செய்திகள்

செய்திகள்

செய்திகள்

உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் தவறி விட்டனவா? – புன்னியாமீன் –

un.jpgமுதலாம் உலக மகாயுத்தம் முடிவடைந்ததும் உலக சமாதானத்திற்கான அறைகூவல்கள் மீண்டும் ஓங்கலாயிற்று. உலக யுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு உலக மக்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் சமாதானத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டன. இவற்றின் பெறுபேறாக 1919 ஆண்டு ஜுன் மாதம் 28 ஆம்திகதி  உதயமானதே (League of Nation) சர்வதேச சங்கமாகும்.

ஆனால், காலப்போக்கில் சிற்சில நாடுகள் சர்வதேச நலனைவிட தத்தமது சொந்த நலனைக் கருத்திற் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கைகள் சர்வதேச ஒத்துழைப்பு எனும் உன்னத நோக்கை அடையும் முயற்சி வெற்றியளிக்காமைக்கு முக்கிய காரணமாயிற்று. சர்வதேச சங்கத்தின் நோக்கம் தோல்வி கண்டதும் மீண்டும் ஓர் உலகமகாயுத்தம் ஏற்படலாயிற்று. அதுவே 2ம் உலக மகாயுத்தமாகும்.

2ம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர் சர்வதேச சங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகள் இல்லாதவகையில் ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயரில் சமாதானத்தை நிலைநாட்டும் ஒரு அமைப்பு, எதிர்கால சந்ததியினரை யுத்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் நோக்கோடு 1945 இல் தோற்றுவிக்கப்பட்டது. 2ம் உலக மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெலும், பிரித்தானியப் பிரதமர் வின்சன் சர்ச்சிலும் அத்திலாந்திக் கடலில் கப்பலொன்றில் (1941.08.14) ஒன்றுகூடி உலக சமாதானத்தை ஏற்படுத்த முடிவுசெய்து ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இந்த அமைப்பு 1 ஜனவரி 1942 முதல் போர்க்கால கூட்டணியாக செயற்பட்டது.

இதையடுத்து 1943 அக்டோபர் மாதத்தில் அமெரிக்கா,  சீனா,  பிரித்தானியா,  ரஸ்யா ஆகிய நாடுகள் மொஸ்கோவில் ஒன்றுகூடி உலகில் சமாதானத்தை ஏற்படுத்த ஒரு தனிநிறுவனம் அமைக்க வேண்டுமென முடிவு செய்தன.

இவற்றின் விளைவாக யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், கலிபோர்னியாவிலுள்ள, சென்பிரான்ஸிஸ்கோ நகரில் (1945 ஜூலை) 51 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய ஒரு மகாநாடு கூட்டப்பட்டது. இம் மகாநாட்டிலேயே ஐக்கிய நாடுகள் சாசனம் உருவாக்கப்பட்டது. 1945 ஒக்டோபர் 24ம் திகதி இச்சாசனத்தில் சீனா, பிரான்ஸ், சோவியத் நாடு, பிரித்தானியா, அமெரிக்கா ஆகியன கைச்சாத்திடப்பட்ட பின்பே அதே தினத்தில் உத்தியோகபூர்வமான முறையில் ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றும் அக்டோபர் 24ம் திகதியே ஐக்கிய நாடுகள் தினமாகக் உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது. 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1960இல் 100 நாடுகளும், 1980 ஆம் ஆண்டில் 154 நாடுகளும் அங்கத்துவம் பெற்றிருந்த இவ்வமைப்பில்  2009 ஆண்டு தரவுகளின் படி தற்போது 192 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோக பூர்வ மொழிகளாக அரபு, மாண்டரின், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி, எசுப்பானிய மொழி என்பன காணப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது நோக்கங்களை பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம். சர்வதேச சமாதானத்தையும் பொது பாதுகாப்பையும் பேணல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல், உறுப்பு நாடுகள் ஒரு நாட்டின் உள்நாட்டு, விவகாரத்தில் பிரிதொரு நாடு தலையிடாதிருத்தல், சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார மனிதாபிமானப் பிணக்குகளைத் தீர்த்தல், மனித அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்தல். ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் சமமானவைகளே, எனவே அங்கத்துவ நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளைச் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளல் வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான அமைப்புக்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். பொதுச் சபை (General Assabbly),
பாதுகாப்புச் சபை (Security Council),
பொருளாதார, சமூக சபை (Socio Economic Council),
நம்பிக்கைப் பொறுப்புச் சபை (Trustieship Council),
சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice),
செயலகம் (The Secretariat)

பொதுச்சபை

192 அங்கத்துவ நாடுகளையும் இது கொண்டிருக்கும். எல்லா அங்கத்துவ நாடுகளும் 5 பிரதிநிதிகளை பொதுச்சபைக்கு அனுப்பலாம். இருப்பினும் ஒருவர் மட்டுமே வாக்கிற்கு உரித்தானவர். பொதுச்சபை பொதுவாக வருடத்தில் ஒருமுறை கூடும். ஐக்கிய நாடுகள் சபையின் 64-வது வருடாந்த அமர்வு 2009 அக்டோபரில் நியூயோர்க் நகரில் நடைபெற்ற போது சமாதானம் மற்றும் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி, மனித உரிமை விருத்தி, மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண விடயம், சர்வதேச சட்டங்கள் மற்றும் நீதி, போதைப்பொருள் தடுப்பு, ஆயுதக் களைவு, நிர்வாக விவகாரம், பயங்கரவாதத்தை ஒழித்தல் ஆகிய ஒன்பது விடயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் நியுயேர்க்கில் அமைந்துள்ளது. சாசனத்தின் வரையறைகளுக்குட்பட்டு எந்தப் பிரச்சினைகளையும்,  எந்த அங்கத்துவ நாடும் விவாதிக்கலாம். முக்கிய நெருக்கடிப் பிரச்சினைகளைப் பற்றிய முடிவெடுக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியம்.

இதன் பொறுப்புக்கள் 7 நிர்வாகக் குழுக்கள் மூலம் நிறைவேற்றப்படும் அவையாவன: அரசியல் பாதுகாப்பு, பொருளாதாரம், சமூகம், கலாசாரம், தர்மகர்த்தா, நீதி, நிர்வாகம், சிறப்பு அரசியல் குழு என்பனவாகும். பாதுகாப்புச் சபையின் சில உறுப்பினர்களையும், பொருளாதார சமூக சபையின் அனைத்து உறுப்பினர்களையும், பொதுச் செயலாளரையும் பொதுச்சபையே தெரிவு செய்யும்.

பாதுகாப்புச்சபை

இதன் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 15 ஆகும். நிரந்தர அங்கத்துவ நாடுகள் 5, அவையாவன: சீனா, பிரான்ஸ், ரஸ்யா அமெரிக்கா, பிரித்தானியா. ஏனைய 10 நாடுகளையும் பொதுச்சபை 2 ஆண்டுகளுக்கொருமுறை தெரிவு செய்யும். பாதுகாப்புச் சபையின் அங்கத்தவர் எண்ணிக்கையை 17ஆக உயர்த்துவதற்கும் யப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு நிரந்தர அங்கத்துவத்தை வழங்கவும் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுவரை இது நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதே நேரம் இந்தியாவும் நிரந்தர அங்கத்துவத்தைப் பெறமுயன்று வருகிறது.

பாதுகாப்புச்சபையில் ஒரு தீர்மானத்தை எடுக்க 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளும் ஏனைய 4 நாடுகளும் வாக்களிக்க வேண்டும். 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளில் ஒரு நாடாவது பிரேரணையை நிராகரித்தால் நடைமுறைப்படுத்த முடியாது. இவ்விசேட அதிகாரம் ‘வீட்டோ” எனப்படும். இந்த ‘வீட்டோ” அதிகார முறை தற்போது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உற்பட்டு வருகின்றது. அதே நேரம் இந்த வீட்டோ அதிகாரம் ரஸ்யா, சீனாவிடம் இல்லாவிடின் மேலைத்தேய நாடுகளின் செல்வாக்கு மிகைத்து விட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பாதுகாப்புச் சபையின் நோக்கங்களும், செயற்பாடுகளும்

ஐ.நா.வின் நோக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் ஏற்ப உலக சமாதானத்தையும், பாதுகாப்பையும் பேணல், சர்வதேச மோதல்களுக்கு வழிகோலும் அபிப்பிராய பேதங்கள் பற்றி ஆராய்தல், இத்தகைய மோதல்களைத் தீர்ப்பதற்கான வழிகளை அல்லது நிபந்தனைகளை முன்வைத்தல், ஆயுதக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளல், சமாதானத்திற்கெதிராக எழும் பிரச்சினைகள், ஆக்கிரமிப்புக்கள் பற்றி ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை முன்வைத்தல்

இச்சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல், ஆக்கிரமிப்பைத் தடுக்க பொருளாதாரத் தடை, ஒழுக்க நடவடிக்கையை எடுத்தல், இராணுவப் பலத்தைப் பிரயோகித்தல் போன்ற படிமுறைகள் மேற்கொள்ளப்படும். அண்மைக்காலத்தில் ஈராக் மீது அமெரிக்க நேசப்படைகள் தாக்குதல் மேற்கொண்டமை ஐ.நா மீது அமெரிக்காவின் செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு நிகழ்வாகவே கருதப்படுகிறது.  

பொருளாதார சமூக சபை அங்கத்துவ நாடுகள் 54 ஐக் கொண்டது. 18 நாடுகள் 3 ஆண்டுகள் காலத்துக்குப் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அமைப்புக்களை ஒன்றிணைக்கும் அமைப்பே இது. இது வருடத்தில் இரு தடவைகள் கூடும் (ஏப்ரல் மாதத்தில் நியுயேர்க்கிலும்,  ஜூலை மாதத்தில் ஜெனிவாவிலும் கூடும்)

இந்நிறுவனத்தின் கடமைகள் துணைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. போக்குவரத்து, செய்தித் தொடர்புகள் குழு, புள்ளிவிபரக்குழு, சனத்தொகைக் குழு,  சமூக வளர்ச்சிக் குழு, மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு, சிறுபான்மையினரின் பாதுகாப்புக் குழு, பெண்கள் நல பாதுகாப்புக் குழு மேலும் ஐரோப்பிய ஆசிய,  லத்தீன் அமெரிக்கா நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் என தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

நம்பிக்கைப் பொறுப்புச்சபை

சுதந்திரம் பெறாத நாடுகள் தாம் வளர்ச்சி பெறும்வரை வல்லரசுகளின் பொறுப்பில் இருக்கும். அவ்வாறு இருக்கும் நாடுகளால் (உறுப்பு) நிர்வாகிக்கப்படும் நாடுகளைக் கண்காணிக்க இது அமைக்கப்பட்டது. இச்சபையில் 12 உறுப்பினர்கள் இடம்பெறுவர் 3 ஆண்டுகளுக்கொருமுறை பொதுச்சபையால் இத்தெரிவு இடம்பெறும். இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கைப் பொறுப்புச்சபை முக்கியத்துவம் இழந்ததொரு சபையாகவே திகழ்கின்றது.

சர்வதேச நீதிமன்றம்

இது ஹெய்க் நகரில் அமைந்துள்ளது. இந்நீதிமன்றத்தின் சட்டங்களை ஏற்றுள்ள எந்தவொரு உறுப்பு நாடும் தமது பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள இந்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கலாம். இதில் 15 நீதிபதிகள் இருப்பர் (பதவிக்காலம் 9 ஆண்டுகள்)

செயலகம்

ஐ.நா. சபையின் ஏனைய அமைப்புக்களுக்குச் சேவையாற்றவே பொதுச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல்வர் செயலாளர் நாயகமாவார். இதன் முதலாவது செயலாளர் நாயகம் டிரக்லி வி என்பவராவார். தற்போதைய செயலாளர் நாயகம் ‘பன்-கீ மூன்” ஆவார்.
செயலாளர் நாயகம் பாதுகாப்புச் சபையின் சிபார்சின் பேரில் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படுவார். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நிர்வாகியான இவரது பிரதான கடமை உலக சமாதானத்தையும்ää பாதுகாப்பையும் பாதிக்கும் எந்த விடயத்தையும் பாதுகாப்புச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகும்.

ஐக்கிய நாடுகள் சபை கொண்டுள்ள நடவடிக்கைகள் விமர்சன ரீதியில் நோக்கப்பட வேண்டியதாகும்.

சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாமற் போனதன் காரணமாக 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டது. இனிமேல் இதுபோன்றதொரு யுத்தம் ஏற்படக்கூடாது என்பதைப் பிரதானமாக் கொண்டு உலக சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டியிருந்தது. உலக மகாயுத்தங்களை எடுத்து நோக்குமிடத்து நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அடிப்படைப் பிரச்சினைகள் காலகதியில் விஸ்வரூபம் எடுப்பதன் காரணமாகவே யுத்தங்கள் தோற்றுவிக்கப்பட்டன. எனவே உலக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் நாடுகளுக்கிடையிலான பிணக்குகள் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்ட பின் மற்றுமொரு உலக யுத்தம் ஏற்படவில்லை. இவ்வடிப்படையில் நோக்குமிடத்து ஐ.நா. அமையம் உலக சமாதானத்தை ஏற்படுத்த வில்லையென்று முற்றுமுழுதாகக் கூறமுடியாது.
பல சந்தரப்பங்களில் ஐ.நா. சபையின் அங்கத்துவ நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பிணக்குகளை (குறுங்காலப் பிணக்குகள் அல்ல நீண்ட காலப் பிணக்குகள்) ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்க்க முடியாமற்போன சந்தர்ப்பங்களும் உண்டு. உதாரணமாக மத்திய கிழக்குப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாமல் இதுவரை ஐ.நாவின் பிரயத்தனங்கள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளமை. 1967 ஆம் ஆண்டு ஐ.நா வின் தீர்மானத்தை மீறி இஸ்ரேல், பலஸ்தீன் பகுதிகளை ஆக்கிரமித்தமை, – 1968 ஆம் ஆண்டில் சோவியத் – செக்லோஸ்லவியா பிரச்சினை, 1974 ஆம் ஆண்டு துருக்கியின் சைப்ரஸ் படையெடுப்பு, 1991 ஆம்ஆண்டு அமெரிக்க ஈராக் யுத்தம், அண்மைக் காலத்தில் அமெரிக்க – ஈராக், அமெரிக்க – ஆப்கான் யுத்தம்…   இதைப் போன்ற காரணங்களை எடுத்து நோக்குமிடத்து ஐ.நா. சபை உலக சமாதானத்தைப் பேணவில்லை என்ற கூற்றில் சில உண்மைகள் இருப்பதை மறுக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளை நடைமுறைப் படுத்துகையில் ஏற்படக்கூடிய சிற்சில பிரச்சினைகள் உலக சமாதானத்திற்கான தலையீடாக அமைந்து காணப்படுகின்றன. இவற்றை பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.

பிரச்சினை நிலைகளில் ஐ.நா. சபையின் யோசனைகளை கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற நிலை இல்லாமை. சட்ட அதிகாரம் பொருந்தியதாக இன்மை. வல்லரசுகள் ஐ.நா.சபைக்குப் புறம்பான முறையில் தனது பலத்தினைப் பிரயோகித்தல் அமைப்பினுள் வல்லரசுகளின் தலையீடு. இத்தகைய தலையீடுகளுக்கிடையே ஐ.நா. சபை செயற்பாடு; சிக்கல்களை எதிர் நோக்குகின்றன. எனவே, உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐ.நா. சபை தவறிவிட்டது என்ற கருத்து சற்று உண்மையாகின்றது சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என வர்ணிக்கப்பட்ட பிரித்தானியா 2ம் உலகப் போரின் பின்னர் தன் முதன்மையை இழக்க, அமெரிக்கா, சோவியத் ரஸ்யா ஒன்றியம் ஆகிய இரு பெரும் வல்லரசுகள் எழுச்சி பெற்றன. முன்பு பிரித்தானியாவின் தனியுரிமையாக இருந்த உலக நிர்வாகம்,  பொருளாதாரச் சுரண்டல், இராணுவ ஆதிக்கம் என்பன இவ்விரு வல்லரசுகளுக்கிடையேயும் பங்கிடப்பட்டன. இவ்விரு வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் (Cold War) பல சிறிய நாடுகளை நசுக்குவதன் மூலம் செயற்பட்டன. தவிர மறை முகமாக ஐ.நா சபை அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

2ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து இன்றுவரை பல தசாப்தங்கள் கழிந்துவிட்டன. ஆனால், 1ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து 2 தசாப்தங்களுக்குள்ளேயே 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டுவிட்டது. எனவே 2ம் உலக மகாயுத்தத்தின் பின்னர் மீண்டும் ஒரு உலக மகாயுத்தம் ஏற்படாமைக்கு ஐ.நா. சபை முழுமையான காரணியா? இவ்வினாவினைச் சற்று அழுத்தமான முறையில் ஆராய்தல் வேண்டும். எவ்வாறாயினும் உலக சமாதானத்தைப் பேணத்தக்க முறையில் சில அத்தியாவசியமான கருமங்களை இது ஆற்றிவருவதை எம்மால் மறுக்கமுடியாது.

வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களின் வாழ்வாதார தொழிலை மேம்படுத்த உலகவங்கி 8.6 பில்லியன் ரூபா நிதி உதவி!

23wb_jayasundara.pngநாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் வாழ்வாதார தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் 8.6 பில்லியன் இலங்கை ரூபாவினை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது என நிதி,  திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று நிதி, திட்டமிடல் அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. அரசாங்கத் தரப்பில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தரவும் உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் நாக்கோ இஷியும் இதில் கையொப்பமிட்டனர்.

செயற்படுத்தப்பட்டு வரும் சமுதாய அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிலை முன்னேற்றும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்காக இந்நிதி பயன்படுத்தப்படும்

இச் செயற்திட்டத்தின் மூலம் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 800 பின்தங்கிய கிராமங்களிலுள்ள ஒரு மில்லியன் மக்கள் நன்மையடையவுள்ளனர்.  உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் பதுள்ளை,  மொனராகலை,  அம்பாந் தோட்டை,  கேகாலை,  நுவரெலியா,  இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை இலக்கு வைத்து இச்செயற்திட்டம் அமுல்படுத்தப் படும்.

இதன் பிரதான நோக்கம் கிராம அபிவிருத்தி, கிராமங்களுக்கிடையிலான தொடர்பை அபிவிருத்தி செய்தல்,  வாழ்க்கைத் தொழிலை முன்னேற்றல் என்ப னவாகும். தேச நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கெமிதிரிய மன்றம், சமுர்த்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து இத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளது.

வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்ய இணக்கம்

231009mahi-nuban.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்றுக் கொண்ட வியட்நாம் ஜனாதிபதி நுயன் மின் ட்ரயட்,  இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாம் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு ஜனாதிபதியை இலங்கை நேரப்படி நேற்று மாலை சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார். இதன்போதே இந்த அழைப்பு முன் வைக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது இரு அரசாங்கங்களுக்குமிடையில் முக்கிய பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. குற்றச்செயல்களை தடுத்தல், இரு நாடுகளினதும் பிராந்தியங்களினதும் பாதுகாப்பை பலப்படுதல் தொடர்பான ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கைச்சாத்திட்டன.

இரு தரப்பு சந்திப்பின்போது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, தென் கிழக்காசிய நாடுகளில் வியட்நாம் பொருளாதாரத்துறையில் பெரும் வளர்ச்சியடைந்து வருவதாக அந் நாட்டு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளினதும் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில் விசாயம் மற்றும் மீன்பிடித்துறை குறித்தும் இச்சந்திப்பின்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் யுத்தம் முடிவடைந்ததுடன் நாட்டில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான சந்தர்ப்பம் அதிகரித்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை தோற்கடித்தமை க்காக இலங்கை ஜனாதிபதியை வியட்நாம் ஜனாதிபதி பாராட்டியதுடன் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தியுள்ளார்.

புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டு மீட்பு

புலிகள் தமது பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பயன்படுத்திய விமான எதிர்ப்பு ஏவுகணைகளான இரண்டு சேம் மிசைல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் 8வது செயலணியின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவே புதுக்குடியிருப்பு இரணைப்பாளை எனும் இடத்திலிருந்து நேற்று இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் மீட்கப்பட்டுள்ளன.

புலிகள் தம்மிடமிருந்த அதிசக்தி வாய்ந்த ஏவுகணைகளைக் கொண்டு கடந்த காலங்களில் விமாப் படையினரின் விமானங்களை இலக்கு வைத்து பல்வேறு பயங்கரவாதச் செயற்பாடுகளை நடத்தியமையையும் பிரிகேடியர் நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அப்பகுதியிலிருந்து எம்.பி.எம்.ஜி உள்ளடக்கப்பட்ட ஒரு பீப்பாயும் 240 லீற்றர் மண்ணெண்ணெய் கொண்ட 10 பீப்பாய்களும், பல்வேறு வகையான மோட்டார் குண்டுகளும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இராணுவத்தின் 8வது செயலணியின் படைத் தளபதியான ரவிப்பிரிய லியனகே தலைமையிலான புலனாய்வுப் பிரிவினரே நேற்று இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண வீதிகள் புனரமைப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வட மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் சீர்குலைந்த 370 கி.மீ. தூரமான வீதிகளை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதனடிப்படையில் இத்திட்டத்துக்கு கடனுதவி வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப் படவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள 4 வருட காலம் கொண்ட இத்திட்டத்துக்கு 78 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி 70 மில்லியன் டொலரையும் இலங்கை அரசாங்கம் 8 மில்லியன் டொலரையம் வழங்கவுள்ளது.

ஜனாதிபதி வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்!

290909mahinda.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை வியட்நாம் சென்றுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி நுவென் மின் ட்ரியொட்டின் விசேட அழைப்பை ஏற்றே ஜனாதிபதி அங்கு சென்றார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவும் முக்கியஸ்தர்களின் குழுவென்றும் அங்கு சென்றுள்ளது.

வியட்நாமின் நொய்பாய் சர்வதேச விமான நிலையத்தில் வியட்நாமின் முக்கிய அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கவுள்ளனர். இன்று மாலை இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையில் உத்தியோகபூர்வ பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் சமூக, பொருளாதார, வர்த்தக,  மற்றும் விவசாய விடயங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

இன்று இரவு வியட்நாம் ஜனாதிபதியின் மாளிகையில் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு விருந்துபசாரமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘அனுமான் வால் போல் நீளும் துரோகப் பட்டியல்’ புலிகளின் புலம்பல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்தம் துரோகிகளை மட்டுமே உருவாக்கியது. தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளை வாடகைக்கு அமர்த்தியே தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் அரசியலை நகர்த்தினர். அந்த வாடகைத் தலைவர்களை புலம்பெயர் நாடுகளுக்கு அழைத்து போர் முழக்கம் இடவும் புலம்பெயர் தமிழர்கள் பின்நிற்கவில்லை. இன்று அந்த வாடகைத் தலைவர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்திகள் துரோகிப்பட்டியலில் இணைத்துள்ளனர். இத்துரோகப் பட்டியல் இன்னும் நீள்கின்றது என்றும் மிகவும் புலம்புகின்றனர். இது புலத்து புலி ஆதரவு சக்திகளின் புதிய துரோகப் பட்டியல் (புலி ஆதரவுத் தள இணையமொன்றில் இருந்து பெறப்பட்டது.):

1. கருணாநிதி
2. ஜெயலலிதா
3. திருமாவளவன்
4. ராமதாஸ்
5. விஜயகாந்த்
6. சிதம்பரம்
7. ஜெகத் கஸ்பர்
8. தினமலர்
9. ரஜினிகாந்த், கமல், விஜய் Etc நடிகர்கள்
10. வைரமுத்து
11. வீரமணி
12. ஜெகத்ரட்சகன்
13. சுப. வீரபாண்டியன்
14. காங்கிரஸ் பன்னிகள்
15. நக்கீரன்

மடு கட்டளைத் தளபதி விபத்தில் பலி – குருநாகலில் சம்பவம்

குருநாகல் தோரயாய பிரதேசத்தில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற வாகனவிபத்தில் மடு, 611வது படையணியின் கட்டளையிடும் தளபதி கேர்ணல் துமிந்த பலிஹகார அமரசேகர உயிரிழந்துள்ளார்.

மேலும் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்து குருநாகல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெறும் கூட்டமொன்றில் பங்கேற்பதற்காக வந்த கேர்ணல் அமரசேகரவின் இராணுவ கெப் வாகனமும் பொலிஸ் டிரக் வண்டியொன்றும் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முன்னாள் சென்ற பொலிஸ் டிரக் வண்டியை முந்திக்கொண்டு செல்ல முற்பட்டபோது இராணுவ கெப் கட்டுப்பாட்டை இழந்து பொலிஸ் டிரக்குடன் மோதியுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கேர்ணல் அதிகாலை இறந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

வருட இறுதிக்கு முன் வடக்கில் சிவில் நிர்வாகம் : ஒரு இலட்சம் பேர் மீள்குடியேறுவர் – அமைச்சர் அமுனுகம

வட பகுதியில் இவ்வாண்டு இறுதிக்குள் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு இலட்சம் பேர் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று தெரிவித்தார்.

பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும் (யு. என். டி. பி.) இணைந்து இதற்கென பாரிய திட்டம் ஒன்றை அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யு. என். டி. பியின் பிரதிநிதி நீல் பூனுக்கும், தனக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த திட்டத்திற்கு இணக்கம் கண்டதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மேலும் உரையாற்றுகையில்:-

கிராம சேவகர் பிரிவு தொடக்கம் பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் வரையான சகல செயற்பாடுகளும் முழுமையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தொலைத் தொடர்பு உட்பட உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை நிர்வாக வசதிகள் வெகு விரைவில் ஏற்படுத்தப்பட்டு இந்த மக்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

சுனாமி அனர்த்தத்தின் போதும், கிழக்கு மீட்டெடுக்கப்பட்ட பின்னரும் இது போன்ற நிர்வாக கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தோம்.

கிராம மட்டத்திலிருந்து நிர்வாக நடவடிக்கைகளை ஸ்தாபிக்க தேவையான சகல செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்கின்றோம்.

திருடர்கள் தாக்கியதில் தமிழக வாலிபர் லண்டனில் மரணம்

லண்டன் குரொய்டனில் வாழ்ந்து வந்த சரவணகுமார் செல்லப்பன் (25) என்ற இளைஞர் ஒக்ரோபர் 19ல் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட உடற்காயம் காரணமாக மரணமடைந்தார். இவர் தமிழ்நாடு நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் தனது கல்வியைத் தொடர்வதற்காக லண்டன் வந்திருந்தார். தீபாவளி தினமான ஒக்ரோபர் 17ல் மாலை ஏழு மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் இருந்த வீதியில் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த சரவணகுமார் செல்லப்பன் இனம்தெரியாத சில இளைஞர்களால் தாக்கப்பட்டதாக அதே ஊரைச் சேர்ந்த சரவணகுமாரின் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தாக்கப்பட்டு வீதியில் வீழ்ந்த சரவணகுமார் செல்லப்பனிடம் இருந்த தொலைபேசி மற்றும் கிறடிட்காட் போன்ற உடமைகள் பறிக்கப்பட்டது என்றும் திருடிச் சென்றவர்கள் வீதியில் நீண்ட நேரமாகக் கதைத்துக் கொண்டிருந்த சரவணகுமார் செல்லப்பனின் பிடரியில் இரும்புக் குற்றியினால் தாக்கிவிட்டு அவரது உடைமைகளைப் பறித்துச் சென்றதாகவும் சரவணகுமாரின் நண்பர் கூறினார்.

வீதியில் வீழ்ந்த சரவணகுமார் செல்லப்பன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு எழுந்து தனது வீட்டுக்குச் சென்று அங்கு நடந்ததை தான் தங்கியிருந்த வீட்டுக்காரர் ராஜனக்கு தெரிவித்ததாக ராஜனின் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தான் தன்னுடைய நண்பர்களுடன் மேடே மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாகக் கூறிவிட்டு அவருடைய நண்பர்களிடம் சென்றுள்ளார். நண்பர்களிடம் நடந்ததைக் கூறி விட்டு தனக்கு பிடரியில் வலி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் மேடே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சரவணகுமார் செல்லப்பனைக் காண்பித்துள்ளனர். சரவணகுமார் செல்லப்பனைப் பார்வையிட்ட மருத்துவர் தாக்குதலினால் ஏற்பட்ட வலியே அது என்று கூறி வலிநிவாரணியை வழங்கியாதாகத் தெரியவருகிறது. அன்றைய தினம் இரவு சரவணகுமார் தான் தங்கியிருந்த வீட்டில் தங்கவில்லை. தன்னுடைய நண்பர்கள் வீட்டிலேயே தங்கியதாகவும் சரவணகுமார் தங்கியிருந்த வீட்டுக்காரரர் ராஜனின் நண்பர் கூறுகிறார். இரவு படுக்கைக்குச் சென்ற போதும் சரவணகுமார் செல்லப்பனின் வலி குறைந்திருக்கவி;ல்லை என்றும் நண்பர்கள் அடிபட்ட இடத்தில் சுடுநீர் ஒத்தடம் கொடுத்தனர் என்றும் சரவணகுமாரின் நண்பர் தெரிவிக்கின்றார்.

வலியுடன் படுக்கைகுச் சென்ற சரவணகுமார் செல்லப்பன் மறுநாள் 18 ஒக்ரோபர் காலையில் எழுந்திருக்கவில்லை. காலை எழுந்து வேலைக்கு புறம்பட்ட நண்பன் வலியுடன் படுக்கைக்குச் சென்றவன் எப்படி உள்ளான் என்று பார்க்கச் சென்ற போதும் மூக்கிலும் வாயிலும் இரத்தம் வடிந்தபடி சரவணகுமார் செல்லப்பன் படுத்திருந்தார். உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுத்து ரூற்றிங் சென் ஜோர்ஜ் மருத்துவமனைக்கு சரவணகுமார் செல்லப்பன் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு மறுநாள் மதியம் ஒரு மணியளவில் சரவணகுமார் மரணமடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சரவணகுமார் செல்லப்பன் தனது இளம் வயதில் தன்னுயிரை இழந்ததையிட்டு உலகத் தமிழர் இயக்கம் (யுகே) தனது ஆழந்த மனவருத்தத்தை தெரிவித்துள்ளதுடன் இறந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும் அவரது மரணச் செய்தியை அறிவித்துள்ளனர். தமிழ்பேசும் நாங்கள் சரணவனகுமாரது உடலை பொறுப்பெற்காவிட்டால் கவுன்சில் அனாதையாக கருதி உடலை அடக்கம் செய்வவே வழமை. ஆதலால் சரவணகுமாரின் உடலைப் பொறுப்பெற்று அவரது உறுவினர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சியை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் உலகத் தமிழர் இயக்கம் சார்பில் ஜேக்கப் ரவிபாலன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

ஏற்கனவே விபத்தில் மரணமடைந்த மருத்துவத்தாதி செல்வி மஞ்சுளாவின் உடலையும் உலகத் தமிழர் இயக்கம் அவருடைய பெற்றோருக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனவரி 6ல் விபத்தில் மரணமான தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞரின் உடல் இங்கு உறவினர்கள் இல்லாத நிலையில் ரவர்ஹம்லற் கவுன்சிலால் அனாதையாக் கருதப்பட்டு அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. செப்ரம்பர் 9ல் முத்துக்குமாரின் உடலை கவுன்சிலர் போல் சத்தியநேசன் பொறுப்பேற்று லண்டன் சைவமுன்னேற்றச் சங்க ஐயரின் உதவியுடன் இறுதிக்கிரியைகளை மேற்கொண்டு அஸ்தியை முத்துக்குமாரின் பெற்றோருக்கு அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.