அமைச்சர் முரளீதரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் அப்பதவிக்கு லாயக்கு அற்றவர் என்று டெய்லி மிரர் க்கு கொடுத்த பேட்டி, முதலமைச்சரின் லாயக்கைவிட அமைச்சர் கருணாவின் லாயக்கையும் அரசியல் சாணக்கியத்தையும் அப்பட்டமாகக் காட்டிவிட்டது. இன்று சிறிலங்காவில் தகுதி அடிப்படையில் பதவிகள் வழங்கப்பட்டால் முக்கால்வாசிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிராமத்து குடும்பக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைக்கே தெரிவு செய்யப்பட மாட்டார்கள் என்பது நிச்சயம். இதில் சிங்கள அரசியல்வாதிகள் மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ‘டாக்டர்’ மேர்வின் சில்வா மற்றும் தமிழ் அரசியல் மட்டத்தில் Tamil Nutters Alliance (TNA) அனைத்து உறுப்பினர்களையும் குறிப்பிடலாம். இதில் ரிஎன்ஏ சிவாஜிலிங்கத்தை தனியாக எடுத்தப் பார்த்தால் வல்வெட்டித்துறை தாச்சி மறிப்பு விளையாட்டிற்குக் கூட தலைவராக வரத் தகுதியற்றவர்.
‘இன்று வடக்கு கிழக்கு மாகாணத்தில் தகுதியற்ற அதிகாரிகள் தான் இருக்கிறார்கள் ஆதலால் நான் கொழும்பிலிருந்து அனைத்து நிர்வாகத்தையும் செய்ய வேண்டி இருக்கின்றது’ என கிழக்கின் உதயம் நிர்வாக அதிகாரி கருத்துத் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பிலிருந்து தமது அதிகார ஆதிக்கத்தை வடக்கு கிழக்கில் தொடர இவ்வாறான உதாரணங்கள் பாவிக்கப்படுவதும் அவதானிக்கப்பட வேண்டிய விடயம். சிறிலங்காவில் தகுதி அடிப்படையில் அரசியல் நியமனங்கள் நடைபெறுவது நம் வாழ்நாளில் இடம்பெறப் போகும் விடயமல்ல. (நீங்கள் இன்னமும் பிறக்காமல் இருந்தாலொழிய.) ஆதலால் அந்த ஆசையை இப்போதைக்கு விட்டுவிடுவோம்.
தமிழ் இனத்தின் ‘ஒப்பற்ற தீர்க்கதரிசனமான தலைவர்’ மறைந்து சில மாதங்கள் தான் ஆகின்றது. இச்சில மாதங்களுள் சகல விடயங்களும் எதுவிதத் தடையுமின்றி சுமூகமாக இயங்கும் என எவரும் எதிர்பார்க்க முடியாது தான்.
வடக்கில் நிலை இப்படிப் பரிதாபமாக இருக்கும் போது கிழக்கு ஏதோ ஜனநாயகத்தில் திளைத்து இருந்தது என யாரும் கருதிவிட முடியாது. கொலை கொள்ளை ஆட்கடத்தல் தொடக்கம் அனைத்து அராஜகங்களும் நடந்த வண்ணம் தான் இருக்கின்றது. 2005க்கு முன் சாரத்துடனும் கலுசானுடனும் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும் காடைத்தனங்களையும் இப்போது கோட்சூட் போட்டுக் கொண்டு செய்கின்றார்கள். ‘தொட்டில் பழக்கம் விடிஞ்சால் போய்விடுமா’ என்று எங்கள் பெரியோர்கள் தெரியாமலா சொல்லி வைத்திருக்கிறார்கள்.
எமது எல்லாத் தலைவர்களையும் ஒன்றாக ஒப்பிட்டால் தந்தை செல்வா, அண்ணன் அமீர், தம்பி பிரபா, ஐயா சம்பந்தர், கடிதப் புகழ் சங்கரி, வெத்து வேட்டுச் சித்தர், அறுவைச் சுகு என்று ஒப்பிட்டளவில் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே ஒப்பீட்டளவில் தமிழரின் பிரச்சினையை யதார்த்தமாகப் புரிந்துகொண்டு உறுதியுடன் எதிர்கொண்டார் என்று கூற வேண்டும். அதனால் தான் பல கொலை முயற்சிகளில் இருந்தும் சில தற்கொலை முயற்சிகளில் இருந்தும் தன்னைத் தற்காத்துக் கொண்டார். இன்று அமைச்சர் கருணா முதுகெலும்பு முறிகிற வரைக்கும் குனிந்ததால் டக்ளஸ் தேவானந்தாவும் தன்னைத் தக்க வைக்க சற்று வளைந்து கொடுக்க வேண்டி இருந்தது. அதனால் தான் வீணையை மீட்டியவர் வெற்றிலை போட வேண்டி வந்தது.
மறைந்த தலைவர் செல்வநாயகம் கூட வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் ‘எமது தமிழ் இனத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. தந்தை செல்வாவின் இந்தக் கூற்று அவரின் இயலாமையையும் தான் பல சக்திகளால் நெருக்கப்படுவதையும் அம்பலமாகக் காட்டி உள்ளது. நான் டக்ளஸ் தேவானந்தா உட்பட பல தலைவர்களை 1985 முதல் சந்தித்து வருகின்றேன். 2005ல் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்த போது தான் முதற் தடவையே சந்திரிகாவுடன் இணையாததை ஒரு சுயவிமர்சனக் கண்ணோட்டத்தில் கூறி வைத்தார். நான் இதை எழுதுவதன் மூலம் டக்ளஸ் தேவானந்தா ஏதோ தமிழ் இனத்தின் ஒப்பற்ற தீர்க்க தரிசனமான தலைவர் தூய்மையான தலைவர் என்று அர்த்தமல்ல. டக்ளஸ் தேவானந்தா ‘ஒரு நல்ல பிரபாகரன்’ என்று வேண்டுமென்றால் சொல்லலாம். அவர் ஒருவகை புலி மார்க்ஸிஸ்ட் ‘தோழர்’. அவரிடம் ஒரு தெளிவான கருத்து இருந்ததை குறிப்பிட முனைகிறேன். மற்றவர்கள் அரச பாதுகாப்பிலும் நிதியிலும் இருந்துகொண்டு நாங்கள் அரசுடன் இல்லை என்று தமிழிலும் நாங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்று ஆங்கிலத்திலும் றீல் விடுவது போல் டக்ளஸ் தேவானந்த செயற்படவில்லை.
சுருக்கமாகக் கூறின் எமது ஒப்பற்ற தலைவர் மேதகு முழுத் தமிழ் இனத்தையும் சிங்கள ஆட்சியாளர்களின் முன்னிலையில் கைகட்டிப் பிச்சை கேட்கும் தரத்திற்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டு கறுத்த கோவணத்துடன் விடைபெற்றுச் சென்றுவிட்டார். இந்நிலையில் ஒப்பீட்டளவில் வலுவான தலைமையை டக்ளஸ் தேவானந்தா கொண்டுள்ளார்.
இந்த 50 வருட தமிழ் அரசியல் வரலாற்றில் Tamil Nutters Alliance (TNA) தமிழ் நட்டுக் கழன்றவர்களின் கூட்டணி போன்ற பினாமி அரசியல்வாதிகளை தமிழ் இனம் ஏற்றுக்கொள்வது ஆபத்தானது. பிரபாகரன் தமிழ் இனத்தின் சாபக்கேடு என்றால் இந்தத் தமிழ் நட்டுக் கழன்ற கூட்டணியினர் சாத்தன்கள்.
இன்று வடக்கு கிழக்கு அதிகார நிர்வாக அமைப்பு பெரும்சவால்களை எதிர்நோக்குகின்றது. அரசியல் சீராகவில்லை. 250 000 பேர் வன்னியில் உட்பட வடக்கு கிழக்கில் 600 000 தமிழ் முஸ்லீம் மக்கள் அகதிகளாக உள்ளனர். பிரச்சினைகள் மலை உயரத்திற்கு இருக்கின்றது. சுமூகநிலை திரும்ப 10 வருடங்கள் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வடக்கு கிழக்கு இப்படியான நிலையில் இருக்க லண்டன் உட்பட வெளிநாடுகளில் இருந்து சிலர் உதவி செய்கிறேன் பேர்வழி என்று இலங்கைக்கு சென்றுள்ளனர். ஆலோசகர் பதவிகளையும் கட்சிப் பதவிகளையும் அலங்கரிக்கத் தொடங்கிவிட்டனர். அங்குள்ளவர்கள் தான் தகுதியற்றமுறையில் நியமிக்கப்படுகிறார்கள் என்றால் வெளிநாட்டில் இருந்து செல்பவர்களிடம் என்ன வாழுது. அவர்களுக்குள்ள ஒரே தகுதி கடந்த 30 வருடமாக மாற்றுக் கருத்தும் மாற்று அரசியலும் பேசி ரீல் விட்டது மட்டுமே. புலம்பெயர்ந்த நாடுகளில் அவர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக வாய்ப்புகள் இருந்த போதும் அவர்களால் சமூகத்திற்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை என்பது மட்டுமல்ல அவர்களால் அவர்களையே முன்னெற்றிக் கொள்ளவும் முடியவில்லை. பெரியவர்கள் சொல்வார்களே முயல் பிடிக்கப் போகிற பிராணியின் மூஞ்சையைப் பற்றி. அது தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. பலசரக்குக் கடை கொம்பியூட்டர் கடை சொலிசிட்டர் கடை இதெல்லாம் செய்து பார்த்து சரி வராத ஒரு கோஸ்டி கிழக்கிலும் வன்னியிலையும் யாழிலையும் தலைவர்களாகவும் ஆலோசகர்களாகவும் படையெடுக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து கிழக்கு வன்னி யாழ் மக்களை வழிநடத்தவும் வழிகாட்டவும் போகின்ற இவர்கள் இவ்வளவு நாளும் புலத்தில் செய்தவற்றை பட்டியல் போட்டால் எல்லாம் வெளிக்கும்.
அம்மண்ணோடு ஒன்றாக் கலந்த அந்த மக்களைப் பலப்படுத்தி அங்குள்ள இளையவர்களின் திறமையை இனம்கண்டு அவர்களை பொறுப்புகளில் அமர்த்துவதை விட்டுவிட்டு வெளிநாடுகளில் உள்ள பெயில் ஓடருக்கு கடையை மூடிய, லோ சொசைட்டிக்கு பயந்து சொலிசிட்டர் கடையை மூடி தங்களிடம் வந்த அகதிகளைத் தவிக்கவிட்ட ‘சோம்பேறிக் கோஸ்டியை’ வைத்துக் கொண்டு அம்மக்களை வழிநடாத்துவதும் வழிகாட்டுவதும் பாரிய ஆபத்தினை விளைவிக்கும். ஆலோசனைணையும் வழிகாட்டல்களையும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த வல்லுனர்களிடம் பெற வேண்டும். டாக்குத்தர் சொலிசிட்டர் என்றதற்காக பதவிகளில் இருத்தப்படாது.
குறிப்பு : இக்கட்டுரையாளர் புனைபெயரில் கட்டுரையைத் தந்துள்ளார். ஆயினும் கட்டுரையாளர் தேசம்நெற் ஆசிரியர் குழுவிற்கு தன்னை வெளிப்படுத்தி அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.