தமிழ் மக்கள் தேசிய அரசியலில் இணைந்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தேசிய ரீதியில் முன்னேற்றமடைய முடியுமென அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகரை மகா வித்தியாலயத்தை நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்
”இந்நாட்டில் பதினைந்திற்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளன. எனினும் அவற்றுக்கிடையே ஒற்றுமை கிடையாது என தெரிவித்த அமைச்சர், கிழக்கில் அரசாங்கம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதற்காக நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூற அமைச்சர் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக ஜனாதிபதி வாகரைக்கு வந்து வாகரை பாடசாலை புனரமைப்புக்கான அடித்தளத்தை இட்டுச் சென்றார். இன்று அனைவரும் பெருமைப்படத்தக்கதாக இப் பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பாரிய கட்டிடத் தொகுதியாக நிர்மாணம் பெற்றுள்ளது.
கிழக்கு மக்கள் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறியுள்ளனர். இப் பகுதி அபிவிருத்தி பற்றி சிந்திக்கும் மக்கள் ஜனாதிபதியையும் அவரது ஆலோசகர் பசில் ராஜபக்ஷவையும் நினைவு கூருகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்பும் அரவணைப்பும் கொண்ட ஒரு சிறந்த மனிதர். ஆளும் கட்சியில் நாம் பங்கேற்பதால் நாம் மேலும் முன்னேற்றங்களை அடைய முடியும். நாம் ஜனாதிபதியுடன் உரிமையோடு பழகுகின்றோம். இதனைக் கருத்திற் கொண்டு எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் நாம் அனைவரும் அவருக்கு முழுமையான ஆதரவளித்து அவரைப் பலப்படுத்துவோம்” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
