செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அதிபர் பதவியுயர்வுக்கான நேர்முகம்; புல்மோட்டை முகாமிலும் நடாத்துவதற்கு ஏற்பாடு

அதிபர்களுக்கான தரம் 1, தரம் 11, தரம் 111க்கான பதவி உயர்வுகளை வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைகளை புல்மோட்டை நிவாரண முகாமிலும் நடத்த வவுனியா மாவட்ட வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் புல்மோட்டையிலும் தங்கியுள்ளதாலேயே நேர்முகப் பரீட்சைகளை புல்மோட்டையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

நேற்று முன்தினமும், நேற்றும் வவுனியா மாவட்டத்திலுள்ள அதிபர்களுக்கும் நிவாரணக் கிராமங்களில் உள்ள அதிபர்களுக்கும் தரம் உயர்வுக்கான நேர்முக பரீட்சைகள் நடத்தப்பட்டன.நிவாரணக் கிராமங்களிலிருந்து நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய அதிபர்களுள் 85 பேர் பதவி உயர்வுக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அதிபர்களுக்கென நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியவர்களுள் 180 அதிபர்கள் பதவி உயர்வுக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

வடபகுதியில் நீண்டகாலமாக வழங்கப்படாமலிருந்த பதவி உயர்வுகள் தற்போது வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதையிட்டு அதிபர்கள் தமது திருப்தியை வெளியிட்டனர் எனத் தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜினி ஓஸ்வர்ல்ட் வவுனியாவில் நேர்முகப் பரீட்சையை நடத்திய அதே குழுவினர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் புல்மோட்டை சென்று நேர்முகப் பரீட்சைகளை நடத்தும் என்றும் தெரிவித்தார்.

மீரிஹானை பொலிஸ் பிரிவில் இரு சடலங்கள் மீட்பு

ranjith-gunasekara.jpgமீரிஹானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கந்தை பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டி ருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

அதிகாலை 1.30 மணியளவிலேயே இந்த இரு ஆண்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்களின் தலைப் பகுதியில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

மீரிஹான பொலிஸார் இக்கொலைகள் தொடர்பாக தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர்க ளாக இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ள போதும், அது பற் றிய தகவல்கள் ஊர்ஜிதம் செய் யப்படவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.

இலத்திரனியல் ஊடான காசுக் கட்டளை – தபால் திணைக்களத்தின் புதிய நடவடிக்கை

post_logo.jpgஇலத் திரனியல் ஊடாக காசுக்கட்டளைகளை அனுப்பும் புதிய நடவடிக்கையை தபால் திணைக்களம் நேற்று  முதல் ஆரம்பித்துள்ளதாக தபால் மா அதிபர் எம்.கே.பீ.திஸாநாயக்க தெரிவித்தார். தகவல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இணையதளம் ஊடாக மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூலம் காசுக்கட்டளைகளை துரிதமாகவும் கிரமமமாகவும் அனுப்பி வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புதிய நடவடிக்கையின் மூலம் பணம் அனுப்பும் நபரின் தேவை 5முதல் 10 விநாடிகளில் நிறைவேறுகிறது. முதல் கட்டமாக ஒரே நேரத்தில் ஒருவருக்கு கூடியபட்சம்  25,000 ரூபாவை அனுப்பிவைக்க முடியும்.ஆரம்ப நடவடிக்கையாக 643 தபால் நிலையங்கள் ஊடாக இப்புதிய திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவில் நாட்டிலுள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் இத்திட்டத்தை விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர்களும் ‘மொபைல்’ உபயோகிப்பது தடை

images-teli.jpgமாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் பாடசாலைக்குள் கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அண்மைக்காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டியதுடன் ஆசிரியர்களும் பாடசாலைக்குள் கையடக்கத் தொலைபேசியை உபயோகிக்கக் கூடாதென தெரிவித்தார்

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஆசிரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி; இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது; மாணவர்களைப் போன்றே ஆசிரியர்களும் ஒழுக்கத்தினைப் பேணுவது அவசியம் எத்தகைய சூழ்நிலையிலும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாமல் தமது பதவியின் கெளரவத்தைப் பாதுகாப்பது அவசியம்.

அரசாங்கம் அரச துறையில் பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்திலும் அரச ஊழியர்களுக்கான சலுகையோ அபிவிருத் தியோ நிறுத்தப்படவில்லை. இந்த வருடத்தில் மாகாண சபை பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கென 360 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

200 மீற்றர் நீச்சற் போட்டியில் பெல்ப்ஸ் புதிய சாதனை

pelps2.jpgபிரான் ஸின் ரோம் நகரில் நடைபெற்றுவரும் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இரண்டு நாட்களுக்குள் 11 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது இரண்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்றவரும் உலக சாதனைக்கு சொந்தக்காரருமான மைக்கல் பெல்ப்ஸ் 200 மீற்றர் போட்டியின் இறுதிப் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.அவரது புதிய சாதனை 1:51.51 ஆக அமைந்துள்ளது. உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.

பேனா பிடிக்க வேண்டிய கரங்களில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டதால் புத்திஜீவிகளை இழந்தது குடாநாடு

sathosa-outlet.jpgபேனை பிடிக்க வேண்டிய கரங்களில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டதால் யாழ்.குடாநாட்டு மண் புத்திஜீவிகள், பேராசான்களை உருவாக்கும் சந்தர்ப்பத்தை கடந்த காலத்தில் இழந்துவிட்டதாக வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.  யாழ். கஸ்தூரியார் வீதி வின்சர் தியேட்டர் சந்தியில் செவ்வாய்க்கிழமை 114ஆவது ச.தொ.ச.வை (கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம்.) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் அங்கு கூறியதாவது; ஜனாதிபதி பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து இந்த மண்ணை மீட்டு அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ஷ யாழ்.குடாநாட்டின் அபிவிருத்திக்காக வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றார். அதன் ஒரு வேலைத்திட்டமாகவே இந்த ச.தொ.ச. திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்ற உணவுப் பொருட்களுக்கு வரி விதிப்பது உள்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காகவேயாகும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு, உருளைக்கிழங்கிற்கு 25 ரூபாவும் பால்மா வகைகளுக்கு 125 ரூபாவும் உள்ளூர் சிறிய வெங்காய உற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதுகாக்க பெரிய வெங்காயத்திற்கு 25 ரூபாவும் வரி அறவிடுகின்றோம். இதனை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆர்ப்பாட்டங்களைச் செய்கின்றன. நாம் அதனைப் பொருட்படுத்தவில்லை. எமக்கு உள்நாட்டு விவசாயிகளின் நலன்களில் அதிக அக்கறை உண்டு.

எதிர்வரும் நாட்களில் குடாநாட்டு விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களை கொழும்பிற்குக் கொண்டு சென்று நாரஹேன்பிட்டியில் விற்பனை செய்யலாம். கடலுணவுகளின் விற்பனையும் அவ்வாறே செய்ய முடியும். தென்பகுதி மக்களிடம் இருந்து பெற்ற பணத்தைக் கொண்டு யாழ்கொழும்பு ரயில் சேவையை டலஸ் அழகப்பெரும துரிதகதியில் மேற்கொண்டு வருகிறார். இதனடிப்படையிலேயே புகையிரதப் பாதைகள், புகையிரத நிலையக் கட்டிடங்கள் புனரமைக்கப்படவுள்ளன. மின்சக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்ன இப்பகுதியில் இருக்கும் மின்பற்றாக்குறைக்குத் தீர்வுகாண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வடபகுதி மக்கள் சகல ஒலிபரப்புச் சேவைகளையும் துல்லியமாக கேட்பதற்கும் வசதி வாய்ப்புகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எனவே உலகின் ஏனைய நாடுகளைப் போல் எமது இலங்கை நாட்டையும் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்து வர்த்தகப் பிரமுகர்கள், மக்களுடன் கலந்துரையாடிய போது மக்கள் தாம் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகமான விலை கொடுப்பதாக தெரிவித்திருந்தனர். அதற்காக போக்குவரத்துச் செலவை மட்டும் எடுத்துக் கொண்டு யாழ்.மக்களுக்கு பொருட்களை வழங்கவுள்ளோம்.

யாழ். குடாநாட்டின் கல்வி மேம்பாட்டிலும் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது. கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த யாழ்.குடாநாட்டுப் பாடசாலைகளை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

தற்போது மக்களுக்கான பொருட்கள் கொழும்பு விலைக்குக் கிடைக்கும் நிலை எட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கூட வரவுசெலவுத்திட்ட நிதியில் ஒதுக்கி குடாநாட்டில் கோப்சிற்றி, மினி கோப்சிற்றி போன்றவற்றை திறந்து வைத்திருந்தோம். கடந்த காலங்களில் ஏற்பட்ட கஷ்டங்களை மறந்து சகல இனங்களும் மதங்களும் இணைந்து ஒற்றுமையான எதிர்கால சந்ததியை நம்பிக்கையோடு அமைப்போம் என்றார்.

மியன்மார் வெளிவிவகார அமைச்சர் ஆகஸ்ட் 3 ஆம் திகதி இலங்கை வருகிறார் – வெளிவிவகார அமைச்சு தகவல்

mynmar_flagss.jpgமியன்மார் வெளிவிவகார அமைச்சர் நியான் ஸின் இரண்டு நாள் உத்தியோகபூhர்வ  விஜயமொன்றை மேற்கொண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி  இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மியன்மாருக்கு  அன்மையில் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தபோது அவர் விடுத்த அழைப்பினை ஏற்றே மியன்மார் வெளிவிவகார அமைச்சர் இங்கு வருகை தரவுள்;ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மியன்மார் வெளிவிவகார அமைச்சருடன் அந்நாட்டு வர்த்தகர்கள் குழுவொன்றும் வருகை தரவுள்ளது. வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கென குறைந்த செலவில் வீடுகளை நிர்மாணிக்கும் சாத்தியம்பற்றி ஆராய்வதற்காக இக்குழுவினர் நலன்புரிக் கிராமஙகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் மூலம்  இரு நாடுகளுக்குமிடையேயான உறவுகள் மேலும் பலமடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

யாழ். கொழும்பு விசேட விமான சேவை ஆகஸ்ட் 03 இல் ஆரம்பம்

flight_domestic.jpgயாழ்ப் பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவை முன்னிட்டு கொழும்புக்கும்  யாழ்ப்பாணத்துக்கும் இடையில் விசேட  விமானப் போக்குவரத்து சேவைகள் நடத்தப்படவுள்ளன. தனியார்; மற்றும் விமானப் படையினருடன் இணைந்து இந்த விமான சேவையை வழங்குவதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு முன்வந்துள்ளது.

இதன்படி ஆகஸ்ட்  03 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை தினமும் ஐந்து சேவைகளை நடத்தவிருப்பதாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.  தற்போது இருவழிக் கட்டணமாக அறவிடப்படும் 19.000 ரூபா தொகையானது திருவிழாவை முன்னிட்டு 17.000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்தவருடம் நல்லூர் ஆலய திருவிழாவுக்கு 60 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்வருடம் 1லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வரென எதிர்பார்ப்பதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

யாழ்ப்பாண ஊரடங்கு ஒருமணி நேரத்தால் குறைப்பு

jaffna1.jpgயாழ்ப் பாணத்தில் அமுலில் இருந்து வரும் ஊரடங்குச் சட்டம் நேற்று நள்ளிரவு முதல் ஒரு மணித்தியாலத்தால் குறைக்கப்பட்டுள்ளது. வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இராணுவம் ஊரடங்குச் சட்டத்தை ஒரு மணித்தியாலத்தால் குறைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை இதுவரை அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் புதிய நடைமுறைக்கமைய நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என்று தெரிவித்த பிரிகேடியர், கோவில் உற்சவம் முடியும் வரை இந்த நடை முறை அமுலில் இருக்கும் என்றார்.

இந்தப் பிரதேசத்திலுள்ள பாதுகாப்பு போதியளவு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஊரடங்கு அமுலில் இருக்கும் புதிய நேரத்திற்கு அமைய மக்களுக்குத் தேவையான போக்குவரத்து நேரங்களிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்

தோட்ட தொழிலாளர்களின் நலன்களுக்காக பேரம் பேசக்கூடிய சக்தி எம்மிடமே உள்ளது – அமைச்சர் ஆறுமுகன்

arumugam-thondaman.jpg“இந்திய அரசிடமிருந்து இ.தொ.கா. வினால் பெறப்பட்ட பஸ்களில் ஏழு பஸ்களை, பதுளை மாவட்ட தோட்டத் தொழிலாளர் நன்மை கருதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன். அடுத்த மாதம் மேலும் 35 பஸ்களை இந்திய அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளேன்’. இவ்வாறு இ.தொ.கா. பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், பதுளை வௌஸ்சை, மேமலை, தெல்பத்தை, கோட்டகொடை ஆகிய பெருந்தோட்டங்களில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். தொண்டமான் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

தோட்டத் தொழிலாளர்களுக்கு தினச் சம்பளமாக 500 ரூபா என்றடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படல் வேண்டுமென்ற கோரிக்கையை நான் முன்வைத்தேன். ஆனால், தோட்ட கம்பனி நிர்வாகமோ தினச் சம்பளத்தில் 37 ரூபாவினை மட்டுமே அதிகரிக்க முடியுமென்று உறுதியாகக் கூறினார். இதனையடுத்து, நாம் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறினோம். யார் என்ன கூறியபோதிலும் தொழிலாளர்களினது சம்பள உயர்வினை, எம்மால் மட்டுமே பெற்றுக்கொடுக்க முடியும். அரசுடனோ, தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினுடனோ, தமிழக மற்றும் இந்திய அரசுடனோ, பேச்சுவார்த்தை நடத்தவோ, பேரம்பேசி விடயங்களை சாதிக்கவோ, இ.தொ.கா. வினால் மட்டுமே முடியும். அதற்கான சக்தியும், பலமும் இ.தொ.கா.விற்கே இருந்து வருகின்றது.

சிங்களக் கட்சிகள் மற்றும் சிங்கள மக்களின் பெரும்பாலானோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான கட்சியையே ஆதரிக்கின்றனர். அக்கட்சியே அமோகப் பெரும்பான்மை வாக்குகளில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெறும். யதார்த்தத்தை புரிந்துகொண்டு நாமும் செயல்பட வேண்டும்.

எனவே, நாமும் அரசுடன் இணைந்து ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடுகின்றோம். அரசுடன் இணைந்து இருப்பதினால் மட்டுமே சமூக மேம்பாடுகள் கருதிய விடயங்களை சாதிக்க முடியும். அரசிலிருந்து பிரிந்து நின்று எதனையும் சாதிக்க முடியாது. சமூகத்திற்கான பாதுகாப்பும் இவ் அரசுடன் இணைந்து இருப்பதினால் மட்டுமே தங்கியிருக்கின்றது.

எமது சமூகப் பிரதிநிதிகளென்று பலரை இ.தொ.கா.உருவாக்கி, அவர்களுக்கான விலாசத்தினையும் பெற்றுக் கொடுத்தது. பட்டம், பதவிகள் கிடைத்ததும் அவர்கள் பணத்திற்காக விலை போய் இ.தொ.கா.வை காட்டிக் கொடுக்கும் செயலில் துரிதமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கட்டுப்பாடுகளுடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். தொழிற்சங்க ரீதியிலும் அரசியல் ரீதியிலும் எமது சமூகம் பலமடைய வேண்டும். பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றம் என்ற ரீதியில் சமூகப் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவும் வேண்டும். இதனை எமது சமூகம் நன்கு புரிந்துகொள்ளல் வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.