மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் வெள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்குரிய ஆயத்தங்கள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கடற்படையினரால் தகுந்த ஏற்பாடுகள் முன்னரே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலை குறித்து மேலும் கருத்து தெரிவித்த இரா. சாணக்கியன்,
சூறாவளிக்கான முன்னறிவிப்பு 3 நாட்களுக்கு முன்னரே விடுக்கப்பட்டிருந்த வேளையிலும் முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையின் காரணத்தினால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முடிந்தளவு எம்மால் இயன்ற பணிகளை மேற்கொள்வோம். மேலும் வெள்ள நீர் மட்டம் அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மக்களுடன் மக்களாக நின்று மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் படுவான்கரையிலுள்ள தமது இருப்பிடங்களுக்கு செல்ல முடியாது தெவித்தனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தலையீட்டினால் படகு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை போக்குவரத்து சபையுடன் தொடர்பினை மேற்கொண்டு பேரூந்து சேவைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. இதன் ஊடாக புதிய அரசாங்கத்தினுடைய அனுபவமற்ற தன்மை இங்கு உறுதியானது.” என அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் பேரிடர் நேரத்தில் கூட அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்காமல் வழமையான எதிர்ப்பு அரசியலை தமிழ்தேசிய தரப்பு மேற்கொள்ள, வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 11 குழுக்கள் அரசினால் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள் முழுநேர கடமைகளில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே, வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக விமானப் படையின் 50 பேர் 06 இடங்களில் 6 ஹெலிகொப்டர்களுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.