மாவீரர் தின வாரம் கடந்த 21ஆம் திகதி தமிழர் பகுதிகளில் ஆரம்பித்திருந்த நிலையில் இன்று கார்த்திகை 27 மாவீரர் தின இறுதி நாளாகும். உண்மையிலேயே மாவீரர் தினம் என்பது யுத்தம் முடிவடைந்த பின்னர் அதனுடைய வெற்றி தோல்வி என்பவற்றுக்கு அப்பால் வெறுமனே அரசியல் லாபமீட்டும் ஓர் தொழிலாக அல்லது செயலாக மாறிப்போன சோகம் தான் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து வீரச்சாவு அடைந்தவர்களின் நினைவாக தமிழர்கள் மத்தியில் தன்னியக்கமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு தமிழ்தேசிய அரசியல்வாதிகளால் தமது சொந்த நலன்களுக்காகவும் – சொகுசு வாழ்க்கைக்காகவும் பயன்படுத்தப்படுவது வேதனையாகும்.
மாவீரர்களின் பெயரை சொல்லி அரசியல் செய்யும் சிறீதரன் எம்பி தொடங்கி சாணக்கியன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எல்லோருமே ஆடம்பரமான செல்வந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் போர்க்காலத்தில் மாவீரர்கள் ஆனவர்களின் குடும்பங்களோ, போர்க்காலத்தில் அங்கவீனர்களானவர்களோ இன்று வாழும் வாழ்க்கை அத்தனை வறுமையானதாகிப்போயுள்ளது. இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புலம்பெயர் தேசத்து நிதியை சேர்த்து அதனை வழங்க ஓர் நிதியத்தை கூட இன்று வரை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உருவாக்கவில்லை. மாறாக ஒவ்வொரு ஆண்டும் லண்டன், பாரிஸ், கனடா என சென்று இந்த தமிழ்தேசியம் பேசிய அரசியல்வாதிகள் தங்களது கட்சிக்காக நிதி சேர்த்து கொள்கின்றனர். மாறாக இந்த யுத்ததத்துக்காக தன் குடும்பத்தை இழந்தவர்களுக்காகவோ – போரினால் அங்கவீனர்ளாக்கப்பட்டோருக்காகவோ நிலையை பார்த்தால் படு மோசமாக உள்ளது. அண்மையில் ஊசி அர்ச்சுனா வெளிநாட்டு மக்களிடம் தமிழ்தேசியம் என்ற பெயரில் காசு புடுங்கி வயிறு வளர்ப்பது இதற்கான அண்மைய கால ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. அரசியல்வாதிகளுக்கு போட்டியாக அண்மைய காலங்களில் யூடியுப்பர்களும் மாவீரர்களின் பெயரால் வயிறு வளர்க்க ஆரம்பித்துள்ளனர். முன்னாள் மாவீரர் குடும்பம் வறுமையால் வாடுகிறது என வீடியோ செய்து அதில் பெரும் தொகையை களவெடுத்து விட்டு சிறுதொகையை பாதிக்கப்பட்டோருக்கு கொடுக்கிறார்கள். வெளிநாட்டு பணம்படைத்த வித்துவான்களும் ஏதோ உயிர் மீட்க உதவி செய்து விட்டதாக பெருமைப்பட்டு கொள்கிறார்கள். உண்மையிலேயே வெளிநாட்டில் ஈழத்தின் பொருளாதார உதவிகளுக்காக பணம் அனுப்புவோர் இன்று வரை ஓர் பொதுவான நிதியத்தை உருவாக்கி பணத்தை ஆக்கப்பூர்வமான வகையில் பாதிக்கப்பட்ட மாவீரர்களின் குடும்பங்களுக்கு அல்லது மாவீரர்களுக்கும் வழங்குவதற்கு இதுவரையும் சிறிய அளவிலான நடவடிக்கையை கூட அவர்கள் எடுத்தது கிடையாது. புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகின்ற உதவிகள் கூட கடந்த 15 ஆண்டுகளாக கண்துடைப்புக்கான அல்லது தங்களுடைய பகட்டு ஆடம்பரத்தை காட்டுவதற்கான உதவிகளாகவே அமைந்திருக்கின்றன.
அண்மையில் லைக்கா குழுவினரால் உருவாக்கப்பட்ட ஒருவன் பத்திரிகை, ஐ பி சி பாஸ்கரனுடைய இணைய பக்கங்கள் எல்லாமே மாவீரர் வாரத்தில் தமிழர்களை மீள ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளுவது போல வெடித்து சிதறுகின்றன. நடைமுறையில் லைக்கா குழுவினர் அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கைக்காக செலவழிக்கின்ற காசுகளை கூட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற செலவழித்தது கிடையாது. ஐ பி சி பாஸ்கரன் ரீச்சா என்கின்ற பெயரில் விடுதி வருகிறாரே தவிர இந்த நிலத்தில் முன்னாள் போராளிகள் வாழ்வாதாரத்தை புனரமைக்க நிலையான அபிவிருத்தி திட்டங்கள் எதயுமே இதுவரை முன்னெடுக்கவில்லை.
சுசுருக்கமாக சொல்வதாயின் இந்த நிலத்துக்காக போராடியவர்கள் , இந்தப் போராட்டத்தினால் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டவர்கள் ஒரு நேர சோற்றுக்காகவும், பிள்ளைகளின் கல்விக்காகவும், அடிப்படை தேவைகளுக்காகவும் அன்றாடம் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் பெயரைச் சொல்லி அரசியல் செய்பவர்களும், ஊடகங்களை நடத்திக் கொண்டிருப்பவர்களும் தமிழ் தேசியம் என்கின்ற தீயை மேலும் வளர்த்து அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
என்றைக்கு முன்னாள் போராளிகளின் வறுமை நிலை இல்லாதாக்கப்படுகிறதோ..? என்றைக்கு போரால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்களினுடைய அடிப்படை தேவைகள் முறையாக பூர்த்தி செய்யப்படுகிறதோ..? அப்போது தான் இந்த மாவீரர் தின நிகழ்வுகள் அர்த்தமுள்ளவையாக மாற்றமடையும்.