செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இரண்டாவது பதவிக் காலத்திலாவது சிறைக்கைதிகளை விடுவியுங்கள் – ஜனாதிபதிக்குக் கடிதம்

K Thevathasanபுதிய மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை திரைப்படக் கூட்டுத்தபானத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரும், திரைப்பட இயக்குனருமான கனகசபை தேவதாசனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவரின் மனைவி சுபத்திரா தேவதாசன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ( பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார். ) அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இம்மாதம் 11 ஆம் திகதி முதல் எனது கணவன் தனது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யுத்தம் முடிவுற்று நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளது. தாங்கள் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளீர்கள். எனது இரு பிள்ளைகளுடன் எவரின் உதவிகளுமின்றி துன்பத்தை அனுபவித்து வருகின்றேன். எனது கணவனை பிணையிலாவது விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்.தமிழ்மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் எனக் கூறும் தாங்கள் எதுவித விசாரணையுமின்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து அவர்களும் தமது குடும்பத்தினருடன் இணைந்து வாழ இப்பதவியேற்பு காலத்தில் பொதுமன்னிப்பை வழங்கி அல்லது பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுள்ளார்.

Related News:

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்.

ஐக்கியத்தை உணர்த்தும் ஹஜ்ஜுப் பெருநாள் – ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

 இலங்கை உட்பட உலகெங்கிலும் பரந்து வாழும் தங்களது சகோதர முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இப்பெருநாள் வசதி படைத்தவர்கள் ஆவலோடு மேற்கொள்கின்ற புனித ஹஜ் யாத்திரையையும் இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள உயர்ந்த தியாகத்தையும் நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.

இந்த வருடமும் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக இலங்கையிலிருந்து சுமார் 6,000 யாத்திரிகர்கள் புனித மக்கா சென்று பல்வேறு நாடுகளையும் சேர்ந்த இலட்சக் கணக்கான முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

பல்வேறு தேசங்களைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற, பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து இறைவனின் மகத்துவத்தையும் புகழையும் பறைசாற்றுவது ஹஜ் யாத்திரை உணர்த்தும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது.

இஸ்லாம் போதிக்கின்ற இந்த ஐக்கியம் அவர்களது வாழ்க்கையில் நீடித்து நிலைத்திருப்பதோடு அவர்கள் அதனை ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களோடும் மானிட சகோதர உணர்வுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் எமது மக்களின் ஐக்கியத்திற்கும் குறிப்பிட த்தக் களவு பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளாக அவர்கள் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்புச் செய்து எமது நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழ்ந்து வந்துள்ளதோடு அதனைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகளால் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டும் வெளியேற் றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுவரும் சூழ்நிலையில் இவ்வருட ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இது அவர்கள் ஏற்கனவே வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு நல்லிணக்க ஏற்பாடாகும்.

முஸ்லிம்கள் இன்றைய நாளில் செய்கின்ற பிரார்த்தனைகளில் எமது எல்லா மக்களுக்கும் கெளரவத்துடனான சமாதானம் நீடித்து நிலைப்பதற்காக வுமிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

எமது எல்லா முஸ்லிம் சகோதரர்களுக்கும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஈத் முபாரக் வாழ்த்துக்கள்.

தொடர்புபட்ட வரலாற்றிலிருந்து பாடங்களையும் படிப்பினைகளையும் மனதில் கொள்ள வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் ரணில்

ranil-wickramasinghe.jpgபல இலட்சக்கணக்கான மக்கள் வேற்றுமைகளுக்கப்பால் மக்கா நகரில் ஒன்றுகூடித் தனக்காகவும் ஏனையவர்களுக்காகவும் அதேநேரம் உலக அமைதிக்காகவும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் அதனுடன் தொடர்புபட்ட வரலாற்றிலிருந்து பாடங்களையும் படிப்பினைகளையும் மனதில் கொள்ள வேண்டும். இப்ராஹிம் (அலை),இஸ்மாயில் (அலை) அவர்கள் தங்களது தியாகத்தை வெளிப்படுத்தியதையே இந்த ஹஜ் வலியுறுத்தி நிற்கின்றது. இந்த உலகில் இறை கட்டளையை விட எந்தவொரு பொருளும் பெறுமதியற்றது என்ற படிப்பினையை இது எமக்குப் புகட்டுகிறது.

உலோபித்தனம், அளவு கடந்த ஆசை என்பன அழிக்கப்பட்டு உள்ளம் பூரணமாகப் பரிசுத்தப்பட வேண்டும் என்ற படிப்பினையையே இது கற்றுத்தருகிறது. இவ்வாறான உள்ளங்களிலிருந்தே கருணை, அன்பு, பாசம் என்பவற்றை எதிர்பார்க்க முடியும். சுயநலமும் பேராசையும் மலிந்து காண்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் ஹஜ் எங்களுக்குச் சிறந்த ஒரு படிப்பினையைப் பெற்றுத்தருகிறது.எனவே, உலகில் மனிதத்துவம் மலர இப்புனிதத் தினத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம்.

இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை மற்றும் உலகவாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

முல்லைத்தீவு வெடிவிபத்தில் இரு சிறுவர் காயம்

முல்லைத்தீவில் இடம்பெற்ற வெடி விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுவர்கள் சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறிய சிலாவத்தை கிராமத்தில் இந்த சம்பவம் கடந்த திங்கட் கிழமை இடம்பெற்றுள்ளது.

வீடு வளவு குப்பைகளை சேகரித்த குடும்பப் பெண் அதனை பனை மரத்தின் கீழ் எரியூட்டியபோது வெடிவிபத்து நடைபெற்றுள்ளது. அப்போது சகோதரர்களான சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் முல்லைத்தீவு வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட அரசினர் பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண விவசாயிகளுக்கு 100 உழவு இயந்திரங்கள் விநியோகம்

tractor.jpgயாழ்ப் பாணத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நான்கு சக்கர உழவு இயந்திரங்கள் நூறு அடுத்த வாரம் விநியோகிக்கப் படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் யாழ்ப்பாணத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிகழ்வின் போதே இவை விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  வட மாகாண விவசாயிகளின் நலன் கருதி இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளு க்கிணங்க இந்திய அரசாங்கம் ஐநூறு நான்கு சக்கர உழவு இயந்திரங்களை வழங்க வுள்ளதாக தெரிவித்த ஆளுநர், இவற்றில் கிடைக்கப்பெற்ற உழவு இயந்திரங்களில் 52 கடந்த வாரம் வவுனியா பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

எஞ்சிய உழவு இயந்திரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரிஸானாவின் உயிர் காக்க இராஜதந்திர முயற்சிகள் துரிதம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் ரிசானா நபீக்கின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இராஜதந்திர ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.

உத்தியோகப்பற்றற்ற முறையில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின்றபோதிலும், ரிசானாவைக் காப்பாற்ற அரசாங்கம் தொடர்ச்சியான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜயசேகர தெரிவித்தார்.

றிசானாவுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னருக்குக் கருணை மனுவொன்றை ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து, குறித்த வீட்டுரிமையா ளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மன்னர் தமது அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சவூதி அரேபிய அரசிடமிருந்து இன்னும் உத்தியோகபூர்வமான பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லையென்று வெளிவிவார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

ஜே.வி.பி உறுப்பினர்கள் மீது யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாதவர்கள் தாக்குதல்.

JVP Bannerயாழ்ப் பாணத்தில் ஜே.வி.பி உறுப்பினர்கள் மீது நேற்று ஞாயிற்றுக் கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு யாழ்.கந்தர்மடத்தில் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் இல்லத்தில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும், ஜே.வி.பியின் உறுப்பினர்கள் மூவர் உரையாடிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள்களில் சென்ற இனந்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ஜே.வி.பி உறுப்பினர்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். அத்துடன் ஜே.வி.பியினர் சென்ற வாகனமும் தாக்குதலுக்குள்ளானது.

இத்தாக்குதலில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுனில் ஹெந்துநெத்தி, அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் எம்.மோகன். கட்சியின் யாழ்.குழுத்தலைவர் லலித்குமார், ஜே.வி.பியின் பத்திரிகையான ‘லங்கா’வின் ஊடகவியலாளர் பிரியந்த ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அங்கு வந்த பொலிஸாரினால் இவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.

தடுத்து வைக்கப்பட்டோர் மற்றும், காணாமல் போனோரின் விபரங்களை வெளியிட வேண்டும் எனக்கோரி யாழப்பாணத்தில் இன்று திங்கள் கிழமை ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருந்தது. இதற்காகவே ஜே.வி.பியினர் யாழ்ப்பாணம் சென்று பல்வேறு தரப்பினரைச் சந்தித்து உரையாடினர். இதனடிப்படையில் நேற்று மாலை 6.30 மணியளவில் யாழ்.கந்தர்மடத்திலுள்ள பத்மினி சிதம்பரநாதனின் இல்லத்திற்குச் சென்று அவருடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கையில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

”நாவற்குழியில் காணிகளின் உறுதிப்பத்திரங்கள் இருந்தால் உடனடியாக குடியேற்றப்படுவர்” மீள்குடியேற்ற அமைச்சர்

milroy_fernando.bmpயாழ். நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் குடியேறியுள்ள சிங்கள மக்களிடம் அக்காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இருக்குமானால் 24 மணிநேரத்திற்குள் அவர்கள் அக்காணிகளில் குடியேற்றப்படுவர் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போது அங்கு குடியேறியுள்ளவர்களை வெளியேற்றுவது குறித்து வீடமைப்பு அதிகார சபையினர் தான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வினையொட்டி ஆயிரம் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற போது அமைச்சர் அதில் கலந்து கொண்டு திரும்புகையில் ஊடகங்கள் நாவற்குழி குடியேற்றம் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியேறியுள்ளமை குறித்து வீடமைப்பு அதிகார சபையினர்தான் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசாங்க அதிபர் என்ற முறையில் தான் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கிளிநொச்சியில் கைது!

Police_Logo

இறுதி யுத்தத்தில் காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி காணாமல் போனவர்களிடம் பணம் பெற முற்பட்டவர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சியில் வைத்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருவதாகக் கூறும் தொலைபேசி அழைப்புகள் கடந்த ஒரு வாரமாக வன்னியிலுள்ள மக்கள் பலருக்குச் சென்றுள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பேசினால் காணாமல் போனவர்களை கண்டபிடித்துத் தர முடியும் எனவும், இவ்விடயம் தொடர்பாக வேறு எவருக்கும் தெரியக்கூடாது எனவும் அத்தொலைபேசி இலக்கத்திலிருந்து பேசியவர்கள் கூறியிருக்கின்றனர்.

மேஜர் சீலன், மேஜர் மதியழகன் அகியோர் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். காணாமல் போன போராளிகள், பொதுமக்கள் என ஐயாயிரம் பேர்வரை தங்களிடமிருப்பதாகவும், மக்கள் தங்களிடம் விபரங்களைக் கூறினால் அவர்கள் உள்ளனரா இல்லையா எனபதைக் கூறமுடியும் எனவும், உயிருடன் உள்ளவர்களை ஒப்படைக்க குறிப்பட்ட தொகைப் பணம் தரவேண்டும் எனவும் பொதுமக்களிடம் இவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் தாம் ஒப்புக்கொள்வதாகக் கூறியுள்ளனர்.

நேற்றுக் காலை கிளிநொச்சியிலுள்ள கனகபுரம் மகாவித்தியாலயத்திற்கு காணாமல் போனவர்கள் சிலரின் உறவினர்களை பணத்துடன் வருமாறு அறிவித்ததுடன், குறித்த பாடசாலை அதிபரிடம் அதற்க அனுமதியினையும் கேட்டுள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்ட பாடசாலை அதிபர் உடனடியாக பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து அறிவித்திருக்கின்றார். பின்னர் இது குறித்து இரணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டு, சிவில் உடையில் பாடசாலைப் பகுதியில் காத்திருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் குறித்த மோசடி நபர்கள் பாடசாலைக்கு வந்த போது சுற்றிவளைத்துப் பிடித்திருக்கின்றார்கள்.

பிடிபட்டவர்கள் இம்மோசடிக்கு காரணமானவரின் முகவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதான நபர் பிடிபடவில்லை. இம்மோசடி சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

லண்டனில் ரெலோ கட்சியின் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று நவம்பர் 14ம் திகதி ரெலோ உறுப்பினர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகாரலிங்கம் தலைமையில் ஒன்றுகூடி தமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ அலுவலகத்தையம் செயற்பாட்டுக் குழுவையும் லண்டனில் ஆரம்பித்துக் கொண்டனர்.

லண்டன் கரோவில் உள்ள லேபர் கட்சியின் அலுவலகத்தில் மெளன அஞ்சலியுடன் ஒன்று கூடிய ரெலோ உறுப்பினர்கள், கடந்த காலங்களில் ரெலோவின் நிலைப்பாடுகள், சிறிரெலோவின் நிலைப்பாடுகள், சிறிகாந்தா, ஜிவாஜிலிங்கம் போன்றோரது நிலைப்பாடுகள் பற்றியும், இவர்களிடையே ஒற்றுமைபாடுகளை உருவாக்குவது பற்றியும் நீண்ட நேரம் கலந்துரையாடிய பின்னர், இந்த விடயங்கள் பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நேரடியாக பேச்சுவார்த்தைகளை தொடர்வது என்று முடிவானது.

லண்டனிலும் மற்றைய ஜரோப்பிய நாடுகளிலும் இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திற்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பது என்றும் இதர அமைப்புகளுடன் ஒன்றிணைந்த அரசியல் உரிமைகளுக்காக சாத்வீக வழியில் போராடுவது என்றும் உடன்பட்டனர். தமது இயக்கத்தின் செயற்பாடுகளை ஜரோப்பிய நாடுகளில் விஸ்தரிப்பது பற்றியும் ஆராய்ந்தனர். புலிகளாலும், இராணுவத்தினராலும், ரெலோவினாலும் பாதிக்கப்பட்ட ரெலோ உறுப்பினர்கள் பற்றியும் இவர்களுக்கான உதவிகள் செயல்வடிவங்கள் பற்றியும் ஆராய்ந்து, இவைபற்றி மேலும் அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவுகள் எடுப்பது என்றும் முடிவானது.

ரெலோவின் ஆரம்பகால உறுப்பினரான திரு சுதன், ”ரெலோ என்ற அடையாளத்தைவிட தமிழ் மக்களின் இன்றைய தேவைகள், அம்மக்களின் இலட்சியம், நல்வாழ்வு  இவையே உயர்த்தப்பட வேண்டுமே தவிர, ரெலோவின் குறுகிய அரசியல் செயற்பாடுகளை அல்ல” என்றார். ”ரெலோவிற்காக அல்ல மக்களுக்காக செயற்படல் வேண்டும்” என்றும் சுதன் சுட்டிக்காட்டினார். திரு சுதன் அவர்கள் ரெலோ அமைப்பு ஈஎன்எல்எப் உருவாக்கத்திற்காக முன்னின்று உழைத்ததை குறிப்பிட்டு, ”இவ்வாறான கூட்டிணைவுச் செயற்பாட்டுக்கு ரெலோ என்றும் உறுதுணையாக இருக்கவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து இயங்க ரெலோ தயாராக இருப்பதையும், இதற்கான பல தொடர்புகள் உருவாகியிருப்பது பற்றியும் கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

கூட்ட முடிவில் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜனா தலைமையில் ஏழு பேர் கொண்ட செயற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. விரைவில் ரெலொவின் முழுமையான தொடர்பு விபரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.