செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ். அரியாலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் வீட்டுத்திட்டத்தை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைப்பார்.

Ariyalai_Jaffnaஎதிர்வரும் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா யாழ். அரியாலையில் இந்திய நிதியுதவியுடனான வீடமைப்புத்திட்டம் ஒன்றை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் நிர்மாணித்து வழங்கவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் ஆரம்பக்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள ஆயிரம் வீட்டுத்திட்டத்தையே அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் துரையப்பா விளையாட்டரங்கில் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நூறு உளவு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வுகளில் இந்தியத்தாதுவர் அசோக் கே. காந்தா, இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்லஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழ். பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்க துணைவேந்தர் மறுப்பு.

Shanmugalingam_N_UoJகடந்த திங்கள் கிழமை யாழ்.பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் ஒருவர் சிரேஸ்ட மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்ட விடயம் குறித்து யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்கம் கேட்கச் சென்ற யாழ். ஊடகவியலாளர்களை துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு முகாமில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வந்த மாணவன் மீது பகிடிவதை. மாணவன் தற்கொலை முயற்சி!

துணைவேந்தர் வேலைப்பழுவுடன் இருப்பதால் அவரைச் சந்திக்க முடியாது என தணைவேந்தரின் செயலர் தெரிவித்து ஊடகவியலார்களை திருப்பியனுப்பியதாகவும், எவ்வளவு முயற்சி செய்தும் துணைவேந்தர் என்.சண்முகலிங்கனை சந்திக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவன் தடிகளாலும் கை கால்களாலும் சிரேஸ்ட மாணவர் குழுவொன்றினால் மாறி மாறித் தாக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும், தாக்குதல் நடத்திய மாணவர்களின் பெயர்களையும் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் வீதி அகலிப்பின் போது கலாசார சின்னங்கள் அகற்றப்பட மாட்டாது எனத் தெரிவிப்பு.

Sankiliyan_Statueபருத்தித்துறை வீதி அகலிக்கப்படவுள்ள நிலையில் அவ்வீதியிலுள்ள சங்கிலியன் சிலை அகற்றப்பட மாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

சங்கிலியன் சிலை வீதி அகலிப்பின்போது அகற்றப்படலாம் என்கிற கவலை அப்பகுதி மக்களுக்கும் மற்றும் கலாசார உணர்வாளர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இச்சிலை அகற்றப்படமாட்டாது எனவும், அதற்கு மாற்று எற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வீதி அகலிப்பு பணிகளின் போது கலாசார சின்னங்கள் பாதிக்கப்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என வீதி அபிவிருத்தி சபையின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

வன்னியிலுள்ள கோழிகள் திடீரென இறக்கின்றன.

Hens_in_Wanniவன்னியில் பொதுமக்களின் வளர்ப்புக் கோழிகள் பல கடந்த சில நாட்களாக திடீரென இறந்துள்ளன. மீள்குடியேற்றபட்ட மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கான சுயதொழிலாக கோழி வளர்ப்பினையும் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னர் கோழிகள் வன்னிப் பகுதிகளில் முற்றாக அழிந்து போயின. இதனால் வேறு பிரதேசங்களிலிருந்து கோழிகளை வாங்கி மீளக்குடியமர்ந்த மக்கள் வளத்து வருகின்றனர்.

வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலிருந்து வியாபாரிகள் கோழிகளை வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இவ்வாறு கொண்டு வரப்பட்ட நோயுற்ற கோழிகளால் நோய் பரவி ஏனைய கோழிகளும் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. கோழியின் விலை தற்போது அதிகரித்துள்ளதால் இவ்வாறு இறந்த கோழிகளால் மீள்குடியமர்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக நட்டமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹட்டன் நோர்வூட் பாடசாலையில் 19 மாணவர்கள் இன்று மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதி.

மலையகம் ஹட்டன் நோர்வூட் பாடசாலை ஒன்றில் இன்று புதன்கிழமை 19 மாணவர்கள் திடீரென சுகவீனமுற்று மயங்கி வீழ்ந்துள்ளனர். இன்று பகல்வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு மயக்கமுற்ற மாணவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் இருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறித்த பாடசாலையில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்தினரும், பெற்றோரும் ஆராய்ந்து வருகின்றனர்.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு வவுனியாவில் சிலை

Amirthalingam_A_TULFதமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு வவுனியாவில் சிலை அமைப்பதற்கு தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டக்கிளையின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழரசுக் கட்சியின் வவுனியாக் கிளைத் தலைவர் டேவிட் நாதன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னிக்கான கூட்டம் வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற போது தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில் வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை விரைவுபடுத்த வேண்டியதுடன், ஆக்கபூர்வமான செயற்பாட்டு வடிவங்களுக்கும் முதன்மை அளிக்க வேண்டும். அதற்கென மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் விரைவில் தமிழரசுக்கட்சியின் அலுவலகங்களை திறப்பதுடன் வவுனியாவிலும்  செட்டிகுளம், ஓமந்தை, நெடுங்கேணி, சாஸ்திரிகூளாங்குளம் ஆகிய பகுதிகளில் வட்ட செயலகங்களும் திறக்கப்படும் என தெரிவித்தார்.

தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று கூடுகின்றது. முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kirishna_SM_ExternalAffairsMinister_Indiaதமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று செவ்வாய் கிழமை மாலை சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் எம்.கே சிவாஜிலிங்கம் கருத்தத் தெரிவிக்கையில், பத்து தமிழ் அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று மாலை கூடி முக்கிய சில விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கைக்கு வருகை தந்து ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ள நிலையில் அவருடன் தமிழ் கட்சிகளின் அரங்கம் மேற்கொள்ளவுள்ள பேச்சுக்கள் குறித்தும், தீர்வுத்திட்டம் ஒன்றை வடிவமைப்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தடுப்பு முகாமில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வந்த மாணவன் மீது பகிடிவதை. மாணவன் தற்கொலை முயற்சி!

Univercity_of_Jaffnaயாழ். பல்கலைக் கழகத்தில் சிரேஸ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உட்பட்டதாகக் கூறப்படும் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் அதிகளவு பனடோல் வில்லைகளை உட்கொண்ட நிலையில் யாழ். போதனா வைததிய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். பல்கலைக்கழக விடுதியில் வசிக்கும் கலைப்பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவனாகிய எஸ்.ராஜேஸ் கண்ணா (வயது 23)என்பவருக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன் பாடசாலை அதிபர் மாணவர்களை ஏசியதால் நான்கு மாணவிகள் நஞ்சருந்திய சம்பவம் ஒன்று வலிகாமம் பாடசாலை ஒன்றில் நிகழ்ந்தது அறிந்ததே. (பாடசாலையில் வைத்து நஞ்சருந்திய நான்கு மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி.)மேலும் பல்கலைக்கழக மாணவிகள் மத்தியில் தற்கொலை வீதம் அதிகமாக உள்ளதாகவும் அதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரின் பாலியல் துஸ்பிரயொகங்கள் காரணமாக இருப்பதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்)

நேற்று திங்கள் கிழமை மாலை எஸ்.ராஜேஸ் கண்ணா தங்கியிருந்த பாலசிங்கம் விடுதியில் வைத்து மூன்று மாணவர்கள் இவரைத் தாக்கியுள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் அதிகளவு பனடோல் வில்லைகளை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் தடுப்பு முகாமிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மீது தாக்குலை மேற்கொண்ட மாணவர்கள் இவரை பகிடிவதை செய்யும் நோக்கத்துடன் தாக்கவில்லை எனவும், குறித்த மாணவர் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் அதனால் சிறு அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சையளிக்க உரிய மருந்து இல்லாததால் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஊடாக கொழும்பிலிருந்து அம்மருந்தினைப் பெற ஏற்பாடு செய்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

50 வருடங்களின் பின் வடக்கு மாகாணத்தில் அதிகளவு நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Paddy_Fieldsவட மாகாண சபைக்குட்பட்ட ஐந்து மாவட்டங்களிலும் இவ்வருட காலபோக நெற்செய்கை இரண்டு லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது வருடங்களின் பின்னர் இந்தளவு அதிகமான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் செ.பத்மநாதன் இத்தகலை தெரிவித்துள்ளார்.

இந்த நெற்செய்கைக்காக அரசாங்கத்தினால் பல்வேறு உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சிறந்த விளைச்சலை விவசாயிகள் பெறுவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, அறுவடை செய்யும் நெல்லை சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் சிக்கல்களை எதிர்கொள்ளக் கூடும் எனவும், கடந்த சிறுபோகத்தில் அறுவடைசெய்த நெல்லையே விவசாயிகள் இன்னமும் முழுவதுமாக சந்தைப்படுத்த முடியாத நிலையுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இனியபாரதிக்கு பத்து வருடம் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை.

Iniyaparathy_TMVPமுன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரும், பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளில் இணைந்தவருமான, தற்போது அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதியின் இணைப்பாளராக பணியாற்றும் இனியபாரதி என்ற கந்தசாமி நிசாந்தனுக்கு கல்முனை மேல் நீதிமன்றினால் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கள்கிழமை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இத்தீர்பபை வழங்கினார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அம்பறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திரநேரு சந்திரகாந்தனை இனியபாரதி 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தியதாகவும், இழிவான வார்த்தைகளால் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

இனியபாரதி இக்குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இத்தீர்பபு வழங்கப்பட்டுள்ளது. பத்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் அத்துடன், 25 000 ரூபா அபாராதமும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். குறிப்பட்ட பத்து வருடகாலத்தில் எதிரி ஏதாவது குற்றச்செயலில் தண்டிக்கப்பட்டால் அதற்கான தண்டனையுடன் இதனையும் சேர்த்து அனுபவிக்க வேண்டி வரும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரியின் பொதுச் சேவை மற்றும், எதிர்காலத்தில் அவர் மேற்கொள்விருக்கும் சேவைகள் என்பனவற்றைக் கொண்டு இத்தீர்ப்பை வழங்குவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.