செய்திகள்

செய்திகள்

செய்திகள்

புலிகளாகவே இருந்தாலும் இப்படியா..?-ஜெயலலிதா

22-jayalalitha.jpgவிடுதலைப் புலிகளாகவே இருந்தாலும், வழக்கு விசாரணையே இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது என்ற இலங்கை ராணுவத்தின் செயல் காட்டுமிராண்டித்தனமானது, மனிதத்தன்மையற்றது, நாகரீக கோட்பாடுகளுக்கு எதிரானது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா மற்றும் வெளி நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன.

இளைஞர்களின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி அவர்களுடைய கைகளாலேயே கண்களை மூடி விட்டு கால்களை இழுத்துக்கட்டி, ஈவு இரக்கமின்றி சீருடை அணிந்த இலங்கை ராணுவத்தினர் அவர்களை காலால் உதைத்து, பின்னிருந்து தலை வழியாக துப்பாக்கிகளால் சுடுகின்ற காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. கைபேசியின் மூலம் ராணுவ வீரரால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோரமான வீடியோ படக்காட்சி, இலங்கையில் மக்களுக்கான விடுதலையுரிமை இல்லை என்பதும் அங்குள்ள தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமாக கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்ற என்னுடைய கருத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது.

இந்த ரத்தம் உறைந்த காட்சிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியும், சில புகைப்படங்கள் பெரும்பாலான பத்திரிகைகளில் வெளியிடப்படடும் இலங்கை அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய அரசுக்கோ அல்லது தமிழக அரசுக்கோ ஏற்படாதது வியப்பை அளிக்கிறது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்றும், அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் இலங்கை அரசு தெரிவிக்கிறது. மனிதத்தன்மையை வேண்டுமென்றே காலால் போட்டு மிதிக்கக்கூடிய இது போன்ற ஒட்டுமொத்த கொடுமையை எந்த ஜனநாயகமும் அனுமதிக்கவில்லை.

தீவிரவாதத்திற்கோ அல்லது தீவிரவாத அமைப்புகளுக்கோ ஆதரவாக அதிமுக ஒரு போதும் இருந்ததில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவது என்ற பாதையிலிருந்து விலகி தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறி தனது அரசியல் எதிரிகளை அழித்து தனக்கு ஒத்துவராதவர்களை கொலை செய்து வருகின்ற தீவிரவாத இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்றைக்கு மாறியதோ, அன்றிலிருந்து இந்த இயக்கத்தை நான் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறேன்.

இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பப்படும் காட்சிகளில் வருபவர்கள் விடுதலைப் புலிகளாக இருந்தாலும், வழக்கு விசாரணையே இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது என்பது காட்டுமிராண்டித்தனமானது, மனிதத்தன்மையற்றது, நாகரீக கோட்பாடுகளுக்கு எதிரானது. இது, போரின்போது சிறைபிடிக்கப்பட்டவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது.

வழக்குகள் விசாரணைக்கு வந்தால் அதில் உள்ள அரசியல் தொடர்பு வெளிப்பட்டு விடக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், காவல் துறையின் கண்காணிப்பில் இருப்பவர்களை கொலை செய்வது, தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் 25 மைல் தொலைவில் உள்ள இலங்கைத் தீவில் நிகழ்த்தப்படும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் குறித்து திமுக அரசு சிறிய அளவிலாவது குரல் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவுக்கு இல்லை.

இருப்பினும் அதிமுகவும், தமிழக மக்களும் இலங்கையில் நடைபெறும் தமிழர்கள் மீதான கொடுமையை இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அருவருக்கத்தக்க சூழ்நிலையில் மறுவாழ்வு முகாம்களில் வாடிக் கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மற்றும் மதிப்பை புதுடெல்லியில் உள்ள இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இலங்கை அரசின் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறலை சர்வதேச அமைப்புகளில் எழுப்பி, இலங்கை அரசாங்கம் அங்குள்ள தமிழர்களை கௌரவத்துடன் நடத்த வேண்டும். இல்லையெனில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அனைத்து நாடுகளும் நிர்ப்பந்திக்கும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கையில் நடைபெறும் கொடூரமான சமூக தன்னுரிமை மீறல்களுக்கு எதிராக அதிமுக ஒத்த கட்சிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

முன்னாள் போராளிகளின் மனித உரிமைகளை பாதுகாக்கும் யோசனைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

முன்னாள் போராளிகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி அவர்களை சிவில் வாழ்வில் மீள ஒருங்கிணைப்பதற்கான யோசனைகளை உள்ளடக்கிய தேசிய கொள்கைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பல்வேறுபட்ட தரப்பினருடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு இந்த யோசனைகள் தயாரிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் விவகார அமைச்சு நேற்று திங்கட்கிழமை இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தத் தேசிய கட்டமைப்பு யோசனைகளில் முக்கியமாக வடிவமைக்கப்பட்டிருப்பது முன்னாள் போராளிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயமாகும். இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் அரசின் சர்வதேச கடப்பாடுகளின் பிரகாரம், முன்னாள் போராளிகளுக்கு உதவுதல், பாதுகாப்பு அளித்தல் என்பனவற்றுக்கான பொறுப்பும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நிலையான சமாதானம், நல்லிணக்கம், சமூகத் தொடர்பாடல், முன்னாள் போராளிகளுக்கான தொழில் வாய்ப்பை அதிகரித்தல், சமூக, பொருளாதார ரீதியில் அவர்கள் ஓரம்கட்டப்படும் ஆபத்தைக் குறைத்தல், அத்துடன் போருக்குப் பின்னர் இலங்கையில் பொருளாதார மறுமலர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குதல் என்பனவும் இந்தக் கட்டமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய கட்டமைப்பு மற்றும் முன்னாள் போராளிகளை சிவில் வாழ்வில் மீள ஒருங்கிணைத்தலின் முக்கியத்துவம் என்பன இலங்கை அரசும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனும் கடந்த மே மாதம் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் 27 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை சுற்றுலாவாரம் அனுஷ்டிக்க ஏற்பாடு

sri-lanka-hotels.jpgஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு நாடு தழுவிய ரீதியில் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் அக்டோபர் 3 ஆம் திகதி வரை சுற்றுலா வாரத்தை கொண்டாட தீர்மானித்துள்ளது.  இவ்வாரத்தினுள் சுற்றுலா மற்றும் உல்லாசப் பயணத்துறை தொடர்பாக சூழலுடனும் அதனை சார்ந்த சமூகத்துடனும் நல்லுறவை பேணிப்பாதுகாப்பதுடன் உல்லாசப் பயணத்துறையை பிரபல்யப்படுத்துவதுமே இதன் பிரதான நோக்கமாகும்.

வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தற்போது ஓரின சுமுக நிலை ஏற்பட்டுவருவதால் வெளிநாட்டு மற்றும் உள்ளூரைச் சேர்ந்த உல்லாசப் பிரயாணிகள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மேலும், மகிந்த சிந்தனையின் அடிப்படையில் தேசிய அபிவிருத்தி கொள்கைக்கு அமைவாகவே சுற்றுலாத்துறை அமைச்சு பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் உல்லாசப் பிரயாணிகளை கவரக்கூடிய இடங்களை மேலும் அபிவிருத்தி செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு பாடசாலை மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நடத்திய சித்திரம், கட்டுரை மற்றும் சுவரொட்டி போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசில்கள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள சுற்றுலா வாரத்தின் இறுதிநாள் நிகழ்வின் போது வழங்கப்படும்.

ஐ.நா.விசேட நிபுணர் அல்ஸ்டனை வரவழைக்க அரசாங்கம் தயாரில்லை: அமைச்சர் சமரசிங்க

minister-mahinda-samarasinghe.jpgஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பிலிப் அல்ஸ்டனை இலங்கைக்கு வரவழைப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. அவர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு எவ்விதமான நம்பிக்கையும் கிடையாது என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த வேண்டுகோள்களை இலங்கை அரசாங்கம் அலட்சியம் செய்துவிட்டது என்று ஐ.நா.வின் விசேட நிபுணர் பேராசிரியர் பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் சிவில் யுத்தத்தின் இறுதி மாதங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் பல சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கென இலங்கைக்கு செல்ல தாம் நீண்ட நாட்களாக அரசாங்கத்திடம் அனுமதி கோரி வருவதாகவும் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண மாவட்ட போட்டிகள் நிறைவு – யாழ் மாவட்டம் முதலாம் இடம்

northa-pro-spo.jpgவட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வட மாகாண மாவட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்ட விளையாட்டு விழா நேற்று இரவு நிறைவு பெற்றது. கடந்த மூன்று நாட்களாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம் பெற்ற இந்தப் போட்டிகளில் யாழ் மாவட்டம் வவுனியா மாவட்டம் மன்னார் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் முல்லைத்தீவு மாவட்ட அணிகள் கலந்து கொண்டன.

இறுதி நாள் நிகழ்வுகள் வட மாகாண கல்வி விளையாட்டு அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் தலைமையில் இடம் பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினாகளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுனர்  ஜீ.எ.சந்தரஸ்ரீ ஆகியோர் கலநது கொணடு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்கள். 151 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை யாழ் மாவட்டமும் 114 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை வவுனியர் மாவட்டமும் 94 புள்ளகளைப் பெற்று மன்னார் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

அடுத்தாண்டு வட மாகாண விளையாட்டுப் பேர்டிகள் கிளிநோச்சி மாவட்டத்தில் நடைபெறும் என வட மாகாண விளையாட்டுத் தினைகக்ளத்தின் உதவிப் பணிப்பாளர் என் அண்ணாத்துரை அறிவித்துள்ளார் .

இன்று பிற்பகலில் பேராதனையில் ஏழரை லட்சம் ரூபா கொள்ளை

பேராதனை கலகா சந்தியில், இன்று பிற்பகலில் ஏழரை லட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் வங்கியில் மேற்படித் தொகையை வைப்பிலிடச் சென்ற போதே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள், ஏழரை லட்சம் ரூபாவைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் எனப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத செயலுடன் தொடர்புடைய இருவர் தெனியாயவில் கைது

220909prisoner1.jpgதெனியாய – இத்தகந்த லங்காபேரி தோட்டத்தைச் சேர்ந்த இருவர், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டவர்களாவர்.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். ஏ. குலரட்னவின் கண்காணிப்பின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மதிவக தெரிவித்தார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்

பன்றிக் காய்ச்சல் புதிய பரிமாணம் – 6 மாதத்தில் 2,180 பேர் பலி :உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

16-swine-flu.jpgஉலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலின் அடுத்த அவதாரம் தலைதூக்க தயாராகி விட்டது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பன்றிக் காய்ச்சலின் இரணடாவது பரிமாணம் இது. இந்த புதிய வகை ஹெச்1 என்1 வைரஸ் காய்ச்சல் உலகின் வட பகுதி நாடுகளில் ஓசைப்படாமல் பரவி வருகிறது. சில நாடுகளில் இந்நோயால் 15 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஜப்பானில் மிக கடுமையாகப் பரவிய பன்றிக் காய்ச்சல் குளிர் காலங்களில் உலகின் தென் பகுதி நாடுகளில் வேகமாக பரவியது. இதனால் முன்னெச்சரி க்கை நடவடிக்கைகள் எடுக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.

இப்போது, வட பகுதியில் உள்ள நாடுகளில் இப்பன்றிக் காய்ச்சல் புதிய பரிமாணம் எடுக்க ஆரம்பித்துள்ளது. நல்ல உடல் ஆரோக்கியமுள்ள இளைய நடுத்தர வயதினர் இந்நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நேரடியாக நுரையீரலைத் தாக்கி சுவாச மண்டலத்தை செயலிழக்க வைக்கிறது.  வீரியமிக்க இந்தப் புதுவகை பன்றிக் காயச்சலை போக்க மருத்துவ செலவும் அதிகமாகும்.  இந்தப் புதிய வகை நோய் பரவுவது எப்படி என்பது தெரியவில்லை. எனினும், சுகாதாரமற்ற வாழ்க்கை, ஆஸ்துமா, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவைகளால் இக்காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது.

வெப்ப மண்டல நாடுகளில் இது வேகமாகப் பரவும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்ற வைரஸ் காய்ச்சல்களைவிட நான்கு மடங்கு வேகத்துடன் இந்தப் புது வகை பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. பிற வைரஸ் காய்ச்சல்கள் ஆறு மாதங்களில் தாக்கும்.

இது ஆறே நாட்களில் தாக்கி விடுகிறது. இதன் தாக்குதலைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவதற்கு முன் கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை 2,180 பேர் இறந்துள்ளனர். இதற்கான தடுப்பூசிகள் தயாராவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்கரெட் சான் கூறினார்.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவேண்டும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை

220909malcom_ranjith.gifஇலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம்,  ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையையும்  ஏனைய சகல உதவிகளையும் வழங்கவேண்டும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐரோப்பிய ஒன்றியத்திடம் தனிப்பட்டவகையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நட்பு ரீதியான உதவிகள் மூலமே உண்மையான சமாதானத்தைப் பெற்று,  நீதியை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் நிலைநாட்ட முடியும் எனவும் ஆண்டகை விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை பேராயர் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்துப் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன் பின்னரே பேராயர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு பேராயர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மட்டுமன்றி,  ஏனைய அனைத்து விதமான உதவிகளையும் இலங்கைக்கு சர்வதேசம் வழங்கவேண்டும். இனவாதம் காரணமாக ஏற்பட்ட யுத்தத்தினால் மக்கள் பாரியளவு பாதிப்புக்களை எதிர்கொண்டனர். மேற்குலக நாடுகளின் நட்பு ரீதியான உதவிகள் மூலமே இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஒற்றுமை,  கௌரவம்,  தனி மனித சுதந்திரம் போன்றவற்றை உறுதிப்படுத்த முடியும்.

மாறாக,  தடைகளை ஏற்படுத்துவதன் மூலம் இவற்றைச் செய்யமுடியாது. இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்றன என்பதனால்,  இந்த வேண்டு கோளை விடுக்கின்றேன் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிறமூர்த்தங்கள் மாற்றியமைக்கப்பட்டதால் மனிதருக்கு உணவாகும் பருத்தி விதை.

cotton-buds.jpg7000 வருடங்களுக்கு மேலாக மனிதரினால் பயிரிடப்படும் பருத்தி இன்று 20 மில்லியன் (million) விவசாயிகளினால் 80 நாடுகளில் பயிரிடப்படுகின்றது.

உலகில் 40 சதவிகிதமான உடுபுடவைகள் பருத்தியினாலே தயாரிக்கப்படுகின்றது. ஆனால் 23 சதவிகித புரட்டீனைக் கொண்ட இப்பருத்தி விதைகள் மனிதரினால் உண்ணப்படுவதில்லை. காரணம் இந்த விதைகளில் உள்ள நச்சுத் திரவத்தை மனித உடலால் கட்டுப்படுத்த முடியாதிருந்தது.

பருத்தி விதையை பறவைகள், பன்றியிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டுள்ள இந்த நச்சுத்திரவம் (Toxin) ஆடு, மாடு போன்ற இரை மீட்டு உண்ணும் பிராணிகளால் மட்டுமே உட்கொள்ளக் கூடியதாக இருந்தது.

Texas A&M University இந்த நச்சுத்திரவம் சுரந்து கொள்ள முடியாதவாறு பருத்தி விதைகளின் நிறமூர்த்தங்களில் (RNA யில்) மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பருத்தி விதைகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் வருடாந்தம் 44 மில்லியன் தொன் உற்பத்தி செய்யப்படும் பருத்தி விதைகள் மிகவும் பெறுமதிமிக்க புரட்டீன்களை மனிதருக்கு உணவாக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

0.5 பில்லியன் (Billion)உற்பத்தி செய்யப்படும் பருத்தி விதைகள் மனித உணவாக பயன்படுத்தப்பட்டு மனிதர்களின் உணவுத் தட்டுப்பாட்டில் பெரும்பகுதிப் பிரச்சினைகள் தீர்க்கப்படக் கூடியதாகவும் உள்ளது.

இந்த நிறமூர்த்தங்களினால் மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகள் கடலை போன்ற சுவையுடையதாக கூறப்படுகிறது.