்சுனாவாக மாறுகிறாரா?: வடக்கு கிழக்கு மக்கள் கூட்டாக இணைந்து இனவாதமற்ற இலங்கை என்ற கருத்தியலில் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பளித்துள்ளனர். மருத்துவ மாபியாக்களையும் – மருத்துவ சீர்கேடுகளையும் பகிரங்கப்படுத்திய ஊசி அர்ச்சுனாவையும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் ஊசி அர்ச்சுனா ஊழல் அர்ச்சுனாவாக மாறுகிறாரா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

 

தான் எதற்காக தெரிவு செய்யப்பட்டோம் என்பது பற்றிய அடிப்படை புரிதலே இல்லாமல், மேலும் மேலும் தன்னை ஓர் ஒப்புயர்வற்ற நபர் என கருதி செயற்பட்டு வரும் ஊசி அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வைத்து விடுதலை புலிகள், பிரபாகரன் என்றெல்லாம் பேஸ்புக் நேரலையில் பிரபலம் தேடுகின்றார். இந்த நிலையில் அவர் மீது சி.ஐ.டியில் வழக்குகள் பதிவாகியுள்ளன. வேறு வழியில்லாமல் பாராளுமன்ற சபாநாயகர் அசோக ரங்வல, ஊசி அர்ச்சுனாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். அவர் முன்வைத்த பிரிவினைவாத கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகின்றது. அர்ச்சுனா தனது முகநூல் பிரபல்யத்திற்காக எதுவும் செய்வார் என்ற நிலையில் உள்ளார். தனது முகநூல் கணக்கில் உள்ள தொண்ணூறாயிரம் பின்தொடர்பவர்களுக்கு புதிதாக ஒரு கதையை ஊசி அர்ச்சுனா அடித்து விடப்போகிறார் என பலரும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். மக்களின் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்க சட்டவாக்க உறுப்பினர்கள் கூடும் இடத்தில் அரச்;சுனாவின் கோமாளிக்கூத்துக்கள் அவரின் பிரபல்யம் தேடலுக்காக மக்களுடைய வாழ்வியல் பிரச்சினைகளை பேசவிடாமல் செய்வதாகவே உள்ளது. பாராளுமன்றத்திற்குச் சென்ற அன்றே குழுப்பம் விளைவித்து எதிர்க்கட்சித் தலைவரின் கதிரையில் இருந்து, நேரலைக்குச் சென்று, வீரவசனங்களை விட்டவர், நேற்று பாராளுமன்றத்தில் தன்னுடைய செயலுக்காக மன்னிப்புக் கேட்டார். தேர்தலின் போதும் தேர்தலுக்குப் பின்னும் மருத்துவ மாபியாக்கள் தொடர்பில் அரச்சுனா எவ்வித ஆரோக்கியமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பது சாவகச்சேரி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

4. தமிழ் தேசிய அரசியலின் சிரோக்கள் ஹீரோக்களாக முடியுமா?: தமிழ் தேசியத்தின் சீரழிவுக்கு கட்சிகள் காரணமல்ல. இதன் சூத்திரதாரிகள் தங்களை கருத்துருவாக்கிகள் என்று அடையாளப்படுத்தும் சி. அ. யோதிலிங்கம், நிலாந்தன், நரசிங்கம் வவுனியா தமிழ் சிவில் சமூக அமையம், செல்வின் யாழ் சிவில் சமூக மையம் என்கிறார் இன்னுமொரு கருத்துருவாக்கியும் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பை முன்னெடுத்தவர்களில் ஒருவருமான ஜதி ஜதீந்திரா.

 

உண்மையிலேயே ஊசி அர்ச்சுனா தமிழ்தேசிய ஆசன பலத்தை உடைத்துவிட்டார் என்கின்ற அவருடைய கருத்து ஒருபுறம் இருக்க நிலாந்தன் உள்ளிட்ட பத்தி எழுத்தாளர் குழுவினர் ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்தேசியத்துக்கான வாக்கெடுப்பு எனக் கூறி லைக்காவின் நிதி உதவியுடன் சங்கு அரியத்தாரை களமிறக்கி அடிவாங்கினர். அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் உடைத்து சங்கு சின்னத்தை பாராளுமன்ற தேர்தலிலும் களமிறக்கி தமிழர்கள் சார்ந்த ஆசன பலத்தை மேலும் உடைத்தவர்களும் இவர்கள் தான். இந்த நிலாந்தன் உள்ளிட்ட குழுவினர் இன்றுவரை ஜனாதிபதி பொதுவேட்பாளர் பற்றியோ…? அவருக்கான இரண்டு லட்சம் வாக்களுக்கான முடிவு தொடர்பிலோ..? அல்லது தோல்விக்கான விமர்சன ரீதியான கலந்துரையாடல்களையோ இன்று வரை செய்யவில்லை.

 

அனைத்து தமிழ்த்தரப்பையும் ஓர் புள்ளியில் இணைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வைக்க முன்வந்த பொதுக்கட்டமைப்பை நாசமாக்கியது பற்றியோ கிஞ்சித்தும் வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளில் மட்டும் பிறரை ‘மிஸ்டர் பீன்’ என நக்கலடித்து வரும் நிலாந்தன் உள்ளிட்ட குழுவினர்தான் உண்மையான பீன் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இதேவேளை நிலாந்தன் உள்ளிட்ட குழுவினர் ஹீரோக்கள் என பரப்புரை செய்துவந்த பார் லைசன்ஸ் புகழ் விக்கியரின் மான் சின்னம், சித்தார்த்தன் உள்ளிட்டோரின் சங்கு சின்னம் ஆகியவை தான் மிஸ்டர் பீன்களாகிப்போயுள்ள அதேவேளை நிலாந்தன் பீன் என கூறிய ஊசி அர்ச்சுனா பெற்ற இருபதாயிரம் வாக்குகளின் பக்கத்தில் கூட நிலாந்தன் குழுவினரின் ஹீரோக்களால் நெருங்க முடியவில்லை. சீனப் பழமொழியில் ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை’ என்கிறார் ஜதி ஜதீந்திரா.

 

5. மற்றுமொரு தமிழ்ப் பெண் பிரதி அமைச்சராக நியமனம்: புதிதாக நேற்றைய தினம் இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்களாக இரண்டு பெண்களை ஜனாதிபதி அனுர அரசு நியமித்துள்ளது. அதில் கிராம அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கை தமிழர்களின் தமிழ்தேசிய அரசியல் பரப்பிலும் சரி, வடக்கு கிழக்கு மாகாண நிர்வாக நடவடிக்கைகளிலும் சரி பெண்களுக்கு எப்போதுமே முன்னுரிமை இருந்தது கிடையாது. அது பற்றி இந்த ஆணாதிக்க சமூகத்தின் ஆர்வலர்கள் கவனம் செலுத்தியது கிடையாது. இப்படியான நிலையில் தேசிய இன நல்லிணக்கம், பால்நிலை சமத்துவம் என அனைத்திலுமே வடக்கின் அரசியல் கட்சிகளை விட தான் ஒரு படி முன்னிலையில் தான் நிற்கிறேன் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசு செயலிலும் காட்டி வருகின்றது. இந்த நிலையில் மாற்றமான ஓர் நல்லிணக்க அரசியலை முன்னெடுத்து வருகின்ற போதும் கூட, தேசிய மக்கள் சக்தியை ஓர் இனவாத அரசு என தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தொடர்ந்தும் குற்றச்சாட்டி வருகின்றனர். இது தமிழ் மக்கள் தங்கள் தேசியவாத அரசியலை நிராகரித்துவிட்டார்களே என்ற அச்சத்தின் – ஏக்கத்தின் வெளிப்பாடே தவிர வேறொன்றும் இல்லை என மூத்த அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம் தேசம் நெற்க்கு தெரிவித்தார்.

 

6. தமிழ் தேசியம் முஸ்லீம் அமைச்சர் இல்லையென முதலைக் கண்ணீர் விடத்தேவையில்லை: முஸ்லீம் தலைவர்கள் அமைச்சரவையில் இருந்த போதும் அவர்கள் முஸ்லீம்களின் நலனை முன்னெடுக்கவில்லை அதனால் அது தங்களுக்கொரு பிரச்சினையில்லையென முஸ்லீம்களில் பலர் கருதுகின்றனர். அதனால் தமிழ் தேசியவாத ஓநாய்கள் ஆடு நனைகிறது என அழ வேண்டிய தேவையில்லை என்கிறார் ஆய்வாளர் வி சிவலிங்கம்.

 

வேண்டாத மனைவி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்பது போல நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் மண் கவ்விய தமிழ் தேசிய பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லை இது ஓர் இனவாத அரசு என பேசுவது நாட்டை முன்னேற்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டை போடுவது போல ஓர் செயல் என மூத்த அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம் தேசம் நெற்க்கு மேலும் தெரிவித்தார்.

 

இதேநேரம் தேசிய மக்கள் சக்தி மீது முன்வைக்கப்பட்ட முஸ்லீம் அமைச்சர் ஒருவர் இல்லையே என்ற சமூக வலைத்தளவாசிகளின் கருத்துக்கு அக்குரணை பிரதேச முஸ்லிம் மக்களுடனான சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்துள்ளார். அங்கு பேசிய அவர், முஸ்லீம் அமைச்சர் ஒருவர் இல்லை என்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள். தேவையான இடங்களில் தேவையானவர்களை நியமித்துள்ளோம். 2004இல் நான் அமைச்சரவை அமைச்சர். இஸ்லாமிய மகளிர் அணியும் ஹிஜாப்பிற்காக துணி வழங்க வேண்டுமென அமைச்சரவையில் யோசனை முன் வைத்தேன். அதை முஸ்லிம் அமைச்சர்கள் செய்யவில்லை, நான்தான் செய்தேன். மேலும் அம்பாறையில் இருந்து எங்களுக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட வரவில்லை. ஆனால் ஆதம் பாவாவை தேசிய பட்டியலிலிருந்து நியமித்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

7. யாழ் பாடசாலைகளின் வெளிநாட்டு ஓபிஏ OBA க்கள் ஊழலை ஊக்குவிக்கின்றன: யாழில் உள்ள முன்னணிப் பாடசாலைகளின் வெளிநாடுகளில் உள்ள மாணவர் சங்கங்கள் அனுப்புகின்ற நிதி பாரிய அளவில் ஊழலை வளர்த்துவிடுவதாக ஆளுநர் நா வேதநாயகம் குறிப்பிட்டது முற்றிலும் உண்மையென யாழ் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் ஓய்வுபெற்ற துணை அதிபர் நடராஜா பவன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

 

“யாழ் பாடசாலைகள் சில நேரடியாக வெளிநாடுகளிலிருந்து பழைய மாணவர் சங்கங்களுடாக நிதியைப் பெறுகிறார்கள். ஆனால் அவை எவ்வாறு செலவிடப்படுகின்றது என்ற பொறுப்புக் கூறல் எதுவும் அங்கில்லை” என்பதை லண்டன் ஹம்டன் உள்ளுராட்சி சபையில் பொறியியலாளராக இருந்து தற்போது யாழில் தனது சேவையை வழங்கிவரும் மயில்வாகனம் சூரியசேகரமும் உறுதிப்படுத்துகின்றார்.

இலங்கையிலேயே நிதிவளம் கூடி அதனை என்ன செய்வது என்று தெரியாது செலவு செய்யும் யாழ் இந்துக்கல்லூரி உட்பட்ட யாழ் முன்னணிப் பாடசாலைகள் சட்டவிரோதமாக அன்பளிப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்கிலும் அன்பளிப்புக் கோருகின்றனர். பாடசாலைகளில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுக்கும் மாணவர்களிடமோ ஆசிரியர்களிடமோ பணம் கோரக்கூடாது என ஆளுநர் நா வேதநாயகம் அங்கு அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டத்திலேயே இக்கருத்தை ஆளுநர் வெளியிட்டார்.

 

முன்னாள் போராளிகள் அடிப்படை தேவைகளுக்கே திண்டாடிக் கொண்டிருக்க – அவர்களின் பெயரால் வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகள்!

மாவீரர் தின வாரம் கடந்த 21ஆம் திகதி தமிழர் பகுதிகளில் ஆரம்பித்திருந்த நிலையில் இன்று கார்த்திகை 27 மாவீரர் தின இறுதி நாளாகும். உண்மையிலேயே மாவீரர் தினம் என்பது யுத்தம் முடிவடைந்த பின்னர் அதனுடைய வெற்றி தோல்வி என்பவற்றுக்கு அப்பால் வெறுமனே அரசியல் லாபமீட்டும் ஓர் தொழிலாக அல்லது செயலாக மாறிப்போன சோகம் தான் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து வீரச்சாவு அடைந்தவர்களின் நினைவாக தமிழர்கள் மத்தியில் தன்னியக்கமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு தமிழ்தேசிய அரசியல்வாதிகளால் தமது சொந்த நலன்களுக்காகவும் – சொகுசு வாழ்க்கைக்காகவும் பயன்படுத்தப்படுவது வேதனையாகும்.

மாவீரர்களின் பெயரை சொல்லி அரசியல் செய்யும் சிறீதரன் எம்பி தொடங்கி சாணக்கியன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எல்லோருமே ஆடம்பரமான செல்வந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் போர்க்காலத்தில் மாவீரர்கள் ஆனவர்களின் குடும்பங்களோ, போர்க்காலத்தில் அங்கவீனர்களானவர்களோ இன்று வாழும் வாழ்க்கை அத்தனை வறுமையானதாகிப்போயுள்ளது. இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புலம்பெயர் தேசத்து நிதியை சேர்த்து அதனை வழங்க ஓர் நிதியத்தை கூட இன்று வரை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உருவாக்கவில்லை. மாறாக ஒவ்வொரு ஆண்டும் லண்டன், பாரிஸ், கனடா என சென்று இந்த தமிழ்தேசியம் பேசிய அரசியல்வாதிகள் தங்களது கட்சிக்காக நிதி சேர்த்து  கொள்கின்றனர். மாறாக இந்த யுத்ததத்துக்காக தன் குடும்பத்தை இழந்தவர்களுக்காகவோ – போரினால் அங்கவீனர்ளாக்கப்பட்டோருக்காகவோ நிலையை பார்த்தால் படு மோசமாக உள்ளது. அண்மையில் ஊசி அர்ச்சுனா வெளிநாட்டு மக்களிடம் தமிழ்தேசியம் என்ற பெயரில் காசு புடுங்கி வயிறு வளர்ப்பது இதற்கான அண்மைய கால ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. அரசியல்வாதிகளுக்கு போட்டியாக அண்மைய காலங்களில் யூடியுப்பர்களும் மாவீரர்களின் பெயரால் வயிறு வளர்க்க ஆரம்பித்துள்ளனர். முன்னாள் மாவீரர் குடும்பம் வறுமையால் வாடுகிறது என வீடியோ செய்து அதில் பெரும் தொகையை களவெடுத்து விட்டு சிறுதொகையை பாதிக்கப்பட்டோருக்கு கொடுக்கிறார்கள். வெளிநாட்டு பணம்படைத்த வித்துவான்களும் ஏதோ உயிர் மீட்க உதவி செய்து விட்டதாக பெருமைப்பட்டு கொள்கிறார்கள். உண்மையிலேயே வெளிநாட்டில் ஈழத்தின் பொருளாதார உதவிகளுக்காக பணம் அனுப்புவோர் இன்று வரை ஓர் பொதுவான நிதியத்தை உருவாக்கி பணத்தை ஆக்கப்பூர்வமான வகையில் பாதிக்கப்பட்ட மாவீரர்களின் குடும்பங்களுக்கு அல்லது மாவீரர்களுக்கும் வழங்குவதற்கு இதுவரையும் சிறிய அளவிலான நடவடிக்கையை கூட அவர்கள் எடுத்தது கிடையாது. புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகின்ற உதவிகள் கூட கடந்த 15 ஆண்டுகளாக கண்துடைப்புக்கான அல்லது தங்களுடைய பகட்டு ஆடம்பரத்தை காட்டுவதற்கான உதவிகளாகவே அமைந்திருக்கின்றன.

அண்மையில் லைக்கா குழுவினரால் உருவாக்கப்பட்ட ஒருவன் பத்திரிகை, ஐ பி சி பாஸ்கரனுடைய இணைய பக்கங்கள் எல்லாமே மாவீரர் வாரத்தில் தமிழர்களை மீள ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளுவது போல வெடித்து சிதறுகின்றன. நடைமுறையில் லைக்கா குழுவினர் அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கைக்காக செலவழிக்கின்ற காசுகளை கூட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற செலவழித்தது கிடையாது. ஐ பி சி பாஸ்கரன் ரீச்சா  என்கின்ற பெயரில் விடுதி வருகிறாரே தவிர இந்த நிலத்தில் முன்னாள் போராளிகள் வாழ்வாதாரத்தை புனரமைக்க நிலையான அபிவிருத்தி திட்டங்கள் எதயுமே இதுவரை முன்னெடுக்கவில்லை.

சுசுருக்கமாக சொல்வதாயின் இந்த நிலத்துக்காக போராடியவர்கள் , இந்தப் போராட்டத்தினால் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டவர்கள் ஒரு நேர சோற்றுக்காகவும், பிள்ளைகளின் கல்விக்காகவும், அடிப்படை தேவைகளுக்காகவும் அன்றாடம் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் பெயரைச் சொல்லி அரசியல் செய்பவர்களும், ஊடகங்களை நடத்திக் கொண்டிருப்பவர்களும் தமிழ் தேசியம் என்கின்ற தீயை மேலும் வளர்த்து அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என்றைக்கு முன்னாள் போராளிகளின் வறுமை நிலை இல்லாதாக்கப்படுகிறதோ..? என்றைக்கு போரால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்களினுடைய அடிப்படை தேவைகள் முறையாக பூர்த்தி செய்யப்படுகிறதோ..? அப்போது தான் இந்த மாவீரர் தின நிகழ்வுகள் அர்த்தமுள்ளவையாக மாற்றமடையும்.

ஒத்திவைக்கப்பட்டது உயர்தர (A/L) பரீட்சைகள்!

நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

 

குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ளார்.

 

அதன்படி, எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெற மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

 

குறித்த தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம், 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.