செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஏ – 9 ஊடாக அம்பியூலன்ஸ் சேவை நேற்று ஆரம்பம்

ஏ -9 தரை வழியினூடாக நோயாளிகளை சிகிச்சைக்காகக் கொழும்புக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அம்பியூலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் இந்த நடவடிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று ஆரம்பித்து வைத்தார். ஏ- 9 தரைப்பாதை ஊடாக வரையறைக்கு உட்பட்ட நிலையில் தற்போது பயணிகள் போக்குவரத்து உட்பட ஏனைய சில போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

ஆயினும் தற்போது அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலம் நோயாளர்களை யாழ் குடாநாட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் நடவடிக்கையும் அமைச்சர் டக்ளஸ் தேவான ந்தாவினது பெரு முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சென் ஜோன்ஸ் சேவைக்குரிய அம்பியூலன்ஸ் வண்டி மூலம் நேற்று இ. சீவரத்தினம் எனும் நோயாளர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

டேவிட் செப்பர்ட் காலமானார்

இங்கி லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பர்ட் மரணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் நேற்று பிரிந்தது.

291009david-shepherd.bmp68 வயதான டேவிட் ஷெப்பர்ட் 1983 ஆம் ஆண்டு முதல் 2005 ம் ஆண்டு வரை 172 ஒரு நாள் போட்டி மற்றும் 92 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி இருக்கிறார்.

இதில் 3 உலக கோப்பை போட்டி இறுதி ஆட்டமும் அடங்கும். 282 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள ஷெப்பர்ட் 1981 ஆம் ஆண்டில் முதல் தர போட்டியில் நடுவராக நியமிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் சர்வதேச நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

சட்டியைப் பார்த்துப் பானை ….. : பா ஜெ வேந்தன்

Hunting_Dogsஅமைச்சர் முரளீதரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் அப்பதவிக்கு லாயக்கு அற்றவர் என்று டெய்லி மிரர் க்கு கொடுத்த பேட்டி, முதலமைச்சரின் லாயக்கைவிட அமைச்சர் கருணாவின் லாயக்கையும் அரசியல் சாணக்கியத்தையும் அப்பட்டமாகக் காட்டிவிட்டது. இன்று சிறிலங்காவில் தகுதி அடிப்படையில் பதவிகள் வழங்கப்பட்டால் முக்கால்வாசிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிராமத்து குடும்பக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைக்கே தெரிவு செய்யப்பட மாட்டார்கள் என்பது நிச்சயம். இதில் சிங்கள அரசியல்வாதிகள் மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ‘டாக்டர்’ மேர்வின் சில்வா மற்றும் தமிழ் அரசியல் மட்டத்தில் Tamil Nutters Alliance (TNA) அனைத்து உறுப்பினர்களையும் குறிப்பிடலாம். இதில் ரிஎன்ஏ சிவாஜிலிங்கத்தை தனியாக எடுத்தப் பார்த்தால் வல்வெட்டித்துறை தாச்சி மறிப்பு விளையாட்டிற்குக் கூட தலைவராக வரத் தகுதியற்றவர்.

‘இன்று வடக்கு கிழக்கு மாகாணத்தில் தகுதியற்ற அதிகாரிகள் தான் இருக்கிறார்கள் ஆதலால் நான் கொழும்பிலிருந்து அனைத்து நிர்வாகத்தையும் செய்ய வேண்டி இருக்கின்றது’ என கிழக்கின் உதயம் நிர்வாக அதிகாரி கருத்துத் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பிலிருந்து தமது அதிகார ஆதிக்கத்தை வடக்கு கிழக்கில் தொடர இவ்வாறான உதாரணங்கள் பாவிக்கப்படுவதும் அவதானிக்கப்பட வேண்டிய விடயம். சிறிலங்காவில் தகுதி அடிப்படையில் அரசியல் நியமனங்கள் நடைபெறுவது நம் வாழ்நாளில் இடம்பெறப் போகும் விடயமல்ல. (நீங்கள் இன்னமும் பிறக்காமல் இருந்தாலொழிய.) ஆதலால் அந்த ஆசையை இப்போதைக்கு விட்டுவிடுவோம்.

தமிழ் இனத்தின் ‘ஒப்பற்ற தீர்க்கதரிசனமான தலைவர்’ மறைந்து சில மாதங்கள் தான் ஆகின்றது. இச்சில மாதங்களுள் சகல விடயங்களும் எதுவிதத் தடையுமின்றி சுமூகமாக இயங்கும் என எவரும் எதிர்பார்க்க முடியாது தான்.

வடக்கில் நிலை இப்படிப் பரிதாபமாக இருக்கும் போது கிழக்கு ஏதோ ஜனநாயகத்தில் திளைத்து இருந்தது என யாரும் கருதிவிட முடியாது. கொலை கொள்ளை ஆட்கடத்தல் தொடக்கம் அனைத்து அராஜகங்களும் நடந்த வண்ணம் தான் இருக்கின்றது. 2005க்கு முன் சாரத்துடனும் கலுசானுடனும் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும் காடைத்தனங்களையும் இப்போது கோட்சூட் போட்டுக் கொண்டு செய்கின்றார்கள். ‘தொட்டில் பழக்கம் விடிஞ்சால் போய்விடுமா’ என்று எங்கள் பெரியோர்கள் தெரியாமலா சொல்லி வைத்திருக்கிறார்கள்.

எமது எல்லாத் தலைவர்களையும் ஒன்றாக ஒப்பிட்டால் தந்தை செல்வா, அண்ணன் அமீர், தம்பி பிரபா, ஐயா சம்பந்தர், கடிதப் புகழ் சங்கரி, வெத்து வேட்டுச் சித்தர், அறுவைச் சுகு என்று ஒப்பிட்டளவில் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே ஒப்பீட்டளவில் தமிழரின் பிரச்சினையை யதார்த்தமாகப் புரிந்துகொண்டு  உறுதியுடன் எதிர்கொண்டார் என்று கூற வேண்டும். அதனால் தான் பல கொலை முயற்சிகளில் இருந்தும் சில தற்கொலை முயற்சிகளில் இருந்தும் தன்னைத் தற்காத்துக் கொண்டார். இன்று அமைச்சர் கருணா முதுகெலும்பு முறிகிற வரைக்கும் குனிந்ததால் டக்ளஸ் தேவானந்தாவும் தன்னைத் தக்க வைக்க சற்று வளைந்து கொடுக்க வேண்டி இருந்தது. அதனால் தான் வீணையை மீட்டியவர் வெற்றிலை போட வேண்டி வந்தது.

மறைந்த தலைவர் செல்வநாயகம் கூட வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் ‘எமது தமிழ் இனத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. தந்தை செல்வாவின் இந்தக் கூற்று அவரின் இயலாமையையும் தான் பல சக்திகளால் நெருக்கப்படுவதையும் அம்பலமாகக் காட்டி உள்ளது. நான் டக்ளஸ் தேவானந்தா உட்பட பல தலைவர்களை 1985 முதல் சந்தித்து வருகின்றேன். 2005ல் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்த போது தான் முதற் தடவையே சந்திரிகாவுடன் இணையாததை ஒரு சுயவிமர்சனக் கண்ணோட்டத்தில் கூறி வைத்தார். நான் இதை எழுதுவதன் மூலம் டக்ளஸ் தேவானந்தா ஏதோ தமிழ் இனத்தின் ஒப்பற்ற தீர்க்க தரிசனமான தலைவர் தூய்மையான தலைவர் என்று அர்த்தமல்ல. டக்ளஸ் தேவானந்தா ‘ஒரு நல்ல பிரபாகரன்’ என்று வேண்டுமென்றால்  சொல்லலாம். அவர் ஒருவகை புலி மார்க்ஸிஸ்ட் ‘தோழர்’. அவரிடம் ஒரு தெளிவான கருத்து இருந்ததை குறிப்பிட முனைகிறேன். மற்றவர்கள் அரச பாதுகாப்பிலும் நிதியிலும் இருந்துகொண்டு நாங்கள் அரசுடன் இல்லை என்று தமிழிலும் நாங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்று ஆங்கிலத்திலும் றீல் விடுவது போல் டக்ளஸ் தேவானந்த செயற்படவில்லை.

சுருக்கமாகக் கூறின் எமது ஒப்பற்ற தலைவர் மேதகு முழுத் தமிழ் இனத்தையும் சிங்கள ஆட்சியாளர்களின் முன்னிலையில் கைகட்டிப் பிச்சை கேட்கும் தரத்திற்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டு கறுத்த கோவணத்துடன் விடைபெற்றுச் சென்றுவிட்டார். இந்நிலையில் ஒப்பீட்டளவில் வலுவான தலைமையை டக்ளஸ் தேவானந்தா கொண்டுள்ளார்.

இந்த 50 வருட தமிழ் அரசியல் வரலாற்றில் Tamil Nutters Alliance (TNA) தமிழ் நட்டுக் கழன்றவர்களின் கூட்டணி போன்ற பினாமி அரசியல்வாதிகளை தமிழ் இனம் ஏற்றுக்கொள்வது ஆபத்தானது. பிரபாகரன் தமிழ் இனத்தின் சாபக்கேடு என்றால் இந்தத் தமிழ் நட்டுக் கழன்ற கூட்டணியினர் சாத்தன்கள்.

இன்று வடக்கு கிழக்கு அதிகார நிர்வாக அமைப்பு பெரும்சவால்களை எதிர்நோக்குகின்றது. அரசியல் சீராகவில்லை. 250 000 பேர் வன்னியில் உட்பட வடக்கு கிழக்கில் 600 000 தமிழ் முஸ்லீம் மக்கள் அகதிகளாக உள்ளனர். பிரச்சினைகள் மலை உயரத்திற்கு இருக்கின்றது. சுமூகநிலை திரும்ப 10 வருடங்கள் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வடக்கு கிழக்கு இப்படியான நிலையில் இருக்க லண்டன் உட்பட வெளிநாடுகளில் இருந்து சிலர் உதவி செய்கிறேன் பேர்வழி என்று இலங்கைக்கு சென்றுள்ளனர். ஆலோசகர் பதவிகளையும் கட்சிப் பதவிகளையும் அலங்கரிக்கத் தொடங்கிவிட்டனர். அங்குள்ளவர்கள் தான் தகுதியற்றமுறையில் நியமிக்கப்படுகிறார்கள் என்றால் வெளிநாட்டில் இருந்து செல்பவர்களிடம் என்ன வாழுது. அவர்களுக்குள்ள ஒரே தகுதி கடந்த 30 வருடமாக மாற்றுக் கருத்தும் மாற்று அரசியலும் பேசி ரீல் விட்டது மட்டுமே. புலம்பெயர்ந்த நாடுகளில் அவர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக வாய்ப்புகள் இருந்த போதும் அவர்களால் சமூகத்திற்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை என்பது மட்டுமல்ல அவர்களால் அவர்களையே முன்னெற்றிக் கொள்ளவும் முடியவில்லை. பெரியவர்கள் சொல்வார்களே முயல் பிடிக்கப் போகிற பிராணியின் மூஞ்சையைப் பற்றி. அது தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. பலசரக்குக் கடை கொம்பியூட்டர் கடை சொலிசிட்டர் கடை இதெல்லாம் செய்து பார்த்து சரி வராத ஒரு கோஸ்டி கிழக்கிலும் வன்னியிலையும் யாழிலையும் தலைவர்களாகவும் ஆலோசகர்களாகவும் படையெடுக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து கிழக்கு வன்னி யாழ் மக்களை வழிநடத்தவும் வழிகாட்டவும் போகின்ற இவர்கள் இவ்வளவு நாளும் புலத்தில் செய்தவற்றை பட்டியல் போட்டால் எல்லாம் வெளிக்கும்.

அம்மண்ணோடு ஒன்றாக் கலந்த அந்த மக்களைப் பலப்படுத்தி அங்குள்ள இளையவர்களின் திறமையை இனம்கண்டு அவர்களை பொறுப்புகளில் அமர்த்துவதை விட்டுவிட்டு வெளிநாடுகளில் உள்ள பெயில் ஓடருக்கு கடையை மூடிய, லோ சொசைட்டிக்கு பயந்து சொலிசிட்டர் கடையை மூடி தங்களிடம் வந்த அகதிகளைத் தவிக்கவிட்ட ‘சோம்பேறிக் கோஸ்டியை’ வைத்துக் கொண்டு அம்மக்களை வழிநடாத்துவதும் வழிகாட்டுவதும் பாரிய ஆபத்தினை விளைவிக்கும். ஆலோசனைணையும் வழிகாட்டல்களையும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த வல்லுனர்களிடம் பெற வேண்டும். டாக்குத்தர் சொலிசிட்டர் என்றதற்காக பதவிகளில் இருத்தப்படாது.

குறிப்பு : இக்கட்டுரையாளர் புனைபெயரில் கட்டுரையைத் தந்துள்ளார். ஆயினும் கட்டுரையாளர் தேசம்நெற் ஆசிரியர் குழுவிற்கு தன்னை வெளிப்படுத்தி அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

58000 க்கும் மேற்பட்டவர்கள் மீள் குடியேற்றம் – அமைச்சர் ரிசாத் தெரிவிப்பு

281009rishad.jpgஇம்மாத முடிவுக்குள் 58 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதாக இந்திய எம்.பிக்களிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்த போதும் அதனைவிட கூடுதலான மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவது தொடர்பாக நேற்று அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.

எதிர்வரும் சில தினங்களில் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் மேலும் 8 ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் இந்த மாத முடிவுக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதோடு அந்த மக்கள் தினமும் கட்டம் கட்டமாக சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். கடந்த 25ஆம் திகதி 2955 பேரும் 26ஆம் திகதி 2874 பேரும் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். வவுனியா நகரில் இருந்து இடம்பெயர்ந்த 2144 பேர் நேற்று மீள்குடியேற்றப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த சகல மக்களும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். வவுனியா தெற்கு தமிழ் பிரதேசம், வவுனியா தெற்கு சிங்களப் பகுதி,  செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் இந்த மாத இறுதிக்குள் மீள்குடியேற்றப் பணிகள் பூர்த்தி செய்யப்படும். வவுனியா வடக்கு பகுதியில் மிதிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடையவில்லை.

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 15 ஆயிரம் பேர் இதற்காக விண்ணப்பித்துள்ளதோடு அவர்களை மீள் குடியேற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சில நாடுகள் மீள்குடியேற்றம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிற போதும் இந்திய அரசாங்கம் ஒருபோதும் எம்மீது அழுத்தங்கள் பிரயோகித்தது கிடையாது. ஆரம்ப முதலே மீள்குடியேற்ற பணிகளுக்கு இந்தியா உதவி வருகிறது. மேலும் 500 கோடி உதவி வழங்கவும் இந்தியா முன்வந்துள்ளது. இந்திய எம்.பிக்களின் இலங்கை விஜயம் மூலம் அவர்களின் முன்னைய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்திய இராணுவ குழுவும் பாதுகாப்பு செயலாளரும் சந்திப்பு!

000gotabhaya_rajapaksa.jpgஇலங்கை வந்துள்ள உயர் கட்டளை கற்கைநெறியை பயிலும் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இந்த் சந்திப்பு இடம்பெற்றது. பிரிகேடியர் மொனி சன்டி தலைமையில் பதினான்கு அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழுவில் இந்தியாவின் இராணுவ மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் அடங்குகின்றனர்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதென ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது – ஜனாதிபதி

290909mahinda.jpgபயங்கர வாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதென நாம் ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது. தேசிய பாதுகாப்பையும் அரசியல் நிலைப்பாட்டையும் பலப்படுத்துவது மிக முக்கியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஒற்றுமை மூலமே தேசிய பாதுகாப்பையும் அரசியல் நிலைப்பாட்டையும் பலப்படுத்த முடியுமென தெரிவித்த ஜனாதிபதி, தேசிய ஒற்றுமை பற்றி சிந்திக்காத கடந்த கால பாடங்கள் எமக்கு சிறந்த முன்னுதாரண மாகுமெனவும் தெரிவித்தார்.

ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

தேசிய பாதுகாப்பு என்றும் மறக்க முடியாதது. கடந்த காலங்களில் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவமளிக்காமையே பல்லாயிரக்கணக்கான உயிர்களின் அழிவுக்கும் வளங்களின் அழிவுக்கும் காரணமாயின. இதனால் நாட்டைக் கட்டியெழுப்பும் பல சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போயின. உலகப் படத்தில் கீழ் நிலைக்கு நாடு வர நேர்ந்தது.எம்மை முந்திக் கொண்டு உலகில் பல நாடுகள் வெகுவாக முன்னேறிய போதும் எமது பின்னடைவுக்கும் அதுவே காரணமாகியது.

மீண்டும் அந்நிலை உருவாவதற்கு நாம் இடமளிக்க முடியாது.பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டதென நாம் ஓய்வடைய முடியாது.  உலகப் படத்தின் முன்னணிக்கு தாய்நாட்டை உயர்த்த வேண்டியது அவசியம். இதற்கான பெரும் பங்கு படைத்தரப்பினருக்கு உள்ளது. நாட்டின் இறைமை ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பரிசளிப்பு விழாவுக்கு நான்காவது தடவையாக இம்முறை நான் வருகை தந்துள்ளேன். எனினும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவும் சூழலில் இம்முறை இவ்விழாவில் கலந்துகொள்கிறேன்.

நாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் உலகில் மிகக் கொடூரமான பயங்கரவாதத்திடமிருந்து தாய் நாட்டை மீட்ட பாதுகாப்புப் படையினர் மீதான கெளரவம் அவர்கள் மீதான நம்பிக்கை மற்றும் அன்பில் எதுவித மாற்றமுமில்லை.

உலகின் புகழைப் பெற்ற திறமையான வீரர்களே எமது நாட்டுப் படையினர். அவர்களின் திறமையும், முதிர்ந்த அறிவும் ஆக்கபூர்வமான செயற்பாடுமே கொடிய பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள உறுதுணையாக அமைந்தது. உலகில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத யுத்தத்தை நோக்கும்போது மிகக் குறைந்த பாதிப்பினூடாகவே பயங்கரவாதத்தை எமது இராணுவத்தினர் வெற்றிகொண்டு ள்ளனர்.

சிவில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் யுத்தம் செய்வதில் அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினர். பாதுகாப்புப் படையினரின் தொழில் என்றுமே முடிவுறுவதல்ல. அப்பணி என்றும் தொடரக்கூடியது. படையில் இணைந்து கொண்ட எமது இளைஞர்களில் பெரும்பாலானோர் தூரத்துக் கிராமத்தவர்களே. இவர்கள் கற்றுத் தேர்ந்தவர்களல்ல. எனினும், இவர்களுக்கான முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவர்கள் இன்று உலகின் சிறந்த படை வீரர்களாகத் திகழ்கின்றனர்.

அரசாங்கம் படை வீரர்களை கெளரவப்படுத்துவதிலும் அவர்களது நலன்புரி விடயங்களுக்குமென பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி வருகிறது. பாதுகாப்பமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் சகல மாவட்டங்களிலும் விசேட செயற்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதத்தை ஒழிப்பது மட்டுமன்றி நாட்டைப் பாதுகாப்பதிலும் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதிலும் படையினருக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. அதை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவது அவசியம்.

பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியான நாட்டை உருவாக்க அர்ப்பணிப்புடன் பாடுபட்ட படைவீரர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் நாட்டின் தலைவர் என்ற வகையிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

முதலாவது ஹஜ் குழு இன்று பயணம்; இலங்கையர் 5800 பேருக்கு அனுமதி

hajj.jpgபுனித ஹஜ் கடமையை நிறை வேற்றச் செல்லும் முதலாவது இலங்கை ஹஜ் யாத்திரிகர் குழு இன்று மக்காவுக்கு பயணமாகிறது.முதலாவது ஹஜ் குழுவில் சுமார் 50 பேர் செல்லவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.

இம்முறை இலங்கையில் இருந்து 5800 யாத்திரிகர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக செல்ல உள்ளனர். ஹஜ் யாத்திரிகர்களை உத்தியோ கபூர்வமாக வழியனுப்பிவைக்கும் வைபவம் நவம்பர் முதலாம் திகதி காலை 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெறும்.

அன்றைய தினம் 210 யாத்திரிகர்கள் மக்கா செல்ல உள்ளனர்.

அரச வங்கிகளில் கடன் வட்டிவீதம் இன்று முதல் குறைப்பு 8% – 12%

அரச வங்கிகள் ஊடாக வழங்கப்படும் கடன்களுக்கு அறவிடப்படும் வட்டிவீதத்தை 8% – 12% வரை உடனடியாகக் குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்தத் தீர்மானம் இன்று (28ம் திகதி) முதல் அமுலுக்குவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார துறையின் முன்னேற்றத்திற்கு அரசாங்க வங்கிகளின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க வங்கிகளின் தலைவர்களுடன் நேற்றுப் பேச்சுவார்த்தை நடாத்தினார். அலரி மாளிகையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

கடனை பெற்றுக்கொண்ட ஒருவருக்கு தவணை அடிப்படையில் கடனை செலுத்துகையில் வட்டிவீதம் குறைவடையும் அனுகூலத்தையும் கடன் பெறுபவருக்கு கிடைக்கச் செய்யவேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு விவசாயம், சுற்றுலா, கைத்தொழில், மீன்பிடித் துறை உள்ளிட்ட சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகத்துறைகளையும் மற்றும் நிர்மாணத் துறையையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டி வீதங்களும் குறைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய புதிய வட்டி வீதங்களுக்கு ஏற்ப செலுத்த வேண்டிய திருத்தப்பட்ட தவணைக் கடன் தொகை விரைவில் வாடிக்கையா ளர்களுக்கு அறிவிக்கப்படும்.

இதேவேளை இவ்வருடம் அரசாங்க வங்கிகளில் கடன் பெற விண்ணப்பித்திருக்கும் சகல அரச ஊழியர்களுக்கும் டிசம்பர் 10ம் திகதிக்கு முன்னர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருக்கின்றார். கடனை தவணை அடிப்படையில் திருப்பி செலுத்தத் தவறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத வட்டி வீதத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறும் ஜனாதிபதி அரசாங்க வங்கித் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். சாதாரண மக்கள் கடனைத் திரு ப்பி செலுத்தும் போது ஏற்படும் தவிர்க்க முடியாத காரணங்களைக் கருத்தில் கொண்டு நிலுவை வட்டி வீதத்திலும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் ஜனாதிபதி ஆலோ சனை வழங்கியுள்ளார்.

அதேபோல் கடனைப் பெற்றுக் கொடுப்பதற்காக முன்வைக்கப்படும் பிணை தொடர்பில் மீளாய்வு செய்யவும் அதற்காகத் தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளைப் பார்க்கிலும் மிகவும் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிப்பது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடனை வழங்குகையில் கடன் தொகையில் மீன்பிடித்துறை, விவசாயம், சுற்றுலாத்துறை போன்ற மேம்படுத்தப்பட வேண்டிய துறைகளில் கூடிய கவனம் செலுத்து மாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீளாய்வு செய்வதற்காக எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் கூட்டமொன்றை நடாத்தவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அரச வங்கிகள் ஊடாக கடன் வழங்கும் போது மக்களை ஊக்குவிக்கும் வகையிலும் திருப்திப்படுத்தும் வகையிலும் அதன் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இப்பேச்சுவார்த்தையில் அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய, ஜனாதிபதி செயலாளர் லலித் வீர துங்க, நிதியமைச்சினதும் திறை சேரியினதும் செயலாளரான கலாநிதி பி.பி. ஜயசுந்தர மற்றும் அரச வங்கிகளின் தலைவர்களும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கிழக்கு முதல்வரின் ஜீப் மரத்தில் மோதி விபத்து மெய்ப்பாதுகாவலர் இருவர் உட்பட மூவர் பலி

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் அவரது பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு இராணுவ வீரர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்று மொருவர் காயமடைந்துள்ளார்.

குருநாகல், கொக்கரல்ல தியநுரு பிரதேசத்தில் நேற்று அதிகாலை இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

இந்த விபத்தின் போது முதலமைச்சர் வாகனத்தில் இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சரின் குண்டு துளைக்காத “லேன்ட் ரோவர்” ரக கறுப்பு நிற வாகனம் பழுதடைந்துள்ளது. அதனை பழுதுபார்ப்பதற்காக முதலமைச்சரின் பாதுகாவலர்களும், சிவிலியன் ஒருவரும் திருகோண மலையிலிருந்து கொழும்புக்கு எடுத்து வந்துள்ளனர்.

வாகனம் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி பாரிய மரம் ஒன்றில் மிகவும் வேகமாக மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

காயமடைந்தவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.

இரண்டு தேர்தல்களும் ஒரே நாளில்? ஊடகத் துறை அமைச்சர் தெரிவிப்பு

000lakshman_yapa_abeywardena.jpgஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது குறித்து; கவனம் செலுததுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார. தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

ஏதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டின் போது இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

உரிய நேரத்தில் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருதாகவும் குறிப்பிட்ட காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் திட்டவட்டமாக நடத்தப்படும எனவும் குறிப்பிட்டார். ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களையும் நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் தயாராக உள்ளதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது தேர்தல்களை நடத்த தீர்மனிப்பது அரசாங்கம் என்றும் அவற்றை நடத்துவது திணைக்களத்தின் பொறுப்பு எனவும் அமைச்சா கூறினார்.