தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்குபற்றும் தமிழ் கட்சிகளோடு ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று கொழும்பில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற போது இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன் போது கடும் விவாதங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தின் இறுதியில் ஏனைய தமிழ் கட்சிகளோடு கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்துவது தொடர்பாக தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி) எஸ்.சிறிதரன், இடம்பெயர்ந்த மக்களின் பனர்வாழ்வுக்கழகத் தலைவரான எஸ்.சந்திரகாசன், தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஆகியோரை முதலில் சந்தித்து கலந்துரையாடுவதென்று தற்பொது கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தமிழ் கட்சிகளின் அரங்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் பல தடவைகள் தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தமிழ் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்பதான கருத்தை தெரிவித்திருந்தார்.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை கூடி இது தொடர்பாக தீர்மானம் மேற்கொண்டதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் நலன் கருதி எந்தவொரு கட்சியுடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் மூன்று வர்த்தக வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார், கிளிநொச்சி, வவனியா ஆகிய இடங்களில் இந்த வர்த்தக மையம் அமைக்கப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.