செய்திகள்

செய்திகள்

செய்திகள்

”குடாநாட்டில் குற்றச்செயல்கள் தொடருமானால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” யாழ். படைத்தளபதி

Mahinda_Hathrusinge_Major_Genயாழ். குடாநாட்டில் தொடர்ந்து குற்றச்செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில் தேவைப்பட்டால் மேலும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என யாழ்.படைத்தளபதி  மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மக்கள் பீதியும் அச்சமுமின்ற வாழ வசதியாக பாதுகாப்பு விடயத்தில் சில கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்றத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

”குடாநாட்டில் தொடர்ந்து நடைபெறும் குற்றச்செயல்களை முடிவிற்கு கொண்டுவர அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இச்சம்பவங்களுக்கு காரணமான பலரை கைது செய்துள்ளோம். பொலிசார்  தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர். இக்குற்றச்செயல்களுக்கு பின்னணியில் இருப்பவர்களைக் கண்டு பிடித்து, சட்டம், ஒழுங்கைப் பேணி, மக்களின் அச்சத்தை நீக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குடாநாட்டில் சாவகச்சேரி மாணவனின் படுகொலையுடன் ஆரம்பித்து பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இதனால் மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

”வன்செயல்களை முடிவிற்கு கொண்டுவருவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் கலந்தரையாடியுள்ளேன். சட்டம் ஒழங்கை நிலைநாட்டி. மக்களின் அச்சநிலையைப் போக்கி, அவர்களுக்கான இயல்பு வாழ்வினை ஏற்படுத்த ஏற்பாடு செய்யுமாறு அவர் எமக்கு அறிவுறுத்தியுள்ளார். அவரது வழிகாட்டலில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாமல் விட்டால் மேலும் பல நடவடிக்கைளை எடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நீதிபதிகளுக்கோ, சட்டத்தரணிகளுக்கோ, வேறு எவருக்குமோ அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை நாம் வழங்குவோம்” என்றும் படைத்தளபதி குறிப்பிட்டார்.

”சட்டத்தரணிகள் தங்கள் பகிஸ்கரிப்பு நடவடிக்கையை நிறுத்தி சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இச்செய்தியை உங்களிடம் கூறுமாறு பாதுகாப்புச் செயலாளர் என்னைப் பணித்துள்ளார்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  நேற்று நடைபெற்ற இச்சந்திப்பில்; யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜாவும் கலந்து கொண்டார்.

சட்ட விரோத ஆட்கடத்தலை தடுக்க அவுஸ்திரேலியாவில் கடும் சட்டம்

australias.jpgதமது நாட்டுக்கு ஆட்களைக் கடத்தி வருவதைத் தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.  இதற்கென ‘ஆட்களைக் கடத்துவதற்கு எதிரான சட்டமூலம் 2010’ அறிமுகப் படுத்தப்படுகிறது. இதன்மூலம், ஆட்களைக் கடத்தும் சம்பவங்களைப் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கையாள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழி வகுக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய சட்ட மா அதிபர் றொபர்ட் மெக்கலண்ட் எம்.பி, குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை விவகாரங்களுக்கான அமைச்சர் செனட்டர் கிறிஸ் ஈவன்ஸ், உள்துறை அமைச்சர் பிரண்டன் ஓ ‘ கொனர் எம்.பி. ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்து வதற்கான சட்ட மூலத்தை விபரித்துள்ளனர்.

புதிய சட்ட மூலத்தின் பிரகாரம், அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுத் துறையினருக்கு, ஆட்கடத்தல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.  தவிரவும், ஆட்கடத்தலுக்கு நிதியுதவி அளிப்பது ஆதரவளிப்பதும் பாரதூரமான குற்றமாகக் கருதப்படும்.

அவ்வாறு உதவிபுரிந்து குற்றவாளியாகக் காணப் படுபவருக்கு 10 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனையோ அல்லது 110,000 டொலர் அபராதமோ அல்லது இரண்டு தண்டனையுமோ விதிக்கப்படும்.

கடத்தலில் ஈடுபடுவதுடன் அவர்களிடம் பணம் பரித்தல் உயிராபத்தை ஏற்படுத்தல் அல்லது கடுமையான பாதிப்புகளை உண்டுபண்ணுவோருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையோ அல்லது 2,20,000 டொலர் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.

வெள்ளத்தில் மூழ்கிய தலைநகர் – இயல்பு நிலை ஸ்தம்பிதம்

9colombo.jpgகொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்று (14) இரவு முதல் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையின் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேல் மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் கூடுதலான பாதிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடி, மின்னல் காரணமாகவும் பலத்த காற்றின் காரணமாகவும் வீடுகளும் இதர கட்டடங்களும் சேதமாகியுள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்து பலர் காயமுற்றுள்ளனர். வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும் வெள்ளப் பெருக்கினாலும் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன.

கொழும்பு நகரின் பல வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அன்றாட அலுவல்கள் ஸ்தம்பிதமடைந்தன. வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்துகள் முடங்கின. பொதுமக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளானதோடு, அரச, தனியார் அலுவலகப் பணியாளர்கள் கடமைகளுக்குச் செல்ல முடியாமல் அவதியுற்றதைக் காண முடிந்தது.

சனப்புழக்கம் கூடுதலாக உள்ள கேந்திர முக்கியத்துவமான வியாபார வீதிகளில் வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பொருள் சேதமும் ஏற்பட்டிருந்ததையும் காண முடிந்தது. சில பாடசாலைகள் மூடப்பட்டதுடன், இயங்கிய பாடசாலைகளில் மாணவர்கள் வரவு குறைவாகக் காணப்பட்டது. நேற்றுப் பிற்பகல் வரை கொழும்பு நகரில் இந்த ஸ்தம்பித நிலை நீடித்தது.

கொழும்பில், கொட்டாஞ்சேனை, ஜோர்ஜ் ஆர். டி. மாவத்தை, ஆமர் வீதி, ஹெட்டியாவத்தை, புலுமெண்டல் வீதி, ஜம்பட்டா வீதி, கிராண்ட்பாஸ், தெமட்டகொட பேஸ் லைன் வீதி, தர்மராஜ வீதி, கிருலப்பனை பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள பகுதி, கறுவாத்தோட்ட பகுதியில் பல்கலைக்கழக வீதி, தேஸ்டன் கல்லூரி வீதி, பிளவர் வீதி, ஹோர்டன் வீதி, உட்பட பல வீதிகள் நீரில் மூழ்கியிருந்தன. இதனால் காலை வேளையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

களுத்துறை பகுதியில் கொழும்பு- மத்துகம வீதி, வெலிபென், ஹொரன, பன்னல, அளுத்கம- மதுகம வீதிகள் நீரில் மூழ்கின. கம்பஹா, காலி ஆகிய பகுதிகளிலும் பல வீதிகள் நீரில் முழ்கியதால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. மாலபே- கண்டி வீதி பியகம வீதி என்பனவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன.

மேல் மாகாணத்தில் ஓரிரு தினங்கள் தொடர்ந்து காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாகவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளைகளில் மழையை எதிர்பார்ப்பதாகவும் காலநிலை அவதான நிலையம் கூறியது. இதேவேளை மின்னல் தாக்கியதில் கொழும்பு பெரியாஸ்பத்திரியின் ஒரு பகுதி கூரை சேதமாகியுள்ளது.

9colombo.jpg

இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 2 ஆண்டுகள் நீடிப்பு

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் மீதான தடையை இந்திய அரசாங்கம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. புலிகள் இயக்கத்தினர் தமிழ்நாட்டில் தங்களது செயற்பாட்டை மீளமைக்க முயல்வது தொடர்பாக புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவல்களை யடுத்து இந்த நீடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1992ம் ஆண்டு முதல் இந்தியாவில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்டு புலிகள் இயக்கம் மீண்டும் செயற்படத் தொடங்குவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக இந்திய உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து 2800 பேருக்கு ஹஜ் அனுமதி வழங்க உறுதியளிப்பு – 8000 பேர் அனுமதி குறித்து சவூதி ஆலோசனை

hajj.jpgஹஜ் முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தலைமையிலான குழு சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் பவுட் பின் அப்துல் சலாம் அல் பாஸியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.

இதன் போது இலங்கையிலிருந்து 2800 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற ஹஜ் கோட்டா வழங்குவதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஆனால் இலங்கையில் இருந்து 8 ஆயிரம் பேரை ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்குமாறு அமைச்சர் பெளஸி கோரியுள்ளார். இது குறித்து உயர் மட்டத்துடன் கலந்துரையாடி அறிவிப்பதாக சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதேவேளை அமைச்சர் பெளஸி சவூதி அமைச்சருடன் ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திடவுள்ளார்.

நுவரெலியா தோட்டத்தில் ரோனடோ சூறாவளி – ஒருவர் பலி, வீடுகள் சேதம்

lightning-01.jpgநுவரெலியா நெஸ்லி தோட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட ரோனடோ சூறாவளியினால் ஆறு வீடுகள் சேதமடைந்ததோடு ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 36 வயதுடைய உதயகுமார் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இலேசான மழை பெய்து கொண்டிருந்தது. நண்பகல் இரண்டு மணியளவில் திடீரென ரொனடோ சுழல்காற்று ஏற்பட்டது. இதில் வீடுகள் தூக்கி வீசப்பட்டதோடு மின்கம்பங்களும் பாதிக்கப்பட்டன. இந்த வேளையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த உதயகுமார் மீது வீட்டுச் சிதைவுகள் மோதி வெட்டியதிலேயே உயிரிழந்தாரென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

நுவரெலியா மாவட்ட எம்.பி. வே. இராதாகிருஷ்ணன் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்ததோடு பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் மே 18 அன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம் – எம் கெ சிவாஜிலிங்கம்

Sivajilingam_M_Kதமிழ்த் தேசிய விடுதலை முன்னணியும், புதிய இடதுசாரி முன்னணியும் இணைந்து எதிர்வரும் 18ம் திகதி வவுனியா நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மே மாதம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, முள்ளியவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் முகமாகவும், சிறைகளிலுள்ள 12 ஆயிரம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளதாகவும் திரு. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்ற படுகொலைகளை விசாரணை செய்ய ஆணைக்குழு ஒன்றை அமைக்கக் கோரியும், காணாமல் போனவர்கள் அரசின் பாதுகாப்பில் இருந்தால் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக் கோரியும் இவ்வார்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

”ஜக்கிய தேசியக் கட்சியும் இனப்பிரச்சினை தொடர்பாக பல தவறுகளை விட்டுள்ளது!!!” ஏ.ஜே.எம் முசாமில் (ஜக்கிய தேசிய கட்சி) : வி ராம்ராஜ் (ரிபிசி பணிப்பாளர்)

Musamil_A_J_M_UNP_Cllrதமிழ் மக்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாணவிட்டால் மீண்டும் தமிழ் மக்களின் பிரச்சனை பழைய நிலமைக்கே வந்துவிடும் என ஜக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மகாண சபையின் உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான ஏ.ஜே.எம் முசாமில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் கொண்டுவரபட்ட அமரர் நீலன் திருச்செல்வத்தின் அரசியல் தீர்வுதிட்டத்தை ரணில் தலைமையிலான ஜக்கிய தேசிய கட்சி ஆதரித்து இருந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வைக் கண்டிருப்பதுடன்  ஜக்கிய தேசியக் கட்சியும் ஒரு அரசியல் ரீதியிலான வெற்றியைச் சந்தித்திருக்கும். அன்று ஜக்கிய தேசியக் கட்சி விட்ட தவறே இன்று ஜக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவாகும். தற்போதைய அரசாங்கம் ஒரு இனவாதத்தை முன்னிலைப்படுத்தி  தன் ஆட்சியை கொண்டு செல்வதுடன்  அதிலிருக்கின்ற அமைச்சர்களைக் கூட திருப்திப் படுத்திக் கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு வழிசமைக்காது எனவும் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு ஒன்றினை வைத்துகொண்டு இந்த அரசு சர்வதிகாரத்தனமாக செயற்படுகிறது எனவும் குறிப்பிட்ட அவர் ஜக்கிய தேசியக் கட்சியும் இனப்பிரச்சினை தொடர்பாக பல தவறுகளை விட்டுள்ளதை  நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதே வேளை 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்தினால் தமிழ் பேசும்மக்களின் பிரச்சினைக்கு ஆரம்ப நகர்வாக முன்னெடுத்து செல்லமுடியும் அதே வேளை 13 ஆவது அரசியல் சீர்திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாகாகது. கிழக்கு மாகாணத்தில்  ஒரு மாகாண சபையை உருவாக்கி அதற்கு  ஒரு தமிழ் முதலமைச்சரையும் தெரிவு செய்து அதனுடைய அனைத்து அதிகாரங்களையும் சிங்கள ஆளுனரிடம் ஒப்படைத்ததன் மூலம் இந்த அரசின் கபடத்தனத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

எனவே இந்த அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமானால் ஜக்கிய தேசியக் கட்சி அதனை முழுமையாக ஆதரிக்கும் என்று வியாழக்கிழமை (13 May 2010) ரீபிசியில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது ஜக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாகாண சபையின் உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான ஏ.ஜே.எம் முசாமில் தெரிவித்தார்.

அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் கெஹலிய

kahiliya.jpgஅரசாங் கத்தின் புதிய அமைச்சரவைப் பேச்சாளராக தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் ஆரியரட்ன எதுகல நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் ஆரம்பத்தில் அறிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் முதலாவது செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்றது. இதில் அமைச்சர் ரம்புக்வெல்ல முதன் முதலாகக் கலந்துகொண்டு அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 5000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

house.jpgகிளிநொச்சி மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளவர்களில் 5,000 குடும்பங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் உலக வங்கி, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயம், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. உலக வங்கியின் நிதியுதவியுடன் 3640 வீடுகளும் செஞ்சிலுவைச் சங்கத்தினால் 100 வீடுகளும் புதிதாக நிர்மாணிக் கப்படுவதுடன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தினால் 1600 வீடுகள் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேற்படி வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப்பணிகள் நிறைவுபெறுமெனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை; யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரில் 1200 பேரை இவ்வாரத்தில் மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 540 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் இவ்வாரத் தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கண் டாவளை மற்றும் கரச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மேற்படி குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து மீள்குடியேற்றப்படும் குடும்பங்களுக்குத் தற்காலிக வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டு வருவ தாகத் தெரிவித்த அவர்,

படிப்படியாக அனைவருக்கும் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். அத்துடன் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்